19 Apr 2011

மாத்தூர் தொட்டி பாலம்!-திருவனந்தபுரம் வேளி-சங்குமுகம்




மாத்தூர் தொட்டி பாலம் நோக்கி நாங்கள்  போய் கொண்டிருக்கின்றோம்.  இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது,  திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும்.  ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான இப்பாலம்,   115 அடி உயரம் கொண்ட   28 தூணுகளின் மேல்  1240 அடி ( 1 கி.மீ) நீளமும் 7 ½ அடி வீதியிலும் இரண்டு மலைகளை இணைக்கும் பாதையாக கட்டப்பட்டுள்ளது.  சுற்றலா பயணிகளின் கவனத்தை கவரும் விதம் அழகாக காட்சி  தரும் மாத்தூர் தொட்டி பாலம்   விளவம்கோடு, கல்குளம் என்ற இரு கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதம் ‘பறழியார்’  என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளதாகும். 

பாலத்தின் ஊடாக நடப்பது என்பது திகில் கொண்ட பயணம் போல் இருக்கின்றது.  மேலிருந்து கீழ் பக்கம் நதியை நோக்கும் போது தலைசுற்றுவது போல் தோன்றினாலும் 'ஹிட்சுகாக் படத்தின் ஹீரோ’ போல் பெருமிதத்துடன் ஒரு நடை பயணம் செல்லலாம்.  பாலத்தில் இருந்து  கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு.  அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் .  சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு  நடந்து செல்கின்றனர்.  வெயில் காலமான பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை இங்கு தண்ணீர் இல்லாதிருப்பதால் நாங்கள் செல்லும் போது தண்ணீர் இல்லாததும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது.  மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயண்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!


இப்பாலத்திற்க்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து 60 கி.மீ அதே போல் கன்னியாகுமாரியில் இருந்து செல்ல 60 கி.மீ  தூரமும் உண்டு. இப்பாலம் கட்ட செலவாக்க பட்ட தொகை 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். பயணிகளிடம் கட்டனம் ஏதுவும் வாங்க வில்லை என்பதும் பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.

போகும் வழியாவும்  செடி கொடிகளால் கேரளாவின் தனி அழகில் நாஞ்சில் நாடு காட்சி தருகின்றது. நம்மவர்கள், அன்னாச்சிப் பழம் செடி வைத்தால்  நல்ல பாம்பு படம் எடுத்து விடும் என்று படம் காட்டுவது உண்டு. இங்கோ வீட்டுக்கு வீடு சுற்று சுவர்  போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.

இங்கு நெல்லையில் 25 ரூபாய்க்கு வாங்கும் அன்னாச்சி பழம் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு வாங்கும் இளநீர் 10 ரூபாய்க்கும்  குறைந்த விலையில் கிடைக்கின்றது. மேலும் நாகர்கோயில் பழமான ஆயினி பழம், சாமங்கா போன்றவையும் வளமாக கிடைக்கின்றது. பெண்களுக்கு நல்லதொரு தொழில்வாய்பாக அமைகின்றது இப்பாலம்.


பசி மயக்கம் ஆரம்பித்தது.  மார்த்தாண்டத்தில் ஒரு உணவகத்தில் உணவருந்தினோம். எங்கள் மேஜைக்கு எதிர்பக்கம் இருந்த ஒரு பெண் போலிஸை விழுந்து விழுந்து கவனித்த சர்வர் எங்களை கண்டும் காணாதது போல் பாவித்தார். போலிஸ் பெண் மணி பழைய பற்றில் சேர்த்து விடு என்று விடை பெற்று சென்ற பின்பே எங்கள் அருகில் வந்தார்.  பிரியாணி,  புரோட்டா என்று வயிற்றை நிரப்பி அடுத்து சிதரால் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தோம். திருவனந்தபுரத்தில் இருந்து 80 கி.மீ உம் கன்னியாகுமாரியில் இருந்து 45 கி.மீ தள்ளி உள்ளது இக்கோயில்.

மார்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ பயணம் செய்து சிதறால் வந்தடைந்தோம்.  மலை உச்சியில் சிறிய புள்ளி போன்று தெரிந்தது. அழகான காட்சியாக இருந்தது, பார்க்கும் திசை எங்கும் பரவசம் மூட்டும், பூமி பச்சை போர்வை விரித்து கிடக்கும் போல் உள்ளது. மிகவும் சிரமத்துடன் வழி கேட்டு கேட்டு தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்தோம்.  7 ம் நூற்றாண்டுவரை முனிவர்கள் இக் கல்குகைகளை தங்கள் வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் 13 ம் நூற்றாண்டில் இது பகவதி கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.  7வது நூற்றாண்டிலுள்ள கல்வெட்டுகள் காணும் நோக்கில் இருந்த எம்மை, மலை அடிவாரத்தில் இருந்து அழகான படிகள் மேலை கூட்டி செல்ல காத்திருக்கின்றது.  ½ கி.மீ நடந்து போய் கொண்டிருந்தோம். மழை இதோ வந்து கொண்டு இருக்கின்றேன் என்று குரல் எழுப்பி கொண்டு வந்து கொண்டிருந்தது.  மேல் பக்கம் போகவா கார் பக்கம் போகவா என்று கலங்கி நின்ற போது 5-6 இளைஞசர்கள் குப்பியும் பொதியுமாக வெடி கொண்ட பன்றி போல் புதர் உள்ளில் இருந்து தாவி வெளியில் ஓடி  வந்தனர்.  கையில் இருப்பது மலைத் தேன் அல்ல,  தமிழக அரசுவின் மயக்க ரசம் என்று மட்டும் புரிந்தது.  அவர்களை படம் பிடிக்க காமராவை தயார்செய்யும் முன் மழை பலமாக பெய்ய ஆரம்பித்தது.  நாங்களும் அவர்கள் பின்னால் ஓடி வந்து காரில் ஏறி கொண்டோம்.





 இனி எங்கள் பயணம் திருவனந்தபுரம்  வேளி-சங்குமுகம் கடற்கரை நோக்கி போய் கொண்டிருந்தது.  திருவனந்தபுரம்  கேரளா தலைநகரம் என்று  தலைக்கனம் ஏறாது எளிமையான பட்டிணம்.  வழி நெடுக பூத்து குலுங்கும் மரங்கள், விஷு வருவதால் கொன்னை பூக்களும் பாதைக்கு அழகு சேர்த்தது.  தேர்தல் காலம் என்பதால் கேரளா தலைவர்களும் வழி சுவர்களில் அக்மார்க்கு சிரிப்புடன் நம்மை வரவேற்றனர். கோயிலுகளில் சிறப்பு ஆராதனை, ஆலயங்களில் ஜெபக்கூட்டம் என மக்கள் பக்தியில் திளைத்து கொண்டு இருந்தனர்.   வழி நெடுக தலைவர்களும் தொண்டர்களும் கொடி பிடித்து சிந்தா பாத் இட்டு சென்று கொண்டிருந்தனர்.  திருவனந்தபுரம் விமானத் தாவளம் பக்கம் வந்து விட்டோம்; இனி 3 கி.மீ தான்.  மணர்காடு என்ற ஏரியாவில்  வந்த போது கேரளா கடவுளின் தேசம் மட்டுமல்ல சேரிகளின் நாடும் தான் என்று புரிய வைத்தது. தமிழகத்தில் காணப்படுவது போல் சுத்தமற்ற தெருவுகள் வசதியற்ற வரிசை வீடுகள், களையற்ற மக்கள் என கேரளாவின் எதிர்பாராத  இன்னொரு முகவும்  தெளிய   துவங்கியது.   


அழகான குடியிருப்புகள், விருந்தினர் குடியிருப்புகள்  தெரிய தொடங்கியது. வேளி என்ற கடற்கரையில் 19 கி.மீ ரோட்டின் இருகரையிலும் சங்குமுகம்  வியாபித்துள்ளது.  ஒரு நபருக்கு ஒரு நாள் முழுக்க  5 ரூபாய் மட்டுமே கட்டணம்.   கடற்கரையில் அழகான ஒரு பூங்கா, கேரளா கலை ரசனையுடனான அழகிய  சிற்பங்கள், மிதக்கும் உணவகம், மிதக்கும் பாலம் என மொத்ததில் கேரளா அழகுணற்ச்சியுடன் அமைத்திருந்தனர்.  


ஏதேன் தோட்டத்தில் குடிபுகுந்தது போல் இருந்தது. அதற்கு ஏற்றது போல் மனித இணைக்குருவிகள் மரத்தடியில் கொஞ்சி கொண்டும் சிலர் கவலை மறந்து நிம்மதியாக மரத்தடியில் தூங்கி கொண்டும் சிலரோ அதீதமான சிந்தனையில் மரத்தடியில் குந்தியிருந்தனர். குழந்தைகளுக்குக்கும் பெரியாவர்களுக்கும் என 50 ரூபாய்க்கு குதிரை சவாரியும் உண்டு. என் குழந்தைகள்கும் 50 ரூபாய் கொடுத்து இந்நாட்டு மன்னர்கள் குதிரை சவாரி செய்து வரட்டும் என்று அனுப்பினால் குதிரையை நடக்க வைத்து என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி இட்டனர்.  60 ரூபாயிலிருந்து 1000வரை படகு சவாரியும் உண்டு.  இளம் பெற்றோர்கள் கால்-பந்து கொண்டு வந்து தங்கள் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்.  உடையற்ற பெண் சிலை பக்கம் என் கண் சென்றது சிறு ஆண்குழந்தைகள்  சிலையின் பக்கமாக தொட்டு விளையாடி கொண்டிருந்தது நெருடலாகத் தான் இருந்தது.  என் கண்கள் அவ்வகையான ஆண் சிலை உண்டா என்று தேடியது அப்படி ஒன்றும் காணவில்லை. ஆண்களால் மட்டுமே பெண்களை இவ்விதமாக ரசனையுடன் வடிவமைக்க இயலுமோ அல்லது ஆண் சிலைகள் ரசிக்க ஆட்கள் இல்லையா என்றும் என் மனம் கேட்டு கொண்டது.  



 மிதக்கும் பாலம் வழி கடற்கரை சென்றடைந்தோம்.  வரிசையாக இருந்த சிறு சிறு கடைகளின் முதளாளிகள் பெரும் பாலும் நைற்றியணிந்த பெண்களாகவே இருந்தனர். நைற்றி தேசிய உடையாக வெகுதூரமில்லை என்றுமட்டும் தெரிந்தது.


இணையத்தில் தங்க கலர் கொண்ட மணல் சுத்ததிற்க்கு பெயர்பெற்ற கடற்கரை என்று இணையத்தில்  எழுதி இருப்பதை நம்பலாகாது.  கடல் அலை கொஞ்சம் வக்கிரமாகவும் சகதி மண் கலரில் தான் இருந்தது. திடீர் என அலை கரைகடந்து வந்து பயமுறுத்தியது. காவலாளிகள் கம்புடன் மக்களை கட்டுக்குள் வைத்துள்ளனர்.  ஐஸ் கிரீம் விற்பவர்களே விற்கவும் குப்பையை பொறுக்கவும் செய்கின்றனர். பல பொழுதும் இவ்வகையான இடங்களை அசுத்தப்படுத்துவதற்கு அங்குள்ள உணவகமே  மிக பெறும்  பங்கு அளிக்கிறது என்பது மறுக்க இயலவில்லை. குப்பையிட என ஒரு குப்பை தொட்டிவைக்காது சுத்தம் என்பதில் ஐயம் கொள்ளவே வைக்கின்றது.  இக் கடலை கண்ட போது தமிழகத்திலுள்ள மணப்பாடு கடலின் அழகே மனதில் வந்தது. நம் தமிழக அரசு இவ்விதம் ஒரு திட்டத்துடன் செயலாற்றினால் அழகான சுற்றலாத் தலம் உருவாக்கலாம். சங்குமுகத்தை பின்பற்றி தமிழகத்தில் உருவாக்கிய சங்குத் துறைமுகம் கூட ஒரு சங்குடன் கவனிப்பாரற்று தான்  உள்ளது.







அங்கு வரும் பயணிகள் பெரும் பகுதியானோர் அப்பகுதி மக்களாகவே தெரிந்தனர். வெளிநாட்டு பயணிகள் கண்ணில் படவில்லை. கோவளத்தின் வசதி இங்கு இல்லாததாக கூட இருக்கலாம். மலையாளி அம்மாக்களை கண்டு கொண்டே நிற்கலாம். பல தமிழக அம்மாக்கள் போல் அல்லது அழகான உடை அலங்காரத்துடன் பொலிவான முகத்துடன் குழந்தை குட்டி யுடன் வலம் வருகின்றனர்.



சங்கு முகத்தில் இருந்து திரும்பும் போது ஏதோ ஏமாற்றபட்ட காதலி போல் மனதில் ஒரு கவலை ஊஞ்சலாடி கொண்டே இருந்தது.  பின்பு மறுபடியும் இணையத்தில் உலாவந்த போது தான் தெரிந்தது, பக்கத்திலுள்ள 'ஜலகன்னியகா' என்ற புகழ்பெற்ற சிலையை பார்க்காது வந்துள்ளது.  சங்குத் துறைமுகம் இன்னும் அழகுபடுத்த சுத்தபடுத்த வேண்டி நிற்பதாகவே எனக்கு படுகின்றது. நேரம் மாலை 6  அஸ்தமிக்கும் கதிரவனை கண்டு கொண்டு திரும்பினோம் திருவனந்தபுரம் பட்டிணம் நோக்கி.  அதிகாலை 1 மணிக்கு நெல்லையில் எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

  

15 Apr 2011

பத்மநாபா அரண்மனை உங்களை வரவேற்கிறது!!!

கன்னியாகுமாரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wikipedia.org/wiki/Padmanabhapuram_Palace  வந்து விடலாம். 

 திருவனந்த மன்னர்களால் AD 1601 ல் 187 ஏக்கர் சுற்றுப் புறம் கொண்டு 7 ஏக்கர் நிலைப்பரப்பில் கட்டப்பட்டது. தற்போது கேரளா அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத் தக்கது.  அங்கும் கட்டண வேட்டை தான்! https://www.youtube.com/watch?v=pofoU12oh2o  40 ரூபாய் அரண்மனை நிலைகொள்ளும் தொகுதிக்குக்கு செலுத்த வேண்டும். பின்பு அரண்மனைக்குள் நுழைய பெரியவருக்கு 25 ரூபாய் சிறியவர்களுக்கு 10 ரூபாய் என்று வசூலிக்கின்றனர். அரண்மனை வளாகம் நம் தமிழக சுற்றலா பயணிகளால் நிரம்பி வழிந்திருந்தது. கேரளத்து சேச்சிமார் கண்ணத்தில் கை கொடுத்து தமிழக அக்காக்கள் உயிர் போகும் அளவுக்கு கத்தி பேசுவதை அவதானித்து கொண்டு இருந்தனர்.
ஒரு காலத்தில் திருவனந்தபுரம் அரசர்களால் மக்கள் அடக்கி ஆளப்பட்டு,  சாதாரண பெண்கள் மேல் சட்டை அணிய கூடாது என்று  மறுத்த ராஜவம்சம் என்ற நினைப்புடன் அரண்மனை வாசல் அடைந்த போது அழகிய பெண் சிலைகள் நம்மை வரவேற்றது.

என் மகனிடம் வுட்(wood) வர்க் அழகாக உள்ளதா என்ற போது அவன் நோஸ் கட்டை பார்த்தீர்களா என்று மறு கேள்வி கேட்டான். எரிச்சலுடன் அவனை நோக்கிய போது கல் சிலையின் மூக்கு சிமின்றினால் ஒட்டியுள்ளதை சுட்டி காட்டினான். டிக்கட்யை காவலாளியிடம் கொடுத்து உள்ளே புகுந்தோம்.

 சேலம் பயணிகள் ஒரு டிக்கட்டுக்கு  "சின்ன பையன்" தானே அவனுக்கு டிக்கட்டு வேண்டுமா என்று மல்லிட்டு கொண்டிருந்தனர். கடைசியில் காவலாளியும் போய்கோ, போய்கோ என்று பொறுமை இழந்து வழி விட்டார். தமிழர்ன்னா சும்மாவா?

அரண்மனையில் ஒவ்வொரு அறையிலும் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் விவரிக்க ஆட்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். சிலர் மலையாள அன்போடு ’கொஞ்சும் தமிழில்’ விவரிக்கும் போது சில பெண்கள் எரிச்சலுடனும் சொல்லியும் சொல்லாமலும் விரட்டி விட்டு கொண்டிருந்தனர். 

அரண்மனை வரவேற்பறை    கருப்பட்டி. சுண்ணாம்பு, முட்டை வெள்ளைக்கரு கொண்டு உருவாக்கப் பட்டது என்று அதன் சிறப்பை மூச்சு விடாது ஒரு பெண் விவரிக்க ஒரு ஆண் வழிகாட்டி போட்டி நடப்பது போன்று ஆங்லத்தில் பக்கத்தில் நின்றே ஆட்களிடம் விவரித்து கொடுக்க ஆரம்பித்தார்.
விரும்பும் திசையில் திருப்பி வைக்க கூடிய ஒரு தொங்கும் விளக்கு அதன் அடியில் கல்லால் ஆன பாத்திரம் வைக்கப்பட்டிருப்பதையும்  சுட்டிக் காட்டி கதைத்து கொண்டிருந்தனர். நம் தமிழ் ஆசாமி ஒருவர் இவர்கள் சொல்வது உண்மைதானா என்று தெளிவு படுத்த விரும்பி விளக்கின் மேல் கை வைத்ததும் அப்பெண் நீங்கள் தொடக்கூடாது இது பழமையானது, ஆசாரமானது என்று  தடுத்தது நெருடலாக இருந்தது.கோபம்
 கலந்த அவசரத்துடன் அவசரஅவசரமாக தொடுவதை தடுத்தார்.
அரண்மனை 127 அறைகள் கொண்டதும் 450 வருடங்களுக்கு முன்பு வெறும் மண்ணால் கட்டபட்டு மார்தாண்ட ராஜா காலத்தில் புதுக்கி பணியப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாக கூறி நம்மை அடுத்த அறைக்கு செல்ல பணிந்தனர்.

பின்பு ஒரு இடுங்கிய படிகள் வழியே மேல் நிலைக்கு அனுமதித்தனர். அரசன் தர்பார் மண்டம், குறைகேட்கும் அறை, அரசனின் படுக்கையறை, அரண்மனை பெண்களின் அலங்கார கண்ணாடி, கட்டில், மஹா ராணியின் சாப்பாட்டு அறை , அவருடைய கழிவறை என நாமும் அன்று மன்னரின் உறவினர்களாகி சுற்றி வந்தோம். குளிக்கும் அறையில் கல் தொட்டிகள், அரைக்கும் அரைகற்கள், எண்ணை தொட்டிகள் போன்றவையும் காண்பிக்கப் பட்டது.  

 அரசி தன் கணவர்-மன்னரை தர்பாரில் இருக்கும்போது நோக்கும் சிறிய துவாரம் கொண்ட ஜன்னல்கள், அதே போல் அரசி குளித்து விட்டு ஆலயத்திற்க்கு பூஜைக்கு வரும் தனி வழி, நடனம் கண்டு களியூறும் ஒரு சிறிய மரத்திலான அறை என்று எல்லாம் வேலைப்பாடுகளும் சிறப்பாக  எளிமையான அழகியலுடன் செய்யப் பட்டிருந்தது.

 அம்மராணியின் படுக்கை அறை என்று காட்டி தந்தவரிடம் ’அம்மாராணி’ என்றால் யாரு என்று தன் நியாமான சந்தேகத்தை எழுப்பியதும் ’ராஜாவின்றே அம்மா’ என்று அவர் பதில் உரைத்தவுடன் ’ஓஹோ ராஜமாதாவா’ என்று சேலம் பயணிகள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த அறைக்கு முன்னேறினர்.
ஒரு மண்டபம் தரை செம்பரத்தி, மரிதாணி இலையால் சாயம் பூசப் பட்டு சிவப்பு நிறத்தில் கம்பீரமாக காட்சி தந்தது. அதன் ஒரு தூண் வாஸ்துப் படி பலாமரத்தில் செய்யபட்டிருப்பதும் மற்று அனைத்தும் தேக்கு போன்ற மரத்தில் செய்யப் பட்டதாகவும் கூறினர். நம்ம சேலம் ஊர் ஆசாமி தான் உணர்ச்சி வசப்பட்டு ”ஆகா அற்புதம், நம்மவர்களால் இப்படி ஒரு அரண்மனையை கட்ட இயலுமா என்று புல்லரித்து பேச..... வேறு ஒரு பெண் பயணி ஆமாம், இது இப்போதுள்ள மொசைக், மார்பிள் தரையை விட குளிர்ச்சியாக இருக்கின்றது என்று பரவசப் பட்டு கொண்டிருந்தார்.

விளக்கி கொண்டிருந்தவர், ”அப்படி எல்லாம் சொல்வதற்கு இல்லை, செட்டி நாட்டு பக்கம் பல வீடுகள் இதை விட, ஆடம்பரம், கலை நயத்துடன் உள்ளது தற்போது இவ்விதம் கட்ட நினைத்தாலும் செலவு கட்டுக்குள் அடங்காது என்று தன் கருத்தை விளக்கினார்.

மன்னர் படுக்கையறையில் 64 வகை மரங்களினால் ஆன கட்டில் காட்டி தந்தனர். கட்டிலை பற்றி விளக்கிய பெண் மன்னரின் ஆவி அங்கு இருப்பது போல் ராஜபக்தியில் உருகி நின்று கதைத்து கொண்டிருந்தார். ”கீழ் மாடியில் விருந்தினர், மேல் மாடியில் அரச குடும்பத்தினர் தங்கி வந்ததாகவும் நாலாவது மாடியில் பூஜை அறை என்பதால் நீங்கள் அங்கு செல்ல கூடாது” என்று உருக்கமாக கூறினார். 127 அறைகளில் 60 அறைக்கள் மக்களுக்கு காண திறந்து விட்டுள்ளனர். மற்று அறை என்னை நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.


சுற்றுப் புறம் உள்பகுதி எல்லாம் சுத்தமாக பாதுகாப்பது மட்டுமல்லாது பழமையான முல்லைப்பூ, செம்பரத்தி செடிகளுடம் அரண்மனை நம்மை கடந்த நூற்றாண்டிற்கு அழைத்து செல்கின்றது என்றால் மிகையாகாது.

திருவனந்தபுரம் அரச பரம்பரை ஆங்கிலேய அரசுடன்  இணக்கத்தில் கழிந்தவர்கள் என்பதால் அரண்மனையின் ஒரு கல்லு கூட கேடு வராது அன்று போல் இன்று காட்சி தருகின்றது. வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க என மேற்கத்திய கலை நயத்துடன் அறை அமைத்துள்ளனர். தன் பிரஜைகள் தங்கள் குறைகளை சொல்ல அரண்மனை முற்றத்தில் நின்று கூவி சொல்வதும் மன்னர் மட்டுபாவில் இருந்து யானை மேல் இருந்து கேட்பது போல் அமைப்பு உள்ளது. சாதாரண பிரஜையின் நிலை அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான் போல!
 மகா ராணிகள் மன்னர் தவிர மற்றோர் கண்களில் படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளனர்.  ராணிக்கு என்ற தனி நடைபாதை, சாப்பாட்டு அறை என அவர்கள் அறை சன்னல்கள் சொல்லாத கதையும் சொல்லியது. 

பதவி, குடும்பப்பிரச்சினையால் அவர்கள்  சண்டையிட்டு மடிந்ததும் ராஜகுடும்ப பெண்கள் தங்கள் நாக்கை பிடுங்கி மரணத்தை தழுவிய  அரண்மனை வழியே தான் நடந்து செல்கின்றோம் என்று அங்குள்ள பொருட் காட்சி மண்டபம் நினைவுறுத்தியது.

அடுத்தது எங்கள் பயணம் ஜெயின்களுடைய சித்தாறல் மலைக் கோயில் நோக்கி சென்றது. அங்கு தான் கோயில் வளாகத்தில் எதிர்பார்க்காத ஒரு சாட்சி கண்டு அதிர்ந்தோம். அதை பற்றி அடுத்த பதிவில் கதைக்காமல் விட்டு விடுவேனா!!!!





டச்சு கோட்டை-புலியூர்க்குறிச்சி





குழந்தைகளை  பள்ளி அனுப்பி விட்ட பின்பு மாலை வரும் வரை அம்மாக்கள் தனிமையில் துன்புறுவது  போலவே, விடுமுறை கிடைத்த பின்பும்  குழந்தைகளை சமாளிக்கவும் சிரமம் கொள்ள வேண்டி வருகின்றது. 


 
குழந்தைகள் மகிழ்விக்க பயணமே சிறந்த வழியாக பட்டது.  முன்பு பயணம் பெரியதொரு பிரச்சனையாகவே இருந்திருக்கவில்லை.  எப்போது பயணம் என்று ஆசை வருகின்றதோ எங்கள் இருச் சக்கிர வாகனத்திற்க்கு பெட்ரோல் நிரைப்புவது வாகனத்தை பிடித்த திசைக்கு திருப்புவதுமாக இருந்துள்ளது எங்கள் பயணம்.  ஆனால் இன்று குழந்தைகள்  வளர்ந்து விட்ட  நிலையில் வாடகை கார் பிடித்து பயணம் தொடரும் சூழலுக்கு தள்ளப் பட்டோம்.



நாங்கள் அனைவரும்காலை ஏழு மணிக்கு காரில் இடம் பிடித்து விட்டோம் .   என்னவர் ஓட்டுனர் அருகில்,  நான் பின்னால் இருக்கையில் ஜன்னல் ஓரமாக இடம் பிடிக்கலாம் என்றால் இரு வாரிசுகளும்  போட்டி போட்டு கொண்டு சன்னல் பக்கம் இடம் பிடித்து விட்டதால் எனக்கு  நடு பக்கம் இடம் கொடுத்தனர்.  அவர்களுக்குள் சண்டை வரும் போது இரு பக்கமிருந்தும் இடிப்பது, தூக்கம் வரும் வேளையில் மடியில் படுத்து தூங்குவதுமாக எங்கள் ராஜ்ஜியம்;  குஜ்ஜலாலா என்ற பெருமிததுடன் வந்து கொண்டிருந்தனர்.   பேருந்தில் பயணிக்கும் போல் சுவாரசியம் நிரம்பியதாக எனக்கு  தோன்ற வில்லை.  இருசக்கிர வாகனத்தில் கடந்து போகின்றவர்கள் கொஞ்சம் முறைத்து பார்த்து கொண்டு கடந்து சென்றது போல் தோன்றியது.  அதே போன்று பேருந்து பயணிகள்  பள்ளத்தில் பார்ப்பது போன்று கார் பக்கம் தன் பார்வையை  விட்டு  சென்று கொண்டிருந்தனர்.



ஓட்டுனரும் என்னவரும் பேசி அறிமுகமாகி கொண்டிருந்தனர்.  அப்போது  ஓட்டுனருக்கு இன்சுரன்ஸ் முகவரிடமிருந்து அலை பேசியில் அழைப்புவந்தது .   அவரும் சாவகாசமாக  கதைத்து கொண்டிருந்தார்.  நானோ, நமக்கு இன்சுரன்ஸ் கிடைக்க வைத்து விடுவாரோ என்று பயத்துடன் எப்போது அலைபெசியை துண்டிப்பார் என்று நோக்கி கொண்டிருந்தேன். வழியில் இரண்டு வாகனங்கள் விபத்தி சிக்கி கிடந்தது.  அதில் ஒன்று முட்டை லாரி என்பதால் துற் நாற்றம் ½ கி.மீஅளவுக்கு எங்களை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.  பின்பு ஓட்டுனர் ஒரு விபத்தை பற்றி கதைக்க என்னவர் அவர் கண்ட இன்னொரு  விபத்தை பற்றி கதைக்க என எரிச்சல் கொள்ள வைத்து கொண்டே வந்தனர்.  வழியில் ஒரு வேளான்கன்னி மாதாவின் ஆலயத்தில் ஜெபித்து விட்டு பின்பு பயணம் ஆரம்பித்தோம்.


கொஞ்சம் நேரத்தில்  தலைவலியும் ஆரம்பம் ஆகி விட்டது.  ஒரு பெண்  நொங்கு வியாபாரி தன் காலை வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார்.   தண்ணீர் குடமுடன்  போய் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுகாரரை அழைத்து அண்ணா கூட்டம் கூடும்போது நொங்கை கொஞ்சம் கவனித்து தர வேண்டும்.  அவரு தம்பிக்கு பூவைக்க சென்றுள்ளார் என்று நாகர்கோயில் தமிழில் வேண்டிகொண்டார்.  பின்பு தன் கையில் இருக்கும் துண்டை எடுத்து நொங்கின் மேல் படிந்த தூசியை தட்டுவதும் மறு கையில் அலைபேசியில் கடை நிலவரத்தை தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டிருப்பதுமாக பரபரப்பாக  செயல்பட்டு கொண்டிருந்தார்.  நொங்கு ஜூசின்  பணத்தை கொடுத்த போது பய பக்தியாக கண்ணில் ஒத்தி கல்லா பெட்டியில் இட்டு விட்டு  தன் வேலையில் மூழ்குவது தெரிந்தது.   




அதன் பக்கத்தில் ஒரு இந்து ஆலயம் இருந்தது.  காலை நேரம் என்பதால் வேண்டுதலை ஆண்வரிடம் போட்டு விட்டு சென்று கொண்டிருந்தனர் மக்கள்.  எதிர்பக்கம் கல்லில் ஒரு சாமியார் காவி உடையுடன் பூமியை நோக்கி சிந்தையில் ஆழ்ந்திருப்பதும் தெரிந்தது!! நொங்கு குடித்த உற்சாகத்தில் ஓட்டுனரும் தன் பேச்சை அரசியல் பக்கம் திருப்பி வேகமாக கார்யை பிலியூர்க்குறிச்சி உதயகிரி கோட்டை பக்கம் திருப்பினார்.




கொஞ்சம் நேரத்தில் புலியூர்குறிச்சி வந்து சேர்ந்தோம்.http://en.wikipedia.org/wiki/Udayagiri_Fort 1741-44 ல் மார்த்தாண்ட மன்னன் காலத்தில் டச்சு தளபதி டிலை நோயித் த்லைமையில்  கட்டிய கோட்டைக்கு அதன் சுற்றுமுள்ள அடர்ந்த காடுகள் மேலும் அழகு சேர்த்தது.  அதன் மேல் பக்கம் இருக்கும் குகைப் பாதை வழியாக சென்றால் பத்மநாப அரண்மனையை சென்று விடலாம்   என்று எழுதப் பட்டிருந்தது.  காடுகளை விரும்புவர்களுக்கு தகுந்த இடம். வெயில் வரும் முன் சென்று விட்டால் கிளிகளின் ஓசை கேட்டு கொண்டே  வெகு நேரம் நடக்கலாம்.  நாங்கள் முதல் பயணிகள் என்பதால்  மயான அமைதியான சூழலின் கொஞ்சம் பயம் இருந்தால் கூட காட்டின் ராஜாக்கள் போன்று   அடர்ந்த காடுகள்  ஊடாக டச்சு படைவீரர்களின் கல்லறை நோக்கி நடந்து சென்றோம்.  பழம் பெரும் தமிழில் எழுதியிருந்த கல்வெட்டுகள் கல்லறையில் காணப்பட்டது. ஆங்கிலேயர்  காலத்தில் கட்டிய கோட்டை மிடுக்காக காட்சி அளித்து     கொண்டிருந்தது.  அழகாக சுத்தமாக   பராமரிக்கின்றனர். தற்போது வெயில் என்பதால் மான் போன்ற மிருகங்களை காண இயலவில்லை 
குழந்தைகளுக்கு விளையாட என்று மரத்தில் ஆன வீடு, கயற்றால்   மரத்தில் பிணைக்கப்பட்ட ஊஞ்சல், கயிறு பாலம் என பொழுது போக்கு அம்சவும் இருந்தது. 5ரூபாய் செலுத்தி விளையாட பயண்படுத்தலாம். மக்கள் நடந்து தளரும் போது ஓய்வு எடுக்க என சிறு மண்டபங்கள்  உள்ளது. காதலர்கள் தங்கள் காதல் சுவராக பயன்படுத்தி கிறுக்கி வைத்துள்ளர்.


கோட்டைக்குள் செல்ல அனுமதிக் கட்டணம் 5 ரூபாய். கோட்டை வாசலில் வாகனம் நிறுத்த காருக்கு 30 ரூபாய் இரு சக்கிர வாகனத்திற்க்கு 10 ரூபாய் என கட்டண வேட்டை நடைபெறுகின்றது.  பெண்களே அடியாள் போன்று பின் தொடர்ந்து வந்து பணம் கேட்டு  மிரட்டல் விடுக்கின்றனர். வாகனங்களை நிறுத்த என ஒரு ஓலைக் கூரை கூட இல்லை. ஆகாயமே கூரை என குப்பைக்கு மேல் நிறுத்தும் வாகனத்திற்க்கு ஏன் கட்டணம் என்று தான் புரியாது இருந்தது. 
அடுத்து  பத்மநாப அரண்மனையை நோக்கி கார் பாய்ந்தது. என்னவரின் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி நடித்த படத்திலுள்ள பாடல் சிப்பியிருக்குது முத்தும் இருக்குது …பாட்டு ஒலித்து கொண்டிருந்தது.  தந்தன தந்தா என்று என்னவர் தாளம்  இட்ட போது தான் அவரும் பாட்டுடன் தான் பயணிக்கின்றார் என்று நினைத்து கொண்டு சன்னல் வெளியே நோக்கிய போது வழி எங்கும்  பூத்து குலுங்கும் மரங்கள் , சரம் சரமாக காய்த்து கிடக்கும் மாமரம், வேண்டும் என்றால் வேரிலும் காய்ப்பேன் என்று  தொங்கும் பலா மரங்கள் என நாகர்கோயில் செடி கொடிகளின் ராணியாக காட்சியளித்தது.
சரி நாம் இனி பத்மநாப அரண்மனை வளாகத்தில் வைத்து சந்திப்போம். வரட்டுமா!!

14 Apr 2011

விஷு- சித்திரைத் திருவிழா!!!


திருவிழாக்கள் தலைமுறை தலைமுறையாக நம்மால் கடைபிடிக்கப் படுவதும் மதம் இனம் , மொழி சார்ந்து அடையாளங்களை நிலை நாட்டவும்  மனித இனத்தின்  அடையாளமாகவும் திகழ்கின்றது.  நம் வாழ்வில் விழாக்கள் மிகவும் உணர்வு பூர்வமான தருணங்களை  விட்டு செல்கின்றது. அவ்வகையில் விஷு பண்டிகையின் பங்கு மலையாளிகளின் வாழ்க்கையில் இன்றிமையானது ஆகும்.  

கேரள மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் விஷு மிகவும் பிரதானமானதாக உள்ளது.   விஷு என்ற  பண்டிகை மதம் இனம் கடந்து  மலையாளிகளின் மிகவும் விருப்மானதும் உணர்வுபூர்வமாக கொண்டாடுவதும் பல இடங்களில் வசிக்கும் அவர்களை மலையாளிகள் என்ற தனித்துவத்துடன் ஒன்றிணைப்பதுமாக இருந்து வருகின்றது.  விஷு கிரேகரியன் கலண்டர் படி மலையாள  வருடத்தின் முதல் மாதம் "மேடம்" மாதத்தின் முதல் நாள்   ஆகும்.  அவ்வருட  வெற்றி- தோல்விகள் புதுவருடத்தின் துவக்க நாளில் உள்ளடங்கி இருக்கின்றது என்ற நம்பிக்கை உள்ளதால் வருட துவக்கம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் கொண்டாடப்படுகின்றதே விஷு பண்டிகை. சாதாரணமாக ஏப்ரல் 14 ம் நாள் புதுவருட நாட்களாகும்.  ஆனால் இந்த வருடம் 15 தியதியில் தான் விஷு பண்டிகை மலையாளிகளால் கொண்டாடப்படுகின்றது.    முதல் அடி அடுத்த அடிக்கு தளம் என்பதால் வருடத்தில் முதல் நாளில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் (காலை 4 க்கும் 6 க்கும் மத்தியில்)நல்லதை காண்பது வழியாக அந்த வருடத்தின் முழு  ஐசுவரியவும்  தங்கள் வாழ்வில் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்றனர் .

விஷு கொண்டாட்டத்தின் உச்சம் என்பது விஷுக் கணி காண்பது தான். கணி என்றால் மலையாள மொழியில் நாளின் முதலில் முதல் முதலாக காண்பதாகும். விஷு அன்று முதலில் காண்பதை விஷுக் கணி என்று அழைக்கின்றனர்.
விஷுவில் முதல் நாள் அன்றே வீட்டிலுள்ள முதிர் பெண் அல்லது இல்லத் தாய் விஷுக் கணிக்கு என ஏற்பாடுகள் செய்கின்றார். மலையாளிகளின்  பாரம்பரிய உருளி என்ற வெங்கல பாத்திரத்தில் நெல், பணம், தங்க நாணயம், மஞ்ச பூக்கள், மஞ்ச வாழைப்பழம்,கேரளா மக்களின் பாரம்பரிய உடை,  உடைத்த இரு முறி தேங்காவில் கப்பு போன்ற பகுதியில் தேங்காய் எண்ணெயில் திரியிட்டு தீபமிட்டு, விஷ்ணுவை பிரதிபலிக்கும் கிருஷ்ணரின் உருவப்படம் அல்லது சிலை அத்துடன் கண்ணாடியும் வைக்கின்றனர்.  விஷுவின் அன்று வீட்டிலுள்ளவர்களை அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் 4-6க்குள் எழுப்பி கண்ணை கையால் மூடி இப்பொருட்களை காணவைப்பதுடன் விஷு கொண்டாட்டம் ஆரம்பம் ஆகின்றது.  பின்பு இப்பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து விடவேண்டும் என்பதே சம்பிரதாயமாக பின்பற்ற படுகின்றது 
 

அடுத்தது ‘விஷுக் கைநீட்டம்’ என்பதாகும்.  விஷுவன்று வீட்டிலுள்ள முதியவர்கள் வீட்டிலுள்ள எல்லோருக்கும் சிறப்பாக குழந்தைகளுக்கு கையில் பணம்  கொடுப்பதாகும். தங்கள் வீட்டிலுள்ள ஐசுவரியத்தை தன் இளைய தலைமுறைக்கு கைமாறுகின்றனர் விஷுக் கைநீட்டம் என்ற கொடுக்கல் வழி.

பின்பு பாயசத்துடன் விருந்து( மலையாளத்தில் சஃத்தியா-sadya என்று அழைக்கின்றனர்) பின்பு வெடிக் கெட்டுடன் விஷுவை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.  விஷு அன்று விவசாய வேலை ஆரம்பிக்கவும் செய்கின்றனர்.  

சித்திரை மாதத்தில் பூக்கும் கொன்னா என்ற பூவை இன்று விசேஷமாக பயன்படுத்தும் பூவாக உள்ளது. சூரியனின் நிறம் கொண்ட கொன்னப் பூவின் இடம் விஷுவில் இன்றிமையாயது.  கிருஷ்ணனின் ஆலய தரிசனம் வழி ஆலயவழிபாடும் நடத்துகின்றனர்.  சபரிமலை கோயில் நடையும் அன்று திறப்பது உண்டு.

கேரளாவில் விஷு என்றும் தமிழகத்தில் புத்தாண்டு அல்லது சித்திரை திருவிழா என்றும் ஒரிஸா, பஞ்சாப் ஆந்திரா போன்ற ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் நிலப்பகுதி சார்ந்த பெயருடன் கொண்டாடுகின்றனர்.  தமிழர்கள் கோயிலுக்கு போவது விசேஷமாக மதுரை மீனாச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் கொண்டாடுவது உண்டு.  தமிழகத்தில் 2008ல் சட்டசபையில் எடுத்த  தீர்மானம் படி பொங்கல் நாளை முதல் நாளாக கொண்டாடு மாறு  மக்களுக்கு பணியப்பட்டாலும் ஈழத்து தமிழர்கள், மலேசியா சிங்கப்பூர் , பாண்டிச்சேரி தமிழர்கள் என  உலக தமிழ் இன மக்கள்  சித்திரை திருநாள் அன்றே வருட பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.  விசேஷமான பிரார்த்தனைக்கு சிறந்த நேரம் என்று எடுத்து கொள்ளப்படுகின்றது.  நாமும் கொண்டாடுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.



3 Apr 2011

ஜப்பான் சுனாமியும் யேசுவின் பினாமிகள் என்று சொல்பவர்களும்!!!!



ஜப்பானின் ஏற்பட்ட துயர்மிகு சுனாமிக்கு பின் கிருஸ்தவர்கள் மத்தியில் ஒரு கலவரம் ஏற்படுத்தி  “நான் வருட ஆரம்பமே சொன்னேன் சுனாமி வருமென்று  வந்து விட்டது” என்று கூறி  கொண்டு யேசு நாதரின் பினாமிகள்  வர ஆரம்பித்துள்ளர்.  



சுனாமி என்பது ஜப்பான் பொறுத்தவரையில் எப்போதும் நிகழும் நிகழ்ச்சியே.  சுனாமி என்ற வார்த்தை கூட  ஜப்பானிய மொழியில் இருந்து வந்தது தான். ஆனால் இந்த முறை ரிக்டர்  அளவு அதிகமானதால் விளைவும் அதிபயங்கரமாகி போனது; அதிலும் அணுஉலையின் பாதிப்பும் ஒன்று சேர அவர்கள் மிக  கடுமையான கொடும் போராட்ட சூழலில் தள்ளி விட பட்டுள்ளனர்.





குழந்தைகள் தேர்வு நேரம் என்பதால் கேபிள் துண்டித்துள்ளதால் நேரடி ஒலிபரப்பாக காணாவிடிலும் இணையம் வழியாக செய்திகளை அறிந்து கலங்கி தமிழக மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க போகும் கூடன்குளம் அணு உலையை பற்றியே என் சிந்தனை போய் கொண்டிருக்கின்றது.  இதன் மத்தியில் தான் ஆண்டவரின் விசேஷ சேவகர்களான பால் தினகரன் போன்றோரின் அருள் வாக்கு செய்தி வருகின்றது.




ஜப்பானுக்கு இவருடைய குழுவையோ இவருடைய கொள்ளை பணத்தை அனுப்பினாரா என்றும் தெரியவில்லை ஆனால் இவ்விதமான பயத்தை மக்கள் மனதில் விதைத்து பணம் அறுவடை செய்ய தயார் ஆகி விட்டனர் என்பது மட்டும் தெளிவாகின்றது.   நெல்லையில் கிருஸ்துமஸ் துணி எடுக்க என்று சென்ற ஒரு ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்தார் அவருடைய கழுத்தில் கிடந்த 9 சவரன் தாலி செயினும் களவு போனது அன்று!   இது தான் இங்கு நடப்பதும்.  ஜப்பான் மக்களுக்கு எவ்விதம் நான் இத்துயர வேளையில் துணை புரிவது என்று இல்லாது இதை சொல்லியே பயம்காட்டி காணிக்கை பெற நினைக்கும் மனிதர்களை என்ன சொல்வது? இனி உலக அழிவு தான் நீங்கள் சொர்கம் போக வேண்டும் என்றால் பணத்தை எங்களிடம் காணிக்கையாக அனுப்பி விடுங்கள். சொர்கத்தில் உங்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய இடம் அமைக்க பட்டிருக்கும்.  இங்கு உள்ளது போலவே பெரிய காம்பவண்டு போட்ட வீடு, எசி அறை வீட்டின் முன்பு பூங்கா உங்கள் பிள்ளைகள் உங்கள் முன்னோருடன் ஆடி பாடி அங்கு கழியலாம்.  யேசு நாதர் என் கனவில் இப்படி சொன்னார், இடையிடை மனம் திரும்புங்கள் இதோ உலகம் அழிய போகிறது எங்கும் கொள்ளை நோய்,யுத்தம் நாடு நாடுக்கு எதிராக மக்கள் மக்களுக்கு எதிராக இப்படி இவர்கள் பிரசங்கம் போய் கொண்டே இருக்கும்.



இவ்வாறாக தீர்க தரிசனம் சொல்வதால் என்ன பலன்.  யேசு நாதர் ஒரு வீட்டிற்க்கு  நேரம் கிடைக்கும் போது செல்வாராம். அவருடைய உபதேசத்தை கேட்க மேரி என்ற சகோதரி அவர் அருகில் இருந்து உற்சாகமாக கேட்பாளாம் இன்னொரு சகோதரி அவருக்கு உண்ண உணவு எடுத்து வருவாராம்.  அவர்கள் சகோதரர் லாசர் ‘யாம் பராபரனே’ என்று  தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருந்து கொள்வாராம்.  ஒரு முறை யேசு நாதர் ஒரு பெரும் பயணம் முடிந்து வந்த போது அவன் மரித்து போனான் என்று அவர்கள்  அழுதவுடன் யேசுவும் அழுது அவனை உயர்ப்பித்தார் என்று ஒரு கதை பைபிளில் உண்டு. யேசு நாதர் இப்படி தான் அழுபவருடன் அழுங்கள் சிரிப்பவருடன் சிரிங்கள் என்று சொல்லியிருப்பார் அல்லாது அழுபவர்களின் துயரில் விண்ணாரம் பேசி கொண்டு இருக்க அவர் விரும்புவர் இல்லை.அவர் உபதேசம் மட்டும் செய்யாது வாழ்ந்தும் காட்டியிருப்பார் அப்படிதான் ஒரு பெண்ணை விபசாரி என்று விதிக்கும் போது உங்கள் விதியால் நீங்கள் விதிக்க படுவீர்கள் என்று எச்சரிப்பார்.


யேசு நாதர் பிறக்கும் காலயளவில் அவருடைய யூத நாடு ரோமர்களின் ஆதிக்கத்தில் இருக்கும். ஒரு பக்கம் ரோம அதிகாரிகளின் ஆதிக்கம் என்றால் மறுபக்கம் யூத தலைவர்கள் மற்றும் மதபோதகர்களால் அதிலும் சோதனை. யூத மக்கள் கடலுக்கு பேய்க்கும் நடுவில் என்பது போல் வாழ்க்கை இருந்தது.அந்த காலயளவில் தான் அவர்கள் மத்தியில் யேசுவின் போதனைகள் இருந்தது.  அவருடைய போதனைகள் மன – ஆத்ம விடுதலை  சார்ந்தே இருந்தது. ஆனால் இன்றுள்ள கிருஸ்தவ பிரசங்கிமார் பிசாசு கட்டு, செய்வனை கட்டு, வறுமைகட்டு  என்று மக்களை பயமுறுத்தி பல வித கட்டுகளில் அவர்கள் மனங்களை கொண்டு அடிமை வாழ்க்கைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் சில கிருஸ்தவர்கள் நாங்கள் பிறப்பால் கிருஸ்தவர்கள் என்றாலும் எந்த மதத்தையும் பின் பற்றவில்லை என்று ஒதுங்கி இருந்து கொள்கின்றனர்.




ஒரு சாதாரண வங்கி அதிகாரியாக தினகரன் தன் பேச்சாற்றல் வைத்து மரணம் சொர்கம் நரகம் போன்ற கதைகள் சொல்லியே அவர் கோடிபதியாகி விட்டார்.  இவருடைய வளர்ச்சியை கண்ட இன்னும் சில தமிழக பிரசங்கிமார் இன்னும் சில பல கதைகளை கதைத்து பணத்தை மிரட்டியும் பயமுறுத்தியும் பிடுங்கி பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டனர்.                                                                                                                                                                                              
கிருஸ்தவ தொழில் அதிபர்களிடம் பணிபுரியும் அலுவலகர்களின் சம்பளம் அடி மாட்டு விலையாகத்தான் இருக்கும்.  மனிதர்களுக்கு பேச்சு சுதந்திரம் என்றல்ல நவீன அடிமைகளாகவே அவர்கள் தொழில் சாலைகளிலும் அலுவலகங்களிலும் நடத்த படுகின்றனர். ஊழியர்கள் சம்பளம் கூட்ட கேட்டால் அது ஆண்வர் சித்தம் ஆகும் போது நடைபெறும்  என்று தலையை உருவி விடுவர். ஆனால் கொள்ளை கொண்ட பணத்தில் ‘தசம பாகம்’ என்று காணிக்கை கொடுத்து ஆண்வரின் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆகிவிடுவர்.   ஆண்டவர் அவர்களை பொறுத்து கைகூகி வாங்கும் அதிகாரி அல்லது வியாபாரியா?  ஆலயங்கள் ஆத்தும விளைநிலமல்லாது பண  நிறுவனங்களாக்கி வருகின்றனர்.




ஆதிம திருச்சபையில் பணமுள்ளவன் கொண்டு கொடுக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு பங்கிட்டு கொடுத்து எல்லோரையும் வறுமை அற்று வாழ செய்வதாகவே கிருஸ்தவ பைபிள் கூறுகின்றது.  காரல்மார்க்ஸ் கூட இதை தான் ‘காப்பிடல் தஸ்’ என்று புத்தகமாக எழுதியிருப்பார். சொல்ல போனால் யேசு நாதர் தான் முதல் கம்னிஸ்டு.  அவர் ஒரு சிறந்த போராளியாகவே இருப்பார்.  இவ்விதம் மக்களை மத சட்டம் என்ற போர்வையில் நடைபெற்ற கொடுமையில் இருந்து மீட்க வந்த யேசுவை கொலை செய்ய கூறியதே இந்த கடவுளின் பினாமிகள் அதாவது ஊழிய காரர்கள் தான்.  இன்று யேசு வந்து கூறினாலும் அவரை மறுபடியும் கொலை செய்ய  தயங்க மாட்டார்கள்.




இந்து சமய கோட்பாடால் பல மக்கள் எப்படி பிச்சைகாரர்கள் ஆகி வருகின்றனரோ  அதே போல் இன்று கொள்ளையடித்து பணத்தை சேர்ப்பதை கண்ட கிருஸ்தவர்கள் கொள்ளைகாரர்களாக மாறி வருகின்றனர்.  (பல தமிழ் படங்களில் கூட ஆண்டனி, ஜான் போன்றோர் கொள்ளையர்களாக காட்டுவதும் இதனால் தானோ)




அரசு அலுவலங்களில் வேலை செய்யும் கிருஸ்தவர் தான் கையூட்டு  வாங்காது இருக்கின்றனரா?  பல அலுவலங்களில் கோளு மூட்டி பதவி வாங்கும் படலத்திற்க்கு  இவர்கள் தான் தலைமை தாங்குவர் மேலும் ஒரு நல்ல வேலை அழகான மனைவியும் இருப்பின்  அவர்கள் நெருங்கிய உறவுகளை கூட கிட்ட நெருங்க அனுமதிப்பது கிடையாது.
கிருஸ்தவம் என்பதின் அடிப்படை அன்பு, சகோதரத்துவம், எளிமை. பொறுமை தான்.  அன்பு என்பதை அறிவுரையில் மட்டும் தான் இருக்கும் சகோதரத்துவம் என்பதற்க்கு ஆண்டவர் பிள்ளை ,புறம் ஜாதிகள் என்று ஒரு பெரிய பாகுபடை உருவாக்கி பிரிவை உருவாக்கி விட்டனர். எளிமை இவர்கள் கொண்டாடும் பண்டிகை நாட்களில் சென்றால் அறியலாம், பொறுமை என்பது பகைவனை எதிர்க்கும் தந்திரம் ஆகி விட்டது இவர்களுக்கு!



யேசுவின் போதனை எப்போதும் ஒரு உபமையுடன் சேர்ந்த கதை யாக எளிமையானதவே இருக்கும் .  ஊழியக்காரர்களின் பேச்சில் வன்மம், ஆணவம் இளக்கராம் சேர்ந்த கூட்டு கலவை தான். ஒரு ஜெபக் கூட்டத்திற்க்கு சென்ற போது ஒரு ஊழிய காரர் அருள்வாக்கு பாலிக்கின்றார், இந்த கூட்டத்தில் ஒரு பெண் உள்ளார் அவர் மனம் திருந்த வேண்டும் கணவர் வேலைக்கு சென்ற உடன் காமுகனை தொலைபேசியில் அழைக்கின்றார்.  இது எந்த அளவு வன்மம் கொண்ட கற்பனை. ஏன் அந்த கூட்டத்தில் காதலியுள்ள ஒரு கணவர் கூடவா இல்லை, பெண் என்ற இளக்காரம்.  



ஆனால் யேசுவின் போதனைகள் ஒரு போதும் மனிதம் இல்லாததாக  இருந்தது இல்லை.   உன்னை போல் அயலானை நேசி, உன் நண்பனை மட்டுமல்ல பகைவனையும் நேசி, அன்பு உண்மையாக இருக்கட்டும், அடுத்தவனை விதிக்காதே, பழிக்காதே, உனக்கு என்ன தான் உண்டு எனிலும் அன்பு இல்லை எனில் நீ ஒன்றும் இல்லை இது தான் அவருடைய போதனை. ஆனால் சில கிருஸ்தவ மனிதர்கள் அன்பு மட்டும் இல்லாது கொள்ளாது என்னவெல்லாமோ கதைத்து யேசுவிடம் உரிமை பாராட்ட முயல்கின்றனர்.