Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

4 May 2025

எனது 11 வருட அழகான ஆசிரியப் பணி!



கல்லூரியில் இருந்து முதுகலை பட்டம் மாணவர்களுடன் கன்னியாகுமரி அனுப்பப்பட்டேன். அதற்கான அனுமதிக்கு 3.30 க்கு அருட் திரு புஷ்பராஜ் அவர்களை சந்தித்து கையெழுத்து பெற்றேன். அதே நாள் எனது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயணத்திற்கு முதல்வர் தந்தையிடம் மாலை 6 மணிக்கு கையெழுத்து பெற்றேன்.  அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு பயணம் என ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.


 காலை கிளம்பும் போது ஒரு 6 அடி நீளமுள்ள பாம்பை வீட்டு வளாகத்திற்குள் கண்டதும் அபசகுனமாக தான் பட்டது. பயணம் ஆரம்பித்தாச்சு, இளைய மகன் கைபேசி அழைப்பு அதிகாலை 5.30 க்கு  வந்திருக்கிறது. மகனிடமும் பயணம் விவரங்கள் இரவே தெரிவித்ததால் போய் கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் அழைத்து சொன்னேன். மகனோ உங்கள் கால் உடைந்தது போல கனவில் கண்டேன், அதுவே அழைத்தேன் என்றான்.


கைபேசியை வைத்து விட்டு பயணத்தில் ஆழ்ந்து போயிருந்தேன், முதுகலை மாணவர்கள் எண்ணத்திலும் வெறும் 9 பேர் என்பதால் பெரும் சிரமமாக தோன்றவில்லை. இவர்களுடன் பயணித்தாலும் மூன்று நாட்களுக்கு பின் என் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் மேற்கொள்ள வேண்டிய பயணத்தை பற்றி தான் சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. வகுப்பில் 43 மாணவர்கள் இருக்க வெறும் 10 மாணவர்கள் மட்டுமே 300 ரூபாய் தந்து இருந்தனர். பயணத்திற்கு வாகனம் முன்பதிவு செய்ய வேண்டுமா? வேண்டாமா என்ற சிந்தனையில் இருந்தேன்.

முதலில் பேச்சிப்பாறை நீர் தேக்க்ம், பின்பு சிதறால் மலைக்கோயில் அத்துடன் மதிய சாப்பாட்டை முடித்து விட்டு என்னுடைய தோழி அட்டைபெட்டி நிறுவனம் நடத்துகிறார். அங்கு மாணவர்களை அழைத்து சென்றோம். அருகில் உள்ள இன்னொரு நிறுவனமும் கண்டு விட்டு மாணவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கன்னியாகுமரி சூரிய அஸ்தமயம் கண்டு விட்டு வீடு திரும்பினோம். வந்து சேர இரவு 10 மணி ஆகி விட்டது. பயணம் மகிழ்ச்சியானது என்றாலும் மாலை 8 மணிக்கு முன்பு  வீடு அணைய இயலவில்லை என்ற ஒரு பதட்டம் இருந்தது. எங்கள் வீட்டு செல்ல நாயை வீட்டுக்கு வெளியே விட்டு விட்டு சென்றிருந்தேன். 



பயணத்தில் இருக்கும் போது தான் பக்கத்து வீட்டு தோழியிடம் இருந்து அழைப்பு வந்து இருந்தது. உங்கள் கல்லூரியில் இருந்து ஒரு தபால்  வந்துள்ளது என்றார். என்ன தபாலாக இருக்கும் என சிந்தித்து பார்த்தேன். நேற்று தான் செயலர், முதல்வர் என இருவரிடம் கையெழுத்து பெற்றுள்ளேன், ஏதாவது புத்தகம் வந்து இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.


வீடு வந்து சேரும் போது பக்கத்து வீட்டு தோழி நித்திரைக்கு போனது மாதிரி இல்லை. வீட்டில் மின் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.   அதனால் அழைத்து தபாலை தர இயலுமா என்றேன். அவரும் வந்து சுவர் பக்கம் நின்று தந்து விட்டு சென்றார்.


பயணக்களைப்பு. இருப்பினும் கல்லூரி ஆண்டு விழாவும் வரும் வாரத்தில் தான். ஒரு வேளை ஏதாவது விருது எதுமா என்ற சிந்தனையுடன் பிரித்து பார்த்தால் நீங்கள் வேலையை விட்டு ஏப்ரில் 20 ஆம் தேதி 2025 அன்று நின்று விடுங்கள் என்றிருந்தது.  மறுபடியும் என் நிர்வாகம் மேல் ஒரு நம்பிக்கை, இது யாராவது என்னை ஏமாற்ற அனுப்பி இருக்க கூடும் என்ற சிந்தனையில் மேஜை மேல் வைத்து விட்டு நித்திரைக்கு போய் விட்டேன். 



திங்கக்கிழமை  செயலர் அலுவலகத்தில் சென்று விசாரித்த போது அவர்கள் தான் அனுப்பி உள்ளனர் என கூறினர். கல்லூரி வேலைக்கு  சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக அனுப்பிவிட்டு எந்த முன்னறிவிப்பும் இன்றி வீட்டுக்கு அனுப்பின போஸ்டு மாதிரி,  நானும் தபால் போஸ்டாக  அனுப்புவமா என்று தோன்றியது, ஆனால் நான் என்ன தவறு செய்தேன், எதற்கு கோழையை போன்று இருக்க வேண்டும் என்று கடிதத்தையும் எடுத்துக்கொண்டு செயலர் அருட் திரு புஷ்பராஜிடம்”என்னை வேலையை விட்டு போகச் சொல்லும் காரணம் என்ன என்று அறியலாமா” என்றேன்.  அதிகார உச்சத்தில் கத்திகுளறி,  நீ மாணவர்களிடம்  கோபப்பட்டாய் , நீ சரியாக வகுப்பு எடுக்கவில்லை , உன்னை மாணவர்களுக்கு எளிதாக அணுக இயலவில்லை என நாய் கத்துன மாதிரி கத்தினார். அத்துடன் யாரோ முக்கிய நபர்களை வகுப்பில் கிண்டல் அடித்ததாகவும் கூறினார். 



இது என்னடா புதுக்கதையாக உள்ளது, விசாரிக்காமல் தண்டனையும் தந்து விட்டு குற்றங்களை தேடி ஒட்டுகின்றனர் என நினைத்துக் கொண்டு நான் இந்த எந்த தவறும் நான் செய்யவில்லை. ஒரு விசாரணை வைத்தால் என்னால் நிரூபிக்க இயலும் என்று கூறி வெளியேறி விட்டேன். 




மறுபடியும் ஒரு நம்பிக்கை இருந்தது. கல்லூரியில் 11 வருடங்கள் இதுவரை எந்த குற்றம் விசாரணையிலும், ஒழுங்கீனத்திலும் கேள்விக்கு உட்படாதவள். இதுவரை இருந்த முதல்வர்கள்,  செயலர்கள், அதிபர் தந்தையர்கள் என எவரிடமும் முரண்படவோ, கோபத்திற்கு உள்ளானதோ இல்லை. மிக முக்கியமான தருணங்களில் துறை சார்ந்து பல விடயங்களை நிர்வாகத்திடம் பேசி வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்றுள்ளேன். 


ஐந்து வருடம் முன்பு கல்லூரி அரசு ஊதியம் பெறுகிறவர்கள் நிர்வாகத்துடன் முரண்பட்டு போராட்டம் என இருந்த போது, சுயநிதி ஆசிரியர்கள் 10 பேரை வைத்து சுயநிதி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நிர்வாகத்துடன் செயல்படும்படி; பேராசிரியர்களை திரட்டவும் என்னை பயன்படுத்தும் அளவிற்கு நிர்வாகத்திற்கு நம்பிக்கையாகத் தான் இருந்தேன். அதில் என்னை எக்சிகுட்டீவ் உறுப்பினராக பயன்படுத்தி உள்ளது நிர்வாகம்.  




கல்லூரி நூற்றாண்டு கொண்டாடும் போது என் புத்தகங்களை வெளியிட்டு ’சாதனையாளர் பேராசிரியை’ என்ற விருதை பெற்றுள்ளேன். கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடிய போது என் தலைமையில் காட்சி ஆவணங்கள் உருவாக்கம் நடந்தது. இதுவரை துறையில் நடந்த மாணவர்கள் சார்ந்த பயணம், பயிற்சி பட்டறை என நூற்றுக்கு மேல் முன் நின்று ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்துள்ளேன். இதுவரை துறை தலைவர்களாக இருந்தது பாதிரியார்கள். அவர்களிடமும் வேலை செய்வேன் என்ற நல்ல பெயர் மட்டுமே எடுத்துள்ளேன். யாருடனும் முரண்பட்டது இல்லை.


 

கடந்த வருடம் துறைத்தலைவர் ஆக்கி விட்டு, அப்போது இருந்த முதல்வர்  அருட் திரு மரியதாஸ் எஸ்ஜெ. கொடுத்த  ஏச்சுப்பேச்சுக்கு  பயந்து ஒரே வருடத்தில்  தலைவர் பதவி வேண்டாம் என நானே கேட்டு ஒதுங்கி இருந்து கொண்டேன். தலைவராக இருப்பதை விட கற்பித்தலில் தான் எனக்கும் ஈடுபாடு இருந்தது. அவர்கள் எதிர் பார்க்கும் போல என்னால் வளைந்து, குனிந்து என்  பணிவை எனக்கு வெளிப்படுத்தவும் தெரியவில்லை.  நான் தலைவராக இருந்த போது மாணவர்களுக்காக 31 நிகழ்வுகள் நடத்தியுள்ளேன். மிக முக்கியமான கலைஞர்களை கொண்டு வந்து பயிற்சி பட்டறை நடத்திக் கொடுத்துள்ளேன்.






என் பணிமேல் மதிப்புள்ள மற்று நிர்வாக அருட் தந்தையர்கள்  ஆதரவு இருந்திருப்பதால் எந்த  பிரச்சினையையும்  நான் கண்டு கொள்ளவில்லை. ஒரு ஆசிரியையாக மிகவும் உற்சாகமாக மனத்திருப்தியுடன் பணி செய்து வந்தேன்.


 தலைமை பதவியில் இருக்கும் போது இன்னொரு துறை தலைவிக்கும் எனக்கும் சில உரசல்கள் வந்தது. அதையும் சுமூகமாக கல்லூரி நிர்வாகத்தின் அதிபர் தந்தையின் உதவியுடன் சமரசத்திற்குள் எட்டினோம்.  அன்றைய அதிபர் தந்தை ஹென்றி ஜெரோம் மிகவும்  பரிவோடு மரியாதையாக  நியாயமாக  நடத்தி இருந்தார்.  அப்போதைய முதல்வர் தந்தை எங்கள் துறை நாடக நிகழ்விற்கு அதிபர் தந்தையை அழைத்ததை மனதில் வைத்து உனக்கும் அதிபருக்கும் என்ன நட்பு என்றும் ஒருமுறை கேட்டு இருந்தார். ஆனால் எளிதாக பிரச்சினையை தீர்ப்பவர் என்பதால் அதிபர் தந்தையின் உதவியுடன் ஒரு பேராசிரியர் நாதன் முன்னின்று எனக்கும் கணிணி துறை பேராசிரியைக்குமான பிரச்சினையை ஐ தீர்த்து வைத்தார். எல்லாம் ஓய்ந்து இந்த வருடம் வெறும் துணை பேராசிரியையாக துறை தலைவி பதவியில் இருந்து விலக்கி விடப்பாட்டாலும்  மிகவும் அமைதியாக  என் பணி சென்று கொண்டு இருந்தது. 


ஆனால் இந்த வருடம் தலைவராக இருந்த நபர் பல ஈனச்செயல்கள் மாணவர்களை வைத்து செய்து வந்தாலும்  பல அச்சுறுத்தல்கள் கொடுத்தாலும் அதை நிர்வாகத்திடம் கொண்டு செல்லவோ அதை ஒரு பொருட்டாகவோ நான் மதிக்கவும் இல்லை, அவை என் ஆசிரியை பணிக்கு  பாதிக்கவும் இல்லை. ஆனால் கடைசி ஒரு மாதம் என்னிடம் யாரும் பேசாது ஆனால் முதுகில் குத்துவது போல சில செயல்கள் செய்து முடித்து கொடுத்துள்ளனர் என்பதை கையில் கடிதம் வந்த பின்பு தான் தெரிந்து கொண்டேன். 

முதல்வர் தந்தையிடம் என் பேராசிரியர் அருட் சகோதரி மூலம் என் பக்கத்தை  தெரிவித்து விட்டேன். கடைசி நம்பிக்கையாக தற்போதைய அதிபர் தந்தை தான்  இருந்தார். அவரை சந்தித்த போது என் பக்க நியாங்களை பொறுமையாக கேட்டாலும், நான் வேண்டி கேட்ட  விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை.  “கர்த்தர் ஆசிர்வதிப்பார்” எனக்கூறி அனுப்பி விட்டார்.




எனக்கு அதிர்ச்சி தான், இருந்தாலும் 11 வருட பணியை முடித்து கொள்ள நான் தயாராக இருந்தாலும், என்னை பற்றிய புகார்களை நியாயமாக விசாரித்து என் பக்கம் எதிரணி என்ன சொல்கிறார்கள் என்று அறியவும் ஆவல் இருந்தது,  இது ஏதோ மர்ம படம் மாதிரி நான் மாணவர்களுக்கு பெரும் எதிரி என கட்டுக்கதை சொல்லி வெளியேற்றியது மட்டுமே என் வலுவை உடைப்பதாக இருந்தது.  இதனால் என் மனசாட்சிக்கு எந்த குற்ற உணர்வும்  தோன்றவில்லை என்பதால் நான் அமைதியாக இருந்து கொண்டேன்.. 



என் மாணவர்கள் இச்சம்பவம் அறிந்தது முதல், தினம் அழைத்து ஆறுதல் படுத்தினர். தற்போது படிக்கும் மாணவரக்ளும் அத்தனை கட்டுப்பாட்டையும் கடந்து எனக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்சப் வழியாக தங்கள் ஆதரவை  அன்பை தெரிவித்தனர். 


நான் இக்கல்லூரியின் அதே சபை கிறிஸ்தவள் .  கல்லூரிக்கு கொடுக்க வேண்டிய டொனேஷன்   10 ஆயிரம் ரூபாய் நிர்வாகம் கேட்கும் முன்னே மறுப்பில்லாது கொடுத்தவள் தான். என் மகன் படிக்கும் போது நான் கட்டணம் கட்டி தான் படிப்பித்தேன், கல்லூரியில் இருந்து வேலை , அத்துடன் கிடைக்கும் கர்வமான பாதுகாப்பு வாழ்க்கையை மட்டுமே எதிர் நோக்கினேன். 

கடந்த ஒரு சில மாதங்களாகவே வேலை கிடைக்காது, வேலையிடத்தில் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் நினைத்து ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால் நானும் அதே பாதிப்பிற்கு உள்ளான போது; என் அம்மா, தங்கை காலை இரவு என என்னை கைபேசியில் அழைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு ஒரு பயம்  வாழ்க்கையில் பெரும் பகுதியை வேலைக்கு என்றே இருப்பவள் ஏதும் செத்து தொலைத்து விடக்கூடாது என பயந்தனர். அப்படி சாக ஒன்றும்  நான் கோழை இல்லை.  நான் என் மன உறுதியை நினைத்துக் கொண்டேன்.

என் கல்லூரி நண்பிகள், நண்பர்கள் தொடர்ந்து எனக்கு தைரியம் பகிர்ந்தனர். என் மகன்கள் இதுவரை உழைத்தது போதாதா? ஆசிரியை பணியை விட்டு விட்டு வேறு துறையை தேர்ந்து எடுங்கள் என உற்சாகப்படுத்தினர். அமைதியாக நிம்மதியாக பிடித்தபடி பயணம் செய்யுங்கள் என அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். இனியும் ஓடிக்கொண்டு இருக்க வேண்டாம் என்றனர். இருவரும் அதே வாரத்தில் வந்து என்னுடம் ஒரு வாரம் தங்கி தைரியம்  பகிர்ந்தனர்.


நான் சிரித்துக் கொண்டே  தான் வெளியேறினேன்.எனக்கு தண்டனை கொடுப்பது மூலம் அத்தனை தனியார் துறை ஆசிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்க தான் அருட் திரு புஷ்பராஜ்  விரும்புகிறார் என்பதை அனைவரும் அறிந்து இருந்தனர். என்னை பொறுத்தவரை 10 வருடம் எனக்கு பாடதிட்டம் அமைப்பதில் இருந்து எல்லா பணியிலும் பயிற்சி கிடைத்து இருந்தது. என் குறிப்பிட்ட 11 வருட காலயளவில் அதற்கும் மீறின சேவையை தான் முன் வைத்து உள்ளேன்.

என் பரிந்துரையால் வேலை பெற்று எங்கள் துறையில் இருவர் இருக்க, நான்கு பேரும் சேர்ந்து இருந்து முதுகில் குத்தி வீழ்த்த நினைத்ததை தான் கொஞ்சம் வலியோடு  சிரித்துக்கொண்டு கடந்து போகிறேன். 



 என் தோழர்கள் என்னை போன்று பயப்படத் தேவையில்லை. எங்கள் ஊரிலே பல கல்லூரிகள் அவர்கள் படிப்பிக்கும் பாடங்கள் உண்டு,. என் பாடத்திற்கு தான் அருகில் கல்லூரி இல்லை. கர்த்தர் சொல்வது போல மனிதன் அப்பத்தால்(ஊதியம்) மட்டும் வாழ்வதில்லை அவர் வார்த்தைகளால்/ நம்பிக்கையால் வாழ்கிறான். அடிமைகளாக இருக்க ஆசிரியர்கள் பணி தேவையில்லை,, அறிவால் விளைந்த கர்வத்தில் அதன் பொருட்டு உருவான ஓர்மத்தில் ஆசிரியர்களாக வாழ்வோம். ஒரு வேலை கொடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அடிப்படையில் மனிதர்களாக இருக்க மாட்டோம் என்று நினைப்பவர்களை பணிந்து போகும்படி கர்த்தர் சொல்லி உள்ளாரா? 


கிறிஸ்தவ கத்தோலிக்க பெண்கள் நீதிக்காக தைரியமாக போராடுகிறவர்கள்.  நீங்கள் கிறிஸ்தவர்களா? உங்கள் குடும்பங்களை விட்டு , சேவை புரிய என வந்து விட்டு பெண்களை தண்டிப்பதை பொழுது போக்காக கொள்ளலாமா? 11 வருடம் வேலை செய்துள்ளேன் இந்நிறுவனத்திற்காக.  நன்றி என்று கூட சொல்வதை எதிர்பார்க்கவில்லை. எவனோ எழுதிகொடுத்த பேப்பரை வைத்துக் கொண்டு என்னை மிரட்ட நினைத்த உங்கள் கோழைத்தனத்தை எண்ணி  வருந்துகிறேன். 


எனக்கு வேலை என்பது வளரும் தலைமுறைக்கு இந்த சமூகத்திற்கு செய்யும் சேவைக்கான வாய்ப்பு மட்டுமே.  2014 கில் 16 ஆயிரம் ஊதியம் பெற்றேன். தற்போது 30 ஆயிரம் பெற்றிருந்தேன். பெருவாரி பணத்தை யார் யாருக்கோ உதவினேன், என் மாணவர்களிடம் விசாரித்தாலே அவர்கள் சொல்வார்கள், என் பலம் என் மாணவர்கள் தான். என் மாணவர்கள் வாழ்க்கையில் நன்றாக வர வேண்டும் என சிலபோது சில கட்டுபாடுகள் சொல்லியிருப்பேன். அதன் பொருள் என் மாணவர்களுக்கு தெரியும். ஒரு ஆசிரியைக்கு முதலாளி அவள் மாணவர்கள் தான். நீங்கள் தரும் கூலியல்ல. நீங்கள் கூலி கொடுப்பதால் உங்களுக்கு நான் அடிமையும் அல்ல. 


அருட் திரு மரியதாஸ் சொன்ன வார்த்தைகள் நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை, ஒவ்வொரு பதவிக்கு ஒரு மதிப்பு உண்டு. ஆசிரியை என்ற நிலையை விட்டு நான் ஒரு அங்குலம் கூட இறங்கமாட்டேன். பதவியுள்ள பாதிரிகள் என்றால் எங்கள் யஜமானர்கள் அல்ல. மனிதம் அற்ற கிறிச்தவத்தில் கர்த்தர் எங்கே உள்ளார்!



 என்னை ஆறுதல்படுத்தின பரிவான  வார்த்தைகளால் நம்பிக்கை தந்த மற்றைய எங்கள் கல்லூரி  பாதிரியார்களை வணங்குகிறேன், நன்றியோடு உள்ளேன். 

ஆனால் அருட் திரு புஷ்பராஜ் போன்ற ஆட்களை கர்த்தரின் பெயரால் மன்னிக்கிறேன்.  ஒரு சிறு நன்றி தங்களுக்கு வேலை செய்பவர்களிடம் இருக்க வேண்டும், உங்கள் கோலும் கைத்தடியும் கர்த்தர் கொடுத்தவை. உங்கள் அங்கிக்கு மதிப்பு கொடுத்துதான் அன்று அமைதியாக நின்றேன். கர்த்தர் அந்த ஆளுக்கு சமாதனமும் அமைதியும் கொடுக்கட்டும்.  எல்லாம் நீங்கள் நினத்தது மாதிரியே நிறவேறி விட்டது. ஆமேன்.







24 Apr 2016

சமூக நியதி!

பாபா அத்தான் எனக்கு இன்னும் புரியாது இருப்பது இந்த சமூக நியதி தான்! என் விருப்பங்களை, என்னை புரக்கணிக்கும் பாங்கு நீங்கள் அன்று போன நாள் முதல் துவங்கி விட்டது. எனக்கு உங்களை பார்க்க 15 நிமிடம் அதுவும் அருட் தந்தையர் பிரார்த்திக்கும் நேரம் தான் கிடைத்தது. உங்களுடைய கடைசி பயணத்தில் என்னால் உங்களுடன் வர இயலவில்லை. பெண்கள் வரக்கூடாது என தடுத்து விட்டனர். உங்கள் உடை, நடை எல்லாம் உடனிருந்து கவனித்து வந்த எனக்கு உங்களுடன் வர மற்றவர்கள் அனுமதி பெற வேண்டி வருகின்றது.  நான் எப்படி துக்கம் அனுசரிக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என யாரும் அன்பாக சொன்னாலும் பிடிக்க வில்லை சமூகக்கருத்தாக கூறினாலும் பிடிக்கவில்லை. என்னை எனக்கு பார்த்து கொள்ள தெரியாதா? 

அடுத்த கட்டளை நானா பக்கவும் இருந்து வருகிறது. இனி பேசக்கூடாது இனி அமைதி காக்க வேண்டும். ஆம் இனி என்ன தான் பேசவுள்ளது எனக்கு. உங்க அதிகாரம், சத்தம், எல்லாம் அவர் இருந்த போது தான், இனி பெற்ற பிள்ளையை கூட நீங்கள் தான் அனுசரித்து போகவேண்டும் என்ற உபதேசம் வேறு.

அடுத்த சில நாட்களில் பணிக்கு திரும்பி விட்டேன். ஒருவர் எங்கள் துறையை சார்ந்த அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்துள்ளார். என்னை அழைத்தாலும் சென்றிருக்க மாட்டேன். நம் வழக்கமே நாம் சேர்ந்து செல்வது தானே. இருந்தும் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் மேம் உங்களுக்கு அழைப்பு வரவில்லையா என்றனர். நானும் கைபேசியில் பிரச்சினை இருக்கலாம். அழைப்பு பெறவில்லை என்று கூறி முடித்து விட்டேன். பல நாட்கள் கடந்து குறிப்பிட்ட நபர் என்னிடம் வந்து மேடம் உங்களை அழைக்கவில்லை நான்.  வருந்த வேண்டாம். ஒரு வருடம் கடக்கவில்லை பார்த்தீட்களா என்றார். இதுவெல்லாம் இந்த சமூகத்தின் இயல்பு தானா? ஒரு மனிதனை குத்தி விட்டு நோவு பார்ப்பது.  நம் தெருவில் நான் நடந்து போகும் போது யார் முகத்தையும் பார்ப்பதில்லை. காலம் மாறிவிட்டது சகுனம் பார்ப்பது இல்லை என்பதெல்லாம் பொய் அத்தான். உங்களுடன் கவுரவமாக நான் போன காலம் மாறி யாருக்கும் அச்சம் வராதவண்ணம் என் முகத்தை வேறு திசையில்  திருப்பி கொண்டு நானே நடந்து போகின்றேன். இன்னும் ஒரு தோழி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அந்த நிகழ்விற்கு சாப்பாடிற்கு அழைக்கும் போது என்னை அழைக்க தயங்கின்றார். இவரோ புரஸ்டன்ற் கிறிஸ்தவராம். நானே நீங்கள் என்னுடன் இல்லாத  எல்லா பொது நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், பயணங்கள் என ஒன்றுமே  விரும்பவில்லை. நம் மகன் கூறியுள்ளான் அவன் படித்து வேலைக்கு வந்த பின் நாம் முன்பு பயணித்தது போல் பயணிக்கலாம் என்றான். ஆம் நீங்கள் கூறி கொண்டிருந்த ராஜஸ்தான் கோட்டைக்கு செல்ல வேண்டும். நாம் விரும்பி செல்ல நினைத்த இலங்கை செல்ல வேண்டும். என் மகன் அழைத்து செல்ல நான் காத்திருப்பேன். 

நம் பிரிவு நமக்கானது நம் தனிப்பட்ட இழப்பு, தனிப்பட்ட கவலை கண்ணீர்.  இதில் ஏன் சுற்றி இருப்பவர்கள் கருணை, சமூக நடப்பு என்ற பெயரில் என்னில் சில விடையங்களை நிலை நிறுத்த பார்க்க வேண்டும்  என தெரியவில்லை. அத்தான் உங்கள் பெட்டியில் உங்களுக்கு பிடித்த வெள்ளை சட்டையை வைத்து அனுப்பினேன். நம் திருமணச்சேலையை வைத்து அனுப்ப அந்த நேரம் தவறி விட்டேன், ஆப்பிரிக்கா போன்ற தேசங்களில் அந்த ஆண்களுக்கு சொந்தமான உடைமைகளுடன் மனைவியும் வைத்து அனுப்புவார்களாம்.  நம் சமூகத்திலும் இதை தான் எதிர் நோக்குகின்றனர். ஆனால் இந்த சமூகத்தை எதிர் கொள்வதிலும் சில வசதிகள், சில பெண்மைக்கான வசதிகள் இந்த நிகழ்வில் உண்டு என்று தான் தோன்றுகின்றது. நான் எப்போது மற்றவர்களிடம் கதைக்கும் குணம் உடையவள். தற்போது நானாகவே என் வாய்க்கு பூட்டு போட்டு வருகின்றேன். விலகி போகவே விரும்புகின்றேன். நீங்கள் இல்லாது கதைக்க ஆர்வமாக இருக்கின்றேன் என யாரும் நினைக்க வேண்டாமே? நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள். உங்கள் நாசரேத்தை சேர்ந்த பால்ய கால நண்பர் பாலமுருகன் அண்ணா  நெல்லை ரெயில் சந்திப்பில் வைத்து சந்திக்கலாம் என்றதும் என்னையும் அழைத்து சென்றீர்கள் உங்களுடன். அதே போல் கிரீன் அண்ணா வந்த போதும் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். அப்போது மற்றொரு உங்கள் எஸ்டேட் குடும்பத்தையும் அங்கு வைத்து கண்டு வெகு நேரம் பேசி இருந்தோம். 

நம் எதிர்  வீட்டு நபர் உங்களை கொண்டு போன நேரம் சன்னல் கதவை அடைத்து விட்டு வெகுநேரம் கடந்த பின் ஜன்னல் வழியாக கொண்டு போய் விட்டார்களா என கேட்டு விட்டு ஜன்னலை திறந்தார்களாம். பின்பு 31 நாட்களுக்கு பின்பு தான் அடைத்த கதகை திறந்துள்ளனர். நம் மகன் நண்பன் அந்த வீட்டிலுள்ள சிறுவன் கூட 42 நாட்களுக்கு பின்பு தான் சாம் ஜோயலிடம் பேச கைபேசியில் அழைப்பு விடுத்துள்ளான்.  எதிர் வீட்டு சாமியாரை உங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கின்றேன். அந்த ஆளும் மனைவியும் வந்து நீங்கள் போன அன்று ஒன்றும் தெரியாது என பொய்யாக கதைத்து விட்டு ஞாயிறு அன்று வந்து விசாரித்து சென்றனர்.  பொதுவாக மரண வீட்டிற்கு வியாழன் ஞாயிறு அன்று மட்டும் தான் செல்வார்களாம்.  அன்று நான் அரசு மருத்துவ மனைக்கு போய் வரும் முன்னே நம் பக்கத்து வீட்டுகாரர்களூக்கு தெரிந்து விட்டது. என் வாயில் இருந்து கேட்க வேண்டும் என  அவர்கள் காம்பவுண்டுக்குள் இருந்தே கேட்டு கொண்டிருந்தனர். நீங்க தான் பேருந்து காத்து நிற்கும் போது இவர்களை பேருந்து நிலையத்தில் கொண்டு விடுவீர்கள். ஒரு நாள் நாம் இரவில் வீடு வந்து சேர நம் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபர் குடித்து விட்டு மரத்தின் அடியில் படுத்து கிடக்க ஒரு கணம் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் செல்லலாமா என்று யோசித்து விட்டு, என்ன நினைத்தீர்களோ ஓடி சென்று அந்த நபரை தூக்கி அவர் வீட்டிற்குள் விட்டு விட்டு வந்தீர்கள்.

மோசஸ் நம் வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி இருக்கும் நபர், உங்களை போகும் போதும் வரும் போதும் வழி மறித்து பேசுவாரே; அவரகள்  மகள் திருமணம் , பேரன் பிறந்த போது  நாம் மெனக்கெட்டு சந்தித்து பரிசு வழங்கி வந்தோமே. அந்த ஆட்கள் எல்லாம் நம்மை தெரியாத போல் நடித்து கொள்கின்றனர். இதனால் நான் பொதுவாக யாரை கண்டாலும் பேசாது விலகி சென்று விடுவேன். யார் அபசகுனம் என்று நினைக்கின்றார்கள் என எனக்கு விளங்கவில்லை. 

சில விடையங்களை அவர்கள் பல முறை அழுத்தி கூறி ரொம்ப நல்லவர்களாக மாறக்கூடாது தானே.  பலர் உங்க குடும்பத்தை பற்றி பண ஆசை பிடித்தவர்கள், அந்த தாய் ஈவிரக்கம் அற்றவர் என்ற போது ”அவ சமாளித்து கொள்வாள்” என்றனர். ஐந்து பட்டு சேலை வாங்கி கொடுத்து விட்டாச்சு எனக்கூறி   எத்தனை சேலை வாங்கி கொடுத்தனர். பட்டு சேலை கணக்கு பேசி வாங்கின என் மாமியார் எனக்கு பின்பு ஒரு பெயருக்கு கூட ஒரு சேலை எடுத்து தரவில்லை. எல்லாம் என் மனதில் ஆறிக்கிடந்த காயங்கள். தற்போது யாராவது என்னை ஆசுவாசப்படுத்த அல்லது அவர்கள் நல்ல மனதை எனக்கு புரிய வைக்க ஆரம்பிக்கும் போது என்னால் அமைதி காக்க இயலவில்லை. கொந்தளித்து போகின்றேன்.

எல்லா வசதி வாய்ப்பு இருந்தும் கல்விக்கு என செலவழிக்க பெட்டியை வித்தேன் சட்டியை வித்தேன் என சிலர் கணக்கு கூறும் போது வெறும் தனியார் நிறுவனத்தில் இருந்து கொண்டு எனக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கி தந்தீர்கள். ஒரு போதும் சொல்லி காட்டவில்லை .  நான் கேட்கும் முன்னே எனக்கு தேவையான புத்தகம் என்னிடம் வந்து விடும் உங்களால். உங்க தியாகம் அன்பு தான் எனக்கு பெரிதாக படுகின்றது. இன்று நீங்கள் முதலில் போய் விட்டீர்கள் என்பதற்காக நான் உங்கள் பக்கம் இருந்து நகல இயலாது. நீங்க தான் எனக்காக மிகவும் உழைத்தீர்கள். பலன் எதுவோ எனக்கு தெரியாது ஆனால் உண்மையான அன்பால் பொதிந்தது நீங்க மட்டும் தான். ஒரு பொருளை வாங்கி வந்தால் உடன் தருவது என்னிடம் தான். என் மகிழ்ச்சியான முகத்தை பார்க்க அவ்வளவு ஆசைப்படுவீர்கள். 10 ரூபாய்க்கு பெயருக்கு பூ வாங்கி தரக்கேட்டால் உங்கள் மனம் போல் வாங்கி தந்து என்னிடம் பணம் அருமை தெரிகிறதா என திட்டு வாங்குவீர்கள். நம் திருமணம் முடிந்த முதல் வருடம் எனக்கு ஒரு மோதிரமும் சுடியும் வாங்கி வந்து தந்தீர்கள். அன்றைய மனநிலையில் என்னை தேர்வு செய்ய அழைத்து செல்லவில்லை எனக்கூறி உங்கள் மகிழ்ச்சியைக்கூட நான் கெடுத்தது நினைவில் வந்து கொல்கின்றது.


உங்களை இழந்தது என் ஜென்மபாபம்.  என் கர்ம பாபம் அல்ல. நான் உங்களுக்கு உண்மையாகத் தான் இருந்தேன். நீங்க தான் என்னை மிகவும் நன்றாக வசதியாக வைக்க போகின்றேன் எனக்கூறி நாலு மாதமாக சில உங்கள் போக்குகளை மறைத்து வந்துள்ளீர்கள்.  உங்களை கட்டுப்படுத்தி உங்களை நேசிப்பது உங்களை காயப்படுத்தி விடக்கூடும் என உங்கள் போக்குக்கு அனுமதித்திருந்தேன். ஆனால் இந்த விபத்து நம் எல்லா நோக்கங்களையும் லட்சியங்களையும் வேரோடு அறுத்து விட்டது. இந்த சூழலில் யாரும் தன்னை தங்கள் தியாங்களை முன் நிறுத்தி என்னை புரியவைக்க நினைப்பது அபத்தவும் தன் அகங்காரவுமாகத் தான் இருக்கும். அதற்கும் நான் பதில் கொடுக்கக்கூடாது அமைதி காக்க வேண்டும் என்று நினைத்தால் நானும் உங்களைப்போல் கடவுளாகத்தான் மாற வேண்டும்.

என் வாழ்வில் எனக்கு கிடைக்காத மிகவும் உண்மையான, பண்பான தன்னிகரற்ற அன்பு, சுதந்திரம், அரவணைப்பு, மரியாதை எல்லாம் கிடைத்தது  உங்களிடம் இருந்து தான். மற்றவர்களுக்கு  எல்லாம் சில சுயநலங்கள் இருந்தது. உங்களுக்கு இருந்த ஒரே சுயநலம் நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் உங்க ஆசை நிறைவேறாது போய் விட்டது அத்தான். அந்த ஆசை நிறைவேற நானும் உங்களுடன் வந்து சேர வேண்டும். அந்த நாட்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

21 Apr 2016

வருடங்களை யுகங்களாக மாற்றிய விதி!

திருமணம்  முடிந்து அத்தான் வீட்டிற்கு சென்றாகி விட்டது.  சென்ற ஒரு மாதத்திலே எனக்கு புரிந்து விட்டது இது அவசரமாக முடிவாகின திருமணம். நானும் சில விடையங்களில் பக்குவமாகாத மனநிலையில் இருந்தேன்,  பல சம்பவங்கள் அங்குள்ள சூழல்கள் என் வீட்டில் இருந்தும் மிகவும் மாறுபட்டிருந்தது.  எங்கள் வீட்டில் அப்பா எங்களுக்காக எல்லாம் தியாகம் செய்பவராக இருந்தார். தன்னை விட பிள்ளைகள் சுகமாக இருக்க வேண்டும் என கருதுபவர். எங்கள் சுதந்திரத்தில் தேவை இல்லாது தலையிடாதவர். அப்பாவிடம் நான் அடி வாங்கினதாக ஒரே ஒரு முறை தான் நினைவு உள்ளது. அவருக்கு பாரிய கல்வி அறிவு இல்லை என்றாலும் பண்பானவர்.

ஆனால் அத்தான் வீட்டிலோ அவருடைய தந்தையிடம் யாரும் பேச இயலாது. அவர் மட்டுமே கதைப்பார். எப்போதும் ஆங்கிலப் புத்தகங்கள் தான் வாசிப்பார். தனக்கு காட்டுக்கு,  ஆலையம் செல்லும் போது அணிய, விருந்து வீட்டுக்கு செல்ல என பல காலணிகள் வைத்திருப்பார். பிள்ளைகளுக்கோ இரு செட் செருப்பு தான் இருந்தது.  ஒன்று வீட்டிற்குள் இட மற்றொன்று வெளியில் இட! எப்போதும் பிள்ளைகளை குற்றம் பாடி கொண்டே இருப்பார். அவர் வரும் போது வீட்டில் யாரும் கதைக்கக்கூடாது ரேடியோ சத்தமாக வைக்கக்கூடாது. பிரத்தியேகமாக டிவி ரிமோட் அவர் கையில் தான் இருக்க வேண்டும். முக்கியமாக  அவர் இருக்கும் நாற்காலியில் யாரும் இருக்கக்கூடாது. அந்த வீடு வீடாக தெரியவில்லை எனக்கு அலுவலகமாகத்தான் தெரிந்தது.


என் வீடோ வண்டிப்பெரியார் டவுண் மத்தியில் அவர்கள் வீடு நடுகாட்டில் அதும் கம்பனி வீடு. திருமணம் முடிந்த பின்பு தான் சொந்த வீட்டு, கம்பனி வீடு பிற்காலத்தில் வாடகை வீடு எல்லாம் விளங்கினது.  எங்கள் வீட்டில் எல்லாம் இருந்தும் இல்லாதது போல்  பாவிப்பர், அவர்கள் வீட்டில் பல விடையங்கள் வெட்டி பந்தாவாக காட்டி கொள்வர்.  தினம் இரவில் என்னவர் அப்பா ஒரு அவுன்ஸ் உயர் ரக பிராந்தி அருந்துவது எங்கள் குடும்ப சாப்பாட்டு மேஜையில் இருந்து தான். அதை தானாக குடிப்பதும் இல்லாது, திறம் உள்ளவன் சம்பாதித்து குடிக்கலாம் என்று தன் மகன்களுக்கே சவால் இடுவார்.  நான் என்னவரிடம் இதை பற்றி கேட்ட போது இவர் நாங்கள் பக்கத்து வீட்டில் சென்று குடிப்பதை அறியாது இருக்கார் என்றார். தன் பிள்ளைகளுக்கு தன் வீட்டு வருமான செலவுகளை பகிராது கற்று கொடுக்காது பிள்ளைகள் என்பவர்கள் தன் வீட்டு பைக் துடைக்க குடை போன்ற தொலைக்காட்சி ஆன்றனவை சரிசெய்யவே பயண்படுத்தி வந்தார்.

வெளியில் ஆசாரம் கட்டுப்பாடு, உள்ளே அராஜக ஆட்சி, எகத்தாளம் என்னை அந்த வீட்டை வெறுக்க செய்தது. காட்டுக்கு நடுவில் என்பதால் பாம்பு பயமும் என்னை தொற்றி கொண்டது. என் மாமனார் தேயிலைத்தோட்ட அதிகாரி என்பதால் வீட்டில் வேலையாட்கள்  மாடு வளர்ப்பது, செடி வளர்த்து, காய்கறி பால் விற்பது எல்லாம் எளிதாக இருந்தது. என்னவரோ அலுவலக அதிகாரி மேலும் கம்பனி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் தணிக்கைத்,துறையில் இருந்ததால் எல்லாற்றிலும் சுயகட்டுபாடும் தேவை இருந்தது அவருடைய மேலதிகாரியும் தேவைக்கு அதிகமாகவே கட்டுப்படுத்தியும் வந்தார்.   எங்கள் வீடு இன்னும் பெரும் கொடும் வனத்தில் என்பதால் வீட்டை சுற்றி சில குறிப்பிட்ட இடங்களில் சாரை பாம்பை காணலாம். எனக்கு பாம்பு தான் மிகவும் பயம். பாம்பை பற்றி எங்கள் பக்கத்து வீட்டு நண்பர்களிடம் கூறினால் பாம்பு நடு மத்தியில் விழுந்தது, குறுகே ஓடினது என பல பல .அதை விட பயங்கர கதைகள் சொல்வார்கள்.  

எங்கள் பெரிய மகன் பிறந்து 90 நாள் கடந்து சென்ற போது வீட்டில் வண்டு கத்தும் போல் சத்தம். அத்தான் டவுணில் இருந்து வந்த போது அந்த குறிப்பிட்ட சத்தம் வந்த திசையை காட்டி கொடுத்தேன். அது தேன் நிறமுள்ள ஓர் நல்ல பாம்பாக இருந்தது. அது போனதை கண்டோம். அது எங்கிருந்து வந்தது எங்கு போயிருக்கும் என பல நாட்கள் ஆராய்ந்து கொண்டிருந்தோம். இப்படி பல நெருக்கடி மத்தியிலும்  அத்தான் பாதுகாப்பில் இருப்பது மட்டுமே மகிழ்ச்சி. அவர் ஓர் அதிசயப்பிறவி. யார் யாருக்கு என்ன தேவையோ பார்த்து பார்த்து செய்வார். அது என் வீட்டார் ஆனாலும் அவர் வீட்டார் ஆனாலும் ஒரே போல் தான் செயல்படுவார். அவர் வீட்டார் என்றதும் கொஞ்சம் அதிகமாக பற்றை வெளிப்படுத்துவார் அவ்வளவே.  இந்த குணம் அவர் போகும் மட்டும் இருந்தது. அவருக்கு யார் என்ன செய்கின்றார்கள் என கணக்கிட மாட்டார். அவரால் என்ன செய்ய இயலுமோ அதை செய்து கொண்டே இருப்பார்.

அவருடைய பெற்றோர் அத்தானை ஒரு வகை தரித்திர சூழலில் வளர்த்தால் அவருக்கு தன் பிள்ளைகள் எவ்விதவும் கஷ்டப்படக்கூடாது என எண்ணி ஆற்றலையும் மிஞ்சி நல்ல பள்ளிகளில் கல்வி கொடுத்தார், தன் நிழலில் தன்னுடனே வைத்து வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.  பல போதும் தகுதிக்கு மீறியே பிள்ளைகளுக்காக செலவழித்தார். பெரியவர் எட்டாம் வகுப்பு ஆகினதும் இனி பைக் சரிவராது எனக்கண்டு கார் வாங்க ஆசைப்பட்டார். எங்கள் எல்லா ஆசையும் நிறைவேற்ற அவர் கடின உழைப்பு தேவைப்பட்டது, உழைத்து கொண்டே இருப்பார். தூங்கும் நேரம் தவிர்த்து ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார். சில நாட்களில்  பல மணிநேரம் தட்டச்சு செய்வதால் அவர் விரல்கள் வலிப்பது உண்டு, அப்போது கையை தடவி தரக் கூறுவார். கால் ஒரே நிலையில் வைத்து நீர் பிடித்தும் இருந்துள்ளது.  அப்போது நாங்களை எண்ணை தேய்த்து கொடுப்போம். இதனால் நான் காணப்பயிறை வேகவைத்து தண்ணீர் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அவர் போகும் சில மாதம் முன் எங்கள் மகன்கள் ”அப்பா உங்க வயிறு பெரிதாகி கொண்டே போகின்றது ஜிம்முக்கு வாங்க என அழைப்பார்கள். சில நாள் சில மணிநேர நடைபயிற்சியுடன் வந்து சேருவார். ஜிம்முக்கு போக நேரம் இல்லை என மறுப்பார். அப்போது அவரை ஆசுவாசப்படுத்த  ”டேய் அப்பாவின் அழகே இந்த வயறு தான். கடவுளின் பிள்ளைகள் கொழுத்த கன்றுகள் போல் இருபார்கள்” என்பேன்.


அவருக்கு பிடித்த நேரப்போக்கு பிள்ளைகளுடன் வீடியோ விளையாட்டு என்பதாக இருந்தது. சமீப காலமாக அந்த விளையாட்டை மறந்து விட்டார். தற்போது அவருக்கு  மன அழுத்தம் என்று தோன்றினால் வாகனத்தை எடுத்து கொண்டு சில நேரம் பயணம் செய்து வரவே விரும்புவார்.  அல்லது சமையல் செய்ய மிகவும் ஆசைப்படுவார். பாத்திரம் கழுகுவது, காய்கறி வெட்டுவது அரைத்து கொடுப்பது மட்டுமே என் வேலையாக இருக்கும்.  ஞாயிறு அன்று அத்தான் சமையலாகவே இருக்கும். காலையில் என்னையும் சந்தைக்கு  அழைத்து சென்று இலை உட்பட எல்லா காய்கறியும் வாங்கி வந்து பிரியாணி செய்வார். செய்து முடிக்க 11 மணியாகி விடும். நாங்கள் நால்வரும் ஒன்றாக உணவு எடுக்க அமருவோம். என் இருக்கை அத்தான் அருகில் தான் இருக்க வேண்டும். அவர் நடத்தின வாழ்க்கை ஆக்கபூர்வமாக, அன்பால் உருகி, உயிரோட்டதாக இருந்தது. இதில் நாங்கள் யாராவது வருத்தப்பட்டால் அவரும் வருந்தி விடுவார். அவரை வருந்த செய்ய வேண்டாம் என்றே அவர் உள்ள போது அவர் விரும்பாததை கதைப்பது இல்லை என்றிருந்தோம்.


பிள்ளைகளை நான் ஏதும்  வேலை செய்ய கூறினால் நான் செய்கிறேன். அவர்களை நிம்மதியாக இருக்க விடு.  தன் சிறு வயதில் இரவு உணவுக்கு முன் தன்  அம்மா உடமரக்கட்டையை வெட்டிப்போட கட்டாயப்படுத்துவதை வெறுப்புடன் நினைத்து பார்ப்பார். அதே போன்று இறச்சி குழம்பு கேட்டால் கிராம்பி எஸ்டேடில் இருந்த போது  கொக்கை வழி நடந்து சென்று பாம்பனார் டவுணில் இருந்து வாங்கி வரக்கூறுவதை நினைவு கூறுவார். தன் பெற்றோர் தன்னை நிர்பந்தித்தது போல் தன் பிள்ளைகள் நிர்பந்ததிற்கு உள்ளாகுவதை விரும்பவே மாட்டார்.


இது போன்ற அவருடைய சில விருப்பங்களாலே அவர் பல மடங்கு அதிகமாக உழைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். எங்கள் திருமணம் முடிந்த போது அவர் 6 ஆயிரம் ரூபாய் கடனுடன் தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு என ஒரு ரூபாய் கூட அந்த பெற்றோர் கொடுக்கவில்லை. நாங்கள் தூத்துக்குடியில் குடிபுகுந்த போது அத்தான் ஊதியத்திற்கு; வரிசை வீடு, பொதுக்கழிப்படம் உள்ள வீட்டிற்கு குடிப்புகிரத்தான் தகுதி இருந்தது. ஆனால் என் வசதி வாழ்க்கையை கருதி நல்ல தனி வீடாக பிடித்து குடியிருந்துள்ளோம். பண்டிகை என்றால் எங்களுக்கு எடுத்து தந்த பின் கடைசியாகவே அவருக்கான உடையை எடுப்பார். எங்கள்  திருமணம் ஆன பின் அவர் பெற்றோர் அவருக்கு அவர் பிள்ளைகளுக்கு ஒரு முறை கூட துணிமணிகள் எடுத்து கொடுக்கவில்லை என வருத்தப்படுவார். ஆனால் அத்தான் வசதியான பின் தன் பெற்றோருக்கு துணிமணிகள் எடுத்து கொடுக்க தயங்கினது இல்லை. இந்த புதுவருடம் தன் அம்மாவிற்கு ஒரு சேலை என்னை வைத்து தேர்ந்து எடுத்து அவர் கையால் கொடுத்தார். 


என் தோழிகள், என் வயது கொண்ட என் உறவினர்களை கண்டால் என் வாழ்க்கைத்தரம் மெச்சப்படவில்லை. பின் தங்கியே இருந்தது. ஆனால் எங்கள் அன்பால், எங்கள் பிணைப்பால் இல்லை என்ற நிலையை எல்லாம் உண்டு என செழுமையாக்கியிருந்தோம். அத்தானின் பிரிவைத் தவிற எந்த துயரையும் நாங்கள் எதிர்கொண்டிருப்போம். அதனால் தான் என்னவோ இறைவன் அத்தானை விரைவாக அழைத்து கொண்டார். ” எல்லாம் அத்தான்”  என்ற இடத்தில் ”இல்லை” என இறைவன் தீர்வு எழுதியதின் மர்மம் தான் விளங்கவில்லை. நல்ல குடும்பம் அரவணைப்புள்ள கணவன் வீட்டார் கருதலான  உறவினர்கள் என எல்லாமே இல்லை, இல்லை என இருக்க எங்களுக்கு எல்லாமான அத்தானே ஏன் அழைத்தாய் இறைவா? என்ன தத்துவமும், எந்த ஜெபமும், எவ்விதமான கடவுள் நம்பிக்கையும், எங்களை ஈடேற செய்யாது. எங்களை கைபிடித்து நடத்தியவரை அழைத்து சென்று விட்டு எங்களை ஓடிவரக் கூறுவது கூட கேலியாக சிரிப்பது போல் தான் உள்ளது. இன்றைய மனநிலையில் 10 வருடம் சொந்த வீடு என மகிழ்ச்சியாக இருந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு, நாங்கள் வாடகை வீடு தேடி போவது தான் நிம்மதியை தரும் போல் உள்ளது. எங்கள் இருப்பு, எங்கள் உயிர், மூச்சு சந்தோஷம் எல்லாம் அணைத்து என்ன பெரிய ஆசிர்வாதம் கிடைக்க உள்ளது எனத்தெரியவில்லை. ஐந்து வருடமாக கார் இருந்தும்  ஒரு முறை கூட ஓட்டுனர் இடத்தை எட்டி பார்க்காத என்னை கார் ஓட்ட கற்று கொள்ள அனுப்பி விட்டது அத்தான் பிரிவு!  பல வருடமாக சேர்த்து வைத்த கனவுகள் ஆசைகள்,எல்லாம் உடைந்து சிதற;  ஏக்கங்களுடன்  இனி புது கனவுகளை தேடி சேர்க்க வேண்டியுள்ளது


எதுவும் மனதில் ஒட்டவில்லை எதுவும் சிந்திக்க இயலவில்லை, எதைப்பற்றியும் அக்கறையும் இல்லை. ஏதோ நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றது , நான் எண்ணிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் நம் பிள்ளைகளுக்காக போட்ட உங்க கணக்கை நான் முடிக்க நினைத்தால் அதை நிறைவேற்ற இன்னும் 11 வருடங்கள் வாழ வேண்டும் அத்தான். நீங்கள் இல்லாது 11 யுகங்களாகத்தான் தெரிகிறது. உங்களுடன் வாழ்ந்த அந்த 19 வருடங்கள் மின்னல் என மின்னி மறைந்து விட்டது அத்தான்! இந்த சூழலை கடக்க நீங்க தான் உதவ வேண்டும். நீங்க தான் எந்த பிரச்சினையும் ஒரு பிரச்சினை இல்லை என அடிக்கடி கூறுவீர்களே. எங்கள் பிரச்சினை தான் தீர்க்க இயலாத பிரச்சினையாக உள்ளது. 



14 Apr 2016

வாழ்க்கை எனும் புதிரான பயணம்!

அத்தான் ஒரு வழியா உங்க குரல் கொண்ட காணொளி  கிடைத்து விட்டது.  உங்க உருவம் முதல் சில நாட்கள் மறந்து இருந்தது  பின்பு குரல். பின்பு அதீத துக்கம் விலக உங்கள் உருவம் மறுபடியும் வந்து விட்டது.  இருந்தும் உங்கள் குரல் கேட்க ஆசை கொண்டிருந்தேன். இன்றும் தேடி கொண்டிருந்த போது நாம் பயணப்பட்ட அழகான ஒரு இடத்தில் வண்டியை விட்டு இறங்கி புகைப்படம் எடுக்கவில்லையா என கேட்கின்றீர்கள் நான் வேண்டாம் எனக்கூறும் காணொளி இது.


நம் விடுமுறை நாட்கள், ஏதோ ஒரு இடத்தை தேடிய சில புகைப்படங்களுடன் உள்ள பயணமாக தான்  இருந்துள்ளது.  அது நம்மை பல பிரச்சினைகளில் இருந்து காத்துள்ளது.  சொந்தக்காரர்கள் வீட்டில் போயிருந்து வம்பு பேச வேண்டாம் குத்தி பேச்சு , ஏச்சு கேட்க வேண்டாம். நம் குடும்பம் ,  நமக்கு  மட்டுமே  உருத்தான  உரையாடல்கள் என அந்த நாள் முழுக்க நம் நாலு பேருக்குமானதாக செலவழிக்க இயன்றது. நான்  சாப்பாட்டை பொதி கட்டி விட்டால் நம் பிள்ளைகளுக்கு கோபம் வந்து விடும்.  வெளியில் நிம்மதியாக சாப்பிடத்தான் வருகின்றோம். அங்கும் உங்க தயிரு, புளிசாதமா என கோபம் கொள்வார்கள்.


நீங்க அமைதியா பாட்டு கேட்டு கொண்டே கார் ஓட்டுவீர்கள். ஒரு முறைக்கூட எதிரே வந்த வாகனத்தில் இடித்தீர்கள் என்றோ எதிரே வரும் மனிதர்களை காயப்படுத்தியதோ இல்லை. அசராது ஏழு- எட்டு மணிநேரம் கூட வாகனம் ஓட்டுவீர்கள். ரோடுகள் பயணம் உங்களுக்கு பிடித்தமானது. 
அப்படியான பயணங்களால் தான் திருநெல்வேலி, நாகர்கோயிலை, தூத்துக்குடியை சுற்றியுள்ள பல இடங்கள் போய் வந்து விட்டோம். இனி நம் மனதில் இருந்த சில இடங்கள் இடுக்கி டாம்,  வடஇந்தியாவிலுள்ள சில இடங்கள் இலங்கைப்பயணம் போன்றவை நாம் விரும்பியும் நிறைவேறாதது. 

 உங்களுக்கு நாலுவழிச்சலையில் பயணிப்பது என்றால் அலாதிப்பிரியம். நீங்கள் உங்கள் மகனிடம் எனக்கு பிடித்த ரோடு என்றும் கூறும் இடத்தில் தான் உங்க உயிரையும் விட்டுள்ளீர்கள்.  இன்னும் ஓர் 50 அடி பயணித்திருந்தால் அந்த கொலைக்காரப்பாவியின் கண்ணில் தெரியாது வேறு வழி சென்றிருப்பீர்கள். 

நேற்று முதல் நானும் கார் ஓட்ட கற்க ஆரம்பித்து விட்டேன். உங்களிடம் கற்றுத்தரக்கூறியும் நேரம் இல்லை என ஒதுங்கி விட்டீர்கள். நம் மகனுக்கு கற்று கொடுத்தீர்கள். பெப் 7, 2016 நாள் உங்கள் வழி காட்டுதலுடன் கோயில்பட்டி அருகே வரை ஓட்டினான். நானோ பயத்துடன் பின் சீட்டில் இருந்து வந்தேன். பெரியவன் நம்முடன் பயணிக்கும் போது என்னை பின் சீட்டில் தள்ளுவது தான் அவன் வழக்கம். அத்தான் அந்த கொலைக்காரன் பெருவிரலை பயண்படுத்தி வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் உள்ளம்காலை வைத்து காரை இயக்கி விட்டான் போலும். 

இனி நடந்ததை எண்ணி என்ன கூறினாலும் எந்த பிரயோசனவும் இல்லை. உங்களை உயிருடன் எங்கள் வசம் தர வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் அது நடந்திருக்கும். உங்க மகன்கள் என்னை பார்ப்பது போல், நாங்கள் உங்களை நன்றாக கவனித்து பார்த்திருப்போம்.


உங்களுக்கும் எங்களுடன் இருக்க விருப்பம் இல்லை, நீங்கள் கடைசி மூன்று மாதம் கூட்டு சேர்ந்த உங்க தம்பி அம்மாவிற்கும் நீங்கள் எங்களுடன் இருப்பது பிடிக்கவில்லை. உங்கள் அப்பா இறந்த கிரியை முடிந்த பின் நாம் நெல்லையில் நம் காரில் கொண்டு வந்து உங்க தம்பி குடும்பத்தை  இரயிலில்  ஊர் அனுப்பி விட்டோம். சென்னையில் சேர்ந்த பின் என்னிடம் அவன் கதைத்ததை அவன் நினைப்பை உங்களிடமும் கூறியிருந்தேன். ”அண்ணி அண்ணன் பயணங்களிலே இருக்கின்றான், அவன் கைபேசியில் என் பெயருடன் தம்பி என்றும் எங்க அம்மா பெயர் பக்கம் அம்மா என்றும் இடக்கூறுங்கள், ஏதாவது நடந்தால் எங்களுக்கு தெரிவிக்க வேண்டாமா  என்றான்”. நீங்க போன அன்று கூட என்னிடம் போலிஸ் கூறினது விபத்து என்று தான் ஆனால் என்னை விட முதல் செய்தி போனது உங்க தம்பிக்கு தான். ஆனால் உங்க முகத்தை பார்க்க அந்த களவாணிக்கு கொடுத்து வைக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை வந்து தாயும் மகனும் பெரும் விவாதத்தில் இருந்தனர். காலை 8 மணிக்கே மறைந்து விட்டான். நம் மகன் உங்க அம்மாவிடம் ”சித்தாப்பா எங்க பாட்டி” என கேட்க “அவன் பயண அசதியாக இருப்பதால்  நண்பன் வீட்டில் தூங்க போயுள்ளான் என்றார். இந்த துருப்பிடித்த கதையை பேசி எந்த பலனும் இல்லை. நீங்களே என்னிடம் கூறியிருந்தீர்கள் என் தம்பி நான் இங்கு இருந்தால் சொத்தில் பங்கு கேட்பேன் என நினைத்து எனக்கு மும்முரமாக கத்தார் அனுப்ப  தயார் செய்கிறான் என்று. அவன் பணம் கேட்ட போது கூட உங்களுக்கு வர வேண்டிய சொத்தில் இருந்து வாங்கி கொடுத்திருக்கலாம் தானே? ஏன் உங்கள் செலவில் உங்களுக்கு சூனியம் வைத்தீர்கள் அத்தான். உங்களிடம் உண்மையாக இருந்த பலரை உங்களிடம் இருந்து நெடுதூரம் தள்ளி விட்டு; கடைசி 3 மாதம் உங்களை  பலி வாங்க நினைத்தவர்களுக்கு நிறைய சேவகம் செய்து உள்ளீர்கள். உங்க கணக்கிலுள்ள பணத்தை பற்றி கேட்ட போது கூட கள்ளச்சிரிப்புடன் யாருக்கு கொடுத்திருக்கான் என கண்டு பிடிக்க நான் உதவுகின்றேன் என்றான்.    உங்க அம்மா, தம்பிக்கு  தான் உங்க பணத்தை கொடுத்துள்ளீர்  என அறிந்த போது ஆறுதல் அடைந்தேன். ஒருவேளை எங்களுக்கு தெரியாது வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் என் இதயமே நின்றிருக்கும்.    



பயவாயில்லை அத்தான். முன் ஜென்மத்தில் நீங்க யாராக இருந்தீர்களோ. களவாணி தம்பிக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்துள்ளீர்கள். உங்க அப்பா கம்பனியில் இருந்து சாக்கு பெட்ரோல் திருடுவார், உடன் பணி செய்பவர்களை மாட்டி விடுவார் என கேள்விபட்டுள்ளேன். ஆனால் உங்க தம்பியும் உங்க அம்மாவும் உங்களையே களவாண்டு விட்டனர். 

 நாம் வின்னி திருமண வீட்டில் சென்ற போது உங்க தம்பியின் ஏமாற்று புத்தியை பற்றி தானே நீங்களும் உங்க உறவினர்களும் பேசி சிரித்தீர்கள். பொங்கலுக்கு கமல்சன் குடும்பத்துடன் நம் வீட்டிற்கு வந்த போதும் கூட நீங்க இருவரும் பேசி கொண்டது அந்த திருடனை பற்றி தான். அவன் கல்லூரியில் படிக்கும் போதே எப்படி எப்படி பிள்ளைகள் பெயரை கெடுப்பான் என்றும் உங்க காம்பவுண்டு சுவரில் அவனைபற்றி ஊர்க்காரர்கள் எழுதி போட்டதை பற்றியும் தான் பேசிச் சிரித்தீர்கள். ஆனால் அப்போதும்  நீங்க  அவனிடம் பணம் கொடுத்து  கொண்டு தான் இருந்துள்ளீர்கள். நம்முடைய அழகான வாழ்க்கையை ஏன் மறந்தீர்கள் அத்தான். 

உங்க அம்மா நம் மகன் பேசின போது ”நான் உன் சித்தாப்பாவிடம் கேட்டு சொல்கின்றேன் சித்தப்பாவிடம் கொடுத்துள்ளேன், சித்தாப்பாவிடம் கேளு என ஒரே சித்தப்பா புராணம் பாடினார். அதுவே நான் கேட்டேன். பாபாவும் உங்க மகன் தானே. அவரை பற்றி நீங்க தான் கதைக்க வேண்டும். அவரை விட ஏழு வயது இளைய அந்த உதவாக்கறை பேசக்கூடாது”.  அவன் நம் மகனையும் உங்களை போல் நினைத்து ”உங்க அம்மாவிடம் கூறாதே உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்” எனக்கூறி 10 ஆயிரம் அனுப்பி உள்ளான். . 

நம் மகன்களுக்கு உங்கள் வாழ்க்கைகுறிக்கோளான உழைப்பு   விடாமுயற்சி பற்றி தெரியும். இன்று அவன் விண்ணப்பம் வாங்க கோயம்பத்தூர்  பிஎஸ்ஜி கல்லூரி சென்றுள்ளான். உங்கள் மகன்களிடம் உங்க நேர்மை, அன்பு உண்டு.  அவர்கள் உங்களை போல் பாசத்திற்காக ஏமாற மாட்டார்கள். அவர்களை பிறந்ததில் இருந்து நம் நெஞ்சிலும், கைகளிலும், இதயத்திலும் வைத்து வளர்த்துள்ளோம். உங்கள் வாழ்க்கையில் உங்களை முள்ளாக குத்தின சோகமே  உங்களை உங்க பெற்றோர்  பிரிந்தது தான்.  உங்கள் பாட்டி பொறுப்பில் அத்தை மச்சான்களிடம் ஏச்சு பட்டு வளர்ந்ததை அவமானமாக கருதினீர்கள்.  வாழ்க்கையில் ஒரு கட்டத்திலும் உங்கள் விருப்பங்களை நீங்களாக தீர்மானிக்க அனுமதிக்காது இருந்ததை எண்ணி வருந்தினீர்கள். நீங்க விடுமுறைக்கு வரும் போதும் உங்களை தனியறையில் தூங்க வைத்திருந்ததின் கொடுமையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் நீங்க விடைபெறும் அன்றும் வீட்டில் இருந்து கிளம்பும் முன் உங்க மூத்த மகனிடம் தான் பேசிக்கொண்டிருந்தீர்கள். இளைய மகன் பள்ளிக்கு கிளம்பி செல்வதை  கரிசனையாக பார்த்து கொண்டு இருந்தீர்கள். எனக்கு தான் அன்று உங்களிடம் கொஞ்சி, கெஞ்சி பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.  என்னிடம் தான் சொல்ல வந்ததை சொல்லாமலே போய் விட்டீர்கள். அன்று உங்களை சந்திக்க ரீகனிடம் கூறியிருந்தீர்களாமே. ரீகன் அவசர அவசரமாக கிளம்பும் போது உங்கள் தகவலை நம் மகன் தெரிவித்துள்ளான். ரீகனை  முதல் நாளான வெள்ளி அன்றும் பேசவுள்ளது என வரக் கூறியுள்ளீர்கள். ஆனால் என்னிடம் உங்களுக்கு அன்று ஒன்றும் கதைக்க கதைகள் இருக்கவில்லையோ அத்தான். எப்போதும் நீங்கள் கூறும் கூற்று “  நீ  என் மகிழ்ச்சியில் மட்டும் இருந்தால் போதும் என் துக்கத்தில் நீ வேண்டாம்”. ஆனால் நம் திருமண நாள் நாம் எடுத்த வாக்கு துக்கத்திலும் இன்பத்திலும் உங்களுடன் இருப்பேன் என்று தான். உங்கள் கடைசி மூன்று மாதங்கள், அந்த கடைசி மூன்று நாட்கள் பற்றி நான் தியானித்து கொண்டிருக்கின்றேன் அத்தான்.  

உங்க ஆன்மா சாந்தியாகி விட்டது. உங்க கர்ம வினை எல்லாம் களைந்து விட்டீர்கள். அதற்கு இந்த ஜென்மத்தில் உங்க தாய் தம்பி தகப்பன் உதவி விட்டனர். என் கர்மவினையை எண்ணி தான் புலம்பி கொண்டு இருக்கின்றேன். அன்று எனக்கு விடுமுறையாக இருந்தும் உங்களுடன் நான் வராதிருந்தது என் கர்ம வினை தீரவில்லை என்று தானே. நினைத்தால் தீராத சோகமாக மாறி விட்டது நம் காதல் முடிவு.

நம் திருமணம் முடிந்த போது எனக்கு விருப்பமே கை எட்டும் தூரம் பறந்து போகும் மேகம், அதிகாலை கூட்டம் கூட்டமாக போகும் காட்டு பற்றிகளை வேடிக்கை பார்ப்பது பகல் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை அவதானித்து கொண்டிருப்பது. நான் அதிகாலை விழித்து ஜன்னல் வழியாக பார்த்து கொண்டு இருப்பேன். அடுத்து நம் வீட்டு வாசலில் இருந்து  புத்தகம் வாசிப்பது. நீங்கள் அலுவலகம் விட்டு வருவதை கண்டு டீ தயார் செய்து குடித்து விட்டு நடக்க போவது. மெல்ல மெல்ல காதலிக்க கற்று தந்தீர்கள். அந்த காதல் காயாக, கனியாக மாறி வந்த போது என்னை தள்ளி விட்டு சென்று விட்டீர்கள்.  பாண்டவர் மேட்டு கடும் குளிரில் அடுப்பில் தீயிட்டு நாம் பேசி கொண்டு அருகில் நிற்பதும், தற்போதும்  காலையிலே ”என்ன இன்று சாப்பாடு? சப்பாத்தியா, தோசையா ,  பிரியாணி செய்து தரவா”  என்று அவசர அவசரமாக வரும் உங்களை “அத்தான் காலையில் நிதானம் தேவை, படபடக்க வேண்டாம்” என்று  உங்களை அணைத்து கொள்ளும் கணங்கள் தான் நினைவில் வருகின்றது.   

நம் பிள்ளைகள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய வேளையில் வாழ்க்கையின் எல்லா அவலங்களும், வெறுமையும் முடிந்து விட்டது; இனி அமைதி, அன்பு, ஒன்று மட்டும் தான் தேவை என்ற மனநிலையில் வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்த போது உங்கள் பிரிவு விடைதெரியா புதிராக வந்து விட்டது.


நான் மறுபடியும் போராட ஆரம்பித்து விட்டேன். முதல்படியாக கார் ஓட்ட கற்று கொள்ள செல்கின்றேன். உங்களுக்கு நான் பாரமாக இருந்தது போல் பிள்ளைகளுக்கும் பாரமாக தெரியக்கூடாது அத்தான். நீங்க பல நாட்கள் அவசரம் அவசரம் எனக்கூறி வேகமாக சென்று கல்லூரி வாசலில் விடும் போது ”அத்தான் மூட்டையை இறக்கி வைத்து விட்டீர்களா” என கேலி செய்வேன்.  இந்த வாரம் சாம் ஜோயல் தான் கொண்டு விட்டு அழைத்து வருகின்றான்.  உங்களை சார்ந்தே உங்களை நோக்கியே என் வாழ்க்கை தடத்தை பதித்த எனக்கு இனியுள்ள பாதை ஒற்றையாள்  பாதை என்றதும் கவலை தொற்றி கொள்கின்றது. என்னால் இயலும் என்னால் முடியும் என்ற என் தன்னம்பிக்கை நம் பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் என்னை திடப்படுத்துகின்றது.  



3 Apr 2016

என் கதைப்புகள் !

உங்களை கல்லறைக்கு அனுப்பும் மட்டும் உங்கள் அம்மா பண ஆசை ஓய்ந்த பாடில்லை. ஒரு வகையில் நீங்க நிம்மதியாக இறைவன் சன்னதியை அடைந்து விட்டீர்கள் என்று தான் தோன்றுகின்றது. உங்கள் ஏக்கம்  உங்க குடும்ப பாசத்தை குறித்தே இருந்தது. நானும் எவ்வளவோ உங்களுக்கு சொல்லி பார்த்து விட்டேன் பாபா அத்தான்.  உங்களுக்கு சொந்த வீடு உண்டு உங்களுக்கு என பிழைப்பு உண்டு உங்களுக்கு அருமையான மகன்கள் உண்டு உங்களை எப்போது நினைத்து கொண்டிருக்கு நான் உண்டு. இருந்தும் உங்க தாய் பாசம் -ஏக்கம் வலிமையானது. ஏன் என்னை ஒதுக்கி விட்டனர் ஏன் என்னை மதிப்பதில்லை என வருந்தி  கொண்டே இருந்தீர்கள்.


ஒரு பிள்ளை முதன்முதலாக மதிக்கப்பட வேண்டியது அதன் குடும்பத்தில் தான். ஆனால் உங்கள் தாய் உங்களை ஒன்றரை வயதிலே உங்க பாட்டி  வீட்டில் கொண்டு  விட்டது பெரும் வடுவை உருவாக்கி விட்டது, ஓர் ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது உங்களுக்கு.. அங்கிருந்த அத்தை, அம்மா பாட்டி வளர்ப்பிலே வளர்க்கப்பட்டவர் நீங்கள்.   தனக்கு மாமா பெரியப்பா போன்ற உறவுகள் வேண்டும் என ஏங்கினீர்கள். ஆனால் உங்க தம்பியை நாலு வயதினிலே விடுதியில்  விட்டதால் பாசத்தை விட மனிதர்களிடம் வெறுப்பு பொறாமையை   மேலோங்கி இருந்தது.


உங்கள் குடும்பம் என்றால் பெரியதும், வலியது என நம்பினீர்கள். அத்தான் இந்த குணம் தான் உங்களை வளர விடாது தடுத்தது என நான் நினைக்கின்றேன்.  ஆனால்  உங்களை தூக்க ஒரு உறவினர்கள் கூட அருகில் இல்லை. உங்களை உண்மையில் நேசித்தது உங்க நண்பர்களாக தான் இருக்க வேண்டும். உங்களை தூக்கினதும் உங்க நண்பர்கள், என் மாணவர்கள் சாம் நண்பர்கள். உங்க உடன் பிறந்த தம்பி கூட விபத்தில் நீங்கள் இறந்து விட்டீர்கள் என அறிந்த பின்பும் வந்து சேர தாமதித்துள்ளான்   நீங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து செந்திலுடன் வியாபாரம் பேசி கொண்டு இருந்துள்ளான். உங்க தம்பி திருமணம் அன்று செருப்பு தூக்க என்னிடம் கொடுத்தது போல் இன்றும் செருப்பாக நடத்துகின்றனர். என்னை கேலி பேசுவது என்னை விமர்சிப்பது எல்லாம் என் காதுக்கு எட்ட வைக்கின்றனர். நீங்க இருந்திருந்தால் உங்களிடம் எல்லாம் கதைத்திருப்பேன். இன்று என் வலைப்பதிவு வழியாக உங்களிடம் சேர்க்கின்றேன். 

அத்தான்  நான் நினைவில் குறித்து வைத்தவை எல்லாம் நீங்கள் டயறியில் குறித்து வைத்திருந்தீர்கள்.  நாம் தூத்துக்குடி நெல்லைக்கு வந்து குடியேறினதே மிகப்பெரிய தவறு. ஆனால் அந்த தவறை பற்றி 15 வருடம் முன்பே கூறியிருந்தேன். நீங்க வேலை தேடி எஸ்டேடில் இருந்து வெளியேற வேண்டும் என நினைத்த போதே நான் குறிப்பிட்டிருந்தேன். நாம் கோயம்பத்தூர் செல்லலாம் என்று. உங்க குடும்ப ஆட்கள் தொல்லை வேண்டாம் நாம் இக்கட்டான சூழலில் இருப்பதை அவர்கள் காணக்கூடாது என்று மட்டுமே நான் விரும்பினேன். ஆனால் நீங்களோ தூத்துக்குடி திருநெல்வேலி என்றால் உங்கள் வீட்டில் இருக்கலாம் என்று கனவு கண்டீர்கள்.  அந்த கனவு இருந்ததால் தான் உங்க அம்மா அப்பா கட்டின புது வீட்டின் பக்கத்தில் இருந்த பழைய  மண் வீட்டை உங்களுக்கு தரக் கூறினீர்கள். அதற்கு தான் உங்க அப்பா உங்க தம்பி திருமணம் நாள் அன்று நம்மை திட்டி விரட்டி விட்டார். பொதுவாக மௌனம் காக்கும் நீங்கள் அன்று என் பெற்றோர் இருந்ததால் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி கத்தி அழுது ஆற்பாட்டம் செய்து   உங்க வீட்டை விட்டு அவமானப்பட்டு வந்தீர்கள்.  அன்றைய உங்க துயரை  போக்க என என் நகைகளை வலுக்கட்டாயமாக உங்களிடம்  கொடுத்து உடன் இடம் வாங்குங்கள் நாமும் வீடு கட்டலாம் என்றேன். அது போலவே நாமும் நம் சக்திக்கு இணங்க அழகான ஓர் வீடு கட்டினோம் அந்த வீட்டில் ஒன்பது வருடமாக இருந்தோம்.


உங்க வீட்டிற்கு தறை கல் இட்ட போதோ உங்க தம்பிக்கு பெண் பார்க்கவோ உங்க தம்பிக்கு குழந்தை பிறந்த போது உங்களை அழைக்கவோ இல்லை. உங்க துயரை கண்டு நான் உங்க அம்மாவிடம் தொலைபேசியில் வினைவிய போது  நீங்க தனியார் நிறுவனத்தால் வேலை பார்ப்பதால் லீவ் கிடைக்காது என நினைத்தோம் என்றார். 

தூத்துக்குடியில்  கில்பர் அத்தான் வீட்டு மாடியில் குடியிருந்த போது நம்மை சந்திக்க வந்த உங்க பெற்றோர் உங்களையும் என்னையும் மிகவும் அவமரியாதையாக கேலியாக  பேசின  போது  உங்களுக்கு தெரியாது  உங்க அப்பாவுக்கு  நான் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன். அந்த கடிதத்தை உங்க அப்பா உங்களிடம் வாசித்து காட்டவும் எனக்கு தெரியாது உங்க மருமகள் எழுதியுள்ளாள் என்று கூறி தப்பித்து வந்து நான் எழுதினதை என்னிடம் பாராட்டினீர்கள்.  அந்த கடிதத்தில் என் மாமனாரிடம் நான் வேண்டி கொண்டது உங்க மகனை மகனாக நடத்துங்கள் கேவலப்படுத்தாதீர்கள். உங்கள் மகன் தோல்விக்கு நீங்களும் தான் காரணம் என்று எழுதியிருந்தேன். அதன் பின் நம் விடையத்தை பேசுவதை நிறுத்தி விட்டு நம்மை ஒதுக்கினர்.

அத்தான் இதுவெல்லாம் பொதுத்தளத்தில் பதிய வேண்டிய விடையமல்ல. ஆனால் உங்கள் உழைப்பு, உங்கள் ஆசைகள் எல்லாம் அகாலத்தில் பொலிந்து விட்டதே. இன்று உங்கள் அன்பைக்கூட நினையாது ஒதுக்குகினர். உங்களுக்கு ஒருவேளை புதியதாக இருக்கலாம். நீங்க இல்லாவிடில் நான் சந்திக்க வேண்டிய துயர் எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் இல்லாத போது உங்களை மறுபடியும் அவர்கள் அவமதிப்பதை என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை. இவை எல்லாம் உண்மையான மனிதர்களின் வரலாறு. இதில் கற்பனையில்லை பொய்மை இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அன்பு இல்லாத குடும்பங்களில் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் என புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணவனும் தான் உயிருடன் இருக்கும் போது என்பது போலவே, தன் காலம் பின்பும் தன் மனைவியின் நிலை என்ன என்று புரிந்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனக்கு அத்தான் அளித்த கல்வி உதவியுள்ளது. நான் அத்தான் மதிப்பிற்காக படித்தேன் ஆனால் அத்தான் பணம் சார்ந்து எடுத்த முடிவுகள் அவர்கள் தாய் சகோதரனை நம்பி எடுத்த முடிவுகள் என்னையும் எங்கள் மகன்களையும் நடுத்தெருவில் கொண்டு வந்திருக்கும். என்னிடம் யார் கதைப்பதையும் நான் விரும்பவில்லை அத்தான் உங்கள் அன்பால் மட்டுமே எனக்கு ஆறுதல் தர இயலும்.