11 Jul 2011

சாதாரணமானவளின் அசாதாரணமான நாள்!!!

இந்த வருடம் சாதாரணமானவளின் இந்த  நாளை அசாதாரணமாக்கி  தந்தனர்  என் முகநூல் உறவுகள் சிறப்பாக உளவியல் மன நிபுணரும் கணிணி மென் பொருள் வடிவமைப்பாளருமான பத்மன் அண்ணா!  பத்மன் அண்ணாவின் நட்பு தாமதமாக கிடைத்தாலும் ஆழமாக என் வாழ்க்கையில் பதிந்தது.                                                                                      2 நாட்களுக்கு முன்பே அத்தான் அவரின் விருப்பமான மாடலில் சுடிதார் வாங்கி தந்து விட்டார். கலர் தான் தோற்ற கட்சி திமுகவின் கொடிக்கலர் கருப்பும் சிவப்புமாக இருந்தது. ஆனால் டிசைன் அரிதானதும் அருமையாகவும்  இருந்தது. மேலும் கடந்த மாதம் சென்ற போது எனக்கு பிடித்த கலர் அவருக்கு பிடிக்கவில்லை அவருக்கு பிடித்த மாடல் எனக்கு பிடிக்க வில்லை  ஒரு மணிநேர போராட்டத்திற்க்கு பின்பு எதற்க்கு வம்பு என்று ஒரு சேலையுடன் வந்து விட்டேன்.  இந்த முறை கடைக்குள் சென்ற போதே போன முறை எடுத்து தந்த ஆள் கண்ணில் படக் கூடாது என்று நினைத்து கொண்டேன்.
பெரிய துணிக் கடைகளில் இப்போது பெரிய சோபாக்கள் கணவர்கள் உட்கார்ந்து தூங்க, குழந்தைகளுக்கு விளையாட ஒரு பகுதியும்  அமைத்து விடுகின்றனர்.  என்னவர் கூட அம்மா மஹாராணி  நான் அங்கு சென்று இருந்து கொள்கின்றேன் நீ எடுத்த பின்பு தெரிவித்தால் போதும் பணம் கொடுத்து விடுகின்றேன் என்பார்! முதலில் வரிசை வரிசையா அடுக்கி வைக்கப்  பட்டிருக்கும் துணிகளை காணும் போது எதை எடுக்க என்ற அங்கலாயிப்பு பின்பு கிட்ட நெருங்கினால் நமக்கு பிடித்த மாடல் ஒரு மாதம் உணவு செலவாக இருக்கும் அல்லது சுடிதார் தலை பக்கம் டிசைன் நன்றாக இருந்தால் கால் பக்கம்  துணி  அந்தளவு நல்லதாக இருப்பதில்லை.  இது இரண்டும் நன்றாக அமைந்து விட்டால் இடும் ஷால் சொதப்பி விடும். எல்லாம் பரவாயில்லை என்று எடுக்க சென்றால் இதன் கலர் கண்டாங்கி கலராக உள்ளது இது எனக்கு பிடிக்கவில்லை என்ற எதிர்ப்பு குரல் நம் வலது பக்கம் இருந்து வரும்!  அவர் விரும்பாது  அல்லது துணி எடுப்பிலும் அவரை நோகடிக்க வேண்டுமா என்ற நல்ல மனதில் அவர் கை காட்டும் சுடியில் இருந்து இரண்டு தள்ளி ஏதாவது ஒன்றை எடுத்து நகழ வேண்டியது தான்.



அவருக்கு பெண்டாட்டி எந்த கூட்டத்தில் நின்றாலும் தகதகவென்று மின்னி தெரிய வேண்டும் என எண்ணும் போது எனக்கோ யாரும் விரும்பாத /யாரும் எடுக்காத மாடலாக நான் தேடுவேன்; அதுவே எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பது என் கணக்கு!



சமீப நாட்களாக தோழிகளுடன் சென்று ஒரு முனிவரின் முகநூல் முற்றத்தில்  சென்று பஜனை பாடுவது  வழக்கமாக இருந்தது.  முனிவரும் பெரிய மனது கொண்டு பொறுத்து வந்ததால்; பஜனை பாட்டு, பின்பு கும்மியடியாக பரிமணித்து போனது. சுவாமிஜியும் தியானத்தில் இருந்து திடீரென விழித்தவராக அவருடைய சுவரில் ஒரு பாட்டை பதிய “அன்புள்ள காதலியே ஆசையில் ஓர் கடிதம்…” இதை கேட்டவுடன் இந்த குரங்குக்கு துள்ளி விளையாட ஆசை. சுவாமிஜி கடிதம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை என்று தன் குசும்பை ஆரம்பிக்க சுவாமிஜியும்  உனக்கு அந்த அருள் வாக்கு இல்லையம்மா என்று மறுவாக்கு தர அப்போ அந்த கடிதம் எங்கு சேர்ந்தது என்று எல்லா பெண் குரங்குகளும் ஒன்று சேர்ந்து கும்மியடிக்க கலியிளகிய முனிவர் ஆசிரமம் விட்டு கடற்கரை தேடி ஓடி போய் விடும் சூழல் உருவாக்கப்பட்டது.  முனிவரின் அன்பை கருணையை வேண்டுவதால்  சுவாமிஜி அடியேனின் பிழையை பொறுங்கள் என்று காலில் மண்டியிட்டு அவருக்கு மட்டும் ஒரு ரகசிய கடிதம் பிறப்பிக்கப்பட்டது. அடியேனுக்கு நாளை பிறந்த நாள் தங்களுடைய ஆசிர்வாதத்தை மறக்காமல் தந்து விடுங்கள் என்று.  மறு நாள் விடியும் முன்பே ஆசிர்வாதம் வருகின்றதா என்று காத்திருந்தாலும் சுவாமிஜி தியானத்தில் இருந்ததால் என்னமோ இன்னும் செய்தி வந்து சேரவில்லை.  அதற்க்குள் நோர்வேயிலுள்ள என் உடன்பிறவா சகோதரர் பத்மன் அண்ணா ஆளை அனுப்பி  பந்தல் கால் நட்டு பந்திக்கு ஏற்பாடு செய்து என் பிறந்த நாளுக்கான எல்லா  ஏற்பாடும் முடக்கி விட்டுள்ள  செய்தி வந்து சேர்ந்தது.


பண்பிலே சிறந்தவர் ..
படிப்பிலே உயர்ந்தவர்..
பாசத்திலே நிறைந்தவர் ..
இலங்கைத் தமிழரை ஆராய்ந்தார் ..
எமது வாழ்க்கையால் கவரப்பட்டார்…
எங்களை தனது சகோதரராக்கினார்..
அண்ணா என்னும் வார்த்தையால் அன்பூட்டும்
எங்கள் தமிழ்நாட்டுச் சகோதரிக்கு
யோசெபின் பாபாவுக்கு (J.P .Josephine Baba)
வாழ்வு மேலும் உயர்ந்திட ..
உங்கள் நற்சேவைகள் மேலும் பெருகிட
உங்கள் குடும்ப மகிழ்ச்சி மேலும் பெருகிட
அன்பான வாழ்த்துக்கள்…
ஆரவார வாழ்த்துக்கள் ..
மகிழ்வூட்டும் வாழ்த்துக்கள் ...
வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்..


கொஞ்சம் நேரம் கொண்டு மண்டபத்திற்க்கு நண்பர்கள் வர ஆரம்பித்தனர் வருபவர்களுக்கு நன்றி வணக்கம் மகிழ்ச்சி என்று நான் கதைத்து கொண்டு இருக்கும் போதே என் சகோதரர் பத்மன் அண்ணா அவர்களுக்கு காப்பி, ஜூஸ், கேக் என பரிமாறி கொண்டிருந்தார்.  சுவாமிஜியும் தன் ஆசிர்வாதத்தை இப்படியாக “அண்ணா என்ற சொல்லைத் தன் மூச்சிற்குள் செருகிவைத்திருக்கும் பாபாவின் வழிப்போக்கருள் நானும் ஒருவன். உலகப்பந்தின் பல புள்ளிகளில் இருக்கும் நட்புக்களுக்குள் இவர் ஒரு பெரிய புள்ளி. அதனால் இவரை அடிக்கடி காண்கின்றேன். வாழ்க வளமுடன்” பதிந்து விட்டார் சிஷியைக்கு மனம் பேரானந்தம் ஆகி விட்டது.



கருத்துக்கு மறுகருத்து விருப்பத்திற்க்கு நன்றி என அந்த நாள் சூடு பிடித்தது.  மாயப் பெட்டியுடனே முழு நேரவும் போயன! அக்காள் விம் சிவ் அவர்கள் அம்பாள் ஆலயம் முழுநாள்  பூசைக்கு திறந்துள்ளது என தன் பங்கு கருத்தை பகிர்ந்து குடும்பமாக வாழ்த்து அனுப்பியிருந்தார். எதிர்பாராத நட்பு வட்டங்கள் வந்தது ஆச்சரியவும் மகிழ்ச்சியுமாக இருந்தது. அதில் ரஞ்சனி ராஜா,  ரஞ்சனி ஸ்ரீ போன்றோர் அடங்குவர்!  தோழி ரஞ்சனி ஸ்ரீயை பல பொழுதும் நான் செல்லும் முற்றங்களில் சந்தித்தாலும் சிறு புன் சிரிப்புடன் விலகி கொண்டோம்  அவரிடம் இருந்த வாழ்த்து பெற்ற போதுதான்  என் பார்வை அவர் மேல் இருந்தது போல் அவரும் என்னை உற்று நோக்கியுள்ளார் என்று புரிந்து கொண்டேன்.



பெரும் மதிப்பிற்க்குரிய விம் சிவ் அக்கா, தோழி பிரமிளா சுகுமார், சந்திரவதனா அக்காள், என் ஆராய்ச்சிக்கு உதவிய தோழி  கானடாவில் இருந்து வந்துள்ள தமிழ்நதி அவர்கள், தமிழக தோழியும் அக்காவுமான ரேவதி போன்ற அக்கா தோழிகள் விருந்துக்கு வந்தது  இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


என் பாசத்திற்க்கும் நேசத்திற்க்கும் உரிய சகோதரர் பத்மன் அண்ணா, தன் எல்லா வேலைக்கும்  விடுப்பு கொடுத்து விருந்தின் எல்லா நடைவடிக்கையிலும் முழுவீச்சில் ஏற்பட்டிருந்தார்.




வாழ்க்கை போராட்டத்தில் வழி தெரியாது தவித்து நின்று அழுது கொண்டிருந்த போது, என்  கண்ணீரை துடைத்து விட்டு தன் அனுபவம் என்ற விளக்கை  தந்து வழி காட்டிய சஞ்சயன் அண்ணா மீன் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இருந்ததால் விருந்துக்கு வராவிட்டாலும் அவர் வீட்டு சன்னல் பக்கம் இருந்தே ‘ஹாய் செல்லம்’ என்று கைகாட்டி அருள் பொழிந்ததும் மகிழ்ச்சியே!





மதியம் சாப்பாடை கையில் எடுத்த  வேளையில் பிரான்சில் இருந்து நண்பர் “தேவாதாசன் அவர்கள் 10 மணிக்கு(பிரான்ஸ் நேரம்) அவசர வேலையாக வெளியில் செல்ல வேண்டியுள்ளது. உங்கள் சுவரில்  தோரணத்தை கண்ட போது வந்தேன்” என்று கதைக்க ஆரம்பிக்க ½ மணி நேரம் போனதே தெரியவில்லை. பெண்களிடம் அரசியலா என்று இளக்காரமாக எண்ணும் சூழலில் பெண்கள் இன்னும் சம உரிமை பெற வேண்டியவர்கள்.  முகநூலில் தஞ்சம் அடையாது ஆக்க பூர்வமான செயலிலும் சிந்தனை செலுத்த வேண்டும் என்று என்னை எப்போதும் நினைவுறுத்துபவர் ஆண்களில் மாணிக்கம் போன்ற என் நண்பர் தேவாதாசன் அவர்கள்.





இதனிடயில் காலை  அவசரமாக கேரளாவில் இருந்து என் உடன் பிறந்த சகோதரர் ஜாண்சன் வந்து சென்றார். அவர் மனைவியும் கிளம்பியுள்ளதாகவும் வந்து சேருவார் என்றும் சொல்லி விட்டு சென்றார். தங்கை  தூத்துகுடியில் இருந்து மிகவும் அவசர அவசரமாக “அக்கா பிள்ளைகளை தூங்க வைத்து வந்துள்ளேன். எனக்கு ஐஸ்சிரீம் மட்டும் போதும்” என வந்த வேகத்தில் பறந்தார்.  என்னை பெற்ற என் பெற்றோர் பல வருடங்கள் ஆகியதால் மறந்து விட்டார்களோ அல்லது இனியும் இந்த கொண்டாட்டம் தேவையோ என்று எண்ணினார்களோ தெரியவில்லை, தம்பியிடம் கதைக்கும் போது ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அம்மா பின்னால் நின்று வாழ்த்துவது மட்டும் கேட்டது!





நாகர்கோயில் சேர்ந்த அரசு அதிகாரியும் வலைப்பதிவர் சந்திப்பில் கண்டுகொண்ட நல்ல நண்பர் முருகன் தங்க சிவம், தம்பி பொன் பாண்டி, என் வகுப்பு தோழனாக இருந்த பிரகாஷ், என் ஆய்வு வழியாக சந்தித்த என் முதல் ஈழ சகோதர் கானா பிரபா அவர்கள், பாசமிகு சகோதரர் டோமினிக் சாவியோ, நண்பர் கண்ணன் சங்கர லிங்கம்,  நண்பர் குமார் குரு, நண்பர் கௌதம சின்னசாமி, என் வளர்ச்சியில் என்றும் அக்கரையுள்ள ஆனால் இதுவரையிலும் முகம் காணாத நெல்லை நண்பர் முனீஷ் குமார்,  சகோதரர் குருசாமி கனகராஜ், என் நண்பர் நடா சிவா தமிழ்க்கிறுக்கன், என் பாசத்திற்குரிய நண்பரும் சகோதருமான செல்வரஞ்சன் செல்லதம்பி அவர்கள் மனைவி குழந்தைகளுடன் வந்து சென்றது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் அனுப்பி தந்த சிவகாசியின் சொந்த மகளான ஜெயா வேல் அவர்கள், பத்திரிக்கையாளர் நண்பர் கன்னியப்பன் ஜெகதீஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஜா, கூல் ஜோய் போன்றோரும் வருகை தந்தனர். விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்த பாசமிகு  தமிழக சகோரர் சி.பி. செந்தில் குமார் 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்து அனுப்பியிருந்தார்.  தமிழ்வாசி முதல் பந்திக்கு வந்து தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
 


எனக்கு அரிய புத்தகங்கள் அனுப்பி தரும் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து ரத்தின வேல் அய்யா அவர்கள் மனைவியார்  உமா அம்மாவுடன் வந்திருந்தார்.  என் வாசிப்பை எப்போதும் உற்சாகப் படுத்தும் மாற்று கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள்  என்னை சேர உதவும் குமரகுருபரன் அண்ணாவும் தன் வாழ்த்தை தந்து சென்றனர்.  



அன்பு கவிஞ்சி தங்கைகள் கல்பனா,  சிவமேனகை பாசக்கார தங்கை அனு, தம்பி வலைப்பதிவர் ஜெயந்து, எங்கள் துறை மாணவர் தம்பி ராம் குமார் சகோதரர் முத்து குமார், நண்பர் பேராசிரியர் சக்தி வேல் அவர்கள், நண்பர் வந்திய தேவன் சோமசுந்தரம், பத்திரிக்கையாளர் ஐயா குமரேசன் ஆசாக் அவர்கள், தோழி கிருபா, சென்னை நண்பர் சூரிய சுரேஷ் , தமிழ்க திரைப்பட பாடல் காதலர் பவல் ராஜதுரை, கார்த்திகேயன் சரவணன், நபர் செம்மலர் செல்வன், கண்ணன் சுந்தரலிங்கம், சுரேஷ் நைட்ச்கை, பfஹாட் இப்ராஹிம், சென்னை சுரேஷ் , இலங்கையை சேர்ந்த பத்திரிக்கையாளரும் என் ஆய்வுக்கு உதவிய என் இனிய சகோதரர் எம் ரிஷான் ஷாரிfபின் வரவும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 



சகோதரர் ஸ்ரீதரன் கனகலிங்கம், சௌதியில் இருந்து அந்தோனி சேகர், மதுரை சிதம்பரம் காசிவிஸ்வநாதன் ஐயா, நெல்லையை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் எல்.வி பாலாஜி, நண்பர் பரணீதரன், நண்பர் சிங்கப்பூர் ராஜன், என் சொந்த தேசத்தில் இருந்து தற்போது டில்லியில் பத்திரிக்கையாளராக உள்ள பால் முருகன் அவர்கள் மலையாளத்தில் வாழ்த்து அனுப்பினார். மந்திரியின் அதிகாரி செல்வகுமார், சௌந்தர் பாண்டியன், தூத்துகுடி நண்பர் சாந்தகுமார், பிசாசு குட்டி, என் எழுத்தை எப்போதும் ஊக்கப் படுத்தும் நண்பர் ஜோசப் பொன்னுதுரை அவர்கள், புன்னகை அரசி சித்திரா சாலமன், என் நெடு நாளைய நண்பரும் நெல்லையின் மகனுமான ராம்ஜி யாஹூ அவர்கள் யாவரும் வந்து சென்றது வாழ்க்கையில் மறக்க இயலாத நெகிழ்ச்சியான சம்பவமாகின!




பத்மன் அண்ணா தோட்டம் வழியாக வந்த சகோதரர் பெண்களை மதிக்கும் சந்திரன் தர்மதேவி, தோழி வனஜா வேலாயுதம் பிள்ளை, ஐயா சுந்தர குமார் கனகசுந்தரம், மீரான் மொஹதீன், மாடசாமி சன்முகசாமி, நெல்லையை சேர்ந்த மலேசியாவில் வசிக்கும் என் சகோதரர் செந்தில் சுப்பு, மனோகரா மனோகர், நண்பர் ரவிசங்கர், பாடகர் ஹரிஹரனின் விசறி நண்பர் நாகா சிவா, ரஜி ரமா, நாகரத்தினம் போன்ற என் உயிரிலும் பெரும் உறவுகளான என் நண்பர்கள் வந்து சென்றனர்.


என் எழுத்தை எப்போதும்  உற்சாகப் படுத்துத்தும் இலங்கையின் பிரபல பதிவராம் பெரும் பாசத்திற்குரிய டொக்டர் சாப் M.K முருகானந்தம் அவர்கள்  என்னுடன் என்னவர் தன் மைத்துனரையும் வாழ்த்தி சென்றது மறக்க இயலாத மகிழ்வூட்டும் இன்பமகிழ்ச்சி!




ஜெயகுலராசா அவர் தோட்டத்திலுள்ள அழகிய பன்னீர் பூக்கள் அனுப்பினார். ஆசிரியர் சோ லிங்கம், நெல்லை வலைப்பதிவர் சங்கம் தலைவர் சங்கரலிங்கம் ராஜகோபால், என் பாசமிகு சகோதரர் என் ஆன்மீய வாழ்க்கையில் அக்கரையுள்ள சகோதரர் ஜெர்மெனியில் இருந்து தாவாவிஜய் அண்ணன், என் சமையல் குருவும் உலகின் பல முகங்களை பற்றி கதைக்கும்  தோழருமான பாடல் குறும்தட்டு அனுப்பி மகிழ்வித்த இங்கிலாந்திலுள்ள அன்பு நண்பர் பேட்ரிக் ஜூலியாஸ், மலேஷியாவில் இருந்து கேக்கு அனுப்பி மகிழ்வித்த தோழி ஜெயா நல்லப்பன், கவிஞர் ஐய்யப்ப மாதவன், நாகர்கோயில் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சிவராஜ மோகன், நண்பர் பத்திரிக்கையாளரும் உயர்நீதி மற்றம் வழக்கறிஞ்சருமான  சுந்தரராஜன், மலையாள கரயோர குமுதம் பத்திரிக்கையாளர் சிந்து




நல்ல நாளுமாக என் பேராசிரியர் முனைவர் கோவிந்த ராஜு அவர்கள் வீட்டுக்கு சென்று ஆசிர்வாதம் வாங்க சென்றிருந்தேன். அவர் அன்பு மனைவி கையால் இனிப்பு தேனீர் கிடைத்தது பாக்கியமாக இருந்தது.  கைகடிகாரம் பார்த்தால் 7.45 pm. ஆகா 8 மணிக்கு சுவிசில் இருந்து ஸ்ரீஅண்ணா 8 மணிக்கு வரவுள்ளாரே என்று பைக்கில் பறந்து வந்து வீடு சேர்ந்தோம். கடிகாரம் முள் தப்பலாம் நான் வாக்கு பாலிப்பவர் என்று அண்ணா 8.04 pm க்கு  காத்திரமாக வந்திருந்தார். "இவர் தான் மனித மனங்களின் உணர்வுகள் பற்றிய "ஆத்மலயம்" என்று நூலின் ஆசிரியர் Srikandarajah கங்கைமகன். என் மனதின் தோழனான ஆசானான  அண்ணாவின் கரிசனையான பாசமான அமைதியான இனிமையான வாழ்த்துக்கள் எனக்கு மட்டுமல்ல என் குழந்தைகள் அத்தானுக்கும் கிடைத்து.



மதிய உணவுடன் விருந்தை முடித்து கொள்ளலாம் என்று இருக்கும் தருவாயில் இனியும் நண்பர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வர இரவு டின்னரும் தயார் படுத்தி காத்திருந்தோம்.  ஜமுனாநதி நாகரத்தினம், ராணி  போன்ற தோழிகள் காலை 2.30 க்கு வந்திறங்கியவர்கள்  நடு நிசி 12மணி ஆகி விட்டது அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப. அவரை எங்கள் வீட்டில் தங்கி விட்டு செல்ல கூறினேன். அவர் குழந்தையை வீட்டில் விட்டு வந்து விட்டார் என்று விடைபெற்று சென்றுவிட்டார்!. 



பத்மன் அண்ணா, “போதும் அம்மா  விருந்து கொண்டாட்டங்கள் இனி நித்திரக்கு செல்லுங்கள் என உரிமையுடன் கொஞ்சம் கண்டிப்புடனே நினைவுப்படுத்தினார்”. பாசமிகு அண்ணா இன்றைய உதயம் முதல் உங்கள் தங்கையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கென நேரம், பொருள்,ஆவியும், செலவிட்டு பந்தியும் பரிமாறி விருந்துனர்களையும் வழி அனுப்பு மட்டும் என்னுடன் இவ்வளவும் நின்று நிகழ்ச்சிகளை சீறும் சிறப்புமாக நடத்திய என் பாசமிகு அண்ணா உங்களை வணங்குகின்றேன்.  அண்ணனின் அன்புக்கு அடுத்த ஜென்மத்திலாவது தங்கையாக பிறந்து கைமாறு செய்ய இயலும் என்றாக இருப்பினும் அவருக்காக ஒரு பாட்டு பாடி  தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே…………….!! http://www.youtube.com/watch?v=fsKk0g9P32Qபாடி நின்றேன்.





அம்மா தான் நான் சிறு குழந்தையாக இருக்கும் போது சொல்வார்கள் உன் உள்ளம் காலில் ஒரு மச்சம் உண்டு உலகு எல்லாம் சுற்றி வருவாய் என்று இந்த பிறந்த தினத்தில் உலகில் மிக முக்கிய நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்தேன் என் உடன்பிறவா சகோதரர்கள் என் அன்பு நெஞ்சங்கள் நண்பர்கள் தோழிகள், சகோதர்கள் எல்லோரையும் கண்டு வர.    நானும் இன்றய பயணக்களைப்பு, ஆடல் பாடல் கொண்டாட்டங்களால் வந்த அசதியில்  கண் மூடும் முன்பே தூங்கி விட்டேன். என் அன்பு பாச நெஞ்சங்களை என் கனவிலும் நினைவிலும் நீங்கள் மட்டுமே!   

10 Jul 2011

பிறந்த நாள் நினைவுகள்!

பிறந்த நாள் விழாக்கள் பெரிதாக கொண்டாடப் பட்டதாக நினைவில் இல்லை. இருப்பினும் பிறந்த நாள் அன்று பாயசம் செய்து பக்கத்து இரு வீடுகள் எதிர் வீடு சேச்சிக்கும் எங்கள் குடும்ப நண்பர் தாசன் மாமா  வீட்டுக்கு சென்று கொடுத்ததும் ஞாபகம் உள்ளது. பிறந்த நாள் அடி, திட்டு வாங்க கூடாது என்று முன் நாளே அறிவுறுத்தப்பட்டிருக்கும். அன்றய நாள், திடீர் தாக்குதலான அம்மாவின் விளக்குமார், செருப்படிக்கும் பயப்பட தேவையில்லை. புது உடுப்பு கிடைத்திருக்கும் அந்த உடுப்பை இட்டு காலை ஆலயம் சென்று திருப்பலியில் ஆண்டவரிடம் ஆசிர்வாதம் பெற்று திரும்ப வேண்டும் என்பது அம்மாவின் கட்டாய சட்டமாக இருந்த்து.  பள்ளிக்கு, சீருடை என்பதால்  புது துணி, அப்படியே வரும் ஞாயிறு ஆலயம் செல்லும் வரை பெட்டியில்  காத்து இருக்கும் என்பதே வழமை!

புது துணி வாங்கி தருவது அம்மா என்பதால் அம்மாவுக்கு பிடித்த மாடல், கலர் என்பது என் மலையாள தோழிகளிடம் ஜாடை காட்ட இயலாது என்பதும் ஒளித்து வைக்கப்பட்ட மாபெரும் துயர்களில் ஒன்றாக இருந்தது.  என் மலையாளத் தோழிகள் குட்டை பாவாடை, விதவிதமான உடுப்புகள், கையில்லாத சட்டையுடன் டயான கட்- ஸ்டெப் கட் என்று நாகரிக தலை முடி கட்டுடன் பள்ளிக்கு ஸ்டையிலாக வரும் போது நம் கலாசாரம்… அவளுக காலை கையை காட்டும் போல் ஆகாது, நம் சொந்தகாரர்கள் பார்த்தால் ஏதும் கதைத்து விடுவார்கள் என்று அரைப் பாவாடை முக்கால் பாவாடையாகவும் முடி பின்னி பூவைத்து விடும் அளவுக்கு வளர்த்து பின்னி  அனுப்பினார்.

அம்மாவுக்கு எல்லாம் முழுமையாக அழகாக அவரின் ரசனையில் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் உண்டு! அதனால் துணிமணிகள் துவைப்பது, தேய்த்து அடக்கி வைத்து அதை அந்தந்த நாட்களுக்கு இடுவிப்பது மட்டும் அல்லாது;  என்ன வேலையாக இருந்தாலும் தலையையும் அம்மாவை வாரிவிட்டு,  சொல்லியும் கேட்காது சில பொழுது இரட்டை சடை பின்னி பூவை தோரணமாக வைத்து கண் மறையும் வரை வீட்டில் இருந்து பார்த்து டாடா இட்டு வழியனுப்பி ஒரு ஆயிரம் அறிவுரைகள் தந்து அனுப்பி விடுவார்.  மலையாளப் பயலுகளை நம்ப இயலாது தேவை இல்லாத வம்பில் மாட்டி விட கூடாது நாம் பிழைக்க வந்த இடம்; பார்வையை அங்கு இங்கு அலைய விடாக்கூடாது பார்த்துக்கோ; நேரா ரோட்டை பார்த்து நடக்கணும் போகும் போது அந்த வலது பக்கமா போ வரும் போது இடது பக்கமா விரைந்து வா....  இப்படியாக என் தாத்தா, அப்பா என எங்கள் குடும்ப மானமே என் தலையில் சுமக்க வைத்து அனுப்பி விடுவார்கள்.

அம்மா கண் மறையும் மட்டும் தலையில் பூ இருக்கும் பின்பு பூவை எடுத்து என் மலையாளி கூட்டாளிகள் போல; ஒரு எலி வால் அளவுக்கு மல்லிகை அல்லது பிச்சிபூ மட்டும் தலையில் வைத்து விட்டு, வைத்திருக்கும் கனகாம்பரம் ரோஜாப்பூ எல்லாம் பைக்குள் பத்திரமாக இருக்கும் மாலை சூட்டி கொள்ள என.  ஒரு பிறந்த நாள் அன்று இப்படி தான் நான், ஒரு தமிழ் இரட்டை வால் குருவியாக போக என் நண்பிகள் இதை விட “வைசாலி” கெட்டு உனக்கு நன்றாக இருக்கும் என புதியதாக வந்த படத்தின் மோடலில் வடிவா சீவி சிங்காரித்து அனுப்பினர்.  என்னை எதிர்பார்த்து நின்ற அம்மாவுக்கு என்னையும் முந்தி தலையும் புது மாடல் கொண்டையும் தெரிய அம்மாவுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. வாழ்க்கையில் அந்த தலைமுடிக் கெட்டை நினைத்து பார்க்க கூடாது என்றளவுக்கு தலையை கலைத்து முடியை கையில் சுற்றி  மாவு ஆட்டுவது போல் ஒரு ஆட்டு ஆட்டி, எண்ணை தேய்த்து அவர் விரும்பும் மாடலுக்கு கட்டி விடும் வரை அடங்கவில்லை!  

ரஷியா புரட்சி முதலாம் சுதந்திர போராட்டத்தின் முடிவில்  ஆரம்பித்திருக்கலாம் ஆனால் என் சுதந்திர  போராட்டம் இடுப்பளவு உள்ள தலை முடியை கழுத்தளவு வெட்டுவதில் தான் ஆரம்பித்தது. பின்பு மிகவும் வற்புறுத்தபட்டு திருமணத்திற்க்கு என மறுபடியும் தலைமுடியை இடுப்பளவாக வளர்க்கப்பட்டேன். மாமியார், பெண் என்றால் தலை முடி தான் அவசியம் நீ ஒரு போதும் முடியை வெட்ட கூடாது அது எங்கள் குடும்ப சட்டம் என்று தலை நிறைய வலுகட்டாயமாக தேங்காய் அண்ணை பண்ணையாக மாற்றியதும்; அவரிடம்  வந்த கோபம் அவர் தலையையா   வெட்ட இயலும் என் தலை முடியை வெட்டி கோபத்தை என் சுதந்திரத்தை வெளிப்படுத்தி கொண்டேன்!

இப்படியாக பிறந்த நாள் என்றவுடனே என் குழந்தைப் பருவ நினைவாக வருவது பாயசம் சாப்பிடுவதும் செய்த விசேஷ உடை சிகை அலங்காரமாகும்.

பின்பு பெரியகுளம் கல்லூரியில் படித்த போது தான் ‘பிறந்தது’ இவ்வளவு நல்லதா என்று எண்ண வைத்தது அங்குள்ள கொண்டாட்ட நாட்கள்! காலையில் குளிக்க வரிசை பிடிக்க வேண்டும் என்ற யாராலும் அசைக்க இயலாத விதி, பிறந்த நாள் குழந்தைக்கு மட்டும் தளர்த்தப்படும்(திடீர் என்று தண்ணீர் நின்று அன்று கூட அவரால் குளிக்காவிடில் என்னாவது?).   காலை முதல் அன்றைய இரவு வரை கனவு கன்னி போன்று அவர் அன்றைய ஸ்போன்சர் குழந்தையாக பவனி வருவார். எங்கள் வார்டன் அன்று சேட்டை செய்தாலும்  திட்ட மாட்டார். அவருக்கான உணவுக்கு வேண்டி சண்டையிட்டு முண்டி அடித்து வரிசயில் நிற்க வேண்டியதில்லை. சில ரொம்ப நல்ல தோழிகள் என்றால் அவருக்கு தெரியாதே பணம் தங்களுக்குள் பிரித்து கேக் வாங்கி happy birth day to you……பாட்டு பாடி தங்கள் பாசத்தை தங்கள் அப்பாக்களின் காசால் வாங்கிய பொருளால் பரிசு கொடுத்து கொண்டாட முன் வருவார்கள். 

இவை யாவும் கேலி கிண்டலுடன் அவதானிக்கும் மாற்று கருத்து குழுவில் இருந்ததால் எங்கள் பிறந்த நாட்கள் வரும் போது மிகவும் ரகசியமாக காக்கப் பட்டு காலேஜ் காண்டீனில் நான் பச்சி -வடை மட்டும் வாங்கி தருவேன்  நீங்க காப்பி- டீ வாங்கி கொள்ள வேண்டும் என்ற டீலுடன் எங்கள் கொண்டாட்டங்கள் நடைபெறும். 

மூன்றாம் வருடம் வந்த போது நாங்கள் கல்லூரியிலும் விடுதியிலும் பெரிய அக்காக்கள் என்பதால் பல இறுக்கங்கள் தளர்த்த வேண்டி வந்தது. அந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட்டம் தோழிகளின் வற்புறுத்தலால் சிறப்பாக நடைபெற்றது.   தலையில் வைக்க 50 மல்லிகைப்பூ தேவையுள்ள எனக்கு 1000 மல்லிகை பூக்களால் அலங்கரித்தனர் . நட்பினால் வந்த அன்பு தொல்லையால் அன்றைய படிப்பு நேரத்தையும் விரையப்படுத்தி கோமாளியாக்கினர். ஆனால் அதன் சந்தோஷத்தை அடுத்த வருடம் என்னவர் வீட்டில் இருந்து கொண்டு மலரும் நினைவாக மிகவும் ஆசையுடன் அனுபவித்தேன். என்னவர் வீட்டில் ஆண்களுக்கே பிறந்த தினம் கொண்டாடுவது இல்லை (பெண்களுக்கு தேவை இல்லை) என்ற விதி உள்ளதாகவும் {ஆனால் வயதை மட்டும் கேட்டு மறுபடியும் சரிபார்த்து கொண்டனர்} திருமணமான பின்பு திருமண நாட்கள் மட்டும் தான் குடும்ப பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் பணியப்பட்டேன்.  பின்பு எங்கள் மகன் பிறந்த பின்பு அவனுடைய பிறந்த நாட்கள் தான் எங்கள் கொண்டாட்ட நாட்களாகின. அத்தானோ தான் பார்க்கும் பல நிறுவனங்களின் கணக்கு வழக்கை தன் சுண்டு விரலில் வைத்திருந்தாலும் என் பிறந்த நாள் மட்டும் ஜூலை 6 , மே 6, ஜுன் 7 என்று நாளையே குழப்பி விடுவார். பலபொழுதும்   நினைவு படுத்தி நான் கொண்டாடுவது என்பது தன்மானப் பிரச்சனையாக  இருந்ததாலும், கொண்டாட்டங்களில் நம்பிக்கை அற்று இருந்ததாலும்  நானும் மறந்தே போயுள்ளேன்.  கடந்த வருடம், ஒரு கோப்பில் தியதியுடன் கையெழுத்து இட்ட போது தான் “ஓ இன்று தான் என் பிறந்த நாள் என்று அறிந்து கொண்டேன்”.  இருப்பினும் ஒவ்வொரு பிறந்த நாளும் ஆயுசின் ஒரு வருடம் குறைந்து வாழும் பூமியை விட்டு விடை பெறும் நாட்கள் சமீபம் வருவது மட்டும் தெரிந்திருந்தது.

28 Jun 2011

ஒரு வடக்கன் வீர காதா! மலையாள திரைப் படம்


22 ருடங்களுக்கு முன்பு கண்ட மலையாளத் திரைப்படம் மறுபடியும் காண ஆவல் நமக்கு தான் இணைய நண்பர் உள்ளாரே.  1989 ல்  மிகவும் பேசப்பட்ட படம் இது.  நடிப்பு, திரைக்கதை, கலை இயக்கம், உடை அலங்காராம் என இந்திய அரசின்  நாலு விருதுகளை தட்டி சென்றது “ஒரு வடக்கன் வீர காதா” என்ற திரைப்படம். கதாசிரியர், துரோகியான சந்து என்ற வரலாற்று கதாபாத்திரத்தை நல்லவனாக காட்டுவது வழியாக வரலாற்றை திரித்து விட்டார் என்று கண்டனம் செய்யப் பட்டாலும் மக்களால் பெரும் அளவில் கவரப்பட்டு 250 நாட்கள் கேரளாவில் ஓடியது இந்த படம்!  மேலும் கேரளா அரசின் சிறந்த பாடகருக்கான பரிசு சித்திராவுக்கும் , நடிப்புக்கு மம்மூட்டி, கீதா, திரைக்கதை வாசுதேவன் நாயர் என 6 விருதுகளை வென்றது.


வரலாறு
 “வடக்கன் பாட்டுகள்” 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேகவர்கள் என்ற மக்களை பற்றிய வாய்-வழி மொழி நாட்டுப் புற பாடல்களை தழுவி எடுக்கப் பட்டதே இப்படம். கேரளா போர் வரலாறில் சேகவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. சேகவர்கள்  என்பவர்கள் நாட்டை ஆளும் மன்னர்களுக்கு படைசேவகர்களை உருவாக்கி கொடுப்பவர்கள். மேலும் இரு குறும்நில மன்னர்களுக்கு இடையிலான தீர்க்க இயலாத சண்டையில் நம் ஊரில் நடக்கு கோழி சண்டை போல் மனிதர்களான சேகவர்கள் பயன்படுத்தி   வெற்றி தோல்வி நிர்ணயம் செய்ய இவர்கள் ஒருவரின் மரணம் துணை செய்யும். இவர்கள் பற்றி சங்ககாலத்தில் துவங்கியே சொல்லப்பட்டது என்றும் கேரளா, இலங்கை, தமிழகம் சில இடங்களளில் வாழ்ந்து வந்ததாகவும் வரலாறு சொல்கின்றது.  இவர்கள் வழி தோன்றல்களே சேர ராஜாக்கள் பரம்பரையினர் என்றும் இவர்கள் அடையாளம் கூட வில்லு என்பதும் வில்லவர்கள் என்று நம் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. பின்பு பிராமணர்கள், மற்றும் திருவிதாம் கூர் ராஜாக்களின் வருகையுடன் இவர்களை சோவர்கள் என்று தரம் தாழ்த்தியதுடன் மட்டுமல்லாது  கேரளாவின் தீண்டதக்க ஜாதி என்றும் பனையேறும், கள்ளு தொழிலுக்கு தள்ளப்பட்டனர்.  இவர்கள் தற்போது ஈழவர்கள்  என்ற சமூதாயமாக கேரளாவில் வசித்து வருகின்றனர்.




கதைத் தளம்
இப்படத்திற்க்கு கதைத் தளமாக உள்ளது  வடக்கு கேரளாவில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற களரி பயிற்று ஆசிரியர்  கண்ணப்ப சேகவர் என்பரும்  அவருடைய மகன்கள் ஆன ஆரோமல் சேகவர், உண்ணி கண்ணனும் உண்ணியார்ச்சா என்ற  ஒரே மகளும், அவருடைய மகன் ஆரோமல் உண்ணி போன்றவர்களின் கதை ஆகும். வீரத்திற்க்கு அழகிற்க்கு பெயர்கொண்ட  உண்ணியார்ச்சையை திருமணம் முடிக்க இயலவில்லை என்ற கோபத்தால் கண்ணப்பரின் சகோதரி மகன் ‘சதியன் சந்து’ என்று அழைக்கப்பட்ட சந்துவால் ஆரோமல் சேகவர் கொலை செய்யப்பட்டார் என்றும் உண்ணியார்ச்சையின் மகன் வளர்ந்து தன் மாமாவை கொன்றவரை கொன்று பழி தீர்த்தான் என்றுமே வரலாற்று கதை!   தமிழகத்தில் துரோகத்திற்க்கு மறுபதிவாக எட்டப்பனை காட்டியது போல் சந்துவை சதியன்/துரோகி என்று முத்திரை குத்தி வைத்திருந்து கேரளா இலக்கியம் வரலாறு!  சிறு குழைந்தை விளையாட்டில் கூட ஏமாற்றிய நண்பனே ‘சதியன் சந்து’ என்று அழைத்து கேலி செய்வது உண்டு.



உண்ணியார்ச்சா என்பவள் வீரத்தின் பெண்மையின் அடையாளமாகவும் ஆரோமல் சேகவர் வீரத்தின் அடையாளமாகவும் போன்றப் பட்ட கதையை யாரும் நினைத்து பார்க்க இயலாத திசையில் எல்லாவராலும் வெறுக்கப் பட்ட சந்துவின் பார்வையில் உற்று நோக்குவதே “ஒரு வடக்கன் வீரகாதா” என்ற படத்தின் சிறப்பு.

இதே கதை தளத்தில் 1961 ல் உண்ணியார்ச்சா, 1989 ல் ஒரு வடக்கன் வீர காதா, 2002 ல் புத்தூரன் வீடு என்று மூன்று படங்கள் வந்திருந்தாலும் “ஒரு வடக்கன் வீர காதா” போன்று மக்கள் மனதில் பதிந்த படம் வேறு இல்லை.  துரோகி என்று பட்டம் சாட்டப்பட்ட சந்துவை மக்கள் அன்பாகவும் பரிதாபமாகவும் பார்க்க இந்த படம் வழி வகுத்தது.

தி. ஹரிஹரன் இயக்கத்தில் வந்த இந்த படம் சரித்தித்திர கதைகளை சாதாரண மக்களாலும் மாத்தி யோசிக்கவும் வைத்தது.  ரவி பாம்பே  என்ற இசையமைப்பாளரின் பாடல்கள் படத்திற்க்கு இன்னும் வலு சேர்த்தது. ஆண்கள்  பெண்களுக்கான உடை சிகை அலங்காரம் எடுத்து சொல்ல வைத்தது இப்படத்தில். http://www.youtube.com/watch?v=AVmnlQsorxc பெண்கள் அழகை முகம் சுளிக்கும் போல் அல்லாது கலையாகவும் காவியமாகவும் படைத்துள்ளனர்.

படத்தின் கதை
சந்து என்ற குழந்தை பெற்றோர் இருவரும் தவறிவிட்ட நிலையில்  தன் 5 வது வயதில் தன் தாய் மாமா வீட்டிற்க்கு அனாதையாக வந்து சேருகின்றான். அவன் மாமாவால் பாசமாக வளர்க்கப் பட்டாலும் ஏழ்மை, அனாதை என்ற நிலையில் தன்னுடைய மாமா மகன் ஆரோமல் சேகவரால் பெரிதும் கேலி பேச்சுக்கும் இளக்காரத்திற்க்கு உள்ளாக்க படுகின்றான் .  சேகவரின் மகள் உண்ணியார்ச்சையை பாலிய திருமணத்தால் தனக்கே என்று நம்பி கொண்டிருந்த சந்துவுக்கு , ஆரோமல் சேகவரின் வசதி படைத்தவர் நண்பன் குஞ்சு ராமனுக்கு திருமணம் முடித்து வைக்கின்றனர்.  உண்ணியார்ச்சையும் வசதி வாய்ப்பான வாழ்க்கையில் பற்று கொண்டு தன் காதலை உதறி தள்ளி விட்டு பணக்காரருக்கு மனைவி ஆக முடிவு செய்கின்றாள்.  வசதியான வாழ்க்கையாக இருப்பினும்  தன் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நிலையில்  பணக்கார கணவர் இல்லை என்று தெரிந்ததும் சந்துவை பின் வாசல் வழி தன் படுக்கை அறைக்கு அழைக்கின்றாள் வீரப் பெண் உண்ணியார்ச்சா!  கணவரால் பிடிக்கப் பட்ட உண்ணியார்ச்சா சுயநலமாக தன் மானத்தை கருதி சந்துவே தன்னை தேடி வந்ததாக பொய் பட்டம் கொடுத்து தன்னை காப்பாற்றி கொள்கின்றாள். பெண் பித்தனாக சித்திரிகரிக்கப் பட்ட சந்து அங்கிருந்து மன உளைச்சலுடன் வெளியேறுகின்றான்.http://www.youtube.com/watch?v=MvOqvpslXvM&feature=related

மனம் உடைந்த சந்து தான் விரும்பிய பெண் தான் கிடைக்க வில்லை தன்னை விரும்பிய பெண்ணையாவது மணக்கலாம் என்று பெண் கேட்க சென்றால் அப்பெண் ஆரோமலுக்கு மனைவி என்று முடிவு செய்யப்படுவது தெரிகின்றது.

இனி தன் சொந்த நிலையில் தன் தகப்பனார் வீட்டில் வாழலாம் என முடிவு எடுத்த சூழலில் புதிய ஆசானிடம் வித்தை கற்க செல்கின்றார். அங்கு ஆசானின் மகள் சந்துவின் எல்லா விடயங்கள் தெரிந்தும் அவரை முழு அன்போடு காதல் செய்கின்றார்.

இப்போது தான் கதையின் உச்சகட்டம் நெருங்குகின்றது இரு குறுநில மன்னர்களுக்கு வழக்கு முடிக்க இரு சேவகர்கள் சண்டை இட வேண்டிய சூழலில் ஒரு பக்கம் மச்சுனன் ஆன ஆரோமல் சேகவரும் மறுபக்கம் தன் குருவும் என்று இருக்கையில் தான் ஆரோமலுடன் செல்ல விரும்பா விடிலும் தன் மாமாவின் விருப்பத்திற்க்கு இணங்க, மேலும் உண்ணியார்ச்சாவின் மேல் கொண்டுள்ள பற்றால் “ஜெயித்து வந்தால் சந்துவுடன் தான் மனைவியாக வருகின்றேன்” என உண்ணியார்ச்சா கதைத்ததை நம்பி ஆரோமலுடன் துணைக்கு செல்கின்றார்.

தன் குரு போர்க்களத்தில் ஆரோமலின் நியாயமற்ற போர் யுக்தியால் வீழ்த்தப் பட்டு கொல்லப்படுகின்றார்.   தன் மச்சுனன் ஆரோமல் சேகவரோ போர் களத்தில் சரியல்லாத வாளை கொடுத்து ஏமாற்றி விட்டாய் என்று சண்டையிட அந்த சண்டையில் சேகவர் தவறுதலாக நிலைவிளக்கு மேல் விழுந்து கொல்லப் பட கொலைகுற்றம் சந்து மேல் விழுகின்றது.

வாள் சரியல்லாது போக கொல்லனுக்கு தன் குருவின் மகள் தான் காசு கொடுத்தாள் என்று அறிந்து அவளை தண்டிக்க தேடி வர அவள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வாள்.

குருவின் மருமகளை மனைவியாக ஏற்று  ஒரு சேகவராக பற்றுக்கள் அற்று  வாழ்ந்து வரும் வேளையில் உண்ணியார்ச்சா தன் மகனையும் ஆரோமலின் மகனையும் சந்துவிடம் பழிக்கு பழி கேட்டு அனுப்பி விடுகின்றார். உண்ணியார்ச்சாவின் மகன் என்னிடம் போரிடு நானா நீயா என்று பார்ப்போம் என சொல்ல உண்ணியார்ச்சா மகன் என்று தெரிந்த மறுகணமே அவள் பேரிலுள்ள காதலால் உருகி “எனக்கு பிறக்காத மகன் நீ என்னிடம் தோற்க்க வேண்டாம் என்று சந்து தற்கொலை செய்து கொள்கின்றார்.

குருவின் மகள் ஒரு காட்சியில் சந்துவிடம் கேட்பார் “உண்ணியார்ச்சா தொடப்பம் வைத்து எத்தனை முறை அடித்து விரட்டினாலும் நீ அவளிடம்  மயங்கி கிடைக்கின்றாயே என்று”  அந்த மயக்க நிலையே சந்து என்ற நல்ல மனிதனை அழித்தது.  அவள் பெயரிலுள்ள அன்பின் தூய காதலின் பெயரால் தன்னை பலமுறை ஏமாற்றியவளாக இருந்தும் அவளை நம்பி அவள்  பின் வாசல் வழி அவள் வீட்டிற்க்கு செல்வதும்  இன்னொருவனுக்கு குழந்தை பெற போகும் அவளை அவள் விரும்பம்  தன்னை மணக்க என்று அறிந்ததும் மனைவியாக ஏற்று கொள்ள துடிப்பதும், தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண்கள் மனநிலை புரிந்து கொள்ள இயலாது போவதும் வியர்ப்பு என்றாலும் காதலுக்கு கண் மட்டுமல்ல மூளையும் இல்லை என்று நிரூபித்து தன் வாழ்க்கையில் பெரும் துயரை உண்ணியார்ச்சா என்ற பெண்ணால் சந்தித்து தன் முடிவையும் தானே தேடி காதலுக்கு மரியாதை தருகின்றார்.

உண்ணியார்ச்சா என்ற கதாபாத்திரம் வழியாக பெண்கள் பூ போல் மென்மையானவள் மட்டுமல்ல  பணம், காமம், அந்தஸ்து, தங்கள் சுய லாபத்திற்க்கு, பழிவாங்கும் வெறிக்காய் ஆண்களை பகடை காய்களாக நகர்த்தும் யுக்திகளையும் பல இடங்களில் காட்சி மொழி வழியாக கோடிட்டு காட்டுகின்றனர் இப்படத்தில். மேலும் ஒரு ஆணின் ஆக்கவும் அழிவும் தொடங்குவதும் முடிவதும் பெண்ணில் நின்றே என்று வலியுறுத்துகின்றனர் இப்படத்தில். அழகாக தோன்றும்    பெண்மையிலும் ஒரு சாத்தான் உண்டு என சொல்லப் படும் இப்படம் பார்த்து ரசிக்கப் பட வேண்டிய கற்று கொள்ள வேண்டிய படமே. கேரளாவில் உள்ள புன்னத்தூர் கோட்டையில் இதன் படம் பிடிப்பு நடந்துள்ளது என்பதும் ஒரு சிறப்பே.http://en.wikipedia.org/wiki/Punnathurkotta  22 வருடம் பின்னிட்ட போதும் சுவாரசியம், காதல், சண்டை காட்சிகள் என பரபரப்பு விடாது நம்மை காண தூண்டும் படம் இது!!http://mooshikan.com/component/content/article/68-watch-malayalam-old-hit-movies-online-download-/2050-oru-vadakkan-veeragatha-1989?start=2

26 Jun 2011

செட்டிநாடு கோழி- மிளகு குழம்பு


இன்று கோழி குழம்பு செய்வோமா!   சில வீடுகளில் பள்ளி சீருடை போல் ஒரே போன்று குழம்பு வைப்பது வழக்கமாக உள்ளது. இன்று கொஞ்சம் வித்தியாசமான விதத்தில் வைப்போம். சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து உண்ண   மிகவும் சுவையான கோழி குழம்பு இது.

தேவையான பொருட்கள்:
1.கோழிக் கறி    : ¾ கி.லோ
2.பெரிய வெங்காயம்  : 3 எண்ணம்
3.பச்சை மிளகாய்     : 2
4.தக்காளி  :2
      (2,3,4 மிகவும் சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும்)
5. மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்
6. குருமிளகு பொடித்து வைத்து கொள்ளவும்
7. வெள்ளப்பூடும் இஞ்சியும் அரைத்து வைத்து கொள்ளவும்
8. கொத்த மல்லி      : சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும்.
9. கறிவேப்பிலை


முதன் முதலாக அடிப்பக்கம் கட்டியான பாத்திரம் அடுப்பில் வைய்யுங்கள். அடுப்பை பற்ற வைத்த விட்டு சமையல் எண்ணை விடுங்கள்.
கடுகு இட்டு பொரிந்து வந்தவுடன் ஒரு நுள் சிறு ஜீரகம் சேருங்கள்.
அடுத்ததாக  பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இனி பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்
அரைத்து வைத்துள்ள வெள்ளப்பூடும் இஞ்சியும் சேர்த்து வதக்கவும்
இனி மஞ்சள் பொடி வெங்காயத்தில் படாது எண்ணையில் சேர்த்து வதக்க வேண்டும்

அடுத்ததாக தக்காளிப் பழம் சேர்த்து வதக்கி 10 நிமிடம் நன்றாக வதங்க நேரம் கொடுங்கள்
இனி மல்லி, மிளகாய் தூள்கள் சேர்த்து கோழிக் கறியும் சேர்த்து நன்றாக வேக அனுமதியுங்கள்.
கறிவேப்பிலையை முழுதாக போடாது கைவைத்து பிய்த்து போட வேண்டும். அதுவே ருசிக்கு உதவும்.

இனி பொடித்து  வைத்துள்ள குருமிளகு சேர்த்து அலங்கரித்த மல்லி இலையும் சேர்த்து அழகாக ருசித்து சாப்பிடுங்கள்.

23 Jun 2011

வலைப்பதிவர் சங்கமம்- என்ன நடந்தது?


முதல் சுற்றில் பெயரும் தங்கள் வலைப்பதிவின் பெயரும் அறிமுகப்படுத்தினர் மறு சுற்றில் ஏன் எப்படி பதிவுலகத்தில் புகுந்தோம், தாங்கள் பெறும் அனுபவங்கள் எவ்வகையானது என்ற கேள்விக்கு விடை காண்வதாக இருந்தது.
 தமிழ்மணம் வலைப்பதிவில் முதல் வரிசையிலுள்ள சி.பி செந்தில் குமார், தான் எப்படியாக முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றார் என்பதும், அவர் பதிவு உலகத்தை ஒரு போட்டியை நோக்கி நகத்துவதகவும் தெரிந்தது.  பலா பட்டறை சங்கரோ வலைப்பதிவுகளில் ஆக்க பூர்வமான நம் கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு இட்டு செல்லும் தளமாகவும்  காத்திரமான பதிவுகள் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  இன்னும் சில பதிவர்கள் தங்கள் வேலையின் நெருக்கத்தால் வாழ்க்கையில் சுவாரசியம் அற்று போகாது நட்பு, தொடர்பாடல் பேணவே வலைத்தளம் என்று வலியுறுத்தி முடித்தனர். வேளான்மைத்துறையில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவரும் முதல் தமிழ் வலைப்பதிவரான டொக்டர் P. கந்தசாமி மற்றவர்களின் இடையூறு இல்லாது  தங்கள் கருத்துக்களை ஆக்கபூர்வமாகவும் சுதந்திரமகவும் பதிய தகுந்த தளமே வலைப்பதிவு என்றும்  விவரித்தார்.  ஐயா N.ரத்தின வேல் அவர்கள் தங்கள் காணும் விடயங்களை சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை பகிர துணை புரிகின்றது என தெளிவுபடுத்தினார்.  வெடிவாள் சகதேவன் ஐயா கூறுகையில் தங்கள் ஓய்வு வயதில் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் கருத்துரையாடல்கள் தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் பலர் வலைப்பதிவர்களாக வலம் வர வேண்டும் என்ற தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.  தங்க சிவம் போன்றோர் அரசு அதிகாரியாக இருப்பதால் தங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் சமூகத்துடன் பங்கிட வலைப்பதிவுகள் என்பது நல்லதொரு வடிகால் என்று உரைத்தார்.  மதுரை மணிகண்டன் நான் ஒரு சின்ன சிறு வலைப்பதிவர் என்று அடையாளப்படுத்தி கொண்டாலும் அவருடைய எழுத்தின் வீரியம், மதுரை தமிழின்  அழகு எழுத்து நடை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பு கிட்ட வில்லை என்றே உணர்ந்தேன்.  என் நிலை பாடான வலைப்பதிவுகள் என்பது சமூக்க மாற்றத்திற்க்கு பயன்பட வேண்டும் என்றும் சிறப்பாக பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை கருத்துக்களை தாங்கள் காணும் உலகத்தை தாங்கள் வாழ்வில் கண்ட இழப்பை பகிர்வது வழியாக ஒரு சுவாரசியாமான உலகில் புகுந்து விட துணை புரிகின்றது என்பதை பகிர்ந்தேன். சில வலைப்பதிவர்கள் மாற்று கருத்து கொண்ட வலைப்பதிவுகள் விரும்பவில்லை என்பதும் வலைப்பதிவுகள் என்பது வெறும் பொழுது போக்கு  தான் என்ற கருத்துக்கள் என்னால் ஏற்று கொள்ள கடினமாக தான் இருந்தது.இளம் வலைப்பதிவர்களான தமிழ்வாசி, கோமாளி செல்வா, ஜெயந்து, ஜாஹிர்ஜுசைன், நாய்குட்டி கருவாளி ராமன் போன்றோர் இளம் புயலாக வலம் வந்தனர்.
  
பின்பு அரும் சுவையான உணவு குழுப்படம் எடுத்து கொண்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது. ஒரு பார்சல் அல்வா, கடலை மிட்டாய் காரம் கடலை, இன்னும் பால்கோவா போன்ற ஒரு இனிப்பு பார்சலில் தந்து வழி அனுப்பினர். இவை அனைத்தும் இலவசமாக பெறப்பட்டதும் அங்கத்தினர் ஒரு குழுவாக இணைந்த சாற்றோ இல்லாது பிரிந்ததும் வருத்தமாக இருந்தது.  வந்திருந்தவர்களின்  வலைப்பதிவுகளின் அறிமுகம் முழுமையாக பெற இயலாது இருந்ததும் மேலும் அவர்களுடைய தொடர்பு மின்னஞ்சல் முகவரி கிடைத்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்று மனதில் தோன்றியது.

எனக்கு தெரிந்திருந்த வலைப்பதிவர்கள் ஆனால் அறிமுகம் இல்லாத நாறும் பூ, போகன் போன்றோரை சந்திக்க இயலவில்லையே என்ற கவலை மனதில் இருந்தது அடுத்த வலைப்பதிவர் சங்கமத்தில் சந்திக்கலாம் என்று மனதை தேற்றி கொண்டேன்.

இருப்பினும் பதிவர் சந்திப்பால் என்ன பலன், இது எதற்காக, யாருக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள் காணொளிகள் நம் சுதந்திரத்தை பறிக்கின்றதா என்ற கேள்வி என் மனதை கிளர ஆரம்பித்து விட்டது.  அடுத்த பதிவில் அதை பற்றியே  கதைக்க வேண்டும்!!! 

நெல்லை வலைப்பதிவர் சங்கமம்


நெல்லையில் வெள்ளி கிழமை (17-06-11)அன்று நெல்லை பதிவர் சந்திப்பு நடை பெற்றது. பதிவர் சந்திப்பு என்பதை பற்றி சென்னை பதிவர்கள்,  இலங்கை தமிழர்கள், வெளிநாட்டு  தமிழர்கள்  மத்தியில்  என பதிவுகள் வழியாக அறிந்திருந்தாலும் அது போல் ஒரு கூட்டம் நெல்லையில் நடைபெறுகின்றது அதில் பங்குபெறுகின்றேன் என்பது புதுமையான மகிழ்ச்சியான  அனுபவமாகவே இருந்தது.  இதுவே நெல்லையில் நடக்கும் முதல் கூட்டம் என்றும் அறிந்திருந்தேன்.  உண்மை சொன்னால்  பெரிதும் எதிர்பார்த்து இருந்த நாள் தான் இது!  நாம் எழுத்து வடிவில் காணும் மனிதர்களை நேரில்  காண, கதைக்க அவர்கள் நேரடி கருத்துக்கள் பெற  முடிந்தது என்பது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவமாகவே இருந்தது.  இதற்க்கு ஒழுங்கு செய்த திரு உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களையும் திருமதி கவுசல்யா மற்றும் அவர்கள் நண்பர்களும்  பாராட்டுதலுக்கு உரியவர்களே. இத்தருணத்தில் என் பதிவு வழியாக அவர்களுக்கு நன்றி கூறவும் கடமைப்படுள்ளேன்.

என்னுடைய வாசிப்பு தளம் ஈழ தமிழர்களின் எழுத்துக்களாக இருந்ததால் இவர்கள் எழுத்து எனக்கு பெரிதும் பரிசயம் இல்லாவிடிலும் சில குறிப்பிட்ட பதிவர்கள் சிறப்பாக சி.பி செந்தில் குமார், பனித்துளி சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல் ஐயா, தம்பி மதுரை மணிகண்டன் போன்றவர்களின் எழுத்து வழியாக சென்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.

10 மணிக்கு கூட்டம் என்று தெரிந்தும் 10.30 க்கு தான் வேண்டுமென்றே தாமதமாக சென்றேன்.  ஏன் என்றால் பல கூட்டங்களில் போய் கொசு விரட்டி கொண்டு இருந்த அனுபவம் எனக்கிருந்தது.  மேலும் முகம் தெரியாத நபர்கள் தெரியாத இடம் தேடி செல்கின்றேன் என்ற அச்சமும் உண்டு தான்!

என்னவர்,  ஜானகிராம் ஹோட்டலின் வாசலில் விட்டு விட்டு ஒரு சிறு நமட்டு சிரிப்புடன் 6 வது மாடியில் கூட்டம்  லிப்டில் தனியாக சென்று விடுவேயா என்று வினவினார்.   எனக்கும் ஒரு தயக்கம் தான் இருப்பினும் விட்டு கொடுத்து நம் பயத்தை காட்டி விடக்கூடாது என்று எண்ணி   நான் போய் விடுகின்றேன் முடிந்ததும் தொலைபேசியில் தெரிவிக்கின்றேன் என்று கூறி விட்டு வீர நடையாக  சென்று விட்டேன்.  பொது இடங்களிலுள்ள   லிப்டு, பல்பொருள் அங்காடியிலுள்ள எஸ்கலேட்டர் இவை எல்லாம் பயம் தரக்கூடியவை தான் எனக்கு!  சாரை சாரையாக நெடுகையும் குறுகையுமாக வாகனங்கள் போகும் ரோடு கூட பயம் தான் ஆனால் ரோடு தாண்ட இப்போது வல்லுனர் ஆகி விட்டேன்.   அதிலும் கண்ணில் கருப்பு கண்ணாடி அணிந்து ரோடில் குறுகே தாண்டுவது இன்னும் பாதுகாப்பு . ரோடில்  வருபர்கள்(ஆட்டோ தவிற்த்து) ஐயோ பாவம் என்று வழி விட்டு செல்ல வாய்ப்புகள் உண்டு!!

அப்படி தான் அந்த லிப்டுக்குள்ளும் காலெடுத்து வைத்தேன்.  தமிழ் படத்தில் போன்று ஒரே ஒரு நபர் மட்டுமே கையில் பிளாஸ்க்குடன் என்னை கேள்வி குறியால் கொஞ்சம் முறைத்து பார்த்து  கொண்டு 3 வது மாடிக்குள்ள பொத்தானை அமுத்தினார். அவர் இறங்க போகும் போது என்னை நோக்கினார்; நான் 6 வது மாடி என்றேன் அவரும் பாவம் ஏதோ பேக்கு போல என்று தோன்றியதோ என்னவோ 6 வது பட்டனை அமர்த்தி விட்டு அதுவாகவே கதகு திறந்து விடும் என்று கூறி வெளியில் சென்றார். மனுசா ஒரு உதவி செய்தீர்கள் என இப்படி கதைக்கலாமா; கதைகை உடைத்து கொண்டு போக மாட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டு சிறு புன்முறுவலுடன் அப்பிராணியாக நின்று கொண்டேன்.   லிப்டு நின்று விட்டது வெளியில் வந்த போது அது ஒரு மொட்டை மாடி அழகாக சாப்பாடு மேஜைகள் இடப்பட்டிருந்தது குழந்தைகள் விளையாட்டு பொருட்கள்  கண்ணை கவரும் செடிகள் அதன் ஒரு கோடியில்  ஒரு கண்ணாடி கதவு கொண்ட பெரிய அறை.

கதகை தள்ளி திறந்து உள்ளெ சென்றேன் என்னை கேள்வி குறியாக நோக்கினர் நான் தான் “சிஐடி போலிஸ் ஜோஸபின்” என்று சொல்லும் கம்பீரமாக ‘நான் வலைப்பதிவர் ஜோஸபின்’ என்றேன். உங்களை தான் தேடி கொண்டிருந்தோம் என்று பலமான வரவேற்ப்பு கிடைத்தது.  ஒரு கரம் என்னை அன்பாக அழைத்து சென்று  ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டேன்.

 நல்ல சூழல் எங்கும் சிரித்த் முகங்கள்! பொதுவாக நெல்லையில் விசேஷ கூட்டங்களுக்கு சென்றால் சிரிப்பு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.    வீடு தேடி வந்து பத்திரிக்கை தந்து அழைப்பவர்கள் கூட அவர்கள் கூறிய மண்டம் முன்  நாம் சென்றடையும் போது அன்று தான் அறிமுகம் ஆவது போல் விரிந்த கண்களுடன் கேள்வியே புருவமாக கொண்டு இருகிய முகத்துடன் காட்சி தருவார்கள். இங்கு எல்லாம் மாறுபட்டு இருந்தது .  எல்லோரும் சிரிப்பாலும் பேச்சாலும் தாம் பல வருடங்களக அறிமுகமானவர்கள் போல் அன்பாக தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தனர். 

என் கண்கள் முகநூலில் புகைப்படம் கண்டு, ஏற்கெனவே மின் அஞ்சல் வலைப்பதிவு வழியாக  அறிமுகமுள்ள ரத்தின வேல் ஐயாவை தேடியது அதே நேரம் அவர்களும் என்னை அடையாளம் கண்டு விட்டார்.  அவர் மனைவி உமா அம்மையாருடன் வந்திருந்தார் மிகவும் அன்பாக என்னிடம் கதைத்தார்.   ஒரு முறை என் புகைப்படுத்தில் கருத்து வெளியிட்ட போது “ எனக்கு 3 ஆண் குழந்தைகள் உண்டு உன்னை என் மூத்த மகளாக நினைக்கின்றேன் அம்மா “ என்றிருந்தார் அவர் கண்களிலும் அந்த பாசம் கரை புரண்டோடியது.  அவர் மனைவி அவரை ஒரு குழந்தையை போல் கவனித்து கொண்டு அமைதியாக எல்லாம் அவதானித்து கொண்டு அவர் தோழியாக அருகில் இருந்திருந்தார். ஐயா அவர்கள், அவருடைய ஊர் வீசேஷமான இனிப்பு பண்டம்   பால் கோவா எனக்கென கொண்டு வந்து தந்தபோது இன்ப அதிற்ச்சியாகவும் இருந்தது.

அன்றே முதல் முதலாக கண்டுள்ள கவிதை எழுத்தாளர் கல்பனாவின் நட்பு பல வருடம் கண்டு பழகிய இனிமையான தோழியோடு ஒத்திருந்ததும் ஆச்சரியத்தை கொடுத்தது.  அவர் தமிழக வலைப்பதிவுகளுடன் மிகவும் அறிமுக ஆகியவர் என்பதால் அவர் அங்கு வீற்றிருக்கும் பல பதிவர்களை அறிமுகப்படுத்தி தந்து கொண்டு இருந்தார்.  சௌதியில் இருந்து வந்து பங்கு பெற்ற ஜாகிர் ஹுசைன், நாகர்கோவில் இருந்து வந்த வெறும் பையன் ஜெயந்து, நண்பர் தங்க சிவம் மற்றும் சேலத்தில் இருந்து வந்திருந்த ரசிகன், தூத்துகுடி SVS, நாகர்கோயிலில் இருந்து வந்த நண்பர் மனோ, கோவில்பட்டியில் இருந்து விஜயம் செய்த நண்பர் பாபு போன்றோர் மிகவும் அன்பாக- நட்பாக பழகியது மிகவும் ஆனந்தமாக இருந்தது.  தமிழக வலையுலகத்தின்  ஹீரோக்களாக வலம் வரும் சி.பி செந்தில் குமார், பனித் துளி சங்கர், அமைதியே உன் பெயர் தான் தண்ரோரா என்று சொல்லும் வலைப்பதிவர் தண்டோரா, இளம் வலைப்பதிவர்கள் தமிழ்வாசி பிரகாஷ், கழுகு வலைப்பதிவின் கோமாளி செல்வா, வம்பை விலைக்கு வாங்காத மதுரை மணிகண்டன் இவர்கள் எல்லோருடனும் பதிவர்கள் என்று ஒரே குடையின் கீழ் அணி திரண்டதில் பெருமையாகவும் இருந்தது. அதிலும் எழுத்தாளர் சி. பி செந்தில் சிரித்து கொண்டே  தன் நகைச்சுவை கொண்ட பேச்சாற்றலால் எல்லோரின் கவனைத்தையும் தன்பால் கவர்ந்து கொண்டே இருந்தார்.  பனித் துளி அவர்கள் தான்பேசுவதை விட அடுத்தவர்கள் பேசுவதையே அவதானித்து கொண்டிருப்பதில் ஆர்வம் இருப்பதாக தெரிந்தது.                                                                                            இனி என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம்.

11 Jun 2011

நீங்களும் வலைப் பதிவர் ஆகலாமே!!!!


வலைப்பதிவுகள் என்பது நவீன ஊடகத்தின் ஒரு பதிப்பு ஆகும். வலைப்பதிவு ஆய்வாளர்களின் கருத்துப் படி வலைப்பதிவுகள் என்பது ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவின், குழுமத்தின், நிறுவனத்தின் இணைய தளமாகும். தனி நபர் வலைப்பதிவுகள் என்பது, தனி நபர்  சிந்தனை கருத்துக்கள் அடங்கிய எழுத்துக்கள், கட்டுரைகள், படங்கள், காணொளிகள், ஒலி நாடாக்கள் உள்ளடங்கியது ஆகும்.  இணைய வசதியும் கணிணியும் உள்ள யாராலும் தாங்கள் எழுதியதை  இடையூறு இல்லாது வெளியிடவும்  உலகளாவிய அளவில் குறைந்த செலவில் மிக விரைவில் கருத்து பரிமாற்றத்திற்க்கும் உதவுகின்றது  என்பது இதன் சிறப்பாகும்.  திறந்த வெளி கருத்து பரிமாற்றம் ஒரு இனமாக அடையாளம் காண, காத்திரமான தொடர்பாடல் பேண என்று இதன் மாற்று கூடி கொண்டே போகின்றது.  பத்திரிக்கை நிறுவனத்தின் தலையீடு இல்லது தனி நபர் படைப்புகள் இணையம் வழியாக மக்கள் மத்தியில் நடைபெறும் விவாதங்களுக்கு வழி வகுக்கின்றது என்றால் மிகையாகாது.  தணிக்கை செய்யப்படாத இடையீட்டாளர்கள்  கட்டுபாடு அற்ற  செய்தி பெறப் படுகின்றது என்பதே இதன் பலவும் பலவீனவும்.

வலைப் பதிவுகள் என்றால் பொதுவாக தனிநபர் நாட்குறிபேடு போன்றது என்று இதன் தரத்தை குறைத்து மதிப்பிடப் பட்டாலும் வலைப்பதிவுகள் அதன் உள்ளடம் சார்ந்தும் அதன் எழுதும் நபர்கள் சார்ந்தும் பல வகை உண்டு. பொதுவாக வலைப்பதிவுகள் என்பது ஒரு தனிநபர் தன்  வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து எழுதுவது நாட்குறிப்பு வலைப்பதிவுகள் என்றும், தம்மை சார்ந்த அனுபவக் குறிப்பு  மட்டுமின்றி சமூக அக்கரையுடன் மற்று நபர்களின் சமூகத்தின் நலன் கருதியும் தங்கள் கருத்துக்களை பகிர எழுதும் வலைப்பதிவுகள் filter வகை என்றால்  நம்மை சாராத முழுக்க முழுக்க ஒரு கருத்து  அல்லது கோட்பாடு சார்ந்து பொது சமூகத்தின் வளர்ச்சிக்கு தகவல் பரி மாற்றத்திற்க்கு  என எழுதும் வலைப்பதிவுகள்  புத்தக வலைப்பதிவுகள் அதாவது note book வலைப்பதிவுகள்  என்று 3 வகை உண்டு. 

அரசியல், நாட்டு நடப்பு செய்திகள், தொழில்நுட்பம், கல்வி, இலக்கியம், பொழுது போக்கு அம்சம் கொண்ட  செய்திகள் என இவையின் உள்ளடக்கம் சார்ந்தும்;  கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் ஊடகவியாளர்கள், பொது மக்கள், வியாபாரிகள்,  குடும்ப தலைவிகள்  என எழுதுவர்கள் சார்ந்தும் வலைப்பதிவுகள் வகைப்படுத்தலாம்.   

1991 ல்,வலைப் பதிவுகள் ‘டிம் பேர்னர்’ என்பரால்  இணையத்திலிருந்து  கண்டு எடுக்கப் பட்டு வரிசைப்படுத்த பட்டது.   அன்றைய சூழலில் கணிணி-தொழில் நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே வலைப் பதிவுகள் உருவாக்கப் பட்டுள்ளது.   இன்றைய நவீன வலைப்பதிவுகளின் துவக்கம் ‘ஜெஸ்டின் ஹால்’என்ற அமெரிக்க  கல்லூரி மாணவனாலே 1994 ல் முன் வைக்கப்பட்டுள்ளது .  1999 ல் வெறும் 23 என்ற அளவில் இருந்த வலைப்பதிவுகள் 2009 ல் டெக்நோரடி என்ற தேடும் கருவியால் 133 மிலியன் வலைப்பதிவுகளாக உயர்ந்துள்ளது என  கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  பிளோகர் போன்ற கருவியின் வரவுக்கு பின்பு   துரிதமாகவும் எளிதாகவும் வலைப்பதிவுகள் துவங்க வகை செய்துள்ளது, மேலும் இதன் வளர்ச்சி கண்டடைந்துள்ளது.

வலைப்பதிவர்கள் சிந்தனை வளம் மிக்கவர்கள் ஆகவும் தங்களுக்கு சுற்றியுள்ள உலகை தெளிவாக உற்று நோக்கவும் அதை பகிரவும் வலைப்பதிவுகள்  உதவுகின்றது என்றால் அது பொய் ஆகாது.

 

உலக மொழிகளில் 66 நாடுகளில் இருந்து வலைப்பதிவுகள் பதிவு செய்து  கொண்டிருந்ந்தாலும் இவையில் தமிழ் வலைப்பதிவுகளின் இடம் இன்றிமையானது. தமிழ்மணம் என்ற திரட்டி வழியாக 8000 மேல் வலைப்பதிவுகள் கண்டு எடுத்து சேர்க்கப் பட்டுள்ளது.  உலகத் தமிழர்களுக்கு சிறப்பாக ஈழத் தமிழர்களுக்கு தங்களை ஒரு குழுவாக அடையாளம் காட்டவும் தங்களுக்குள் சிறப்பான கருத்துரையாடல் பேணவும் வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றது. தமிழ்மணம் திரட்டியில் ஈழ வலைப்பதிவுகள் என்றே தனி பக்கம் உள்ளது.  4 வது ஈழப் போர் வேளையில் பத்திரிக்கைகளால் உண்மையான செய்தி மறுக்கப் பட்ட  போதும் ஈழ மக்களின் நோக்கம், உண்மைகள் மழுங்கலடிக்கப் பட்ட போதும் தங்கள் நிலைபாட்டை நிலைநாட்டவும் தங்கள் கருத்துக்க,ள் சோகங்கள் உலகுடன் பகிர்ந்து கொள்ளவும் வலைப்பதிவுகள் பெரிதும் உதவியது.

வலைப்பதிவுகள் என்பது கல்லூரி படிப்புகளிலும் ஒரு பகுதியாகவும் ஆராய்ச்சிக்கு உள்படுத்தபட்டது  மட்டும் அல்லாது பெரும் ஊடகங்களும் தகவல் பெறுதலுக்கும் பரிமாற்றத்திற்க்கு பதிவுகளை சிறந்த  தளமாக பயண்படுத்துகின்றனர்.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகினாலும் 2004 துவங்கி தான் தமிழக தமிழர்களை  வந்தடைந்தது. இருப்பினும் தற்போதும் வலைப்பதிவுகள் பல நபர்களுக்கு  அறிமுகம் இல்லாது தான் உள்ளது.  ஒரு வலைப்பதிவராக சிறந்த எழுத்தாளராக அல்லது திறமையானவராக இருக்க வேண்டும் இல்லை, தாங்கள் கண்டவையே அனுபவித்தவயே உண்மையாக இதயபூர்வமாக கதைக்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே போதுமானது.  எனக்கு தெரிந்த நுட்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் வலைப்பதிவுகள் ஆரம்பித்து தங்கள் அடையாளத்தை பதிய வேண்டும் என்று இப் பதிவை பகிருகின்றேன். நீங்களும் நாளை வலைப்பதிவரே!!
 
நீங்கள் blogger.com என்றும் உள்நுழையலாம். அல்லது gmail கணக்கு வழியாக போய் more என்றதில் சொடுக்கினால் வரிசையாக சேவைகள் வரும் அதில் even more என்பதை சொடுக்கினால் இந்த பக்கத்தில் வந்து விடுவீர்கள்.



பிளோகர்(blogger) என்ற குறியீடை சொடுக்கவும்.


You please click on ‘Get Started’


Fill the following column. கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை  நிரப்ப வேண்டும்! After finished click on  the ‘continue’ button



You come to this page! உங்கள் வலைப்பதிவுக்கு நீங்கள் கொடுக்க நினைக்கும் பெயரை குறிப்பிடவும்!

You come to this page, choose the template whichever you like. உங்கள் பதிவின் உருவத்தை தேர்வு செய்யலாம்.


Now you come to climax. Then you  click on ‘start blogging’




‘start blogging’. என்று சொடுக்கும் போது எழுத வேண்டிய கட்டம்/பெட்டி வருகின்றது.

You can now write!!!! நம் ஆக்கத்தை பதிவு செய்து விட்டு பப்லிஷ் என்றதில் சொடுக்க நம் பதிவு வெளியிடப்படுகின்றது.

காண்க பதிவு(view post) என்பதை சொடுக்குவது வழியாக உங்கள் பதிவை கண்டு பேரானந்தம் அடைவீர்கள்!
ஆகா…………………………….உங்கள் பதிவை உருவாக்கி விட்டீர்களா. 




கலக்குங்கள்.வாழ்த்துக்கள்!!!

6 Jun 2011

தொலைந்த இணையமும் வேட்டையாடிய நினைவுகளும்!


  
கடந்த சில நாட்கள் இணையம் இல்லாத சூழல். ஒரு பக்கம் நல்லதே  என்று எண்ணினாலும் அப்பாவுக்கு, தன் கவலையெல்லாம் மறக்க செய்த பிராந்தி குப்பி  என்பது போல்  இணையம் எனக்கு போதையாகியதோ என்றும் நம்ப வைத்தது என் நிலை. 

                                                                                                                                     நண்பகளை காணாது கதைக்காது இருந்தது சொல்லி கொள்ள இயலாத துன்பம் தந்தது மட்டுமல்ல இனம் தெரியாத ஒரு துயர் கூடவே ஒட்டிகொண்டதாகவும் உணரப்பட்டேன்.   ஒரு சூனியமான நிலையில் பயணிப்பது போன்று உணர்ந்த போது தான் இவை தரும் துயரம் அளவற்றது என்று புரிந்தது.


பல ஆக்க பூர்வமான வேலைகள் செய்து முடிக்க இணையம் தடையாக இருந்தது என்றால் அது பொய்யாகாது.    பல நாட்களில் நேரத்தோடு எடுக்க வேண்டிய உணவை மறக்க செய்தது,  நிம்மதியான தூக்கத்தை கெடுத்தது. இணையத்துடனே சங்கமித்து நடுநிசி பேய் போல் இணையத்துடன் பயணித்ததால் அதிகாலைகளும் குருவிகல் தரும் ஒலியும் தெரியாதே என்னை விட்டு மறைந்தது.                                                                                                                                                            நாம் நேசிக்கவும் நம்மை நேசிக்கவும் உறவுகள் உண்டு என்பது இன்பமானதும்  தன்னம்பிக்கை தருவதாகவும் இருந்தது.  தனிமையில் ஒரு அறையில் கணிணி முன் இருக்கும் போதும் ஒரு கூட்டத்தில் இருந்து அரட்டை அடித்து கொண்டு  மகிழ்ச்சியான நொடிகளாக இருந்தது. சில பொழுது சில கதைப்புகள் கருத்துரையாடல்கள் நினைத்து நான் தன்னை தானே சிரித்து மாட்டி கொண்டதும் உண்டு.                                                                                                                          


ஆனால் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு வழி கிடைக்க உதவியது.  இக்கட்டான வேளையில் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளவும் சில பொழுது தெளிவு கிடைக்காத பிரச்சனைகளுக்கு தெளிவு பெறவும் உதவியது .  உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருபோதும் சந்திக்க இயலாதவர்களிடம் நட்பில் இணை பிரியா உறவை பேணுவதும் மகிழ்ச்சியை தந்தது.  புதிய அறிவை நாம் பெறவும் நம் கருத்துரையாடல் சிந்தனைகளை பகரவும் வழிவகுத்தது என்றால் மிகையாகாது. 

ஆனால் இணையம் இல்லாத பொழுதுகள் மாதங்களாக செய்து முடிக்க இயலாத பல வேலைகளை முடிக்க நேரம் தந்தது என்றால் அதுவே மெய்.  செடிக்கு தேவையான அளவு தண்ணீர் நேரத்திற்க்கு, நிதானமாக ஊற்றவும், கருகிய இலைகள் தூத்து துப்புரவாக்கவும், தேவையான உரம் இட்டு அதன் அருகில் நின்று ரசித்து பார்த்து கதைக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.  2 மாதம் முன்பே தறையிறக்கி வைத்திருந்த பிபிசி வரலாறு காணொளி காணவும் நேரம் கிடைத்தது.  அடுக்களை பாத்திரங்கள்  நேரா நேரம் கழுகி அடுக்கவும்,   வாசிக்க நேரம் கிடைக்காது;   2 மாதம் முன்பு வாங்கி வைத்திருந்த இரண்டு நாவல்கள், புத்தகங்கள் வாசிக்கவும்  நேரம் கிடைத்தது.

எல்லாவற்றிர்க்கும் உபரி குழந்தைகளுடன் இன்னும் பல நல்ல நேரங்கள் செலவிடவும் என்னவருடன் பேசி பேசியே சண்டை இழுக்கவும் நேரம் கிடைத்தது. மறந்து போன உறவினர்கள் வீடு போய் நலம் விசாரிக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.

இருப்பினும் நேற்று மறுபடியும் இணைய இணைப்பு பெற்று  என் நண்பர்களிடம் கதைத்த பின்பு தான் போன ஜீவன் திரும்ப பெற்றது போல் உணர்ந்தேன்.  எப்படியாகிலும் இணையம் என் இணையற்ற நண்பர் தான் . இந்த பதிவு என் உயிரினும் மேலான  நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் சமர்ப்பணம்!