19 Jun 2026

நாட்டின் உயர்கல்வி அமைப்பு

 நாட்டின் உயர்கல்வி அமைப்பே, நாட்டின் உயர்ந்த பொறுப்புகளில் அமரப்போகும் நிர்வாகிகள், கல்வியாளர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்களை உருவாக்கும் அடித்தளமாக உள்ளது. அந்த அமைப்பின் மையத்தில் இருப்பவர்கள் பேராசிரியர்கள்.


ஆனால், ஒரு பேராசிரியருக்கு அநீதி நடந்தால், பல கல்வி நிறுவனங்களில் நிலவும் மௌனச் சூழல் வேதனையளிக்கிறது. கூட்டங்களில் “யாருக்காவது கருத்து இருக்கிறதா?” என்று கேட்பார்கள். ஆனால் கருத்து தெரிவித்தால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக பெரும்பாலோர் அமைதியாக இருப்பார்கள். சுதந்திரமான சிந்தனையும், விமர்சன மனப்பான்மையும் வளர்க்கப்பட வேண்டிய இடங்களில் கூட, மௌனமே பாதுகாப்பான தேர்வாக மாறிவிடுகிறது.

ஒருமுறை, பத்து ஆண்டுகளுக்குள் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பதினாறு நாள் பயிற்சியில் கலந்து கொண்டிருந்தோம். பதினான்காம் நாள் காலை, ஒரு மூத்த பேராசிரியர் மரணமடைந்த செய்தி வந்தது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. “தேவைப்பட்டால் மதிய உணவு நேரத்தில் போய்விட்டு வாருங்கள்” என்றனர். அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து சென்று வந்து கடமையை முடித்தோம்.

மற்றொரு நாள், ஒரு பேராசிரியர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவியது. ஆனால் யாரும் அதைப் பற்றி பேசவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டவர்களும், கல்லூரி குடும்ப விழாக்களில் ஒன்றாக இருந்தவர்களும் கூட, எதுவும் தெரியாதது போல நடந்துகொண்டனர். காரணம், அவரைப் பற்றி பேசுவதையே நிர்வாகத்திற்கு எதிரான செயலாகக் கருதும் சூழல். பின்னர் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தாலும், பலர் வேறு வழியில் செல்வதைத் தேர்ந்தெடுத்தனர்.

ஒரு பெண் ஆசிரியைக்கு திடீரென பணி நீக்கக் கடிதம் வழங்கப்பட்டது. அந்த நாளிலிருந்து பலர் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டனர். அவருடைய குடும்பம், கல்வி கற்கும் குழந்தைகள், மாதம் கிடைத்த சம்பளத்தை நம்பி வாழ்ந்த வாழ்க்கை, எதுவும் கல்வியறிவு மிக்க சமூகத்தின் கவலையாக மாறவில்லை. அவர் மட்டுமல்ல, அவருடைய குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டது. இருந்தும் பெரும்பாலோர் மௌனமாக இருந்தனர்.

சமூக அக்கறை இல்லாமல், தனிப்பட்ட பாதுகாப்பும் பதவியும் மட்டுமே முக்கியம் என்ற மனநிலையில் வாழும் கல்வியாளர்களால், ஒரு சமூகத்தின் மனசாட்சி, அறம், மனிதநேயம் ஆகியவற்றை பாதுகாக்க முடியுமா?

அப்படி முடியாவிட்டால், அவர்கள் சமூகத்திற்கு எந்த வகையான தலைவர்களை உருவாக்கப் போகிறார்கள்? கல்வி என்பது வெறும் அறிவை வழங்குவது மட்டுமல்ல; நீதியுணர்வு, பொறுப்பு உணர்வு, மனிதநேயம் ஆகியவற்றையும் வளர்க்க வேண்டிய ஒன்று.

முன்பு மாணவர்கள் அநீதியைக் கண்டால் எதிர்த்துப் பேசுவார்கள். இன்று பல இடங்களில் அக்கறையற்ற மௌனம் நிலவுகிறது. தாய்மொழியையும், தங்கள் மண்ணின் அறத்தத்தையும் , சமூகப் பொறுப்புணர்வையும் இழந்த ஒரு தலைமுறையாக மாறிவருகிறது என்ற கவலை எழுகிறது.அதற்கு காரணம் அவர்கள் கண்டு கற்று தெளிவு பெற ஆசிரிய மாதிரிகள் இல்லை.

இப்போது பல கல்வி நிறுவனங்களில் பேசப்படுவது, “யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?”, “யார் எந்தப் பதவியைப் பெறுகிறார்கள்?”, “எப்படி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது?” என்பதுதான். கல்வி உலகமும் படிப்படியாக கார்ப்பரேட் மனநிலைக்குள் தள்ளப்பட்டு வருகிறது.

ஒருகாலத்தில் நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்கத் துணிந்த சில ஆசிரியர்கள் இருந்தனர். பொதுவாக அவர்கள் பணியில் அனுபவம் மிக்கவர்களாகவும், ஓய்வுபெற இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இன்று அந்த எதிர்ப்புக் குரல்களையும் பல நிர்வாகங்கள் மெதுவாக பலவீனப்படுத்தி விட்டன.

ஓய்வூதியமாக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் பெறும் நிலையிலும், “மீண்டும் வாருங்கள்; முப்பது ஆயிரம் ரூபாய் தருகிறோம்; ஆலோசகராக இருங்கள்” என்றால் பதவிக்காக ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கட்டும், குடும்பத்துடன் வாழ்வை அனுபவிக்கலாம் என்ற மனப்பான்மை குறைந்து வருகிறது.

பணம் வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் மனிதநேயத்தையும், சுயமரியாதையையும், சமூகப் பொறுப்பையும் விட பணமும் பதவியும் மேலிடத்தைப் பெறும்போது கல்வியின் ஆன்மா சிதையத் தொடங்குகிறது.

பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் இன்று போட்டியும் பொறாமையும் அதிகமாகக் காணப்படுகின்றன. “எத்தனை ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளோம்” என்பது பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த ஆய்வுகள் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றினவா? சமூகத்திற்கு ஏதேனும் நன்மை செய்தனவா? என்ற கேள்விக்கு பல இடங்களில் தெளிவான பதில் இல்லை.

ஒரு பல்கலைக்கழகத்தை கல்லூரியை அதன் கட்டிடங்களாலும் தரவரிசையாலும் மட்டுமல்ல, அது சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பாலும் மதிப்பிட வேண்டும். அறிவு உருவாக வேண்டிய இடங்கள், மனிதநேயம் மலர வேண்டிய இடங்கள், சில சமயங்களில் பணமும் பதவியும் மையமாகக் கொண்ட இடங்களாக மாறிவருவது காலத்தின் வேதனையான முரண்பாடாக உள்ளது.

எல்லாம் மாறும்.
கார்ப்பரேட் அதிகாரமும் மாறும்.
பணம் மற்றும் பதவி ஆசை மனிதநேயத்தை மாற்றியிருக்கும் இந்த நிலையும் மாறும்.
மனிதம் மீண்டும் மையமாக வர வேண்டியது அவசியம். அதுவே கல்வியின் உண்மையான வெற்றி.

சிறந்த பேராசிரியர் யார்?

சிறந்த பேராசிரியர் யார்?
ஒரு நாட்டின் உயர்கல்வி அமைப்பின் தரத்தை நிர்ணயிப்பவர்கள் பேராசிரியர்கள். அவர்கள் வெறும் பாடங்களை கற்பிப்பவர்களாக மட்டுமல்ல; எதிர்கால தலைமுறையின் சிந்தனை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வடிவமைப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, ஒரு சிறந்த பேராசிரியர் என்பது பட்டங்களும் கல்வித் தகுதிகளும் கொண்டவராக மட்டும் இருப்பதில்லை. அறிவு, கற்பித்தல் திறன், நேர்மை, பரிவு மற்றும் மாணவர்களும் சமூகமும் முன்னேற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வை ஒருங்கே கொண்டவராக இருப்பார்.
ஒரு சிறந்த பேராசிரியர் தனது பாடத் துறையில் ஆழ்ந்த அறிவும் தொடர்ச்சியான கற்றல் மனப்பான்மையும் கொண்டிருப்பார். சிக்கலான கருத்துக்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கும். மாணவர்களை பாகுபாடின்றி, நேர்மையுடன் நடத்துவதோடு, அவர்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயல்படுவார்.
கல்வி என்பது ஒருவழிப் போதனை அல்ல. மாணவர்களின் கருத்துக்களைக் கவனமாகக் கேட்டு, அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் கற்றல் சூழலை உருவாக்குவதே சிறந்த ஆசிரியரின் அடையாளமாகும். மாணவர்கள் அச்சமின்றி கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிப்பார். என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அல்ல, எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை கற்பிப்பதன் மூலம் சுயசிந்தனையையும் விமர்சனப் பார்வையையும் வளர்ப்பார்.
உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியரின் பணி வகுப்பறைக்குள் மட்டுப்படுவதில்லை. ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் ஈடுபட்டு புதிய அறிவை உருவாக்குவதிலும் அவர் பங்காற்ற வேண்டும். மாணவர்களிடையே ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் தூண்டி, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொறுப்பும் அவருக்கே உரியது.
அதேவேளை, கல்வி என்பது சமூகத்திற்குச் சேவை செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை உணர்ந்திருப்பார். ஒழுக்கநெறிகள், குடிமைப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் பல்வகைமையை மதிக்கும் பண்புகளை மாணவர்களிடம் வளர்க்க முயற்சிப்பார்.
கல்வித் துறையில் பரவலாக மேற்கோள் காட்டப்படும் ஒரு கூற்று இதனைச் சுருக்கமாக விளக்குகிறது: “சாதாரண ஆசிரியர் கூறுவார்; நல்ல ஆசிரியர் விளக்குவார்; சிறந்த ஆசிரியர் செய்து காட்டுவார்; மகத்தான ஆசிரியர் ஊக்குவிப்பார்.”
எனவே, ஒரு சிறந்த பேராசிரியர் என்பது மாணவர்களை அறிவாளிகளாக மட்டுமல்லாமல், ஒழுக்கமிக்கவர்களாகவும், சுயசிந்தனை கொண்டவர்களாகவும், சமூகப் பொறுப்புணர்வு மிக்க குடிமக்களாகவும் உருவாக்கத் தூண்டுபவராக இருப்பார். அவர்களின் பங்களிப்பே ஒரு நாட்டின் அறிவுசார் மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அமைகிறது.
இப்படி நினைத்து ஆகா மாபெரும் பணி செய்ய போகிறோம் என நினைப்போம். அதற்கான பயிற்சி என பலரை வைத்து பேச வைத்து உற்சாகப்படுத்துவார்கள்.
ஆனால் நிஜத்தில் பேராசிரியர் பாடத்திட்டம் சார்ந்து பாடங்களை கற்பிக்க மட்டும் செய்தால் போதும்.
மாணவனை படி என்று கட்டாயப்படுத்த கூடாது
மாணவன் வகுப்பை கவனிக்காவிடிலும் பேராசிரியர் கண்டு கொள்ளக் கூடாது. துணை முதல்வர்கள் என்ற பெயரில் உள்ள கண் காணிகளிடம் அனுப்பி விட வேண்டும்.
இதில் இரண்டு பிரச்சினை
ஒரு மாணவனை இன்னொரு நபரிடம் புறணி குற்றம் கூறி அனுப்புதல் என்பது ஆசிரியரின் இயலாமையை மாணவரிடமே சொல்வது போலவே இருக்கும். மாணவன் துணை முதல்வரிடம் செல்லும் போது அந்த நபருக்கு குறைந்த பட்ஷம் தன் அதிகாரம் சார்ந்த ஈகோ பூர்த்தியாகும்.
சொல்லப்போனால் ஒழுங்கீன மாணவனும் துணை முதல்வரும் பிற்காலம் தோளில் கை போடும் அளவிற்கு நட்பாகி விடுவார்கள். திரும்பி வகுப்பிற்குள் வரும் மாணவன் ஆசிரியையை மதிக்கவே மாட்
டான்.அப்போது ஆசிரியைக்கு ஒரே வழி மட்டுமே மிஞ்சும்.மாணவன் ஒழுங்கீனத்தை கண்டு கொள்ளாமல் தன் சுயமரியாதையை காப்பாற்றி கடந்து போவார்.
தொடரும்......
See less

பேராசிரியர்களுக்கான மரியாதையை குறைப்பது மாணவர்களா, நிர்வாகமா?

இன்றைய கல்விச் சூழலில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு குற்றச்சாட்டு என்னவெனில், "மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை" என்பதாகும். ஆனால் இந்தக் கருத்தின் பின்னால் இருக்கும் உண்மையை ஆராய்ந்தால், பல கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களை மாணவர்கள் மதிக்கும் சூழலையே கல்லூரி நிர்வாக அமைப்புகள் அனுமதிப்பதில்லை என்பதாகும்.
ஒரு பேராசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, அந்த நேரத்தில் வகுப்பின் ஒழுங்கும், கற்றல் சூழலும் அவருடைய பொறுப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். ஆனால் பல கல்லூரிகளில், நிர்வாக அதிகாரிகள் துணை முதல்வர் கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களை வகுப்பு தோழர்கள் முன்னிலையில் கண்டித்து , வெளியே அழைத்துச் செல்வது நடைபெறும். இதனால் வகுப்பை நடத்திக் கொண்டிருக்கும் பேராசிரியரின் அதிகாரமும் மதிப்பும் மாணவர்களின் பார்வையில் பாதிக்கப்படுகிறது. வெறும் ஒரு வேலைக்காரி ஆசிரியை என்று தான் மாணவர்கள் மனதில் பதியும்.
இத்தகைய தருணங்களில், மாணவரின் நலனுக்காகவோ அல்லது வகுப்பின் ஒழுங்கைக் காக்கவோ பேராசிரியரால் கருத்து தெரிவிக்க முடியாத நிலை உருவாகிறது. தனது வகுப்பறைக்குள் தனது அனுமதியின்றி நடந்த தலையீட்டின் முன் அவர் அமைதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் விளைவாக, மாணவர்கள் கல்வி அதிகாரத்தை விட நிர்வாக அதிகாரமே மேலானது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.
பல தனியார் கல்லூரிகளில் முதல்வர், துணை முதல்வர், டீன், இயக்குநர், ஒருங்கிணைப்பாளர் என பல அடுக்குகளைக் கொண்ட நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் கற்பித்தலே மையப் பொறுப்பாக இருந்தாலும், பேராசிரியர்கள் நிர்வாக வரிசையில் கீழ்நிலையிலேயே இருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. கல்வி நிறுவனத்தின் அறிவுசார் அடித்தளமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள், நிர்வாகத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றனர்.
இதன் தாக்கம் மாணவர்களின் மனநிலையிலும் பிரதிபலிக்கிறது. ஒரு ஆசிரியரின் அறிவு, கற்பித்தல் திறன், ஆராய்ச்சி பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையில் அல்லாமல், அவர் பயன்படுத்தும் வாகனம், அணியும் உடை, சமூகப் பின்னணி, பொருளாதார நிலை, சாதி அல்லது பிற வெளிப்புற அடையாளங்களின் அடிப்படையில் அவர்களை மதிப்பிடும் மனப்பான்மை உருவாகிறது. இந்தப் பார்வை தன்னிச்சையாக உருவாகவில்லை; கல்வியை விட அதிகாரத்தையும் பதவியையும் முன்னிறுத்தும் நிறுவன கலாச்சாரத்தின் விளைவாகவே அது வளர்க்கப்படுகிறது.
ஒரு கல்வி நிறுவனத்தின் உண்மையான வலிமை அதன் கட்டிடங்களிலும் நிர்வாகப் பதவிகளிலும் இல்லை; அறிவை உருவாக்கி பரப்பும் ஆசிரியர்களிடமே உள்ளது. பேராசிரியர்களின் சுயமரியாதை, கல்விசார் சுதந்திரம் மற்றும் வகுப்பறை அதிகாரம் பாதுகாக்கப்படாத இடங்களில், பாதிக்கப்படுவது ஆசிரியர்களின் நிலை மட்டுமல்ல; கல்வியின் தரமும் மாணவர்களின் கற்றல் அனுபவமும் ஆகும்.
எனவே, மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன், ஆசிரியர்களின் மரியாதையையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் சூழலை கல்வி நிறுவனங்கள் உருவாக்குகிறதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
See less
Ananthakumar Susaimanickam
வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் தனித்து இயங்குகிறார்கள். இங்கு நிர்வாகம் என்ன சொன்னாலும் மறுப்புத் தெரிவிக்காமல் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.