16 Jan 2021

Is Love Enough Sir!


ஆவணப்பட இயக்குனர் ரோகனா கெராவின் இயக்கம் எழுத்தில் உருவான, நவம்பர் 2020ல் வெளியான ஹிந்தி திரைப்படம் இது. திரைக்கதை, கதாப் பாத்திரப் படைப்பு, கதைக்கரு மிகவும் தெளிவாக சமூக மேம்பாட்டுக்கு உதவும் விதம் அமைத்துள்ளனர்.

 

ரத்னா,   ஒரு கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த இளம் பெண். பட்டணத்தில் பணக்காரர் வீட்டில் வீட்டு வேலைக்காரியாக வேலை செய்து கொண்டிருப்பார். 

கணவரை இழந்த ஒரு பெண் தனக்கு பிடித்தமான  வளையல்கள் கூட அணிய இயலாத இறுக்கமான  சூழலிலுள்ள கிராமத்தில் இருந்து பட்டணத்தை நோக்கி வர வர பைக்குள் வைத்திருந்து வளையல்களை எடுத்து அணிகிறார்.  ஒரு ஊரின் கட்டுப்பாடு ரத்னா என்பவரின் ஆளுமையை சுயத்தை பாதிக்கவில்லை என்பதை இந்த ஒரு காட்சி அமைப்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். தன்னை நகரத்திற்கு அனுப்பியது கூட ஒரு ஆள் சாப்பாடுச் செலவை மிச்சப்படுத்தலாம் என்ற கணவர்  வீட்டுக்காரர்கள்   மன நிலை என அறிந்தும், அந்த இகழ்ச்சியான சூழலையும் தனது சுயசார்பான மேம்பட்ட வளர்ச்சிக்காக மாற்றி கொள்கிறார் ரத்னா.   கணவர் வீட்டுக்கும் நாலாயிரம் ரூபாய்  அனுப்புகிறார், தன் சொந்த தங்கையை படிப்பிக்கிறார். தன் தங்கை தன் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும், வரும் காலம் தானும்  தங்கையும் சேர்ந்து ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்த வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். தன் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கிடைக்கும் நேரத்தில்  தையற்கலையை கற்கவும்,  தன் லட்சியமான ஆடை வடிவமைப்பாளராக வர  வேண்டும் என்ற  விருப்பத்தை நிறைவேற்றவும் உழைக்கிறார்.

ஒரு ஏழைப் பெண், சமூகபுரக்கணிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண், பல இல்லாய்மைகள் மத்தியிலும்  தன்னுடைய புத்தி கூர்மையையும் உழைப்பையும், நேர்மையும் நம்பி அவளுடைய இலக்கை  எப்படி அடைந்தாள் என்பதே இத் திரைப்படம். தடைகள் சூழ்ந்து இருந்தாலும்  தைரியமாக, பொறுமையாக எதிர்கொண்டு இலக்கை அடையும் ஒரு சாதாரணப் பெண்ணின் வெற்றிக்கதை இந்த திரைப்படம். பெண் உரிமை என்ற கூக்குரல் இல்லாதே ஒரு பெண் எவ்வாறு தான் நினைத்த இடத்தை அடைந்தார் என்று கூறும் கதை. வாழ்க்கையின் அடிமட்டத்தில் வீழ்ந்து கிடக்கும் பெண்களுக்கும் நம்பிக்கையூட்டும் திரைப்படம் இது.

 

ரத்னா தன் நிலையை சேர்ந்த மனிதர்களுடன் கொண்டாட்டத்திலும் இயல்பான மகிழ்ச்சியிலும் வாழும் அழகு.    பேராசையற்ற வாழ்க்கை,  நினைத்ததை அடைய வேண்டும் என்ற வைராக்கியம் அதற்காக அவல் கைகொள்ளும் நேர்மையான முயற்சிகள் எதிர் கொள்ளும் அவமானங்கள் இப்படியாக செல்கிறது கதை. 

தான் வேலை செய்யும் வீட்டு முதலாளியிடன் கண்ணியமாக நடந்து கொள்ளும் விதம் , ஒரு கட்டத்தில் முதலாளி தன் திருமணம் தடைப்பட்டு போனதை எண்ணி உடைந்து இருக்கும் போது நம்பிக்கை பகிர்ந்த ஓரிரு வார்த்தைகள், முதலாளி இரக்கம் பரிவான மனிதராக இருந்தும் அவரிடம் தனக்கு எவ்வளவோ தேவை வந்தும்  பணம் வாங்கக்கூடாது என்ற நற்பண்பு, முதலாளிக்கு பிறந்த நாள் வருகையில் தானே வடிவமைத்த சட்டயை பரிசாக தருவது, முதலாளியும் தன் வேலையாள் பெண்ணின் முயற்சியை பாராட்டி தையல் இயந்திரம் பரிசாக கொடுத்தது இப்படி இவர்கள் நட்பும் சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பெரிய பங்ளாவில் தன் காதலின் பிரிவு  சோகத்துடன் இருக்கும் அஷ்வின் என்ற முதலாளி, அதே வீட்டில் தன் சிறிய அறையில் தனக்கான  வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கும் ரத்தினா.

அவள் வேலை பார்க்கும் வீட்டு முதலாளி இவளின் நல்ல குணத்தில் கவரப்பட்டு இவளை  திருமணம் செய்ய ஒரு கட்டத்தில் விரும்புகிறார்.  அந்த நபரை திருமணம் செய்து ஒரே நாளில் அவள் விரும்பினதை எல்லாம் பெற்றிருக்கலாம். தனது முதலாளியின் மதிப்பான சமூக வாழ்க்கையை எண்ணி பார்க்கிறாள், தன்னுடைய முதலாளியின் பெற்றோரை நினைத்து பார்க்கிறார்,  தன் கணவர் குடும்பத்தாரை, சமூகக் கட்டுப்பாட்டை நினைத்து பார்க்கிறார்.

 

தனக்கு அருகதை இல்லாததை வலுக்கட்டாயமாக எவ்வழியிலும் அடைய விரும்பவில்லை. தன்னை நேசிப்பவர்கள் மதிப்பு இழக்கக் கூடாது என எண்ணுகிறாள். அதே மாதிரி அவள் வீட்டை விட்டு போவதை விரும்பினதும் தான் நேசித்தவள் மறுபடியும்  கிராமத்திற்கு  போய் கஷ்டப்படக் கூடாது என நினைக்கிறார் பணக்காரர்  அஷ்வின்.

 

வீட்டுக்கு வந்த  நண்பன்,  நண்பனின் மனநிலையை புரிந்து கொண்டு  தன் நண்பனின் தவறை உணர்த்துகிறார்.  வீட்டு வேலைக்காரியை உன் தேவைக்காக பயண்படுத்தாதே என அறிவுரைக்கிறான். தன் தந்தையை சந்தித்து "அப்பா நான் திரும்பவும் அமெரிக்கா போக விரும்புகிறேன்" என்றதும். அப்பா காதிலும் கதை எட்டினதோ என்னவோ? "வேலைக்காரியுடன் படுத்தாயா என கேட்கிறார்?

மகன்: 'இல்லை, அவளில் காதல் கொண்டேன்" என்கிறான்.

அப்போ அமெரிக்கா போவதே நல்லது என்று அனுப்புகிறார் தந்தை..

அப்படியாக யாரும் யாருடைய தனிநபர் வாழ்க்கைக்குள் அத்து மீறி நுழையாத , பணக்காரர்களும் ஏழை நிலையிலுள்ள மனிதர்களும் தங்கள் நிலையை காரணம் காட்டி எதிரே இருப்பவர்களை சூழ்ச்சி செய்து தங்கள் தேவைக்காக பயன்படுத்தக்கூடாது என்று உரைத்த    நல்ல திரைப்படம் இது. தங்களின் தயவில் வாழும் மனிதர்களை காதல், அன்பு என்ற பெயரில் கூட அவர்கள் வாழ்க்கைக்குள் விளையாடக்கூடாது என்று அறிவுரைத்த திரைப்படம். 


 

வேலைக்காரியின் கதாப்பாத்திரம் அமைத்திருக்கும் விதம் சிறப்பு. பெண்ணியம் என்பது தன் காலில் தற்சார்பாக தலை நிமிர்ந்து வாழ்வது, தன்னுடைய வாழ்க்கை சுகங்களுக்காக எந்த வழியும் தேர்ந்தெடுக்காது இன்ன வழியே வேண்டும் என்று தனிமனித விழிமியங்களுக்கு  முக்கியம் கொடுத்த  திரைப்படம்.  ஏழ்மை என்றிருந்தாலும் அடுத்தவர்கள் விருப்பத்திற்காக தன் கொள்கையை விட்டுக்கொடுத்து,   தன்னை இழப்பது, அடுத்தவர்கள் விருப்பங்களுக்கு  உடன்படுவது அல்ல என்று கூறிய அருமையான கதைக்களம். வேலைக்காரியாக நடித்திருக்கும் திலோத்தமாவின் Tillotama Shome  நடிப்பு சிறப்பு.

 

திலோத்தமா தனக்கு ஆடை வடிவமைப்பாளராக வேலை கிடைத்ததை தெரிவிக்க அஷ்வின் வீட்டுக்கு வந்து சேர்கிறார். பூட்டிக்கிடந்த வீட்டை பார்த்து வருத்தம் கொண்டு நிற்கையில் அமெரிகாவில் இருந்து திலோத்தாமாவின் நலனறிய விரும்பி கைபேசியில் அழைக்கிறார் அஷ்வின்.  ’ சார்’ என்று எப்போதும் பதில் கொடுப்பவள்  ’ அஷ்வின்’ என்று பதிலுரைத்து தன்னுடைய அடையாளம் சார்ந்த காழ்புணர்வில் இருந்தும் மீண்டு முழுமையான ஆளுமை கொண்ட பெண்ணாக பரிணமித்த காட்சியுடன் திரைப்படம் முடிகிறது.   

 

போதிய வேகத்தில், மிகவும் சுவாரசியமாக நல்ல திரைக்கதை காட்சி அமைப்புகளுடன் இயல்பாக செல்கிறது. 

பெண்ணியத்தை அதன் வலிமையான பாதையில் கொண்டு சென்ற Lunch Box, Queen, Once Again வரிசையில் இத்திரைப்படமும் சேர்ந்து கொள்ளலாம்.

திரைப்படங்கள் என்பது மனிதனின் நுண்உணர்வை தூண்டிவிட்டு வெறும் கற்பனைக் கதையில் நகத்தாமல், இயல்பாக பெண்களின் வலிமையை எடுத்துரைத்த திரைப்படம்.

விவேக் கோம்பே (Vivek Gombe)ல் அஷ்வினாக மிளிர்கிறார். இசை  ராகவ் வகவ் Ragav Vagav  பாடல் வரிகள், மொஹித் சைஹான் Mohit Chauhan.



புரட்சி என்பது சமூகக்கட்டுபாட்டுகளை உடைப்பது அல்ல , வரி வரியாக வசனம் பேசுவது அல்ல காதல் கல்யாணம் என்று மேலும் சிக்கலுகளுக்குள் விழாது தங்களை மேம்படுத்தி அடுத்தவர்கள் நல்னையும் பேணுவதே என்ற சிறந்த கருத்துடன் முடிக்கப்பட்டுள்ளது. 
ரஜனி படங்கள் பார்த்து பழகின நமக்கு இந்த நெறிகள் சினிமா மொழியில் புதிதாக இருந்தாலும் இதுவே நிஜம்.
ஆண்கள் பெண்களின் அழகிலும் பொலிவிலும் மட்டும் கவர்ப்படுகிறவர்கள் இல்லை, பெண்களின் ஆளுமையான குணத்திலும் அறிவிலும் ஆட்படுகின்றனர் என்பதையும் சொல்லிய திரைப்படம்.

குதிரை இல்லாத ராஜகுமாரன்-ராஜாஜி ராஜகோபாலன்

  ’குதிரை இல்லாத ராஜகுமாரன்’ என்ற சிறுகதை தொகுப்பு சுதர்சன் புக்ஸ் பதிப்பகம் ஊடாக  2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதன் ஆசிரியர் கனடாவில்

வசிக்கும் இலங்கை பருத்தித்துறையில் கீழைச் புலெலியால் என்னும் கிராமத்தை சேர்ந்த ராஜாஜி ராஜகோபாலன் ஆவார்.  

தன்னுடைய நினைவையும்  அனுபவங்களையும் கொண்டு 15 கதைகளை அழகான ஒரு சரமாக கொருத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு  மனிதனின் வாழ்க்கையை சொல்பவை.

அப்படியாக ஈழத்திலிருந்து வெளிநாடுகளில் குடிபெயர்ந்த ஊர் நினைவுகளுடன் வாழும் உள்ளத்தால்  ஈழ நினைவும் தன்னுடைய மக்களின் நினைவுகள் அடங்கிய கதைகள் ஆகும் இவை. கதைகளில் சிலவை ஒரு  வாழ்க்கை சரிதை போன்ற உணர்வை தருகிறது. சில கதைகள் மனிதனின் அதி உன்னத குண நலன்களையும் சில கதைகள் மனிதனின் வீழ்ச்சியேயும் சில கதைகள் மனிதனின் இயலாமையும் சில கதைகளோ மனிதன் சூழலின் இரையாகும் கைதியாக சிறைப்பட்டுப் போவதையும்  கண்டு உணரலாம்.

 

முதல் கதையில் பவானியை தேடி வரும்  கண்ணன், பவானியின் மகள் தற்போது  பதின்ம வயதை எட்டியுள்ள விவரம் தெரிந்த பெண்.  தன் பள்ளிக் காதலி பவானி திருமணம் முடிந்து தன் கணவரை இழந்து தனிமையில் மகளோடு வாழ்ந்து வரும் வேளையில், இளைமையில் தன் இதயத்தில் குடிபுகுந்தவளை, வாழ்க்கையில் ஓய்ந்து இருக்கையிலும்  பரிவான காதலால் அணைக்க வருகிறார்.   பவானிக்கு தன் மகள் இருக்க, தனக்கு கணவர் தேடுவது சரியோ என நினைத்து ஒதுங்க பவானியின் மகள் ஸ்ருதியின் முயறியால்  தகப்பனாக பவானி வாழ்க்கைக்குள் புகிர்கிறார்.

 


சூழலால், தாயின் வற்புறுத்தல் உடலை விற்று பிழைக்க வேண்டி வந்த பெண் வாழ்க்கையில் முதன்முதலாக தனக்கானவனே தானே தேர்ந்தெடுத்து அவனுடன் போய் வீடு திரும்பும் போதுள்ள மனமகிழ்ச்சியை சொல்லும் கதையிது. வாழ்க்கை ஓட்டத்தில் மகள் மகிழ்ச்சியாக இருப்பதே  தாயே அச்சுறுத்தலாக பார்ப்பதும் தாய்மையில்  புகுந்துள்ள மாயத்தையும் எடுத்து சொல்ல தயங்கவில்லை எழுத்தாளர்.

 

நாகரீகவும் மனித மன மாற்றவும்  தமிழ் மருத்துவர் மயில்வாகனத்தைக் கூட விட்டுவைக்கவில்லை என்கிறது அடுத்த கதை. வறுமையில் வாழும் மருத்துவர் வாழ்க்கையும் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த கதை தான் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த போது கண்ட பானுமதியை மனதால்  சுமப்பதும் நினைப்பதும் அவள் உணர்வோடு வாழ்ந்து வரும் மனிதனின் கதை இது.     அடுத்த கதை தேவன் தன் முன்னாள் காதலியை சந்திக்கிறார். அவர்கள் உறவு திருமணத்தில் முடியாவிடிலும் தேவனின் நீட்சியாக தேவனின் மகன் நகுலனுக்கு தாயாக இருப்பதை எண்ணி  நித்தியா பூரிப்பதும் உண்மையான காதல்கள் தடைகளை மீறி  தொடர்வதை காணலாம். அடுத்த கதையிலோ பிள்ளைகளுக்கு தங்கள் வீடு மேல் இருக்க வேண்டிய கடமைகளை பற்றி சொல்கிறது. வெளிநாட்டில் இருக்கும் தயாளன் தன் புது மனைவி லாவண்யாவுடன் பிறந்து வளர்ந்த  வீட்டிற்கு வருகிறார். அங்கு திருமணத்திற்கு காத்து இருக்கும் தன் சகோதரி, அப்பா, அம்மா தயாளன் செய்யப்போகும் உதவியை எதிர்பார்க்கும் சூழலில் உள்ளனர். இருந்தாலும் மகன் மேல் தங்கள் தேவையை திணிக்கவும் இல்லை.  தன் நிலையை சுட்டிக்காட்டி மகன் தன் கடமையை தட்டிக்கழிக்க நினைக்க, மருமகள் அங்கு  பொறுப்பான மகனாக நின்று கதைப்பது குடும்பத்திற்கு பெரும் ஆறுதலும் நிம்மதியுமாக உள்ளது.

 

மௌனத்தின் சப்தங்கள் என்னை உலுக்கிய கதை. தன் மகனைக் கொலை செய்ய வேண்டி வந்த சிவனடியார் என்ற தந்தையின் இயலாமையை சொல்லும் கதையிது. இனி மருத்துவத்தால் சுகப்படுத்த வாய்ப்பு இல்லை என்ற நிலையில் மகனைத் தன் கையால் கொல்லும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார் பாசமிகு தந்தை.   நோய் படுக்கையிலுள்ள மகனின் தகப்பன் மனநிலையையும் சோகத்தையும் கவிதையாக வடித்துள்ளார் ஆசிரியர். இந்தத் தொகுப்பில் மனதை விடாது துரத்திய கதைகளில் இதுவும் ஒன்று.

ஆதலினால் காமம் செய்வீர் என்ற கதையில் ஒரு கல்லூரி மாணவன் தனது காதலியை உடலால் திருப்திப் படுத்த இயலவில்லை என்ற காரணத்தால் தற்கொலைக்கு முயல்வதும்நண்பனும் காதலியுமாக அவனைக் காப்பாற்றுவதுமாகச் செல்லும் கதையில் அமிழ்ந்துபோனேன். இது உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டதென அறிகிறேன். நவீன தலைமுறையின் செக்ஸ் சார்ந்த அறியாமையும் இயலாமையும் ஒரு புதிய பார்வையில் சொல்லப்பட்ட  கதை இது.

செம்பருத்தி அழகான தலைப்பில் அழகான கதை. சுசி அக்காவின் கணவர் சிவபாலன் திடீரென மரணமானதும் அக்காவின் கையறுநிலையை அறிந்து வருந்துபவனாகவும் தன் மனைவியிடம் காட்டும் அன்பில் குறைவைக்கக்கூடாது, அவளை மேலும் புரிந்து கொள்ள  வேண்டும் என்ற மனநிலையில் அவளிடம் சரணடைபவனாகவும் வரும் அன்புக் கணவனின் கதையிது.

குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற முத்திரைக் கதையில் 32 வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லையே இனி 45 வயது மனிதன் தான் கிடைப்பானா என்று மனம் வருந்தும் விஜயா இன்னும் திருமணமாகாத 29 வயது இளைஞனைச் சந்திக்கிறாள். அவன் தன்னை விட 13 வயது குறைந்த பெண்ணை மணம் முடிக்கக் கிட்டிய வாய்ப்பைப் புறம் தள்ளியவன் என்றும் அந்த பெண்ணுக்கு அடுத்த வருடமே மணமானதைக் கண்டு மகிழ்ந்தான் என்றும் கதை செல்கிறது. இக்கதையின் முடிவு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட எவ்வளவோ நேரமாயிற்று

சுபத்திராவுக்கு என்ன நடந்துவிட்டது என்ற அழகியல் மிகுந்த கதை என் மனதை நன்றாய்க் கட்டிப்போட்டது. சுபத்திரா என்ற பெண்ணின் வன்மமான குணமும் தன் அக்காவின் கணவனான முகுந்தனை அடைய ஆசைப்படுவதும் கடைசியில் திருந்துவதுமாக கதை முடிகிறது. நாடகத்தனமையுடன் கதையை நகர்த்திய விதம் சுவாரசியம். சுபத்திரா அடுத்து என்ன செய்ய போகிறாள் என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்திருப்பதும் கதைக்கு வலு சேர்க்கிறது.

கடவுள் பெயரால் வரும் ஏஜன்டுடன் கணவர் கதாப்பாத்திரம் கேட்கும் கேள்வியும் பெண்கள் கண் மூடிக்கொண்டு இத்தகைய ஏஜன்டுகளை ஏற்றுக்கொள்ளும் சூழலை சொல்லும் கதை இது. சமூகத்தில் கடவுள் பெயரால் நிலவும் சில சூழல்களைக் கேள்வி எழுப்பிச் சிந்திக்க வைக்கிறது.

 கனடாவில் வசித்தாலும் ஜாதகம் பார்ப்பது அதனால் திருமணம் தள்ளிப்போவது தன் துணையை தேடும் வலு இல்லாது தமிழ் குழந்தைகளை வளர்ப்பது கல்யாணவயது வந்ததும், பெண் பார்க்கும் படலம், அதன் சுற்றியுள்ள நிகழ்வுகள் என்று கனடாவிலும் தமிழ் மனநிலையுடன் வாழும் சூழலை புரிந்து கொள்ள உதவுகிறது அந்த ஒருவனைத் தேடி. நவீன சிந்தனையுள்ள செந்தில் என்ற தம்பி சொல்லும் செய்தி அலாதியானது.


ஆசை வெட்கம் அறியும் கடைசிக் கதை. கதாசிரியர் சட்டதரணியாக தான் சந்தித்த, தனக்கு பிடித்தமான ஒரு பெரிய மனிதரின் கோயில், பூசை, புனஸ்காரம் என்று வாழும் மனிதரின் இருண்ட பக்கங்களைச் சிறப்பாககக் காட்டியுள்ளார். அன்னபூரணம் அக்காவின்  வாழ்க்கையில் மறுபடியும்  ஒளி ஏற்றுவதுடன் கதை முடிகிறது..
 

வாசகர்களைச் சிந்திக்க வைத்த கதைகள் ஒருபுறமும் பழைமையும் புதுமையும் கலந்த கதைகள் இன்னொரு புறமுமாக இத்தொகுப்பு ஒரு மிகச் சுவாரசியமான வாசிப்பு, தான் வாழ்ந்த உலகின் ஒரு காலத்து மனிதர்களின் வரலாற்றை கூறுபவை. மேலும் பல கதைகளுடன் ஆசிரியரை சந்திக்க ஆவலாக உள்ளோம். ஆசிரியர்வழிப்போக்கரிகளின் வாக்குமூலம்என்ற கவிதை நூலை ஏற்கனவே பிரசிரித்துள்ளார். இந்த வருடம் இன்னொரு கவிதைத்தொகுப்பும் நாவலும் வர உள்ளதென அறிகிறேன்வாழ்த்துக்கள் ராஜாஜி.