Showing posts with label சமூகம்-social. Show all posts
Showing posts with label சமூகம்-social. Show all posts

9 Mar 2018

மதிபிற்குரிய பேரா. கோபாலன் ரவீந்திரன் -இவர்கள் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை!



கடந்த இரு வாரங்களாக சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் கோபாலன் ரவீந்திரன் அவர்களை பற்றி ஏதோ மூன்று மாணவர்கள் கூறினார்கள் என கூறி  ஜூனியர் விகடன் நடத்தி வரும் தர்ம யுத்தத்தை  பற்றி நினைத்தால் புல்லரித்து போகின்றது. மீடியாவின் வேலை சிண்டு முடித்து விடுவதா? எவ்வளவோ ஆக்க பூர்வமான செய்திகள் சம்வங்கள் இருக்க, மாணவர்கள்  சிறுபிள்ளைத்தனத்தை  ஏதோ சுதந்திரப்போர்  போராட்டத் தியாகிகள்    போன்று கட்டுரை எழுதுவது தான் கேலி கூத்தாக உள்ளது

கல்வி நிலையங்களில் நடைபெறும் போட்டி பொறாமையின் பிரதிபலிப்பு எவ்வளவு கோரமுகமாக உள்ளது என்று நினைத்து ஒவ்வொரு கல்வியாளனும் வெட்கப்பட வேண்டியது அவசியமாகும்சக பேராசிரியரை அச்சத்திற்குள்ளாக்க என நினைத்து தங்கள் மாணவர்களையை பயண்படுத்துவது படித்து பட்டம் பெற்றவர்களின் கையலாகத்தனத்தையை வெளிப்படுத்துகின்றது.

அந்த மாணவர்கள் சொல்லும் குற்றச்சாட்டில் எந்த பதிரும் இல்லை என்பது முதுகலைப்பட்டம் முடித்தவர்கள் அனைவருக்கும் புரியும். பேரா கோபால ரவீந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு  அது நன்றாகவே விளங்கும்.

முதுகலைப்பட்டத்தில் பாட்த்திட்டத்திலுள்ளவயை அப்படியே மனப்பாடம் செய்து, தாளில் எழுதி மதிப்பெண் வாங்க நினைப்பது முட்டாள் தனத்தின் உச்சம். மேல் நிலை கல்வி என்பதே;  தேடி, கண்டு படிப்பது தான். கல்வியை வகுப்பறையில் மட்டுமே படிப்போம்; ஆசிரியர் வந்து சொற்பொழிவு ஆற்றினால் மட்டுமே படிப்போம் என்பது சுத்த மடத்தனமாகும்.  ஆசிரியர் வழி நடத்த,  வாய்ப்பை உருவாக்கி தர மாணவன் வாய்ப்பை பயண்படுத்தி தன் அறிவை வளப்படுத்த வேண்டும்.

முதுகலைப்பட்டத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சேர்ந்த போது  முதல் வருடம் பேராசிரியரின் மாணவியாக நானும்   இருந்தேன். என் வாழ்க்கையில் மறக்க இயலாத கல்வி நாட்கள் அது.  ஒரு போதி மரத்தினடியில் இருப்பது போல் கற்றோம்.

என் மகன் மூன்றாம் வகுப்பு போன போது, நான் முதுகலைபட்டத்திற்கு சேர்ந்தால் (படிக்கும் வயதை கடந்ததால்) பல்கலைகழகவளாகம் சிலபோது பதட்டத்தை, அச்சத்தை கொடுத்தது. என்னால் படிக்க முடியுமா?, தேர்வு எழுத இயலுமா என்ற மனநிலையில் இருந்த என்னை எந்த கலந்தாய்விலும்ஜோஸபின் எழுந்து கேள்வி கேளுங்கள் என உற்சாகம் ஊட்டியவர். என் எழுத்தை சிந்தனையை பட்டை தீட்டி தந்தவர். என் குறுகிய மன நிலையில் இருந்து வெளிகொணர உதவியவர். ஆற்பாட்டம் இல்லாது நாம் அறியாதே நம்மை வழி நடத்தும் பேராசிரியர் அவர்.

பேராசிரியருடைய ஒரு மணி நேர வகுப்பு என்பது மூன்று மணி நேர வகிப்பிற்கு ஈடாகும்.  அதில் வெட்டிக் கதை இருக்காது, ஊர் புரணி இருக்காது, மீடியா உள்ளடக்கம் மட்டுமே.  மீடியா என்பது  மக்கள் வாழ்க்கை, கலாச்சாரம் பண்பாடு என உணர வைத்தவர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அவருடைய சொற்பொழிவு நீளும். எல்லா மதங்களையும் கேள்விக்கு உள்ளாக்கி போகும். எல்லா கட்டமிப்பையும் உடைப்பது அவருடைய கருத்தாக்கம்.  பெரியாரையும் மார்க்ஸையும் கற்று தந்தவர்.. இரண்டாம் உலகப்போர் என்றால் ஹிட்லர் மட்டுமல்ல, மனித உயிர் பலி வாங்குவது இன்றைய போரால் மட்டுமல்ல சோழப்போர் வைணவ-சைவ யுத்தம் என பேராசிரியர் அழைத்து செல்லாத வரலாறு இருக்க போவதில்லை.

அதிலும் ஆச்சரியம் எல்லா மாணவர்களையும் பாகுபாடு அற்று நடத்தும் அவருடைய பாங்கு ஆகும். எந்த மாணவரிடமும் அதிகம் பேச மாட்டார், ஆனால் எல்லா மாணவர்கள் பெயர்கள், அவர்கள் வாழ்வியல் சூழல், உளவியல் தெரிந்து வைத்திருப்பார். எப்போது சந்தேகம் என்று சென்றாலும் சலிக்காது அதன் அடிப்படை வரை சொல்லி கொடுக்கும் பெரும் மனது படைத்தவர். அவருடைய பல்கலைகழக நேரம் என்பது வெறும் கல்வி நேரம் மட்டுமே அதில் அரட்டை இருக்காது, கான்டீன்  இருக்காது.


எனக்கோ சந்தேகம் ஓய்ந்த பாடில்லை. போரை பற்றி மதங்களை பற்றி கலாச்சாரத்தை பற்றி அறியும் உன்றுதலில் வாசித்த புத்தகங்களுடன் சென்று சந்திப்பேன். நான் என்றில்லை சந்தேகம் என எந்த மாணவர் வந்தாலும் அமர கதிரை கொடுத்து, புரியும் மட்டும் விளக்கி கற்று கொடுப்பார். ஆசிரியர் முன்பு அமரும் வாய்ப்பை கொடுத்தவர் பேராசிரியர் கோ. ரவிந்திரன் மட்டுமே.

பேராசிரியர் அறையில் நிதாந்த அமைதி மட்டுமே தவழும், அங்கு பேச்சுக்கு, சிரிப்பிற்கு இடமில்லை. அவருடைய மேஜை நிறைய புத்தங்கள் இரைந்து கிடக்கும். அருகில் ஒரு அலமாரையில் சந்தையில் கிடைக்கும் எல்லா மாத, வார இதழ்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரே இதழில் தமிழ் மற்றும் ஆங்கில என இரு மொழியில் வைத்திருப்பார். ஒரு நோட்டு புத்தகவும் பேனாவும் புத்தக அலமாரையில் இருக்கும். நாங்கள் எடுத்த புத்தகத்தை எழுதி வைத்து  விட்டு, எடுத்து வாசித்த பின்பு திருப்பி வைத்து விட வேண்டும். அவ்வளவே. வாசித்தவையை, புரிந்தவையை எழுதியும் கொடுக்க வேண்டும். நாம் எழுதி கொடுக்கும் அறியா தவறுகளையும் நிதானமாக வாசித்து கருத்து பகிர்வார். அந்த விளக்கத்தில்  அறிவும் ஞானவும் மட்டுமே மேல் ஓங்கி இருக்கும்.


பேராசிரியர் இங்கு இருந்த போதும்; சின்டிகேட் பதவிகளில் இருந்ததால் பல முறை வகுப்பிற்கு வர இயலாது.  இருப்பினும் வகிப்பிற்கு வரும்போது  மூன்று மணி நேரம் கூட தொடர்ந்து வகுப்பு நடக்கும்.  வகுப்பு மாணவர்கள் அல்லாது இருப்பினும் பேராசிரியர் வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால்  அனுமதிப்பார் 
அவருடைய சொற்பொழிவை கவனித்து கேட்க வேண்டும். அதன் உள்ளடக்கம் வலுவானதாக இருக்கும். எனக்கு சந்தேகம் தோன்றினால் குறுக்கே பாய்ந்து சந்தேகம் எழுப்புவேன். ஒரு போதும் முகம் சுளித்தது இல்லை, புரியும் வரை தெளிவு படுத்துவார்.


கற்பித்தல் என்பதை சொல்லிக்கொடுத்து படிப்பது மட்டுமல்ல  சுயசிந்தனையால் தேடி கற்று வலுபெறுவது என புரியவைத்தார்.

பேராசிரியர்,  தேர்வு நடத்தும் விதம் கூட வித்தியாசமானது பொதுவாக பேராசிரியர்கள் கேள்வித்தாளையும் பதில் எழுதும் தாளையும் கொடுத்து விட்டு காப்பி அடிக்கின்றோமா என  எங்களை ஆழ்ந்து கவனித்து கொண்டு கண்காணிப்பாளர்களை நியமித்து அவதானிக்கும் வேளையில்; எங்கள் கட்டுப்பட்டை எங்களிடமே தந்து எழுதி விட்டு பேப்பரை என் மேஜை மேல் வைத்து விடுங்கள் எனக்கூறி கடந்து விடுவார்

ஒரு முறை நாங்கள்; பேராசிரியர் கூறிய நேரம் வைக்காது, அடுத்த நாள் கொண்டு வைத்து விட்டோம் என அறிந்த போது; அன்று தான் முதலும் கடைசியுமாக எங்களிடம் கடிந்து பேசினார்.  கல்வி என்பது பட்டம் பெறுவது மட்டுமல்ல நேர்மையான தனி நபர்களை  உருவாக்குவது என திடமாக நம்பினார்.  மாணவர்கள் மது அருந்தும் பழக்கத்தை மிகவும் கடிந்துள்ளார். 'படித்த உங்களால் கூட  கட்டுப்பாட்டோடு வாழ இயலவில்லை என்றால் உங்களால் எப்படி ஒரு சமூகத்திற்கு நேர்மையான கருத்து பகிர முடியும்' என ஒவ்வொரு வேளையிலும் சிந்திக்க  வைத்தவர் .

பல்கலைகழக வளாகத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாங்கள் பங்கு பெற வேண்டும், பங்கு பெற்ற நிகழ்ச்சியை தொகுத்து எழுதி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. எங்கள் பார்வையை எங்கள் கருத்தை நெறிப்படுத்தியும் தந்து கொண்டு இருந்தார்.  

என் வலைப்பதிவு என்பது பேராசிரியரின் 'நவீன மீடியா' என்ற பாடத்தின் பாடதிட்டத்தில் மார்க்கு பெற துவங்கப்பட்டு, பின்பு வலைப்பதிவையே என் ஆராய்ச்சிக்கும் தளமாக தேர்ந்து சிறப்பாக முடித்தேன்.

இலக்கியவாதிகளுடன் உரையாட வாய்ப்பு அமைத்து தருவது ,  மக்களை சந்தித்து தகவல் சேகரிப்பது, சென்னை பல்கலைகழகம்  கருத்தரங்கில் பங்கு கொள்வது, உள்ளூர் ஊடகவியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என ஏட்டு கல்வியை உயிரோட்டமான கல்வி முறையாக மாற்றினார்.

என் ஆராய்ச்சியின் போது அறிமுகமான ஈழ தேச கவிஞர் மற்றும் ஊடகவியாளர், சென்னை வந்து படிக்க விரும்பிய போது நான் மாணவரின் தகவலை பேராசிரியரிடம் தெரிவிக்க; மாணவர் சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற காரணமாக இருந்தார். பின்தங்கிய தென் மாவட்ட  நெல்லை மாணவரை பரிந்துரைத்த போதும் பல்கலைகழக சேர்க்கைக்கு வாய்ப்பை கொடுத்தார்.  அவ்விதம் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் அவர்கள் மனித நேயத்தை கற்பிக்க மட்டுமல்ல வாழ்ந்தே காட்டி வந்தவர்.   

ஒரு பேராசிரியரை நேர்வழியாக தாக்க இயலாது என்பதால் 'கன்று குட்டி' மாணவர்களை ஆயுதமாக பயண்படுத்துவது மிகவும் கேவலமான, படித்த மேதாவிகளின் ஈனச்செயலாகும். மாணவர்கள் கூறும் ஒரு குற்றச்சாட்டு கூட உண்மையாக இல்லாது வன்மமாகவே தெரிகிறது.
 
பல போதும் கல்லூரி மற்றும் பல்கலைகழங்களில் பேராசிரியர்களை மாணவிகளை வைத்து புகார் கூறி ஒடுக்கி உள்ளனர், கள்ள அவதூறுகள் பரப்பி நசுக்கியுள்ளனர். இப்போதோ மைனாரிட்டி என்ற பெயரில் மாணவர்களை களம் இறக்கியுள்ளனர்.

மாணவர்களுக்கு நிச்சயமாக பேராசிரியரிடம்  பேச வாய்ப்பு இருந்திருக்கும். எல்லா வாய்ப்பையும் புறம் தள்ளி ஒரு நாடகம் போன்று சம்பவத்தை நகத்தி பேராசிரியரை அவமதிப்பதே அதன் உள்நோக்கம் வெளிப்படுத்துகின்றது. ஒரு ஆசிரியர் மாணவர் உறவு என்பது படிக்கும் காலத்தின் உடையது மட்டுமல்ல, வேலைபெற, பதவி உயர்வு, சில போது வாழ்க்கையில் அடிபட்டு நிற்கும் போதும் கூட தாங்கும் சக்தியாக படித்த கல்வி நிறுவனம், ஆசிரியர்கள் மாணவர்களுடன் இருப்பார்கள்.  

படிக்கும் போது இது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவது மாணவர்களின் எதிர் காலத்தை நிச்சயமாக பாதிக்கும். இவர்களை நம்பி ஆராய்ச்சி படிப்பிற்கோ வேலை தரவோ யாரும் முன் வர மாட்டார்கள். போராட்ட உணர்வு நியாயமான உணர்வு மனிதனுக்கு அவசியம். அதை இன்னொரு மனிதனை; அதும் தன்னுடைய குருவை அச்சுறுத்த என்பது மாணவர்களின் நல் வரும் வாழ்க்கைக்கு ஒரு போதும் பலம், அல்லது பலன் சேர்ப்பதில்லை. பின்புலனாக நிற்கும் நரி தந்திரம் பிடித்த பேராசிரியர்கள் தக்க நேரத்தில் ஓடி விடுவார்கள். வித்தையை கற்கும் இடத்தில் தன் பங்கை, தன் பலத்தை, தன் நிலையை, தன் வாழ்க்கையை உணர்ந்து படித்து பட்டம் பெறுவதே மாணவனுக்கு அழகு.

இந்த நிகழ்வுகள் ஒவ்வொரு நல்ல ஆசிரியருக்கும்  ஓர் அனுபவம். நவீன யுகத்தின் ஆயுதங்கள் கூட நவீனப்படுத்தபட்டுள்ள விதம்  அருவருக்க தகுந்ததாக உள்ளது. மாணவனே விலை போகாதே. ஒரு வேளை உன் தவறு உனக்கு புரிந்தால்  உடன் வெளியே வந்து விடு.

இந்தியா போன்ற ஏழை தேசத்தில் மத்திய அரசின் கீழ் வேலை நோக்கும் ஒவ்வொரு பேராசிரியரும் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50, ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். இவர்கள் பெறும் வசதிகள் எண்ணில் அடங்காதவை. ஒரு புறம் தனியார் நிறுவங்கண்களில் இதே தகுதியிலுள்ள பேராசிரியர்கள் 3 ஆயிரம் துவங்கி 7 அல்லது 10 ஆயிரம் பெறும் அவல நிலையே உள்ளது. இந்த சமூக அநீதியின் விளைவே இது போன்ற கழுத்தறுப்பு போட்டிகளால் வரும் சூழல்கள். படித்தவர்கள் திருந்த நினையாது எதுவும் மாறப்போவதில்லை.

எந்த அவதூறும் பேராசிரியர் கோபால. ரவீந்திரன் அவர்களை பாதிக்கப்போவதில்லை. பழுத்த பழ மரமான அவர் கம்பீரமாக எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்து கொண்டு அவர் வேலையில் மூழ்கியிருப்பார். ஆனால் எந்த அரசியலும் தெரியாதே வீழ்ந்து கிடக்கும் இந்த மாணவர்களை நினைத்து தான் 'இவர்கள் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை, இவர்களை பொறுத்தருளும் எங்கள் குருவே" என்று மட்டுமே கூற இயலும்.



12 Jun 2016

அன்பின் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை

விபத்து என்பது நிதம் நிதம் காணும் சகஜ  நிகழ்வாகி விட்ட சூழலில்,  விபத்து எதனால் நிகழ்கின்றது எவ்வாறு தவிற்திருக்கலாம்  என்ற சிந்தனையை விட  விதியுடன் இணைத்து நினைத்து நிம்மதி தேடவே விளைகின்றோம். 


இந்தியாவில் டெல்லிக்கு அடுத்து சென்னை விபத்து அதிகம் நிகழும் இடமாக கருதப்படுகின்றது. வாகனங்கள்  மோதுவதால் உருவாகும் விபத்தால் மணிக்கூறுக்கு 14 பேர் இறப்பதாக தரவுகள் கூறுகின்றன. ”ரோடு பாதுகாப்பு” என்ற தன்னாற்வ தொண்டின் கூற்றின் படி  ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒரு மனிதர் மரணித்து கொண்டு இருக்கின்றார். 

 NCRB ன் 2014 ஆம் ஆண்டு  கணக்கு ப்படி  நடைபெறும் 4 லட்சத்தி ஐம்பதானிரம் விபத்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் மரணித்து போக, நாலு லட்சத்திற்கும் அதிகமானோர் காயத்திற்கு உள்ளாகுகின்றனர். WHO வின் கணக்குப்படி கடந்த வருடம் மட்டுமே  2 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  இதில் மதியம், மாலை, நேரங்களில் தான் விபத்து அதிகம் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ள்ளது. 

எதனால் விபத்து என்பதற்கு அதிவேகம்,  போதையில் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம்,  இருக்கை பெல்ட் இல்லாது பயணிப்பது போன்ற காரணங்களை குறிப்பிடலாம். இதையும் தவிற்து பராமரிப்பற்ற ரோடு, செம்மையல்லாத விபத்தை உருவாக்கும் வகையிலுள்ள ரோடு உருவாக்கவும்  மற்றும் ஒரு சில காரணங்களே. . வாகன லைசன்ஸ் பெறாது ஓட்டுவது, சிறு குழந்தைகளை வைத்து ஓட்ட வைப்பது,  வாகனம் ஓட்டும் போது அக்களிப்பிலும் கேளிக்கையிலும் ஏற்படுவது என பல காரணங்கள் உண்டு.  

சமீபத்தில் இது போன்ற பொறுப்பற்ற ஒரு வாகன ஓட்டியால் பின்னால் இருந்து தூக்கி வீசப்பட்டு  தன் உயிரை இழந்தவரின் மனைவி என்ற நிலையில் ஒரு விபத்து என்பது எண்ணிக்கைகளில், ஆராய்ச்சியில் தரவுகளில் ஒதுக்கப்படுவது அல்ல. இதனால் பல குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகுவதை அவதானிக்கலாம். என்னவருக்கு விபத்தை உருவாக்கினவர் கூறின காரணம் ’தூங்கி விட்டேன்’ என்பதாகும்.  அவர் ஒரே வார்த்தையில் ’தூங்கி விட்டேன்’ என முடித்ததால் எத்தனை கனவுகள், எத்தனை சந்தோஷங்களை தூங்க வைத்து விட்டார் என வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நம்முடைய சமூக மாநில சூழலில் உயிர் இழைப்பயும் சந்தித்தது மட்டுமல்லாது இதற்கான சாற்றிதழ் பெற என அந்த குடும்ப உறுப்பினர்கள் அலைக்கடிக்கப்படுவதையும் கண்டு உணரலாம். சோகத்திலும் இது போன்ற நிலையை கடந்து வர மன வலிமை நிஜத்தை புரிந்து கொள்ளும் மனநிலையும் வேண்டும்

ஒரு கல்லூரியில் ஆசிரியையாக பணி புரிந்தும், என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மரணத்தை பதியவோ சாற்றிதழ் பெறவோ இயலவில்லை. முதல் காரணம் அறியாமை, யாராவது  நமக்காக எடுத்து தந்து விட் மாட்டார்களா என்ற  நற்பாசையே. தன் தேவைகள் உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களே  சாற்றிதழ்  பெற முயல்வதே சிறப்பாக இருக்கும். இது போன்ற  நெருக்கடியான  கட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள்  எளிதாக பெறுவது உபதேசம் மட்டுமாகவே இருக்கும். ஒரு இறப்பு சாற்றிதழ் பெறக்கூட ஐந்து நூறு  காந்தி தாத்தாவை கண்ணியமாக கண்ணில் காட்டும் சூழலே நம் அரசு அலுவலங்களில் நிலவுகின்றது. என்னவர் சம்பவம் நடந்த இடத்தில் மரணித்ததால் பிரேத அறிக்கை சாற்றிதழுடன்  மரண சாற்றிதழ் பெற இன்னும் சிக்கல் உருவாகியது. மரணம் மருத்துவ மனையில் நிகழ்ந்தால் மருத்துவ மனை நிர்வாகத்தின் கீழ் சாற்றிதழ் விரைவாக கிடைக்கும் சூழல் உண்டு. 

அடுத்து மரணித்தவருடைய வாரிசு சாற்றிதழ் பெறுவது. இந்த இரண்டு சாற்றிதழும் எல்லா தேவைக்கும் மிக முக்கியமானது. இறந்தவர் பெயரிலுள்ள கைபேசியை மாற்ற, சமையல் காஸ் பெயர் மாற்ற என  எல்லா தேவைக்கும் இரு சாற்றிதழும் மிக முக்கியமாகும்.  தற்போது இதை கைபற்றித்தர இடைத்தரகர்கள் உண்டு எனிலும் கையில் கிடைக்க  வெகுநாட்கள் காக்க வைக்கப்படுகின்றனர். 

இதையும் கடந்து பாதிக்க்கப்பட்ட்வர்களுக்கு கிடைக்க வேண்டிய அறிவுரைகள் தேவையான நேரம் தேவையானவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறுவதில்லை. 
எப்போதும் நம்முடன் வசித்த வாழ்ந்த மனிதர் மரணம்   அடையும் போது ஓர் பெரும் வெற்றிடம் நிலவுகின்றது. அதை ஈடு செய்ய யாராலும் முடியாது என்றாலும்   குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற சவாலை சந்திக்கின்றனர்.  இந்த தருணங்களில் தான் ஆறுதல்ப்படுத்த, அக்கறை உள்ளம் என்ற பெயரில் பல பல பயங்களை நம்பிக்கை இன்மையை விதைத்து செல்கின்றனர். அங்கு ஒரு தனிமையுடன் பயமும் பலவீனமும், பிடிப்பு இன்மையும் உருவாகின்றது. 

இனி ஒரு வாழ்க்கை உண்டு அதை வாழ்ந்தே தீர வேண்டும், தேவையற்ற அனுதாபம் காட்டி வருபவர்கள் நோக்கம் பல போதும் சரியானதாக இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை. முதலில் கவலைப்பட  நேரம் கொடுத்து விட்டு  பின்பு மீண்டு எழ பாதிக்கப்பட்டவர்களே முன் வர வேண்டும். யாரும் தரும் அனுதாபத்தால் வயிற்று பசியை போக்கிட இயலாது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. இது போன்ற தருணங்களில் மிக முக்கிய சொந்தங்கள் ஓடி ஒளிவதும்  பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் உரிமையையும் எடுத்து கொள்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முக்கிய தேவையை உணர அதை கிடைக்கப்பெற   செயலாக்கமாகும் முற்ப்போக்கானது.  மிக முக்கிய தீருமானங்கள்; விற்பது, உறவுகளை புதுப்பிப்பது, நட்புகளை புதிதாக சேர்த்து கொள்வது எல்லாமே நன்மையை விட தீமையை  விளைவிக்கும். அதனால் சம்பவம் நடந்து ஒரு சில வருடங்களுக்கு 
பல முடிவுகளை தள்ளி போட வேண்டும். விரும்பாதே கிடைத்த  தனிமையை பலன் தரும் வண்ணம் மாற்ற முயலவேண்டும் பாதிப்பிற்குள்ளான நபர்கள்.   

குறிப்பாக நல்ல நாட்களில் நம்மோடு சேர்ந்து பயணித்தவர்கள் சேர்ந்து உண்டவர்கள், நம் உதவியை பெற்றவர்கள் எல்லோரும் ஓடி வந்து உதவுவார்கள் என எதிர் நோக்கக்கூடாது. இருப்பினும் எதிர் பாரா உதவிகள் நமக்கு கிடைக்கும் அதை பயண்படுத்தலாம். எங்கள் வீட்டில் ஓர் பைக், கார் எங்கள் தேவைக்கு இருந்த வாகங்கள் அவர் விபத்துடன் இரண்டையும் இழந்தோம். உடன் பொது பேருந்தில் பயணித்து விரைவில் செல்ல வேண்டிய இடத்தை அடைய இயலாது மிகவும் துன்பத்திற்கு உள்ளானோம். என் மகன் நண்பன் அவன் இரு சக்கர வாகனத்தை மூன்று மாதம் கொடுத்து உதவினான்.


அடுத்த மனிதர்கள் செயல்களை பேச்சுக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பெரும் துன்பத்தையே விளைவிக்கும். எந்த சூழலிலும் பெறும் துயர்- பிரச்சினை இருப்பது போல் அதில் சில நல்ல பக்கங்களும் வசதிகளும் இருப்பதை கணக்கில் கொண்டு புதியதை நோக்கி நகருவதே பாதிப்புள்ளாவர்களில் அறிவான செயலாக்கமாகும்.  மற்றவர்கள் இத்தருணத்தில் அவர்கள் வஞ்சம் தீர்க்கவும் மறுபடியும் நம்மை ஒடுக்கி நொறுக்கவே முன் வருவர். 

நம் சமூக சூழலில் பாதிக்கப்பட்டவர் ஆணும் பாதிப்பிற்குள்ளாகினவர் பெண் என்றால் வாயில் அவல் போட்டு பேசவும் அம்போ என அவர்களை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்க உறவுகள்  நெருங்கிய உறவுகள் தயங்காது. இத கண்டு கொண்டால் முன் நோக்கி செல்லவும் இயலாது.    பதின்ம வயதில் பெற்ற பல நல்லொழுக்க உபதேசங்களை நாம் பெறுவோம். சிறப்பாக ஒரு பெண் என்ற நிலையில் என் குணத்தை கண்ணியமாக வைத்து கொள்ள மற்றவர்கள் உபதேசிப்பது பெரும் கேவலமாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் தூசி என எடுத்து தூக்கி போட்டு முன் செல்வதாகும் காலச்சிறந்தது. நம் வாழ்க்கை நம் கையில் இதில் மூன்றாம் நபருக்கு இடம் கொடுப்பதே சிறை தான். ஆனால் பாதிப்பிற்குள்ளான பல லட்சம் பெயரில் நானும் ஒருவர் என்ற புரிதலே அடுத்த கட்டத்தை நோக்கி நகர உதவும்.\

மற்று இழப்பில் கிடைக்கும் சாவகாசம், விபத்து மரண குடும்ப நபர்களுக்கு கிடைப்பதில்லை. . எனக்கான வருமான மார்கம், சமூக அந்தஸ்திற்கான வேலை, வளர்ந்த மகன்கள் உள்ள நானே பல இன்னல்களை நேர் கொள்ள வேண்டி வந்தது. தங்களுக்குள் உழலாது மிகவும் நேர்மறையானவர்கள், நம்மிடம் உண்மையான அன்பும் மரியாதை கொண்டவர்களிடம் அறிவுரை பெற்று நகர்வதாகும்  ஆக்கபூர்வமான செயல். . 

இருவர் பேசி முடிவு எடுக்கும் பல காரியங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கல், தன் சுயத்தை அன்பு செலுத்துதல், மதிக்கல், சுயமாக செயலாற்ற விரும்புதல் ஆகும் ஆகச்சிறந்த வழி.   சாம்பலில் இருந்து எழும் பக்‌ஷி போல் மனிதர்கள் எழ வேண்டும். வீழ்ந்து துவண்டு நொறுங்கி கிடப்பது அல்ல வாழ்க்கை மீண்டு வருவதே வாழ்க்கை. போனவர் முன்னே போக, பின்னால் கடமையை முடித்து போக சிறந்த வழியை தேடுவதாகும் யுக்தி. இதில் உணர்வை தள்ளி அறிவை பிடித்து கொள்ளும் போது எடுக்கும் முடிவுகள் எளிதாகின்றது.   

நானும் ஒடிந்த நொடிந்த தனித்த சூழல் கடந்து வர நல்ல நண்பர்கள் உதவினர். அரசு சாற்றிதழ் பெற்று தர, வாழ்க்கையின் நோக்கை உணர்த்த பல நண்பர்கள் உதவினர்.  என்னிடம்  இரக்கம் மொழியால்  பேசியவர்களை விட திடமான பல வழிகளை எடுத்துரைத்தவர்களே மனதில் நிற்கின்றனர்.  அவர்கள் யாவருக்கும் என்  நன்றிகள் மகிழ்ச்சிகள் பல  கூறி சாம்பலில் இருந்து பறந்து உயர்ந்த பீனிக்ஸ் பறவையை மனதில் கொண்டு எழுகின்றேன். 


பாபா அத்தான் இறந்த அன்று அவருக்கு சரியான அளவில் சட்டை கிடைக்கவில்லை என்ற உண்மை இன்னும் மனதை பிசைகின்றது. அவருக்கு செய்யும் பிராச்சித்தம் என்ற வண்ணம் அவர் பெயரால் உருவாகும் சமூக தொண்டு நிறுவனம் வழியாக  விபத்தால் உயர் இழந்தவர்களுக்கு சட்டை வேட்டியை எட்ட வைக்க வேண்டும்.   அகாலத்தில் கால யவனிகைக்குள் மறைந்த என்னவர் ஒரு 100 வருடமாவது வாழ்ந்தது போல் அவர் பெயர் சொல்லும் படி நல்ல சமூக அக்கறை கொண்ட செயல்களுக்கு வழி நடத்த வேண்டும். விபத்து நடந்த பின்பு விபத்தை எதிர் கொள்பவர்களுக்கு   பல விழிப்புணர்வு தகவலகள் , உடன் செய்ய வேண்டிய அணுக வேண்டிய அரசு அலுவலகம் , நிறுவனம் இவை பற்றி எல்லாம் நான் தெரிந்த அறிந்த தகவல்களை பகிர உள்ளேன். இந்த விடுமுறைக்கு நாங்கள் எங்கும் செல்ல வில்லை. என்னவர் நினைவுகளை புத்தக வடிவில் எழுதி முடித்துள்ளேன். விரைவில் புத்தகமாக வெளி  வ்ரும். கார் ஓட்ட கற்று விட்டேன். 

என் மாணவர்கள் வாழ்க்கைக்கு வெற்றி சேர்க்க உதவ வேண்டும், என் மகன்களை  நம்பிக்கை கொண்டவர்களாக, தைரியம் கொண்டவர்களாக உருவாக உதவ வேண்டும். 


இனி தனிமை இல்லை, தனிமை என நினைக்க நேரம் இல்லை, தனிமையிலும் பல இனிமை உண்டு.  விட்டு போன, மேற்கொள்ள வேண்டிய பயணங்கள் நிறைய உண்டு.  யார் அச்சுறுத்தலும் இல்லை. யாருக்கும் பதில் கொடுக்க வேண்டாம். குடும்பம், மாமியார், கடமை,  என்ற சிறை இல்லை. நான் என் மகன்கள், என் கடமை என ராஜாவும் ராணியுமாக என் விளையாட்டை  நானே ஆடி தீர்க்க கிடைத்த தருணத்தை சிறந்த  வழியில் கையாள உள்ளேன்.   நடந்ததும் நடப்பவையும் நடக்க இருப்பவையும்  நல்லவையே!!