16 Apr 2023

மாஜிதாவின் பர்தா

 


புத்தகம் பேசுது என்ற இதழில் வந்த கட்டுரை


மாஜிதாவின் பர்தா


-ஜெ.பி. ஜோஸ்ஃபின் பாபா


இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள ஓட்டமாவடியை சேர்ந்தவர் மாஜிதா. தற்போது   லண்டனில் வசித்து வரும் ஒரு வழக்குரைஞர் ஆவார்.  சிறுகதை ஆசிரியரான இவருடைய   முதல் நாவல் ஆகும் பர்தா. எதிர்வெளியீடு பதிப்பகம் ஜனுவரி 2023 ல் வெளியிட்டு உள்ளது. விலை ரூ 200.


ஈஸ்டர் குண்டு தாக்குதலைக் கண்டித்தும் அதில் கொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் வகையில் லண்டனில் இயங்கி வரும் தெற்கு ஆசியன் அமைப்பின் கூட்டத்தில் சுரய்யாவை கதையாசிரியை மற்றும்  அவருடைய நண்பர் சந்திக்கின்றனர்.    நான்கு குழந்தைகளின் தாயான சுரய்யாவை பின்பு ஒரு நாள் சுரய்யா வீட்டில்  ஒரு மதிய உணவில்   சந்திக்கிறார். சுரய்யாவிடம் உரையாடின மனதில் பதிந்த சுரய்யாவின் கதையை  ஒரு நாவலாக எழுத ஆரம்பிக்கிறார் மஜிதா. 




 நீரோடையில் நீச்சலடித்து, குளித்து திரும்பின சுரய்யா தனது அப்பா ஹயாத்துடன் சலூன் கடைக்குச்சென்று  டயான கட் வெட்டித் திரும்புகிறாள்.  தனது மகள் டயானக் கட்டில் அழகாக இருப்பதாக மெச்சிக்கொள்கிறார் ஹயாத்து. பெருநாளுக்கு தனது அப்பா வாங்கித் தந்த  பிங்க் நிற மினி ஸ்கேட்டும் வெள்ளைநிற டி-ஷர்ட் அணிந்திருப்பதையும் நினைத்துப் பார்க்கிறாள் சுரய்யா.

இலங்கை முஸ்லீம் பண்பாடுகளில்  பெயர் போன  மாவடியூரைச் சேர்ந்த சுரய்யாவின் அப்பா ஹயாத்து லெப்பை; ஒரு அரசு உத்தியோகர்.  இசைப் பிரியரான ஹயாத்து, தனது வீட்டின் விருந்தினர் அறையில்  இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய ஓர் ஒலிப் பேழை மற்றும்  சோனி நிறுவனத்தின்  பாடல் கேட்கும் கருவியும், அத்துடன்   படம் பிடிப்பதற்கான கேமராவும் வைத்துள்ளார். 


பண்டிகைக்கு,  மனைவி பீபிக்கு கிளீயோபாட்ரா சேலை வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பவர் ஹயாத்து.  பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும் பீபியும் தன் சேலை அழகை  மற்றவர்கள் மெச்சியதைக் கண்டு மகிழ்ச்சி அடைபவள். விருந்தினருக்கு என்ன  உணவு சமைக்க வேண்டும் என்று தனக்கு கிடைத்த அனுமதியை பெரிய உரிமையாக எண்ணி பெருமை கொள்ளக் கூடியவர் சுரய்யாவின் தாயார் பீபி.  தன் விருப்பத்திற்கு ஈடுசெய்யும் விதம் பீபியை வேலை வாங்கத் தெரிந்தவர் தான் ஹயாத்து லெப்பை. சுரய்யா உயர்பள்ளி படிக்கும் வயதை அடைந்ததும், வீட்டுக்கு வெளியே வரும் போது தாவணி அணியும்படி அறிவுறுத்தப்படுகிறாள் சுரய்யா.


 கதை நடக்கும் காலவெளி 1980 ஆம் ஆண்டு, அன்றைய பண்டிகை சிறப்புகள்,  பலகாரங்கள் செய்யும் முறை, பெருநாள் கொண்டாடும் விதம் எனக் கடந்து சென்ற  அக்காலப் பண்பாட்டுத் தளம் வழியே கதையை நகத்துகிறார். இப்படி ஒரு சாதாரணமுஸ்லிம் வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் வாழ்க்கையில், பர்தா நுழைய ஆரம்பிக்கிறது.


 ஈரானுக்குப் போய் வந்த   சபீக் மௌலவி பள்ளி மாணவிகளிடம்  பர்தா அணிந்து வர  வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது மட்டுமல்ல; கேள்வி கேட்பவர்கள்  அல்லாஹுவால் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறார்.  ஜலாலுதீன் பொதுவாக தான் மட்டுமே  ரொம்ப யோக்கியம் மற்றவர்களை கெட்டவர்கள் என்று  நிரூபிக்கக் கூடிய  மனநிலை உள்ளவர். 



 ஜலாலுதீன் மக்கள் மத்தியில் பேசும்போது  நம்ம நாடு,  முஸ்லிம் பெண்களுக்கு நல்லதொரு விடயத்தை அறிமுகம் செய்திருக்கிறது.  அது  முதன்முதலாக  ஈரான் நாட்டில் இருந்து அறிமுகமான ஒரு உடை.   இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து கொள்ளுவது கட்டாயக் கடமை ஆகும்.  அதேபோல பர்தா போட வைப்பது இஸ்லாத்தில் கட்டாயக் கடமை என்று கட்டுப்பாடு விதிக்கிறார். இந்தக் கட்டளை பர்தாவை பள்ளிகளுக்குள் நுழைய வைக்கிறது. பர்தா மற்றும் முகக்கவசம்   அணிய ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுகின்றனர்.  



ஹயாத்து வேளாண்மை அதிகாரியாக சிறந்து விளங்கினவர். ரெட் லேடி என்ற மரபணு பப்பாசியை மக்களிடம்  அறிமுகப்படுத்தக் காரணமாக இருந்தவர்.  அத்துடன் மக்களின் வரம்பு மற்றும் வேளாண்மைக்கான தண்ணீர் சண்டைகளையும் தீர்த்துவைக்கும் அளவிற்கு ஆளுமை செலுத்தக்கூடியவர்.  தனது அலுவலகத்தில் பணிசெய்யும் ஆயிஷாவை பர்தா அணிந்து வரக் கட்டளை இடுகிறார். இஸ்லாத்தை கேள்வி கேட்க இயலாது என்று நம்ப வைக்கிறார்.



வேளாண்மை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஆயிஷா ’பர்தா எதற்கு அணிய வேண்டும்’ என்று யாரையும்  கேள்வி கேட்க முடியாத நிலையை எண்ணி, வருந்தி  பழுப்பு நிறத்தில் பர்தா அணிந்து வர ஆரம்பிக்கிறாள். ஆயிஷாவிடம் கலகலப்பாகி பேசி வரும் கோபாலால் பர்தா அணிந்த அவளிடம் பேச தடங்கலாக தோன்றுகிறது.  ஆயிஷாவின் நண்பர் வேணிக்கும் பர்தா அணிந்த ஆயிஷா அன்னியமாகத் தெரிகிறாள்.


இரான் புரட்சிக்குப் பின் இரான் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் பொருளாதிதார ரீதியாக நண்பர்களாக மாறி இருந்த சூழலில்  இரான் பண்பாட்டு வழக்கங்களும்  இலங்கையில் வேகமாக ஊடுருவ ஆரம்பிக்கிறது.  இரானின் இருந்து வரும் சிற்றிதழ்களும் கொள்கையைப் பரப்பத் துணையாகிறது.



ஈரான் பர்தா முறை இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. சபீக் மௌலவியின் பிரசாரங்களை நம்பாதீர்கள் என்ற எதிர்ப்புக் குரல்கள்  சுவரொட்டிகளாக ஊர் மதில்களில்  காணப்படுகிறது. 


சுரய்யாவின் உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்கு பர்தா அணிய சுரய்யா எதிர்ப்பு தெரிவித்ததால்  மிளகாய்ப் பழம் வாயில் தேய்த்து விட்டு,  பெற்றோர் தங்கள் வளர்ப்பின் மேன்மையைத் தண்டனை கொடுத்துத் திருப்தி அடைகின்றனர். 

 

பின்பு முஸ்லீம் பெண்கள் தங்கள் விசேஷ வீடுகளில் குரவை இடுவதைத் தடைச்செய்கின்றனர். ஹயாத்து, மௌலவியின் சகோதரி மகன்; பர்தா அணியாத தனது தாயை அவமதித்ததை அறிந்து ஹயாத்து துயர் கொண்டாலும் அவர் மனைவி பீபிக்கு அது பெரிய தவறாகத் தெரியவில்லை.    ஈசாவின் மூளையை மத்ரஸா மௌலவிமார்கள் குழப்பிப் போட்டார்கள் என்று கூறி ஹயாத்து வருந்துகிறார். எப்போதெல்லாம் பர்தா பற்றி விவாதம் வருகிறதோ, அப்போதெல்லாம் பர்தா அணியாத பீபி பர்தாவிற்கு வக்காலத்து வாங்குவதை கவனிக்கலாம். பார்தாவில் ஆரம்பித்து பர்தா நிறங்களில் பெண்கள் மாட்டுப்பட்டதைக் குறிப்பிடுகிறார். நசீர் மௌலவி போன்றவர்கள் பெண்களிடம் உரையாட வேண்டிய  சூழலில் திரைக்குப் பின்னால் நின்று உரையாட ஆரம்பிக்கின்றனர்.

முஸ்லீம் சமுதாயத்தை ஆக்கிரமிக்கும்  இன்னொன்று பாவாடைக்குழு.  பாவாடைக் குழுவின் பரிந்துரைப்படி ஆண்கள் தங்கள் வீடுகளில் தங்காது, இரவு பள்ளிவாசலில் தங்க கட்டளை பெறுகின்றனர். அல்லாஹை நெருங்குவதற்குக் கட்டாயம் பள்ளிவாசலில்  தங்கியிருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்ற கட்டளைபெறுகின்றனர். ஆண்கள்  மத அடையாளப்படி நாட்டின் அடையாள  அட்டை தேவையற்றது என்ற கருத்தையும் திணிக்கின்றனர்.


ஊருக்குள் தலையெடுக்கிற எந்த  விடயத்திலும் தலைமைப் பொறுப்பு தன்னிடம்  வர வேண்டும் என்பதை பிரதான நோக்கமாகக் கொண்ட  ஹயாத்து பர்தாவுடன் சவுதியிலிருந்து இறக்குமதியாகும் ஹபாயா என்ற உடையை வரவேற்கிறார். பர்தாபோட்டு படிக்க சென்றதால் தனது மகளுக்கு நல்ல படிப்பு வருகிறது என்று சொல்வதில் பீபி பெருமை கொள்கிறாள் .

பர்தா அணிவதைப் பற்றி பர்ஹானா கொண்டிருக்கும் கருத்து சுரய்யாவிற்கு நேரெதிராக உள்ளது. பர்தா தனக்கு பிடித்து இருப்பதாகவும் விரும்பி அணிவதாகவும் கூறுகிறாள்.  இதே பர்ஹானா  வெள்ளை இடப் பெண்ணின் இன-மதவாத தாக்குதலுக்கு உள்ளாக இதே பர்தா காரணமாகிறது.  

ஆண்களால் கட்டமைக்கப்பட்ட உடையிலிருந்து எளிதாக பணக்கார பெண்களால் வெளியே வர இயலும். ஆனால் எளிய பெண்கள் நிலை அதுவல்ல என்று வாதிடுகிறாள் சுரய்யா சுரய்யாவின் மகள் றாபியா காலமாகும்போது பர்தாவும் ஹாபாயும்  சீருடை போன்று கட்டாயமாக்கபடுகிறது. அதில் இருந்து விடுபட இயலாத வண்ணம் இறுக்கமாகிறது. சுரய்யாவின் தந்தை போல கட்டாயப்படுத்திச்  சொல்லாவிடிலும் ஊரோடு ஒத்துப் போகணும் என்ற கருத்தைக் கொண்டவராக உள்ளார் சுரய்யாவின் கணவர் இர்பான். 


பாட்டுகேட்ட காலம் போய் நடனமாடுவது ஹராம் என்று சொல்லப்படும் காலம் வருகிறது. சுரய்யா மகள் மாதிரிக் கேள்வி கேட்பவளாக இல்லாது,  சிந்தனையற்றுமிருக்க ராபியா தெரிந்து வைத்துள்ளாள்.I


விடலைப்பருவத்தில் பர்தா அணிவதை மிகவும் அசவுகரியமாகக் கருதிய ஆபிதாவிற்கு தற்போது பல வழிகளில் சவுகரியமாகத் தெரிகிறது.


ஊர் திரும்பும் சுரைய்யா தனது தாயிடம், பர்தா அணிவதைச் சொல்லிய வாக்குவாதத்தில் “அல்லாஹ் கூலி தருவான்” என்று தன்மகளை வசை பாடவும் தயங்கவில்லை.

பீபி தனது மகளை வலுகட்டாயமாக பர்தா அணிவித்த பிரச்சினை தனது பேத்தியிடம் வரவில்லை. பாசாங்கு வார்த்தைகளுடன் பர்தா கொடுத்ததும் ராபியா உற்சாகமாக அணிந்து கொண்டாள்.

மிகவும் சுவாரசியமாக எளிமையாகக் கதையை நகத்தி உள்ளார் மாஜிதா. மதநிர்வாகிகளின்  கொள்கைகளை ஒரு பெண்ணாக  இருந்து எழுதிய மஜீதா பாராட்டுதலுக்கு உரியவர். 15 வருடங்களாக இஸ்லாமிய சமூகத்தை ஆட்கொள்ளும் தாக்கம் செலுத்தும் உடை அரசியலை மிகவும் சிறப்பாக ஒரு நாவலாகக் கொண்டு வந்ததை பாராட்டியே தீர வேண்டும். அப்படி அடிப்படைவாதம் கடுமையாக புதிய தலைமுறையும் இறுக்கியது என முடித்துள்ளார் மாஜிதா.



 


12 Mar 2023

காலாபாணி - கானல் நீர்

 


டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப. விற்கு 2022 யின் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த  புத்தகம் காலா பாணி. 2022 ல் 538 பக்கத்துடன்  அகநி பதப்பகத்தில் இருந்து வெளியாகி உள்ளது.

சாதிகளால் பிரிந்து கிடக்கும் இக்கால மனிதர்களிடையே சாதிகளைக் கடந்து போராளிகளாய் இணைந்த எழுச்சிப் போராட்டத்தின் பெயர் தெரியா நபர்களுக்கு இப்புத்தகம் சமர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். 


நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  வேங்கை பெரிய உடையணத்தேவர் எப்படி அரசர் ஆனார் என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. 


மருதுபாண்டியருக்கு  ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான தண்டனையை வழங்க அக்கினியூவிற்கு மெட்ராஸ் கவர்னர் எட்வர்ட் கிளைவ் அதிகாரம் வழங்கிய நிலையில், வெள்ளைக்கார அதிகாரி வெல்ஷிடம் நட்பாக பழகிய மருது பாண்டியரையும் ஊமைத்துரையையும் தோற்கடிக்க வெல்ஷை அக்கினியூ பயன்படுத்துகிறான். மருது கட்டுப்பாட்டில் இருந்த சிவகங்கை அரசர் உள்ளிட்ட எழுபத்தி மூன்று பேரை பாதுகாப்பாக பினாங்கு தீவிற்கு கொண்டு சேர்க்கும் பணி லெஃப்டினென்ட் ராக்கெட்டிடம் ஒப்படைக்கப்படுகிறது . பெரிய உடையணத்தேவர் மற்றும் மைத்துனர் துரைசாமி மேல் பாவப்பட்டு இந்தப் பணியை ராக்கெட் எற்பதாக உள்ளது. 


கிறிஸ்டீனா என்ற வெள்ளைக்காரப் பெண் மூலம் மேஜர் வெல்ஷ், அவரின் மேலதிகாரி கர்னல் அக்கினியூ, லூஷிங்டன்  போன்ற ஆங்கிலேய அதிகாரிகளைக் குற்றம் சாட்டுவதுடன் இக்கதை ஆரம்பமாகிறது. 


சிவகங்கைச் சீமையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு நாடு கடத்தப்படும் எழுபத்தி மூன்று பேரையும் இன்றுவரையிலும், இனிமேலும் ஒன்றாக இருக்க அனுமதித்த உங்களது கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் கர்ணல் அக்கினியூவிற்கும் கலெக்டர் லூசிங்டனுக்கும் எங்களது நன்றியை தெரிவியுங்க. 

நீங்கள் எங்களை காலாபாணி என்று அறிவித்த போதும் எங்களில் யாரும் குறிப்பாக வயதான கள்ளிமந்தயம் முதற்கொண்டு சிறுவனான துரைசாமி வரை யாரும் அழுது புலம்பவில்லை, ஒருவரும் பயப்படவில்லை என்பதையும் உங்கள் மேலதிகாரிகளுக்குத் தெரிவியுங்கள். போர்க்களத்தில் நாங்கள் இறந்திருக்க வேண்டும், மரியாதையாவது மிஞ்சியிருக்கும் என்ற ராஜா வேங்கை பெரிய உடையணத்தேவரின்  குறிப்பு கிறிஸ்டீனா அளவு கூட கோபம் கொண்டாதாக இல்லாது ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு அனுசரித்து தண்டனையைப் பெறுவதாகவே உள்ளது. ஆங்கில அரசு கைது பண்ணியிருந்தாலும் ஜெகநாதன் அய்யர் போன்ற கைதிகள் தண்டிக்கப்படாது இருப்பதற்கு ஒரு காரணம், பிராமணர்களைத் தண்டிக்க கூடாது என்ற வெள்ளைக்காரர்களின் நம்பிக்கை என்கிறார்

ஜேபி என்ற குளத்தூர் ஜமீன் தனது சந்தனக் கோலை உயர்த்திக் காண்பித்து, முதுகை வளைத்து வணங்கினான் போன்ற தகவல்கள் ஆங்கிலேயர்களுடன் இணக்கமாகப் போன ஆட்சியாளர்களைத் தான் நினைவு படுத்துகிறது

வேலுநாச்சியார் வெற்றி பெறுவதற்கு அயிதர் அலி  உதவினது,  மூன்று மாத குழந்தை முத்துராமலிங்கம் ராமநாதபுரம் சேதுபதியாக நியமிக்கப்பட்டு அவர்  சார்பில்  அரசாட்சி நடத்திய ராணி அடிக்கடி வெளியூர் செல்வது, நீதிபரிபாலனம் செய்வதோ சரியாக இருக்காது என்பதால் ராணிக்கு உதவியாக திருப்புல்லாணி வெள்ளையன் சேர்வைக்காரன் பிரதானியாக இருந்து செயல்படுகிறார்.  ஒரு பிரெஞ்சு பாதிரியார் லெனுவார் யார் சிக்கினாலும் ஞானஸ்தானம் செய்து கையில் வேத புத்தகத்தைக் கொடுத்து விடுவார் (பக்கம் 4 9) குளத்தூர் ஜமீனின் இரண்டாவது மகனான ஜேபி இராமசாமிக்கு ஆற்காடு நவாபுடன் ஏற்பட்ட நட்பு சாராயத் தொழிலை அறிமுகப்படுத்துகிறது, மார்டினா ரோசல்பட்டி என்ற  கத்தோலிக்க பெண்ணுடன் குடும்பம் நடத்த புரோட்டஸ்டன்ட் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிக்கு தடை இருந்ததாகக் குறிப்பிடுகிறார். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கட்ட பொம்மனால் உருவாக்கப்பட்ட ரகசிய சங்கம் திருநெல்வேலி வீர சங்கம் இவர்களுக்கும் பெரிய மருதுவிற்குமான தொடர்பு போன்ற பல தகவல்கள் தரப்பட்டுள்ளது. 


சின்ன மருது ஊமைத்துரைக்கு உதவினதால், பெரிய மருது சின்ன மருதுவிற்காகத்  தண்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

வெள்ளைகாரர்கள் சிவகங்கையின் மன்னர் என்ற பதவிக்குப் பதிலாக இஸ்திமிரார் என்ற பதவியில் கௌரி வல்லபர் வருவதும், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் வேங்கையின் மனைவிக்கு மாதம் நாற்பது பணம் ஓய்வூதியம் தரும்படி ஆங்கிலேய அரசு கட்டளையிடுவதும் மனுதர்மப்படி மருது, சின்ன மருது, வேங்கை மனைவிகள் மனுதர்மப்படி தனது அடிமைகள் என்பதால் ஓய்வூதியம் கொடுக்கப்போவது இல்லை என்று வல்லபர் கூறியது சரி என்பதை பிராமணர்கள் வழி தெரிந்து கொண்டதால் ,  ஆங்கிலேயர் அதில் தலையிட விரும்பவில்லை  என்ற தகவல் தருகிறார். 

அயிதர் அலி, சிவாஜி, அவுரங்கசீப் செய்த அடாவடி தான் மக்களால் வெள்ளைக்காரர்களை விரும்பக்  காரணமாகினது என்று குறிப்பிடும் கதை ஆசிரியர் ராஜா, ராணி என்று ஆட்சி செய்த உள்ளூர் ஆட்சியாளர்களின் பங்கைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.

 

வேங்கைக்கு முதல் மனைவி, வேலு நாச்சியாரின் மகள் வெள்ளைச்சியைப் பற்றி இரு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின், வேங்கை மணம் முடித்த பெரிய மருதுவின் மகள் மருதாத்தாள்  அத்துடன் வேங்கையின் இன்னொரு மனைவி என்று மூன்று மனைவிகள் இருந்த நிலையில் மூன்றாவது மனைவி என்னவானார் என்பதே இல்லை.


அயிதர் அலிக்கும் வேலுநாச்சியாருக்கும் இருந்த அரசியல் நட்புணர்வு, வேலு நாச்சியார் பதவியில் வர அயிதர் உதவினது, ஷியாப் பிரிவு அயிதருக்கும் சன்னி துலுக்கரான ஆற்காடு நவாப்பிற்கும் இருக்கும் எதிர்நிலையும், வேங்கையனுக்கு பிரச்சினை என்றதும் வேங்கை மனைவி மருதாத்தாள் நவாப் மகனை அணுகுவதும், லக்னோவின் அருகிலுள்ள ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தில் எனது பாட்டனார் பிறந்து இங்கு நவாபாக வந்தார் . எங்களை வைத்து உங்களை ஒடுக்கிய கம்பெனி இப்போது எங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டது. இன்று  ஒரு பரதேசியாக தர்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற நவாபின் மகனின் வார்த்தை, நவாப் ஆங்கிலேயர்களுடன் இணக்கத்தில் இல்லாது இருந்ததால் தற்போது பதவி இழந்ததும் கதையில் காண்கிறோம். 


கிறிஸ்டியனா சொல்வதாகச் சொல்லப்படும் மோசஸ் கதைக்கு ஆதாரம் எது என்றும் கதை ஆசிரியர் குறிப்பிடவில்லை. மோசஸ் என்று ஒரு பெரிய மகான் இருந்தார். எங்கள் சாமி கிறிஸ்துவுக்கு முன்னால் அவர் தான் எங்க மூதாதையர்களுக்குச் சாமியாக இருந்தார் என்று துவங்கும் கதை முற்றிலும் பைபிள் கதைகளுக்கு , யூத மரபுக் கதைகளுக்கு மாறுபட்டது மட்டுமல்ல தவறானது.  


ஷியா சன்னி மோதலும், கத்தோலிக்க புராட்டஸ்டன்டு மோதலும் திண்டுக்கல்லில் கன்னடம் பேசும் திப்புசுல்தான் ஆட்சி, பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள், தஞ்சாவூர் மராட்டியர் ஆட்சி , நாகப்பட்டினத்தில் ஆற்காடு நவாப்பின் ஆட்சி, டச்சுகாரர்கள் தரங்கம்பாடியில் டேனிஷ் மிஷன் இதைத் தவிர்த்து சீமையின் எல்லையில் மலையாளம் பேசும் திருவாங்கூர் ராஜாவின் ஆட்சி,  தங்கள் பகுதியில் உள்ள இரண்டு பாளையங்களில் ஆட்சியாளர்கள் பேசுவது தெலுங்கு.  72 பாளையங்களில் மறவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள 10 பாளையங்கள் தவிர்த்து மற்ற பாளையக்காரர்கள் இன்னமும் கையெழுத்துக் கூட தெலுங்கு பயன்படுத்தும் தகவல் தருகிறார்.



ஆட்சி கையிலிருந்தால் வாணிபத்தை அபரிதமாகப் பெருக்கலாம் என்று கிழக்கிந்தியக் கம்பெனிகள் கண்டறிந்தனர், அரசர்களின் குடும்பப் பெண்கள் மூலம் ஒரு மதத்தைப் பரப்புவது எளிது என்று மதகுருமார்கள் கண்டறிந்தனர்;  பெண்களுக்கே உரிய புதிய வாணிபப் பொருட்கள் மீதான ஆசை, போட்டி அரசிகளின் பிள்ளைகளைத் தவிர்த்து தன்னுடைய பிள்ளையை அடுத்த அரசனாக உருவாக்க;  வெளிநாட்டு ஆட்களின் உதவி, செல்வாக்கைத் தக்க வைக்க, கூடுதல் செல்வாக்குப்பெற; மன நிம்மதிக்கான புதிய வழி என்று பல காரணங்களோடு சொந்த மதத்தின் நிராகரிப்பும் வறுமையும் மத மாற்றத்திற்கான சூழ்நிலையை உருவாக்கியது என்ற மதமாற்றத்திற்கான காரணத்தை அடுக்குகிறார் ஆசிரியர்.

சீனர்களை விட மற்றவர்களை விட தமிழர்கள் நன்றாக வேலை செய்வீர்கள் என்று தெரியும், எதிர்த்துப் பேச மாட்டீர்கள், கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்வீர்கள் என்பதால் நிச்சயம் நாங்கள் மலாய்க்காரர்கள் சீனர்களுக்குத் தரும் சம்பளத்தை கட்டாயம் உங்களுக்கு தருவோம்; சீனர்கள் சுரங்க வேலையில் கில்லாடிகள். இது போன்ற தகவல்கள் இன்றைய வடமாநிலத் தொழிலாளர்கள் நிலையை நினைவுபடுத்துகிறது.

 


ஓர் ஊரில் ஒரு அரசன் இருந்தாராம் எவ்வாறு ஒரே சூழலில் வாழும் ஒருவனுக்கு நல்லது நடக்கிறது மற்றவனுக்குக் கெட்டது நடக்கிறது என்று அவரிடம் கேட்டால் அதற்கு மந்திரி சொன்னாராம்,  அது அவனவன் தலையெழுத்து -  இது போன்ற கூர்மையற்ற விவரணைகள் பக்கத்தின் அளவை மட்டுமே கூட்டியுள்ளது.  

துரைசாமி கெடா சுல்தானின் சுரங்கத்தில் வேலை பார்க்கிறான் அவனோடு அவனது சகாக்கள் 20 பேர் இருக்கிறார்கள். இந்த ஊரில் நல்ல பெயர் வாங்கி கவர்னரின் பரிந்துரையுடன் சீக்கிரம் ஊருக்குப் போக வேண்டும் என, கடுமையாக வேலை செய்கிறான். கைதிகளில் ஆறு பேருக்கு மாதா மாதம் பிழைப்பு ஊதியமாக இரண்டு பவுண்டும் துரைசாமிக்கு  மாதம் 4 பவுண்டும் வேங்கை உடையணத்தேவருக்கு மாதாந்திர பென்ஷனாக 30 பவுண்டும் அனுமதிக்கப்படுகிறது.


ஆவணத்தின் தகவல்களை அடுக்கி கொண்டு போகும் கதை ஆசிரியர் கதை மாந்தர்களுடன் சம்பவங்களின் கோர்வையாக சுவாரசியமாக கதை சொல்ல மெனக்கிடவில்லை. ஒரே தகவல் அடங்கிய ஒரேமாதிரியான  வரிகள் மீண்டும் மீண்டும் வருவது வாசிப்பவர்களுக்கு  அலுப்பூட்டுகிறது. ஒரு கதை வாசிக்கும் உணர்வைத் தருவதை விடுத்து, இயல்பில்லாத உரையாடல்களுடன் கதை சொல்லப்பட்டுள்ளது. 

ஒரு சிறந்த புத்தகத்திற்கு அதன் ஆசிரியர் மட்டுமல்ல மட்டுப்படுத்தும் திருத்தித் தொகுப்பாக்கம் செய்யும் பதிப்பாசிரியர் மிகவும் அவசியம் என்று உணர்த்திய புத்தகம். இந்தக் கதை சார்ந்த வரலாற்றை பலர் எழுதி உள்ளனர். இதில் புதிதாக தகவல் கிடைக்கும் என்ற ஆர்வத்தைக் களையும் படி பல வரலாற்றுத்  தகவல்கள் மழுப்பப்பட்டுள்ளதாகவே உள்ளன.

பொன்கோலன் சிறையில் அடைக்கப்பட்ட வேங்கைக்கு மாதாந்திர பென்ஷன் ஆக 30 பவுண்ட் அனுமதிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் கொட்டடி அறையை விட்டு வெளியே வருகிறார் 


வேங்கையுடன் கடைசி நாட்களில் வெள்ளையன் என்ற ஒரு நாய் உள்ளது. அதைப் பற்றிய குறிப்பு இப்படியாக கதை ஆசிரியர் விவரிக்கிறார்:  ஊரில் இந்நேரம் எங்களையடக்கி ஒடுக்கிவிட்டதாக கொக்கரித்துக் கொண்டிருப்பார்கள் வெள்ளையர்கள். ஆனால் வெள்ளையன் ஒருவனே எனக்கு காவலாக, என் காலடியிலேயே, என் கழிவுகளைச் சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறான் என்று பதில் சொல்லவே இந்த நாய்க்கு வெள்ளையன் என்று பெயர் வைத்தேன். ஒவ்வொருமுறை என் ஏவலுக்கு இந்த நாய் கட்டுப்படும் போதெல்லாம் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. திருப்தி பரவுகிறது. இந்தக் கூற்று வேங்கையனின் சிறுபிள்ளைத்தனமா அல்லது எழுத்தாளரின் வன்மம் கொண்ட வரலாற்றுப் புனைவா?

இரண்டு மாதம் குளிக்காமல் இருந்த வேங்கையன் ஒரு மருத்துவர் கட்டளைக்கு இணங்கி குளிப்பிக்கப்படுகிறார். தனக்கு குடி தண்ணீர் வைத்து இருக்கும் பானை கூட கழுவிப் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாது இருக்கிறார். இது வேங்கையன் என்ற மனிதரை ராஜாவாகப் பார்ப்பதை விட பணக்கார வீட்டில் இருந்து வந்து வேலுநாச்சியார் மகளை மணம் முடித்து ராஜாவாகி மருதுவின் ஆளுமைக்கு உட்பட்டு மறைந்த மனிதரைத் தான் காட்டுகிறது. 

சின்ன அம்மான், மருது அம்மான், அத்தை வேலுநாச்சியார், மருதாத்தாள், விட்டு விட்டு வந்த துரைசாமி என்று ஒவ்வொருவராக கண்ணுக்குள் வந்து சென்றார்கள் . காளையார் கோயில் யுத்தம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், காட்டுக்குள் இருக்கும் மரப்பொந்துக்குள் மருது பாண்டியர்கள் திரவியத்தை ஒளித்து வச்சிருக்காங்க என்று வெள்ளையர்கள் சொன்ன புரளியை நம்பிய பண ஆசை பிடித்த சனங்கள், யாரும் நுழைய முடியாத காளையார் கோயில் காட்டுக்குள் செல்ல வழி பண்ணிக் கொடுத்து  மருதுக்களைக் கைவிட்டதாக வேங்கை குற்றம் சாட்டுகிறார் என ஆசிரியர் சொல்கிறார். 

பொன் கோலன் கோட்டையில் காலை 10 மணிக்கு வேங்கை தனது இறுதி மூச்சை விடுவதுடன் கதை முடிகிறது. 


ஆவணங்களின் அடுக்கல்களாக மட்டுமே மிஞ்சி நிற்கும் காலாபாணியை ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக ஏற்றுக்கொள்ள மனம் தயங்குவது தவிர்க்கமுடியாததாகிறது.


'புத்தகம் பேசுது ' மார்ச்சு 10,  2023  இதழில் பிரசுரமான பதிவு

 

19 Dec 2022

புத்தக விமர்சனம் - விலகி போகாத நினைவுகள்

 


மத நிந்தனை செய்ததாகக் கூறி 2010 ல் ஒரு ஜூலை மாதம் மத வெறியர்களால் கை துண்டிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் டி.ஜே.ஜோசப்பின் சுயசரிதை ஆகும் ’விலகி போகாத நினைவுகள்’(அற்று போகாத்த ஓர்மகள்)! இப்புத்தகம்   2021 ஆம் ஆண்டின் கேரள சாகித்ய அகாடமி விருதை பெற்றது. ஜோசப்பின் 'அற்று போகாத்த ஓர்மகள், மதத் தீவிரவாதத்தைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவங்களின் தொகுப்பு மட்டுமல்ல, ஒரு தனி நபரின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களும் ஒன்றுக்கு பின் ஒன்றாக சந்தித்த  சோதனைகளும் அதை தொடர்ந்த  வலிகளும் இழப்புகளும் ஆகும்.  

 

மலையாளப் பாடம் தேர்வுத் தாளில் கேள்வி அமைத்ததில் (internal exam) ஒரு கேள்வியில் இருந்த ஒரு வார்த்தைக்காக குற்றவாளியாக மாற்றப்பட்டு ஜெயிலுக்கு சென்றவர்,  பிற்பாடு கை இழந்து, வேலை இழந்து கடைசியில் தனது மனைவியையும் இழந்தார்.

 

உயிருக்கு பயந்து வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பேராசிரியர், ஒரு நாள், தனது சுகவீனமான தாயார்  மற்றும் கிறிஸ்தவ சபை பெண் துறைவியான தனது சகோதரியுடன் ஞாயிறு காலை நேர ஆராதனைக்கு போய் விட்டு தனது காரில் திரும்புகிறார். சாலையின் ஒரு வளைவில் வைத்து, பேராசிரியரின்

காரை இன்னொரு வாகனத்தை வைத்து இடை மறித்து,  தாய் மற்றும் சகோதரியின் முன் வைத்து, கைக் கோடாலி மற்றும் மூன்று கத்திகளால் கை மொளி, கணங்கால் வெட்டப்பட்டு தெருவில் கிடக்கிறார்.

 

இச்சம்பவம் வீட்டினருகில் நடந்ததால், சத்தம் கேட்டு வந்த பொறியியல் கல்லூரி மாணவரான மகன் மற்றும் மனைவி துணையுடன் ஆம்புலன்ஸ் வருவித்து மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறார். தனது நண்பனான பக்கத்து வீட்டு பேராசிரியரிடம் தன் அற்றுபோன கையை தேடி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கும் படி கேட்டு விட்டு  மருத்துவமனையை சென்று அடைகிறார் பேராசிரியர்.

 

18 மணி நேர நீண்ட அறுவை சிகிச்சைக்கு பின்பு கிடைத்த விரல்கள், கைகள் சேர்த்து வைத்து தைத்து சேர்க்கின்றனர்.  கவலை தோய்ந்த மகனை கண்டதும், அப்பாடா தலை தப்பித்தது, ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தோம் என ஆறுதல் படுத்துகிறார்.

 

இப்புத்தகம் வழியாக  கேரளாவில் நிலவும் இன்றைய மத சமூகம் எவ்விதம் தனிமனிதர்கள் உரிமைகளுக்கு எதிராக நிற்கிறது என காண்கிறோம்.  .

 

 

தன்னுடைய குற்றமின்மையை நிரூபிக்க நெடிய நான்கு வருட சட்டப் போராட்டம், பெரும் சிகிச்சை செலவுகள், வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதால் ஊதியம் இல்லா நிலை அத்துடன் வக்கீல் கட்டணம் பிள்ளைகள் படிப்புச் செலவு என்று ஆசிரியர் குடும்பம் கடும் வறுமைக்குள் விழ ஆரம்பிக்கிறது.

"ஆசிரியர் குற்றவாளி அல்ல' என்று கேரளா நீதிமன்றம் விடுவித்து இருந்தாலும்,பேராசிரியர் அங்கமாக கொண்ட "சீரோ மலபார் திருச்சபையின் தலைமையில் உள்ள கல்வி நிர்வாகம்". பேராசிரியரை வேலைக்கு திரும்பப் பெற அனுமதிப்பதில் தாமதப்படுத்திக் கொண்டு வருக்கிறது.

 

வேலையில் இருந்து கிடைக்க வேண்டிய ஊதியம், பல சலுகைகள் பெற இயலாது, கடன்கள் மத்தியில் ஊசலாடி கொண்டு இருக்கிறது ஆசிரியர் குடும்பம்.  ஆளும் கம்யூனிஸ்டு, பிற்பாடு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், எதிர்கட்சி கம்யூனிஸ்டு, மக்கள்நல வாழ்வு சங்கங்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, சமூகத்தின் ஆளுமைகள் என எல்லா அமைப்பும் கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியரை திரும்பப் பெற வேண்டியும், கல்லூரி நிர்வாகம் மறுத்து வருகிறது.  ஆனால் பல உறுதி மொழிகளை கொடுத்து ஆசிரியரை தங்கள் பக்கம் வைப்பது போல பாசாங்கு செய்து, பேராசிரியர்  சட்டத்தை நாடாமல் இருக்கவும் தந்திரமாக செயல்படுகிறது. கடைசி வாய்ப்பாக கல்லூரி நிர்வாகம் விருப்ப ஓய்வு(voluntary retirement) என்ற ஒரு கருணையை பரிந்துரைக்கிறது.  நான்கு வருடங்களாக தொடர்ந்த  பிரச்சினைகள், வறுமை அத்துடன் மனைவியின் மனநிலை பிறழ் நோயுடனும் மல்லிடு கொண்டு இருக்கும் பேராசிரியர், வேலை திரும்ப பெற்றால் இழந்த வாழ்க்கையை  மீட்கலாம் என்று நம்பிக்கை கொள்கிறார்.

 

குடும்பம், ஜெபம் என்று மட்டுமே வாழ்ந்த வெளியுலகம் அத்தனை பரிசயம் இல்லாத பேராசிரியர் மனைவிக்கு, கிறிஸ்தவ சமூக விலக்கு நிலைகுலய வைக்கிறது . ஒரு கட்டத்தில் "மதங்களே இல்லாவிடில் எத்தனை நல்லது என்று புலம்ப ஆரம்பிக்கிறாள்", அத்துடன் பேராசிரியரை குற்றப்படுத்தவும் ஆரம்பிக்கும் மன அழுத்த நோய்க்குள்ளும் வீழ்கிறாள்.

 

ஆசிரியர் தனது மனைவியை முதன் முதலில் கண்டதை பற்றி இவ்வாறாக குறிப்பிடுகிறார். அரசு உதவி பெறும் கல்லூரியில் வேலை கிடைத்ததும் பெண் தேடும் படலம் ஆரம்பமாகிறது. கல்லூரி ஆசிரியரான ஜோசப்புக்கு  திருமணம் செய்து கொடுக்க அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலையிலுள்ள பல குடும்பங்கள் விரும்புகிறது. ஆனால் பேராசிரியருக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில், வெறும் 12 ஆம் வகுப்பு முடித்த, தகப்பன் இல்லா நிலையில் தாயின் அரவணைப்பில் வளரும் சலோமியை பிடித்துப்போய் விடுகிறது. தையல், அலங்காரம் போன்றவற்றில் பயிற்சி பெற்ற சலோமி தபால் வழியாக பட்டப்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டவள். ஆனால்  நிறைவேறாத ஆசைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு குடும்பத் தலைவியாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு அமைதியாக வாழ்த்து வருகிறவள். இப்போதைய நிலையில் தினக் கூலி வேலைக்கு போகவும் சலோமி தயங்கவில்லை. ஏதாவது வேலைக்கு போக தன்னை அனுமதிக்க வேண்டுகிறாள். ஜோசப் என்ற பேராசிரியர் தனது மனைவி வீட்டை விட்டு வேலைக்கு போவதையும் விரும்பவில்லை. ஆனால் மனைவியின் மன நோயை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பணிவிடை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சலோமிக்கு, தன் மகள் திருமணம் எப்படி நடக்கும், வீட்டை எப்போது கட்டுவது, கடனில் இருந்து எப்போது தப்பிப்பது என்ற கவலையும் மன அழுத்தமும் சேர்ந்து  நடமாட இயலாத வண்ணம் படுக்கையில் விழ வைக்கிறது.



ஒரு சூசையப்பர் திருநாள் அன்று, கோயிலுக்கு போய் வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் சலோமி. ஆயிரம் வெட்டில் பதறாத பேராசிரியர், தனது மனைவி இறந்ததும் உடைந்து நிலைகுலைந்து போகிறார்.

ஆனால் சலோமியின் மகள், இத்தனை துன்பத்தின் இடையிலும் கல்வி கடனில் படித்து செவிலியர் படிப்பை முடித்து அயர்லாந்து நாடு செல்கிறாள். அங்கிருந்து தனது ஊதியத்தை அனுப்ப ஆரம்பிப்பதுடன் குடும்பம் வறுமையில் இருந்து கரையேறுகிறது. பிற்பாடு தெலுங்கானாவை சேர்ந்த பாலமுரளி என்ற இந்து மனிதரை திருமணம் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.

மகளுக்கு கல்வி கொடுத்த தைரியம், கல்வி பெற இயலாத சூழலில் வளர்ந்த சலோமிக்கு கிடைக்க வில்லை.

ஆசிரியரின் வழக்கில் எந்த வகையிலும் குற்றவாளியாக இல்லாத சலோமி; காக்கா, குருவி, அணிலுக்கு,  உணவு வைத்து மகிழும் சலோமி, தனது உயிரை ஈடு வைத்து தனது கணவருக்கு திரும்பவும் வேலை கிடைக்க தனது தற்கொலையை ஒரு ஆயுதமாக பாவிப்பதுடன் ’நிறுவன’ கொலைக்கு இரையாகிறாள்.

பேராசிரியர் ஜோசப்பின் வாழ்கை சரிதத்தில் ஆரம்பித்து சலோமி என்ற எளிய பெண்ணில் மரணத்துடன் வாசகர்களை நிலம் குத்தி நிற்க செய்கிறது புத்தகம்!.

 

சலோமியின் மரணத்தை தொடர்ந்து, சமூக அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் வேலையில் திரும்பப்பெற சம்மதிக்கிறது. வேலையில் தொடர ஆசை இருந்தும்; வெள்ளிக் கிழமை வேலையில் பிரவேசித்து, சனி, ஞாயிறு விடுமுறைக்கு அடுத்த நாள், திங்கள் அன்று வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் அவல நிலைக்கு தள்ள வைக்கிறது  கல்லூரி நிர்வாகம்.

10 வருடங்களுக்கு பின் கையை வெட்டியவன் பேராசிரியரிடம் மன்னிப்பு பெற்று விட்டார். பேராசிரியருக்கும் வெட்டியவன் மேல் எந்த ஆதங்கமும் இல்லை. ஆனால்  தான் நம்பின தனது மத நம்பிக்கையோடு இணைந்த, தன் சகோதரி துறவியாக சேவையாற்றும்  சபை தன்னை முற்றிலும் புரக்கணித்ததை பேராசிரியரால் இன்னும் ஜீரணிக்க, புரிந்து கொள்ள இயலவில்லை.  பேரா தி.ஜா. ஜோசப் தனது சர்ச்சைக்குரிய கேள்வியால் இஸ்லாத்தையும், முகமது நபியையும் மட்டுமல்ல  நம்முடைய பரிசுத்த திரித்துவத்தையும்  அவமதித்துள்ளார் என்று கிறிஸ்தவ கல்லூரி நிர்வாகம் கூறினது பேராசிரியரை அதிர்ச்சிக்குள் ஆக்குகிறது.  

 

 

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் வாசிக்கும் சுற்றறிக்கை வழி ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை தனிமைப்படுத்துவதை கதையில் காண்கிறோம். பேராசிரியர் சிறையில் இருக்கையில், ​​தீபிகா என்ற கிறிஸ்தவ நாளிதழில்  பேராயர் மார் ஜோசப் பவத்தில் மதச்சார்பின்மை என்ற கட்டுரை வழியாக ”ஒரு கிறிஸ்தவப் பெயர் தாங்கிய ஒரு ஆசிரியரிடமிருந்து இந்தச் செயல் வந்திருக்கக் கூடாது” என்று கிறிஸ்தவ சபை மக்களை முழுதும் பேராசிரியருக்கு எதிராக அணி திரட்டும் பிரசாரங்களை முன்னெடுகும் போது ஒரு தனி மனிதராக எதிர் கொள்ளும் சூழலையும் விளக்கி உள்ளார் . தனக்கு எதிராக செயல்பட்டதால் கர்த்தர் கொடுத்த தண்டனை என கொக்கரிக்கும் உடன் பணியாற்றும் பெண் துறவியின் வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளார். ஒரு ஆசிரியராக எளீய வாழ்க்கை வாழ்ந்து வந்த பேராசிரியர், கதை, ஜெயில், காவல்னிலையம் வழக்காடு மன்றம் என்ற சட்ட அமைப்பில் சிக்கி தவிக்கும் நிலையையும் வாசிக்கிறோம்.

 

கேரளாவின் இட்டுக்கட்டின ’மேம்பட்ட சமூகம்’ என்ற முகத்திரையை கிழித்த புத்தகம் இது. ஆயிரம் தரம் வெட்டுப்பட்ட கைகால்களுடன் வாழ்ந்து வரும் பேராசிரியர் தற்போது  வலது கையால் எழுத இயலாத நிலையில்  இடது கையால் எழுத கற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு கேள்வியால், தான் சார்ந்த சபையின் எதிர்ப்பை சந்தித்து, தனிமையில் தள்ளப்பட்ட, அவரறியாதே  மத-அரசியல் போரில் இரையாகி மடிந்த பேராசிரியரின் சரிதை இப்புத்தகம் விருவிருப்பாக வாசிக்க வைக்கிறது. ஒரு ஆசிரியர், ஒரு நல்ல ஆசிரியராக மட்டும் இருந்தால் போதாது என்று உணர்த்திய புத்தகமும் கூட! ஆசிரியருக்கே உருத்தான பகடியுடன் கதையை நகத்தும் பாங்கு சுவாரசியமானது. ஒரு கிராமத்து பேராசிரியர் சர்வதேச மத விரோத அரசியலில் மாட்டுப்பட்ட கதை சொன்ன சுவாரசியமான எளிய மனிதனின் வாழ்க்கை துயரை மிகவும் இயல்பாக கொஞ்சம் பகடியாகவே சொல்லிய புத்தகம் இது. இதன் ஆங்கில மொழியாக்கம்  ‘ A Thousand cuts‘ என்ற பெயரில் பென்கிவின் பதிப்பகத்தால் வெளிவந்து விட்டது.

18 Oct 2022

நெல்லையப்பர் கோயில் பெயர் வரலாறு!

 

பெருவாரி தென் இந்திய கோயில்கள் கடல், மலை மற்றும் காடுகள் அருகில் இருப்பதாகவே உள்ளது. பழம் நாட்களில், மனிதர்கள் மரங்களில் கடவுள் இருப்பதாக எண்ணி மரங்களை வணங்கி வந்துள்ளனர்.  அதன் நீட்சியாகவே உயரமான கோயில்கள் உருவாகி இருக்கலாம் என்கின்றனர். பிற்காலம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரம், ஸ்தலவிருக்ஷங்கள்  ஆகின.

நெல்லையப்பர் ஆலயம் உருவான காலம் பற்றி ஒரு திட்டமான தகவல் இல்லை.  ஆனால்  ஒரு கோயிலின் காலதின் வரலாறு, இலக்கியம் மற்றும் பக்தி கிரந்தங்களில் உள்ளவையோ அல்லது கட்டிட கலையின் அமைப்பை வைத்தோ கண்டு பிடிக்க இயலும். அவ்வகையில் நெல்லையப்பர் கோயில் காலம் ஏழாம் நூற்றாண்டு எனக் கணக்கிடுகின்றனர்.

 

இக்கோயிலின் கற்பகிரகத்திலுள்ள சிறு விக்கிரகம்  மற்றும் அரை மண்டபம் , ஏழாம் நூற்றாண்டில் சேந்தன் மாறன் உருவாக்கியுள்ள ’மலையாண்டி குறிச்சி’ கோயில் மாதிரி இருக்கிறது என்கின்றனர். அதனால் இந்த இரு கோயில்களும் ஒரே காலயளவில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது..

நெல்லையப்பர் கோயில், காந்தியம்மை மற்றும் சிவனுக்கும் என  850 நீளம் 756 வீதி என்ற அளவில் சமமாக பிரிக்கப்பட்ட இரட்டை கோயில் ஆகும்.  இக்கோயிலில் ஏழாம் நூற்றாண்டில் வணங்கிய மூர்த்தி  மூல மகாலிங்கம் ஆக இருக்கவே வாய்ப்பு உள்ளது  என்கின்றனர்.

திருவிளையாடல் மற்றும் ரெட்டை புலவர் வென்பாவில், இக்கோயிலின் மூல மூர்த்தி மூங்கில்களின் முத்து  என்ற பொருளில் வெய்முத்தார் என்றே குறிக்கப்பட்டு உள்ளது.  இக்கோயில் மூர்த்திக்கு அரிகேசரி பராக்கிரம பாண்டியன் ஒரு தங்க கிண்ணம் கொடுத்தாக  குறிப்பு உள்ளது .

13 ஆம் நூற்றாண்டில் மூங்கில் காட்டுக்கு இடையில் இருந்து வந்தால் வெய்முத்தார் அல்லது வேணு வனநாதர் ன்றும் அழைக்கப்பட்டுள்ளார். 17 வது நூற்றாண்டில் எழுதப்பாட்டகிளை வீடு தோது’ என்ற குறிப்பிலும் வெய்முத்தார் என்றே குறிப்பிட்டு உள்ளனர்.

 

இன்று அழைக்கும்  நெல்லையப்பர் என்ற பெயர் சுந்தர பாண்டிய 1 குறிப்பில் மட்டுமே உள்ளது. மற்றய பல குறிப்புகளில் இம்மூர்த்தியை

 திருநெல்வேலி தேவர்

திருநெல்வேலியுடைய தம்புரான்

திருநெல்வேலியுடைய நாயனார்

வேணுவனனேஸ்வரர் ,  வ்ரிகிவரிஸ்வரர், மற்றும்

திருகம்மகொட்டடு ஆளுடைய நாச்சி என்றே அழைழைத்துள்ளனர்.

 

மாறவர்மன் கொனெரின்மை கொண்ட பெருமாள் சுந்தர பாண்டியன் குறிப்பில்பூசம் பிரண்ட திருனெல்வேலி பெருமால்என்று அழைத்துள்ளனர். 17 வது நூற்றாண்டில் ஆட்சி செய்த மாறவர்மன் பொன்னின் பெருமாள் என்றும் அழைத்துள்ளார். அவ்வகையில் நெல்லையப்பர் காந்திமதி என்ற கடவுள் பெயர்கள் பிற்பாடு கொடுக்கப்பட்டது என்றே முடிவாகுகிறது.

 

அதே போல கோவிலில் கட்டிட அமைப்பை அவதானிக்கையில் அரமணிமண்டம் வரைநிற சீர் நெடுமாறன்’ கட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். மணிமண்ட இசை தூண்கள் மற்றும் நாயகமன்னர்கள் காலத்தையது என்கின்றனர்.

 

எப்படி இருந்தாலும் ஒரு சிறு மூர்த்தியுடன் நிலைகொண்ட கோயில்  பாண்டிய காலம் துவங்கியே ஆரம்பிக்கப்பட்டாலும் நாயகக்க காலத்தில் நிறைவு பெற்றுள்ளது.