28 Nov 2012

என் முதல் புத்தகத்தை பற்றிய சுபி அக்காவின் கருத்துரை!




நான் தேடும் வெளிச்சங்கள்.'ஜோ உங்கள்  எழுத்து மனசை தொடுகிறது. உங்கள் முதல் புத்தகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு லாவகமாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.உங்களை வாழ்வில் உயர்த்திய வழிகாட்டியவர்களுக்கு நீங்கள் நன்றி சொன்ன விதம் அருமை. 





ஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் அனுபவ பாடங்கள். நோகாமல் நொங்கு உண்டது போல வாசிப்பவர்களுக்கு அனுபவங்களைத் தாமே பெற்றது போன்ற உணர்வைத் தருகிறது. 'ஒற்றை மரம்' மனதை ஆழ ஊடுருவி அந்தச் சிறுவனை தழுவி சோகத்தைப் போக்கவேண்டும் என்ற தவிப்பையும்,'என் தோட்டம் சொல்லும் கதை' நகைச் சுவையாக மனித மனங்களை உணரவும், 'என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம்' நாம் வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்களின் மன ஓட்டத்தையும் அதன் பயங்கர விளைவையும் உணர்த்துகின்றன.

ப்படி எல்லாக் கதைகளும் ஒரு நல்ல கருத்தை மனதில் பதியவைக்கிறது. நீங்கள் தேடிய வெளிச்சங்கள் அனுபவமாக சிந்திக்க வைக்கிறது. ஜோ உங்களை உறவாக பெற்றதில் பெருமைப் படுகிறேன் முகநூலுக்கு நன்றியும் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் இன்னும் உயர எனது ஆசிகளும் வாழ்த்துகளும். வழமோடு வாழ்க தங்கையே..

அக்காவுடனான நட்பில் துவக்கம் என் பதிவுகளுக்கு அக்கா தரும் பின்னூட்டங்களில் இருந்து துவங்கியதே. படைப்பாளியை தாங்கும் படைபாளியாக அக்கா இருந்து வருகின்றார் என்பதே உண்மை. ஏனோ தானோ என்றில்லாது  வாசித்து  ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்வதே அக்காவின் வழமை. சில வேளை ஒப்புரவு ஆகாத பதிவுக்கு தன் கருத்தையே பகிர்ந்து செல்லவும் தயங்குவது இல்லை. அதே போன்று அக்காவின் பூந்தோட்ட பதிவுகளுடன் எனக்கு தீராத மோகமே இருந்தது. பூக்களில் அரசியான ரோசாபூக்கள் நட்டு வளர்ப்பதில் அக்கா அரசியாகவே திகழ்ந்தார். இந்த பதிவுலகு உறவால் உருவான உறவு பல வருட உறவு போலவே மலர்ந்து மணம் வீசியது எங்கள் வாழ்கையில்.

எங்கள் இருவருக்கும் நேரில் சந்திக்க வேண்டும் என ஆற்வம் இருந்தாலும் எவ்வகையில் சாத்தியம் ஆகும் என சந்தேகங்கள் இருந்ததை ஊண்மையாக்கியவர் சுபி அக்காள். சுபி அக்காவும் தன் அன்பு கணவர் நரேன் அண்ணாவுடன் நெல்லை வர நாங்களும் குடும்பத்துடன் வரவேற்று நெல்லை சுற்றுலா தலங்களை சுற்றி வந்த நாட்கள் வாழ்வில் மறக்க இயலாத நாட்கள். பிரியும் நேரம் மிகவும்  கனத்த மனதுடன் கண்ணில் முட்டி வந்த கண்ணீர் துளிகளுடன் விடைபெறும் கணங்களாக இருந்தாலும் உடன் பிறந்த சகோதரியை கண்டு கொண்ட ஒரு மகிழ்வில் பிரியா விடைபெற்றோம். அடுத்த விடுமுறையில் சந்திக்கும் நாட்களை எண்ணி காத்திருக்கின்றோம். எங்கள் அன்பை புரிந்து சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாக்கி தந்த நரேன் அண்ணாவுக்கும் என் கணவருக்கும் எங்கள் நன்றியை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 

என் புத்தக வேலையில், ஆரம்பம் தொட்டு கடைசி வரையிலும் என்னுடன் இருந்த  அக்காவின் பங்கு அளவிட இயலாதது.  இந்த காலகட்டத்தில் பல சோதனை- வேதனையில் கடந்து செல்லப்பட்டேன்.  தன் வார்த்தைகளால் தேற்றினார் வலுவூட்டினார். புத்தகம் பலர் கையில் சென்று சேர வேண்டும் என முயற்சி எடுத்து தன்னுடைய நண்பர்கள் கையில் கிடைக்க செய்துள்ளார்; தான் வசிக்கும் லண்டனுக்கும் கொண்டு சென்றுள்ளார்.    தன் நண்பர்கள் ஊடாக  நெல்லையில் அறிமுகம் ஆக அக்கா சில தடங்களையும் இட்டு சென்றுள்ளார். 


அக்காவிடம் இருந்து  புத்தகம் பற்றிய கருத்து பெருவதில் பெருமிதம் கொள்கின்றேன் மகிழ்கின்றேன். அக்கா அமைதியில் அரசியாக,  எளிமையின் நிறைகுடமாக பல அறிய குணநலன்களை கற்பித்து சென்றுள்ளார். தன் தனித்துவமான ஆளுமையினால் அன்பினால் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த அக்காவின் அன்பு தங்கையாக  பாக்கியம் பெற்றதில்  நான் உண்மையிலே நெகிழ்கின்றேன். ஆயுசின் கடைசி மட்டும் அக்காவின் அன்பில் அன்பு தங்கையாக வாழ பிரார்த்தித்து கொண்டு அன்புடன் உங்கள் ஜோஸ் .......அக்கா!



27 Nov 2012

சில்லறை வர்த்தகம்- அந்நிய முதலீடு


இன்று பரவலாக விவாதிக்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவையா இல்லையா என்பதை பற்றி அனைவரும் மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் உண்டு எனிலும் நம் சமூக சூழலை கணக்கிலெடுக்காது அரசு மேற்கொள்ளும் இந்நிலை மக்கள் நலம் சார்ந்தது அல்ல!  ஒரு வீட்டில் 5 பிள்ளை இருந்தது என்றால் ஒன்றோ இரண்டோ அரசு வேலைக்கு சென்றிருபார்கள்,  சிலர் தங்களுக்கு இருக்கும் விவசாயத்தை கவனித்திருப்பார்கள், இன்னும் சிலரோ தங்கள் கையிலிருக்கும் பணத்தை முதல் முடக்கி வியாபாரம் ஆரம்பிப்பார்கள் அவர்களே சில்லரை  வர்த்தகத்தில் ஏற்பட்டிருந்த முதல் தலைமுறையினர். ஒரு முதல் முடக்கும் இல்லாத சூழலிலும் தங்கள் உழைப்பால் உயர்ந்தவர்களும் பலர் உண்டு. இன்றும் எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்க தகுதி இல்லாத நிலையில் சவாலை சந்தித்து சுயதொழில் செய்பவர்களை அரசு முடக்குவது சமூக குற்றமாகும்.

ஒரு பொருளை கொள்முதல் செய்து அதை தன் வியாபார நிலையம் வரை சேர்க்கும் மட்டும் இடத்தரகர்கள், சுமடு எடுப்பவர்கள், கடை வேலையாள் என நாலு ஐந்து பேருக்காவது வாழ்வாதாரம் கிடைக்கின்றது. இந்தியா போன்ற ஜனப்பெருக்கம் நிறைந்த நாட்டில், 4 கோடிக்கு மேல் மக்களை  குட்டி முதலாளிகளாக்கும் சில்லறை வர்த்தகத்தின்  நிலை  அவசியம் ஆகின்றது.  எல்லோரும் கூலிக்கு மாறடிக்காது, வேலை நேரம் மட்டும் வேலை செய்து நிம்மதியாக இருக்கும் மனநிலையில் இருந்து விடுபட்டு  ராப்பகல் உழைக்கும் ஒரு வர்க்கம் நிச்சயமாக தேவையும் அவசியவுமே.  இன்றைய கல்வி- தொழில் நுட்ப புரட்சியின் மாற்றத்தால் பெரும் கல்வியறிவு பெற்ற இளைஞர்  வெறும் கூலி ஆட்களாக மாறி விட்ட சூழலில் சுய உழைப்பில் நம்பி இருக்கும் சமூகத்தை அழிப்பது வழியாக சுமூகமான சமூக சுழற்ச்சி பாதிக்கப்பட இருக்கின்றது.

இன்னும் சிலர் அரசு அதிகாரம், பதவி என்ற மாயை கொண்டு சுரண்டி பிழைக்கும் நிலையில் இருக்கும் போது சில்லறை வர்த்தகர்கள் உழைப்பு, போராட்டம் மத்தியில்  தன்னம்பிக்கையை மட்டும் நம்பி சொந்த தொழில் புரிகின்றனர்.  இவர்கள் நல்ல அரசியல் திட்டங்களால் உற்சாகப்படுத்தாது, நெறிப்படுத்தாது  அந்நிய முதலீட்டை புகுத்தி ஒட்டு மொத்த சமூகத்தயும் சோம்பேரியாகவும் அடிமையாகவும் மாற்றுவது பெரும் மோசமான சமூக விளைவையே ஏற்படுத்த உள்ளது. 
விலைக்கூடுதல், மாயம் கலந்த பொருட்கள் என அங்கலாயிக்கும் நபர்கள் அரசின் சட்ட திட்டங்களையும். வர்த்தகர்கள்  நடத்தப்படும் நிலையும் உற்று நோக்க வேண்டும். இன்று ஒரு அரசியல் கட்சிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் வர்த்த்கரிடமே பணம் பட்டு வாடா செய்யப்படுகின்றது. இவர்கள் வாடிக்கையாளர்களிடம் ஈடு கட்டவே முயல்வார்கள். மேலும் ஒரு கடைக்கான சாற்றிதழ் பெற குறைந்தது 500 ரூபாயில் இருந்து 5000 வரை கட்டாயமாக அரசு அதிகாரிகளால் வசூலிக்கப்படுகின்றனர். 

அந்நிய முதலீடு என்ற அசுரன் பிடியில் சில்லறை வர்த்தகம் மாட்டி கொண்டால் அதன் நிலை மிகவும் மோசமாக தான் இருக்கும். இதனால் சாதாரண மக்களும் பாதிக்கப்படுவார்கள். உழவர் சந்தைக்கு பொருட்கள் வருவது நேராக அன்னிய குடோனுக்கு சென்று விடும் நில வரவுள்ளது. இந்திய ஆப்பிளுக்கு பதில் மெழுகு ஆப்பிள் தின்ன நிர்பந்திக்கப்படுவது போல் அத்தியாவிச பொருட்கள் நிலை சென்று விடும். குடி தண்ணீர் லிட்டறுக்கு 25 ரூபாய்க்கு வாங்கி குடிக்க வேண்டி வந்த சாதாரண மக்கள் நிலையும் சிந்திக்க வேண்டியுள்ளது.  பல்பொருள் அங்காடி வந்ததால் விலையோ, தரமோ மேற்படாது நடைபெறும் வியாபாரம் போல்;  நியாயவிலை அங்காடி பொருட்கள் உள்நாட்டு மக்கள் கைகளுக்கு கிடைக்காது அந்நிய குளிரூட்டும் கிடங்குக்கு போய் விடும் காலவும் வரவுள்ளதை மறுக்க இயலாது.

அரசின் மோசமாக கொள்கையால் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டி விட்டது போல் சில்லறை வர்த்தகர்களும் அபாயநிலைக்கு தள்ளப்படுவதை  இச்சமூகம் காண வேண்டுமா?  மக்களுக்கு நல்ல பொருட்கள் கிடைக்க அந்நிய முதலீட்டை உள்ளே புகுத்தும் அரசு ஏன் தற்கால ஆங்கில பள்ளி படிப்பை வளப்படுத்த வெளிநாட்டு ஆசிரியர்களை கொண்டு வரக்கூடாது, ஏன் வெளிநாட்டு மந்திரிகளை இந்தியாவில் இறக்குமதி செய்து அரசியலை வளப்படுத்தக்கூடாது?

அந்நிய முதலீட்டை புகுத்த அனுமதிப்பது நம் சகோதர்களுக்கு நாம் செய்யும் துரோகம். ஏழ்மை வறுமை பெருகும் போது தற்கொலை மட்டுமல்ல கொலை கொள்ளையும் பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. 

26 Nov 2012

சொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி?

 கடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு கதைகள், நிகழ்வுகளா என ஆச்சரியம் கொள்ள செய்தது. சில சம்பவங்கள் கண்ட போது கண் ஈரமாகின ஆனால் பல நிகழ்வுகள் சிரிப்பை தான் வர வைத்தது.  தமிழக சீரியல் கதாநாயகிகளை விட கண்ணீர் சிந்தும், ஆக்கரோஷமாக பேசும் பெண்கள், கெட்ட வார்த்தையை காமரா முன் கூசாது பேசும் ஆண்கள், மயக்கம் போட்டு விழும் முதியவர்கள், திடீர் அடி மிதி , நிகழ்ச்சி நடத்துவர்கள் ஓடுவது ...அழுவது... என நிகழ்ச்சி போய் கொண்டிருக்கின்றது.

ஊடகத்தின் பங்கு என்ன; மக்களுக்கு செய்தி சேர்ப்பது, விழிப்படைய செய்வது, அறிவை புகட்டுவது.  ஆனால்   " சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி வழியாக விரட்டுகின்றது, மிரட்டுகின்றது, குற்ற விசாரணை செய்கின்றது, சமூகத்திற்க்கு நீதி உரைப்பதாக நினைத்து இவர்களை சமூகத்தை விட்டு புரக்கணியுங்கள், ஒதுக்குங்கள் என கட்டளைகளையும் சேர்த்து பிறப்பிக்கின்றது.

நான் கண்ட கதைகள் ஒரு புத்தி சுவீதனம் அற்ற மனைவியை கணவர் புரக்கணிப்பது மட்டுமல்லாது அவர் பெற்ற குழந்தைகளே கேலி செய்யும் சமூக சூழல் கண்டு அதிர்ந்தேன். மீடியா வழியாக மனைவியின் பெற்றவரிடம் பணம் கேட்கும் கணவன், எந்த காரணம் கொண்டாலும்  துணை போகும் ஊடகம், சகோதரன் வீட்டில் வைத்து இறைச்சி சாப்பிடுகின்றான் என குற்றம் சாட்ட அதை நிர்மலா அமோதிக்க ஆசாரமான் குடும்பத்தில் இப்படி செய்யலாமா என கேள்வி கேட்கும் நிர்மலா தனி மனித விருப்பங்களில் மூக்கை நுழைக்கும் பெண்ணை ஏன் சாடவில்லை? சில வரட்டு உபதேசங்கள் கொடுக்க என பஞ்சாயத்து முன்னேறுகின்றது!

இன்னும் கவனிக்க வேண்டிய  விடயம் கணவர்-மனைவி சண்டைகள் ஊடக வியாபரத்திற்காக பொது வேதியில் அல்லோலப்படுவது தான்.  மனைவி உள்ள போது கள்ளக்காதலியை கைபிடித்தவனை  சிறையில் தள்ளாமல் மிரட்டி பணியவைக்கின்றனர், தொலைகாட்சி அலுவலகத்திலே சண்டை நடக்கின்றது, கெட்ட வார்த்தையால் மாறிமாறி பேசி கொள்கின்றனர் அடித்து கொள்கின்றனர். தமிழக சமூக அவலமா அல்லது பண்பாட்டை உலகம் அறிய வெளிச்சம் இடுகின்றோமா?

காதலில் விழுந்து கெட்ட  சிறு பெண்கள் கண்ணீர் கதைகள்! சீரியல் நடிகைகள் கூட கிளீசரின் போட்டு இந்த அளவு கண்ணீர் சிந்தியிருப்பார்களா என்று சந்தேகம்.  இவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத அபலைகளும் அல்ல. பெற்றவர் அறியாது மற்றொரு ஆணவனுடன் அறை எடுத்து தங்குபவள் நிலை கொடியது தான் ஆனால் நிர்மலாவும் சேர்ந்து உருகின்றார். கள்ளக்காதலியை வைத்து கொண்டே ஏமாற்றி திருமணம் முடிப்பவனிடம் நிர்மலா பெரியசாமி நெஞ்சு வலியோடு ஏன் கதைக்கின்றார் என்பது விளங்கவில்லை.  இதய நோயால் விழுந்த பெண்ணை ஆம்புலன்ஸில் எடுத்து செல்லும் காட்சியும் தேவையா அல்லது நிகழ்ச்சி வெளியிடுபவர்கள் தணிக்கை செய்யாது ஏன் ஒளிபரப்புகின்றனர்...இப்படியாக நாடக தன்மையுடன் உண்மை சம்பவங்கள் காட்டப்படுகின்றதுறது. அவல மகனின் கதை!

நீதிபதி நிர்மலா பெரியசாமி.

உங்கள் கண்ணை கண்டால் நீங்கள் பொய் பேசுவது தெரிகிறது, பாவம் அந்த பெண் அழுகின்றார், ஆண்மை இல்லையாம் உங்களுக்கு!, இது  போன்ற தீர்ப்புகள் இவரால் எப்படி உடன் கொடுக்க  இயல்கின்றது?   என் உள் உணர்வு சொல்கின்றது  அதனால் தீர்ப்பிடுகின்றேன் என சொல்லி கொண்டு வெளிவிடும் வார்த்தைகள் இது மனோத்துவ ரீதியாக  பாதிக்கப்படும் குற்றம் சாட்டப்படும் நபரை பாதிக்க தகுந்த வண்ணம் இந்தளவு லாவகமாக கையாளலாமா? மேலும் கிராம மக்கள் என்றால் அவருக்கு தவறான புரிதலே உள்ளது. கிராம மக்கள் ஒன்றும் தெரியாத பாமரர்கள் என்றும் நகர்புறங்களில் வசிப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் எனும் நினைக்கும் நிர்மலாவை நினைத்து தான் ஆச்சரியமாக உள்ளது. கேரளாவில் இதே போன்று அமிர்தா தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்துகின்றது,  ஒரு சட்ட வல்லுனர், சமூக ஆவலர், இப்பிரச்சனை கையாளும் தனித்துவ தகுதி வாய்ந்த நபர் என 4 பேர் கொண்ட குழு தான் அந்த அந்த பிரச்ச்னைக்கு தீர்வு குறிப்பிடும்.  இங்கு சர்வரோக நிவாரணியாக நிர்மலா பெரியசாமி மட்டுமே  உள்ளார்.

கட்டபஞ்சாயத்து -நிர்மலா பெரியசாமி!
சில கயவர்களை, கயவர்களாக அவர் நினைப்பவர்களை மிரட்டி பணியவும் வைக்கின்றார். Z தமிழ் தொலைகாட்சி என்ற ஊடகத்தை லத்தியாக சுழற்றுகின்றார்.  மீடியா செய்ய வேண்டிய பணியை செய்கின்றாரா என்றால் தவறவே விடுகின்றார். சட்டபூர்வமான அறம் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை இல்லாது பரபரப்பு நிகழ்வுகளுடன் கண்ணீர், சண்டையுடம் தமிழ் மசாலா படம் போன்று நடத்தி செல்கின்றார் என்ற உண்மையை தெரிந்து கொள்வாரா. இரண்டு மனைவி


தனி நபர் உரிமை

தனி நபர் உரிமை மீறப்படுகின்றது.  ஊடகத்தில் தங்கள் முகம் தெரிய விரும்பாத நபர்களையும் கட்டாயப்படுத்தி கொண்டு வருகின்றார். அங்குவைத்து மிரட்டப்படுகின்றனர்.  சில சம்பவங்களில் காவல் நிலையங்கள் என்பதில் போல் பிரச்சனையை முதலில் கொண்டு வருபவர்களுக்கு சார்பாக தீர்ப்பு கிடைக்கின்றது. மேலும் தனிப்பட்ட வாழ்கையை செய்தியாளர்களால் சேகரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.  செய்தியாளர்கள் செய்யும் வேலை ஊடக தற்மம் சார்ந்ததா என்றால் இல்லை என்பதை உறக்க கூற இயலும்.  நிர்மலா அவர்களும் தன்னுடைய தனிப்பட்ட கருத்தை திணிக்க பார்க்கின்றார். குணம் சரியில்லை என ஒரு நபர் சொல்வதும் கள்ள தொடர்பா என கேட்பது; நிர்மலா அவர்களில் ஆளுமை குண நலன் மேல் அருவருப்பை தருகின்றது. மேலும் நிகழ்ச்சியில் வரும் பெரும் வாரியான மனிதர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிகரிக்கப்படுவதும் அவர்களை பற்றி திறந்த விளக்கம் கொடுப்பதும் தகுமா எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது. தெருவில் கூடி கதையளக்கும் போல் மீடியா வழியாக சம்பவங்கள் ஆராய்வது தவிற்க்க வேண்டியது.

நிகழ்ச்சியின் தேவை
 இந்நிகழ்ச்சி முற்றிலும் தவிற்க்க வேண்டியது என சொல்ல இயலாது. ஒரு வகையிலும் தீர்வு கிடைக்காத பெண்கள் மீடியா துணையை நாடுகின்றனர். ஆனால் நிகழ்ச்சி நடத்துவர்கள்  சில நிகழ்ச்சிகளை பொது நலம், மனித நேயம் சார்ந்து புரக்கணித்து ஒளிபரப்புவதை தவிற்க்க வேண்டும்.   சட்ட திட்டங்களை புரியவைக்க வேண்டும். பல நிகழ்ச்சிகள் கள்ள தொடர்பு காதல் சார்ந்த பிரச்ச்னை என்பதால் நிகழ்ச்சி நடத்தும் நிர்மலா வெள்ளைச்சாமி ஹிந்து கிருஸ்தவ, இஸ்லாமிய திருமண சட்டங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நிகழ்ச்சியில் சாதாரண நபர்கள் போல் உணர்ச்சி வசப்பட்டு கத்துவது அழுவது, நிகழ்ச்சிக்கு இடையில் அடி தடி சண்டை நடப்பை தடுக்க அல்லது அதை ஒளிபரப்புவதை  தவிற்க வேண்டும்.

17 Nov 2012

சபரிமலை ஐய்யப்பன் கோயில் தாலாட்டு பாடல் வரலாறாக மாறிய போது!

பக்தி பாடல்கள் கேட்பது பக்தி பரவசத்தில் நம்மை ஆழ்த்துவது மட்டுமல்ல மனதிற்கு எப்போதும் அமைதி தருவது.  சில பாடல்கள் அதிலும்  சாகவரம் பெற்று என்றும் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். அவ்வகையில் நான் பிறந்த தேசத்தில் இருந்து உருவான ஒரு பாடலை பற்றி கதைக்க இன்று முற்பட்டுள்ளேன். பாட்டின் ஓரிரு வரிகள் தவிர பொருள் எனக்கு விளங்காத பாடலாக இருந்தும்  இதயத்தை, மனதை ஊடுருவி செல்லும் ராகத்துடனான ஒரு பக்தி தாலாட்டு பாடல் இது.  சம்ஸ்கிருத மொழியில், மத்தியமாவதி ராகத்திலுள்ள இப்பாடலின் உருவாக்கம் மிகவும் சுவாரசியமானது; மனதை நெருடுவது.  

தலைமை குருவான ஈஸ்வரன் நம்பூதிரியுடன் 1950 ஆம் ஆண்டுல் கேரளா ஆலப்புழாவை சேர்ந்த  வி. ஆர் கோபால மேனோன் என்ற ஒரு பக்தன் 1000 வருடம் பழக்கமுள்ள சபரிமலை ஆலயத்திற்கு   வந்து சென்றுள்ளார்.  இது கொடூர வனமாக திகழும் மேற்கு தொடற்சி மலையில் உட்பகுதியிலுள்ள சாஸ்தா கோயில் ஆகும். இன்று 4 மிலியன் ஜனக்கள் வந்து செல்வதாக கணக்கிருந்தாலும் அன்றைய தினம் இந்த பகுதிக்கு வந்து திரும்பி செல்வது பெரும் சவாலாகும். இன்று போல் பாதைகள் அற்ற மலைப்பாதையில் கல் -முள் நிறைந்த வழியே வனவிலங்கின் ஆபத்தின் மத்தியில் பயணம் செய்து  சென்று வந்துள்ளனர் என்பதே சிறப்பு. இந்த கோயிலில் விசேஷமாக நடக்கும் பூஜை நேரம் நவம்பர் துவங்கி ஜனுவரி வரை கடினமான குளிர் நேரமாகும். கோயில் நடை அடைக்கும் முன் தங்கள் தெய்வத்தை பாடி தூங்க வைத்ததும் முதன்மை குரு விளக்கு எல்லாம் அணைத்து நடை அடைத்து செல்வதே வழக்கமாக இருந்தது.  முதன்மை குருவுடன் வரும் கோபால மேனேன் இத்தாலாட்டு பாட்டை மனதுருகி பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.  பூஜை முடிந்து கோயில் வாசலிலே தூங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தவரை  காட்டு விலங்குகளும் துன்புறுத்தாது விலகி சென்றுள்ளது.  இவரை 'சபரிமலை குடியிருப்புகாரன்' என்றே உள்ளூர் மக்கள் அழைத்து வந்துள்ளனர்.



இப்படியாக சென்ற இவருடைய வாழ்வில் இடியாக வந்தது கோயில் அறநிலை- தேவசம் குழு!  இந்த கோயில் நிறுவனமாக உருமாறும்  வேளையில் இந்த எளிய மனிதர் கோயில் வாசலில் தூங்கக்கூடாது என கட்டளை விதித்தது.  பின்பு இவர் மனச் சோர்வால் பக்கத்திலுள்ள ஊரான வண்டிப்பெரியாரின்  தெருவில் இறந்து கிடந்துள்ளார்.

இத்துயர் நிகழ்வை கேள்விப்பட்ட முதன்மை குருவுக்கு இவருடைய மரணம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை கம்பன்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயரால் எழுதப்பட்டு  சுவாமி விமோசந்திரால் முதன் முதலாக பாடப்பட்டுள்ளது. இவர் நினைவாகவே இவர் பாடிய பாட்டை தினம் நடை அடைக்கும் முன் பாடுவது வழக்கமாக இப்போதும் கொண்டுள்ளனர். பின்பு பலருடைய ரசனைக்கு இணங்க பல  ராகத்தில் இப்பாடல்  வெளிவந்தாலும் யேசு தாஸ் பாடிய ராகம் இப்பாடலுக்கு சாகாவரம் கொடுத்தது என்றால் மிகையாகாது. இப்படியாக உலகம் முழுதும் விரும்பி கேட்கும் இப்பாடல் ஒரு எளிய மனிதனின் இறை பக்தி துயர்மிக்க முடிவில் இருந்து  உருவாகியுள்ளது என்பது ஆச்சரியத்தை தருகின்றது. நீங்களும் பாட்டை கேட்டு விட்டு கருத்தை பகிர்ந்து செல்ல வேண்டுகின்றேன்.
சபரிமலை வரலாறு

12 Nov 2012

தீபாவளி பரிசுடன் கண்டன் பூனை!

றிக்கி போன பின்பு வீட்டிற்க்கு களை இழந்து விட்டது. எங்களை வழி அனுப்புவதும் நாங்கள் வீட்டிற்க்கு வரும் போதும் எங்களை வரவேற்கும் ஒரே ஜீவன் அவன் தான். துள்ளி துள்ளி ஓடி வந்து வரவேற்பதே ஒரு தனி அழகு தான். எங்களை ஆவலுடன் காத்திருப்பவன் அவனாக தான் இருந்தான். நாங்கள் நாலுபேரையும் நன்றாக புரிந்து வைத்திருந்தான். எங்கள் இளைய மகனுடன் தான் அவனுக்கு இன்னும் நிறைய பாசம். ஒரு நாள் நாங்கள் விருந்து வீடு சென்று திரும்பிய போது எங்களை வரவேற்க றிக்கி இல்லை. நாங்கள் வீட்டிலிருக்கும் போது ஊர் சுற்றினாலும் நாங்கள் இல்லாத போது எங்கும் போக மாட்டான். ஒரு வேளை  நாய் பிடிப்பவர்கள் பிடித்து கொண்டு போய் இருப்பார்களோ என்ற சந்தேகவும் வந்தது. சிலர் சொல்லினர் 'சில மருத்துவம்' செய்து நாயை திருப்பி கொண்டு விடுவார்கள் என. ஒரு நம்பிக்கையில் வருவான் வருவான் என காத்திருந்தோம். அவனுக்கான உணவு பல நாட்கள் மிஞ்சின.  ஆனால் ஒரு மாதம்  மேலாகியும் அவன் திரும்பி வரவில்லை. நாங்கள் போகும் பாதையில் கருப்பு நிற நாயை கண்டதும் றிக்கி என்று குரல் கொடுக்க ஆரம்பித்தோம். காலை எழும் போது அவன் வாயில் கதவு பக்கம் தலையை நீட்டி பார்ப்பது தான் பல நாட்கள் நினைவாக இருந்தது.  பக்கத்திலுள்ள குடியிருப்பிலுள்ளவர்கள் 10 க்கும் மேற்பட்ட நாய்களே ஒரே நாள் கொன்றனர் என்று அறிந்ததும் இனி அவன் வருவான் என்ற நம்பிக்கை முற்றிலும் பொய்த்து போய் விட்டது.  


 பின்பு வீட்டில் அவ்வப்போது விருந்தாளியாக வருபவன் கண்டன் பூனை தான். அது காட்டுப்பூனையா வீட்டு பூனையா என்று தெரியாது ஆண் பூனை என்பதால் நாங்கள் கண்டன் பூனை என அழைத்தோம்.  ஒரு சிறு புலியின் பதிப்பான ஒரு பூனை. என்னவர் தான் கூறுவார்  6 கிலோ தேறும் இந்த பூனை என்று. கண்ணு போடாதீங்கோ என நாங்கள் கலாயித்தாலும் இரவு உணவு எடுக்கும் நேரம் அதன் வரவையும் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.  மீன் சாப்பாடு என்றால் முள்ளை தூரப் போடாதீங்க... கண்டனுக்கு வைய்யுங்கள் என கரிசனை கொள்ள ஒவ்வொருவரும் ஆரம்பித்னர்.   கண்டன் பூனையும் "பால் இருக்கா? தாறீகளா? இல்லையா? என அதிகாரமாக கேட்டு கொண்டு நிற்கும் .  பல நாட்களில்   சாப்பாடு...சாப்பாடு... என்னை யாரும் கவனிக்கவில்லையா  இனி பொறுக்க இயலாது உடன் ஏதாவது தாருங்கள் என திட்டுவது போல்  இருக்கும் அதன் கூக்குரல்.  ஆனால் என்னவர் வீட்டில் உண்டு எனில் சின்ன சத்தம் மட்டும் எழுப்பி விட்டு நாங்கள் சாப்பிட்டு முடியும் மட்டும் காத்திருக்கும். இரவு  காப்பி அல்லது சாயா குடித்த பின்பு கண்டனுக்கும் ஒரு கப்பு பால் எடுத்து வைப்பது உண்டு. ஆனால் கல்லை எடுத்தால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் என்பது போல் இப்போது பல நாட்களாக பால் எடுத்து வைக்கும் போது பூனை வருவதில்லை, பூனை வரும் போது பாலும் இருப்பதில்லை. பெரிய பூனை என்பதால் சிறிய இடைவெளி ஏற்படுத்தி வைத்திருந்தனர்,  நாங்களும் தொடாதீர்கள் நாயை போலவே விஷம் உள்ளது என பயம்காட்டி வைத்திருந்தோம்.





 நேற்று பல நாட்கள் பின்பு கண்டன் பூனை வந்து சேர்ந்தது உடன் ஒரு அழகான வெள்ளை நிற பூனைக்குட்டியும்!. டேய் ...மீன் இருக்குது சாப்பிட்டு விட்டு செல் என்று மகன்கள் சொல்லியும் உடன் அழைத்து வந்த குட்டி பூனையை எங்கள் வீட்டில் விட்டு விட்டு மறைந்து விட்டது. 

நேற்று வந்து குட்டி பூனையை பார்த்து விட்டு சென்று விட்டது. இப்போதோ குட்டி பூனை நேரா நேரம் உணவு எங்கே என கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டது. வீட்டில் நடமாடும் பல்லி, பாச்சா(கரப்பான் பூச்சி) எல்லாம் சோக ஆகி கொண்டிருக்கின்றது.  இளைய மகன் தான் பூனை சொல்லாத கதை எல்லா எங்களிடம் கதைத்து கொண்டிருக்கின்றான். கண்டன் பூனை தீபாவளிக்கு நல்லொதொரு பரிசு பொருள் தான் தந்து சென்றுள்ளது.

6 Nov 2012

ஸ்ரீகங்கைமகன்-விமர்சனம்

எனது வாசிப்பில் - நான் தேடும் வெளிச்சங்கள்.


கி.பி 1250 ஆம் ஆண்டுகளில் கிரேக்கத்தில் ஒரு மனிதன் வாழ்ந்தான். அவனது சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சமூக எண்ணங்களில் இருந்து வேறுபட்டன. பிற்பட்ட காலத்தில் அவனது சிந்தனைகள் எண்ணங்கள் யாவும் கிரேக்கத் தத்துவங்களாக உருப்பெற்றன. காலையில் எழுந்து இரவுவரை பகல் நேரங்களில் ஒரு லாந்தரைக் கொழுத்திப் பிடித்துக்கொண்டு எல்லோரது முகங்களையும் பார்ப்பது அவனது நாளாந்த நடவடிக்கையாக இருந்தது.  ஊர் மக்கள் அவனைத் தள்ளிநின்று வேடிக்கை பார்த்தார்கள். விளக்கை இப்படிப் பகல் நேரங்களில் ஏன் பிடிக்கிறாய் என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன் "நான் மனிதர்களைத் தேடுகிறேன்" என்று பதிலளித்தான். அவனது சிந்தனையின் தலைப்பு "நான் தேடும் மனிதர்கள்" என்ற கட்டுக்குள் அடங்கியிருந்தது.  அந்தக் கிரேக்கத் தத்துவவாதி வெளிச்சத்தில் மனிதர்களைத் தேடினான். ஆனால் இங்கு ஒரு புதுமைப் பெண் எழுத்தாளர்  மனிதருக்குள் வெளிச்சத்தைத் தேடி வெற்றி கண்டுள்ளார். அந்தத் தேடலில் கிடைத்த தெளிவுதான் "நான் தேடும் வெளிச்சங்கள்" என்ற நூலாகும். இதன் ஆசிரியர் ஒரு பேனாபிடித்த சமூகவியல் போராளி என்று குறிப்பிட்டாலும் மிகையாகாது. அவர்தான் ஜெ.பி.ஜோசபின் பாபா என்ற படைப்பாளி. இந்தியப் பலதரப்பட்ட கலாச்சாரங்களில் கொடியாகச் சுற்றி மரமாக வளர்ந்தவர்.

சென்ற ஆண்டு தகிதாவால் வெளியீடு செய்யப்பட்ட எனது நூலான "ஆத்மலயம்"  என்ற புத்தகத்தைத் தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் உலகத்திற்குக் கொண்டு சென்று எனக்கு ஒரு முகவரியைப் பெற்றுத் தந்தவர்.  அப்பொழுது திருநெல்வேலியில் அவரைக் குடும்பத்தினருடன் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நல்ல விருந்தோம்பல் அறுசுவை உணவு போன்றவற்றுடன் வரும்போது திருநெல்வேலி அல்வாவும் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். அப்போது அடுத்த ஆண்டு நீங்களும் ஒரு படைப்பாளியாக ஒரு நூலை எழுதி வெளியீடு செய்யுங்கள் என்று கூறியிருந்தேன்.  அதன் வெளிப்பாடாக எழுதப்பட்ட இந்த நூல்; அவரது வெற்றிக்கு மட்டுமல்ல எனது சிந்தனைக்கும் மதிப்பளித்துப் பெருமை சேர்த்திருக்கிறது.  நூல் எழுத வேண்டும் என்றால் என்ன தலைப்பில் எழுதலாம் அண்ணா என்று கேட்டபோது; அவரது வலைத்தள ஆக்கங்களை வாசித்திருந்த எனக்கு ஒரு தலைப்பைக் கொடுப்பது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. "நான் சொல்வதெல்லாம் உண்மை" என்ற ஒரு தலைப்பை அவருக்காக நான் தெரிவு செய்திருந்தேன். ஆனால் புத்தகம் எழுதி முடிந்ததன் பின்னர்; இதனை வாசித்துவிட்டு வேறு ஒரு தலைப்புத் தாருங்கள் அண்ணா என்று பணிவாகக் கேட்டிருந்தார். புத்தகத்தை வாசித்த போது கிரேக்கத்து 1250 களில்  மனிதரின் முகங்களில் வெளிச்சம் பிடித்துப் பார்த்த தத்துவஞானியின் ஞாபகம் வந்தது.  அந்த எண்ணத்தில்  அமைந்ததுதான்  இந்த "நான் தேடும் வெளிச்சங்கள" என்ற தலைப்பாகும்.
.
இத்தனைக்கும் பிராயச்சித்தமாக அவர் தனது நூலில் "பட்டாம்பூச்சிக் கூண்டு போன்ற என் மௌனத்தை உடைத்து அதைப் புத்தகமாக வெளியிட ஊன்று கோலாக இருந்து உற்சாகப் படுத்திய என் தோழர், உடன் பிறவாச் சகோதரர் பாசமிகு சிறி அண்ணாவிற்கு (கங்கைமகன்)" என்று சமர்ப்பணத்தில் குறிப்பிட்டுப் பெருமை கொண்டுள்ளார்
.
இவரது முதலாவது கதையாகிய ஒற்றை மரத்தை வாசிக்கும்போது இவர் யாழ்ப்பாணத்தில் அதுவும் நெடுந்தீவு என்ற கிராமத்தில் பிறந்தாரா? என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தக் கிராமத்தில் அவக வாராக(வருதல்) அவக போறாக(போகுதல்) என்று கதைப்பார்கள். அதோபோல் அவரும் "நிற்பாக"  "மாட்டாக" என்ற சொற்களைப் பிரயோகித்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஆடும், மீனும், கோழியும், சாப்பிட்டுப் பாம்பு, பன்றி, புலி, யானை போன்ற மிருகங்களுக்கு இடையில் குலை நடுங்க வாழ்ந்த கதை கூறுவது அருமையாக உள்ளது.
.
என்னுயிர்த் தோழன் என்ற கதையில் படிப்பைவிட வேடிக்கை பார்த்த விடையங்களைக் கெட்டித்தனமாகக் குறியிருப்பது ஒரு அழகு. பாடசாலையில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்ட அவர் வீட்டில் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தைத் தன் சிறிய வயதிலேயே அடைந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
.
அடுத்து "ராஜமாணிக்கம் மகளும் வாத்தியும்" என்ற பதிவு ஒரு சுவாரஸ்யமானது. பாலச்சந்தரின் படவசனம் போல் அமைந்துள்ளது. முதலில் வரிகள் விளங்கவில்லை. இரண்டாம்தரம் வாசிக்கும்போது விளங்கியது. அந்த வரிகள் இவைதான். "தன் மனைவியின் முதல் பிள்ளை தூக்கவந்த பிள்ளைக்குத் தன்பிள்ளை ஒருவயது ஆகுமுன் ஒருபிள்ளையைக் கொடுத்து". இவ்வாறு பல மணிப்பிரவாள நடை தாண்டிய புதுப்பிரவாளமாகக் கதை செல்கிறது.
.
சூத்திரம் போன சுப்பன்" கதையில் வெள்ளைக்காரன் கட்டிய லயம் என்பது ஒரு குதிரைக்காரன் தங்குவதற்காக அமைக்கப் பட்டது. இது சிறிலங்காவில் பின்னர் தேயிலைத் தோட்டத்திற்கு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழருக்கு குடும்பத்திற்கு ஒரு வீடாகக் கொடுக்கப்பட்டது. அதே நிலையை இந்தக் கதையில் நான் பார்க்கிறேன். குழந்தைகளைக்கூட வீட்டில் விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் வாழ நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு புருசனையும் விட்டுவிட்டு புதிய காதலனுடன் ஓடிவரும் பெண்களை ஆண்களின் கையாலாகாத் தனத்திற்கு வெளிச்சம் போட்டுள்ளார்.
.
என் மனதைத் தொட்ட; கட்டாயம் அனைவரும் படிக்கவேண்டிய தலைப்புக்கள் "ரெனீட்டா ரொம்ப நல்லவ, வீடு, தீ-வலி, சொந்த வீடு, பூந்தோட்டம் சொல்லும் கதைகள், போன்றவை ஆசிரியரின் புத்திசாலித் தனத்திற்குக் கட்டியிருக்கும் பட்டுக் குஞ்சங்களாகும்.

அடுத்து "சேர நாட்டு அரண்மனை உங்களை வரவேற்கிறது" என்ற பதிவு நான் தேடும் வெளிச்சங்களுக்கு மகுடம் வைத்ததுபோல் அமைந்துள்ளது. எனது இரண்டு புத்தகங்களும் இவரது புத்தகமும் கோவை தகிதாவில் ஒரே மேடையில் வெளியீடு செய்யப்பட்டது. வெளியீடு முடித்து திருநெல்வேலி செல்லும் போது என்னையும்  அவரது கணவர் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து இந்தக் கதை கூறும் களத்திற்கு ஒருநாள் எல்லோரும் சென்றிருந்தோம். அங்கு நான் பார்த்த விடையங்களை மிகவும் துல்லியமாக இங்கு பதிவாக்கியுள்ளார்.
.
திருமதி பாபாவின் முகத்தைப் பார்த்தால் எந்த மொழி பேசுபவர் என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஆனால் அழகாகத் தமிழ் பேசுவார் என்று கண்டுபிடிப்பது மிகவும் இலகு. நிட்டசமாக நான் தேடும் வெளிச்சங்கள் என்பதன் இரண்டாம் பகுதியை நான் மட்டுமல்ல வாசகர்களும் எதிர்பார்ப்பார்கள் என்பதைக் கூறி ஒரு நல்ல பதிவைத் தந்த ஆசிரியரையும் வாழ்த்தி அவருக்குப் பக்கபலமாக இருந்த அவரது கணவர், பிள்ளைகள், உட்பட ஏனையவர்களையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.
ஸ்ரீ அண்ணாவுக்கு என் நன்றி வணக்கங்கள்.