27 Jun 2021

கண்கவரும் பத்மநாபுரம் அரண்மனை

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் என்ற சிறிய கிராமம் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த வேணாடு இராச்சியத்தின் செழிப்பான தலைநகராக இருந்தது.  பின்னர் இது திருவாங்கூர் சுதேச மாநிலமாக பிரபலமானது.  புலியூர்குறிச்சி (உதயகிரி), அரண்மனைகள், பழைய கோட்டைகள் மற்றும் முக்கிய கோயில்களின் எச்சங்கள் இன்னும் உள்ளன. மதுரையின் நாயக்கர்களிடம் தங்களை பாதுகாக்க     வேணாடு ஆட்சியாளர்கள்,  இப்பகுதியைப் 10,000 வீரர்களைக் கொண்டு பாதுகாத்திருந்தனர்.

கல்குளம் ஒரு மிகப் பெரிய நகரம் ஆகும்... அரண்மனைகிழக்கில் இயற்கையான பாதுகாப்பை வழங்கிய மேற்குத் தொடர்ச்சி மலையின் கரடுமுரடான மலைத் தொடர்களால்  பலப்படுத்தப்பட்டுள்ளது, மறுபுறம் பெரும்பகுதி 24 அடி உயரத்தில் கல் மற்றும் செங்கல் சுவரால் சூழப்பட்டுள்ளது.  கல்குலம் மற்றும் அருகிலுள்ள உதயகிரியில் உள்ள கோட்டைகள் கி.பி 1600 க்கு முன்னர், ரவி வர்மா குலசேகரனின் ஆட்சியில்(1592-1609) கட்டப்பட்டது.

 குடியேற்றங்களுக்கு  அருகாமையில் இருப்பதால் அரண்மனையை நிர்மாணிப்பதற்கான பொருத்தமான இடமாக கல்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.   வளமான விவசாய நிலங்கள் மற்றும் ஏராளமான நீர் நிலைகள் இருந்தது குடியேற்றவாசிகளை வரவேற்றது.

 கோட்டைக்கும் நடுவில் பத்மநாபுரம் அரண்மனை அமைந்துள்ளது.  400 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த அரண்மனை ஆசியாவிலுள்ள மிகப்பெரிய மர அரண்மனையாக கருதப்படுகிறது.  6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தின் 15 க்கும் மேற்பட்ட அற்புதமான மாளிகைகள் கொண்டது இது. மார்த்தண்டா வர்மாவின் உத்தரவின் பேரில், கல்குலத்தில் அரண்மனைகள் புதுப்பிக்கப்பட்டு வலுவான கல் கோட்டையால் பாதுகாக்கப்பட்டன. அரண்மனை வளாகத்தில் இன்று நாம் காணும் பல கட்டமைப்புகள் வாஸ்துசாஸ்திரத்தைக் கையாளும் பண்டைய நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட நெறிகளை பின்பற்றி மார்தாண்டா வர்மாவால் புதுப்பிக்கப்பட்டன .பணிகள் முடிந்ததும், மார்த்தாண்ட வர்மா அரண்மனையை அரச குடும்பத்தின் தெய்வமான ஸ்ரீ பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்தார். பண்டைய கல்குளத்து கொய்கல் 'பத்மநாபுரம் கொட்டாரம்' என்று அறியப்பட்டது.

1750 ஆம் ஆண்டில் அனிழம் திருனால் மார்த்தாண்ட வர்மா அரண்மனையையும் கோட்டையையும் மீண்டும் கட்டியெழுப்பினார், அதன்பிறகு பழைய கல்குலம் அரண்மனை பத்மநாபுரம் என்று அழைக்கப்பட்டது. ஏ.டி 1839 பின் பத்மநாபுரம் அரண்மனையின் வீழ்ச்சி ஆரம்பித்தது. . வருடாந்திர நவராத்திரி ஊர்வலம், மற்றும் பிரமுகர்களின் அவ்வப்போதுள்ள வருகை தவிர அரண்மனை மூடப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு இந்த வளாகத்திற்குள் அணுமதி தடை செய்யப்பட்டு இருந்தது. உள்ளூர்வாசிகள் அரண்மனைகுள் பேய் என்று உண்டு என நம்பினர்! உள்ளூர் மக்கள் பெரும்பாலும் அசாதாரண சத்தங்களைக் கேட்பதாகவும் மற்றும் விசித்திரமான தோற்றங்களைக் கண்டதாகவும் கூறினர். இதனால் இரவு ஆனால் அரண்மனைக்குள் நுழையத்  யாரும் துணியவில்லை "என்று ராஜா ரவி வர்மா எழுதியிருந்தார்.

 

இந்நிலையில் திருவிதாங்கூரின் கடைசி மகாராஜா ஸ்ரீ சித்திரா திருனால் பாலா ராம வர்மா, ராணி தாய் சேது பார்வதி பாய், , மற்றும் திவான் சார். சி. பி. ராமசாமி அய்யர், ஆகியோரால், 1934 ஆம் ஆண்டில், திருவாங்கூர் அரசாங்கத்தின் கலை ஆலோசகர் ஜே. எச். கசின்ஸ் மற்றும் தொல்பொருள் துறையின் தலைவரான ஆர். வாசுதேவாவை நியமித்தனர். . 1935 ஆம் ஆண்டில், ராஜகுடும்பத்தின் முழு ஆதரவுடன், அரண்மனை ஒரு அருங்காட்சியக வளாகமாக மாற்றப்பட்டது.   மொழியை அடிப்படையாக கொண்டு மாநிலங்கள் உருவான போது கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவிலிருந்து துண்டிது தமிழநாட்டோடு இணைத்தனர். இருப்பினும், சரியான நேரத்தில் தலையிட்டும், பத்மநாபுரம் அரண்மனையும் அதன் பரந்த மைதானங்களும் கேரள மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இன்று, அரண்மனை வளாகத்தைக் காண பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களாக வருகிறார்கள்.

நாலு பெண்ணுங்கள்!(நான்கு பெண்கள்!)

 தகழி சிவசங்கர பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு அடூர் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய நாலு பெண்ணுங்கள்(நான்கு பெண்கள்) என்ற மலையாள திரைப்படம் 2007ல் வெளியானது. இப்படத்தில் பத்மபிரியா, கீது மோகன்தாஸ், மஞ்சு பிள்ளை, நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தின் வெவ்வேறு காலகட்டங்களில்(1940 முதல் 1960 வரையிலான ஆண்டுகள்), கேரளா ஆலப்புழா குட்டநாட்டுப் பகுதி மற்றும் விவித சமூக அடுக்குகளைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையை பற்றிய கதையிது.

இந்த திரைப்படம், கதைக்கரு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை மற்றும் திரை நுட்பங்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து அழகிய பிரேம்களுடன் இத்திரைப்படம் பெண்மையின் பயணத்தை விவரிக்கிறது.

இசை தாமஸ் காட்டுகடப்பள்ளி, ஒளிப்பதிவு ராதா கிருஸ்ணன் எம்.ஜெ,  எடிட்டிங் பி. அஜிதகுமார், கலை மார்தாண்டம் ராஜசேகரன் செய்ட்துள்ளனர்.  55 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் சிறந்த இயக்குநராகவும், பி. அஜித்குமார் சிறந்த எடிங்க் விருதையும் பெற்றார்.

முதல் கதை ‘ ஒரு சட்டத்தை மீறியதின் கதை!’


ஒருவனுக்கு மனைவியாக வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்யும் ஒரு தெரு விபச்சாரி குஞ்சிபென்னு (பத்மபிரியா) எதிர் கொள்ளும் பிரச்சினை தான் இதில்.  விபச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் போது கண்டிக்காத நீதிமன்றம், தன் காணவருடன் வாழும் போது விபசாரம்  குற்றம் என்ற பெயரில்  நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் காட்சியுடன் கதை முடிகிறது. இந்திய நீதி அமைப்பை கேலி பண்ணும் விதம் இக்கதை அமைந்திருந்தது.

கன்னி


குமாரி (கீது மோகன்தாஸ்)   ஒரு ஒரு ஏழைத் தொழிலாளி. தனது தகப்பன் சுகவீனமாக இருப்பதால் வீட்டை நடத்தும் பொறுப்பை மிகச் சிறிய வயதிலேயே ஏற்றுக் கொள்கிறார். இருப்பினும் மகள் கல்யாண வயதை எட்டுவதை தொடர்ந்து நாராயணன்(நந்து) என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர். நந்துவின் செய்லபாடுகள் வினோதமாக உள்ளது. மனைவியிடம் உரையாடக்கூட  விரும்புவதில்லை. நேரா நேரம் நல்ல சாப்பிட்டு விட்டு தனியாக தூங்கி விடுகிறார். சில காலம் கழிந்து  குமாரியை அவளது வீட்டில் கொண்டு விட்டு விட்டு திரும்ப அழைத்துச் செல்ல வரவேயில்லை. நாட்கள் செல்ல செல்ல, அவளுடைய குணம் சரியில்லாததால் தான் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன.  கடைசியாக குமாரி, தனக்கும் நாராயணனுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று சொல்வதுடன் கதை முடிகிறது.

சின்னு அம்மா

குழந்தைகள் இல்லாத சின்னு (மஞ்சு பிள்ளை) தனது அன்பான கணவருடன்  மிகவும் திருப்திகரமான  வாழ்ந்து வருகிறார்.  நீண்ட காலத்திற்கு முன்பே தமிழகத்திற்கு ஓடி போன நாராயண பிள்ளை, தமிழகத்தில் மனைவி மக்களுடன் வசதியாக வாழ்ந்து வருகிறவர். சொந்த ஊர் வந்த நாராயணன் தனது பள்ளி தோழி சின்னுவை  அவள் வீட்டில் தனியாக இருக்கும் போது சந்திக்க வருகிறான்.  சின்னுவிற்கு குழந்தை இல்லை என அறிந்ததும்,தன்னால் சின்னுவிற்கு ஒரு குழந்தை தரும் என ஆசை வார்த்தை கூறுகிறான். குழந்தை இல்லை என்ற அத்தனை ஏக்கவும், வருத்தவும் இருந்தும் கணவருக்கு நம்பிக்கை துரோகம் செய்த தகாத உறவில் தனக்கு ஒரு குழந்தை தேவை இல்லை என்பதை முடிவெடுத்து மறுக்கிறார்.

நித்ய கன்யகா(முதிர் கன்னி)

கடைசியாக, ஒரு நடுத்தர வர்க்கப் பெண் (நந்திதா தாஸ்) பற்றியது. அவரது தாய் , ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் அடங்கிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.  நந்திதாவை பெண் பார்க்க வரும் மணமகன் அவளது இளைய தங்கையை  விரும்புவதாகக் கூறி திருமணம் செய்து கொண்டு போகிறார்.

ஆண்டுகள் செல்ல செல்ல, மூத்த சகோதரனும் திருமணம் செய்து கொள்கிறான்.  பின்பு இளைய சகோதரியும் திருமணம் செய்து கொண்டு போக, தன் தாய் இறந்தவுடன், தங்கையின் குடும்பத்துடன் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள்.
அங்கு தங்கை குழந்தைகளை கவனித்துக்கொண்டு வாழ்க்கை சுமூகமாக போய் கொண்டு இருக்க , தங்கைக்கு அக்கா மேல் சந்தேகவும் பொறாமையும் பீடித்துக் கொள்கிறது. மனம் நொந்த நந்திதா தனியாக தனது வீட்டில் வாழ முடிவு எடுக்கிறார்.  தனிமையில் கள்ள உறவிற்கு ஒருவன் அழைக்கிறான்.  இறுதியாக தனது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மற்றவர்களின் விருப்பங்களை உடைத்து, சொந்தமாக வாழ முடிவு செய்தாள்.

இந்த படம் செப்டம்பர், 2007 இல் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, 51 வது லண்டன் திரைப்பட விழா,வியன்னா திரைப்பட விழா, சியாட்டில் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. . இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட விழாக்களில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளன.

மியாமி சர்வதேச திரைப்பட விழா அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுங்களைத் தேர்ந்தெடுத்தது.

 

24 Jun 2021

‘ஷெர்னி’ ஹிந்தி திரைப்படம்

 ‘ஷெர்னி’ ஹிந்தி திரைப்படம் நம்மை புலி சுவடுகளின் ஊடாக  காடுகளுக்குள் ஆழமாக அழைத்துச் செல்லும் , விறுவிறுப்பான, திரைப்படம். மனிதனுக்கும் மிருகங்களுக்குமுள்ள போர் மனிதனுக்கும் இயற்கைக்கும் நிகழும் போர் அதன் காரண காரணங்களுடன் துளியும் விரசமில்லாது மக்களை சென்றடையக்கூடிய திரைப்படம் இது.

அடர்த்தியான, பசுமையான காடுகள் ,  ஒளிரும் சூரிய ஒளியும் இருளும் விரவிக்கிடக்கும் காடுகளின் அழகு, புலியின் கர்ஜனையுடன் பறவைகள் மற்றும் விலங்குகளின் தனித்துவமான ஒலிகள், சுத்தமான நீரோடைகள், பூச்சிகளின் , இலைகளின் சலசலப்பு, - இவை அனைத்துக்கும் மத்தியில் அங்கு வாழும் காட்டின் மக்களும் வனபாதுகாவர்களின் வாழ்க்கையும் அடங்கிய மிகச்சிறந்த திரைப்படம்  'ஷெர்னி'.

இது மனித கதாபாத்திரங்களை மட்டுமல்ல,  அரசு திணைக்களத்தின் செயல்பாடுகள் குறித்தும், கிராமம் காடுகள் அதிலுள்ள வனவிலங்குகளின்  இருப்பின்  சிக்கலகளை குறித்தும் நுண்ணறிவை அளிக்கிறது இத்திரைப்படம்.

வழக்கமான பாலிவுட் திரைப்படங்களின்  ஆரவாரங்கள் இல்லாது ஆனால் விரசமல்லாத முறையில் அனைவருக்கும் காடுகளை பற்றி கற்றுக்கொடுக்கும்,  அதன் இயற்கை அழகியலுடன் சுவாரசியமான பல திருப்பங்கள் கொண்ட விருவிருப்பான திரைப்படம் என்றால் மிகையாகாது.

இத்திரைப்படத்தை  அமித் மசூர்கர் இயக்கியுள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதின் தேவையை பற்றிய மசூர்கரின் ஒரு ஆக்கபூர்வமான திரைப்படமாகும் இது.  அவ்வகையில்  ‘ஷெர்னி’ ஒரு தீவிரமான, புதிரான திரைப்படத்தை உருவாக்குகிறது.   இத்திரைப்படம்  கட்டாயமாக அனைவரும்  பார்க்க வேண்டியது.

அரசு, வனத்துறை அதிகாரிகள்,உள்ளூர் மக்கள், உள்ளூர் அரசியல், பழங்குடி மக்கள் வாழ்க்கை, அரசு அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கை என  சிக்கலான கதைகளை ஒரு வளமான காட்சி அமைப்புடன் சரியாக கோர்த்து தந்துள்ளார் இயக்குனர்.   ஆஸ்தா டிக்குவின் திரைக்கதை மிக நுணுக்கமானதும்  விரிவானதுமாகும்.  , ஹுசைன் ஹைட்ரியின் இசை படத்தின் கதைக்கு பொருந்தி போகிறது.

கேமரா ராகேஷ் ஹரிதாஸ்,  ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு அனிஷ் ஜான். இத்திரைப்படத்தை காண்பவர்களால்  காடுகளை காதலிக்காமல் விலகி நடக்க முடியாது.  காடுகளின் அழகு எளிதில் மயக்கி விடுகிறது. ஒரு காட்சியில்  வித்யாவின் உதவியாளர்களில் ஒருவர்  கூறுகிறார் “ நீங்கள் 100 முறை காட்டுக்குச் சென்று ஒரு முறை ஒரு புலியைக் கண்டிருக்கலாம் , ஆனால் புலி உங்களை 99 முறையும் கண்டு அவதானித்து இருக்கும்  என்பது  உறுதியாகும் என்கிறார்.  காடுகளில் யார் உயர்ந்தவர், காடுகள் யாருடையது,  காடுகளை பாதுகாக்க வேண்டியதின் தேவை என்ன என்பதை பழங்குடி மக்கள் தெரிந்தே வைத்து இருக்கின்றனர்.

 

ஒன்பது ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாத வன அதிகாரியான வித்யா வின்சென்ட்(வித்யா பாலன்)  மத்தியப் பிரதேசத்தின் காடுகளில் பிரதேச வன அலுவலராக (டி.எஃப்.ஓ )  பொறுப்பேற்கிறார்.  மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையிலான  மோதலை   சமநிலைப்படுத்தி உறவை மீட்டெடுக்க முடியுமா? என்ற கருத்தாக்கத்துடன் கதை  துவங்குகிறது.

வேலையில் பிரவேசித்ததுமே தன்னை காத்து பல சவால்கள் உண்டு என தெரிந்து கொள்கிறார்.   தனது வேலையை எவ்வளவு காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை.  ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் வித்யாவின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.  இருந்தாலும் மிகவும் சொற்பமான  சொற்களை உரையாடிக்கொண்டு  தனது வேலையில்  உறுதியாகவும் தீவிரமாகவும் செயலாற்ற ஆரம்பிக்கிறார்.  எத்தனை தடை வந்தாலும் அதை எதிர் கொண்டு முன்னேறுகிறார்.  தான் மிகவும் மதித்த தன்னுடைய மேலதிகாரியின் பொறுப்பின்மையை கண்டு  “உங்களை பார்த்து பரிதாபம் கொள்கிறேன் , நீங்கள்  ஒரு கோழை” எனக்கூறவும் தயங்கவில்லை.

வனத்துறையால் டி 12 என அடையாளம் காணப்பட்ட ஒரு புலியால்  கிராம ​​மக்களும் பண்ணை விலங்குகளும் இரையாக ஆரம்பிக்கின்றன. காடுகளால் சூழப்பட்ட கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு காடுகளில் மேற்கொள்ளும்  வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.   கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக இருக்கும் ஹசன் நூரானி (விஜய் ராஸ்),  கிராமக் குழுவின் உறுப்பினரான ஜோதி (சம்பா மண்டல்) , வனத்துறை கடைநிலை ஊழியர்களின் உதவியுடன் புலியிடம் இருந்து கிராம மக்களை மீட்டாரா?  புலியை உயிரோடு மீட்டாரா என்பதே கதை .

வித்யாவைப் பொறுத்தவரை, டி 12 ஐ உயிருடன் கண்டுபிடிப்பது மற்றும் கைப்பற்றுவது மிக முக்கியமானது,  உள்ளூர்வாசிகளின் உணர்வுகள், அரசியல்வாதிகள் கட்டியெழுப்பும் அழுத்தம், மேலதிகாரியின்  அணுகுமுறை என  புலியை பிடிப்பது  பெரும் சவாலாக மாறுகிறது.

இதனிடை காடுகளின் பாதுகாவலன் என தன்னை  தானே அழைத்துக் கொள்ளும் ஒரு அரசியல்வாதியின் கூட்டாளியான மிருக வேட்டைக்காரனான ரஞ்சனின் அத்துமீறல்கள்.  தான் வேட்டையாடிய புலிகளின் எண்ணிக்கையில் தன்னை பெருமைப்படுத்துக் கொள்ளும் அவனுடைய மனநிலை வித்தியாவை எரிச்சல் கொள்ளச்செய்கிறது.  புலியை சுட்டு கொன்று விட்டு எத்தனை அழகாக உள்ளது என்று கூறும் அவனின் வன்மம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது.  தாய் புலியை கொன்று விட்டாலும் அதன் இரு குட்டிகளை காப்பாற்றுவதுடன் கதை முடிகிறது.

வித்யா பாலன் ஒரு வித்தியாசமான , கச்சிதமான  மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை தருகிறார், ஒவ்வொரு காட்சியிலும் தனது கதாபாத்திரத்தின் அமைதியான உறுதியையும், ஆர்வத்தையும், மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். எந்தவொரு வியத்தகு செயலாக்கவும்  இல்லாமல், கோபத்தை பேசும் கண்களால் வெளிப்படுத்தி  சிறப்பாக நடித்துள்ளார்.  குறிப்பிட்ட  மிக சொற்ப காட்சிகளில் வந்தாலும்   நங்கியா (நீரஜ் கபி) தனது எதிர்மறை பாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் சிறப்பான முன்னுதாரணமாக அமையும்.

Sherni trailer

22 Jun 2021

பிக்கூ- சத்யஜிட் ரேயின் குறும் படம்

பிக்கூ என்ற குறும்படம்  குழந்தையின் மனதைப் பற்றிய ஒரு அற்புதமான ஆய்வு.  சிறுவர்களின் மனதை ஊடுருவும்  பெரியவர்களின் அபத்தங்கள் தான் இந்த குறும் படம்.

1980 ஆம் ஆண்டில், சத்யஜித் ரே திரைப்பட வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, ரேயை சுதந்திர திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளராக இருந்த ஹென்றி ஃப்ரேஸ் என்ற பிரெஞ்சு மனிதர்  ’பிரான்ஸ் 3’ என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலுக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்க அணுகினார்.  இந்த திட்டத்திற்காக, ரே தனது சொந்த சிறுகதைகளில் ஒன்றைத் தேர்வு செய்து   அதே ஆண்டில்,  பிக்கூவை உருவாக்கினார்.

ஆறு வயது  பணக்கார வீட்டு  சிறுவன் பிக்கூ .  முதல்நாள் இரவு தனது அப்பா,  அம்மாவிடம்  திருமணத்திற்கு புறம்பான உறவை பற்றி வாதிடுவதைக் கேட்க நேரிடுகிறது.   அவன் அம்மாவிற்கு அப்பா மேல் எந்த ஈடுபாடுமில்லை.  ஆனால் கணவரின் தகப்பனாருக்கு மருந்து எடுத்து கொடுக்கிறாள். கணவனின் துணியை தைத்து தனது கடமைகளையும் ஆற்றிக்கொண்டு இருக்கிறாள்.

படுக்கையில் இருக்கும் பிகூவின்  தாத்தா - இரண்டு மாரடைப்புகளில் இருந்து தப்பிய ஒரு வயதான மனிதர்.  அப்பாவி பிக்கூ கவனக்குறைவாக தனது தாத்தாவைப் பற்றி அவனது பெற்றோர்கள் உரையாடினதை  சொல்கிறான் தாத்தாவிடம்.   தான் குடும்பத்தின் மீது சுமை தவிர வேறில்லை என்பதை உணர்ந்து   தாத்தாவிற்கு மனம் நோக ஆரம்பிக்கிறது.

பிக்கூவின்   அப்பா  வேலைக்கு கிளம்பினதும் அம்மாவின் ஆண் நண்பனிடம் இருந்து அழைப்பு வருகிறது.  அடுத்த நாள் பள்ளி  விடுமுறை என்பதால் வீட்டிலிருக்கும் பிக்கூ தனதை தாயை சந்திக்க வரும் மாமா என்று அழைக்கும்  குடும்ப நண்பரை அவதானிக்கிறான்.சிறுவனுக்கு ஒரு படம் வரையும் நோட்டு புத்தகங்களுடன் வீடு வந்து சேர்கிறான் காதலன்.

அவனது தாயார் தனது நண்பர்  வந்ததும் உற்சாகமான பிகூவை வெளியே  தோட்டத்திற்கு சென்று அங்கு காணக்கூடிய அனைத்து பூக்களையும் வரைந்து வண்ணம் பூசுமாறு கூறுகிறார்.  அபர்ணாவைப் பொறுத்தவரை,  பாலியல் தேர்வுக்கான சுதந்திரம் வாழ்க்கையின் அடிப்படை என்று நமபுகிறவள்.  சிறுவனை படம் வரையக் கூறி வெளியே அனுப்பி விட்டு இருவரும் தனியறையில் சல்லபித்துக் கொண்டு இருக்கின்றனர்.   சிறுவன் தனக்கு கிடைத்த வண்ண  பென்சில்களில்  வெள்ளை நிறம் இல்லாததால் குழப்பம் அடைந்து;  தோட்டத்திலிருந்து தனது தாயை கத்தி கூப்பிட்டு, வெள்ளை பூவை வரைய கருப்பு பேன்சிலைப் பயன்படுத்துவதாக  தெரியப்படுத்துகிறார்.

அப்பாவி, குழந்தை பிகூவின் கேள்வி ஆழமானது குறிப்பாக அவரது தாயின் துரோகத்தின் பின்னணியில் இந்த கேள்வி அர்த்தச்செறிவானதும் ஆகும்.  ஏனென்றால் இங்கே ஒரு குழந்தை, கருப்பு நிறத்தை வெள்ளைக்கு பதிலாக  பயன்படுத்திக்கொள்வதற்கு முன் இருமுறை யோசிக்கவில்லை.  வயது வந்தோருக்கான உலகில் அத்தகைய செயலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறோம் .

இந்தச் சிறுவனின் கண்களில் வெளிப்படும் ஆழமான  மற்றும் அமைதியற்ற பெரும்பாலான சம்பவங்களின் முக்கியத்துவத்தை சிறுவன் உணரவில்லை.   உதாரணமாக, ஒரு குடும்ப நண்பரிடம் தனது தாயின் நடத்தை பற்றி பிகூவின் அப்பாவியான  விளக்கம், அவள் அந்த மனிதனுடன் ஒரு உறவு வைத்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

பிறகு தனது தாத்தா அறையில் போய் பார்க்கையில் தாத்தா இறந்து போனதையும் அவதானிக்கிறான். பிறகும் படம் வரைந்து கொண்டே இருக்கிறான்.   காதலனும் தனக்கு ஒத்துழைக்காத காதலியிடம் கோபப்படட்டு போய் விடுகிறான்.  மகனும் தாயை வெறுப்போடு பார்க்கிறான்.

திருமணபந்ததிற்கு  புறம் உறவு தேடும் பெண்கள் நினையான உறவுகளை மறந்து,  தங்களது குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியை இழந்து, பெற்ற குழந்தையின் முன்னும் சிறுமைப்பட்டு,  இயல்பான  மகிழ்ச்சி இல்லாது ஒடுங்கி போவதை காட்சிகள் ஊடாக  சொல்லியிருப்பார்.

காதலன்கள்  தங்களது இன்பத்திற்காக பெண்களை கட்டுப்படுத்தி பெண்கள் வாழ்க்கையில்  பிரச்சினையை உருவாக்குவதையும் காணலாம்.  கணவரும் பணம் ஈட்டும் அவசரத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் நபராக இருப்பதையும் சொல்லியுள்ளார்.

ஒரு பிரச்சினை, அதன் தளங்கள், அதன் தாக்கம், காரணம் என சத்தியஜித் ரே டிஜிட்டல் யுகத்திற்கு முன்பே பல கதைத் தளங்களையும் தொட்டு சென்று விட்டார்.

ஒரு பத்திரிகைக்கு சத்யஜித் ரே அளித்த பேட்டியில் , “பிகூ மிகவும் நுண்ணுணர்வு தாங்கின படம்.  இது ஒரு கவிதை , இது யாரையும்  குறை கூற முயலவில்லை. ஆனால்   ஒரு பெண்  திருமணத்திற்குப் புறம்பான உறவு பேணும் போது நம்பிக்கை இழந்தவளாக தன் குழந்தைகளின்  மென்மையான உணர்ச்சிகளைக் கூட மதிக்காதவராக கடின இதயம் கொண்டவ  இரக்கமற்றவராக இருப்பார்கள்.

ஆனால் இந்த கருத்துக்குகாக ரே விமர்சிக்கப்பட்டார். இந்த கருத்து வெறும் ஆண்களின் பார்வையிலுள்ள  கருத்து என்றனர்.

20 Jun 2021

அபூர் சன்சார்

சத்யஜித் ரே எழுதி இயக்கிய, 1959 ல் வெளிவந்த வங்காள மொழி திரைப்படம் ஆகும் அபூர் சன்சார்.  ’தி அப்பு’ முத்தொகுப்பின் மூன்றாம் பகுதி இது. (முத்தொகுப்பின் முதல் இரண்டு பாகங்கள் பதேர் பஞ்சாலி மற்றும் அபராஜிட்டோ.) பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் அபராஜிட்டோ என்ற பெங்காலி நாவலின் கடைசி பாதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.


அப்பு தன் தாயின் மரணத்திற்கு பிறகு தனிமையில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அப்புவின் நண்பன் புலு ஒரு உயர் வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இரு  நண்பர்களின் வாழ்க்கையின்  பார்வையும் வெவ்வாறாக இருந்தபோதிலும் அவர்கள் நட்பு தொடர்கிறது.  புலு, அப்புவின் கூர்மையான புத்திசாலித்தனத்திலும் நற்குணத்திலும் மதிப்புக் கொண்டவராக இருக்கிறார்.

புலு ஒருமுறை தனது உறவினர்கள் வீட்டு திருமணத்திற்கு அப்புவையும் அழைத்துச் செல்கிறார். திருமண நாளில், மணமகனுக்கு மன நோய் இருப்பது தெரிய வருகிறது. தந்தையின் எதிர்ப்பையும் மீறி மணமகளின் தாய் திருமணத்தை நிறுத்துகிறார். நடைமுறையில் உள்ள இந்து பாரம்பரிய கிராம வழக்கத்தின் படி, நியமிக்கப்பட்ட  நேரத்தில்  மணமகள் திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும்; இல்லையெனில் அவள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருக்க வேண்டியிருக்கும்.  இந்த இக்கட்டான சூழலில் அபுவிடம் மணந்து கொள்ள வேண்டுகின்றனர்.  முதலில் மறுத்தாலும் நண்பன் புலுவின் ஆலோசனையைப் பெற்று மணந்து கொள்ள ஒப்புக் கொள்கிறார் அப்பு.

 


ஒரு போதும் சந்தித்திராத அபர்ணாவை திருமணம் செய்து கொண்டாலும், அந்த உறவில் ஒரு ஒட்டுதலான உறவு உருவாகுகிறது.  அப்புவும்  தனிமையில் இருந்து விடுபட்டு அபர்ணாவுடன் கல்கத்தாவிலுள்ள தனது குடியிருப்பிற்கு  திரும்பும் அவர்களுக்கு இடையே ஒரு அன்பான உறவு மலரத் தொடங்குகிறது.


பணக்கார குடும்பத்தில் வளர்ந்தவரான அபர்ணா கணவனின் அன்பிலும்  காதலிலும் வறுமையிலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.  மேம்பட்ட வாழ்க்கையை வழங்க முடியாத நிலையாக இருந்தாலும், உண்மையான தீராத அன்பு அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை தருகிறது.  அபர்ணா வந்ததும் அப்பு இழந்த குழந்தைப்பருவத்தின் மகிழ்ச்சியை திரும்ப பெறுகிறார்.


தங்கள் மகன் காஜலைப் பெற்றெடுக்கும் போது, துரதஷ்டவசமாக,   அபர்ணா இறந்து விடுகிறார். அப்புவின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் மறுபடியும் சோகம் தாக்குகிறது.  இந்த நேரத்தில் அப்புவால் எளிதாக கடந்து வெளியே வர இயலவில்லை.  சுய பரிதாபம், அலைந்து திரிதல், வெறுப்பு, தனிமை  என துயர்மிகு வாழ்க்கையில் மூழ்கி போகிறார்.



முதல் கதை பதேர் பாஞ்சாலியில் ரயில்களை காண்பது அப்புவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அபராஜிட்டோவில் ரயில்  அப்புவைக் கவரவில்லை,  அதற்கு பதில் எரிச்சலை கொடுத்தது.   ஆனால் இறுதிப் படம் அபூர் சன்சாரில் ரயில் பயணம் சிலிர்ப்பை தருவில்லை.  வாழ்க்கையும் கொண்டாடும் படி இல்லை. ஆனால்  ரயிலை பயணங்களுக்கு சார்ந்து இருக்கும் சூழலில் இருக்கிறார்.

இரண்டாவது பாகத்தில் தாய் தனிமையில் இருந்தார்.  அபூர் சன்சாரில் அப்பு தனிமையில் அலைகிறான். தாயின் தனிமை போலல்லாமல், கைவிடப்பட்டதாக உணர்கிறார், தாய்க்கு வாழ்க்கை மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அப்பு உலகத்தையே வெறுக்கிறார்.

அப்புவை புத்திசாலியான மாணவனாக  கண்ட பார்வையாளர்கள்,  அபூர் சன்சாரில் ஒரு சிறிய குடியிருப்பில் வசித்து கொண்டு,  பொருத்தமான வேலை இல்லாது  ஒரு நாவலை எழுதிக்கொண்டு இருக்கும் கதாசிரியராக,  கிடைத்த  வாழ்க்கையில் திருப்தியடைந்து, தனது சுதந்திரத்தை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.

மனைவியின் மரணத்திற்கு குழந்தையே பொறுப்பு என எண்ணி குழந்தையை வெறுக்கும் அப்பு,  குழந்தயை சந்திப்பதை தவிர்த்து   தகப்பன் என்ற பொறுப்பை மறந்து பயணத்தில் நாட்களை கழிக்கிறார்.


அதே நேரத்தில் தாய் தகப்பனை இழந்த குழந்தை தனது தாய்வழி தாத்தா - பாட்டி வீட்டில் தறுதலையாக வளர்கிறது.  காஜலின் நிலையை கண்டு தாய் வீட்டு குடும்பத்தினரும் வருந்துகின்றனர்.

நண்பனின் வேண்டுதலுக்கு இணங்க, தன்னுடைய மகனை காண வருகிறார் அப்பு.  தன் சோகச்சுமைகளை களைந்ததாக தான் எழுதி வரும் காகிதைக் கட்டை மலைச்சரிவில் எறிந்து விட்டு   வாழ்க்கையின் யதார்த்ததை உணர்ந்து தனது மகனுடன் மீண்டும் ஒன்றிணைய முடிவு செய்கிறார்.

வெகுநாட்களாக தனது தகப்பனார் வருவார் என்று காத்திருந்த காஜல்,  தனது தகப்பனை  முதல் முறையாக பார்த்ததும், அவரை ஒரு தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை. தன் வெறுப்பை உமிழ்கிறான்.


இறுதியில், அவர் அப்புவை ஒரு நண்பராக ஏற்றுக்கொண்டு தனது தகப்பனுடன் கல்கத்தாவுக்குத் திரும்புகையில் அப்புவிற்கு  புதிதாக ஒரு வாழ்க்கை தொடங்குகிறது.

இத்திரைப்படத்தில் அபர்ணாவாக ஷர்மிளா தாகூர் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.  அப்புவாக நடித்த சௌமித்திரா சாட்டார்ஜியின்(Soumitra Chatterjee) இயல்பான நடிப்பை பற்றி எடுத்து சொல்லப்பட வேண்டியது. அவர் ஒரு சிறந்த ஒளிபதிவாளரும் கூட.

1959 ல் அகில இந்தியாவின் சிறந்த திரைப்படத்திற்கான ஜனாதிபதியின் தேசிய திரைப்பட விருது வென்றது.

லண்டன் திரைப்பட விழாவில்  பிரிட்டிஷ் திரைப்பட நிறுவன விருதுகள் பெற்றது.

1960 ல் சிறந்த அசல் மற்றும் கற்பனைத் திரைப்படத்திற்கான சதர்லேண்ட் விருது கிடைக்கப்பெற்றது.

14 வது எடின்பர்க் சர்வதேச திரைப்பட விழாவில் 1960 - சிறந்த வெளிநாட்டு படம் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (யுனைடெட் கிங்டம்) பரிந்துரைக்கப்பட்டவர் –

1962 - சிறந்த படத்திற்கான பாஃப்டா விருது பெற்றது.

32 வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான வரிசையில்  தேர்ந்தெடுக்க பட்டாலும் ஆஸ்கார் விருது பெறவில்லை.

1996 ஆம் ஆண்டில், தி வேர்ல்ட் ஆஃப் அப்பு மூவிலின் இதழின் "100 சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களில்" இப்படவும் சேர்க்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டில், திரைப்பட விமர்சகர் ரோஜர் ஈபர்ட் தனது "100 சிறந்த திரைப்படங்கள்" பட்டியலில் தி அப்பு முத்தொகுப்பை சேர்த்துக் கொண்டார்.

2002 ஆம் ஆண்டில், தி வேர்ல்ட் ஆஃப் அப்பு "தி நியூயார்க் டைம்ஸ் கையேடு டு எவர் மேட் 1,000 திரைப்படங்களுக்குள் இடம்பெற்றது.

2005 ஆம் ஆண்டில், தி அப்பு முத்தொகுப்பு டைம் பத்திரிகையின் ஆல்-டைம் 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

’அப்பு உலகம்’ உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தியது. கிரிகோரி நாவாவின் 1995 திரைப்படமான மை ஃபேமிலியின், இறுதி காட்சி அபூர் சன்சாரின் இறுதிக் காட்சியில் இருந்து நகல் எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜீன்-லூக் கோடார்ட், மற்றும் பால் ஆஸ்டரின் 2008 ஆம் ஆண்டு நாவலான மேன் இன் தி டார்க் ஆகிய படங்களில் ’தி வேர்ல்ட் ஆஃப் அப்பு’ பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அங்கு இரண்டு கதாபாத்திரங்கள் படம் பற்றி விவாதிக்கின்றன.

2012 ஆம் ஆண்டில் இந்த படம் சைட் & சவுண்ட் டாப் 250 பிலிம்ஸ் பட்டியலில்  235 இடத்தைப் பிடித்தது.

15 Jun 2021

அபராஜிட்டோ!

 சத்யஜித் ரே எழுதி இயக்கிய, அபராஜிட்டோ ,   பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் பெங்காலி நாவலான அபராஜிட்டோவின் கடைசி பாதியை அடிப்படையாக 1959 இல் வெளியான திரைப்படம்.  இது தி அப்பு முத்தொகுப்பின் இரண்டாம் பாகமாகும்.  முந்தைய படம் பதேர் பாஞ்சாலி (1955) முடிவடைந்த இடத்திலிருந்து இத்திரைப்படம் தொடங்குகிறது.

அபுவின் குடும்பம் வாரணாசியில், கங்கை நதிக்கு அருகில் ஒரு நகரில் குடியேறுகின்றனர்.  அப்புவின் தந்தை ஒரு பூஜாரியாக பணிபுரிந்து வர, தாயார் சர்பஜயா (கானு பாண்டியோபாத்யாய்) மற்றும் தந்தை ஹரிஹர் (பினாக்கி சென்குப்தா) ஆகியோருடன் வசிக்கிறான் பாலகன் அப்பு. பலபோதும் கணவரை இழந்த விதவைகளுக்கான பிரார்த்தனையில், பாடல்களில், சொற்பொழிவில் தனது தந்தை நேரம் செலவிடுவதை கவனிக்கிறான்.

அப்புவின் விருப்பம் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்பவரை அவதானிப்பது, நதிக்கரையில் நடக்கும் ஆசாரங்கள், மனிதர்களை கவனிப்பதில் கழிகிறது. இப்படி மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தில்  தகப்பனார்  ஹரிஹரின் திடீர்  மரணம் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.

ஒரு பணக்கார குடும்பத்தில் பணிப்பெண்ணாக தொடர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளார் அப்புவின் தாயார். ஆனால் அந்த வீட்டில் தன் மகனையும் வேலை செய்ய வைப்பதை கண்டு தனது மாமாவின் உதவியுடன் சொந்த  கிராமத்தில் உறவினர்களுக்கு அருகில் வசிக்க முடிவெடுக்கிறார்.


ஒரு பூஜாரியாக வேலை செய்து கொண்டு உள்ளூர் பள்ளியில் சேர்ந்து படிப்பில் சிறந்து விளங்குகிறான் அப்பு.  தலைமை ஆசிரியரும் அவன் மீது சிறப்பு அக்கறை காட்டுகிறார்.  உயர் கல்வி கற்க ஸ்காலர்ஷிப்புடன் கல்கத்தாவில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் சேர  தாயின் அனுமதி பெறுகிறான்.

அப்பு இல்லாத  வாழ்க்கை தாய்க்கு கடினமாக இருக்கிறது.  மகனின் நினைவாகவே  தாய்மையின்  மகிழ்ச்சி, தனிமை ஏக்கம் மற்றும் சோகம் ஆகியவற்றுடன் மல்லிடுகிறார் அப்புவின் தாயார்.  இதே நேரம் அப்பு நகருக்குச் சென்று, பள்ளி நேரத்திற்குப் பிறகு, ஒரு அச்சகத்தில் வேலை செய்யத் தொடங்குகிறான். படிப்பிலும் முழு கவனத்தையும் செலுத்துகிறான்.

தாய்க்கு,  மகனுக்கான ஏக்கமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன.  ஆனால் மகனுடைய படிப்பிற்கு தொந்தரவு ஏற்படாதவாறு தான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதையும் அப்புக்கு வெளிப்படுத்தவில்லை.  அப்பு தனது தாயின்  உடல்நிலை சரியில்லாததைப் பற்றி அறிந்ததும் கிராமத்திற்குத் திரும்புகிறான்.  ஆனால்  தாய் இறந்துவிட்டதைக் கண்டு மனம் உடைந்து போகிறான்.

அப்பு முன் இரண்டு கேள்வி எழுகிறது. தனது கிராமத்தில் பூஜாரியாக பணியை தொடர்வதா அல்லது நகரத்திற்கு சென்று கல்வியை  தொடர்வதா?  தாயின் சாம்படன் கொல்கத்தாவில் இறுதி சடங்குகளை செய்து கொள்கிறேன்  என்று மீண்டும் தனது பயணத்தைத் தொடங்குகிறான்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கும் மட்டுமல்ல, ஒரு வரலாற்றை பதிவது, கல்வியின் பெருமையை சொல்வது என ஒரு ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் அடங்கிய திரைப்படம் இது.

ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ரா, இத்திரைப்படத்தில்  ஸ்டுடியோ செட்களுடன் டிஃப்யூசர்களில் பவுன்ஸ் லைட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.

ரே 1958 இல் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான கோல்டன் கேட் விருதுகளையும், இந்த படத்திற்கான விமர்சகர்கள் விருதையும் வென்றார்.

இந்த படம் 1967 இல் டென்மார்க்கில் இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய அல்லாத திரைப்படத்திற்கான போடில் விருதை வென்றது.

. இது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான செல்ஸ்னிக் கோல்டன் லாரலை வென்றது.

லண்டன் திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் திரைப்பட நிறுவன விருதுகளில் இது FIPRESCI விருது மற்றும் விங்டன் விருதையும் பெற்றது.

இது வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் மற்றும் விமர்சகர்கள் விருது உட்பட 11 சர்வதேச விருதுகளை வென்றது.

இந்த படம் 1959 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த வெளிநாட்டு நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

13 Jun 2021

பதேர் பாஞ்சாலி

 சத்யஜித்ரே இந்திய சினிமாவில் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.   இவர்  ஒரு இந்திய பெங்காலி திரைப்பட இயக்குனர்.  20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக  அறியப்பட்டு வருகிறார். கலை மற்றும் இலக்கிய உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெங்காலி குடும்பத்தில் கல்கத்தாவில் பிறந்து, விளம்பர துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஒரு முறை தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்ற போது பிரெஞ்சு திரைப்படத் தயாரிப்பாளர் ஜீன் ரெனொயரைச் சந்தித்திருந்தார்.   பிற்பாடு விட்டோரியோ டி சிக்காவின் இத்தாலிய நியோரலிஸ்ட் திரைப்படமான சைக்கிள் தீவ்ஸ் (1948) ஐ லண்டன் பயணத்தின் போது  பார்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.  இந்த அனுபவம்   ரேயை சுயாதீன திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடச் செய்தது.

திரைப்படம், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உட்பட 36 படங்களை ரே இயக்கியுள்ளார். ரே ஒரு புனைகதை எழுத்தாளர், பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார்.  தவிர வெளியீட்டாளர், இல்லுஸ்ட்ரேட்டர், காலிகிராஃபர், இசை அமைப்பாளர், கிராஃபிக் டிசைனர் மற்றும் திரைப்பட விமர்சகர்.

அவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கி மகிழ்ந்தது.  ரேயின் முதல் படம், பதேர் பாஞ்சாலி, 1956 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனித ஆவண விருது உட்பட பதினோரு சர்வதேச பரிசுகளை வென்றது.  அபராஜிட்டோ (1956), மற்றும் அபுர் சன்சார் (1959) ஆகியவற்றுடன் தி அப்பு முத்தொகுப்பை உருவாக்கினார்.

ரேயின் முதல் திரைப்படமான பதேர் பாஞ்சாலி (1955) ஒரு எளிய குடும்பத்தின் கதை சொல்லியது.  கிராமத்திலுள்ள ஒரு ஹரி என்ற பூஜாரி.  வெளியூருக்கு வேலை தேடிச்செல்கிறார். வீட்டில் மனைவி, மகன், மகள் , ஒரு வயதான பாட்டி அடங்கிய சிறு குடும்பம் வறுமையால் தவிக்கிறது.

குழந்தை துர்காவும் வளர்ந்து வருகிறார்.  அடுத்தவர்கள் தோட்டங்களில் இருந்து தனது வீட்டிலிருக்கும் பாட்டிக்கு கொய்யாப்பழம் பறித்து வந்து வைக்கிறாள். வீட்டிலுள்ள பூனைக் குட்டிகளையும், கோழிகளையும் கவனித்து கொள்கிறாள். அத்துடன் தனது தாய் கொடுக்கும் சின்ன சின்ன வீட்டு வேலைகளையும் செய்து பழகுகிறாள். அந்த ஊரிலுள்ள மட்டுப்பாவு வீட்டிலுள்ள பெண் துர்கா கொய்யாப்பழத்தை திருடினாள் என்று தாயிடம் கோபப்படுகிறார். வீட்டிலிருக்கும் பாட்டியை, துர்காவின் தாயார் ”என் மகள் திருட, நீ தான் காரணம்” என்று கூறி திட்டுகிறார்.  முதிர்தாயும் கோபத்துடன் வெளியேறி விடுகிறார்.

பின்பு அப்பு பிறந்துள்ளான் என்று கேள்விப்பட்டதும் குழந்தையை பாராமரிக்க வந்து சேர்ந்தவர் இவர்களுடனே தங்குகிறார்.  துர்காவின் தாய்க்கு தங்கள் வறுமை ஒருபுறம்.  முதிய தாயை தங்கள் அரவணைப்பில் வைப்பது பெரும் பாரமாக படுகிறது. முதிர் வயது தாயும் ஒரு நாள் கடினமாக வெயிலில் பசிமயக்கத்தில் இறந்து விடுகிறார்.


அக்குடும்பத்திலுள்ள வறுமைக்கும் அப்பாற்பட்டு துர்காவும்   அவளுடைய தம்பி அப்புவும் அந்த கிராமத்தின் சூழலில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். துர்கா  தனது தம்பி அப்புவை மிகவும் பாசமாக பார்த்துக்கொள்கிறாள்.  இருவரும் இரயில் பார்க்க செல்வது, மழையில் நனைவது கிராமத்து குழந்தைகளுடன் விளையாட்டு என நாட்கள் செல்கிறது.


துர்கா இப்போது வளர்ந்து விட்டார். பக்கத்து வீட்டு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் போது தனக்கும் நடவாதா என ஏங்குகிறார். அந்த பணக்கார வீட்டில் ஒரு முத்து மாலை காணாமல் போகிறது.  துர்கா தான் எடுத்து இருப்பார் என அந்த வீட்டு பெண் பழிசார துர்காவை அவள் தாய் அடித்து விசாரிக்கிறார்.  துர்கா தான் எடுக்கவே இல்லை என சாதித்து விடுகிறாள்.



அடுத்து மழைக்காலம் துவங்குகிறது. துர்காவும் அப்புவும் மழை நனைந்து வீடு வந்து சேர்கின்றனர்.  துர்கா அந்த மழையில் காச்சல் வந்து இறந்து போய் விடுகிறார்.  அக்காவை இழந்த அப்பு தனிமையாகிறான்.

பட்டணத்திற்கு போன தகப்பன் மனைவி, மகளுக்கு துணிமணிகளுடன் வீடு  திரும்புகிறார். மகள் இறந்ததை அறிந்து மனம் உடைந்து,  கிராமத்து வீட்டை விட்டு விட்டு நகரம் நோக்கி நகர்கின்றனர்.


 பொருட்களை அடுக்கி வைக்கும் போது துர்கா திருடி ஒளித்து வைத்து இருந்த முத்து மாலை அப்புவின்  கைகளில் கிடைக்கிறது.  தன் இறந்து போன அக்காவின் கவுரவத்தை எண்ணி முத்து மாலையை,  யாரும் காணாது குளத்தில் எறிந்து விட்டு பெற்றோருடன் பயணத்தை தொடர்கின்றான்.

இத்திரைப்படத்தில் ரே கதை சொல்லிய விதம், ஒவ்வொரு சட்டத்திற்கும் கொடுத்த முக்கியம், கதையை காட்சிகள் ஊடாக நகத்தியது, சில குறிப்பிட்ட  படிவத்தை வைத்து காட்சிகளால் சொல்லிய விதம் எடுத்து சொல்லக்கூடியது.


கதையில் நாயகம் பிம்பமோ , எதிர்மறை கதாப்பாத்திரங்கள் வழியாக கதாநாயகன் கதை சொல்லாது ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையுடன் கதை நகர்ந்தது.

அறிவு சமூகமாக இருந்த வங்கத்தில் இருந்த வறுமையையும் சொல்லிய் படம் இது.

படத்தின் காட்சிகள் காண்பவர்களின் மனதில் அசை போட வைத்த வித்தைகள், கதையின் போக்கு, அதன் முடிவு, பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.  முக்கியமாக மனித உறவுகளை காட்டிய விதம், பாட்டிக்கும் பேத்திக்குமான பிணைப்பு, அக்காவிற்கும் தம்பிக்குமான அன்னியோன்னியம், குடும்பத்தின் வறுமையால் பெண்கள் பாதிக்கப்படும் விதம் என கதை இந்திய சமூகத்தின் வறுமை என்ற நோயை பற்றி இயல்பாக சொல்லி சென்றது.

 வாழ்க்கையில் ஒரு போது மறக்க இயலாத திரைப்படமாக மக்கள் மனதில் பதிந்து விடுகிறது பதேர் பாஞ்சாலி.

பிபுதிபூஷன் பாண்டியோபாத்யாயின் நாவலைத் தழுவி ரேயால் வரையப்பட்ட திரைக்கதை தான் மேற்கு வங்க அரசின்  தயாரிப்பில், வங்காள மொழி நாடகத் திரைப்படமாக வெளிவந்தது.   படத்தின் தயாரிப்பு செலவை சுருக்கும் விதம்  பெரும்பாலும் அமெச்சூர் நடிகர்களைக் கொண்டு, அனுபவமற்ற ஆனால் திறமையான குழுவினரால் எடுக்கப்பட்டது.

மிக முக்கியமாக, கதையோடு இசைந்த ரவி சங்கரின் கிளாசிக்கல் இந்தியன் ராகங்களைப் பயன்படுத்திய ஒலிப்பதிவு  படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தது.  எடிட்டிங் துலால் தத்தா.  சுப்ரதா மித்ரா ஒளிப்பதிவாளராக இருந்தார்.  பதேர் பாஞ்சலிக்கு ஸ்கிரிப்ட் என்பது  ரேயின் வரைபடங்கள் மற்றும் குறிப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்டது.  பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த வரைபடங்களையும் குறிப்புகளையும் சினமாதேக் ஃபிரான்சைஸுக்கு நன்கொடையாக வழங்கினார்.

8 Jun 2021

மலையாளத் திரைப்படம் Kala (கள)! ஒரு பார்வை - ஜோ

 

Kala ’கள’ என்பதை  தமிழில் களைதல் எனப் பொருட்படுத்தலாம்.. மலையாளத்திரைப்படம்  ’கள’(Kala) பார்வையாளர்களிடம்  களையக்கூறுகிறது.  படித்தவன், பன்பானவன், பணக்காரன் என்ற ஈகோக்களை களைய சொல்கிறது இத்திரைப்படம்.

தன்னை மட்டுமே சிந்திக்காது, தன்னை சுற்றியுள்ள மனிதர்களை, இயற்கையை, மிருகங்களை எல்லாவற்றையும் பரிவுடன் பார்க்க கூறுகிறது. ஹீரோ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் சீரோ ஆகுவதும், ஒன்றுமே இல்லாதவன்,  தாழ்ந்த இனம் என்று நினைத்துக்கொண்டு கீழ்மைப்படுத்தப்பட்டவன் வெற்றிக்களிப்புடன் நாயகனாக மாறுவதுமே ’கள’ திரைப்படம்.

இயக்கம் ரோகித் வி எஸ் , திரைக்கதை ரோகித் மற்றும்  புஷ்கரன், இசை டான் வின்சென்று, ஒளிப்பதிவு அகில் ஜோர்ஜ், படத்தொகுப்பு சமன் சாக்கோ என ஒரு இளைஞர்களின் கூட்டுப்  படைப்பு.

பொதுவாக கதாநாயகன் ,  சமூகத்தை, நபர்களை திருத்தும் படியாக கதை அமைத்து இருப்பார்கள். இத்திரைப்படத்தில் அகங்காரம் மற்றும் நாசீசிஸ்டிக் ஆன முதன்மை கதாப்பாத்திரத்தை எதிர்மறை கதாப்பாத்திரம் திருத்துகிறது  . படத்தின் முடிவில் பிரதான கதாப்பாத்திரம் எதிர்மறையாவதும், எதிர்மறை கதாப்பாதிரம் கெத்தாக ஹீரோ மாதிரி நடந்து போவதுடன் கதை முடிகிறது.

இந்த திரைப்படத்தில் ஆங்கிலத்திரைப்படம் ஜோன் விக்கின் சாயல் பல இடங்களில் தெரிகிறது. தன்னுடைய நாயை கொன்றவனை பழிவாங்குவது போல இத்திரைப்படத்தில் நாயை இழந்தவன், தன் நாயை கொன்ற முதன்மை கதாப்பாத்திரம் ஷாஜியை பழிவாங்குவதே கதையாகும். முதல்நாள் மாலை முதல் அடுத்த நாள் மாலை வரும் வரும் நடைபெறும் சம்பவங்கலை கோர்வையாக தொகுத்துள்ளர்.

பொதுவாக நாயக பிம்பம் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்ளும் வல்லவர்களாகவும்இருப்பார்கள். இதில் நாயக இடத்தில் இருப்பவன் தன் சொந்த வீட்டில் திருடும் அளவிற்கு தரம் கெட்டவனாக இருப்பான்.

கதையின் பின்புலனாக அட்டப்பாடி( பாலக்காடு); தமிழ்நாடு கேரளா எல்லை.  அட்டபாடியிலுள்ள ஒரு நில உரிமையாளரின் மகன் ஷாஜி. கல்லூரி தோழியான காதல் மனைவி, ஒரு மகன் மற்றும் கறுப்பி என்ற செல்ல நாய் இவர்களுடன் பூர்வீக  சொத்தை கட்டிகாத்து வரும்  அப்பா லால்.  தன் தந்தையை வயதான நேரம் கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் அட்டப்பாடிக்கு குடி பெயர்ந்துள்ளனர்.   ஷாஜியின் மனைவிக்கு தோட்டத்திலுள்ள வாழ்க்கை அலுப்பாக இருக்கிறது.  மகனின் கல்விக்காக மறுபடியும் பெங்களூர் போக விரும்புகிறார்.

அந்த வீட்டின் அடித்தளமாக, குடும்பச் சொத்து. அதை அனுபவிக்கும் மகன், அதை ஆகமட்டும் கண்காணித்து வரும் அப்பா! அப்பாவை கண்டு பயப்படும் மகன். தந்தை நிலத்தின் நிறம் கறுப்பாக உள்ளார். மகன் ஆடம்பர, படித்த தலைமுறையை பிரதிநித்துவப் படுத்தும் வெள்ளை நிறத்தொலி. நீளமாக வளந்த முடியுடன் மிருகம் மாதிரியான பார்வையும், தான் பணக்காரன் என்ற அகபாவவும், கறுப்பு நாயும்.

அந்த நாய் திமிறும் போது இழுத்து பிடிப்பான்,  நாய் என்பதை ஷாஜியில் ஈகோவுடன் பொருத்துகின்றனர்.  அந்த ஈகோவின் திசையில் ஈகோவை கைவிடாது வாழும் ஷாஜி. தன்னை கருணையாக நடத்தவில்லை என்று குமுறும் ஷாஜி , தன் மகனிடம், “ நீ ஆண், அழக்கூடாது, நீ விரும்புவதை போராடி எடுத்துக்கொள் என்பான்.  அந்த குழந்தையோ அந்த பெரிய வீட்டில் அத்தனை பெரிய நிலங்களுக்குள், வெளியே வர இயலாது, தன் தந்தையின் கண்டிப்பு மட்டுமல்ல தாத்தாவின் கண் காணிப்புடன் வீட்டினுள்ளில் வளர்கிறது.

பணக்கார வீடுகளில் இருக்கும் பெண்களுக்கும் நிம்மதி இல்லை.  பிறந்த வீட்டுக்கு கூட போராடித்தான் போக வேண்டி வருகிறது. தன் மனைவியுடன் உரையாடும் போதும் சிகரட் புகையை அவள் முகத்தில் ஊதி தள்ளும் செயல்பாடு, அவளோ புகை பிடிக்க கணவனிடம் அனுமதி கேட்கும் மன நிலை, அவள் விரும்பாத போதும் காமத்தை கட்டுப்படுத்த இயலாது சயனிக்கும் ஷாஜி.   இப்படி கதை நகர்கிறது.

ஷாஜியின் தகப்பனார், உதவியாளர் மணியன் ஊடாக தோட்ட வேலைக்கு ஆட்களை வருவிக்கிறார்கள். பாண்டிகளை (தமிழர்களை)அழைத்து வந்துள்ளேன், ஊதியம் குறைத்து கொடுத்தால் போதும் என்று கூறிக்கொண்டு மூன்று பேரை அறிமுகப்படுத்துகிறான்.

அடுத்த ட்ராக்கில் வேலையாட்கள் நான்கு பேர். அதின் தலைமையில் உள்ள பழங்குடி மனிதன், இதுவெல்லாம் நமது நிலம், மலையாளிகள் வசப்படுத்தி வைத்து நாம் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளோம் என்கிறான்.

வீட்டிலுள்ளவர்கள் காலை உணவு எடுக்கின்றனர். அதே நேரம் வீட்டிற்கு வெளியே தொழிலாளர்களும் உணவு எடுக்கின்றனர். பணக்காரனுக்கும் ஏழைகளுக்குமான உணவு வேர்பாடுகள் காட்டப்படுகிறது.

 

வேலைக்கு வந்த தமிழர்களில் ஒருவன் மூறின் நாயை ஷாஜி கொலை செய்திருப்பான். அதற்கு பழிவாங்கவே தொழிலாளியை போன்று வந்திருக்கிறான் மூற். அவன் நிலத்தில் பன்றிகளை வேட்டையாடி தின்று பிழைத்து வருகிற ஒரு தமிழர்.  பன்றியை தனது ஈட்டியில் சொருகி சுமந்து செல்லும் அளவிற்கு வலுவானவன்.  ஆனால் ஷாஜி ஒரு காட்சியில் மூறை பன்றியை போன்று இழுத்து சென்று கொண்டு இருப்பான்..

கதையின் முடிவிற்குள் வந்து விட்டோம். ஷாஜி வெற்றி பெற்றானா தன்னை விட ஏழையான தன்னைவிட தாழ்ந்த இனமாக கருதப்படும் தமிழன் வெற்றி பெற்றானா?

மனைவி தகப்பன் முன்பே வைத்து ஓட ஓட அடித்து துவைத்து, என்னை விட்டால் போதும் என்று பணியும் மட்டும் சண்டை தொடர்கிறது. பணக்காரன், படித்தவன், மேல் இனம் இவர்களின் பொய்மை பேசும் , வஞ்சகமான ஈகோக்களை அடித்து நொறுக்கி, ஷாஜி வளர்க்கும் நாய்க்கும் விடுதலை தந்து தன்னுடன் அழைத்து செல்கிறான் மூற்.

ஷாஜி மனைவிக்கு தன் கணவர் மேல் இருந்த மதிப்பான அடையாளம் உடைக்கப்படுகிறது. தனது அப்பாவை இரத்தம் சொட்ட சொட்ட அடித்த மூறை ஷாஜி மகன் ஆராதனையுடன் பார்க்கிறான்.

இத்துடன் கதை முடிகிறது.

பார்வையாளனை இருக்கை நுனியில்  வைத்து படத்தை காட்டிய யுக்தி, ஒளிப்பதிவு, தொகுப்பு, அகலமான காட்சிதொகுப்பு  காட்சி  அழகியலுக்கு சான்று.

மலையாளி தமிழன் இன வேர்பாடு, ஏழைப் பணக்காரர்கள் அந்தரம் இவையை வன்மத்துடன் பார்த்துள்ளார்ளா? பார்வையாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

எதற்கு இத்தனை வன்முறை? நீண்ட சண்டைக்காட்சிகள்.  அரை மணிநேரம் இவர்களுக்குள் நிகழும் அடி தடி சண்டை  அலுப்பூட்டுகிறது. தமிழ் திரைப்படங்களில் கட்டுண்டு புல்லரிக்கும் மலையாளி பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காகவா? தமிழர்களை இளக்காரமாக அழைக்கும் ’பாண்டி’ என்ற சொல்லாடலை சமீபகாலத்திரைப்படங்களில் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

இரத்தம் தெறிக்க தெறிக்க எடுத்து வைத்துள்ள இத்தகைய திரைப்படங்கள் குழந்தைகள் பார்வையில் படாது இருந்தால் நல்லது

https://youtu.be/9b9MovPPewk

எம்.டியின் நாலுகெட்டு-புத்தக விமர்சனம்!

 நாலுகெட்டு எம்.டி வாசு தேவன் நாயரின் சாகித்ய விருது பெற்ற மலையாள நாவல் ஆகும். முதல் பிரசுரம் 1958ல் வெளிவந்தது.

 
இந்திய எழுத்தாளர்களில் மிகவும் மதிக்கப்படும் ஒருவரான எம். டி. வாசுதேவன் நாயர், ஆகஸ்ட் 15, 1934 அன்று கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கூடலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
 
 தனது நன்கு வடிவமைக்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் மலையாளத்தில் சிறந்து விளங்கினார். மென்மையான காதல் மற்றும் மனிதனின் சூழலால் விளைந்த இயலாமை, துன்பம் அதன் உணர்ச்சி தீவிரம் மற்றும் அன்பின் கணங்களை  சித்தரிப்பது வழியாக வாசகர்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டனர்.  தனது பல நாவல்களில் கேரளாவில் நிலப்பிரபுத்துவத்தை நுட்பமாக தனது எழுத்து ஊடாக எதிர்ப்பவராக இருந்துள்ளார்.
ஒரு மாஸ்டர் கதைசொல்லியான எம்.டி., 1995 ஆம் ஆண்டில் ஒரு எழுத்தாளரான மிக உயர்ந்த இலக்கிய விருது ஞானபீட புரஸ்காரத்தால் கவுரவிக்கப்பட்டார். அதற்கு முன்பு, அவர் கேரள மாநில மற்றும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி போன்ற பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
 
கேரள சாகித்ய அகாடமியின் தலைவர் பதவி மற்றும் துஞ்சன் மெமோரியல் டிரஸ்டின் தலைவர் உட்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பல முக்கியமான பதவிகளை அலங்கரித்துள்ளார்.   இவரது படைப்புகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளனர். கேரளாவின் மிகவும் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பிரதான சினிமா இயக்குனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
 
இந்த நாவலிலும் பிரதான கதாப்பாத்திரம் அப்புண்ணி என்ற சிறுவன்.   தனது தகப்பனை மூன்று வயதிலே இழந்து விடும் அப்பூ, தனது தாய் பாராமரிப்பில் ஏழ்மை நிலையில் வளர்ந்து வருகிறான். தாய் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். காதலித்து திருமணம் செய்தார் என்ற காரணத்திற்காக தங்கள் குடும்பத்தில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டவர். பெரிய குடும்பத்தில் வளர்ந்த பெண், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊர் பணக்கார வீட்டில் வேலைக்காரியாக வேலை பார்த்து வருவார்.
பணக்காரக் குடும்பம், பாரம்பரியம், ஜாதி என்று மேட்டிமை பாராட்டும் ஆட்களின் வீட்டின் அகத்திலுள்ள பிரச்சினைகளையும் அங்கு நடக்கும் போராட்டங்கள், போட்டி பொறாமைகள், பாலியல் அத்து மீறல்கள் மற்றும் அவர்களின் அநியாயமான வாழ்க்கை முறை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.

இத்தருணத்தில் சங்கரன் என்ற ஒருவரின் உதவிகளை தாய் பெற்று வருவார். இது மகனுக்கு பிடிக்காது . தாயை வெறுத்து தன் தாயின் குடும்ப வீட்டில் இருந்து கல்வி கற்று கொண்டு இருப்பான். சூழலுக்கும் இயலாமைக்கும் மத்தியில் தாய்மை   அல்லல்ப்படும் நிலை, தன் தகப்பனை கொன்றவனைக்கூட மன்னித்த மகனால் தன் தாயை ஏற்று கொள்ள இயlஅவில்லை. ஓரிரு நாட்கள் தன்னுடன் சல்லபித்த பெண்ணை நினைத்து உருகுவான். ஆனால் தன் தாய் இன்னொரு உறவை நாடுகிறார் என்றதும் மன்னிக்க இயலாத குற்றவாளியாகி  விடுகிறாள்.
 
ஒரு குழந்தை தன் பால்ய வயதில் வெறுப்பின், ஒதுக்குதலில், கேலி கிண்டல் பேச்சுக்கு மத்தியில் வளந்ததால், பிற்பாடுள்ள வாழ்க்கையிலும் தன்னை நேசிப்பவர்களை புரிந்து கொள்ள இயலாது; எல்லோரிடமும் வன்மம் கொண்ட மனிதராக மாறியிருப்பான் அப்புண்ணி.. மாளுட்டி அன்பாக ஒவ்வொரு முறை வரும் போதும் தெரிந்தே ஒதுக்கும் கல் நெஞ்சக்காரனாக இருப்பான் அப்பூ.
 
10 ஆம் வகுப்பு முடிந்ததும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் நல்ல வேலை கிடைக்கிறது.  பல வருடங்கள் கடந்த நிலையில் மறுபடி சொந்த ஊருக்கு வரும் போது தன் தாயின் குடும்ப ஆட்கள் வறிய நிலைக்கு ஆளாகியிருப்பதை அறிவான்.  தன் தாயின் இயலாமையை உணர்ந்து, தன் தாயை ஏற்று கொள்வதுடன்,  தங்கள் தாயின் பூர்வீக வீட்டை அப்புண்ணி வாங்கி, தன் தாய் மற்றும் தனது இரண்டாம் தகப்பனாருடன் வீட்டில் குடிபுகிர்வதுடன் கதை முடிகிறது.  நாலுகெட்டு என்ற கேரளப்பாணி பிரமாண்ட குடும்ப வீட்டை உடைத்து நமக்கான சிறு வீட்டு கட்டலாம் என்று தாயிடம் தெரிவிப்பான்.  வஞ்சகத்தின் பழைய நினைவுகளை அழித்து புது மனிதனாக உருமாறியிருப்பான் இளைஞர் அப்புண்ணி.
 

ஒன்ஸ் அகெய்ன்(Once Again)-திரைப்பட விமர்சனம்

 மனைவியை இழந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதர் சஜ்ஜன்  பெர்னாண்டஸ் (இர்பான் கான்) உடனான இலா (நிம்ரத் கவுர்) வின் காதலை சொல்லிய கதை ”தி லஞ்சு போக்ஸ்”. https://www.ceylonmirror.net/40318.html

அதன் தொடர்ச்சி போன்று இரண்டு நடுத்தர வயது மனிதர்களின் பிரிவு, விரக்தி, ஏங்குதல், வாழ்க்கையின் மூச்சுத் திணறலில் இருந்து ஆறுதலான கசப்பைக் கண்டுகொண்ட இரு மனிதர்களின் கதையை, இந்தியா பிறப்பிடமாக கொண்ட ஜேர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கன்வால் சேதி எழுதி 2018ல் வெளிவந்த திரைப்படம் ”ஒன்ஸ் அகெய்ன்”.

 

தாரா, கணவரை இழந்த ஒரு பெண், தனது மகனின் உதவியுடன் ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார்.   தனது குழந்தைகளின் நலனைக்கருதி கவுரமாக உழைத்து கட்டுகோப்பாக வாழ்ந்து வருகிறவர்.  விவாகரத்து செய்யப்பட்ட ஒரு வயதான நடிகர் அமர், 15 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கனவுகளின் நகரம் மும்பையில்  தனியாக வசிக்கும் ஒரு செல்வந்தர். மற்றும் பிரபலமான திரைப்பட நட்சத்திரம்.தாரா அமரைப் பார்த்ததில்லை; ஆனால் தாராவின் உணவகத்தில் இருந்து தினம் அமருக்கு உணவு சென்று கொண்டு இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஆரம்பித்த அவர்கள் தொலைபேசி உரையாடல்கள், ஒருவருக்கொருவர் மணிநேரங்களுக்கு பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர்கிறது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, அவர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அவர்களின் காதல் வெளி உலகிற்கு தெரிய வருகிறது.  இது தாராவின் மகனான தேவிற்கு பெரிய அவமானமாக உள்ளது. தாயின் தவறான நடத்தையாக எடுத்துக் கொள்கிறார். தாயும் மகனுக்குமான உறவு முற்றிலும் முறிந்து விட்டது. தான் எதிர்பார்த்த விடயம் முடிந்ததும், ஒரு கட்டத்தில் தாராவுடனான உறவு அமருக்கு தன் புகழுக்கான இழுக்கு என நினைக்க ஆரம்பிக்கிறார். தூய காதலுக்காக  எதையும் இழக்க தயாராக இருந்த தாரா உடைந்து போகிறார். ஒரு பக்கம் தான் நேசித்து பாசம் காட்டி வளர்த்த மகன் வெறுக்கிறார். அடுத்தோ மோகம் கொண்டு வீழ்த்தி விட்டு இனி தாராவில் இருந்து தப்பித்து போக முயலும் காதலன் அமர்.

 

தாராவாக ஷெபாலி ஷா மற்றும் அமராக நீரஜ் கபி ஆகியோர் கதாபாத்திரங்களாக உண்மையில் வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டு அற்புதமான நடிகர்களின் கைகளில் கிடைத்த  ஒரு நுட்பமான கதை. ஒவ்வொரு சட்டகத்திலும் அவர்களின் இயல்பான நடிப்பு அவர்களின்  திறமையை  நிரூபிக்கிறது.  தாராவின்  பெரிய அழகான கண்கள் அன்பைப் போலவே கோபத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அத்தனை சிறப்பு.

படத்தில் எல்லா நேரத்திலும் இசை இல்லை, பெரும்பாலும் மவுனத்தை நம்பியுள்ளதும் சிறப்பாக உள்ளது. திரை வசனங்களும் மிகக்குறைவு,  அர்த்தச்செறிவான சிறு உரையாடல்களுடன் கதை இதமாக நகர்கிறது.  இது யதார்த்த சினிமாவின் கூறுகள் அடங்கிய  ஒரு திரைப்படம்.  சிறந்த கேமரா வேலை: மும்பை இரவுகள் அழகாக பிடிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பரந்த காட்சிகள் பான் ஷாட்களூடாகவும்,  இரவில் தெருக்களில் சலசலப்பு, ஷெபாலியின் உணவக சமையலின் காட்சிகள் படத்தின் சிறந்த தருணங்கள். மிகவும் அமைதியான மனநிலையில் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல்கள் சிறப்பாக செய்யப்பட்டன. வித்தியாசமான நடனம் மாண்டேஜ்களை உள்ளடங்கிய திரைப்படம் இது. எடிட்டிங்கில் மற்றும் நடன அசைவுகளில் இன்னும் கூர்மையை கடைபிடித்து இருக்கலாம். இந்த படத்தில் காட்டப்படும் ஆழ்ந்த காதலின் காட்சிகள்,  சில தருணங்களில் பார்வையாளர்களை பேச்சில்லாமல் செய்து விடுகிறது.

தனிமையின் கருப்பொருளைக் கொண்ட படமாக இருந்தாலும் படத்தின் முடிவில் அமர்  தாராவை தேடி வந்தாலும் கெஞ்சி கேட்டுகொண்டாலும், நட்பை பேணிக்கொண்டு அவரவர் விருப்பங்களுடன் தனித்து பயணிப்பதே சிறப்பு என முடிவெடுத்தது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.  அமருடனான ஒரு சாதாரண உரையாடலில், கடலை பயப்படுவதாகக் குறிப்பிடும் தாரா, முடிவில் கடல் பயணம் மேற்கொள்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.  அமர்  எப்போதும் தான் வெல்ல வேண்டிய உயரங்களை பார்ப்பவர். சுய நல விரும்பியும் கூட!  ஒரே நேரத்தில் நல்லவராகும் கொடியவராக தோன்றும் கதாப்பாத்திரம்.

தாரா,  ஆழமான அன்பிற்கும் நேசத்திற்கும் மதிப்புக் கொடுத்து எங்கும் தங்கள் மரியாதையை இழக்காத வண்ணம், இனி ஒன்று சேர வேண்டாம் என முடிவெடுப்பது பெண்மையில் ஆளுமையை மிளிரச்செய்கிறது.  பெண்கள் பணத்திற்காகவோ, உணர்விற்காகவோ ஒரு போதும்  மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது என்று சொல்லிய படமிது.   வயதான காதலை பற்றிய அழகான சித்தரிப்பு கொண்ட இத்திரைப்படத்தை முழுமையாக ரசிக்கலாம்.  காதலில் வலிமை, பலவீனம், அன்பு மற்றும் மன்னிப்பும் உள்ளது என்று சொல்லிய திரைப்படம் இது.

https://www.firstpost.com/entertainment/once-again-movie-review-shefali-shah-neeraj-kabis-sweet-romance-would-have-been-richer-with-more-restraint-5084961.html