பிஷப் கால்டுவெல் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும்போதே, அதைச் சிலர் கிறிஸ்தவத்திற்கு எதிரானதாக சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், கிறிஸ்தவ சபையின் தவறுகளை விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உண்டு; அதைத்தான் கால்டுவெல் போன்றவர்களது வரலாறும் நமக்கு உணர்த்துகிறது. கால்டுவெல்லை நாம் விமர்சிப்பது என்பது இன்றைய மத அரசியல் பாதிரிகள், ஊழியக்காரர்கள், மிஷனரிகள் மற்றும் பாஸ்டர்களுக்கும் பொருந்தும்.
திருநெல்வேலியில் உயிருக்கு அச்சம் ஏற்பட்டபோது, கால்டுவெல் நாகர்கோவிலில் இருந்த தனது பங்களாவிற்குச் செல்லாமல் கொடைக்கானலில் தங்கிவிட்டார். தன் வாழ்நாளுக்குப் பிறகும் தான் எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால், நமது முன்னோர்களின் வரலாறு, அடையாளம், பண்பாடு ஆகியவை எவ்வித அக்கறையுமின்றி அழிக்கப்பட்டதை உணராமல், ஒருவித குருட்டு / உருட்டு மத அடிமைத்தனத்தில் கிறிஸ்தவ மக்கள் மூழ்கியிருப்பது வருந்தத்தக்கது. தமிழ் சமூகத்திடம் தன்மானமும் சுயமரியாதையும் வளர வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இத்தகைய வரலாற்றுத் தரவுகளை வாசித்துப் பகிர்கிறோம். ஆனால், கால்டுவெல்லுக்கு அடுத்த படியாக பெரியாரை ஏற்க கிறிஸ்தவ தலைமைகள் உள்ளது. ஆனால் கிறிஸ்தவ மக்கள் மதகும்பலின் அடிமைக் குழுவாகவே மாறி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
தென் தமிழகமும் மதமாற்றப் பின்னணியும்
தென்னகக் கடற்கரையைத் தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டு வந்த போட்டுகல் கத்தோலிக்க மன்னன் மாதிரியே, தமிழகத்தில் நிலபுலன்களுடன் செல்வாக்கு பெற்று விளங்கிய 'நிலைமைக்கார' நாடார்களையே ஆங்கிலேயர்கள் முதன்முதலில் மதமாற்றத்திற்கு இலக்காக்கினர். அவர்களே முதல் தலைமுறை கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். இவர்கள் அதிகாரத்தை ஆங்கிலேய அரசு எடுத்துக் கொண்டாலும் இவர்களை மதம் மாற்றினாலும் பண்ண வேலைக்கு பயன்படுத்த இயலாத சூழலில் நாடார்களில் ஏழைப்பிரிவை பனையேறி என்ற நிலையில் தாழ்வு மனநிலையை உருவாக்கி மதம் மாற்றி இன்றும் சபைக்கு அடிமைகளாக வைத்துள்ளனர்.
போர்த்துகீசிய ஆட்சியில் கத்தோலிக்கப் பாதிரியார்கள் கையாண்ட தந்திரங்களை இங்கிலாந்தில் இருந்து கொண்டே கற்றுத் தேர்ந்த மிஷனரிகள், ஆங்கிலேய வியாபாரிகளோடு இந்தியா வந்தடைந்தனர். அவர்களில் நெய்யூர் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் சோயர், நாசரேத்திற்குத் தனது மருத்துவப் படிப்பைத் துறந்து வந்து, உள்ளூர் பண்பாட்டை மதித்து மக்கள்பணி ஆற்றிய மார்க்காஷிஸ் (Margöschis) போன்றோரை நாம் நன்றியோடு நினைவு கூறுகிறோம். ஆனால் , "திராவிட அரசியலின் தந்தை" எனப் போற்றப்படும் கால்டுவெல்லை போன்ற ஆட்களை தொடர்ந்து புகழ்ந்து பாடுவதை நாம் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அன்றைய ஆங்கிலேய அதிகார மையத்தில் பங்கு வகித்த கால்டுவெல் போன்றோரின் உண்மையான நோக்கம் என்ன என்பதை நாம் வெளிக்கொணர வேண்டும். அப்போதுதான் இன்றைய கிறிஸ்தவத் தலைமைகளின் அரசியல் தொடர்புகள் புரியவரும்.
நில உரிமைகளும் சபை அதிகாரமும்
மதம் மாறிய நாடார் கிறிஸ்தவர்கள் சொத்து சபை மற்றும் ஊழியகும்பலிடம் போய் விட்டது. இயேசுவையே தீர்ப்பிட்டு சிலுவையில் அறைந்த பரிசேயர் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய பாதிரியார்களையும் மிஷனரிகளின் அடித்தளத்தையும் நாம் ஆராய வேண்டியுள்ளது.
தலைமுறை தலைமுறையாக நில உடைமையாளர்களாக இருந்த மக்கள், மதமாற்றத்திற்குப் பிறகு சபையின் தயவை மட்டுமே நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாடகைக்கு வந்து குடியேறிய கால்டுவெல், குட்டம் நாடார்களுக்கு வரி கொடுப்பதில் இருந்து விலகிக் கொண்டதிலிருந்தே, அவரது பண பலமும் ஆட்சி அதிகாரமும் வலுப்பெற்று இருந்ததை அறியலாம். மக்களின் நிலங்கள் ஆங்கிலேயர்களின் கைக்கும், பின்னர் சபையின் கைக்கும் மாறியதால், சொந்த நிலத்திலேயே மக்கள் அதிகாரம் அற்ற குடிகளாக மாறினர்.
இன்றைய கிறிஸ்தவப் பெண்களின் நிலை
இன்று கிறிஸ்தவக் குடும்பங்களில் பெண்கள் அரசுப் பணியில் இருப்பதால் ஓரளவு பொருளாதார வசதியுடன் வாழ்கின்றனர். ஆனால், அப்பணியைத் தக்கவைக்க அவர்கள் சொல்லொணா இன்னல்களைச் சந்திக்கின்றனர். தொடர் இடமாற்றம், குடும்பங்களை உடைக்கும் அச்சுறுத்தல் எனப் பல இன்னல்களால் பெண்கள் தற்கொலை வரை தள்ளப்படும் அவலம் நிலவுகிறது.
கிறிஸ்த தனியார் துறையிலும் மதவாதிகளின் பிடியிலும் சிக்கித் தவிக்கும் பெண்களின் துயரத்தைக் கேட்க அரசு முன்வரவில்லை. நீதிக்காக நீதிமன்றங்களை நாடுவோரும், மனநோயால் பாதிக்கப்படுவோரும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக, ஆசிரியைப் பணியில் உள்ள பெண்கள் தங்களுக்குச் சாதகமாக நடக்காதபோது இடமாற்றம் செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர். இதனால் குடும்பங்களை இழந்து, கணவரைப் பிரிந்து வாழும் நிலை உருவாகிறது.
"நாங்கள் கல்வி கொடுத்ததால்தான் நீங்கள் ஆடை அணிந்தீர்கள், ஊதியம் பெறுகிறீர்கள்" என மிஷனரிகள் கூறிய கூற்றுகளையே சொல்லி இன்றும் பெண்கள் அவமதிக்கப்படுகின்றனர்.
வரலாற்றுச் சுரண்டலும் விழிப்புணர்வும்
இதன் பின்னணியைப் புரிந்து கொள்ள 500 ஆண்டுகால வரலாற்றை ஆராய வேண்டியுள்ளது. இங்குள்ள பெண்களைப் பற்றி கால்டுவெல் சில கருத்துக்களைக் கட்டமைத்து வைத்துள்ளார். ஆனால், அதைத் தட்டிக் கேட்கும் இடத்தில் இன்றைய ஆண்கள் இல்லை என்பது மட்டுமல்ல; இன்றைய ஆண்களும் தாழ்வு மனப்பான்மை, மது மற்றும் அடிமைத்தனத்தால் தங்கள் பெண்களைப் பாதுகாக்கும் திறனற்று நிற்கின்றனர்.
சென்னை, மயிலாப்பூர், சிதம்பரம், தஞ்சாவூர் மற்றும் தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை எனப் பாரம்பரியப் பண்பாட்டு மையங்களையே ஆங்கிலேயர்கள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தி உள்ளனர். இதுவரை தமிழகத்திற்கு வராத சாராதக்கர் போன்றவர்கள் எவ்வாறு இங்குள்ள மிஷனரிகளுக்கு வழிகாட்டினார்கள் என்பதையும், எமி கார்மைக்கேல் (Amy Carmichael) போன்றோரின் எவாஞ்சலிக்கல் பரப்புரைகள் நாடார் பெண்களிடையே எப்படிச் செயல்பட்டன என்பதையும் வாசிக்கும்போது, ஆங்கிலேய ஆட்சியின் நுட்பமான திட்டமிடல் புரியும். அதேவேளையில், இந்தியரான தஞ்சாவூர் மராட்டிய பெண்ணான அன்றைய கிளாரிந்தா எழுதிய உண்மையான வரலாற்றுப் பதிவுகள் நமக்குக் கிடைக்காமல் போனது சிந்திக்கத்தக்கது.
மதமாற்றத்தால் நமது தொன்மையான பண்பாட்டுப் பிடிப்பையும் அறிவையும் நாம் இழந்துள்ளோம். 1000 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் கட்டிய கோயில்களை மிஷனரிகளின் போதனையை நம்பி நாம் புறக்கணித்தோம். ஆனால், அதே வெள்ளையன் நமது கோயில் வரலாறுகளையும் சமூகத்தையும் நன்கு கற்றுக்கொண்டே நம்மைத் தன் பிடியில் வைத்திருந்தான்.
ஐரோப்பிய நாடுகளிலோ அல்லது இயேசு பிறந்த இஸ்ரேல் மண்ணிலோ கூட நடக்காத வகையில், மிஷனரிகள் உருவாக்கிய கதைகளை நம்பி மக்கள் வாழ்கின்றனர். இத்தகைய தாழ்வு மனப்பான்மையை மீண்டும் பெண்களிடம் புகுத்தவே 'முலை வரி' மற்றும் 'மேலாடைப் போராட்டம்' போன்ற வரலாறுகளைப் பாதிரியார்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். கோஷா அணிந்து பல்லக்கில் பயணித்த உயர் சமூகப் பெண்களைப் பற்றிய உண்மைகளை மிஷனரிகள் வெளிப்படுத்துவதில்லை.
இன்றைய மிஷனரிகளின் ஊழல் அதிகாரம் எல்லாம் ஆங்கிலேய/ போர்டுகல் அதிகாரத்தின் நீட்சி தான். மிஷனரிகள் கற்றுக் கொடுத்த கதைகளிலிருந்து விடுபட்டு, தமிழ் சமூகங்கள் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தொடர்ந்து வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்து வருகிறோம்.
