Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

26 Oct 2011

தீ….வலி!


தமிழர்களின் பண்டிகையே அல்லாத தீபாவளி தற்கால வியாபார கலாச்சாரத்தால்  தமிழர்களின் பண்டிகை ஆகிவிட்ட சூழலில் பண்டிகை வந்ததோ வந்தது பல வீடுகளில் இத்துடன் தீராத சண்டைகளும் வலிகளும் சேர்ந்து வந்து விட்டது.

எதிர்வீட்டு பக்கத்து வீட்டு பெண்கள் போன வாரமே வாய் சண்டை ஆரம்பித்து விட்டனர்.  பால் வாங்கி கொண்டே ..
என்ன அக்கா மக என்னிக்கு வாரா எவ்வளவு உங்க முறை? 
உடனே பரிமளாக்காவுக்கு பண்ணையார் திமிறும் ஒன்று சேர
நீங்க எவ்வளவு கொடுக்குறீக என்ற மறுகேள்வி!
  நாங்க 3 ஆயிரம் ரூபாய் தான்.  மருமகன் எதிர்பாக்க மாட்டார் ஆனா முறை இருக்கில்லே…..
நாங்க 5 ஆயிரம் எங்க வீட்டிலும் மருமகன் தங்கமானவரு ஆனா நம்ம வீட்டு பிள்ளைக்கு பட்டு சேலை எடுத்து கொடுக்க வேண்டாமா?
நீங்க கொடுங்க… கொடுங்க…எங்க மக கலியாணம் முடிந்து தான் 11 வருஷம் ஆச்சில்லே!  போதும்……….3 ஆயிரம் ரூபாய்..
பரிமளம் அக்காவுக்கு ஆத்திரம் தீரவில்லை.  வந்திட்டா என்னையை கணக்கு போட.  என் மகளுக்கு நாங்க எல்லா பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கொடுப்போம் என்று சொல்லி கொண்டே வாயை சரித்து வைத்து கொண்டு ஒரு பக்க பார்வையும் பார்த்து  விட்டு வீட்டிக்குள்ள போய்டாக.

திருவிழாக்கள், மகிழ்ச்சியாக குடும்பமாக கொண்டாடி மகிழ்வதற்க்கு என்றால் வீட்டு முற்றத்தில் ஆரம்பிச்சு வீட்டுக்குள் ஒரே கும்மி அடி சண்டை வேற.  போத்தீஸ், ஆரெம்கெவி சேலை விளைப்பரம் வந்த  அன்று முதல் ஆரம்பித்த சண்டை பரிமளாக்கா வீட்டுகார்  தலையை பிச்சுகிட்டு வீட்டை விட்டே போகும்  மட்டும் தொடர்ந்தது.   

அடுத்த நாள் தாய் மகன்களிடம் பேசுவது கேட்டது, அதான் அப்பவே சொன்னேன் அப்பாகிட்ட நீங்க  சண்ட போடாதீங்கன்னு.  அக்காவும் வந்திட்டா அவளுக்கு 5 ஆயிரம் கொடுக்கனும் துணிமணி எடுக்க 4 நாள் தானே இருக்கு…

மகள் முந்தின நாள் மதியம்  தன் கணவர் வீட்டில் இருந்து தன்னோட மகளை இடுப்பில் வைத்து கொண்டு காரை விட்டு இறங்கினா.  அம்மாவிடம் அலைபேசியை வாங்கி "அப்பா நீ எப்ப வர போறே உன் பேத்தி தேடுதா"ன்னு அன்பு மொழியில்  பாசமழை பொழிந்தா.   அவரும் நேற்று காலை வீடு வந்து சேர்ந்தார். மக தன் மகளிடம் தாத்தா கிட்ட வெடி வாங்கி கேளுடா….ன்னு கொஞ்சும் சத்தம் கேட்டுது. எப்பவும் நாய் மாதிரி குலைச்சு பேசுதவரு பேத்திட்ட தாத்தா கண்ணு குட்டிக்கு மத்தாப்பு வாங்கி தாரேன்னு கதைக்கும் சத்தம் கேட்டுது.  நேரம் போக போக மக அப்பாவை திட்டுத சத்தம் கேட்க தொடங்கியது “நீ என்ன அப்பன், நீ எதற்க்கு என்னை பெத்து போட்டே”… அவரும் விட்ட பாடில்ல “போ நாயை நான் செத்தாலும் என் சொத்தில ஒரு பங்கும் தர மாட்டேன்”.  “நீ ஒன்னும் தர வேண்டாம் நீ தந்தாலும் விடிஞ்சுது போ”…ன்னு மகளும் ….. ஒரு வழியா மக தன் காரில் வீடு போய் சேந்திட்டா போல் இப்போ சத்தம்  இல்லை.

நல்ல தூக்கம் நடு இரவில் சண்டை இடும் சத்தம்!! மகன் அப்பனை திட்ட, அப்பன் மகனை அடிக்க போக, பரிமளா அக்கா “போக்கத்தவனை கட்டிக்கிட்டு அழ வேண்டியது, தான் என்ன பாவம் செய்தேனோ” என்று கூக்குரல் இட... நாங்க நல்ல தூக்கத்தில் இருந்தவக விழித்து விட்டோம். சத்தம் குறைவது போல் தெரியவில்லை அது பார்லிமென்று கூட்ட தோடர் போல் போய் கொண்டே இருந்தது.  நேரம் ஆக ஆக அசந்து விட்டார்கள் போல  சத்தம் குறைந்து குறைந்து ஓய்ந்தது. மறுபடியும் அசந்து  தூங்கி விட்டோம். இப்போது அதிகாலை 3 மணி ஆகியிருக்கும் கார் திறக்கும் சத்தம். கார் ஹாண் அடித்து கொண்டே இருக்கின்றது.  ஒரே மண்டைக்கனம்… ஆரம்பம்மாகி விட்டது மறுபடியும் போர்க்களம்!   நாங்க எழுந்து ஒரு கட்டன் காப்பி போட்டு குடிச்சிட்டு  அவரவர் வேலையை ஆரம்பித்து விட்டோம்.  அங்கு தூவனம் வந்து இடி மின்னலுடன் சண்டை மழை பெய்து கொண்டிருந்தது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிட்டு  வேலையை முடித்தும் முடிக்காமலும் பகல் 11 மணிக்கு ஒரு குட்டி தூக்கம் பிடிச்சா, மத்தாப்பு வெடி அல்ல புஸ்வானமும் இல்லை வானவெடி மாதிரி சண்டை தொடங்கி விட்டது மறுபடியும்!  ஆவேரி விழித்து பார்த்தா; பிள்ளைக இல்லை போல், பரிமளாக்கவும் அவுக வீட்டுகாரரும் சண்டை  போடுராக.  பிள்ளைக இருந்தாலும் ஒரு பலனும் இல்லை.  ஒரு பையன் இயந்திர துறையில் பொறியாளர் பட்டம் முடிச்சிருக்கானாம், பொண்ணு கணிணி துறையில் பொறியாளராம் இளைய பையன் மருத்துவம் படிக்கானம் . சண்டைன்னு வந்திட்டா அப்பறும் அவக வீடு ரங்கநாதன் தெரு சந்டை தான்!!!

வாய் சண்டை பெருத்து பெருத்து வீட்டுகாரம்மா சொல்றாக “ எலே நாயை உன்னை கட்டி என்னத்த கண்டேன், செத்து தொலையேன் நானாவது நிம்மதியா இருப்பலே…”, வீட்டுகாரர் சத்தம் தேங்கா சிரட்டையை பாறையில் உரசினாப்பிலே கேக்குது பதிலா பரிமளா அக்காச் சத்தம் “செருப்பு பிஞ்சிடும், தீபாவளிக்கு கேட்ட பட்டு சேலை எடுத்து தர வக்கில்ல பேச்சாக்கும்” ….வீட்டுகாரர் என்ன சொன்னார்ன்னு தெரியல செருப்பு வைத்து அடிக்கும் சத்தம் கேட்டது…..சப்சப்சப்ப்ப்…யார் யாரை அடித்தாங்கன்னு பார்க்க இயலவி\வில்லை….!

http://www.youtube.com/watch?v=TOOTnRxNjc0&noredirect=1 எதிர்வீட்டில மக வந்திட்டா  வெடி சத்தம் விட தாயும் மகளும் பேசும் சத்தம் தெருவை சுழற்றி அடிக்குது! நான் பாட்டு பெட்டியில் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணனுடைய நாட்டுப்புற  பாடலை சத்தமா  போட்டு விட்டுட்டேன்.

பக்கத்து வீட்டு பரிமளா அக்கா வீட்டிலே சத்தமே காணும் . கூடு கலஞ்ச கிளி மாதிரி பிள்ளைகள் எங்கயோ போய் விட்டார்கள். அண்ணாச்சி இருமல் சத்தம் மட்டும் அப்பப்ப கேக்குது.  மயான அமைதியாக வீடு!  தீபாவளி கொண்டாடுகிறார்கள் போல!!!!

6 Aug 2011

அம்மாவுக்கு ஓர் கடிதம்!


அன்புள்ள அம்மா, உன் பாச மகள் எழுதி கொள்ளும் கடிதம்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                      அம்மா இன்றும் கொடும் துர்-கனவு கண்டு எழுந்து விட்டேன்.  என் இதயம் ஈட்டியால் குத்தியது போல் வலிக்கின்றது.  நான் என்ன தவறு செய்தேன்.  உன்னை மறக்க நினைக்கும் தோறும் நினைவுகளில் தினம் வந்து என்னை கொல்லுகின்றாய்.    அதன் காரணம் தான் என்னால் உணர இயலவில்லை .  2 வயதில் 4 வயது குழந்தையாக வளர்க்கப்பட்டேன். 14 வயது வந்த போது நீ என்னை 20 வயது மங்கை ஆக்கினாய், திருமணம் வழியாக ஒவ்வொரு தாயும் சுகமாக வாழ அனுப்பும் போது நீயோ என்னை போரிட அனுப்பினாய். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உன் கண் அசைவில் தானே நான் சிந்தித்தேன், இருந்தேன், நடந்தேன், வளர்ந்தேன்.  உன் முன் கோபத்தால் தேவையற்று தண்டித்து விட்டு தேவைக் கதிகமான பாசத்தால் நீ அருகில் வரும் போது நான் எல்லாம் மறந்தேன். ஆனால் அதுவெல்லாம் இன்று என்னை இப்படி வதைத்து சாம்பலாக்கவா ?
                                                                                                                                                                   நீ சுந்தரம் டெய்லரிடம் ஒரு மாபெரும் டிசைனர் போல் எனக்கென துன்னிய சிவப்பு நிற கவுண் இட்டு   முதலாம் வகுப்புக்கிற்க்கு சென்றது நினைவு வருகின்றது.   உன் பிரிவை தாங்காது பள்ளி திரும்பி வீடு வந்து நீ பூட்டி இட்ட அரை வாசல் கதவில் பிடித்து தொங்கி அழுததும் நினைவு வருகின்றது.   பின்பு நீ வாங்கி கொடுத்த எனக்கு பிடித்த தின் பண்டம் போண்டாவை அல்லது பண் ரொட்டியை வாங்கி தின்று விட்டு நீ எனக்கு முகம் கழுகி பவுடர் இட்டு, பொட்டு,பூ வைத்து முத்தம் இட்டு அனுப்பும் பள்ளி நாட்கள் மட்டுமல்ல;  10ஆம் வகுப்பு வரையிலும் இரட்டை சடை பிண்ணி,  சோற்றை வாயில் ஊட்டி விடும்  நாட்களும் தான் நினைவில் வந்து மறைகின்றதுதேவை இல்லாத இடத்தில் சிரித்தேன், பேசினேன் என்று உன்னிடம் திட்டு வாங்கி அழுத்ததும் நினைவில் உள்ளது.
                                                                                                                                                               முதல் முதலாக  உயர்நிலை- பள்ளி படிப்புக்கு என உன்னை பிரிந்த நாட்கள் ஓடி வருகின்றது என் நினைவில். வாரம் 7 நாட்களும் உனக்கு நான் கடிதம் எழுதினேனே, அந்த கடித எழுத்து என் மகன் பிறக்கும் மட்டும் என்னை தொடர்ந்த்து வந்தது. நீயும் நானும் தாய்- சேயா, தோழிகளா என்று நம் உறவுகள் பொறாமைப் படும் மட்டும் நீ அன்பை பொழிந்து வளர்த்தாய்.  ஆனால் விடுதியில் இருக்கும் போது ஒரு கடிதம் வழியாக  “உனக்கு மாப்பிள்ளை முடிவெடுத்துள்ளோம் தட்டும் மாற்றி விட்டோம்  இனி எங்கள் வாக்கை காப்பாற்றுவது  உன் விருப்பம்என்று நீ கொடுத்த சுதந்திரவும் நினைவில் இருக்கின்றது.   
                       கல்யாண பந்தலில் அனுப்பும்போது கூட நீ என்னை வேட்டைக்கு என்பது போல் உன் பணம் நகை பறி போகின்றது என்று அழுது சாபம் இட்டு அனுப்பி விட்டாய்.  நான் ஏதும் மறுபேச்சு கேட்டேனா?  "என்னை மறந்தால் நீ விளங்க மாட்டாய்" என்று உன் அன்பு மிகுதியால் நீ ஆசிர்வதித்த வார்த்தைகள் தான் என் நெஞ்சில் இப்போது மிதக்கின்றது .  அந்த சாபத்திற்க்கு ஆளாகும் நாள் என் வாழ்வில் ஒரு போதும் வராது என்று நான் நினைத்தது இன்று பொய்யாகி விட்டதே என்று தான் இன்று பரிதபிக்கின்றேன்.
                    எனக்கு கிடைத்த வாழ்க்கையில் சிறப்பாக ஓட நான் துடித்து கொண்டிருக்கின்றேன். இன்றும் உன்னை கட்டி பிடித்து அம்மா என்று உன் அருகில் வர ஆசிக்கின்றேன் நீயும் மக்களே என்று அழைத்து முத்தமிடுவாய் என்று நினைப்பது உண்டு.  ஆனால் நீ என்னை காணும் போது உன் கணவருக்கு இப்போது வருமானம் எவ்வளவு, உனக்கு வேலை கிடைத்து விட்டதா என்ற கேள்வி மட்டும் தான் வரும் என்பதும் எனக்கு தெரியும்

                           தம்பி வெளியூரில்  சென்று படிக்க மாட்டேன் என்ற போது என் படிப்பையையும் சேர்த்து மட்டுப்படுத்தியதும், நம் குடும்ப சொத்தை காப்பாற்ற என்னை அடி மாடு போல் விற்றதும் கூட இப்போது தான் புரிந்து வருகின்றது. இனி உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கலாம் என்றாலும் என்ன தவறு நான் செய்தேன் என்று நான் கேட்டு கொண்டே இருக்கின்றேன் தற்போது.

திருமணம் என்ற பெயரில் கடலுக்கும் பேய்க்கும் நடுவில் கொண்டு விட்டு விட்டு நீயும் சேர்ந்து வேடிக்கை பார்க்கின்றாய்.   என்னை வைத்து தாய் பாலில் விஷம் கலந்து விட்டது என்று சொல்ல வைத்தாய்.  தாய் பாசத்திலும் வேஷம் உண்டு என்று என்னை நம்ப வைத்தாய்.  எனக்கு என்று ஒரு உலகம் தந்தாயா? உன் கையிலும், கண்ணிலும் வளர்ந்த என்னால் யாரிடமும்  நட்பு பேணி பழகவும் தெரியவில்லைஎனக்கு சுற்றும் உன்னை தவிற வேறு உலகம் ஏன் தரவில்லை நீஇன்றும் சுற்றும் முற்றும் யாரும் இல்லாத உலகில் நான் என்னுடன் கதைத்து கொண்டே இருக்கின்றேன், தூக்கத்திலும் எனக்கு நிம்மதி தருகின்றாயா? அழுது விழிக்கின்றேன் என் கனவில் கூட எனக்கு நீ விடுதலை  தரவில்லை! 300 கி.மீ உன்னை விட்டு பிரிந்து வரும் போது தனிமையில் அழுது புலன்பினேன் இன்றோ 3000 கி.மீ உன்னை விட்டு போய் விட மாட்டேனா என்று துடிக்கின்றேன்.

அப்பா சொன்னார்கள் உனக்கு பிடிக்காத அத்தை வீட்டிற்க்கு சென்றது தான் கோபம் என்று நான் வந்ததோ  3 வருடம் கடந்து உனக்கு ஒவ்வொரு முறை நான் வரும் போதும் ஒவ்வொரு அத்தையுடன் ஊடலில் இருப்பாய். நான் என்ன பிழை செய்தேன் அவர்களிடம் பேசக் கூடாது என்று. அடுத்த முறை நான் வரும் போது நீ இந்த அத்தையிடம் கூடலிலும் இன்னொரு அத்தையிடம் ஊடலிலும் இருப்பாய் என்றும் எனக்கு தெரியும். எனக்கு யாரும் சத்திருவுமில்லை உற்றவர்களும் இல்லை என்றும் தெரியும். இதற்க்கு என அப்பாவையும் என்னிடம் கதைக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் உண்டு.  அல்லது இந்த காரணம் சொல்லி உன் மகனுக்கு அப்பா சொத்தை முழுதுமாக சேர்க்கும் வேலையின் இதுவும் ஒரு சதி வேலையா?

                 இன்றும் உன் பெருமைக்காகவும் உன் ஆசைக்குமாக தான் வாழ்கின்றேன்நீ ஆசைப்படுவது போல் கழுத்து, காது, கை நிறைய நகை அணிந்து என் பங்களாவில் இருந்து என் காரில் உன்னை பார்க்க வருகின்றேன், என் மக்களே என்று ஓடி வருவாயா என்று  நான் பார்க்க வேண்டும்.   அன்றாவது நம் உறவினர்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்வாயா, நம் கோயில் திருவிழா சப்பரம் காண தான் அழைத்து செல்வாயா?


                  இது எல்லாம் காலம் செய்த கோலமா அல்லது என் ஜென்ம பாபமா ஒன்றும் விளங்கவில்லை எனக்கு. உனக்கு புரிந்தால் என்னை போல் ஒரு கடைசி கடிதாசு எழுதி தெருவித்து விடு அம்மாஇதை விட நான் பிறந்த போதே அழகு இல்லை என்று கம்பிளிக்குள் ஒளித்து வைத்திருந்த போதே  கொன்றிருக்கலாம் தானே.

ஒரு துளி கூட நிம்மதியான தூக்கம் இல்லை எனக்கு!  நீ வளர்த்த உன் மகிமையா அல்லது என் எல்லா இழப்பிலும் நான் உன்னை தேடுகின்றேனாஎன் மனசாட்சிக்கு ஒரே ஒரு கவலை நீ என்னை விட்டு முன்னே போய் நான் உன் சாபத்தில் வாழ்வதை விட,  நீ  வந்து மக்களே என்று விடும் ஒரு சொட்டு கண்ணீரில் என்  ஆன்ம சாந்தி அடைய வேண்டும் என்பது தான்.

(என்னிடம் தன் கவலையை பகிர்ந்த என் உயிர் தோழிக்கும் அவர் அம்மாவுக்கும் இந்த கடிதம் சமர்ப்பணம்!!! )