21 Aug 2022

சலனச்சித்திரங்களில் சமூகம்- Rj Parvathy Muthamil

 


முகப் புத்தகத்தில் தோழி Rj Parvathy Muthamil எழுதிய எமது புத்தக அறிமுகப் பதிவால்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் புத்தகக் கண்காட்சியில் வாங்கப்பட்டுள்ளது என அறிந்த போது ஒரு மகிழ்ச்சி!

ஒரு புத்தகம் விலை கொடுத்து வாங்கப் படுவது என்பது எழுத்தாளருக்கு ஆகப் பெரிய ஊக்கமாகும்.
ஒரு பெண்ணின் எழுத்தை இன்னொரு பெண் அறியவைக்க முன் வருவது சாதாரணமல்ல. அவ்வகையில் என் புத்தகத்தை பற்றி முகநூலில் மட்டுமல்ல அரங்கத்தில் வந்து உரையாற்றியவர் தோழி பார்வதி அவர்கள். அவர்கள் குரலுக்கு நான் எப்போதும் ரசிகை. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மிகவும் எளிமையும் பேரன்பும் கொண்ட தோழி அவர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சேவியர் கல்லூரியின் காட்சித்தொடர்பியல்
துறையின் துணைப்பேராசிரியர் திருமதி ஜோஸ்பின் பாபா அவர்களால் எழுதப்பட்ட "சலனச்சித்திரங்களில் சமூகம் "எனும் இந்த நூல் ,திரைப்படத்தை எப்படி விமர்சனம் செய்வது என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. ஒரு திரைப்படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ரசிப்பதுண்டு பார்ப்பவர்களின் பார்வைக்கேற்ப பல்வேறு விதமாக அதன் தன்மை மாறுவதுண்டு. அந்தவகையில் தமிழ்,மலையாளம்,வங்காள மொழி திரைப்படங்களை தனக்கு எப்படித்தோன்றுகிறதோ அப்படியே அதனை விமர்சனத்திற்குள்ளாக்கியிருக்கிறார்.ஒரு திரைப்படத்தின் விமர்சனம் என்பது அதை படிப்பவனின் உள்ளத்தில்,கேட்பவர்களின் உள்ளத்தில் ஒருவித கிளர்ச்சியை தூண்டி அதை பார்க்க,அதை கேட்க வைக்கவேண்டும்.சில படங்கள் கதைக்காக , பாடல்களுக்காக, காட்சியமைப்பிற்காக,

தொழில்நுட்பத்திற்காக,கதாநாயகர்களுக்காக,நாயகிகளுக்காக, நடிப்பிற்காக, திரைக்கதைக்காக,வசனத்திற்காக,சமூகத்தின் எதிரொளிப்பாக என்று பல பார்வைகளில் ஒரு ரசிகனை சென்றடைகிறது.இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு திரைப்படம் வெளியான சில மணித்துளிகளுக்குள்ளேபல்வேறு தரப்பினரால் பல்வேறு விதமான விமர்சனத்திற்குள்ளாகிறது.ஒன்றுமே இல்லாத திரைப்படங்கள் கூட விளம்பரயுக்தியினால் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி பார்க்க வைத்துவிடுகிறது.சில நல்ல திரைப்படங்கள் விமர்சனங்களும் விளம்பரயுக்திகளும் இல்லாமல் வந்த வேகத்திலேயே நம்மை கடந்து விடுகிறது.காரணம் திரைப்படம் குறித்த பார்வையும், அணுகுமுறையும் தான்.
நூலாசிரியர் பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்பியல் துறையை மிக அழகாக கையாள்பவர்,களத்தை தம் மாணவர்கள் எளிமையாக கற்றுக்கொள்ள பயிற்சி பல தந்து திறமையானவர்களை அழைத்து செயல்முறை பயிற்சி அளித்து துறையில் சிறக்கச்செய்தல் பணியை மாணவர்களுக்கு அளிப்பதில் சிறந்தவர் தொடர்பியல் துறையில் மாணவர்களுக்கு விமர்சனம் எழுதுதல் என்னும் பயிற்சி தர தானே முன்மாதிரியாக இந்த நூலினை எழுதியுள்ளார்.பதிமூன்று தமிழ் திரைப்படங்கள்,பதிமூன்று மலையாளப்படங்கள்,சத்யஜித்ரேயின் மூன்று திரைக்காவியங்கள்,சத்யஜித்ரேயின் இரண்டு குறும்படங்கள் என தன் பார்வையில் தோன்றிய கருத்தை சமூக நோக்கில் விமர்சனம் செய்திருக்கிறார்.இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்கலாம் நீங்கள் கேட்பதும் நியாயம்தான் படங்கள் பலவற்றிற்கும் பல்வேறு தரப்பிலிருந்து
ஏற்றுக்கொள்ளக்கூடிய,ஏற்றுக்கொள்ளமுடியாத பல விமர்சனங்கள் இதழ்கள்வழியாகவும்,வலைதளம் வழியாகவும்,நாம் அறிந்திருந்தாலும் கூட கல்லூரி ஆசிரியர் வழி அதை பார்க்கும் விதம் ,சற்றுவித்தியாசமாக இருக்கிறது.இதில் சில படங்கள் நான் பார்க்கவில்லை என்றாலும் விமர்சனங்களை வாசித்திருக்கிறோம் என்ற நோக்கில் சற்று வித்தியாசமாக இருக்கிறது.சூப்பர்டீலக்ஸ்,பரியேறும் பெருமாள்,96, அவள் அப்படித்தான் போன்றவற்றின் விமர்சனங்களில் தன்னுடைய கண்ணோட்டம் சமூகம் சார்ந்து எப்படியுள்ளது என்பதை பதிவுசெய்துள்ளார். கும்பளங்கி நைட்ஸ்,அய்யப்பனும் கோசியும்,தி கிரேட் இந்தியன் கிச்சன்,சாராஸ், போன்ற படங்களிலும்,சத்யஜித்ரேயின் திரைக்காவியங்களிலும்,வித்தியாசமான பார்வையில் தன் விமர்சனத்தை அணுகியிருக்கிறார்.பரியேறும் பெருமாளில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் காட்சியமைப்புகள்,சித்தரிப்பு என பலவும் முரணாக உள்ளதை சாடியுள்ள விதம் குறிப்பிடத்தக்கது.இதுபோன்று ஒவ்வொன்றிலும் நாம் பார்த்த பார்வைக்கும்,அவர் பார்த்த பார்வைக்கும் பல வித்தியாசங்கள்.யாரென்ன சொல்வார்கள் என்று பயப்படாமல் தனக்கு தோன்றியதை வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து படைத்துள்ளார்.
பல விமர்சனங்கள் நம் மனதிலும் சலனத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த காலம்,வளராத காலத்தில் ரேயின் சினிமாவின் நிலை வளர்ந்த காலம் வரை பேசப்படுவது,இயக்குனர்களின் முரண்பட்ட காட்சி அமைப்பு,கதையமைப்பு,பெண் இயக்குனர்களின் திரைக்கள நிலை, என சமூகம் பார்க்கும் பார்வையிலிருந்து சற்று வித்தியாசமாக சாடியிருக்கிறார்.ஒரே கோணத்தில் பார்ப்பவர்களை இப்படிப்பாருங்கள் என சொல்லும் விதமே வித்தியாசமாக உள்ளது .பெண் எழுத்தாளர்கள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில் எழுத்துத்துறைக்குள் வந்திருக்கும் புதிய எழுத்தாளரின் படைப்பை அவரின் சமூக சிந்தனைக்கு ஒரு சபாஷ் சொல்லி வரவேற்கலாம்.சலனச்சித்திரங்களில் சமூகம் சற்று சலனத்தை ஏற்படுத்துகிறது என்பது மிகையில்லை

சலனச் சித்திரங்களில் சமூகம்- Athi Narayanan

 


"சலனச் சித்திரங்களில் சமூகம்" ஊடகவியல் பேராசிரியரான மதிப்பிற்குறிய ஜோஸபின் பாபா அவர்களால் எழுதப்பட்டு சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருமையான புத்தகம். காட்சிகளால் மனதை கட்டிப்போடும், தக்கப்படி சமூகங்களை கட்டியமைக்கும் சினிமா ஊடகங்களில், சமூகங்கள், சமூகத்தின் பிரதான அங்கமான பெண்களின் பாத்திரங்கள் எவ்வாறு எடுத்தாளப் பட்டிருக்கிறது என்பதை அழகாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்...!

சில இடங்களில் ஒரு பேராசிரியரின் அணுமுறையோடும் பல இடங்களில் அபத்தங்களை கண்டித்து திருத்தம் சொல்லும் தலைமை பண்புடனும், தாயின் அக்கறை உடனும் அணுகி திரைப்படங்களை மதிப்பீடு செய்திருப்பது கவர்வதாக அமைந்திருக்கிறது. தமிழ், மலையாளம் மற்றும் இந்திய திரைத்துறையின் முக்கிய இயக்குநரான சத்யஜித் ரேய்யின் படைப்புகள் என்று எடுத்து ஆய்வு செய்திருப்பது அவருடைய பரந்துபட்ட சமூக பார்வையை வெளிப்படுத்துகிறது.

பல திரைப்படங்களை மதிப்பீடு செய்திருந்தாலும் சமூகத்தால் கொண்டாடப்பட்ட சில திரைப்படங்களை அவர் அணுகியிருந்த விதம் என்னை மிகவும் ஈர்த்தது, அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பரியேறும் பெருமாள், 96, அவள் அப்படித்தான், சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி, பிக்கூ, மளையாள திரைப்படங்களான ஐயப்பனும் கோஷியும், செல்லுலாய்ட் போன்ற திரைப்படங்களின் மதிப்புரை என்னை மிகவும் கவர்ந்தது, இவை அனைத்திலும் ஒரு யூனிக்னஸ் அழகாக வெளிப்பட்டிருப்பதை கவனிக்க முடிந்தது....!!
பரியேறும் பெருமாளில் படித்து உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என்ற கருதுகோளை உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு எதுவுமே செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஒரு பாத்திரம் பேசுவதை அழகாக சுட்டிக்காட்டி இருப்பதோடு அந்த சித்தாந்தம் எவ்வளவு வீக்காக இருக்கிறது என்பதை பொட்டில் அரைந்தார் போல் சொல்லியிருப்பார், யதார்த்தங்களை ஐடியாலஜிகளுக்கு தக்கப்படி தினிக்க நினைப்பது எவ்வளவு அபத்தம் என்பது அங்கே அழகாக வெளிப்பட்டிருக்கும். அதேபோல் 96 திரைக் கதையையெல்லாம் யாரும் இவ்வளவு கலாய்த்திருப்பார்களா என்று தெரியவில்லை, மனிதர்களின் மன வக்கிரங்களை கவர்ச்சிப் பொருளாக்கி பணம் பன்னும் புத்திக்கு பாடமே நடத்தியிருக்கிறார். அதேபோல ஐயப்பனும் கோஷியும் சமூக பொறுப்போடு நடந்திருக்கலாம் என்கிறது இவரது மதிப்புரை. செல்லுலாய்ட், பிக்கூ, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவை சற்றே தேரினார் போல் தெரிகிறது....!!
கருத்தாக்கமும், காட்சியமைப்பும் எத்தகைய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை உணராமல் தனது எண்ணங்களில் உதித்ததையெல்லாம் படமாக்கி பணம் சம்பாதிக்க நினைப்பது எவ்வளவு அவலமான சமூக சூழலை உருவாக்கும் என்பதை போகிற போக்கில் சொல்லியிருக்கும் விதம் நம்மையும் பொறுப்புடன் நடந்துகொள்ள எச்சரிக்கிறது....!
புத்தகத்தின் முகப்புரையில் இயக்குநர் மதியழகன் சுப்பையா அவர்கள் ஒன்றை சொல்லியிருப்பார், திரைப் படங்களை விமர்சனம் செய்ய ரசிக்கும் திறனும் படைப்பாற்றலும் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்றிருப்பார், அது பேராசிரியர் ஜோஸபின் பாபா அவர்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது....!!!
நெல்லை புத்தக திருவிழா நடக்கும் நாட்களிலேயே இதை பதிவு செய்துவிட வேண்டும் என்று நினைத்தேன், செய்தாயுற்று, மகிழ்ச்சி. புத்தகத்தை அனுப்பி வாசிக்கும் வாய்ப்பை கொடுத்த பேராசிரியர் அவர்களுக்கு நன்றி....💐💐💐
நீங்களும் வாசித்துப் பாருங்கள்..

சலனச் சித்திரங்களில் சமூகம் - திரைப்படங்களில் மதிப்பாய்வு-மதியழகன் சுப்பையா, திரைப்பட இயக்குனர்

 சலனச் சித்திரங்களில் சமூகம்
















திரைப்படங்களில் மதிப்பாய்வு
ஒரு வருடமாக rough copy யை வைத்துக் கொண்டு சோம்பலில் இருந்த என்னை ஒரு புத்தகம் என்ற ஆசைக்குள் நடத்தினது தோழி Kala Sriranjan . ஆனால் அதை ஒரு புத்தகமாக மாற்ற நம்பிக்கை தந்தது நண்பர் Madhiyalagan Subbaiah மதிப்புரை தான்.
நான் அனுப்பின இரண்டு வாரத்தில் மதிப்புரை அனுப்பினார். அவர் அனுப்பிய மதிப்புரையின் தலைப்பில் இருந்து புத்தகத்தின் தலைப்பையும் கண்டு கொண்டேன். அப்படியாக "என்" புத்தகம் என்று நான் சொல்ல அஞ்சும் அளவிற்கு நண்பர்கள் உழைப்பு மற்றும் ஆதரவுடன் இப்புத்தகம் வெளி வந்துள்ளது.
####№#############@#######
சலனச் சித்திரங்களில் வண்ணக் கிளைகள்
நல்ல, உணர்வுப்பூர்வமான விமர்சனம் என்பது எப்பொழுதுமே ஆகச் சிறந்த வியப்பாக இருக்கிறது- என்கிறார் பிரபல எழுத்தாளர் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ். கலைப்படைப்புகள் எதுவாயினும் மதிப்புரைகளும் விமர்சனங்களுமே அவற்றிற்கு முகவரிகளாக இருக்கின்றன. படைப்பை அறிமுகப்படுத்துவது, படைப்பு குறித்த நேர்மையான கருத்தாகவே ,ருக்கிறது.
ஜோஸபின் பாபா அவர்களின் இந்நூலில், திரைப்படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும், பார்வைகளும், விமர்சனங்களும், ஆழமான புரிதல்களும், அவசியப்படுகையில் பாராட்டுகளும் என பலப்பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். படைப்புகளின் அறிமுகங்களைத் தாண்டி, அதன் கருத்துகள் குறித்த பல்நோக்குப் பார்வையும் கூர்மையான விமர்சனமும் பதிவாகி உள்ளது.
இந்நூலில் ஜோஸ்பின் அவர்கள் நாம் கண்டு கடந்த பல திரைப்படங்கள் குறித்து, மிக நேர்மையாக மற்றும் நுணுக்கமாக கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். தமிழ், மலையாளம் மற்றும் வங்காளத் திரைப்படங்கள் என முக்கியமான திரைப்படங்கள் குறித்துப் பதிவு செய்திருக்கிறார்.
திரைப்பட விமர்சனங்களைப் பதிவதாகச் சொல்லி கதையை நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இறுதியாக சில தொழில்நுட்ப விஷயங்கள் குறித்த ஒற்றைவரிக் கருத்தோடு முடித்தும் கொள்வார்கள். ஆனால் இந்நூலில் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் இதுவரை காணாத ஒரு கோணத்திலிருந்து கண்டு பதிவாகியிருப்பது மிகப் புதுமை. இது மாறுபட்ட திரைப்பார்வை என்று உறுதியாகச் சொல்லலாம்.
இந்நூலில் பதிவாகியிருக்கும் ஒவ்வொரு கட்டுரை குறித்தும் சிலாகித்துச் சொல்ல நிறைய உண்டு. ” அட ஆமால்ல” என்று வியப்புக்குள்ளாக்கும்படியான கருத்துகளும் நிரம்பியே கிடக்கின்றன.

குறிப்பாக ‘96’ திரைப்படம் குறித்தப் பதிவின் நேர்மைக்குப் பாராட்டலாம். ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து ஒரேமாதிரியான கருத்துகள் பதிவாகி அயர்வைத் தந்த நிலையில் ஜோஸ்பின் அவர்களின் கருத்து மாற்றுக் கருத்தாக மட்டுமல்ல, நேர்மையான பார்வையாகும் இருக்கிறது. பெரிதும் எழுதிச் சலித்த திரைப்படமான ‘அவள் அப்படித்தான்’ குறித்தும் புதிதாகச் சொல்ல ஜோஸபின் அவர்களிடம் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இதில் நான் பார்க்காத சில படங்களும் உண்டு. ஆனால் அப்படங்கள் குறித்தப் பதிவை வாசிக்கும் போது படத்தைப் பற்றி அறிமுகத்தைத் தாண்டி புரிந்து கொள்ள முடிந்தது.

சமீபத்தில் மலையாளத் திரைப்படங்கள் குறித்துப் பேசுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நூலில் மலையாளத் திரைப்படங்கள் குறித்தப் பதிவுக்காய் தேர்வு செய்திருக்கும் படங்கள் மிக முக்கியமானவைகள். மலையாளத் திரைப்படங்கள் மீது ’மாற்றான் தோட்டத்து மல்லிகை’ என்ற போற்றல் எண்ணத்துடன் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். ‘ஜல்லிக்கட்டு’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’ என்று சமீபத்திய திரைப்படங்கள் குறித்த கருத்துப் பதிவு செரிவு. மேலும் ’மதில்கள்’ போன்ற திரைப்படங்கள் குறித்தப் பதிவு மிகவும் முக்கியமானதாகும்.


இந்திய திரைப்பட மேதை சத்தியஜித் ரே அவர்களின் படங்கள் குறித்தப் பதிவுகள் மிகச் சிறப்பாக உள்ளன. சத்தியஜித் ரே அவர்களின் திரைப்படங்கள் குறித்து எண்ணற்ற ஆய்வுகள் பதிவாகியுள்ள நிலையில் ஜோஸ்பின் அவர்களின் பார்வை கவனிக்கப்படாத சில பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
இப்படி குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம் தான்; ஆனால் உள்ளேயிருக்கும் கட்டுரைகளின் சிறப்புகளை இங்கே சொல்லிவிட சுவராஸ்யம் குறைந்து போகக் கூடும் என்ற ஐயம் காரணமாக அடக்கிக் கொள்ளலாம்.
திரைப்படக் காட்சிகளில் வெளிப்பட்டதாகச் சொல்லி குறியீடுகளுக்கு பல அர்த்தங்களை சகட்டு மேனிக்கு எழுதிக் குவிக்கும் சூழலில் ஒட்டுமொத்தமாக ஒரு படைப்பு வெளிப்படுத்தும் கருத்து இதுதான் என்று சாராம்சம் சொல்லும் நல்ல நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் கட்டுரையாசியர்.

வாசிக்க இயல்பான ஒரு மொழி ஜோஸ்பின் அவர்களுக்கு கைவந்திருக்கிறது. கருத்துகளை எப்படித் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரோ அப்படித்தான் மொழியும் எளிமையாக அதே நேரம் செரிவாக உள்ளது. ஒரு மூச்சில் வாசித்துக் கடக்கச் செய்யும் இயல்பைக் கொண்டுள்ளது.

சிறப்பான இந்தத் தொகுப்புக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து இப்படியான பதிவுகளை நூலாக்கித் தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளலாம்.

வாழ்த்துக்களுடன்,
மதியழகன் சுப்பையா,
திரைப்பட இயக்குனர்

இரவின் ஆன்மா,நிறமில்லா மனிதர்கள்,சலனச் சித்திரங்களில் சமூகம்




 அன்பு தோழி Kala Sriranjan ஊடாக என் புத்தகங்கள் இலங்கை தீவை அடைந்தது மட்டுமல்ல ஈழத்து ஆளுமைகளிடம் என் புத்தகங்கள் 'இரவின் ஆன்மா ' மற்றும் சலனச் சித்திரங்களில் சமூகம் ' சென்று சேர்கிறது.

அவ்வகையில் ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஊடகவியாளர் Karunakaran Sivarasa அவர்களிடம் புத்தகம் சேர்ந்ததில் பெருமை கொள்கிறேன்.
அன்பும் நன்றியும் தோழி! பிறப்பால் இரு தேசம் என்றாலும் நட்பால் ஒரே வீடு என உணர்கிறேன்.
புத்தகத்தை பெற்று கொண்ட நண்பருக்கு வணக்கமும் நன்றிகளும். புத்தகம் பெற்றதும் ஓரிரு வார்த்தைகளில் கதைக்க இயன்றது. நான் எழுதியுள்ள திரைப்படங்களை பார்த்துள்ளார், ஒரு சில படங்களின் இயக்குனர்களிடம் உரையாடலில் உள்ளார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன் நண்பர்.
இன்னும் இருவருக்கு என் புத்தகம் சேர வேண்டியுள்ளது.ஒன்று உடன் பிறவா சகோதரர், இப்புத்தகம் உருவாக்கத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அன்பு சகோதரர். இன்னொருவர் இலங்கை சினிமா எழுத்து உலகின் ஆளுமை ஐயா அவர்கள்.
தோழி ஜோவின் ‘இரவின் ஆன்மா’, எனது ‘நிறமில்லா மனிதர்கள்’ நூல்கள் இரண்டும், தோழர் சுகனிடம் கையளிக்கப்பட்ட போது!




இரவின் ஆன்மா-Dhanalakshmi Dhanalakshmi

 


வெறும் வாசிப்பு வாசிப்பு என்றே ஒரு பக்க சிந்தனையோடு , திரிந்து கொண்டிருந்த என்னை அப்படியே மடை மாற்றிப் போட்டுவிட்டது பேராசிரியை ஜெ .பி .ஜோஸ்பின் பாபா எழுதிய "இரவின் ஆன்மா " (திரைப்படங்களில் பெண்கள்) என்ற புத்தகம் . முதலில் காய்ச்சிய பாலில் தயாரித்த டிகிரி காப்பி போல , முதலில் பிழிந்தெடுத்த தேங்காய்ப் பாலின் அடர்த்தியாக , பல்வகைக் கனிகளின் பழக் கலவையாக தான் பார்த்து ரசித்த உலகமொழித் திரைப்படங்களில் தான் ரசித்தவற்றை பிறரும் படித்து இன்பம் பெறட்டும் என்று நினைத்து தன் புத்தகம் மூலம் சாரமாகப் பிழிந்து தந்த இந்த நற்குணத்திற்காகவே இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தரமான ஒன்பது வெளிநாட்டுப் படங்களும், ஒன்பது ஹிந்தித் திரைப்படங்களின் வழியாகவும் அதில் நடித்த பெண்பாத்திரங்களை மிகச் சிறப்பாக திறனாய்வு செய்து தந்திருக்கிறார் நூலாசிரியர் பேராசிரியை ஜோஸ்பின் பாபா. .

இந்த நூல் தந்த விளைவு , இவர் தந்த செம்மையான விமரிசனம் தந்த தூண்டுகோலால் இரண்டு படங்களை ( "பிங்க் " https://www.youtube.com/watch?v=TgADDuR1R68 மற்றும் "our souls at night "https://www.youtube.com/watch?v=ybPX-sd_b1Y ) பல வேலைகளுக்கு நடுவில் தேர்வு செய்து பார்த்த நான் (சொன்னால் நம்பமாட்டீர்கள்! ) எஞ்சிய மீதம் பதினாறு படங்களை பார்த்தே தீர்வதென்ற வெறியோடு எண்ணம் முழுக்க அதே சிந்தனையோடு செயல்படத் துவங்கியிருக்கிறேன் ! நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது . என் மனம் கவர்ந்த எந்த படைப்புகளையும் வாசிக்க நேர்ந்து விட்டால் பெரும்பாலும் படைப்பாளரோடு அலைபேசியில் உரையாடி விடுவதை வழக்கமாய் கொண்டுள்ளேன். அப்படித்தான் இவரோடு மிகக் கூடுதல் மணித்தியாலங்கள் கதைகளை பற்றிய இவரது கண்ணோட்டத்தையே வியந்து பேசினேன் .
அப்போது அவர் மிக்க மகிழ்ச்சியோடு கூறியது :- " தனா ! பல கலை உருவங்கள் சேர்ந்த ஒருமித்த கலைப்படைப்பு திரைப்படங்கள். சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைப்பதுடன் சில பிரச்சினைகளுக்கு விவாத களமாகவும் ,தீர்வாகவும், சில போழ்து பார்ப்பவர்களின் எண்ணங்களை விசாலப்படுத்தவும், வாழ்க்கையைத் தத்துவ விசாரணையோடு அணுகவும் வைக்கின்றன . உலகமெங்கும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஒரே போன்றதுதான். அதைப் பெண்கள் எவ்விதம் அணுகுகின்றனர், சவால்களை எப்படி கையாண்டு கடக்கின்றனர், அதன் தீர்வுகள் எப்படி இருந்திருக்கின்றன என்பதைத் தான் இந்நூலில் பதிவு செய்திருக்கிறேன்" என்றார். இப்போது எனது நோக்கமெல்லாம், என் முக நூல் நட்புகள் அனைவரும் குறிப்பாக, பெண்களும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும். உங்கள் கருத்துகளை அதன் பின் அவரது மின்னஞ்சலுக்கு இடலாம்(jpjosephinebaba5@gmail.com) பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் (Visual communication ) துணைப் பேராசிரியராக பணியாற்றிவரும் இவரது படைப்புகள் சிறப்பானவை .(நான் தேடும் வெளிச்சங்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு) தனது வளர்ந்த இரு மகன்கள் சாம், ஜெரோம் மற்றும் உறவினர், நட்புகளோடு இணைந்து குடும்பத்தையும் கவனித்து , கல்லூரி மாணவர்களோடு வழிகாட்டியாய், நல்ல நட்பு பாராட்டிக் கொண்டு, இணைய பத்திரிக்கைகளில் துணிந்து தனது கருத்துகளை சில எதிர்ப்புகளுக்கு இடையேயும் வெளிப்படுத்தும் இவரை எனது மிகச் சிறந்த நட்புகளில் ஒன்றாய் ஆக்கிக் கொண்டது எனக்குப் பெருமையே!
நூல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-
ஜெ.இ.பதிப்பகம், 2-123 பெருவிளை அஞ்சல்,நாகர்கோவில் ,
கன்னியாகுமாரி மாவட்டம்-629 003 அ .பே :97896 14

இரவின்ஆன்மா...#திரைப்படங்களில்பெண்கள்-Thanappan Kathir

 


தனது கணவரை 25 வயதில் இழந்தாலும் கடைசி வரை தான் கொண்ட காதலையும் வாழ்ந்த வாழ்க்கையும் நினைத்துக் கொண்டாடி 2021 இல் மறைந்த தாய்வழிப் பாட்டி மாரியாகம்மா மரிய செபாஸ்டியன் அவர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்து துவங்குகிறது இந்நூல்.

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட இந்த அற்புதமான படைப்பு நல்லதொரு சமுதாயம் அமைய அடித்தளமாக இருக்கும் என்று பதிப்பகத்தார் பதிப்புரை தந்திருக்கின்றார்கள்

பெண்கள் எதிர் கொள்ளும் ஒடுக்குதல்கள் மற்றும் புறக்கணிப்புகள், சிக்கல்களையும் தீர்வுகளையும் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்ற பொருண்மையைப் பயன்படுத்தி "இரவின் ஆன்மா" நமக்கு செய்திகளை பகிர்கிறது என்று பேராசிரியர் கோ. ரவீந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்

ஒரு சினிமாவை எப்படிப் பார்ப்பது? எப்படி புரிந்து கொள்வது? என்கிற பாடத்திட்டம் நமது கல்வித் திட்டத்தில் இல்லை. அதன் தேவைப்பாட்டை விளக்குவதாக இந்த நூல் அமையப்பெற்றிருக்கிறது என்று கிருஷ்ணகோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்.

திரைப்படம் ஒரு மாபெரும் கலை என்பது போலவே திரைப்படங்களை பார்ப்பதும், ரசிப்பதும் ஒரு கலையை என்று தன்னுரை தந்து நம்மை இந்த கட்டுரைத் தொகுப்பிற்குள் அழைத்துச் செல்கின்றார் பேராசிரியர் ஜோசபின் பாபா.

மொத்தம் 18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. அனைத்துமே திரைப்படங்கள் குறித்தும், அதில் வருகின்ற பெண் கதாபாத்திரங்கள் குறித்தும் பேசுகின்றன. 9 உலக மொழி திரைப்படங்களும் 9 ஹிந்தி திரைப்படங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

உலகம் மொழித் திரைப்படங்களும், ஹிந்தி மொழி திரைப்படங்களும் கையாண்ட பெண்கள் பற்றி கருத்தியல் பேசுவதோடு உண்மை நிலையையும் இங்கே நமக்கு தெள்ளத் தெளிவாக இந்த கட்டுரைகள் விளக்குகின்றன.

சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் அல்லது அந்த சூழலில் அவர்கள் எவ்வாறு சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறித்து பேசி அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வந்திருக்கின்றார்கள், இன்னும் இன்னும் வர காத்திருக்கின்றார்கள் என்பதனை திரைப்படங்கள் காண்பித்ததை தெள்ளத் தெளிவாக நமக்கு கடத்துகின்றார்.

ஒரு பெண்ணுடன் நேசம் கொள்ளுதல் என்பது அவளை சொந்தமாக்குவது அல்ல. அவள் மகிழ்ச்சியில், துன்பத்தில், பிரச்சனைகளிலும் பங்கு பெறுதல் என்ற புரிதலில் ஜேன் எடுத்த முடிவை லூயிஸும் ஏற்றுக் கொள்கிறார் என்று முதல் கட்டுரை பேசுவது அந்த படத்தை பார்க்க தூண்டுவதாக அமைகிறது. அந்தத் திரைப்படம் இரவில் எமது ஆன்மா. (Our Souls At Night) இதுவே புத்தகத் தலைப்புமாகும்.https://www.youtube.com/watch?v=lci71HjGvaM

தன் வாழ்க்கையில் ஆளுமை செய்த இரு பெண்களைப் பற்றிய படம் என்று இயக்குனர் சொன்ன அந்தத் திரைப்படம் ரோமா. அந்த இரு பெண்களில் ஒருவர் தன் தாய் இன்னொருவர் வளர்ப்புத்தாய். வளர்ப்புத்தாய்க்கு தான் எழுதிய அன்பின் மடலாகவே இந்த படத்தை காண்கிறேன் என்று குறிப்பிட்டிருப்பது, அந்தப் படத்தை தேடிப் பார்க்கக் கூடிய ஆவலை நமக்கு தூண்டுகிறது. படத்தின் பெயர் "Roma".

"பிளாக்" எனும் ஹிந்தித் திரைப்படம் அமிதாப்பச்சனும் ராணி முகர்ஜிம் நடித்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக இவ்விருவரும் பார்வையற்றவர்களுக்கான எழுத்து மொழி பிரெயிலியை ஏழு மாதம் கற்றனர் என்ற தகவல், எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் அந்த ஒரு கதாபாத்திரத்தை நேர்த்தியுடன் செய்ய வேண்டும் என்று அந்த பிரெய்லி முறையினை இவர்கள் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பதனை நமக்குத் தெரிவிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாகப் பார்த்த இந்தப் படத்தினை நினைவுகளால் நான் மீட்டிக் கொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.https://www.youtube.com/watch?v=J72Rlp5WAcA&t=23

பிங்க் திரைப்படமும் பெண்களினுடை ய புதிய சிந்தனையை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. வேண்டாம் என்றால் வேண்டாம் என்பதனை தெளிவாகச் சொல்லும் இத்திரைப்படம் தமிழில, நோ என்றால் நோ என்று அஜித் பேசி நடித்த "நேர்கொண்ட பார்வை" எனும் திரைப்படமாக வந்ததை நினைவுபடுத்துகின்றது.https://www.youtube.com/watch?v=TgADDuR1R68

இப்படி பெண்கள் எவ்வாறு சூழலில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள், அந்த பெண்களை மையப்படுத்திய படங்கள் பெண்களை முன்னிலை நிறுத்திய படங்கள் என்று பட்டியலிட்டு 18 படங்களை நமக்குத் தந்து அவற்றை தேடிப் பார்க்க வைத்திருக்கின்றார்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல அவற்றின் மூலம் கருத்துக்களை வெளிக் கொண்டு வர முடியும். அந்தக் கருத்துக்களை கடத்த வேண்டிய பொறுப்பு இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இருக்கிறது. வாழ்வினுடைய நுண்ணிய பக்கங்களை, பன்முகத் திறமைகளை திரையில் காட்டிய படங்கள் வெகு குறைவு. அவற்றை காட்டுகின்ற நிலை வரவேண்டும் என்பது இந்த தொகுப்பினை வாசிக்கும் பொழுது நமக்கு தோன்றுகிறது. அந்தச் சிந்தனை இயக்குனர்களுக்கும் தோன்ற வேண்டும். புதிய புதிய இயக்குனர்கள் இதனை கருத்தில் கொண்டு படைப்புகளை கொண்டு வர வேண்டும்.
படம் பார்த்தோமா, அதைப் பற்றி சில பேரிடம் பேசினோமா என்றில்லாமல் உணர்ந்தவற்றை உணர்வுபூர்வமாக கடத்திடுவது என்பது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காது. எப்படி உள்வாங்கி இருந்தால் ஒரு திரைப்படத்தை கட்டுரையாக கொண்டுவர முடியும் என்பதனை இந்த கட்டுரைத் தொகுப்பு விளக்குகிறது.
தற்போதைய திரைப்படச் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை என்பதனை சுட்டும் இந்த கட்டுரை தொகுப்பு ஒரு புரட்சியினை வேண்டி திரையுலகம் காத்திருக்கிறது என்பதனை சுட்டுவதாக அமைகிறது. மாற்றங்கள் நிகழ வேண்டும். காத்திருப்போம்.
Dhanalakshmi Dhanalakshmi, Bala Murugan and 20 others
22 comments
1 share
Like
Comment
Share