20 Apr 2020

வரத்தன்-இடுக்கி மாவட்டம்

நேற்று பார்த்த திரைப்படம் வரத்தன்.
கேரளாவில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை நாட்டுக்கு போவது தான் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. இப்போது அந்த நிலையில் ஒரு மாற்றம் ; ஒரு தம்பதிகள் கேரளாவிற்கு திரும்பி வருகின்றனர். கொஞ்ச நாட்கள் அமைதியாக வாழ வேண்டும் சொந்த நாட்டில். பெண் பணக்கார வீடு; பையனுக்கு பெற்றோர் இல்லை நல்ல வேலை என்ற நிலையில் கல்யாணம் நடந்துள்ளது போல்.
வெளிநாட்டை விட்டு திரும்பவும் பிடிக்கவில்லை, ஆனால் அக்கா அம்மா , ஊர் என வாழ வேண்டும் என்ற அதி ஆசை.

பெண்ணின் தாத்தா , அப்பா அம்மா வாழ்ந்த வீட்டுக்கு வந்து சேருக்கிறார்கள். வெளிநாட்டில் தனிமையில் வேலை என பரபரப்பாக வாழ்ந்திருந்தாலும் ஒரு பாதுகாப்பு இருந்ததும், இங்கு எப்போதும் , யாரோ, மற்றவர்களின் கண் காணிப்பில் வாழ்வது போன்ற நிலை. அது எரிச்சலை கொடுக்குகிறது பின்பு அச்சமாக மாறுகிறது கடைசியில் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பல வருடம் வேலை விடயமாக அன்னிய நாட்டில் வாழ்ந்திருப்பார்கள் பின்பு சொந்த ஊரில் குடிபெயருகையில் இதே சூழலை எதிர் கொள்வார்கள். இந்த நிலையை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் கதாப்பாத்திர வடிவமைப்பு எரிச்சலப்படுத்துகிறது.

எப்போதும் கணவரை ஏதோ தனக்கு பாதுகாக்கவே பிறந்து உருவெடுத்தது மாதிரி நடத்துவது, ஒரு கணவரின் சுயத்தை கேலி செய்வது, கணவருக்கான வெளியை மதிக்காது இருப்பது. நீ ஆம்பளைன்னா சண்டை போட்டு, வான்னு எப்போதும் உசுபேத்தி விடுவது.
ஏதோ அணிவது மார்டேன் உடை, சாப்பிடுவது நவநாகரீக உணவு என்றாலும் செயல் நடவடிக்கை எல்லாம் சிறுபிள்ளைத்தனம். கடைசி சீனில் கணவர் அடிபட்டு சாகப்போக போவும் போது துப்பாக்கியை எடுத்து வருவார். இந்த மாதிரி கதை என்ன சமூகத்திற்கு சொல்ல வருகிறது என்பதை விட இதே போன்ற கதை சமூகத்திற்கு எந்த வித தாக்கத்தை தரப்போகிறது என சிந்திக்கிறேன்.
இந்த கதையின் தளம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு,(தேக்கடி) பருந்தன்பாறைக்கடுத்து ஒரு தோட்டம் வீடு.
25 வருடம் முன்பு கல்விக்கு என அந்த மலையை விட்டு கோட்டயம் வந்து அடைந்தோம். முதல் வகுப்பில் பேராசிரியர் கேட்பார்; ஊர் ஏது. இடுக்கி பீர்மேடு என்றதுமே அவர்கள் முகத்தின் மாற்றத்தை கவனிப்போம். ஏதோ காட்டுக்குள் இருந்து வந்த மனிதர்களை பிடித்து தின்னும் காட்டுவாசிகளை பார்த்தது போல பார்ப்பார்கள். அப்போது நாங்க கல்வி கற்க கோட்டயம் , அதை விட்டா திருவனந்தபுரம். ஒரு கல்லூரி கிடையாது , பல் பிடுங்க ஆஸ்பத்நிரி கூட கிடையாது. ஆனால் எப்போதும் கொடிபிடிக்கும் அரசியல் எங்களுடனே இருந்தது.

அங்கைய சில இளைஞர்களை பெண்கள் உள்ளாடையை வரை திருடும் மனப்பிளர்வு நோயாளிகளாக காட்டியுள்ளனர். Moral Policing செய்பவர்களாகவும் சொல்லப்படுகிறது. மலைப்பிரதேச மக்கள் உழைப்பாளிகள் அவர்களுக்கு இதற்கு நேரம் இல்லை. கொல்லம் , கொச்சி தான் பல போதும் செய்தியில் வந்துள்ளது. சொல்லப்போனால் 18 நூற்றாண்டில் காடு மலைக்குள் குடியேறி, காட்டு புலி யானைகளோடு போராடி அவர்களுக்கான இன்ப துன்பங்களில், மிகவும் எளிமையாக சொல்லப்போனால் அரசியல் அமைப்புகளால் மதவாதிகளால் நிராதரவாக மாற்றப்பட்ட மக்களை திரைத்துறையும் வேட்டையாடியுள்ளது.
பொதுவாகவே நாட்டு ஆட்கள் பெண் கொடுக்கக்கூட தயங்கும் இடங்கள் மலை தேயிலை சார்ந்த வாழ்விடங்கள். இனியும் அந்த பார்வை மாறப்போவது இல்லை.

இனி கொஞ்சநாட்களுக்கு தமிழ் , மலையாளம் பக்கம் இருந்து விடைவாங்கி ஆங்கிலம், ரஷியா மொழி படங்களில் சரணடைய போகிறேன்.
கலைப்படைப்பு என்பதை விட தமிழ் பார்முலாவில் பணம் ஈட்ட வேண்டும் என்றே படம் எடுக்க சில பல இயக்குனர்கள் மலையாளக்கரையிலும் பெருத்து விட்டனர்.
நடிகர் பகத் இது போன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் மட்டுமே.
இயக்குனர் அமல் நீரட்.

இசை , ஒளிப்பதிவு எதும் ஒரு வகைக்கும் ஆகாது. அதனால் அவர்கள் பெயரையும் அறியவில்லை.
மலைப்பிரதேச வாழ்க்கைக்கு ஒரு அழகு உண்டு. அப்படி ஒரு காட்சியும் இல்லை. பொறுப்பற்ற வெறும் மசாலப்படம்.

1 comment:

  1. பார்க்க ஆசைதான்! ஆனால் இடையில் அந்த நடிகரின் சர்ச்சைவேற சிந்திக்க வைக்கின்றது!

    ReplyDelete