பாசமிகு என் சகோதர சகோதரிகளே அணு உலையை பற்றி எனக்கு கிடைத்த சில தகவல்களை பகிர விரும்புகின்றேன். இதில் மனித நலம் அல்லாது எந்த சுயநலமோ அரசியல் சார்போ இல்லை. நான் பகிரும் தகவல்களை குறித்து கருத்துரையாட, விருப்பம் தெரிவிக்க மட்டுமல்ல தகவலில் தவறுகள் உண்டு எனிலும் தெரிவிக்க எல்லா உரிமையும்,பதிவை வாசிக்கும், புரிந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை மிகவும் அன்புடன் கேட்டு கொள்கின்றேன். http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_03.html
16 Sept 2011
11 Sept 2011
பூவே பொலி பூவே பொலி பூவே..........ஓணம்!!!
நம் பக்கத்து மாநிலம் கேரளா சகோதர்கள் நேற்று ஓணம் கொண்டாடி முடித்துள்ளனர். 20-22 வருட முன்புள்ள என் ஓணம் நினைவுகளும் இன்று என்ற போல் என் இதயத்தில் உள்ளது. ஓணம் என்பது எங்களுக்கு காலாண்டு விடுமுறை நாட்களாக இருப்பதே கூடுதல் மகிழ்ச்சி. ஓணத்தை சிறப்பாக எல்லா கேரளத்தவர்களும் இந்து, கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகு பாடு இல்லாது கொண்டாடுவதில் காத்திரமான முனைப்பில் இருப்பார்கள். எங்கள் வண்டிபெரியார் பஞ்சாயத்தில் கைபந்து, நாட்டுப் புற பாடல்கள் பேச்சு போட்டி என பல கலை-விளையாட்டு போட்டிகள்கள் நடைபெறுவது உண்டு. அதில் சாப்பாட்டு போட்டி தான் மறக்க இயலாதது.
http://www.youtube.com/watch?v=37JH7aAp6csஎங்கள் கொண்டாட்டங்கள் நாங்கள் செல்லும் ஆலயத்தை தழுவியே இருந்துள்ளது. எங்கள் ஆலய பாதிரியார் ஒரு ஆங்கில இந்தியரான ஜோசப் டி அல்மெய்டா குழைந்தைகளின் விளையாட்டை உற்சாகப்படுத்துபவராக இருந்தார். ஆலயத்தில் பாடல் குழு இளைஞர்களே விழாவை நடத்தி செல்வர். எங்களை கவர்ந்த உயரமான ஊஞ்சலில் ஆடுவதற்க்கே ஓணம் வருகைக்காக காத்திருப்போம். எங்கள் மடம் கன்னியாஸ்திரிகள் வருவது வரை நியாயமான மகிழ்ச்சியுடன் ஓணம் கொண்டாடினோம். பின்பு கன்னியாஸ்திரிகள் கொண்டு வந்த மலையாளம்- தமிழ் பாகு பாடு ஓணம் மகிழ்ச்சியை கெடுத்தது என்பது மட்டுமல்ல விழாக்கள் மேல் ஈடுபாடு அற்றதாக்கியது.
ஓணம் நாள் திருவாதிரக்களி http://www.youtube.com/watch?v=hQJaePC5w0I&feature=related என்ற கேரளா நடன போட்டி வைப்பது உண்டு. நாங்களே பாட்டு அமைத்து நடனம் ஆடும் நிகழ்வுகள் சுவாரசியமானது. யாரும் பயன்படுத்தாத பாடல் வேண்டுமென்று மலையாள கதை புத்தகங்களிலுள்ள வரிகள் சேர்த்து கலவை-மறுகலவை பாடல்களுடன் நடனத்தில் பங்கு பெற்றால் மார்க்கு இடுபவர்கள் ஆள் பார்த்து மார்க்கு போட்டனர் என்று பெரிய சண்டையும் நிகழ்வது உண்டு. ஒரு முறை என் தம்பியார் மகாபலியாக நடித்த நிகழ்வுகள் மனதில் மறையாது உள்ளது.
இனி ஓணம் கதைக்குள் சென்று விடுவோம்……ஓணம் சார்ந்து ஒரு அழகான சுவாரசியமான கதை உண்டு. 10 ஆயிரம் வருடம் முன்பு பிரக்லாதனின் பேரன் “மஹாபலி” என்ற ஒரு திராவிட(அசுரன்)அரசர் கேரளா நாட்டை ஆட்சி செய்துள்ளார். அவர் நல்லாட்சியில் மக்களுக்கு துன்பம் இல்லை, துக்கம் இல்லை நோய்-தரித்திரம் இல்லாது; மக்கள் பணக்காரன் ஏழை என்ற இல்லாது ஜாதி மதம் பேதமில்லாது எல்லோரும் சுகமாக வாழ்ந்துள்ளனர். http://www.youtube.com/watch?v=QzR3DfNvA24&feature=related சுகமாய் வாழும் மக்கள் தம்மை நினைப்பது இல்லையே என்று தேவர்களின் தலைவர் இந்திரனுக்கும் அவர் கைப்படிகளுக்கும் பொறாமை வந்து விட்டது . ஒரு முடிவுடன் மேலுலகத்தில் சென்று விஷ்ணுவை சந்தித்தனர். நீங்கல் தான் தீர்வு தர வேண்டும் மகாபலி எங்களுக்கு நிகராக வளர்ந்து விட்டதால் மக்கள் எங்களை மதிப்பதில்லை என்று கதறினர்.
மனம் உருகிய விஷ்ணு குள்ளையான பிராமணன் (வாமனன்) வேடம் தரித்து பூமிக்கு வருகை புரிந்துள்ளார் . மகாபலியை கண்டு 3 மிதியடி மண் வேண்டும் என்று கேட்க மகாபலியும் சூழ்ச்சி புரியாது எடுத்து கொள்ள அனுமதிப்பார். வாமனன் ஆகாயம் முட்டும் வளர்ந்து ஒரே மிதியால் பூமியும் அடுத்த மிதியில் வானவும் கைய்யகப்படுத்தி விட்டு மூன்றாவது கால் மிதிப்பது எங்கே என்று கேட்பார் , மகாபலியும் மனமுகர்ந்து பணிவுடன் தன் தலையை காட்டுவார். விஷ்ணுவும் மூன்றாவது மிதியில் மஹாபலியில் தலையில் கால் வைத்து பூமிக்கு அடியில் தள்ளி விடுவார். மகாபலி தன் கடைசி ஆசையாக உங்கள் திருவுருவம் காட்ட வேண்டும் என்று கேட்க வாமன்னும் தன் அருமை பக்தனுக்கு தான் விஷ்ணு என்பதை வெளிப்படுத்துவார். மகாபலி தான் தன் மண்ணையும் மக்களையும் நாட்டையும் விட்டு போகும் சூழலுக்கு தள்ளப்பட்டாலும் விஷ்ணுவை பழிக்காது தன் மக்களை சந்திக்க ஒரு நாள் அனுமதி கேட்பார். பாதாள கவாடத்தின் காவல்காரனாக பதவி பெற்ற மகாபலி தன் மக்களை சந்திக்க வரும் நாளே இந்த பொன்னாளான ஓணம் திருநாள். பலவித உணவு, விளையாட்டுகளுடன் கேரளா மக்கள் தங்கள் மன்னரே வரவேற்ப்பதாகும் ஓணம் பண்டிகை!
ஓணம் 10 நாட்களாக கொண்டாடுகின்றனர். கற்கடகம் முடிந்து செழிப்பான சிங்கம்(ஆடி , ஆவணி) மாதத்தில் வரும் திருவிழா என்பதால் விளைவெடுப்பின் நாளாகவும் கொண்டாடுகின்றனர். ஓணம் நாட்கள் பூக்களின் காலம் ஆகும் என்பதும் மற்றொரு சிறப்பே.
அத்தப்பூவால் (நம்ம ஊர் கோலம் அல்லது ரங்கோலிக்கு பல வித வர்ணங்களில் பொடி பயன்படுத்துவதற்க்கு பதில் பல வண்ணம் பூக்களால்) வீட்டின் முற்றத்தை அலங்கரிப்பதுடன் தங்கள் அன்பான மன்னரை வரவேற்க்க மக்கள் தயாராகிவிடுகின்றனர். வீட்டின் முன்பு விஷ்ணு-மாவேலியின் உருவ பொம்மையை( திருக்காரயப்பான் ) வைக்கின்றனர். அத்தப்பூவில் முதல் நாள் மஞ்சள் வர்ண பூக்கள் மட்டுமே பயண்படுத்துகின்றனர். இரண்டாவது நாள் சித்திரை அன்று தான் மன்னர் வருகின்றார். அன்று வீடு சுத்தப்படுத்தி மன்னரை வரவேற்க்க காத்திருக்கின்றனர், ஆலய தரிசனவும் செய்கின்றனர் இன்னும் 2 வர்ணங்களிலுள்ள பூக்களும் சேர்த்து கொள்கின்றனர். மூன்றாவது நாள் சோதி அன்று 4-5 வர்ணங்களில் பூக்கள் இடுவதுடன் அத்தப்பூ பெரிதாகி கொண்டே போகின்றது. அன்று சந்தைக்கு சென்று புது பொருடகள் வாங்குவதில் மகிழ்ச்சி காண்கின்றனர். 4 வது நாள் விசாகம் அன்று தங்கள் விளை பொருட்களை சந்தைய்ப்படுத்துகின்றனர். http://www.youtube.com/watch?v=rj9ftDKxUU0&feature=relmfu 5 வது நாளில் வள்ளம் களி என்ற படகு போட்டி நடைபெறுகின்றது. 6 வது நாள் தங்கள் வீடு விட்டு வெளிநாடுகளில் மற்றும் வசிப்பவர்களும் தங்கள் சொந்த வீடு வந்து சேர்கின்றனர்.
7-வது மற்றும் 9-வது நாள் ஓண சத்யா என்றழைக்கப்படும் விருந்து கொடுக்கப்படுகின்றது அன்று புலிக்களி/கடுவாகளி விளையாட்டும் நடைபெறுகின்றது. ஓணம் அன்று கொடுக்கப்படும் விருந்து அலாதி ருசியான சைவ சாப்பாடு ஆகும். மலையாளிகளிடையில் ஒரு பழமொழி உண்டு “காணம் விற்றும் ஓணம் உண்ணனம்” அதாவது நிலைத்தை விற்றாவது ஓணம் அன்று சாப்பிட வேண்டியது அவசியம் என்பதே. அந்தளவு ஓணம் விருந்துக்கு பிரதம இடம் கொடுக்கின்றனர். ஓணம் சாப்பாட்டிற்க்கு கேரளா அரிசி சாப்பாடு என்பது மாறின போது ஆந்திராவில் இருந்துள்ள பொன்னி அரிசியும் சாப்பாட்டிற்க்கு சேர்க்க ஆரம்பித்து விட்டனர். முதல் சுற்றில் சாம்பார், பருப்பு கூட்டு, நெய்யுடன் பப்படவும்(அப்பளம்) சேர்த்து விருந்து ஆரம்பமாகின்றது. கேரளா சாம்பார் தேங்காய் சேர்த்து நிறைய காய்கறிகள் பயன்படுத்தி செய்வதாகும். அத்துடன் எல்லா காய்கறிகளும் சேர்த்த அவியல், அதற்க்கு துணை சேர்ப்பது போல் கூட்டு கறி இதில் பயறு வகைகள் சேர்த்திருப்பார்கள். அத்துடன் புடலங்கா போன்ற காய்கறியில் செய்யும் ஓலன், புளிக்காத தைரும் தடியங்காயும்(கும்பளங்க) சேர்த்து வைக்கும் காலன், கடைசியாக ரசம் வந்து சேருகின்றது. அருகில் கூட்டாக 4 உப்பேரி வகைகள் நேந்திராக்காயில் செய்வது அத்துடன் நாட்டு வாழைக்காயால் செய்யும் வெல்லம் சேர்த்த இனிப்பு சிப்ஸ், இஞ்சி –புளி தீயல், ஊறுகாயுடன் கேரள மண்ணின் தனி தன்மையுடன் ருசியான விருந்து படைக்கின்றனர். புதுகோடியுடன் வாழை இலையில் உண்ண வேண்டும் என்பதே ஆசாரம்!
8வது நாள் ஓணத்தப்பன் என்ற சிலையை அத்தப்பூவில் நடுவில் நிறுவுகின்றனர். 9 வது நாள் தான் படு ஆற்ப்பாட்டமாக ஓணம் விருந்துடன் பண்டிகை ஆசரிக்கப்படுகின்றது. 10 வது நாள் அதாவது இரண்டாம் ஓணம் அன்று வாமனன் உருவத்தில் வந்த விஷ்ணு மகாபலியை பூமிக்கடியில் தாழ்த்திய நாள். அன்றே மகாபலி மக்களிடம் விடை பெற்று செல்கின்றார். அன்று ஆலயங்களில் வழிப்பாடு நடைபெறுகின்றது. கேரளாவில் கொச்சின் பக்கம் ஒரு ஆலயவும், வாமன்மூர்த்திக்கு என தமிழகத்தில் கன்னியாகுமாரி சுசீந்தரத்தில் மற்றொரு ஆலயவும் உண்டு. சென்னையில் மஹாபலிபுரவும் மாவேலி என்ற இம்மன்னம் பேர் கொண்டே உள்ளது என்பதும் கூடுதல் தகவல் ஆகும். 4வது ஓணம் அன்று இன்று மகாபலியின் உருவ பொம்மையை சமீப நீர் நிலைகளில் கரைக்கின்றனர். இன்றே புலி வேடத்தில் ஆடும் நடனம் சிரப்புற நடை பெறுகின்றது. ஓணம் நாட்களில் கலாச்சார நிகழ்வுகள் திருவாதிரைக்களி, மோகினியாட்டம், கதைகளி போன்ற கேரளா நடனங்களும், விளையாட்டுகள் முழு வீச்சில் நடை பெறும் காலமாகும்.
(நேற்றைய முன் தினம் ஓணம் நாள் பதிவிட திட்டமிட்டிருந்த பதிவு சில மென்பொருள் பிரச்சனையால் பதிய இயலவில்லை. இன்று நார்வேயிலுள்ள பத்மன் அண்ணாவின் உதவி கொண்டு பதிவை பதிய இயன்றதில் மகிழ்கின்றேன். அண்ணனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!)
7 Sept 2011
உங்கள் உயிர் யாரிடம்?
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது நாகரிக உலகத்தில் மனிதநேயம் அற்ற செயல், பண்பற்ற காட்டு மிராண்டிதனம் , என்ற வாதத்தின் அடிப்படையில் உலகில் 3ல் 2 பகுதி இங்கிலாந்து ஆஸ்த்ரேலியா , ஜெர்மெனி போன்ற நாடுகள் உட்படும் http://blog.amnestyusa.org/deathpenalty/business-as-usual-for-death-penalty-outliers/ 139 நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்த போது; தற்போதும் 58 நாடுகளில் மட்டுமே நிலுவையில் உள்ளது. இந்த கொடிய செயலை பின் தாங்கும் நாடுகளில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது சீனா அடுத்தது ஐந்தாவது இடத்தில் உள்ள உலக போலிஸ் என்று போட்டி போட்டு அநியாயம் புரியும் அமெரிக்க, அத்துடன் பாகிஸ்தான், இரான் போன்ற சில இஸ்லாமிய நாடுகளும், ஆத்மீயத்தின் ஊற்றாம் கருணையின் பிறப்பிடமாம் இந்தியாவும் ஆகும்.
1987 ஐக்கிய நாட்டு சபையில் மரண தண்டையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்திற்க்கு வாக்கு எடுப்பு நடத்தி தோல்வி கண்ட போது மரண தண்டனை வேண்டும் என்று குரல் கொடுத்ததில் மகாத்மாவின் அஹிம்சை கொள்கை கொண்ட நம் இந்தியாவும் உண்டு என்பதே கசக்கும் உண்மை. 2000 ஆண்டில், மனித நேயர்களான 146 நாடுகளில் இருந்துள்ள 3.2 மிலியன் மக்கள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்து இட்ட மனு ஒன்றை ஐக்கிய நாட்டு சபை அன்றைய செயலாளர் கோபி அண்ணனிடம் சமர்ப்பித்துள்ளனர்.
1767 ல் Ceare Beccaria என்பவர் எழுதிய "குற்றங்களும் தண்டனைகளும்" என்ற கட்டுரை அமெரிக்க அறிவாளி வர்கத்தின் சிந்தனையை புரட்டி போட்டது. இக்கருத்தாக்கத்தில் தாக்கம் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் “வெர்ஜீனியா மரண தண்டனை” என்ற சட்டத்தையை மாற்ற துணிந்தார். ஆனால் ஒரே ஒரு வாக்கால் இச்சட்ட மாற்றம் தோற்க்கடிக்கப்பட்டது. 19 நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்கர்களால் மரண தண்டனை ஒழிக்கப்பட்டாலும் ரஷ்யன் புரட்சியில் பின் 1920 ல் மறுபடியும் மரண தண்டனையை சட்டமாக்கியது துரதிஷ்டமே. அமெரிக்காவில் சில மாகாணங்களில் மரண தண்டனை நிர்த்தி வைக்கப்பட்டுள்ளது, சில மாகாணங்களில் விஷ அறை, மின்சாரம், அல்லது மீதேல் ஊசியின் துணை கொண்டு மரண தண்டனை கொடுக்கின்றனர்.
சீனாவில் 17 ஆயிரம் நபர்களுக்கு மரண தண்டனை கொடுக்கபட்டுள்ளது. ஒவ்வொரு வருடவும் 100 மனிதர்களை தண்டனை என்ற பெயரில் அரசே கொலை செய்து வருகின்றது. ஆள் கடத்தல், அரசுக்கு எதிராக கலகம் புரிதல், வருமான வரி ஏய்ப்பு செய்தல் ,மோசமான படம் தயாரிப்பது , இணைய குற்றங்களுக்கும், ஓரின சேர்க்கையளர்களுக்கும் மரண தண்டனை உண்டு சீனாவில். இன்னும் பல இஸ்லாமிய நாடுகளில் ஆட்கள் கூடும் இடத்தில் கல்லெறிந்து கொல்வது துப்பக்கியால் சுட்டு கொல்வது போன்ற கொடூர முறைகளையும் கைய்யாளுகின்றனர்.
மரண தண்டனை தேவை தான் என்று சொல்பவர்கள் சொல்லும் காரணங்கள் குற்றம் செய்தவர்கள் பெறும் தண்டனையால் மற்றுள்ளவர்களை பயமுறுத்துவதுடன், சட்டத்தை மீறும் மனிதர்களை சமூகத்தில் இருந்தே நிர்மூலப்படுத்துவது வழியாக மேலும் குற்றம் நடைபெறாது தடுப்பது, மனிதர்களை ஜெயிலில் அடைத்து காப்பதை விட செலவு குறைந்ததே மரண தண்டனை போன்ற காரணங்கள் ஆகும்.
ஆனால் ஒரு குற்றத்திற்க்கு பதிலாக இன்னொரு குற்ற செயலா?, நிரபராதிகளும் தண்டிக்கப்படும் வாய்ப்புக்கள் உண்டு, எந்த சட்டமோ நீதியோ சக மனிதனை கொல்லுவதை ஏற்று கொள்ள இயலாது, மேலும் குற்றம் என்பது சமூகம் மற்றும் மரபணு மாற்றங்களாலும் நிகழ்வதால் குற்றவாளியை மட்டும் குற்றத்தின் காரணமாக கற்ப்பிக்க இயலாது என்ற காரணங்களால் மரண தண்டனை தேவையில்லை என்று பெரும் பகுதி மக்கள் குரல் கொடுக்கின்றனர்.
நாம் காத்திரமாக சிந்திப்போமானால் ஒரு அரசியல் தலைவனை கொல்லும் போது காட்டும் அக்கறை, அரசியல் அமைப்பு சட்டத்தால் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் கொல்லப்படும் போது எடுத்து கொள்ளப்படுவது உண்டா என்பதே! போபால் விஷவாயு விபத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட போதும், கேரளாவில் ஒரு முழு கிராமமே பூச்சி கொல்லி மருந்து பயண்பாட்டால் உடல்- உபாதைகளால் மரணத்தை தழுவ க காரணமான அதிகார வர்கத்திற்க்கு தண்டனை கொடுக்க முன் வருமா அரசியல் சட்டம்?;அல்லது சொந்த நாட்டு மலைவாழ் மக்களை ராணுவம் உதவி கொண்டு அழிக்கும் அதற்க்கு பக்கபலமாக இருக்கும் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளை தண்டித்துள்ளதா நம் சட்டம்? மேலும் ஊழலால் நாட்டில் மக்கள் வறுமைக்கும் சமூகத்திற்க்கு எதிரான குற்றங்களுக்கு திரும்பும் அவல நிலைக்கு காரணமாகும் ஆளும் வர்கத்திற்க்கு சட்டத்தால் தண்டனை உண்டா?
அரசியல் அமைப்பு சட்டம் 21 ன் படி வாழும் உரிமை கொடுத்துள்ள அரசு தண்டனை என்ற பெயரில் உயிரை பறிப்பது எவ்விதத்தில் நியாயமாகும் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. இப்படியாக ஒரு கொலைக்கு பதில் இன்னொரு கொலையான மரணதண்டனை என்று ஒரு நாடு முன் மாதிரி காட்டி விட்டால் கிராமங்களிலும் பட்டி தொட்டிகளிலும் நடக்கும் பழிவாங்கும் கொலைகள் பற்றி என்ன சொல்வது?
இதில் மற்றொரு சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால் 3 பேரும் தமிழர்கள் என்ற போது வந்த உணர்வு 2005 ல் கொல்கத்தாகாரர் சாட்டார்ஜியை தூக்கிலிட பட்ட போதே வந்திருந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்திருக்கலாம். நம் தமிழர்களின் இந்த குறுகிய மனம் தான் பல நல்ல செயல் ஆக்கத்தை தடுக்கின்றது. தமிழன் என்று அல்லாது எந்த ஒரு மனிதனும் இந்த மாதிரி இழிய சாவை தர கூடாது என்பதில் ஆற்வம் கொண்டிருக்க வேண்டும். சாட்டார்ஜி கூட தன் மரண வாக்கு மூலத்தில் "அடுத்த ஜென்மத்தில் நான் பணக்காரனாக பிறக்க வேண்டும். நான் ஏழை என்பதால் தான் என் நியாயம் கேட்கப்படவில்லை" என்று கூறி விட்டு 14 வருடம் கடும் தண்டனை அனுபவித்த பின்பு அவரின் மனைவி வயதான தாயின் வேண்டுகோளையும் கணக்கிலெடுக்காது உயிரை பறித்தனர்.
மகாத்மாவின் “பாவியை வெறுக்காதே பாவத்தை வெறு” என்ற கூற்றுக்கு எதிராக குற்றவாளியை நாம் வெறுப்பதால் என்ன பலன் கிடைக்க போகின்றது. வெறும் 18 வயது 6 மாதம் நிரம்பிய வயதில் ஜெயிலின் படிகள் கண்ட பேரறிவாளன் போன்றோருக்கு 20 வருடம் தனிமை சிறையிலில் உடலாலும் மனதாலும் தண்டனை அனுபவித்த பின்பு மறுபடியும் தூக்கு தண்டனை வழியாக உயிரை பறிப்பதில் அரசியல் பழி வாங்கள் தவிற எந்த நியாயவும் இருக்கபோவதில்லை.
ராஜிவ் காந்தியின் கொலை அரசியல் காரணங்களுக்காக நிகழத்தப்பட்டது. இன்றளவும் யாரால் நிகழ்த்தப்பட்ட்து என்று ஒரு முடிவுக்கு வர இயலாத சூழலில் மூன்று உயிர்கள் அதுவும் பண, அரசியல் பலம் அற்ற ஏழை கூலிகளை கொலை செய்வதால் குற்றம் மறைந்து விடுமா? ஆட்டோ சங்கர் தண்டனையிலும் இதுவே நிகழ்ந்த்து பெண்ணை கற்பழித்து கொலை செய்தது சமூகத்தில் பண-அரசியல் பலமுள்ள நபர் என்று தெரிவித்த பின்பும் பெண் ஏஜென்றாக செயல்பட்ட ஆட்டோ சங்கர் மட்டுமே தூக்கிலேற்றப்பட்டார். ஆனால் அந்த கொலைகளுக்கு மூல காரணமாயிருந்த அதிகாரிகளோ அரசியல்வாதியோ தண்டிக்கப்படவில்லை. இப்படியாக சமூகத்தில் குரலற்ற ஏழைகளையும் பின்பலன் அற்றவர்களையும் மட்டுமே தண்டிக்க நம் சட்ட்திட்டங்கள் என்றால் அதை புரக்கணிக்கும் காலம் நெருங்கி விட்ட்து என்பதை மட்டுமே தீர்வு.
இத் தண்டனைகள் வழியாக சமூகத்தில் இருந்து குற்றவாளிகளின் அடையாளத்தை ஒழித்து விடலாம் என்றால் அது தப்பு கணக்கு என்பதே வரலாறு படிப்பிக்கின்றது. தன் கடைசி மரண வாக்கு மூலமாக 90 பக்கம் எழுதி படித்து விட்டு சென்ற காந்தியின் கொலையாளி நாதூராம் கோத்சே இன்றும் ஒரு ஹீரோவாக வணங்கப்படுகின்றார். அதே போல் முன் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையாளிகள் பியாந் சிங், கேயார் சிங், மற்றும் சுகதேவ் சிங் இன்றும் பஞ்சாபில் சிக்கு இனத்தின் இரத்த சாட்சிகளாக போற்றப்படுகின்றனர். அவர்கள் தங்கள் மரண வேளையில் தங்கள் செய்கைகளுக்கு வருந்தாது தங்கள் லட்சியம் நிறைவேறியுள்ளதாக கதைத்து விட்டே உயிரைவிட்டுள்ளனர். ஒவ்வொரு கொலையாளியையும் திருத்தவே ஜெயிலுகள் இருக்க வேண்டும் ஒழிய உயிரை பறிக்க அல்ல. இங்கு உயிரை காப்பது என்பது நம் உரிமையே, அதற்க்கு பதில் கருணை என்று ஜனாதிபதியிடமும் கொல்லப்பட்ட நபரின் மனைவியிடமும் கேட்பதில் அர்த்தம் இல்லை. அப்படியாகில் சட்டவும் அதன் செயலாக்கவும் அர்த்தமில்லாது மாறுகின்றது என்பது தானே பொருள்! ஒரு உயிரை நம்மால் கொடுக்க இயலாத மட்டும் உயிரை எடுக்கவும் தமக்கு உரிமை இல்லை என்பதை தனி நபர்கள் மட்டுமல்ல அரசு இயந்திரமும் புரிந்து முடிவெடுக்க வேண்டும்.
5 Sept 2011
மரண தண்டனை தேவையா?
இதயத்தில் ஈரம் உள்ள மனிதர்கள் யாவரையும் கவலை கொள்ள செய்த விடயமே மூன்று பேருக்கு தூக்கு தண்டனை என்ற செய்தி! தூக்கு தண்டனை என்பது தண்டனை பெறுபவர்களுக்கா அல்லது அவர்களை நேசிப்பவர்களுக்கா என்று நம்மை கலக்கம் அடைய செய்தது கடந்த வார நிகழ்வுகள்! ஒரு தாயின் 20 வருட கண்ணீருக்கு கிடைத்த விடை ஒரு மகனின் மரணமா? அல்லது 20 வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே தந்தையை கண்டுள்ள மகளின் துக்கத்தின் உச்சநிலை தான் இந்த தண்டனையோ? என்று நம்மை கலக்கம் அடைய செய்தது. பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பும் உண்மையே என்று தெரிந்திருந்தும் ஒரு மனிதனின் மரணத்தை ஒரு சமூகம் தன் சட்டம் கொண்டு திட்டமிட்டு நிகழ்த்துவதை ஏற்று கொள்ள இயலாத கசக்கும் உண்மை ஆகும்!
தண்டனை, என்ற பெயரிலுள்ள மனித கொலைகள் 3700 வருடங்கள் முன்பு; பாபிலோன் காலம் தொட்டே நிகழ்ந்துள்ளதை காணலாம். தண்டனை என்பது ஆட்சியின் அதிகாரத்தின் ஒரு பாகமாகவே இருந்துள்ளது. ஏதென்ஸ் சேர்ந்த சாக்ரடீஸ் மதத்தை துவேஷித்தார் இளைஞர்கள் மனதை கெடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு B.C 399 விஷம் அல்லது நாடு கடத்தல் என்ற தண்டனை வழங்கப் பட்டது. ஹெம்லோக் என்ற விஷத்தை தன் தண்டனையாக ஏற்று கொண்டு மரணத்தை தழுவியுள்ளார் அச்சிறந்த தத்துவஞானி. 5வது நூற்றாண்டு முதற்கொண்டே ‘கடவுளின் சட்டம்’ என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ”12 கட்டளை” மீறுபவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதை பற்றி பைபிளில் பல கதைகள் காணலாம். சிலுவையில் அறைவது, மரணம் வரை அடிப்பது, தண்ணீருக்குள் மூழ்கடித்து கொல்வது, அம்பு ஈட்டியால் குத்தி கொல்வது, கழுகு மரத்தில் ஏற்றுவது, பட்டிணி கிடைக்கும் சிங்க கூட்டில் இடுவது, எரியும் தீயில் தள்ளி கொலை செய்வது, கல் எறிந்து கொல்வது என தண்டனை என்ற பெயரில் பல வழிகளில் மக்களை கொலை செய்துள்ளனர். தமக்கு பிடிக்காதவன் வேதனையால் சாகவேண்டும் என்ற வன்முறையே இதில் ஒளிந்து கிடக்கும் உண்மை. யேசு நாதரும், தான் சொல்லிய கருத்துக்களுக்கு(பேச்சுரிமை) மதவாதிகளின் தூண்டுதலால் அரசியல் அதிகாரிகளால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டவரே.
1400-1800 காலயளவில் தான் தண்டனை என்ற பெயரில் மனிதன் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த ஹென்றி வில்லியம் -viii என்ற மன்னன் 72 ஆயிரம் மக்களை தண்டனை என்ற பெயரில் கொன்றுள்ளான். இரண்டாம் உலக போரில் ஹிட்லர் படை யூதர்களை தோலை உரித்தும், பட்டிணி இட்டும் விதவிதமாக மனிதனை கொன்று ரசித்துள்ளது. சமீபத்தில் ஈழப்போரில் இராசபக்சே ராணுவம் தமிழர்களை கொன்றும் அதை படம் பிடித்து நோக்கியும் ரசித்ததை நாமும் கண்டதே.
வரலாற்றை புரட்டி பார்த்தால் தூக்கிலிடுவது, தலையை வெட்டி கொல்வது சகஜமாக இருந்துள்ளது. 18 ம் நூற்றாண்டில், அமெரிக்காவில் 1830 ல் வெடித்த மக்கள் புரட்ச்சிக்கு பின்பு மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கூக்குரல் ஒலித்து கொண்டு தான் வந்துள்ளது. பின்பு தூக்கு தண்டனை என்பதை மின்சாரம் உதவி கொண்டு அல்லது மீதேல் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை வழங்குவது என்று மாற்றினர். ரோமாவில் 1849லும், வெனிசூலா நாட்டில் 1883 லும், போர்ட்டுகலில் 1867லும் மரண தண்டனை மக்கள் ஆர்வலர்களால் முற்றிலும் நீக்கப்பட்டது. உலகத்திற்கே கொடும் கொலைகள் கற்று கொடுத்த ரோமா சாம்ராஜியத்தின் பகுதியான வத்திக்கான் என்ற நாடு 1969 மரண தண்டனையை நிர்த்தி விட்டது. சமீபத்தில் 2010 ல் கபான் நாட்டில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்க முடிவு எடுத்தனர். பிலிப்பைன்ஸில் 1987 ல் ரத்து செய்து விட்ட பின்பு 1993 ல் மறுபடியும் நிறுவி 2006 ல் முற்றிலும் ஒழித்து கட்டிவிட்டனர். பல நாடுகளுக்கு அச்சுறுத்தலும் மற்று பல நாடுகளின் கண்ணில் கரடான இஸ்ராயேலில் 1961ல் அடோல்ப் எய்ச்மேன் (Adolf Eichmaan)என்பவருக்கு மட்டுமே மரண தண்டனை விதித்து கொன்றுள்ளனர். அவர் 2 உலகபோரில் ஹிட்லரின் நாஜி படையில் இருந்து கொண்டு பலஆயிரம் ஜூதர்களை துள்ள துடிக்க கொன்றவர் என்ற காரணத்தால் நிறைவேற்றினர். 2006-ல் சதாம் ஹுசைனுக்கு வழங்கிய தூக்கு தண்டனை உலக அளவில் விவாதிக்கப்பட்ட ஒரு மரணமே.
நமது நாடு இந்தியாவில் 1983 உச்ச மற்றத்தின் தீர்ப்பு படி மிக அரிதான குற்றங்களுக்கு மட்டுமே தூக்க தண்டனை என்று முடிவாகியது. கொலை, கொள்ளை, குழந்தைகள் மற்றும் தற்கொலைகளுக்கு தூண்டுபவர்களுக்கு மட்டுமே தூக்க தண்டனை என்று கட்டாயமாக்கியுள்ளனர். 1989 ல் நாட்டின் ஒருமை பாட்டுக்கு எதிரான கலவரத்தை தூண்டுப்பவர்களுக்கும் , தீவிரவாதம் மற்றும் கவுரவ கொலைகாரர்கள், என்கவுண்டர் என்ற பெயரில் பொது மனிதர்கள் மரணத்திற்க்கு காரணமாகும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கலாம் என்று மாற்றி அமைத்துள்ளனர்
சுதந்திரத்திற்க்கு பின்பு நமது நாட்டில் 55 நபர்கள் மரண தண்டனையால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அரசு கணக்கு உள்ளது. ஆனால் வெறும் 10 வருட காலையளவில் மட்டுமே 1953-1964 வரையிலும் 16 மாநிலங்களிலுமாக 1422 நபர்கள் மரண தண்டனையால் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் The People's Union for democratic Right(PUDR) கூக்குரல் கொடுக்கின்றது. சுதந்திர இந்தியாவில் உலகத்திற்க்கு அஹிம்த்சை வழிகள் சொல்லி கொடுத்த மகாத்ம காந்தியின் கொலையாளி என்று சொல்லப்படும் நாதூராம் கோட்சே முதல் முதலாக 1949 ல் தூக்கிலேற்றப் பட்டார். வேலூர் சிறையில் இருந்த ஆட்டோ சங்கருக்கு 1995 ல் தூக்க தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. கருணை மனுக்கள் கொடுத்து மறுதலிக்கப்பட்ட 29 பேர்களில் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3 பேர்களும் அடங்குவர். ராஜிவ் கொலையில் 26 மனிதர்களுக்கு தூக்க தண்டனை கொடுக்க ப்பட்டு 23 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்ட போது 3 பேர் மட்டும் வாழ்வா சாவா என்ற போராட்ட்த்தில் தள்ளப்பட்டு விட்டனர். இவர்களை தவிர்த்து தேவேந்தர் பால் சிங், காலிஸ்தான் போராளியும், வீரப்பனின் 4 உதவியாளர்கள், அமிர்தசரசிலுள்ள 3 நபர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்ற பிரவீண் குமார், பார்லிமென்று தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஹமத் அப்சல் குரு போன்றவர்களும் தூக்கு கயற்றின் நிழலில் வாழ்பவர்களே. பல வருடங்களாக 29 பேரின் கருணை மனுக்கள் நிலுவையில் நிற்கும் சூழலில் பிரதிமா பாட்டிலின் ஆட்சியில் 20 பேரின் மரணதண்டனை கருணை மனுவை முடக்கியது வழியாக 20 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. (தொடரும் )
27 Aug 2011
ரதிநிர்வேதம்- 1978-2011
இந்த வருடம் ஜூன் 2011 ல் டி.கெ ராஜிவ் குமார் இயக்கத்தில் கேரள திரை உலகில் ஆஹோ, ஓஹோ என்று புகழ் மாலையுடன் வெளிவந்த படம் ரதிநிர்வேதம். மலையாள தொலைகாட்சி சானல்கள் தொடர்ந்து பேசி கொண்டிருந்த படம் இது, கிளாசிக் படம் என்று போற்றப்பட்ட படம் என்றதால் பார்க்கலாம் என்று ஆவல் கொண்டேன். மேலும் இதே பெயரில் இதே கதையில், இதே திரைக்கதையில் 30 வருடம் முன்பு 1978 ல் ஜெயபாரதி நடிப்பில் வெளி வந்த படத்தின் மறுபதிப்பே இப்படம் என்பதும் ஒரு கூடுதல் தகவல்.
படத்தின் கதை இப்படியாக சொல்லப்பட்டுள்ளது. கதைத் தளம் எஸ்டேட் ஏரியாவில் குடியிருக்கும் இரு வீட்டு குடும்ப நபர்கள் மிகவும் பாசமாக உறவினர் போல் பழகி வாழ்ந்து வருகின்றனர். ஒரு வீட்டில் இரணடு அக்கா தங்கைகள் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அக்காளின் கணவர் வெளிநாட்டிலும், தங்கை கணவர் ராணுவத்திலும் பணி புரிகின்றார். அக்காவுக்கு ஒரே மகன். இப்போது தான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் நாட்களை எதிர் நோக்கி இருக்கின்றான். தங்கைக்கு 2 குழந்தைகள். பக்கத்து வீட்டில் 26 வயதுள்ள ஜெயபாரதி (ரதி) தகப்பன் இழந்த சூழலில் தாய் மாமா -அம்மா பாதுகாப்பில் இருக்கின்றார். அக்கா அக்கா என்று பாசமாக பழகி வரும் பக்கத்து வீட்டு பையனுக்கு திடீர் என்று அக்கா மேல் காமம் வந்து விடுகின்றது. தன்னை 2 வயது முதல் தூக்கி வளர்த்த அக்கா இப்போது உடை அணிந்திருந்தால் கூட நிர்வாணமாகவே தெரிகின்றார். சரியான தருணம் பார்த்து தன் காதலை கொச்சையான தன் செயலால் அக்காவுக்கு தெரியப்படுத்துகின்றான். அக்காவும் பையன் தப்பாக வளர்ந்து விட்டான் என்று சுதாரித்து ஒதுங்கி இருந்து கொள்கின்றாள். ஆனால் பையன் தன் கண்ணீரால் அக்கா நீ இல்லாவிடில் சாக போகிறேன் என்று அக்காவின் மனதில் மறுபடி இடம் பிடிக்கின்றார். அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கின்றார் அவருடைய விதவையான அம்மா! பையனுக்கு கல்லூரிக்கு போகும் நாளும் வந்து விட்ட்து. அக்காவை சந்தித்து 'நான் அடுத்த விடுமுறைக்கு வரும் முன்னே நீ உன் கணவர் வீட்டுக்கு போய் விடுவாய்'; அதனால் இன்று இரவு ஒரு குறிப்பிட்ட இடம் வந்து சேர அக்காவிடம் வேண்டுகின்றான். அக்காவும் இடம் வந்து சேர மழையும் இடியும் சேர்ந்து வர முதலில் அக்கா மறுத்தாலும் இரண்டு பேரும் ஒன்றாக கலந்து விடுகின்றனர். அக்கா பையனிடம் விடை பெற்று வீடு திரும்ப போகும் போது பாம்பு காலில் தீண்டி விடுகின்றது. அக்காவை மருத்துவ மனைக்கு கொண்டு போகின்றனர். அடுத்த நாள் காலை பையன் கல்லூரிக்கு பேருந்தில் ஏற அக்காவை சுடுகாட்டுக்கு எடுத்து செல்கின்றனர். இதுவே காலம் சென்ற பத்மராஜன் திரைக்கதையில், அமரர் அரவிந்தன் இயக்கத்தில் “ரதிநிர்வேதம்” என்ற பெயரில் 1978 ல் வெளிவந்த படம்.
ஜெயபிரதாவுக்கு 26 வயது என்கின்றனர் கதைப்படி. ஆனால் 36 வயதுக்கிற்க்கு மேல் அவர் முகம், உடல் காட்டி கொடுக்கின்றது. அக்கா என்பதை விட காட்சிகளால் சித்தி – அம்மா போன்ற உருவத்திலே தெரிவதால் இருவரும் வரும் காட்சிகள் காண அருஅருப்பாக உள்ளது. பையனுக்கு வந்த காதலை அக்கா ஏற்று கொள்ளாத நிலையில் ஏன் இரவில் சின்ன பையனை நம்பி போனார் என்று கேள்வியாகவே உள்ளது.
அடுத்தது கதையில் மையமே விடலை பருவ பையனினின் காதல் பற்றியதே அவனுக்கு அக்கா, கணவர் வீடு போகும் முன் அனுபவித்து விட்டு தான் கல்லூரி செல்லுவேன் என்று அடம் பிடிப்பதின் மனநிலை தான் விளங்க வில்லை. விடலைப்பருவ காதல் இந்த அளவு வன்மம் நிறைந்ததா? அது தன்னலம் அற்ற காமம் குறைவான பாச உணர்வு கொண்ட தெய்வீக காதலாக தானே இருக்கும் என பலருடைய அனுபவ கதைகள் கேட்க வைக்கின்றது.
அக்காவும் சில அக்காக்களை போல் அணைப்பது போல் கட்டி பிடிக்கவோ, மறைவாக கிள்ளி வைக்கும் ரகமோ அல்ல. ரொம்ப நல்ல அக்கா… பையான்னு தான் அழைக்கின்றார், பையனை ஒரு தாய் அன்புடன் தான் நேசிக்கின்றார். ஒரு போது கூட அக்காவுக்கு பையன், அந்த பார்வையில் தெரியவும் இல்லை. இருந்தும் அக்காவை காணும் போது எல்லாம், அவர் உடை இல்லாது தெரிவதும் அக்கா மனதை பார்க்காது உடலை மட்டும் பார்ப்பதும் அக்கா ஒன்றும் புரியாத வெள்ளைந்தியாக இருப்பது தான் நெருடலாக உள்ளது. இந்த சூழலில் பையன் அழைத்தானாம் அக்காவும் போய் படுத்தாராம். இந்த கருத்து தான் பெண் உளைவியலுக்கு எதிரானதாகப் படுகின்றது.
மேலும் இப்படத்தை புகழ்ந்த பல ஆண்கள், இது எல்லா ஆண்கள் வாழ்விலும் நிகழும் சூழல் என்றும் அதை திரையில் கண்ட போது ஆனந்தம் கொண்டதாக சொல்லியுள்ளனர். ஆனால் பல ஆண்கள் முதல் காதல் அவர்கள் ஆசிரியைகள் பக்கத்து வீட்டு அக்காவாக இருந்த சூழலிலும் “உடலே உயிர்” என்று அலைந்திருப்பார்களா என்று இந்த விமர்சனத்தை வாசிக்கும் ஆண்கள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.
மேலும் ஆண் பையன் வயதில் இப்படியாக சேட்டை செய்வான் என்றும் பெண் தான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என உரையாடல்கள் வழியாக ஆண்மகன்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். பெண்மையை அவர்கள் மனவலிமையை கொச்சைப்படுத்துவதாகவும் தான் உள்ளது. அப்படியும் பெண்கள் உண்டு என்று இயக்குனர் காட்ட விரும்பினால் அக்கா பாத்திரபடைப்பில் மாற்றம் கொண்டு வந்திருக்க வேண்டும்.
அடுத்து இந்த திரைப்படத்தை முடித்திருப்பது ஒரு பாம்பு சென்றிமென்ட் வைத்தே. அந்த பாம்பு அப்பெண்ணை மட்டும் ஏன் கடித்தது பாம்பு கூடவா ஆணாதிக்க பாம்பு என்ற கேள்வி எழாது இல்லை. சமூக நீதியின் படி தப்பு செய்த பெண் இனி பூமியில் உயிருடன் இருக்க கூடாது என்றும் ஆண் அதை ஒரு தூசி போல் தட்டி விட்டு அடுத்த வேலைக்கு செல்வதும் பெண் மேலுள்ள காலாகாலம் தொட்டுள்ள எண்ணமே நிலை நாட்டுகின்றனர்.
திரைக்கதை, கதைத்தளம், கதாபாத்திரம் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் கதை ஓட்டையாகவே இருந்தது. கேரளா கிராமப்புறத்தில் இருக்கும் இரு வீடுகளை கதைத்தளமாக கொண்டு இதே கதையை அப்படியே அதேபடியாக நடிகர்களை மட்டும் மாற்றி 30 வருடம் கடந்து விட்ட நிலையில் ராஜிவ் மேனோன் இயக்கத்தில் அதே பெயரில் படமாக்கிள்ளனர். ஜெயபாரதிக்கு பதில் ஸ்ருதி மேனோன் என்ற நடிகை நடித்துள்ளார். ஜெயபாரதியை விட யதார்த்தமாக நடித்திருந்தார் இருப்பினும் படத்தில் சொல்லியிருக்கும் வயதை விட முதுமை காட்டியது. மேலும் நடிப்பு திறமையுள்ள நடிகைகளின் உடலை வன்மையாக காட்டி கதையில் வரும் எல்லா ஓட்டைகளையும் மறைக்கலாம் என்று எண்ணுவது நல்ல யுக்தி அல்ல. படத்தின் காலமாக 1978 என்றே காட்டப்படுள்ளது.
காட்சி ஊடகம் வழியாக பெண் உடலையும், ஆண்-பெண் உடல் உறவையும் இதே போல் காட்சியாக எடுத்து பாலியல் பற்றியும் பெண் மனது பற்றியும் சமூக நிலை பற்றியும் எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாது எடுத்த இந்த படத்தை மீடியா ஏற்று கொண்டு விளம்பரப் படுத்தியிருந்தாலும்; மக்கள் ஒரு தரமான படமாக ஏற்று கொள்ளவில்லை என்பது பாராட்டுதல் குறியது. திரைப்பட ரசனையில் மக்கள் நல்ல நிலையை எட்டி விட்டனர் என்றே காட்டுகின்றது இப்படத்தின் வெற்றி நிலைவரம். பாலியல் பற்றி எவ்வளவோ அறிவு வளர்ந்து விட்ட நிலையில், இன்னும் ஆண் பெண் மனநிலைகள் பற்றி சரியான அறிவுகள் பெற வேண்டிய தருணத்தில் இப்படியான படத்தை எடுத்து இயக்குனர்கள் தங்கள் பெயர், நேரம், பொருள், ஆவியை விரயமாக்கவே செய்கின்றனர் என்று மட்டுமல்ல மனிதனை மிருங்களுக்கு சமமாக காட்டுகின்றனர்.
ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மை என்று மாற்றுவது போல் மீடியாவின் துணை கொண்டு வெறும் சாரம் அற்ற ஒரு படத்தை அதி மகத்தான படம் என்ற வளையத்திற்க்குள் கொண்டு வந்திருப்பது உண்மைக்கு மாறானதே.
கதை, படம் பிடித்த விதம் எல்லா நிலைகளிலும் இது ஒரு மட்டமான படமே என்று இப்படத்தை குப்பையில் போட்டு விட்டு அடுத்த ஒரு சிறந்த படம் தேடி கொண்டு வருகின்றேன் என்று உறுதி அளித்து விடை பெறுகின்றேன், நன்றி வணக்கம்!
Subscribe to:
Comments (Atom)









