9 Apr 2020

திரைப்படம் மகரமஞ்சு.வாழ்க்கை சரித மலையாளத்திரைப்படம்


நவீன இந்திய ஓவியத்தின் பிதாமகன் ஆவார் ராஜா ரவிவர்மா.  திருவனந்தபுர ராஜகுடும்பத்தில் பிறந்திருந்தாலும் பல சிக்கல்களை கடந்து தான் வெளிநாட்டினரிடம் இருந்து ஓவியக்கலையிலுள்ள  சில இரோப்பிய நுணுக்கங்களையும் கற்றிருப்பார்.
கடவுள்களையும் ராஜபரம்பரை பெண்களை மட்டும் வரைந்த இடத்தில் சாதாரண பெண்களையும் இந்திய இலக்கியத்திலுள்ள பல இலக்கிய கதாப்பாத்திரங்களையும், இன்றும் நாம் வருடாந்திர கலண்டருகளில் காணும் பெண் தெய்வங்கள் போன்றோரையும் வரைந்தது ராஜா ரவிவர்மா தான். சித்திரகலையை வெறும் கலையாக நிறுத்தாது அதை ஒரு வியாபாரமாக மாற்றியதுடன்   1850  முதலேயே இந்தியாவில் ஓவியக்கல்லூரிகள் ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டுவிட்ட போதிலும் ஒரு முறை சாரா கல்வியாகவே ஓவியம் கற்றுக் கொள்கிறார் ரவிவர்மா. 1873ல் மதராஸில் நடந்த ஒரு கண்காட்சியில் கவர்னரின் பரிசைப் பெறுகிறார். 1888 பரோடாவைச் சார்ந்த அரசர் சாயாஜி ராவ் புராணங்களைச் சார்ந்த பதினான்கு ஓவியங்களை வரைவதற்காக ரவி வர்மாவை பரோடாவிற்கு அழைக்கிறார். சாயாஜிராவ் மேற்குலுகின், மேற்கத்திய நாகரீகத்தின் ஒரு மிகப் பெரிய ரசிகர். அவரது அருங்காட்சியகம் அவரால் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பறவைகள், இசைக் கருவிகள் தவிற, டர்னர் போன்றவர்களின் இம்ப்ர்ஷனிச ஓவியங்களையும் சிற்பங்களையும் கொண்டதுஜெர்மனியிலிருந்து இவர் கற்றுத் தேர்ந்த ஓலியோகிராஃப் என்னும் முறை அச்சு இயந்திரங்களைக் கொண்டு ஒன்றே போல பற்பல தைலவண்ண அச்சுப் பிரதிகளை எளியோரும் வாங்கி மகிழுமாறு படைப்பதற்கு உதவியது


பெயருடன் ராஜா என்று இருப்பதால் ராஜபோக வாழ்க்கை, நேரம் போகாது படம் வரைந்து கொண்டிருப்பார் என்று நினைத்தால் பெரும் தவறாகி விடும். பெண்களை நிர்வாணமாக வரைந்தார் என உள்ளூர் மக்களிடம், உறவினர்களிடம்  எதிர்ப்பை சந்திக்கிறார். தனது சொந்த நாடு கேரளம் விட்டு மும்பையில் குடிபுகிர வேண்டிய கட்டாயம், எதிரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராட்ட வாழ்க்கையைத்தான் தொடர்கிறார். மனைவியிடம் அன்பாக இருந்தாலும் தனது தொழில் வளர்ச்சி முன்னிட்டு  வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கும் வாழ்க்கையை பேணுகிறார். மிருகங்களையும் பறவைகளையும், மனிதர்களிடவும் இரக்கமாக நடந்து கொள்ளும் இரக்க மனமுடையவர். ஒரு சுதந்திரமான வாழ்க்கையை பேண விரும்புகிறவர்.


இத்துடன் இவர் படங்களில் வரும் மாடல் பெண்களுக்கும் இவருக்குமான உறவுகள் நெருடலாக தொடர்கிறது.  அடிமட்ட பெண்களில் இருந்து ராஜபரம்பரை பெண்கள் வரை தன் வரைதலின் வெற்றிக்காக  சில உறவுகளை பேணுகிறார். தன்னுடைய மாடலாக வரக்கூடிய ஒவ்வொரு பெண்ணையும் தன்பால் மயக்கம் கொள்ளச்செய்து அனுபவத் திளைப்பில், உணர்வுள்ள கலைரசனையான படங்களை வரைந்து தள்ளிகொண்டிருப்பார். இவருடைய வரைகலை ஊடாக  உலகம் முழுக்க இந்திய அழகு பெண்களுடைய படங்கள் பயணித்து கொண்டிருந்தது.

அவருடைய ஓவியங்கள் மாதிரியே பயண்படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது. ஒரு க்யான்வாசை முடித்து அடுத்த படத்தின் வரைதலுக்கு போவது போன்று ஒரு பெண்ணை கடந்து இன்னொரு பெண்ணுக்குள் எந்த நெருடலும் இல்லாது பயணித்து கொண்டிருக்கும் மனநிலை கொண்ட ராஜா ரவி வர்மாவை சொந்த நாட்டில் தன்னுடைய படத்திற்கு மாடலான பெண்ணின் மரணம் மிகவும் வாட்டுகிறது. இந்த சம்பவமே சொந்த நாட்டில் இருந்து இவரை குடிபெயர வைக்கிறது.

பரோடாவில் ஒரு காட்டுவாசிப்பெண்ணை சந்தித்திருப்பார். எப்போதும் போல மாடலாக வந்தவள் ராஜா ரவி வர்மாவை பிரிய மனமில்லாது ராஜா ரவி வர்மாவின் குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்.  மற்றுபெண்களை இவர் கீழ்ப்படுத்தினது போல இவளுடைய ஆளுமையில் ராஜாரவி வர்மா வீழ்ந்து விடுவார்.. பிற்பாடு தன்னுடைய கலைப்படைப்பை கூட தொடர இயலாத வண்ணம் அப்பெண் மேல் உறவு மையல் கொண்டிருப்பார்.   ரவி வர்மாவின் எல்லா செயல்களுக்கும் மவுன சாட்சியாக, ரவாவர்மாவை கருதலாக  கவனித்து கொண்டு அவருடைய தம்பி  உடன் இருப்பார். பிற்பாடு அந்த பெண் வர்மாவை சந்திப்பதும் ஊர்வசி படத்தை வரைந்து முடிப்பதும் அப்பெண் நாடகீயமாக வர்மாவை விட்டு பிரிந்து போவதுடன் கதை முடிகிறது


பெண்கள் சில ஆண்களில் தன்னை மறந்து மயங்கி கிடப்பதும், ஆண்கள் தங்கள் பெயருக்கும் புகழுக்கும் பணத்திற்காகவும் பெண்களை ஒரு பொருளாக  பயண்படுத்துவதும்,கொடுக்க வேண்டியதை கொடுத்து, சாறியோ, பணமோ வசதிகளோ காதல் மொழிகளோ எதையேனும் கொடுத்து கொண்டு கடந்து போகும் மனநிலையை காணலாம்


சொந்த ஊரில் குழந்தைகளுடன் இருக்கும் மனைவி நான் உங்களுடன் வந்து வசிக்கிறேன் என்றால் வேண்டாம் சொந்த ஊரிலே இரு அங்கு வந்தால் காளியாகிடுவாய் என்று மறுக்கும் ரவி வர்மா ஒரு கட்டத்தில் நான் ஊரில் வந்து உன் அரவணைப்பில் வசிக்க வேண்டும் என்று சொல்லுமளவிற்கு மனைவியிடம் இணக்கமாகவும் இருப்பார்.

நாம் ஓவியங்களாக காணும் ஒவ்வொரு கலைப்படைப்பின் பின்னால், இரத்தவும் சதையுமாக இருக்கும் மனிதர்களின் உணர்வும், சோகங்களும், காதலும், கண்ணீரும் ஒளிந்து கிடப்பதை காணலாம்.
இத்திரைப்படம் கேரளா அரசின் மிகச்சிறந்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஒரு உலகத்தரமான கலைஞனை பற்றி கவித்துவமாக எடுக்கப்பட்ட திரைப்படம். படம் எடுத்த  இடங்கள் அவ்வளவு இயற்கை வளங்கள் கொண்ட கேரளா பகுதிகள், அரண்மனை, என காட்சி அழகியல் உணரலாம்.
படத்தின் வேகம் நம்மை சோதிக்கும் அளவிற்கு மெதுவாக நகர்கிறது. ஒளிபதிவு மது அம்பாட். ராஜா ரவி வர்மாவாகவும் நடித்திருப்பது சந்தோஷ் சிவன் என்ற புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்.  சில இடங்கள் நடிக்க தெரியாது விழிபிதுங்கி நடப்பது போல் உள்ளது. நல்ல ஒரு நடிகர் நடித்திருந்தால் இப்படம் இனியும் நிறைவாக பேசப்பட்டிருக்கும்.
2011 ல் வெளிவந்த வாழ்க்கை வரலாறு படங்களில் ஒன்று.  லெனின் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இசை ரமேஷ் நாராயணன். பின்னணி இசை அருமை. பழம்பெரு நடிகை ராதாவின் மகள் கார்த்திகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்போதைய முன்னனி நாயகி நித்தியா மேனோன் அறிமுக நாயகியாக களம் இறங்கிய படம் இது.




0 Comments:

Post a Comment