22 May 2019

சூப்பர் டீலக்ஸ்- Super Deluxe


சமீபத்தில் கண்ட திரைப்படம்.  சராசரி தமிழ் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான கதைத்தளம், கருத்து, உருவம் என தனித்து நிற்கும்  படம்.
ஹைப்பர் இணைப்பு(Hyper link) என்ற வகையை சேர்ந்து. ஒன்று ஒன்றோடு தொடர்பில்லா நாலுகதைகள், ஒரு  புள்ளிகளில் சந்தித்து கொள்ளுகின்றன.

முதல் கதை:
ஒரு புதுமண தம்பதி. கணவர் வெளியே போயிருக்கும் வேளையில் தன் கல்லூரி காதலனை வீட்டிற்கு அழைக்கும் வேம்பு என்ற கதாப்பாத்திரம். அவன் வந்த இடத்தில் செத்து போய் விடுகிறான். இனி அவன் உடலை மறைக்க வேண்டும். கணவருக்கும்  தெரிந்து விடுகிறது.  அந்த உடலை என்ன செய்தார்கள். இவர்களை துரத்தும் போலிஸ் அதிகாரி என்ன ஆனான். பிரிய முடிவெடுத்த தம்பதிகள் பிரிகின்றனரா? போலிஸ் அதிகாரியிடம் இருந்து வேம்பு(சமந்தா) கதாப்பாத்திரம் தப்பித்தாரா  இல்லையா?

இரண்டாம் கதை:
ஐந்து பதினமபருவ பள்ளி மாணவர்கள். பள்ளிக்கு  போகாது வீட்டில் ஒளிந்திருந்து பாலியல் படம் பார்த்து கொண்டு இருப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. படத்தில் வரும் பெண், அதில் ஒரு பையனின் தாய்! அத்துடன் கதை நகருகிறது. தாயை கொலை செய்ய ஓடி வருகையில் அவன் கொண்டு வந்த கத்தியால் காயத்திற்கு உள்ளாகி மரணத்திற்கு போராட, தாய் மகன் உயிரை காப்பாற்ற முயல்கிறார். தகப்பன் திடீர் கிறிஸ்தவனாக மாறின ஆள். அந்த நபரின் உலகம் தனி  உலகமாக நகர்கிறது. அங்கு மூன்று பெயருக்கு மட்டுமே இடம்!  அந்த நபர்,  அந்த நபரை மாற்றிய சுனாமி, புதிதாக கண்டு பிடித்த கடவுள், என நகருகிறது.

மூன்றாவது கதை:
பழைய ஆசாரம் கொண்ட ஒரு வீடு.  வீடு நிறைய மனிதர்கள்.  அந்த வீட்டில் பொறுப்பாக இருக்க வேண்டிய மகன் திருமணம் முடிந்து, குழந்தை இருந்த நிலையில்  வீட்டை விட்டு போய்விடுகிறவன்; ஏழரை வருடம் கடந்து திரும்பி வருகிறான்.  அவனாக அல்ல பாலினம் மாறிய அவளாக. கணவனை காத்திருந்த மனைவி நிலை என்ன? அப்பா என்ற பிம்பத்தை எதிர் பார்த்த மகன் நிலை என்ன? மூன்றாம் பாலினமாக மாறிய அப்பா -மகன் உறவு எவ்வாறு நகர்கிறது. அந்த வீட்டிலுள்ள மற்ற நபர்கள் இந்த சூழலை எப்படி பார்க்கின்றனர். அந்த நபரின் மனைவியும் மகனும் ஏற்றுகொள்கின்றனரா? இப்படியாக கதை நகர….

நாலாவது கதை:
ஐந்து பள்ளி சிறுவன்கள். தொலைக்காட்சி பெட்டி உடைந்து போய் விடுகிறது. அந்த பெட்டியை தன் தகப்பன் வேலைக்கு போய் வரும்முன் வீட்டில் கொண்டு வைக்க வேண்டும். அந்த அவசரத்தில் அவர்களை சந்திக்கும் நபர்கள் யார்? செட்டியார் வீட்டில் திருட போனவர்கள் என்னவானார்கள். ஒரு பெண் ஏலியனை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி கிடைத்ததா ?    பெண் என்பதை பற்றிய அவர்கள் பார்வை மாறினதா இல்லையா?

நாலு கதையையும் இணைக்கும் ஒரே புள்ளியாக மனிதனின் அடிப்படை தேவையான பாலியல் இச்சை உள்ளது.  Buttefly theory, Darwin Sex theory அவதானிக்க கூறிகின்றனர் சினிமா வல்லுனர்கள்.


  • வேம்பு/ சமந்தாவை துன்படுத்தும் போலிஸ் அதிகாரி,  மூன்றாவது பாலினமாக மாறின விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தையும் சித்திரவதை செய்யும். இவாஞ்சலிக்கன் யேசு பக்தரான அப்பா கதாப்பாத்திரவும் விஜய் சேதுபதி கதாப்பாத்திரவும் சுனாமியில் தப்பித்த நபர்கள்.
  • முதல் கதையில் சமந்தா/வேம்பு , விஜய்சேதுபதி, பதின்மவயது பையனுகள்,வயதான போலிஸ் அதிகாரி போன்ற கதாப்பாத்திரங்கள் பல அளவிலுள்ள பல உருவத்திலுள்ள பாலியல் பிரச்சினையை எதிர்கொள்வார்கள், உள்பட்டவர்கள்.

 பெண்களின் தெரிவு முக்கியப்படுத்தியுள்ளார்கள்.

  • · கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா? என கனத்த முடிவுகளை எடுக்கும் விஜய் சேதுபத் மனைவி கதாப்பாத்திரம்.
  • ·   காதலனை அழைத்த சமந்தா கதாப்பாத்திரம்,  கணவனுடன் இணையுவாரா? இல்லையா? போலிஸ் அதிகாரியின் விருப்பத்திற்கு உடன்படுவாரா? இல்லையா?
  • ·         அம்மா கதாப்பாத்திரம், யேசு பைத்தியத்திலுள்ள கணவன் கதாப்பாத்திரத்தை கேள்வி எழுப்பும். மகனின் அச்சத்திற்கு தயங்காது பதிலளிக்கும்.  இப்படியாக பெண்கள் தெரிவு செய்யும், தங்கள் செயலுக்கு பொறுப்பேற்கும்  இடத்திற்கு நகர்கின்றனர்.

உருகி உருகி வாடா…. உன்னை பெட்டரா பீஃல் பண்ண வைக்கேன்னு சொல்லிய  பெண் கதாப்பாத்திரம், அவன் இறந்ததும்….. அந்த கணவன் கதாப்பாத்திரம் கூட அவனை சக மனிதனாக நினைத்து பேசிக்கொண்டு இருக்கையில் அவனை மிகவும் பயத்துடன் கேவலமாக அது இது என அழைக்கும் காட்சிகள், தேவை முடிந்ததும் பெண்கள் இப்படி தான் என்ற மனநிலையை பற்றி சொல்ல வருகின்றனரா? .

காதலன் காதலி வீட்டில் வந்து சாவுவது அவனை பிரிட்ஜில் வைத்திருப்பது , மெத்தையில் கட்டி கீழை போட்டு எடுத்து செல்வது, இவர்களை போலிஸ் அதிகாரி துரத்துவது இவை லாஜிக்கை இடிக்கிறது.

இந்த சமூகத்திலுள்ள ஆண்களின் மனநிலை. தன் மனைவி என்பவர், தன் வீடு, தன் அறை, தன்  கட்டில், போன்ற ஓர் உடமை என நினைத்திருப்பது. வரம்பு மீறி போய் விட்டாள் என அறிந்ததும் புலம்பும் ஒவ்வொரு வார்த்தைகள் எல்லா வார்த்தைகளையும் சகித்து கொள்வார், ஆனால் கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க தன்னிடம் பணிய வேண்டும் என போலிஸ் அதிகாரி கூறும் போது பெண் தயங்குவாள். செக்ஸ் தேர்வு என்பது விருப்பம் சார்ந்த, அன்பு கரிசனை சார்ந்த  தேர்வு, அதில் அதிகாரம் வஞ்சகம், கண்டிப்பு புகிரும் போது உயிர் போனாலும் பெண் விரும்ப மாட்டாள் என அடிவரை இட்டு சொல்லும் விதம் அருமை.

ஒரு மனைவிக்கு பிரச்சினை என்றதும் அது தன்னை மட்டுமல்ல தன் குடும்ப கவுரவத்தையும் பாதிக்கும் என்ற மனநிலை ஒருபுறம். மனைவிக்கு ஒரு பிரச்சினை என்றதும் அவளை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற கணவனின் தவிப்பு. கணவன் மனைவியின் உத்தமான உறவின் பக்கத்தை விளக்கியுள்ளனர்.

கணவன் மனைவியாக  சேர்ந்து இருந்த போது, இருந்த இறுக்கம் ’நாம் பிரிகிறோம்’ என்றதும் அது நட்பாக,புரிதலாக கரிசனையாக மாறி விடும். அதுவரை பயம் கொண்டு பேசின மனைவி பின்பு நட்பில் பேச ஆரம்பித்து விடுவார். கடைசியில் கணவன் கதாப்பாத்திரம் கொஞ்சம் வண்மமாக கிண்டல் அடிக்கும். ”உன்னை போட்டவன் செத்து விட்டான், போட நினைத்தவனும் செத்து விட்டான், நான் உயிர் போனாலும் நெருங்கவே மாட்டேன்”  என்கிற போது கூட… காதலின் பார்வையில் சிரித்து கொண்டு கடந்து விடுவார் மனைவி. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் மனைவியின் சில சிறுமையையும் உள்கொண்டு, எதிர்கொள்ள துணை புரிந்து  நகர்வதே உண்மையான கணவனாக இருக்க இயலும்  என்ற கோணத்தில் சில காட்சிகள் அமைந்துள்ளது பாராட்டுதல்க்குறியது. கற்பு என்ற மனநிலை கடந்து உண்மையான புரிதலுடன் இணைவர்.

மேட்டர் படம் இருக்கா  மேடம்? ’சர்’ என ஆண்களை அழைப்பதற்கு இணையான ’மேடம்’ என்ற வார்த்தை மரியாதையான சொல்லாடல். பயண்படுத்திய விதம் திகக்கை வைக்கிறது. ’மேடம்’ என்றதும் பையா, பயப்படலாம் கூச்சப்படக்கூடாது        என்ற விளக்கத்துடன் மாணவர்களுக்கு சிடி விற்கும் அம்மா வயதான பெண்; அக்கா என்றதும் மாணவர்களை திட்டுவார்.  சில நாடுகளில் மேடம் என்ற வார்த்தைக்கும் பாலியல் தொழிலாளியை அழைக்கும் வார்த்தை என்றும் கேட்டுள்ளேன்.  அக்கா…. மேடம் லாஜிக் விளங்கவில்லை!

அவன் கவலையில் இருந்தான்,  எப்படி ஆறுதல் படுத்துவது. அவனுக்கு  மிட்டாயா கொடுக்க இயலும்?,  நான் ஐட்டம் இல்லை…. போன்ற ஒரு திரை வசனங்கள்  உண்டு . இது போன்ற வசனங்கள் தான் படம் ‘அடல்ட்’ படம் ’மோசமான படம்’, குடும்பத்துடன் பார்க்க இயலாது என கொக்கரிக்க வைத்தது. ஆனால் கணவன் மனைவி இணைந்து இருந்து பார்க்க வேண்டிய படம் இது. கண்டிப்பா ஆண்கள் ஈகோவை உடைக்கும். அதனாலோ மனைவிகள் இது போன்ற படங்களை பார்க்கக்கூடாது என கணவன் விரும்புவார்.

ஒவ்வொருவரும் அவரவர் கதாப்பாத்திரம் ஏற்று மிகவும் சிறப்பாக நடித்தி இருந்தனர். விஜய்சேதுபதியின் நடிப்பை எடுத்து சொல்லாது இருக்க இயலாது. பகத் தனது இயல்பான நடிப்பில் அசத்தியுள்ளார். குட்டி பையன் நடிப்பு மிகவும் சிறப்பு. ஒரு அப்பாவின் இழப்பை அந்த குழந்தை எப்படி எடுக்கிறது ஆனால் அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன பார்வை. அந்த நபர் பெண்ணாக திரும்பி வந்ததை மற்றவர்கள் எப்படி எடுக்கின்றனர். தகப்பன் இல்லா குழந்தைகள் நிலையை ஒரே காட்சியில் சொல்லியிருப்பார்கள். வீடு நிறைய நபர்கள்; ஆனாலும் அந்த குட்டி பையன் சாப்பிடுவதும் அவன் மனைவி கூட யாரோடும் ஒட்ட இயலாது தனிமையில் தான் உழலுகிறார்கள். தாய் மாமியார் என யாரெல்லாமோ இருந்தாலும் அம்மாவிற்கு மகனும், மகனுக்கு அம்மாவும் மட்டுமே இருப்பார்கள். சேதுபதி கதாப்பாத்திரத்தை எல்லாரும் கேள்வி எழுப்பும் போதும், தாக்கும் போதும் மகனும் மனைவியும் அந்த நபரை அதே போன்று ஏற்க கொள்ளும் மனநிலைக்கு வருகின்றனர்.  மாற்று பாலினத்தார் முதலில் மதிக்கப்பட வேண்டியது ’தனது குடும்பத்தில் தான்’ என குறிப்பிடுகின்றனர்.

மனைவி மற்றொருவருடன் தனது  படுக்கையை பகிர்ந்தார் என்பது கணவனுக்கு  எவ்வளவு துயரோ அதே போன்று தான் ஒரு மகனுக்கு அம்மா பாலியல் படத்தில் நடித்தாள் என்பதும்.  அம்மாவின் விளக்கம் ஏற்று கொண்டதாக தெரியவில்லை.  நண்பனிடம் பின்பும் கேட்கிறான் எல்லாரும் பார்த்திருப்பார்களோ? பெண் என்பவள் தனது கணவனின் கேள்விக்கு மட்டுமல்ல மகனின் கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டிய நிர்பந்தத் நிலையில் தான் உள்ளனர். ”போடி தேவிடியா மோளே” என மகனிடவும் திட்டு வாங்கும் நிலையில் தான் தாய்மை உள்ளது. இருந்தாலும் மகன் உயிரை காப்பாற்றவும் தன் நிலையை புரிய வைக்கவும் பிரயத்னம் எடுக்கும்.

”நீ சுனாமியில ஜீசசு சிலையை பிடித்து தப்பித்ததால் கிறிஸ்தவனாக மாறின கரடியை பிடித்து தப்பித்தா எதா மாறியிருப்ப”? இந்த கேள்வி தற்கால ஹிந்துத்துவா அரசின் மதமாற்றத்தை முன் நிறுத்திய கேள்வியாகத்தான் படுகிறது. இருப்பினும் இவாஞ்சலிக்கன் மதவாதிகளின் குருட்டு பக்தியையும் கோட்பாடுகளையும் நம்பிக்கையையும் சரியான பார்வையில் கேள்வி எழுப்பி உள்ளதையும் மறுக்க இயலாது.

நீலன் கெ சேகர், மிஷ்கின் நளன் குமரசாமி,மூன்று பேரும்சேர்ந்து அவரவர் பகுதிக்கு  திரைவசனம் எழுதியுள்ளனர்.  இது ஒரு புது யுக்தியாக இருப்பதால் சிறப்பாகவும் திரை வசனம் பல அடுக்கு உருவகம் அர்த்தங்கள் கொண்டு விளங்குகிறது,  தெளிவும் உள்ளது. 

தம்பதிகள் பேசின உரைகள்  மிகவும் இயல்பானது. அதை மிகவும் ஆழமான புரிதலுடன் மனித உளவியலை அறிந்து நீலன் கே சேகர் எழுதியுள்ளார். ’நாம் சேர்ந்தே இருந்தோம்’ ஏன் ஒட்டவில்லை,…… மிஷ்கின் பகுதியான மூன்றாம் பாலினம்  சார்ந்த வசனங்கள் எடுத்து சொல்லக்கூடியது. அவரே சொல்லியுள்ளார் அவர் நேரிட்டு கண்டு உணர்ந்த அவருடைய நண்பர் வாழ்க்கையை போன்று இருந்ததால் வசனங்கள் அமைப்பது எளிதாக இருந்தது என்று. இவாஞ்சலிக்கன் கிறிஸ்தவ திரைவசனங்கள் நெடியதும் திரும்ப திரும்ப வருவதாக இருந்தது. முதலில் ’நான் கிறிஸ்தவன் இல்லை’ என்பதும் கடைசியில் மனைவியின், கிறிஸ்தவ மதமாற்றம் சார்ந்து கேள்வி எழுப்பும் போது பதிலில்லாது தலையாட்டுவதும் முரண்களை எழுப்புகிறது.
ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் காட்சி தொகுப்பிற்கும் மெனக்கெட்டுருப்பது  படத்தின் அழகை கூட்டுகிறது.

பார்ப்பவர்களை விட்டு விட்டு நடிப்பவர்களை குற்றம் சொல்கின்றனர் , போன்ற சில டயலோக்குகள் நெருடலாக இருந்தாலும் அர்த்த செறிவுள்ளதாக இருந்தது.  இது போன்று நேரடியாக  மகனிடம் கூற இயலும் சமூக சூழலிலா உள்ளோம்.

திரைப்படம் வாழ்க்கையில் காணும் முரண்கள், மனிதனின் இயல்புகளை , நாடகத்தன்மையான வாழ்வியலை சொல்கிறது. இந்த படத்தில் நான் காணும் குறைபாடு மனித உறவிலுள்ள சிக்கல்கள், மறக்கவேண்டிய இயல்பாக நடக்கக்கூடிய குற்றங்களை கூறும் படம் பல விடையங்களுக்கு தீர்வு அல்லது மாற்று வழி கொடுத்துள்ளதா?

பாலியல் படங்களில் நடிப்பது என்பது மற்று தொழில்களுக்கு இணையான தொழிலா?  மகன் தாயை கொலை செய்ய துரத்தும் சீன் அந்த அளவிற்கு தீவிரமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன? நவீன தலைமுறை மனநிலை அதே 19 நூற்றாண்டு மனநிலையில் தான் உள்ளதா?  சி. டி தேடி அலையும் பாலியல் வரட்சியில் தான் உள்ளனரா? போலிஸ் அதிகாரியிடம் கதறி அழும் நிலையில் தான் வேம்பு கதாப்பாத்திரம், மூன்றாம் பாலின பெண் கதாப்பாத்திரம் உள்ளதா? பெண்களின் வுலுவை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் தான் வளர்க்கும்? பாலியல் படம் எடுப்பவர்களை குறை சொல்லாது நடிப்பவர்களை குறை சொல்கின்றனர், படத்தில் நடிக்கும் அம்மாவை தவறாக பார்க்கும் மகனுக்கு தான் பார்ப்பது என்ன் தவறாக தெரியவில்லை. எதுவும் தவறில்லை என்பது திரைப்படங்களின் நோக்கமாக இருக்கலாமா? ஒரு தெளிவான முடிவு இல்லை. அதுவே இந்த படத்தின் பலவும் பலவீனவுமாக காண்கிறேன். முடிவு காண்பவர்களின் மனநிலையை பொறுத்து அமையும்.


இயக்கம் தியாகராஜா குமரராஜா.  திரை இசை யுவன் சங்கர் ராஜா. 









8 May 2019

வளர்ப்பு தாய்க்கு ஓர் அன்பின் மடல் - திரைப்படம் ரோமா Roma 2018


கதைத்தளம் 1970-ல் மெக்ஸிகோவில் நடக்கிறது
ஒரு நடுத்தர வசதியான குடும்பம். பெரிய வீடு, ஹால்புத்தக அலமாரைகள்.  மேல் மாடியில் பல அறைகள்; நாலு குழந்தைகள் ஒரு வயதான பாட்டி, நாய்.


மிஸ்ட்டக்கோ இனத்தை சேர்ந்த கிளியோ (Cleo)  அங்கு தான் வீட்டு பணியாளராக வேலை செய்து வருக்கிறார்.  காலை, நாய் கழிவை  சுத்தம் செய்வதில் இருந்து குழந்தைகளை பாங்காக எழுப்புவது, ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுகளை எடுத்து கொடுப்பது, வீட்டு சமையல், சந்தைக்கு போவது  என வீட்டு விளக்குகளை அணைத்து விட்டு தன் அறைக்கு செல்வது வரை  சிரித்த முகத்துடன்,  மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறார்.

வாரத்திற்கு ஒரு முறை கிளியோ(Cleo)வும் அவருடைய தோழியும் வெளியே சென்று திரைப்படம் காண்பது  கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது என காலத்தை கழித்து வருகின்றனர்.  அப்படியான ஒரு பொழுதில் தான் போராட்ட இயக்கத்தில் இருப்பவனுடன்  பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த  நெருக்கத்தில் கர்ப்பவும் ஆகி விடுகிறார்.  அந்த நபரிடம் தான்  கருவுற்று இருப்பதை கூறுகிறார்.  அவனோ  மனசாட்சியே இல்லாது  மறைந்து விடுகிறான், தேடி செல்பவளை பின்பு விரட்டியும்  விடுகிறான்.

மனம் ஒடிந்த நிலையில் கிளியோவின் முகத்தில் சிரிப்பிற்கு பதில் கவலையும், சுறுசுறுப்பான நடைக்கு பதில் பதட்டவும், குற்ற உணர்ச்சியும் ஒட்டி கொள்கிறது. மாதவும் மூன்றாகி விடுகிறது.  எப்படி தன் யஜமானியிடம் சொல்வது என தயங்கி கொண்டு இருக்கிறார்.


அந்த வீட்டு குடும்ப தலைவன் வேறு பெண்ணுடன் போனதால்;   குடும்ப தலைவியையும்(சோபியா) நாலு குழந்தைகள், வயதான தாய் (Veronica Garcia), வேலை என மிகவும் மன அழுத்ததில் உள்ளார்.

இரு பெண்கள், வெவ்வேறு நிலையிலுள்ள பெண்கள்; ஒருவர் யஜமானத்தி, இன்னொருவர் அந்த வீட்டு பணியாளர்!; தாங்கள் நம்பினவர்களால் ஏமாற்றப்பட்டு  மனமொடிந்த நிலையில்  உள்ளனர்.

காதலியுடன் ஓடிப்போனவன் போய்விட்டான். தாயின் தலையில் பாரிய சுமை விடிகிறது. தான் பெற்ற நாலு குழந்தைகளைளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும், அவர்களை விட்டு, அவர்கள் அப்பா போனதை பற்றி புரியவைக்க வேண்டும்.  அதற்கான முயற்சியில் தாய் இறங்குகிறார்.  குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்கிறார். இப்படியாக  தன் வாழ்க்கையை குழந்தைகளுடன்  நகர்த்துகிறார்.

அதே வேளையில், பணிப்பெண் கிளியோவும்;  காதலித்தவன் பிள்ளையை கொடுத்துவிட்டு தன் பாதை நாட்டின்  போராட்டம் என போய் விட்டான். கிளியோவிற்கு குழந்தையை பெற்று எடுக்க யஜமானத்தியின் உதவியும் தேவையாக இருக்கிறது.  

வேறு வழியே இல்லை. ....தன் யஜமானியிடம் கருவுற்று இருப்பதை சொல்ல வேண்டும். யஜமானி, பணிப்பெண் தன் நிலையை கூறிய போது அது வேறு ஒரு பெண் பிரச்சினையாக பார்க்கவில்லை. தன் பிரச்சினையாகவே உணர்ந்து  சக மனிதையாக மதித்து ஆறுதலாக  தன் ஆதரவை பணிப்பெண்ணுக்கு தருகிறார்.

அங்கு விசாரணயில்லை, குற்றப்படுத்துதல் இல்லை, பிரச்சினைக்கு உள்ளான பணியாள் பெண்ணை ஒதுக்கி விடவும் விரும்பவில்லை. அங்கு மனிதத்தின் உச்சம் என்கிற கரிசனை, அன்பு மட்டுமே உருவாகிறது.  தானே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார், குழந்தையை பெற்றெடுக்கும் நல்ல சூழலை உருவாக்குகிறார்.  மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவிட  சமூக நிலையோ,  சூழலோ தடை நிற்கவில்லை. ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ளும் மனிதமே அங்கு மேல் ஓங்கி நிற்கிறது.

அந்த வீட்டிலிருக்கும் பத்து வயது பாலன், அம்மா ”ஏன் கிளியோ இப்போது பேசுவதில்லை, அவர் ஏன் அழுகிறார் என கேட்பான். தாயும் அவளுக்கு  வயிற்று வலி என்றதும் அந்த பாலகன் தன் கையால் வயிற்றை தடவி கொடுப்பான். அந்த பத்து வயது பாலன் தான்; தனது 56 ஆவது வயதில் தன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை நினைவு கூர்ந்து ரோமா என்ற படத்தை இயக்கியுள்ள   அல்போஃன்ஸோ குவரோன்(Alfonso Cuarón)

என் வாழ்க்கையில் ஆளுமை செய்த இரு பெண்களை பற்றிய படம். ஒன்று என் தாய்(Fernando Grediaga), இன்னொருவர் வளர்ப்பு தாய். வளர்ப்பு தாய்க்கு நான் எழுதின அன்பின் மடலாகவே இப்படத்தை காண்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.  

10 வருடமாக மெருகேற்றி கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் மொழியிலான இப்படம் ஆங்கில மொழி அல்லாத வெளிநாட்டு பட வரிசையில்; 2018 ற்கான  மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது.  

இப்படத்தில் பணியாளர் பெண்ணாக நடித்திருப்பவர் புதுமுக நடிகை Yalitza Aparicio ஒரு பள்ளியின் ஆசிரியராக இருக்கையில் இப்படத்தில் நடிக்க தேர்வானவர். இவர் முதல் படத்திலே  ஆஸ்கார் பெற்றிருக்கிறார் என்பது அவரின் நடிப்பின் சிறப்பாகும்.  தாயாரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் Marina de Tavira சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். ஒளிபதிவு, இயக்கம் என மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருக்கும்  ஒழுங்கு, அதன் உள் கட்டமைப்பு, உண்மை தன்மை ஆச்சரியப்படுகிறது. வீட்டில் விரைந்து கிடக்கும்  பொருட்கள், வீட்டு அலமாரைகள், அலங்காரம், தன் தாயார் பயண்படுத்திய கார் மாடல், அதன்  நிறம், இயக்குனர்  வாழ்ந்து வந்த   தெருவு துவங்கி; வீட்டில் மற்றொரு ப்குதியில் பணிப்பெண்கள் தங்கியிருக்கும் அறைகள் அவர்கள் துணிகாயப்போடும் இடம் என தன் 10 வயதில் நிறைந்திருந்த  நினைவுகளை மறுகட்டமைப்பு செய்து எடுக்கப்பட்ட படம். தாங்கள் வாழ்ந்த கிராமத்தில்  செட்டுகள் போட்டு படம் ஷுட் செய்துள்ளார்

இந்த படத்தின் ஒளிபதிவு இயக்கம் திரைக்கதை எல்லாம் பார்த்து பார்த்து செதுக்கிய ஒரு சிலை போல் வடிவமைத்துள்ளார். இப்படத்தின் காட்சிகள் அவ்வளவு எளிதாக மனதை விட்டு மறைவதில்லை. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பற்றி சொல்லப்போனால்எளிமையில் உருவான பிரமாண்டம்எனலாம்.  படம் முழுவதும் கறுப்பு வெள்ளையில். அதுவே ஒரு மயக்கும் mesmerising effect-உணர்வை  கொடுக்கிறது. ஒவ்வொரு frame-லும் அனைத்தும் (மனிதர்களும் பொருட்களும்துல்லியமாக உள்ளது . படம் மெதுவாக நகர்ந்தாலும் அழுத்தம் குறையாமல் இறுதிவரை செல்கிறது.

சொந்த தாயை போல்; நான்கு குழந்தைகளை கவனித்து வரும் கிளியோ தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றதும் பிரத்தியேக மகிழ்ச்சியில், கற்பனையில் குவிந்திருப்பது அழகு.   ஆனால் சோதனை யாரை விட்டது குழந்தை இறந்து பிறந்திருப்பது அவரை மட்டுமல்ல நம்மையும்  அழவைத்து விடும்.

பின்புள்ள கிளியோவின் வாழ்க்கை பழைய வாழ்க்கையின் மகிழ்ச்சி இல்லாது, சுருதி அற்று செல்லும்.  ஒரு நாள்  யஜமானியின்  குழந்தைகள் அலைகளில் மாட்டி கொள்வார்கள். தன் உயிரையும் மதிக்காது காப்பாற்றி வருவார்.  அந்த காட்சியில் ஒரு பணிப்பெண் தாயாகும் நிலையை காட்சி மொழியில் காட்டியிருக்கும் விதம் அருமை.

மனித வாழ்க்கை அன்பால் கட்டமைக்க வேண்டியது. பிற மனிதனை தான் பேணும் நெறிகளின் பொருட்டு துன்பப்பட வைப்பது அல்ல என்பதை விளக்கியிருப்பார். பணக்காரர்கள் விருந்தில் சுவாரசியம் அற்று கிடக்கும் பணிப் பெண்கள், பணியாளர்கள் கலந்து கொள்ளும் விருந்திற்கு சென்று விட்டு தாமதமாக திரும்புவார். அப்போது  தனது யஜமானியின் தனிமையை களவான ஒருவன் முயன்று கொண்டு இருப்பான்.  யஜமானி நெறி தவறாதவள். அவனை தட்டி விட்டு விட்டு கடந்து செல்வார்.  யஜமானி தனதான நெறியில் கட்டுகோப்பானவளாக இருந்தாலும் தன் பணிப்பெண்ணின் தவறை, நீதியிடும் இடத்தில் இருந்து நோக்காது மனித நேயத்துடன் அணுகும் ஈரநெஞ்சக்காரியாக இருப்பார்.  பெண்கள் ஒருவருக்கொருவர்`            `தங்கள் பேரன்பால் தழுவி கொண்ட  பேரன்பை சொல்லிய திரைப்படம் இது.  

பொதுவாக வாழ்க்கை கதை சொல்லும்படங்கள்; படம் எடுப்பவரை பற்றியதாக அல்லது வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் ஆளுமைகளை பற்றிய படங்களாகவே இருந்துள்ளது. ஆனால் இப்படம் தன் வீட்டில் ஒன்பது மாதத்தில் இருந்து தன்னை வளர்த்திய வளர்ப்பு தாயை பற்றி எடுத்த படம் என்பது இன்னொரு சிறப்பாகும்.  , தற்போது 72 வயதாகும் லிபோரியா ரோட்ரிகெஸ் (Liboria Rodriguez) இந்த படத்தை பார்த்த போது அழுதார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
நல்ல படம் என்பது நல்ல மனிதர்களை, ஈரமான மனங்களை உருவாக்குவது அவ்வகையில் ரோமா சிறந்த படம்

 1970 களில் தாங்கள் குடியிருந்த காலனியின் பெயரான ரோமா என்பதை படத்தின் தலைப்பாகவும் தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.

நெட்ஃப்லிக்ஸின் முதல் படமே 10க்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது ஒரு. 17 வயதிற்கு மேலுள்ள நபர்கள் பார்க்க அனுமதியுள்ள  R-சாற்றிதழ் பெற்ற படம் ஆகும்.

இந்த படத்தில் தயாரிப்பு டிசைனராக தன்னுடைய தந்தை பணியாற்றியதையும் நினைவு கூறுகிறார்.  தன் குழந்தைப்பருவத்தில் தன் சகோதரி விளையாண்ட விளையாட்டு பொம்மைகளை  கூட இயக்குனர் நினைவு வைத்திருப்பதை நினைத்து  தந்தை ஆச்சரிப்படுகிறார்.

உலகம் முழுக்க இருந்து நெட்ஃப்லிக்ஷ் ஊடாக 137.1 மிலியன் மக்கள் பார்த்துள்ளனர் .  பல  தியேட்டருகளிலும் திரையிடப்பட்டுள்ளது.