Showing posts with label கிறிஸ்தவம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவம். Show all posts

24 Sept 2025

வில்லியம் டிண்டேல் (William Tyndale):ஆங்கில வேதாகமத்தின் மற்றும் ஆங்கில மறுசீர்திருத்தத்தின் தந்தை

ஆரம்பக் கிறிஸ்தவ சபைக்கு எபிரேய வேதாகமமே ஒரே வேதாகமமாக இருந்தது.  கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் கிரேக்க மொழி ஆதிக்கம் செலுத்தும் lingua franca  சர்வதேச தொடர்பு மொழி ஆனது. அந்நேரத்தில் யூத பண்டிதர்கள் எபிரேய வேதாகமத்தை கிரேக்கத்திற்குத் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்கினர். அந்தப் பணி நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்தது.  இஸ்ரவேலரின்  பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து தலா ஆறு பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர் என நம்பப்படுகிறது.  

யூத வேதாகமத்தின் கிரேக்க மொழி பதிப்பு பின்னாளில் செப்துவஜிண்ட் (Septuagint ) லத்தீன் மொழியில் செப்டுவஜிண்டா, அதாவது "70" என்று அழைக்கப்பட்டது. கிரேக்க மொழி உலகில் பரவ ஆரம்பித்த போது  புதிய மதத்தவரான கிறிஸ்தவர்கள் செப்துவஜிண்டை ஏற்றுக்கொண்டனர். அதே சமயத்தில் கிறிஸ்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாடு நூல்களில் பல  கிரேக்கத்தில் எழுதப்பட்டு இருந்தன.  சிலவை அராமியத்திலும் எழுதப்பட்டு இருந்தன.

கிறிஸ்தவம் விரைவில் பரவியதால், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை காப்டிக், எத்தியோப்பிய, கோத்திக், மேலும் முக்கியமாக லத்தீன் மொழிகளுக்கு மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கி.பி. 405 ஆம் ஆண்டு, புனித ஜெரோம் (St. Jerome) செப்துவஜிண்டை ஒரு பகுதியாகக் கொண்டு லத்தீன் மொழிபெயர்ப்பை முடித்தார்.  இது வல்கேட் (Vulgate) என அழைக்கப்பட்டது. ஒருசில பிழைகள் இருந்தாலும், மேற்கு கிறிஸ்தவ உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அது நிலையான பதிப்பாக இருந்து வந்தது.


கி.பி. 6ஆம் நூற்றாண்டில், பாலஸ்தீனமும் பாபிலோனியாவிலும் இருந்த தால்மூது பாடசாலைகளின் எபிரேய பண்டிதர்கள் எபிரேய வேதாகமத்தை மீட்டெடுத்து முறையாக ஒருங்கிணைக்கத் தொடங்கினர். பல நூற்றாண்டுகள் கடின உழைப்பின் பின் உருவான மசோரெடிக் உரை (Masoretic Text), கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நிறைவடைந்தது. பின்னர் அது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் அச்சுக்கலை கண்டுபிடிக்கப்படும் வரை, மசோரெடிக் உரை  நம்பகத்தன்மையுடனும் பண்டிதர்களால் கையெழுத்துப் பிரதிகளாக பரவியது.

15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உருவான புதிய கல்வி இயக்கம், பண்டைய கிரேக்க மொழி ஆய்வை மீண்டும் உயிர்ப்பித்தது.  இதனால் புதிய மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. 

முக்கியமானதாக, நெதர்லாந்து மனிதநேய அறிஞர் டெசிடீரியஸ் எராஸ்மஸ் (Desiderius Erasmus) 1516-ல் கிரேக்க உரையும் தன் சொந்த லத்தீன் மொழிபெயர்ப்பும் அடங்கிய புதிய ஏற்பாட்டு பதிப்பை வெளியிட்டார். 

முழுமையான முதல் ஆங்கில வேதாகமம் 1382-இல் வெளியானது. இது ஜான் வைக்ளிஃப் (John Wycliffe) மற்றும் அவருடைய சீடர்களால் செய்யப்பட்டது எனக் கருதப்படுகிறது.  ஜெரோமின் வல்கேட், சிரியக், அரபிக், ஸ்பானிஷ், மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்புகளுக்கான அடிப்படையாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு உருவான டுவாய்-ரெயிம்ஸ் வேதாகமம் (Douai–Rheims Bible) (புதிய ஏற்பாடு 1582; பழைய ஏற்பாடு 1609–10) 20ஆம் நூற்றாண்டு வரையிலும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வேதாகமமாக இருந்து வந்தது.

மறுசீர்திருத்தம் (Reformation)

மறுசீர்திருத்தம் (Reformation) என்பது 16ஆம் நூற்றாண்டில் மேற்கு தேவாலயத்தில் நிகழ்ந்த மதப் புரட்சி ஆகும். இதன் தலைசிறந்த முன்னோடிகள் மார்ட்டின் லூத்தர் (Martin Luther) மற்றும் ஜான் கல்வின் (John Calvin) ஆவார்கள். மிகப் பெரிய அரசியல், பொருளாதார, சமூக விளைவுகளை ஏற்படுத்திய இந்த மறுசீர்திருத்தம், கிறிஸ்தவத்தின் முக்கிய கிளைகளில் ஒன்றான பிராட்டஸ்டண்டிசத்தின் (Protestantism) அடிப்படையாக அமைந்தது.

16ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தக்காரர்கள் தோன்றிய காலத்தில், நூற்றாண்டுகளாக, ரோமன் கத்தோலிக்க தேவாலயம்  குறிப்பாக போப்பரசரின் அலுவலகம் மேற்கத்திய ஐரோப்பாவின் அரசியல் வாழ்வில் ஆழமாக ஈடுபட்டு வந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட சதி முயற்சிகளும் அரசியல் சூழ்ச்சிகளும், தேவாலயத்தின் அதிகரித்த அதிகாரமும் செல்வமும் சேர்ந்து, அதனை ஆன்மீக ஆற்றலற்ற ஒன்றாக மாற்றின என்றுமட்டுமல்ல சபை மிகவும் சிக்கலான நிலையிலிருந்தது.

சபையின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு பாதிரியார்கள் விற்கும் indulgences ஆன்மீக சலுகைகள் அல்லது பாவ மன்னிப்புச் சீட்டுகள்  போன்ற தவறான பழக்கவழக்கங்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் இணைந்து தேவாலயத்தின் ஆன்மீக ஆட்சியைத் தளர்த்தின. இருப்பினும்    பெரும்பாலான மக்களுக்குப் தேவாலயம் ஆன்மீக ஆறுதலை வழங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் பாதிரியர்களுக்கு எதிரான மனநிலை இருந்தாலும், மொத்தத்தில்,  தேவாலயத்தில்  மக்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்து இருந்தனர், ஆனால், எதிர்ப்பாளர்களின் தாக்கத்தில் இவை அதிகப்படுத்தப்பட்டு பேசப்பட்டும் கொண்டிருந்தன என்றும் ஒரு குழுவினர் நம்பினர். அரசியல் அதிகாரிகள் தேவாலயத்தின்  செயல்பாடுகளை கட்டுப்படுத்த முயன்றது. அரசிற்கும் சபைக்குமிடையில் பதற்றத்தை உருவாக்கியது. 


இதற்கிடையில், ஜெர்மனியில் மார்ட்டின் லூத்தர், கிரேக்க மற்றும் எபிரேய அசல் உரைகளிலிருந்து முழுமையான வேதாகமத்தை ஜெர்மன்  மொழிக்கு மொழிபெயர்த்தார். அவரது ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாடு 1522-ல், முழு வேதாகமம் 1534-ல் வெளிவந்தது. இது ஜெர்மன் பிராட்டஸ்டண்டுகளுக்கான அதிகாரப்பூர்வ வேதாகமமாக இருந்ததோடு, டானிஷ், சுவீடிஷ் மற்றும் பிற மொழிகளுக்கான அடிப்படையாகவும் அமைந்தது.

1611-இல் வெளியான கிங் ஜேம்ஸ் பதிப்பில் (King James Version  இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு என அழைக்கப்பட்டது இது கிங் ஜேம்ஸ் I நியமித்த 54 அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. சொற்சொற் பொருள் மட்டுமல்லாமல், பல மரியாதைச் சொற்களையும் பயன்படுத்தியதால், அது ஜேக்கோபியன் ஆங்கிலத்தின் சிறந்த படைப்பாகும். 270 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலம் பேசும் பிராட்டஸ்டண்டுகளின் முக்கிய வேதாகமமாக இருந்து வந்தது.


வில்லியம் டிண்டேல் (William Tyndale) கி.பி. 1494 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் கிளாஸ்டர்ஷயர் அருகே பிறந்தார் .  வில்லியம் டிண்டேல் (William Tyndale) மார்ட்டின் லூத்தரின் காலத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கில அறிஞர் ஆவார்.  டிண்டேல் ஒரு திறமையான மொழியாளர்; லத்தீன், எபிரேய, கிரேக்க மொழிகளைச் சேர்த்து ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் ஒரு ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர், மனிதநேய அறிஞர், மற்றும் பிராட்டஸ்டண்ட் தியாகி என அறியப்படுகிறார்.


டிண்டேல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார். 1521-ல், அவர் வைட் ஹார்ஸ் இன் (White Horse Inn) எனப்படும் இடத்தில் கூடிக் கொண்டிருந்த மனிதநேய அறிஞர்களின் குழுவுடன் தொடர்பு கொண்டார். வேதாகமமே தேவாலயத்தின் போதனைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தமது சொந்த மொழியில் வேதாகமத்தைப் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் நம்பினார்.


அந்தக் காலத்தில் அச்சுத்தொழிலின் தாக்கமும், தாய்மொழிகளில் வேதாகமத்திற்கு ஏற்பட்டிருந்த தேவையும் காரணமாக, வில்லியம் டிண்டேல் 1523 ஆம் ஆண்டு கிரேக்க மொழியிலிருந்து நேரடியாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் விரும்பினார். 1523-ஆம் ஆண்டு, டிண்டேல் லண்டனுக்குச் சென்று புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அனுமதி கோரினார்.  காரணம், அக்கால இங்கிலாந்து அதிகாரிகள்  ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்திருந்ததால்; அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  கத்தோலிக்கர்கள் வேதாகமத்தை லத்தீன் மொழியிலேயே வைத்திருக்க விரும்பினர். இங்கிலாந்தில் தேவாலய அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியதால், 1524-ல் அவர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தார்; அங்கு லண்டன் வணிகர்களின் நிதியுதவியுடன் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.


அவரது புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு 1525 ஜூலையில் நிறைவுபெற்றது, கேலோன் (Cologne) நகரில் அச்சிடப்பட்டது. தன்னுடைய பாதுகாப்புக்காக, அந்தப் பதிப்பில் தனது பெயரையோ அடையாளத்தைக் காட்டும் விவரங்களையோ சேர்க்கவில்லை.  ஆனால் அந்நகரின் அதிகாரிகளின் அழுத்தத்தினால் அவர் அங்கிருந்து வெளியேறி, வோர்ம்ஸ் (Worms) நகரில் தஞ்சமடைந்தார். 



ஆனால், 1525 முதல் 1535 வரை வில்லியம் டிண்டேல் (William Tyndale)
மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதி, பிந்தைய ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான மாதிரியாக அமைந்தது.  அங்கு 1525-ல் இன்னும் இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டன. புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பை முடித்த பின், டிண்டேல் பழைய ஏற்பாட்டில் பணியாற்றத் தொடங்கினார். 1530-இல் மார்பர்க் (Marburg) நகரில் பெந்தட்யூக் (Pentateuch) முதல் ஐந்து நூல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டது. டிண்டேல் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்.  1526-ல் முதல் பிரதிகள் இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டன;  அதன் பிரதிகள் விரைவில் இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டு மக்களிடையே பிரபலமடைந்தன. டிண்டேல் உருவாக்கிய மொழி நடை, சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், அது ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளுக்கான பாணியை நிலைநிறுத்தியது. இருப்பினும்  அதிகாரிகளால் அவை தடைசெய்யப்பட்டன; மேலும்  அவரை மதவெறுப்பு குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர் .


அதிக கடனில் சிக்கியிருந்த ஹென்றி பிலிப்ப்ஸ் (Henry Phillips) என்ற நபரிடம் வில்லியம் டிண்டேலைத் தேடி பிடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.  பிலிப்ப்ஸ்  டிண்டேலைக் கண்டுபிடித்தால் பெரும் தொகை பணம் வழங்கப்படும் என அவருக்குச் சொல்லப்பட்டது.  1535-ஆம் ஆண்டு, பிலிப்ப்ஸ் அந்த்வெர்ப் (Antwerp) நகரின் வணிகர்களுடன் தொடர்பு ஏற்படுத்தத் தொடங்கினார். ஏராளமான சூழ்ச்சி மற்றும் ஏமாற்றுக்களின் மூலம், டிண்டேலின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்தார். டிண்டேலின் நெருங்கிய வட்டாரத்திற்குள் நுழைந்து, அவரோடு நண்பனாகவும் ஆனார்.

ஒரு நாள், டிண்டேலிடம் 40 ஷில்லிங்குகளை கடனாக வாங்கிய பின், பிலிப்ப்ஸ் அவரை உணவுக்கு அழைத்தார்.   இருவரும் ஒரு குறுகிய தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது, டிண்டேல் அரச படையினரால் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.  பின்னர், அவர் 500 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்டார். பெல்ஜியம் அருகிலிருந்த ஒரு கோட்டையில், குளிரும் இருளும் நிறைந்த சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். இரவில் மெழுகுவர்த்தி வேண்டியும், குளிரைத் தாங்குவதற்குத் துணி வேண்டியும் காவலர்களுக்கு கடிதம் எழுதினார்:  “இருட்டில் தனியாக உட்கார்வது மிகவும் சிரமமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டார். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் விண்ணப்பித்தது; எனது நேரத்தை  படிப்பில் செலவிட விரும்புகிறேன்.எனக்கு என் எபிரேய வேதாகமம், எபிரேய இலக்கணம், மற்றும் எபிரேய அகராதி பயன்பட அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.; என்று வேண்டியிருந்தார்.   அதாவது, தண்டனைக்கு காத்திருக்கும்போதே, அவர் தனது வேதாகமப் பணியைத் தொடர விரும்பினார். 18 மாதங்கள் கழித்து, தேவாலயத்தினால்  மதவெறுப்பாளி (heretic) என அறிவிக்கப்பட்டு,  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

டிண்டேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்:

  • “நம்பிக்கை தான் நீதிமானாக்கும்” என்ற அவர் நம்பிக்கை.  பாவ மன்னிப்பில் விசுவாசிக்காது, சுவிசேஷம் வழங்கும் இரக்கத்தை ஏற்றுக்கொள்வதே இரட்சிப்பிற்கு போதுமானது என்ற அவரது நம்பிக்கை முக்கிய குற்றமாக கணக்காக்கப் பட்டது.  

 மதச்சார்பற்ற கருத்துக்களுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, பில்வோர்டே (Vilvoorde) நகரில்  1536 அக்டோபர் 6 அன்று, அவரைத் தூக்குத் தண்டனை மற்றும்  எரித்துக் கொல்லவும் கொண்டுசென்றனர். கூட்டம் முன்னிலையில், அவரை ஒரு தூணில் கட்டினர்; கால்களின் சுற்றிலும் மரக்கட்டைகளும் வைக்கோலும் அடுக்கப்பட்டன; மேலாக துப்பாக்கி மையம் (gunpowder) தூவப்பட்டது. சங்கிலியும் கயிறும் அவரது கழுத்தில் பிணைக்கப்பட்டது.

அந்தக் கடைசி நொடியில், டிண்டேல் தனது இறுதி வார்த்தைகளைச் 
“கர்த்தாவே, இங்கிலாந்து அரசனின் கண்களைத் திறந்தருளும்!” என்று சொன்னார்: 

பின்னர் கயிறு இறுக்கப்பட்டது. டிண்டேல் உயிரிழந்தார். அவரது உடல் தீயில் எரிக்கப்பட்டது; துப்பாக்கியும் வெடித்ததால் காட்சி இன்னும் கொடூரமானதாகியது. தேவனுடைய வார்த்தையை இங்கிலாந்திற்குக் கொண்டுவந்த குற்றத்திற்காகவே, “கடவுளின் சட்டவிரோதன்” என்று அழைக்கப்பட்ட வில்லியம் டிண்டேல் தியாக மரணத்தைச் சந்தித்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இறுதி ஜெபம் நிறைவேறியது. இங்கிலாந்தின் ஹென்றி எட்டாம் (Henry VIII) அரசன் ஒவ்வொரு தேவாலயத்திலும் ஆங்கில மற்றும் லத்தீன் வேதாகமப் பிரதிகள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

டிண்டேலின் மொழிபெயர்ப்பு, அவரது காலத்திலிருந்து வந்த அனைத்து ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளிலும் காணப்படுகிறது. கிங் ஜேம்ஸ் (King James) புதிய மொழிபெயர்ப்பை ஏற்படுத்த 50 சிறந்த அறிஞர்களை நியமித்தார். ஆயினும், அவர்கள் கூட டிண்டேலின் பணியை மேம்படுத்த முடியவில்லை. கிங் ஜேம்ஸ் பதிப்பில் (1611), புதிய ஏற்பாட்டின் சுமார் 84% மற்றும் பழைய ஏற்பாட்டின் 76% டிண்டேலின் மொழிபெயர்ப்பே உள்ளது!

பல வழிகளில், வில்லியம் டிண்டேல் நவீன ஆங்கில மொழியின் தந்தை, அதேபோல் ஆங்கில வேதாகமத்தின் மற்றும் ஆங்கில மறுசீர்திருத்தத்தின் தந்தை ஆவார். இங்கிலாந்தின் அரசனிலிருந்து எளிய உழவன் வரை அனைவரும் தேவனுடைய வார்த்தையை அறியும்படி செய்வதற்காக ,பைபிளை ஆங்கில மொழிக்குத் மொழிபெயர்க்கும் பணிக்காக வில்லியம் டிண்டேல்  தனது உயிரை இழந்தார். 

அவர் மரணமடைந்த காலத்தில், அவரது 18,000  புதிய ஏற்பாட்டு பிரதிகள்   அச்சிடப்பட்டிருந்தன.  முழுமையான இரண்டு பிரதிகளும் ஒரு சிதைந்த பிரதியும்  லண்டனின் பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் உள்ளன.  அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்ந்தும் உயிர்வாழ்ந்து வருகிறது.


டிண்டேலின் மிகப் பெரிய சாதனை, ஆழமான கல்வி, எளிமையான நடையைப் பயன்படுத்தும் திறன், இலக்கிய அழகியைக் காக்கும் திறன் ஆகியவற்றை ஒரே பாணியில் இணைத்துச் செய்த மொழிபெயர்ப்பு. இது ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளில் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியது. எபிரேய பாணியின் சுவையைத் தக்கவைத்த அந்த ஆங்கில நடை, கிங் ஜேம்ஸ் பதிப்பு (1611) தொடங்கி அடுத்த 400 ஆண்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான மாதிரியாக இருந்தது.






28 Apr 2025

அர்ஜென்டினா அழுக்குப் போரை (1976-83) முடிவிற்கு கொண்டு வந்த தாய்மார்கள் குழு !

அர்ஜென்டினா "அழுக்குப் போர்" (1976-83)
17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்,  அர்ஜென்டினாவிற்கு கத்தோலிக்க மதம் 16 ஜேசுட் மிஷனரிகள் ஊடாக அறிமுகமானது. அர்ஜென்டினாவின் பூர்வீக மக்களை, நயந்தும், கட்டுப்படுத்தியும் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றினர்.

அர்ஜென்டினா 1810 இல் ஸ்பெயினிலிருந்து சுதந்திரம் பெற்றது. இது கிரேட் பிரிட்டன் உட்பட பிற காலனித்துவ சக்திகளுடன் உள்ள வர்த்தக தடைகளை நீக்கியது. 1910-1929 ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் காலத்தில்  ​​ஐரோப்பிய குடியேறிகள், முக்கியமாக ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியர்கள் பெருமளவில் குடியேறியதன் மூலம், கத்தோலிக்க திருச்சபை பெரும் வளர்ச்சியை கண்டது.   கத்தோலிக்க மதம் இங்கு மிகவும் பிரபலமடைந்ததால் 1934 இல்,34வது நற்கருணை மாநாடு தென் அமெரிக்க நாட்டில் முதன்முறையாக பியூனஸ் அயர்ஸில் நடைபெற்றது.  அடுத்த சில ஆண்டுகளில், சர்ச் அதன் ஆதிக்ககத்தை அரசியல் அதிகாரத்தின் மேல்  செலுத்த ஆரம்பித்தது.

தலைவர் ஜுவான் டொமிங்கோ பெரோன் அர்ஜென்றினா நாட்டை மதச்சார்பற்ற நாடாக உருவாக்க முயற்சிகள் எடுத்தார், இதனால் ஏற்பட்ட  கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரை நாடுகடத்துவதில் சபை தன் பெரும் பங்கைக் கொண்டிருந்தது.  1955 இல் திருச்சபையிலிருந்து அவரை வெளியேற்றினர்.  இதற்கு பின்புலனாக அமெரிக்கா செயல்பட்டது என்றால் மிகை அல்ல . பிற்பாடு நாட்டின் வரலாற்றில் நடந்த ஆறு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளில் மூன்றில் ஒரு பங்குக்கு சபை வழிவகுத்தது.

அழுக்குப் போர் (Dirty War)


1976 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜெனரல் ஜார்ஜ் விடேலாவின் தலைமையில்  ஆட்சிக்கு வந்த அர்ஜென்டினா இராணுவ ஆட்சிக்குள் ஆனது. கிறிஸ்தவ சபையின் பெயரில் கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவதாக சொல்லிய விடேலா தான் ஒரு கத்தோலிக்க அரசாங்கத்தை வழிநடத்துவதாகக் கூறிக்கொண்டார். ஆனால் அர்ஜென்டினாவின் கொடிய அழுக்குப் போரின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல கத்தோலிக்கர்களைக் கொன்று துன்புறுத்தியது.  சபை நிலைமையைத் தணிக்க எதுவும் செய்யவில்லை, eன்றுமட்டுமல்ல  சர்வாதிகாரிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


என்ன நடக்கிறது என்பது தங்களுக்கு முழுமையாகத் தெரியாது என்றும், தங்களால் இயன்றவரை மக்களுக்கு உதவ முயன்றதாகவும் சபைத் தலைவர்கள் பிற்பாடு கூறியுள்ளனர். அர்ஜென்டினாவின் அழுக்குப் போரின் போது கத்தோலிக்க மதத்திற்கும் அரசு பயங்கரவாதத்திற்கும் இடையிலான உறவைப் பற்றிய சான்றுகள், காணாமல் போனவர்களுடனான நேர்காணல்கள், அரசு மற்றும் திருச்சபையின் ஆவணங்கள், களப்பணிகள்  மற்றும் பங்கேற்பாளர் கண்காணிப்பு ஆகியவற்றை குஸ்டாவோ மோரெல்லோ என்ற எழுத்தாளர்  விலாவரியாக எழுதியுள்ளார்.

சிலி மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போலல்லாமல், அர்ஜென்டினாவின் அரசியல் வன்முறை அரசியல் கத்தோலிக்க கொள்கையை பரப்புவதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருவியாகக் கருதப்பட்டது; கம்யூனிஸ்டு கெரில்லாக்களை ஒடுக்கும் விதமாக இராணுவ அரசாங்கத்தால் சபையின் ஆதரவைப் பெற முடிந்தது.


கத்தோலிக்கர்கள் மீது சுமத்தப்பட்ட வன்முறையை நியாயப்படுத்த அர்ஜென்டினா அரசாங்கம் கத்தோலிக்க மதத்தைப் எவ்வாறு பயன்படுத்தியது என்பதையும், அர்ஜென்டினாவில் உள்ள அதிகாரப்பூர்வ கத்தோலிக்க படிநிலை இந்த வன்முறையை எதிர்கொள்வதில் அவர்களின் மௌனம் ஊடாக எவ்வாறு நியாயப்படுத்தியது என்பதையும் மொரெல்லோ ஆராய்ந்து உள்ளார். மிகவும் கொடிய அரசு வன்முறையால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்த சிக்கலான சூழலில் தங்கள் சொந்த நம்பிக்கையை எவ்வாறு புரிந்துகொண்டார்கள்,  அர்ஜென்டினாவின் சர்வாதிகாரத்தின் கீழ் கத்தோலிக்கராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும் ஆராய்ந்து எழுதி உள்ளார்


அர்ஜென்டினாவின் அழுக்குப் போரின் போது - அரசாங்கத்தைத எதிர்த்துப் போராடினார்கள் என்ற குற்றம் சாட்டி, கம்யூனிசத்தை ஆதரித்தனர் என்பதற்காக 15,000 பேர் கொல்லப்பட்டனர், 8,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், சுமார் 6,000 பேர் நாடுகடத்தப்பட்டனர். 90 சதவீத மக்கள் கத்தோலிக்கர்கள் உள்ள ஒரு நாட்டில், கத்தோலிக்கர்கள் மற்ற கத்தோலிக்கர்களைக் கொன்று வருகிறார்கள் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று பாதிரியார் மொரெல்லோ கூறுகிறார். 'கத்தோலிக்கராக இருப்பதன் அர்த்தம் என்ன?"என்று சிந்திக்கவைத்த போராக இருந்தது அது என்கிறார்.

லத்தீன் அமெரிக்காவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் இரண்டாம் வத்திக்கான் கவுன்சிலின் சீர்திருத்தங்களும் ஒரே நேரத்தில் வந்தன. மத மாற்றத்திற்குப் பிறகு கத்தோலிக்கர்களின் நடவடிக்கைகள் தங்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டனர் என்பதின் தொடர்புடையவை என்று பாதிரியார் மோரெல்லோவின் பகுப்பாய்வு முடிவு செய்தது.

இந்த சகாப்தத்தில் அவர் மூன்று வகையான கத்தோலிக்கர்களை வகைப்படுத்தினார்:
1. மதச்சார்மின்மைக்கு எதிரானவர்கள், அனைத்து வகையான மாற்றங்களுக்கும் எதிரானவர்கள் (சமூக, கலாச்சார, மத);
2. ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடிமட்ட இயக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தவர்கள்; மற்றும்
3. நிறுவன ரீதியாக, பழமைவாதமாக இருந்தாலும் மாற்றங்களை விரும்புகிறவர்கள் மற்றும் அரசாங்கமும் கத்தோலிக்க திருச்சபையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நம்புபவர்கள்.


மலினப் போரின் போது கத்தோலிக்க திருச்சபையின் மௌனம் விமர்சனத்தை கொண்டிருந்தாலும் மற்றைய காரணிகள் ஆன  சபை, ஊடகங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக பேசாது இணைந்து செயல்பட்டன  என்கிறார்.
பாதிரியார் மொரெல்லோ மதம், அரசியல் மற்றும் வன்முறைக்கு இடையிலான உறவு இன்னும் உலகில் இருப்பதால், அழுக்கு போரில் என்ன நடந்தது என்பதைப் மக்கள் புரிந்துகொள்வது அவசியம் என்கிறார்.

இருப்பினும் அர்ஜென்டினா கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் கத்தோலிக்க மதம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.  அர்ஜென்டினா அரசியலமைப்பு கத்தோலிக்க திருச்சபைக்கு முன்னுரிமை சட்ட அந்தஸ்தை வழங்கி உள்ளது. கத்தோலிக்க பாரம்பரியம் அர்ஜென்றீனா சமூக வாழ்க்கை முறையில் குறிப்பாக அரசியல் ரீதியாக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்கிறார்.  அர்ஜென்டினா தென் அமெரிக்காவின் மிகவும் முற்போக்கான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அர்ஜென்டினா 1987 இல் விவாகரத்தையும், 2006 இல் பாலியல் கல்வியையும், 2010 இல் ஒரே பாலின திருமணத்தையும், 2012 இல் பாலின அடையாளச் சட்டத்தையும் சட்டப்பூர்வமாக்கியது.

பியூ(Pew Research Center ) ஆராய்ச்சி மையத்தின் கணக்கெடுப்புப்படி,1960 களில், லத்தீன் அமெரிக்க மக்களில் 90 சதவீதம் பேர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று தரவு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 2014 ஆம் ஆண்டின் தரவுப் படி 69 சதவீதம் பேர் மட்டுமே கத்தோலிக்கர்களாக அடையாளம் காணப்பட்டதாகக் குறிப்பிட்டு உள்ளது.
பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான ஜுவான் குரூஸ் எஸ்கிவெல் மேற்கொண்ட ஆராய்ச்சியும் இதே தரவைத் தான் சரி வைக்கிறது.


அர்ஜென்டினாவில் கத்தோலிக்கர் எண்ணம் குறைய முக்கிய காரணங்களில் ஒன்று பந்தகோஸ்தை சபைகளின் எழுச்சியாக இருக்கவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.  குறிப்பாக இளைஞர்கள் ,  ஏழைகள் மற்றும் முறையான கல்வி இல்லாதவர்களிடையே மத்தியில் பந்தகோஸ்தை சிறப்பான  இடம் பெற்றுள்ளது.
2,000 ஆண்டுகள் பழமையானது, பாரம்பரிய மற்றும் அதிகாரத்துவ நிறுவனமாக பெருமை கொள்ளும் கத்தோலிக்க திருச்சபை , சமூகப் பிரச்சினைகள் பிரார்த்தனை செய்வதன் மூலம் தீர்க்கப்படுவதில்லை, மாறாக கட்டமைப்பு மாற்றங்களால் தீர்க்கப்படுகின்றன என்பதை மறந்து போயுள்ளனர் என்கின்றனர்.

சில மக்கள் தங்களுக்கு எந்த மதம் மேலும் நம்பிக்கை இல்லை என்று அறிவித்து இருப்பதால் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று அர்த்தமல்ல, என்று திரு. எஸ்கிவெல் கூறுகிறார். அர்ஜென்டினாவில் எந்த மதம் அடையாளமும் பேண விரும்பாதவர்களில், 72 சதவீதம் பேர் ஆழ்நிலை "ஆற்றலை" நம்புவதாகக் கூறியுள்ளனர்; 34 சதவீதம் பேர் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை நம்புவதாகவும், 20 சதவீதம் பேர் இயேசு கிறிஸ்துவை நம்புவதாகவும் ; 29 சதவீதம் பேர் கடவுளை நம்புவதாகக் கூறினர்.

அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்ட போப் பிரான்சிஸ் இருப்பும் கத்தோலிக்க சபை உறுப்பினர் எண்ணிக்கைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் அளிக்கவில்லை என்கிறது தரவு.

புதிய போப், அந்த மோசமான போரின் காயங்களைக் குணப்படுத்தவும், கத்தோலிக்க படிநிலையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவுவார் என நம்பி இருந்ததாக கூறியிருந்தனர்..
தனது சொந்த மக்களை சந்திக்கும் விருப்பத்தில் இருந்த போப் தனது போப் அதிகார காலத்தில் சொந்த ஊர் செல்ல இயலாதே மறைந்து விட்டார் என்பது அர்ஜென்றீனா கத்தோலிக்கர்களுக்கு என்றும் துயர் தான்.
  
2. அழுக்குப் போர்

 அர்ஜென்டினா ராணுவ ஆட்சியின் ஏழு ஆண்டுகள்  (1976-83 அதிருப்தியாளர்கள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்காரர்களுக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்கள், "அழுக்குப் போர்" என்று அழைக்கப்படுகிறது.



அரசாங்கத்தின் சந்தேகத்திற்குரிய எதிர்ப்பாளர்கள் மற்றும் அப்பாவிகள் உட்பட 10,000 முதல் 30,000 பேர் வரை கொல்லப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் ஜனாதிபதி இசபெல் பெரோனை பதவி நீக்கம் செய்த இராணுவ ஆட்சிக்குழு, பல ஆண்டுகளாக தீவிரமடைந்து வந்த நகர்ப்புறத்தை தளமாகக் கொண்ட இடதுசாரி கிளர்ச்சியை ஒடுக்கியது.

 அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே, இராணுவ ஆட்சிக்குழு தேசிய சட்டமன்றத்தை மூடியதுடன் , தணிக்கை விதித்தது, தொழிற்சங்கங்களைத் தடை செய்தது மற்றும் மாநில மற்றும் நகராட்சி அரசாங்கங்களை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

1976 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பரவலாக இருந்த இடதுசாரி கெரில்லா நடவடிக்கைகளை அடக்கும் முயற்சியாக, தேசிய மறுசீரமைப்பு செயல்முறையை அறிமுகப்படுத்தியது.

தேசிய மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, நாசகாரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை தடுத்து வைப்பதற்காக 300 க்கும் மேற்பட்ட ரகசிய சிறைச்சாலைகளை அமைத்து மக்களைச் சிறைப்படுத்தியது.

வன்முறை போராளிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதாக கூறிய அரசாங்கம் மாணவர்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்கவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், இடதுசாரி ஆர்வலர்கள், மதகுருமார்கள் மற்றும் ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள் என்று கூறப்படுபவர்கள் அவர்களது குடும்பத்திர் என  பல்லாயிரக்கணக்கான காணாமல் போனவர்களில் அடங்குவர். இரவில் கைது செய்யப்பட்டு தடுப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள்  விசாரிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

முதலில், ர்ஜென்டினா பொதுமக்களில் பெரும்பாலோர் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு இந்த அடக்குமுறை அவசியம் என்று ஆதரித்தனர், ஆனால் சில ஆண்டுகளுக்குள், அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மக்ள் மத்தியில் எதிர்ப்பை வருவித்தன.

"அழுக்குப் போரில்" குழந்தைகளை இழந்த தாய்மார்கள் , ஜனாதிபதி மாளிகையை ஒட்டியுள்ள பிளாசா டி மாயோவில் நடத்தி வந்த வாராந்திர விழிப்புணர்வுப் போராட்டங்கள், "காணாமல் போனவர்கள்" மீது சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இருப்பினும், கடுமையான தணிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் ரகசிய காவல்துறையின் பொதுவான பயம் மூலம் ராணுவ ஆட்சியாளர்களால் பெரும்பாலான மக்களின் எதிர்ப்பை அடக்க முடிந்தது.

1980 வாக்கில், கிட்டத்தட்ட அனைத்து கிளர்ச்சி நடவடிக்கைகளையும் ஒடுக்கி விட்டிருந்தனர்,   இருப்பினும், அர்ஜென்டினா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றிய பதிவுகள் மற்றும் ஊழல் பற்றிய வளர்ந்து வரும் ஆதாரங்கள் வெளிவந்ததால், அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலை பாதிக்கப்பட்டது.
 
கிரேட் பிரிட்டனிடமிருந்து பால்க்லாந்து தீவுகளைக் கைப்பற்றுவதன் மூலம் அர்ஜென்டினா மக்களுடனான அதன் சட்டபூர்வமான பிடிப்யை மீட்டெடுக்க முயன்று தோல்வியுற்றது இதன்  ஆட்சியை மேலும் இழிவுபடுத்தியது . 1983 ஆம் ஆண்டு  அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற  ராணுவ ஆட்சி முடிவிற்கு வந்தது.

ஜனநாயக ரீதியாக டிசம்பர் 1983 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசாங்கம், "அழுக்குப்போர்" பற்றிய ஆதாரங்களை சேகரிக்க, காணாமல் போனவர்களின் மீட்புக்கான தேசிய ஆணையத்தை (CONADEP) உருவாக்கியது, இது 1976-83 ஆம் ஆண்டுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் இறுதியில் நீதியின் முன் நிறுத்தப்படும் செயல் திட்டத்தை  தொடங்கியது.

சர்வாதிகாரத்தின் கைகளின் சித்திரவதையிலிருந்து தப்பிய நோபல் பரிசு வென்ற அடோல்போ பெரெஸ் எஸ்கிவெல் கருத்துப்படி, அர்ஜென்டினா திருச்சபையின் அதிகாரத்தில் இருந்த குறிப்பிடத்தக்க பகுதியினர் ராணுவ ஆட்சியினருக்கு சந்தேகத்திற்கு இடமின்றி உடந்தையாக இருந்தனர். "மனித உரிமைகளுக்காகவும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தை தைரியத்துடனும் உறுதியுடனும் ஆதரிக்க ஒரு சில பாதிரியார்கள் மட்டுமே இருந்தனர்  என்று ஒரு அறிக்கையில் கூறினார்.


அர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும்
, சர்வாதிகார காலத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு குறித்து பல புத்தகங்களை எழுதியவருமான ஹொராசியோ வெர்பிட்ஸ்கி,  மக்கள்வாத ஜனாதிபதி ஜுவான் பெரோனின் விதவையான இசபெல் பெரோனின் அரசாங்கத்தை 1976 ஆம் ஆண்டில்  தூக்கியெறி அர்ஜென்டினாவின் இராணுவம், அமெரிக்காவால் நிதியுதவி செய்யப்பட்டு ஆதரிக்கப்பட்ட ஆபரேஷன் காண்டோர் எனப்படும் பெரிய அளவிலான அரசியல் சதித்திட்டங்களின் ஒரு பகுதியாகும் என்றார்.

இதன் விளைவாக உருவான இராணுவ சர்வாதிகாரம்,  அர்ஜென்டினாவின் குடிமக்களுக்கு எதிராக அழுக்குப் போர் என்ற  சித்திரவதை மற்றும் பயங்கரவாதத்திற்கு காரணமாகினது என்றார்.  

அரசியல் எதிர்ப்பாளர்களையும் இடதுசாரி, சோசலிச அல்லது சமூக நீதி காரணங்களுக்காக இணைந்திருப்பதாக சந்தேகித்த இராணுவ ஆட்சிக்குழு மக்களையும் விரட்டியடித்து, அவர்களை சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து கொலை செய்தது. இடதுசாரி ஆர்வலர்களை "பயங்கரவாதிகள்" என்று அழைத்து, சுமார் 30,000 பேரைக் கடத்தி கொன்றது. "பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதையின் போது இறந்தனர், மிகப்பெரிய குழிகளின் விளிம்பில் இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டனர், அல்லது விமானங்களில் இருந்து கடலில் வீசப்பட்டனர், போதைப்பொருள் செலுத்தப்பட்டனர்," என்று மார்குரைட் ஃபீட்லோவிட்ஸ் விளக்குகிறார். "அந்த நபர்கள் "காணாமல் போனவர்கள்" அல்லது டெசபரேசிடோஸ் என்று அறியப்பட்டனர்."
நம்பிக்கையற்ற தாய்மார்கள் குழு
 


1977 ஆம் ஆண்டில், நம்பிக்கையற்ற தாய்மார்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தத் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும், அவர்கள் பிளாசா டி மாயோவில் கூடி அணிவகுத்துச் சென்றனர். அரசாங்க அதிகாரிகள் முதலில் அவர்களை "லாஸ் லோகாஸ்", பைத்தியக்காரப் பெண்கள் என்று அழைப்பதன் மூலம் ஓரங்கட்டவும் அற்பமானவர்களாக காட்ட முயன்றனர்.  ஆனால் மக்களிடையே பின்னடைவு ஏற்படும் என்ற பயத்தில் இந்தக் குழுவை எவ்வாறு அடக்குவது என்று அவர்கள் குழப்பமடைந்தனர்.

ஆனால் ராணுவ  அரசாங்கம் அவர்கள் குழந்தைகள் மீது செய்த அதே வகையான வன்முறையை ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களுக்கு எதிராகத் திரும்பியது. டிசம்பர் 1977 இல், குழுவின் நிறுவனர்களில் ஒருவரான அசுசெனா வில்லாஃப்ளோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கொல்லப்பட்டு ஒரு வெகுஜன புதைகுழியில் வீசப்பட்டதாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தினர். குழுவின் நிறுவனர்களில் பலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால் பெண்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. அர்ஜென்டினா 1978 ஆம் ஆண்டு நடத்திய உலகக் கோப்பை போட்டி விளையாட்டு நேரம் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர், மேலும் தங்கள்  போராட்ட காரணத்தை வெளிப்படுத்த சர்வதேச செய்திகளைப் பயன்படுத்திக் கொண்டனர். அரசின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும்,. 1981 ஆம் ஆண்டில், அவர்கள் தங்கள் முதல் "எதிர்ப்பு அணிவகுப்பு"க்காக ஒன்றுகூடினர், இது 24 மணி நேர போராட்டமாகும் . இவர்களின் செயல்பாடு பொதுமக்களை இராணுவ ஆட்சிக்கு எதிராகத் திருப்பவும், மௌனம் களைந்து அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத  கொள்கை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் உதவியது.

1983 இல் அழுக்குப் போர் முடிவடைந்த பிறகு  காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் பாட்டிகள் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் கடத்தப்படுவதையும், கொல்லப்பட்டுவதையும், மற்று குடும்பங்களுக்குக் கொடுக்கப்படுவதையும்,  உண்மையான பெற்றோரைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் வளர்ந்த குழந்தைகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்னர்.

1984 இல் பாதிக்கப்பட்டவர்களூடன்  அமெரிக்க மரபியலாளர் மேரி-கிளேர் கிங்கில் இணைந்து பணியாற்றத் தொடங்கியது போராட்டத்தை வலுப்ப்டுத்த உதவியது.  பாட்டிகளின் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏவை, அவர்களின் பேரக்குழந்தைகளுடன் பொருத்த உதவும் ஒரு வழியை கிங் மற்றும் அவரது சகாக்கள் உருவாக்கினர். இந்த நுட்பம் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது,. ஆனால் இது ஒரு தேசிய மரபணு தரவுத்தளத்தை உருவாக்கவும் வழிவகுத்தது. இன்றுவரை, இந்த அமைப்பு டிஎன்ஏ அடையாள நுட்பங்களைப் பயன்படுத்தி 128 திருடப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

1983 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தை கைவிட்டு ஜனநாயகத் தேர்தல்களுக்கு ஒப்புக்கொண்டதிலிருந்து அழுக்குப் போர் முடிவுக்கு வந்துள்ளது.  அதன் பின்னர், கிட்டத்தட்ட 900 முன்னாள் இராணுவ ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
 ஆனால் அழுக்குப் போரின் கொடூரத்தால் காணாமல் போன குழந்தைகளின் மர்மம் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, டெசபரேசிடோக்களின் தாய்மார்களும் பாட்டிகளும் உண்மைக்காகப் போராடும் இடத்தில் தான்  உள்ளனர்.

1970களில் கத்தோலிக்க சபை இராணுவ அரசாங்கத்தை ஆதரித்து தேசபக்திக்கு அழைப்பு விடுத்தபோது, ​​ஜார்ஜ் பெர்கோக்லியோ(போப் பிரான்சிஸ்) ஜேசுட் அமைப்பின் தலைவராக இருந்தார் என்கிறது .  புதிய போப் ஆட்சியின் போது இடதுசாரி சார்புடைய பாதிரியார்களை புறக்கணித்ததாகவும், அவர்களின் கைதுகள் மற்றும் கொலைகளுக்கு நேரடியாகப் பங்களித்ததாகவும், சர்ச் படிநிலை மற்றும் இராணுவ ஆட்சிக்குழுவின் கூட்டுச் சதித்திட்டத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் போப் மேல்  குற்றம் சாட்டியுள்ளார்.
.
1976 முதல் 1983 வரை அர்ஜென்டினாவை ஆண்ட இராணுவ ஆட்சிக்குழுவால் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் கடத்தல்களின் "மோசமான போரின்" போது கத்தோலிக்க திருச்சபை மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் மௌனமாக இருந்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

எல் சைலென்சியோ" ("தி சைலன்ஸ்") என்ற தேவாலயத்தைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் முக்கிய பத்திரிகையாளரான ஹொராசியோ வெர்பிட்ஸ்கி , பெர்கோக்லியோ இரண்டு பாதிரியார்களை பாதுகாக்க வேண்டிய தனது உத்தரவை வாபஸ் பெற்றது வழியாக இராணுவத்திற்கு கடத்தலுக்கு பச்சைக்கொடி காட்டியதாகக் கூறுகிறார்.