26 Dec 2021

நளபாகம்”- நூல் விமர்சனம்

 

ஆலா

இந்த நாவலில், மதச் சாமியார்கள் வாழ்க்கையை , கடவுள், ஆசாரம் என கூறி நடக்கும் மக்களின் வாழ்வியலை கேலிக்குள்ளாக்கியது மட்டுமல்ல, நிறைய கேள்விகளும் எழுப்பியுள்ளார். கேரளாவில் இருந்து வந்த ராமானுஜம் சாமியார் துவங்கி உள்ளூர் சரஸ்வதி சாமியாரை வரை யாரையும் விட்டுவைக்கவில்லை ஜானகி ராமன். அந்த காலயளவிலே ஜாதிவாதம், மதவாதம், நாத்திகம், பேசியவர்களும் ஜானகி ராமன் எழுத்தின் விமரசனத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள இயலவில்லை. ஆனால் இந்த நாவலின் மையம், பெண்களின் மன உளவியலிலுள்ள பொய்மை, பெண்களுடைய அகவும் புறத்திற்குமான முரண்கள் பற்றி தான் ஊன்றல் கொடுத்துள்ளார்.

இப் புதினத்தில் முதன்மை கதாபாத்திரமாக 32 வயது காமேஸ்வரன் மற்றும் 52 வயது இருக்ககூடிய ரங்கமணியும் ஆவார்கள். ஜோசியர் முத்துசாமி, அவர் மனைவி சுலோசனம்மாள், இவர்களுடன் ரங்க மணியும் யாத்திரா ஸ்பெஷல் இரெயிலில் வடஇந்தியாவிற்கு பக்தி- சுற்றுலாவிற்கு என இரெயிலில் பயணிக்கொண்டிருப்பார். அந்த இரயிலின் உணவு கண்டிராக்டர் நாயுடுவுடன், முதன்மை சமையல்காரர் காமேச்சுவரனும் இவர்களுக்கு அறிமுகம் ஆகின்றார். இவர்கள் கதைத்துக்கொண்டு இருப்பதை வைத்து, இவர்கள் குடும்பம், இவர்களின் வாழ்க்கை கதைகள் அறிந்து கொள்கிறோம்.

ரங்கமணி கணவர் விச்வேச்சுரன். தன் நோயை மறைத்து திருமணம் செய்ததும் இல்லாது, குழந்தை தர கையாலாகாத நிலையில் காசநோயால், திருமணம் முடிந்த ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுகிறார். கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் முடித்ததில் கணவரிடம் வன்மத்தில் இருக்கிறார் ரங்கமணி. ரங்கமணிக்கு கணவரிடம் இருக்கும் தீராத பகையையும் தான் புண்ணிய பயணத்தில் புனித நதியில் கரைத்து வருகிறார்.

குழந்தைகள் இல்லை என்ற நிலையில், ரங்கமணியின் மாமியார் கல்யாண கிருஷ்ணன் என்ற துரையை 8 வயது குழந்தையாக ரங்கமணிக்கு ஸ்வீகார குழந்தையாக கொடுக்கிறார். இப்போது துரையும் பங்கசாட்சியை திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லாது உள்ளனர்.  தங்கள் குடும்பம், வாரிசு அற்று இருப்பதில் ரங்கமணிக்கு பாரிய துயர் உண்டு. வளர்ப்பு மகனை சொந்த மகனாக முழு மனதாக ஏற்க இயலாத சூழலில், தன் மருமகளுக்கு இரத்த உறவில் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

ரங்கமணியின் மாமானாரின் கொள்ளு தாத்தா, கல்யாணப்பந்தியில் இருந்த முதியவரை சாப்பிட விடாது விரட்டியதால் நிகழ்ந்த சாபத்தால் ரங்கமணி மாமனார் குடும்பத்தில் குழந்தை பாக்கியமே அற்று போகிறது என அறிகிறார். இந்த குடும்பத்தில் அவ்வப்போது பிறந்த குழந்தைகளும் அங்கய சமையல்காரர்களுக்கு பிறந்ததாகவே வரலாறு.  இப்படி இருக்க பயணத்தின் மத்தியில் ஜோஸ்யர் முத்துச்சாமியிடம் தங்கள் குடும்ப ஜோதிடத்தை கொடுக்கிறார் ரங்கமணி. உங்கள் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டு, மகனுக்கு இல்லை என்கிற குண்டை தூக்கி போடுகிறார் ஜோதிடர்.

ரங்கமணிக்கு காமேஸ்வரனை கண்டதுமே ஒரு சிலிர்ப்பு. என் மகனை போலிருக்கிறாய் என்கிறார். என் மகனாக என் வீட்டில் வந்து வசிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பார். 8 வயதில் மகனாக வந்த துரையை சொந்த மகனாக ஸ்வீகரிக்க இயலாத மனநிலை கொண்ட ரங்கமணிக்கு ; 32 வயது காமேஸ்வரனை மகனாக வர அழைப்பது கொஞ்சம் முரணாகத்தான் உள்ளது.

காமேஸ்வரனும் சொன்னது மாதிரியே வந்து சேர்கிறார் ரங்கமணி வீட்டிற்கு. காமேஸ்வரனை மாமியார் ரங்கமணியும், மருமகள் பங்கஜவும் ஒரே நேரம் ஒளிவாக ரசித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு கட்டத்தில் பத்து வருடம் தன் உடன் வாழ்ந்து வரும் தன் சொந்த கணவர், 10 பேரை வேலைக்கு அமர்த்தி கடை நடத்தும் துரையை விட அழகாக, ஆளுமையாக,நேசத்திற்குறியவராக, பிரமாண்டமாக காமேஸ்வரன் பங்கஜத்திற்கும் தெரிய ஆரம்பிப்பார். .

தன்னையறியாதே காமேஸ்வரனுக்கும் பங்கஜத்தின் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகி கொண்டு இருக்கும். ஆனால் பங்கஜமோ, ஒருபடி மேலே போய் காமேஸ்வரனை தெய்வபுருஷனாகவே காண ஆரம்பிக்கிறார். இப்படி நாட்கள் நகர காமேஸ்வரனுக்கும் ஒரு சலிப்பு தட்ட ஆராம்பிக்கிறது, பல கேள்விகள் எழ ஆரம்பிக்கிறது. தன் நண்பர்களை சந்தித்து வருகிறேன் என கிளம்பி போய் முத்துசாமியை சந்தித்து காமேஸ்வரன் வீடு திரும்பியிருப்பார். காமேஸ்வரனை காணாது இருப்புக்கொள்ளாத ரங்கமணி காமேஸ்வரனை தேடி காமேஸ்வரன் ஊருக்கு போக காமேஸ்வரன் ரங்கமணி வீட்டுக்கு வந்து சேர்வதும் ஒரே நேரமாக இருக்கிறது.

அன்றைய தினம், மாமியார் இல்லாத தனிமையை பயண்படுத்திக்கொள்ள பங்கஜவும் முடிவெடுக்கிறார். தன் குழந்தை இல்லா கவலையை கதைத்து கதைத்து காமேஸ்வரன் அணைப்பில் சாய்ந்து விடுவார் பங்கஜம்.. விரல்கள் ஒட்டிகொள்ள சுயகட்டுப்பாட்டில் வந்த காமேஸ்வரன்; பங்கஜத்தின் மனநிலையை புரிந்து கொண்டு துரை கடைக்கு சென்று, தான் வந்த விடயத்தை தெரிவித்து வெளியே கிளம்புவான். துரையை நுண்உணர்வற்ற அமைதியான கதாப்பாத்திரமாக அறிமுகப்படுத்தியிருந்தாலும், தினம் இரவு 10 மணிக்கு வரும் துரை அன்று மாலையே வீடு வந்து சேர்கிறதில் தன் மனைவி தன்னை விட்டு போயிடுவாரோ என்ற அச்சவும் ஒளிந்து கிடைப்பதை காணலாம்.

திருமணம் முடிந்து 10 வருடம் ஆகியும மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்த துரையும் பங்கஜவும் அன்று ஒரு நாள் மனம் விட்டு பேசி கூடி கலந்திருப்பார்கள். ரங்கமணியின் இல்லாய்மை, அவர்களுக்கு அந்த வீட்டில் தனிமையான சூழல் கொடுப்பதோடு மட்டுமல்ல; ரங்கமணியின் பிடியில் இருந்தும் விடுதலையும் கிடைத்து இருக்கும். துரை தன் தாயின் பொய்மையை உணர்ந்ததால் என்னவோ, தன் பெற்ற தாய் போலவே வளர்த்த தாய் ரங்கமணியும் தன்னை அடக்கி வைத்திருக்கும் விதம் பற்றி தன் மனைவியிடம் மனம் நொந்து கதைப்பார். அன்றைய தினம் தான், தங்கள் வாழ்க்கையையே ஆரம்பிப்பதாக உணரும் தம்பதிகள் சில நாட்களில் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியாக நாட்களை கடப்பார்கள்.

ஏற்கனவே அந்த குடும்ப வரலாறு அறிந்த ஊர் ஜெனங்கள், கருவுற்ற பங்கஜத்தை காமேஸ்வரனுடன் இணைத்து பேச ஆரம்பிக்கும். இந்த நிலையில் காமேஸ்வரனுக்கு கலக்கம் ஆரம்பித்து விடும். அடுத்தும் ஜோசியனை தேடிச்செல்வான். ”அந்த வீட்டு மகனுக்கு குழந்தை பாக்கியம் இருக்காது மருமகளுக்கு உண்டு என நீங்கள் தானே குறிப்பிட்டீர்கள்” என ஜோசியரிடம் கேட்பார். ஜோசியரோ எப்படியும் உன் பெயர்தானே அடிபடுகிறது என்பான் இயல்பாக சிரித்துக்கொண்டு. ஏமாற்று ஜோசியன் என மனதில் நினைத்துக் கொண்டு திரும்புகையில்; ஜோசியரும் காமேஸ்வரனை தன்னுடன் வந்து தங்க கேட்டுக்கொள்வார். ஆனால் காமேஸ்வரன், தன் பழைய வேலையில் சேரவும், திருமணம் முடித்து குழந்தை குட்டிகளுடன் வாழவும் முடிவெடுத்திருப்பார்.

மருமகள் இடுப்பை வளைத்து கோலம் போடுகையில், மாமியார் ரங்கமணிக்கும் தோன்றுவது “நான் இதோட புருஷனா இருந்திருக்க கூடாதோ”.என்று ரங்கமணி தன் முதல் பார்வையிலே காமேஸ்வரனனின் புறம் கையை உற்று பார்க்க ஆசைப்படுவார். இருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் “என் பிள்ளை மாதிரி இருக்கிறான்” என உருகுவதும், எனக்கேது மகன் என்று உடன் மறுக்கும் சிந்தனையும் ….,காமேஸ்வரனை கண்டதும் முதுகுத்தண்டு ஒரு தடவை குலுக்கிற்று……. இன்னொரு இடத்தில் காமேஸ்வரனை பார்த்து என் கூடப்பிறந்தவன் மாதிரி என்றாள் ரங்கமணி.

இதே ரங்கமணிக்கு அவனை நீ என்று சொல்லும் போதே புல்லரித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். “உன்னை பார்த்தால் பிள்ளை மாதிரி இருக்கு. இனி இரெயில் சமையல்காரன் இல்லை..எங்க வீட்டிலெ என் பிள்ளையாக இருக்கலாம்” என்றும் அழைக்கிறார் ரங்கமணி. காமேஸ்வரனும் என்னமோ, இந்த தொடர்பு எங்கேயோ எப்பவோ ஆரம்பிச்ச மாதிரி உள்ளுக்குள் ஒரு ஆதங்கமாக இருக்கு…..என்கிறான் துவக்கத்தில்.

“நல்லூரம்மாவுக்கு ஆதங்கம். இரவல் பிள்ளையாகவே வம்சம் வளர்றதேன்னு- நீர் பிரம்மசாரி, போக்கில்லை. நல்ல சமர்த்தா இருக்கீர்……யார் தோஷம் சொல்ல போறா…மகாபாரத காலத்துக்கு முன்னாலேயே நடந்திருக்கு. ஒரு ரிஷிக்கு பிள்ளை இல்லேன்னா இன்னொரு ரிஷியை கூப்பிட்டு சந்ததி உண்டாக்கச் சொல்றது வழக்கமா இருந்திருக்கு……..பிரகிருதிக்கு எத்தனையோ ஆசை ….ரங்கமணி மனசும் இப்படி ஏதாவது கிறுக்கிண்டிருந்தா?” இப்படி உசுப்பேத்தும் முத்துசாமி ஜோசியர்.

“துரை சாருக்கு நிச்சயமாப் பிறக்கத்தான் போறது.”…..என்பதில் இருந்து துரையை சகோதரனாக பாவிக்க காமேஸ்வரனின் மனம் ஒத்து வரவில்லை என்பதே பொருட்படுத்த வேண்டியுள்ளது.

மாமியார் இல்லாத தருணத்தை பங்கஜம் பயண்படுத்த நினைப்பதும்…. காமேஸ்வரன் தான் வந்த விவரத்தை கடைக்கு போய் துரையிடம் தெரிவித்து அந்த சூழலில் இருந்து தப்பித்து கொண்டதும் அன்று இரவு பங்ஜவும் கணவரும் 10 வருடம் தாங்கள் கண்டிராத தாம்பத்தியத்தை அனுபவிப்பதுமாக பங்கஜத்தின் நிலையில்லா குணத்தையும் வெளிப்படுத்தி, காமேஸ்வரனுக்கு மகுடம் சூட்டுகிறார் கதாசிரியர்.

கடைசியாக ரங்கமணியிடம் காமேஸ்வரன் விடை பெறுகையில் ரங்கமணி முகத்தில் கிலி, குற்றச்சாட்டு, குற்ற உணர்வு அதிர்ச்சி அனைத்தையும் பார்க்கிறான். ஒருவனை மகனாக நினைப்பதாக கூறுவதாலோ, மகனாக வருவதாலோ தாய் – மகன் உறவு மலர்வது இல்லை என சொல்கிறது நாவல். புதிய உறவை ஏற்படுத்தி கொள்ள மனது எடுக்கும் தந்திரமாகவே சொல்லிக் கொண்டு போகிறார் கதை ஆசிரியர்

“பங்கஜத்திற்கு நான் என்ன பதில் சொல்வேன்…நீ விட்டுட்டுப்போயிட்டேன்னா….அவளுக்கு உலுக்கினாப்பலத்தான் இருக்கும்” போன்ற வார்த்தைகளை ரங்கமணி சொல்லும் போதும், அது உண்மையை விட ரங்கமணி என்ற பெண்ணின் மடக்கு தந்திரமாகத்தான் இருக்கும் என உணர்கிறான் காமேஸ்வரன். ரங்கமணியை பற்றி நண்பன் இளங்கண்ணனிடம் ‘துரையின் அம்மா’ என்றே குறிப்பிடுகிறான். அதிலிருந்து ரங்க மணியை தன் தாயாக விக்னேஸ்வரன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே புரிந்து கொள்ள முடியும். .

52 வயதில் ஒரு இளம் ஆணிடம் தோன்றும் மோகத்தை மறைத்து, வளர்ப்பு மகனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து, மருமகளுக்கு குழந்தை ஆசையை காட்டி தன் விருப்பத்திற்காக தந்திரமாக பணிய வைத்து,மருமகளை பகடையாக்கி காமேஸ்வரனுக்கு அம்மா என்ற பாசத்தைச்சொல்லி வீட்டில் தங்க வைத்து, இப்படி ரங்கமணி தன் பொருந்தாத ஆசையை, தன் ஆளுகையை தனக்கு சுற்றும் வாழ்பவர்கள் மேல் நுட்பமாக செலுத்தும் திறமை வாய்ந்தவராகவும் தந்திரசாலியாகவும் உள்ளார்.

பத்து வருடம் ஒரு தம்பதி, தம்பதியாக வாழ வாய்ப்பு அமைத்து கொடுக்காத ரங்கமணி, காமேஸ்வரனை வீட்டில் அழைத்து வரும் நோக்கம் காமேஸ்வரனுக்கு விளங்கியதும், தன் நேர்மைக்கு விளைந்த சோதனை என அறிந்து, ஆண்களுக்குறிய ஆண்மையுடன் தப்பித்து தன் வழிக்கு புறப்பட்டு செல்கிறார். தன் கணவரால் தனக்கு குழந்தை தர இயலாததால் விளைந்த கோபத்தை மருமகள் வழியாக குழந்தை பெற்று வன்மம் தீர்த்து கொள்ள ரங்கமணி எடுத்த நெறிகெட்ட முடிவை மிகவும் நுட்பமாக எழுதியுள்ளார் ஜானகிராமன்.

காமேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தை இருபெண்கள் விரித்த வலையிலும் விழாத மாமனிதனாக படைத்துள்ளது கொஞ்சம் ஆண் ஆதிக்க சிந்தையின் வெளிப்பாடு தானே?

பெண்கள் பக்தி கடவுள், ஆசாரம் பதி- பக்தி என இருந்தாலும் இச்சை என்றதும் சட்டென்று விழும் அபலத்தனத்தை, அல்லது தன் மோகத்தை அடைய கையாளும் முறையைப் பற்றிக் கவலைப்படாது, அதை மறைக்க ‘மகனைப்போல’, ‘ஆன்மீகம்’, தெய்வபுருஷன் என விளம்பும் பொய்மையும் விளங்க செய்கிறார் கதாசிரியர்.

இது போன்ற கதைகள் காமேஸ்வரன் என்ற ஆண் பிம்பத்தை புகழ் பாடவா அல்லது பெண்களின் அசாதாரண ஆசைகளும் அதை அடைய அவர்கள் கையாளும் தந்திரங்களைப் பற்றி சமூகத்தை புரியவைக்க எழுதினாரா?

எழுதிய விதம் ஆர்பாட்டமில்லாது அழகுடன் ஒழுகினாலும், எடுத்த கருத்தாக்கம் சமூகத்திற்கு தரும் பங்கு தான் என்ன?

வாசித்தே தீரவேண்டும் என்ற உன்றுதலில், விரச ரசத்துடன் தான் வாசித்து முடித்தேன். சீரியல் கதைகளின் உறவிடம் 79 களிலே துவங்கியுள்ளது.  ஆசாரம், அனுஷ்டானம், பக்தி மார்கம் என உன்னத மனநிலையில் இருப்பவர்களிடம் இருக்கும் கீழ் புத்திகளையும், அவல நிலையையும், மனத்துயரால் விளைந்த மனப்பிறள்வு பற்றியும் எழுத தைரியம் வேண்டும். அந்த அசராத தைரியத்திற்காக ஜானகிராமனை பாராட்டலாம்.

MAGAZINE

 https://naduweb.com/?p=15372&fbclid=IwAR2b5SdZR4UCFIQ0CBjokcCp969E2pMVmxK-QzPwSi5d0MoEOfZRE9gfSBM

7 Nov 2021

பிடிகொடுக்காத குற்றவாளி குறுப்பு!

ஜனவரி 21, 1984 நள்ளிரவு! ஆலப்புழாவை சேர்ந்த 30 வயதான திரைப்படப் சுருள் பிரதிநிதியான சாக்கோ, கெனி (தி ட்ராப்) என்ற திரைப்படச் சுருளை வழங்குவதற்காக டாக்கீஸில் வந்துள்ளார். கடைசிக் காட்சி சினிமா முடிந்ததும் ஹரி டாக்கீஸ் உரிமையாளரின் மகன் கே.ஸ்ரீகுமாருடன் தேநீர் அருந்துகின்றார்.   
 
சக்கோவை  இரவு  தங்கிவிட்டு காலையில் கிளம்பச் சொல்கிறார் கே.ஸ்ரீகுமார். ஆனால் தனது  ஆறு மாத கர்ப்பிணி மனைவியை மறுநாள் காலை தேவாலய விழாவிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளாதால் வீடு போய் சேரவேண்டும்  எனக்கூறி விடைபெற்று செல்கிறார். அதன்பின் அவரை யாரும்  கண்டதில்லை.

அன்று இரவு சாக்கோ  பேருந்திற்கு  தனியாக காத்து நிற்கிறார். ஒரு கறுப்பு அம்பாசடர் KLQ 7831 கார்  அவரை இரண்டு முறை கடந்து செல்கிறது.  அந்த காரில் சுகுமார குருப்பின் விசுவாசமான டிரைவர் பொன்னப்பன், அவரது மனைவியின் சகோதரியின் கணவர் மற்றும் அபுதாபியில் உள்ள குறுப்புடன் வேலை செய்யும்  சாபு உள்ளனர்.  KLY 5959 என்ற மற்றொரு காரில் குறுப்பு அவர்கள் பின்னால் பயணிக்கிறனர்.
குறுப்பு அந்த சிற்றூரில் உள்ள புதுபணக்காரர். அன்றே இரண்டு டாக்ஸி கார் வெளிநாட்டில் வேலையில் இருந்தவர். ஆறடி உயரமான குறுப்பு ஊருக்கு வந்தால் கறுப்பு கண்ணாடி, கோட் சூட்டுடன் காரில் தான் உலவுவாராம்.


கடந்த சில மாதங்களாகவே குறுப்பின் உருவ ஒற்றுமை கொண்ட ஒரு மனிதனை தேடி அலைகின்றனர்.  ஆரம்பத்தில் குறுப்பின் தோற்றமளிக்கும் ஒருவரின் உடலை பிணவறையில் இருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தார்.  அந்த திட்டம் தோல்வியடைந்ததும், கல்லறைகளை கொள்ளையடிக்க நால்வரும் திட்டமிட்டனர்.. அப்படியும் ஆள் கிடைக்காது அலைந்து  திரிந்தவர்கள் கண்ணீல் தான் அந்த இரவு சாக்கோ கண்ணில் படுகிறார்.


குருப்பு விமானப்படையில்  வேலையில் இருந்த  மனிதன். அந்த ஆளுக்கு விரைவில் பெரும் புள்ளியாக மாற வேண்டும். அரசு வேலையை கைவிட்டு விட்டு சவுதியில் ஒரு வேலை தேடி செல்கிறார். மருத்துவ மனையில் நர்சாக பணிபுரிந்த பெண்ணையும் காதலித்து திருமணம் செய்துள்ளார். அப்பேண்ணும் மும்பையில் பின்பு இரண்டு குழந்தைகள் உடன் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். குறுப்பு அபுதாபியிலிருந்து கேரளாவுக்குச் செல்வதற்கு சற்று முன்பு, 3,01,616 திர்ஹாம்கள் (சுமார் ரூ.30 லட்சம்) மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்துள்ளார். குறுப்புக்கு  தான் வாகன விபத்தில் இறந்ததாக சாற்றிதழ் வழங்கினால் 30 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெறலாம் என்ற நற்பாசை வருகிறது. அப்படி விபத்தில் சாக வைக்க ஒரு ஆளை தேடும் போது தான் அப்பாவி சாக்கோ மாட்டுகிறார்  


சாக்கோவைப் பார்த்தபோது ஆறடி உயரம், குறுப்பின் தோற்ற ஒற்றுமையும் தெரிகிறது. லிப்டு தரலாம் என்று கூறி காரில் ஏற்றிய பாஸ்கரன் , பொன்னப்பன் மற்றும் சாபுவும் சாக்கோவிற்க்கு விஷம் கலந்த மதுவை வலுக்கட்டாயமாக ஊட்டி, கழுத்தை நெரித்து கொல்கின்றனர். பின்னர் பிள்ளையின் வீட்டில் சென்று சாக்கோவின் ஆடைகள், திருமண மோதிரம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றைக் கழற்றி விட்டு, குருப்பின் உடையை அவருக்கு அணிவித்து, அவரது முகத்தைக் அடையாளம் தெரியா வண்ணம் கரிக்கின்றனர். பின்னர் உடலை KLY 5959 எண் காரில் ஏற்றி   கொல்லக்கடவு என்ற இயற்கை எழில் கொஞ்சும் கிராம் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டிய நெல் வயல் அருகே சென்றதும் சாக்கோவின்   உடல் KLQ 7831 eண் காரின் ஓட்டுநர் இருக்கைக்கு மாற்றப்பட்டு 10 லிட்டர் பெட்ரோல் ஊற்றி காரை வயலில் தள்ளி தீ வைத்து எரிக்க விட்ட பின்பு அங்கிருந்து திரும்புகின்றனர். அந்த வயல் இப்போது சாக்கோ பாடம் (சாக்கோ வயல்) என்று அழைக்கப்படுகிறது.

இதனிடையில் பாஸ்கரன் கையில் அணிந்து இருந்த கையுறை , பத்து லிட் பெட்ரோல் கேனை அங்கே விட்டு விட்டு செல்கின்றனர்.  பாஸ்கரன் கையிலும் தீபடுகிறது. காரின் எண் வைத்து அடுத்த நாள் குறுப்பு வீட்டிற்கு செல்கின்றனர். குறுப்பு குறுப்பின் சகலன் பாஸ்கரன் குடும்பம் ஒன்றாக இருந்து கோழிக்கறி வைத்து உணவு அருந்தி கொண்டு இருக்கின்றனர். போலிஸ் மனதில் முதல் சந்தேகத்தை வரவைக்கிறது.
சக்கோவை கடைசியாக சந்தித்த ஸ்ரீகுமார், சாக்கோ தியேட்டருக்கு வராததால், கவலைப்பட்டு அவர் வீட்டுக்குச் சென்று விசாரிக்கிறார்.  சாக்கோவின் குடும்பம் அசாதாரணமான எதையும் உணரவில்லை, ஏனெனில் சாக்கோ தனது வேலை நிமித்தமாக அடிக்கடி பயணம் செய்வதால் வீட்டில் இருந்து விலகி இருப்பவர்.  ஆனாலும் காவல்துறையில் புகார் பதிவு செய்யும்படி உறவினர்களிடம் சொல்லி விட்டு திரும்புகிறார் ஸ்ரீகுமார்.


வயலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அதற்குள் புதைக்கப்படுது. பிப்ரவரி 1 ஆம் தேதி, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சூப்பர் இம்போசிஷன் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி (நாட்டில் இதைப் பயன்படுத்திய முதல் நிகழ்வுகளில் ஒன்று) உடல் சாக்கோவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம், ‘சுகுமார குறுப் கொலை வழக்கு’ அதிகாரப்பூர்வமாக ‘சாக்கோ கொலை வழக்கு’ என்று பெயர் மாற்றப்பட்டுகிறது.


அந்தக் குற்றப்பத்திரிகையில் கொலை, குற்றச் சதி, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் இரண்டாவது குற்றவாளிகளாகப் பாஸ்கரன் பிள்ளை மற்றும் பொன்னப்பன் கைது செய்யப்படுகின்றனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாபூ, போலீஸ் அனுமதியாளராக மாறினார். 


சுகுமாரக் குருப் மற்றும் பாஸ்கரன் பிள்ளையின் மனைவிகள் சகோதரிகள் ஆவர். அவர்களும் இந்த திட்டத்தில் இருப்பதாக போலீசார் நம்பினர், எனவே அவர்களை மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர்.
செஷன்ஸ் நீதிமன்றத்தால் பாஸ்கரன் பிள்ளை மற்றும் பொன்னப்பன் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிற்பாடு பொன்னப்பன் தற்கொலை செய்து கொண்டான். பாஸ்கரன் பிள்ளை 12 வருடங்களுக்கு பின்பு விடுதலையாகி வயது மூப்பு காரணமாக இறந்தும் போனார். இதனிடையில் குறுப்புக்கு சாராயத்தில் கலந்து கொடுக்க வேதிப்பொருள் கொடுத்த கல்லூரி பணியாளரான  மது என்ற நபரும் தற்கொலை செய்து      கொண்டார்.  

     
குறுப்பை கேரளா போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். இதனிடையில் தப்பி சென்ற குறுப்பு பீகார், கொல்கத்தா போன்ற இடங்களில் வசித்ததாகவும் மருத்துவமனையில் சிகித்சை பெற்றதாகவும் பின்பு இறந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும், எத்தனை வருடங்கள் கழிந்தாலும் குறுப்பை போலிஸ் கைது செய்யும் என நம்பும் மலையாளிகள் மனதை விட்டு மறையாத குறுப்பை பற்றி ”குறுப்பு“ என்ற பெயரில் நவம் 12 அன்று ஒரு திரைப்படம் வரவுள்ளது. மம்மூட்டியின் மகன் கதாநாயகனாக நடிக்கிறார்.


தந்தை முகம் காணாத சாக்கோவின் 38 வயது மகன் தனது தந்தையின் கொலையாளியை பற்றி படம் என்று எடுப்பதை எண்ணி வருந்தி படக்குழு மேல் ஒரு வழக்கு தொடுத்து இருந்தார். படம் ரிலீஸ் ஆகும் முன் மகனுக்கு படத்தின்  ரிவ்யூ காட்டி ஒப்புதல் வாங்கியுள்ளனர் படக்குழுவினர்.


சாக்கோவின் கொலைக்கு காரணமான சுகுமாரக் குறுப்பு அந்நேரம் ஊரே மெச்சும் படி ஒரு வீடு கட்ட ஆரம்பித்து இருந்தார். அந்த வீட்டை கட்டி முடிக்க பணம் பற்றக்குறை என்பதால் சாக்கோவை கொன்று காப்புறுதி பணத்தை எடுக்க இருந்ததாக செய்திகள் வெளியானது.
அந்த வீடு இதுவரை முடிக்கப்படாது பேய் வீடு மாதிரி கிடக்கிறது. சாக்கோவின் மரணத்தில் பங்கு பெற்றோர் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மரித்து போயினர். சுகுமார் குறுப்பை கண்டு பிடிக்க போலிஸ் ஏழு வருடம் குறுப்பு வீட்டு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து அவதானித்து வந்திருந்தது. சுகுமார் குருப்பை பிடிக்காது போனது கேரளா காவல்த்துறைக்கு பெரும் அவமானமாக இருந்தது.கொலையாளிகளில் ஒரு ஆளான பாஸ்கரன் பிள்ளை சாக்கோவின் மனைவியை கடந்து நான்கு வருடங்களுக்கு முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். 


திரைப்படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என பார்க்கலாம். மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரம் வெளியாகும் படம் என அறியலாம். திரைக்கு வரும் முன்னே விவாதங்களில் சிக்கின இப்படத்தை  திரையில் காண இன்னும் ஒருவாரம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

6 Nov 2021

ஜெய்பீம் (Jai Bhim ) திரைப்படத்தில் குறிப்பிட்ட ராஜன் வழக்கு- கேரளாவின் ஜனநாயக கொடியில் ஒரு பூ என்றும் கண்ணீரில் மலர்ந்து நிற்கும்

 ஒரு அரசு கல்லூரி  பேராசிரியரான தந்தை ஈஸ்வர வாரியர், தாய் மற்றும் ஒரு சகோதரியுடன் நடுத்தர வர்க்க குடும்பத்தின் பிறந்து வளர்ந்த  ராஜன் காணாமல் ஆக்கப்படும் போது பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர். குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த ராஜன் படிப்பில் சிறந்த  மாணவரும் ஆசிரியர்களிடம்  மிகவும் மரியாதையாக நடந்து கொள்ளும்  மாணவராகவும் இருந்துள்ளார்.  இசை, நாடகம் மற்றும் பிற கலைத் துறையில் ஈடுபட்டு வந்த ராஜன், 1973-74ல் தனது கல்லூரியில் கலைச் சங்கத்தின் செயலாளராக இருந்துள்ளார்.  எந்த வகையான அரசியல் அல்லது புறநிலை நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

கேரளாவில் பெரும்பாலும் வடக்கு மாவட்டங்களான கண்ணூர் மற்றும் வயநாட்டில் நக்சல் செயல்பாடுகல் இருந்த காலகட்டம். பிப்ரவரி 28, 1976 அன்று  கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காயண்ணா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையம் மீது இரவு நேரத்தில் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர்.  ரோந்து பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஸ்டேஷனில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகளை நக்சலைட் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.  இச்சம்பவத்தில் REC Calicut மாணவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்குக் காரணம், REC-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வந்திருந்தனர்.

 

இது நடந்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு, 1976 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி கோழிக்கோடு ஃபெரூக் கல்லூரியில் நடந்த கலைவிழாவில் பங்கேற்று விட்டு  மாணவர்கள்  அதிகாலை 3 மணியளவில், விடுதியில் ஆசிரியர்களுடன் வந்து சேர்ந்தனர். அந்நேரம் அங்கு வந்த  போலீஸார் ​​பி. ராஜன் என்ற இறுதியாண்டு மாணவரை அழைத்துச் சென்றனர்.  உடனடியாக முதல்வர் மற்றும் இயந்திரவியல் பேராசிரியர் குன்னமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் கல்லூரி மாணவர் ராஜனை பற்றி விசாரித்தனர். குன்னமங்கலம் போலீசார் இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும், கோழிக்கோடு நகருக்கு அருகில் உள்ள மலூர்குன்னுவில் உள்ள சிறப்பு ஆயுதப்படை போலீஸ் (எஸ்ஏபி) முகாமில் விசாரிக்க பரிந்துரைத்தனர். முகாமுக்குச் சென்று விசாரித்து இருந்தாலும் மாணவரைப் பற்றி  எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 

அடுத்த நாள் பி, சாத்தமங்கலத்தில் டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் நடத்தி வந்திருந்த மற்றொரு ராஜன், ஹாஸ்டலில் வசிக்கும் ஜோசப் சாலி ஆகிய இருவரையும் காக்காயத்தில் நக்சலைட் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விசாரிக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த  போலீஸ் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது பின்னர் தெரிய வந்தது.  இந்த முகாமில் உள்துறை அமைச்சர் கருணாகரனின் செல்லப்பிள்ளையாக இருந்த  குற்றப்பிரிவு டிஐஜி ஜெயராம் படிக்கல் தலைமை வகித்து வந்தார். ஜெயராம் படிக்கல்  அப்போது இங்கிலாந்து  ​​ஸ்காட்லாந்து யார்டில் இருந்து சிறப்பு போலீஸ் பயிற்சி பெற்று திரும்பியிருந்தார் இந்த முகாமில் பயன்படுத்தப்படும் சித்திரவதை முறைகளில் ஒன்று 'உருட்டல்'.  குற்றவாளிகள் என சந்தேகிக்கும்  நபரை மேசையில் நிர்வாணமாக படுக்க வைத்து, காவலர்களால் ஒரு மர உருளை அவர் மீது இடுப்பு முதல் குதிகால் வரை உருட்டப்படும் தண்டனை ஆகும். 

காக்காயம் முகாமில் ராஜன் இப்படி சித்திரவதை செய்யப்படுவதை தாங்கள் பார்த்ததாக ராஜன் மற்றும் ஜோசப் சாலி ஆகியோர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.   இந்த மனிதாபிமானமற்ற சித்திரவதையில் ராஜன் கொல்லப்பட்டு பின்னர் அவரது உடலை எடுத்து கொண்டு போய் மலையில்  வீசியிருக்கலாம்  அல்லது கனமான பாறாங்கற்களில் கட்டி காக்கயம் அணையின் ஆழத்திற்கு இறக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப் பட்டது. ஆனால் பிற்பாடு சாக்கில் கட்டி எடுத்து போன உடலை பெட்ரோல் ஊறி எரித்து சாம்பலை நதியில் எறிந்தனர் என்ற தகவல்  கிடைத்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த உடலின் பாகங்கள் அல்லது அதன் எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ராஜன் கைது செய்யப்பட  நக்சல் தொடர்பு என்று அரசு கூறியிருந்தாலும் அப்போதைய உள் துறை அமைச்சராக இருந்த கருணாகரன்; கல்லூரி நிகழ்விற்கு வந்த போது மாணவர் ராஜன் பாடிய பாடலில் அமைச்சரை கேலி செய்த வரிகள் இருந்ததே கொலைக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

 


பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி பொறுப்பான பேராசிரியரும் ராஜனின் தந்தையிடம் முதல் மந்திரியை அணுக கூறுகின்றனர். அப்போது சி.அச்சுத மேனன் கேரள முதல்வராகவும், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணியில் கே.கருணாகரன் உள்துறை அமைச்சராகவும் இருந்த காலம். . தன் தனிப்பட்ட தேவைக்கு  அணுகுவதில்லை, என் மகன் குற்றம் செய்திருக்க மாட்டான், அவனை திருப்பி அனுப்புவார்கள் என்று கூறிய  தந்தை மகனுக்காக  காத்து இருக்கிறார். மகனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் ராஜனின் தந்தை உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் பல முறை தன் மகனை கண்டு பிடித்து தரக்கூறி   பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் அவரது கோரிக்கைகள் அனைத்தும் அதிகாரிகளின் காதுகளில் விழவில்லை. அதிகாரத்தில் இருந்தவர்கள் தந்தைக்கு ஒரு  ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை.

காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன் காணாமல் போனதற்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர ராஜனின் தந்தை டி.வி. ஈச்சர வாரியார், கேரள உயர் நீதிமன்றத்தில் , ஏப்ரல் 1977 இல் அவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சுதந்திர கேரளாவில் தொடுத்த முதல் ஆட்கொணர்வு மனு இதுவே. ராஜன் காணாமல் போன வழக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, ​​அவர் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் கருணாகரன் அறிக்கை வெளியிட்டார். ஆனால் வழக்கு நீதிமன்றம் வந்த கோழிக்கோடு றீஜினல் கல்லூரி( REC ) ​​ வளாகத்தில் இருந்து  ராஜன் காவல்துறையால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை மறுக்க இயலவில்லை. இதனால் பொய் தகவல் கொடுத்த கருணாகரன் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.


உண்மையைத் தேடுவதில் ராஜனின்  தந்தை தளராமல் அடுத்த 30 ஆண்டுகளாக தனது  மரணம் வரை தனி ஆளாக  சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். ‘ஒரு தந்தையின் நினைவுகள் என்ற தனது புத்தகத்தில் எழுதுகிறார், தன் மகனைக் கொன்றதாக காவல்துறை ஒப்புக் கொள்ளும் வரையிலும்  தனது  போராட்டத்தைக் கைவிட போவதில்லை. பேராசிரியர் ஈச்சர வாரியர் கேரளாவில் அறியப்பட்ட ஒரு மனித உரிமை ஆர்வலராகவும் இருந்தார், மேலும் இந்தியாவில் மனித உரிமைகள் பிரச்சினைகளில் விடாமுயற்சி மற்றும் அச்சமின்மையின் அடையாளமாக இருந்தார். இந்தியா,  காவல் துறையின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை வளர்க்க தவறினது இந்திய ஜனநாயகத்தால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சவாலாக இருந்தது.

 
ராஜன் காணாமல் போனதற்குக் காரணமான காவல்துறை அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் புலிகோடன் நாராயணன்,  வேலாயுதன்,  பீரான், ஜெயராஜன் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் ராஜனை பெஞ்சில் உருட்டிக்  கொலை செய்தனர் என்பதை உடன் இருந்த சாலி மற்றும் இன்னொரு ராஜன் தெரிவித்து இருந்தும், ராஜனின் உடல் கிடைக்கவில்லை என்பதால் கேரளா உயர்மன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தும்; உச்ச மன்றத்தால்   ராஜன் கொல்லப்பட்டதற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று வழக்கு தள்ளுபடி ஆனது. பிற்காலம் புலிகோடன் நாராயணன் துணைக் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். கருணாகரன் பல முறை கேரளா அரசின் முதல் அமைச்சராக இருந்து வந்தார்.


ஓய்வு பெற்ற இந்தி பேராசிரியான ஈச்சார வாரியர், 'ஒரு தந்தையின் நினைவுகள்' என்ற புத்தகத்தை  எழுதி 2004 ல் பிரசுரித்தார்.  காவல்துறை ஒப்புக் கொள்ளும் வரை தனது போராட்டத்தை கைவிட போவதில்லை என புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார். பிற்பாடு  இச்சம்பவத்தில் உள்ள கொடூரத்தைசவம்தீனிகள்’ என்ற புத்தகம் வழியாக புறம் உலகிற்கு சி.ஆர்.ஓமனக்குட்டன் என்பவர் எழுதி அம்பலப்படுதினார். பிறவி என்ற திரைப்படம் இந்த சம்பவத்தை முன்னிறுத்தி வந்தது. 

தன் மகன் காணாமல் போனதை கேள்விப்பட்டு ராஜனின் தாயார்  மனநலம் குன்றி இறந்து போனார். ஈச்சர வாரியர் தனக்கான நீதி கிடைககதே  2006 ல் இறந்தும் போனார்.

 என் அப்பாவி குழந்தையை

அவன் இறந்த பிறகும்

மழையில் நிற்க வைப்பது ஏன்?

 நான் கதவை மூடுவதில்லை.

மழை உள்ளே அடித்து

என்னை நனைக்கட்டும்.

 என் கண்ணுக்குத் தெரியாதமகன்

தனது தந்தை ஒருபோதும் கதவை மூடவில்லை 

என்பதை அறியட்டும், ”.

31 Jul 2021

தலை சாய்க்க இடமற்றோர்!

 
கேரளா சுதந்திரம் அடைந்ததும், நிலப்பிரபுத்துவத்துவத்தை  அழிக்கும் நோக்கில் 1959ல் நிலச் சீர்திருத்த மசோதா   அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன்படி ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் அல்லது ஒரு நபருக்கு ஒரு ஏக்கர் என்ற கணக்கில் ஒரு குடும்பம் 25 ஏக்கருக்கு மேல் கைவசம் வைத்து இருக்க  தடை வந்தது. 

அதை நடைபடுத்தும் முன் ஈ. எம். எஸ் அமைச்சரகம் கலைக்கப்பட்டது. அடுத்த  காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் ஆர் சங்கர் தலைமையில், நில சீர்திருத்தங்களுக்கான அடுத்த சட்டம் 1963 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அது நிலப்பிரபுக்களுக்கு சேதாராம் ஆகாதவிதம் வரையப்பட்டது. இதன் மூலம் நிலத்தை பயிரிட்டுக் கொண்டிருந்த குத்தகைதாரர்களுக்கு நிலத்தின் உரிமை கிடைத்தது. ஆனால் நிலங்களில் தொழிலாளிகளாக இருந்த பட்டியல் இனத்தவர்களோ பழங்குடி மக்களோ எந்த நலனையும் பெறவில்லை.

1970 களின் முற்பகுதியில் அச்சுத மேனன் அமைச்சகத்தால்  இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அத்தனை வருடங்கள் கடந்த நிலையில் கவுரியம்மா வரைந்த சட்டத்தின் பல சரத்துக்களை மாற்றி ’பல்லு போன கிழவி போல்’ இருந்தது சட்டம்.  இதன் படி பல சலுகைகளை நிலபிரபுக்களுக்கு வழங்கும் படியாகவே இருந்தது. இருந்தாலும் இந்த சட்டத்தால் நிலமற்ற 26 லட்சம் மக்கள் நில உடையவர்களாக மாறினார்கள்.

 நிலத்தை கையகப்படுத்த இயலாத வண்ணம் சட்டத்தில் ஓட்டை போட்டனர். அதாவது நிலத்தை கிருஷி பூமி என்றும் தோட்ட பூமி என்றும் பிரித்தனர். சட்டப்படி, கிருஷி பூமியை மட்டுமே அரசால் கையகப்படுத்த இயலும்.  நிலதாரர்கள் தங்கள் விவசாய( கிருஷி) நிலத்தை அவசர அவசரமாக தேயிலை, காப்பி, குருமிளகு போன்றவை பயறிட்டு தோட்டமாக மாற்றி தன்னகப்படுத்தி கொண்டனர்.

அடுத்து தங்கள் விவாசாய இடத்தை தோட்டமாக மாற்றப்போகிறோம் என்று அரசு கெசட்டில் ஒரு விளம்ரம் கொடுத்து தங்கள் நிலத்தை காப்பாற்ற வழி செய்தது.

அடுத்து இன்னொரு சூழ்ச்சியை செய்து கொடுத்தது அரசு!  ஆராதனை ஆலயங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் இருக்கும் நிலத்தை அரசு கையகப்படுத்த இயலாது.

பண்ணையாருக்கு பல மனைவிகள் அதில் பல மக்கள் இருந்தால் அவர்கள் எல்லோரும் பங்கிட்ட பின் மீதத்தை அரசிற்கு கொடுக்கலாம்.

நிலதாரருக்கு இன்னும் ஒரு சலுகையை வழங்கி இருந்த்து அரசு , அதாவது தங்கள் நிலத்தில் அளவிற்கு மீறினதை அரசிற்கு என்றில்லை,  தான் விரும்பிய நபர்களுக்கும் விருப்ப தானமாகவும் கொடுக்கலாம்

அடுத்து தங்கள் சொத்துக்களை அரசுசாரா நிறுவங்கள் கட்டுபாட்டில் மாற்றி தனி நபர் சொத்து என்ற நிலையில் இருந்து மாற்றி காப்பாற்றிக் கொள்ளலாம். இப்படியாக வலுவான சட்டத்தை பல சரத்துக்கள் இடச்சேர்க்கையாக சேர்த்து நீர்ந்து போகச்செய்தனர்.


இந்த சட்டம் ஊடாக கையடக்கப்பட்ட அரசின் நிலங்கள் என கண்டு பிடிக்கப்பட்டது 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆகும். அரசு கையகப்படுத்த அணுகிய நிலையில் பல பிரச்சினைகள் நில உடைமையாளர்களால் வரத் துவங்கியது. மேலும் சட்டத்தில் கொடுத்துள்ள சலுகைகளால் விளைந்த மாற்றத்தால்  17 லட்சம் என்பதில் இருந்து 7 அரை லட்சம் நிலம் மட்டுமே புறம்போக்கு நிலம் கணக்கிற்குள் எடுக்க முடிந்தது.  இருந்தும் ஆனால் அரசால் கையகப்படுத்த பட்டது வெறும் 64 ஆயிரம் ஏக்கர் நிலம்  மட்டுமே.

இந்த சூழலில், நிலமற்ற  அடிமட்ட மக்களை திருப்தி படுத்தும் விதம் 25 அரிஜன் காலனி, 4167 பழங்குடி மக்கள் குடியிருப்பு, தேயிலை தொழிலாளர்களூக்காக 10 ஆயிரம் லயின் வீடுகள் , மீன் பிடி தொழிலாளிகளுக்காக 520 குடியிருப்பு உருவானது. இவர்கள் இப்போது தாங்கள் வசிக்கும் நிலத்தின் சொந்தக்காரர்கள் அல்ல.  வசிக்கலாம், நிலத்தை விற்கவோ சொந்தம் கொண்டாடவோ இயலாது.


 இப்போது அரசு தங்களிடம் மக்களுக்கு கொடுக்க புறம்போக்கு நிலம் இல்லை என்கின்றனர். சமீபத்தில் எடுத்த ஆராய்ச்சியில் டாட்டா மற்றும் மலையாளம் ஹாரிஷ் நிறுவங்களிடம் மட்டுமே  கணக்குக்கு மீறின 70 ஏக்கர் நிலம் உண்டு என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களூக்கு முன் நேர்மையான தமிழகத்தை சேர்ந்த கேரளா ஆட்சியாளர் 38 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயன்று கொண்டு இருக்கும் வேளையில் தற்போதைய  தொழிலாளர்கள் அரசு அதிகாரத்தில் வந்தது.

இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எஸ்டேட்  முதலாளிகள் கார்ப்பரேட்டுகளுக்கே உதவி வருகின்றனர். நேர்மை என்று பெயர் எடுத்த ராஜமாணிக்கத்தில் அதிகாரத்தை மட்டுப்படுத்தி ஒடுக்கி விட்டனர். நிலம் கையகப்படுத்தலி அரசிடம் மல்லுக்கட்டி வந்த, கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற நேர்மையான ஆட்சியாளரையும் ’ஹணி ட்ராப்’ ஊடாக முற்றும் முடக்கி விட்டனர். 


கடந்த வருடம் நிலம்கையகப்படுத்தும் வேளையில் ஒரு தம்பதி தீயிட்டு தங்களை மாய்க்கும் துயர் நிலையும் உருவானது. 

அப்படியாக கவுரியம்மா வரைந்த சட்ட மசோதாவின் பலனை இன்னும் எளிய மக்கள் அனுபவிக்கவில்லை. ஒரு பிடி இடம் கூட சொந்தமாக இல்லாது உள்ளூரிலே அகதிகளாக மாற்றப்பட்ட பல்லாயிரம் மக்கள் அல்லாடுகின்றனர்.  இதே நிலையை தான் சென்னை பூர்வகுடி மக்களும்  நிலமற்று நதிக்கரையில் ஒதுங்கி, அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். 

arumbakkam

 


16 Jul 2021

இமையத்தின் பிற்போக்குத்தன கருத்துக்கள் கொண்ட ”செல்லாத பணம்”

 
”செல்லாத பணம்” க்ரியா பதிப்பகம் ஊடாக  2018 வெளிவந்த எழுத்தாளர் இமையத்தின் நூல் ஆகும் . இது 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.

[caption id="attachment_45693" align="aligncenter" width="297"] 
Late Artist Ilayaraja's paintings from google[/caption]

காதலித்து திருமணம் செய்த பெண், தன் கணவனின் மேலுள்ள கோபத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயல்கயில் பெற்றோர், சகோதரன், கணவன் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதே இதன் ஒற்றைவரிக் கதை .

முக்கிய கதாப்பாத்திரங்கள் தீக்குளித்த ரேவதி, கணவன் ஆட்டோ ஓட்டுனரும் குடிகாரனுமான ரவி, ரேவதியின் அண்ணன் முருகன், தந்தை நடேசன், தாயார அமராவதி, அண்ணி அருண்மொழி இவர்களை கொண்டு  கதையை நகத்தியுள்ளார்.

எம் என் சியில் பணிபுரியும் அண்ணன் அண்ணி,  ஆங்கிலம் உரையாடும் கதாப்பாத்திரம் என இந்த  கதையின் காலவெளியை தற்காலத்துடையது என அறிமுகப்படுத்தி விட்டார் கதை ஆசிரியர்.

 

கதை அதன் போக்கில் போகும். வாசிப்பவர்கள் அவர்வர் தராதரம், சிந்தனையோட்டம், கல்வி சூழலில் நின்று விளங்கிக் கொள்ளலாம் என்பதே இக்கதையின் சிறப்பு.  கதையின் மையக்கருத்து அல்லது கதையின் நோக்கம் என ஆசிரியர் எதையும் கையாளவில்லை. அறமோ, வாழ்வின் தர்சனமோ அற்று தட்டையான கதை மாந்தர்களுடன்  வெறும் சாரமற்ற உரையாடல்களுடன் கதை நடர்கிறது.

அருண் மொழி, மற்றும் ரவியின் உரையாடல்கள் மட்டுமே ஓரளவேனும் சிந்தனைக்கு உள்ளாகுவது.  ஆனால் இவர்கள் அடங்கிய கதைப்பக்கங்கள் வெறும் ஓரிரு பக்கங்களில் மட்டுமே உள்ளது.  மற்றைய 219 பக்கவும் வெறுப்பும், கோபவும் ஏச்சும் பேச்சும், புலம்பலும் தற்பெருமைகளும் மட்டுமே.

ஜாதி மாறி, தராதரம் இல்லாது கல்யாணம் செய்து விட்டாளே என புலமபும் பெற்றோர்கள்.  கதை முடியும் தருவாயிலும் தங்கள் பார்வையை திருத்தியதாகவோ, மகளை ஏற்றுக்கொண்டதாகவோ இல்லை.  அவள் சாகட்டும் அவனோடு வாழ வேண்டாம் என்ற உரையாடல்கள், தாயே மகளை திட்டும்போது அறுதலி , முண்டச்சி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் மட்டமானது.   பெற்றவர்கள் சொல்பேச்சு கேட்காது திருமணம் செய்யும் பெண்ணை தாய் அறுதலியாகக்கூட ஏற்றுக்கொள்கிறார்,  சாகட்டும்  என்பது போன்ற  வசைபாடல்கள் இன்னும் பிள்ளைகளை பெற்றவர்களின் உடைமைகள் போன்ற  காலம் சென்ற கருத்தாக்கங்களை தாங்கி பிடிப்பவையாகவே உள்ளது.

பிரதான கதாப்பாத்திரம் ஆசிரியரான தந்தை. ஆசிரியருக்கான எந்த மனவளர்ச்சியும் அற்று, பணத்திமிர் பிடித்த, அற்ப பெருமை கொண்ட ஒரு முதியவர்.  மகள் காதலிக்கிறாள் என தெரிந்ததும் விரும்பினவனோடு ஓடிப்போயிடக்கூடாது என கிடைக்க இருந்த வேலையும் செய்ய விடாது வீட்டில் அடைத்து வைக்கின்றனர்.   ஆனால் அதே அயோக்கியனுக்கே எப்படியோ போகட்டும் என்ற மனநிலையில் திருமணம் செய்தும் கொடுக்கின்றனர்.

தனக்கு தேவை என்றால் காலில் விழப்போவதும், மற்றவர்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள விரும்பாத வரட்டு கவுரவம் பிடித்த தகப்பன்.  தன் மகள் மரணத்தை இழப்பாக காணும் மனம்,  பள்ளி வாகனத்தில் விபத்தில் இறந்த குழந்தை மேல் அந்த கரிசனை இல்லை.  மூன்று வீடு இருந்தும் ஒரு வீட்டில் மகளை குடியிருத்த மனமில்லாது இருந்த தகப்பன், மகளிடம் கடந்த ஆறு வருடங்களாக பேசாதிருந்த தகப்பன்  டாக்டரின் மேஜையில் ”நகை, பத்து லட்சம் பணத்தை வைத்து  எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என் மகளை மீட்டு தாங்கள் என கெஞ்சுகிறது” அந்த இக்கட்டான சூழலிலும் தான் வைத்து இருக்கும் பணத்தால் சாதிக்கலாம் என்ற அற்ப திமிர்த்தனத்தயே காட்டுகிறது.  

Photo courtesy: Late artist Ilayaraja painting www.google.com[/caption]

அடுத்து அண்ணன். இத்தனை படித்தும்,  நகரத்தில் வேலையிலிருந்தும், தானே காதலித்து திருமணம் செய்திருந்தவனாக இருந்தும்; தங்கை விரும்பின ஒருவனை திருமணம் செய்தாள் என்ற ஆதங்கத்தில், தங்கையிடம் ஆறு வருடமாக முகம் கொடுக்காது இருந்தவன் , தங்கையை சுயகாலில் நிற்க ஊக்கப்படுத்தாது இருந்த நவீன அண்ணன் , மருத்துவ மனையில் மரணத்திற்கு போராடுகையில்  “கோடி போனாலும் பரவாயில்லை என் தங்கையை காப்பாற்றி விடுவேன் என அழுகிறது” தன் தந்தையை போலவே கல்வி பெற்றும் மாற்றம் பெறாத மூர்க்க குணம் உடைய ஆண் கதாப்பாத்திரத்தையே நினைவுப்படுத்துகிறது.  



அடுத்து அமராவதி என்ற தாய் கதாப்பாத்திரம்.   எந்த சூழலிலும் கணவன் மகன் தவறை அவர்களிடம் எடுத்துக் கூறாது, தங்கள் சமூக அந்தஸ்துக்காக மகளை பலி கொடுத்துக்கொண்டிருந்த தாய்.  இடம் கிடைக்கும் போது மருமகளை கீழ்மையாக நடத்தும் விதம், மகளின் கணவனிடம் கொண்டுள்ள மனப்பாங்கு, ”ஒற்றத்துணி இல்லாம மருத்துவர் முன் கிடைக்காளே என்ற ’கற்பு ஓலம்’, அருவருப்பாக உள்ளது.  தகப்பனும் சகோதனுக்கும் மகள் நிலையை தெரிவிக்காது மகளை எப்போதும்  தங்களுக்கு கையேந்தும் படி வைத்திருந்த விதம், மகளின் குழந்தைகளை கூட அருவருப்பாக பார்க்கும் தாய்மை.  இது போன்ற கயமை கொண்ட குணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதம் கண்டிக்கும் விதம் கதையில் உரையாடல்கள் இல்லை.

அடுத்தது ரேவதி? இத்தனை அபத்தமாக கதாப்பாத்திரத்தை உருவாக்க இயலுமா?  நெஞ்சில் பச்சை குத்தியிருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக மணம் முடிக்க விரும்பும் சொந்த புத்தியில்லாத பிடிவாதக்காரியான, பொறியியல் பட்டதாரியான ரேவதி.   ரேவதியை மாதிரியான கதாப்பாத்திரங்கள் மேல் இரக்கம் வரவில்லை வெறுப்பு தான் வருகிறது.

அருண்மொழி கதாப்பாத்திரம் மட்டுமே ஒரே ஒரு ஆறுதல். அறிவு பூர்வமாக சிந்திக்கும், உரையாடும், செயல்படும் ஒரே ஒரு கதாப்பாத்திரம். ரவியை புரிந்து கொள்ள முயன்று ரவிக்கு உதவி அந்தஸ்தை வழங்கியிருந்தால்,  தாழ்வு மனப்பான்மை இல்லாது வாழ்ந்திருப்பார்களே என்று ஏக்கம் கொள்கிறது.

 அடுத்து ரவியின் கதாப்பாத்திரம். நல்லவனா கெட்டவனா என்று நிச்சயம் கொள்ளாத அளவிற்கு மாறிக்கொண்டே இருந்த முக்கிய  கதாப்பாத்திரம்.  கடைசி வரை ரவியை ரேவதியின் குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. ரேவதி குடும்பம் அடிக்கும் போதும், திட்டும் போதும் எந்த எதிர்ப்பும் இல்லாது ஏற்று கொள்கிறான்.   கடைசியில் மனைவியின் உடலை ரேவதி குடும்பம் எடுத்துக்கொண்டு போகும் மவுன சாட்சியாக ஒதுங்கி நிற்கிறான் குடிகாரனான தன்  இயலாமையினால்.

தீயிட்டு கொளுத்தின ரேவதியின் வாக்குமூலம் வாங்க வரும் போது போலிஸ் அதிகாரி வாங்கின கைலஞ்சம் ரூபாய் ஆயிரத்தை; ரேவதி இறந்து விட்டாள் என அறிந்ததும் திரும்பிக்கொடுக்கிறார்.  கையூட்டு வாங்குனதே அநியாயம், அந்த அரசு ஊழியர்களின்  அத்து மீறல்களுக்கு வக்காலத்து வாங்கும் படியாக உள்ளது.  பல இடங்களில் மீண்டும் மீண்டும்  ஒரே தூஷணவார்த்தைகள் தொடர்ந்து வருவது அலுப்பாக உள்ளது.

பெண்கள், பிறந்த வீட்டு ஆட்களாலும் துன்புறுத்தப்படும் அவலம். பெற்றவர்கள் ரவியுடன் ஓடிப்போய் விடுவாள் என்ற பயத்தில் வேலைக்கு அனுப்பவில்லை. ரவியோ எவனோடாவது ஓடிப்போயிடுவாள் என்ற  ஆச்சத்தில் வேலைக்கு அனுப்பவில்லை.  

 மொத்ததில் சாகித்ய அக்காடமி விருது கொடுக்கும் அளவிற்கு இதில் என்ன கதைக்கரு உண்டு என்றே விளங்கவில்லை. வாசகர்களை 222 பக்கம் முடியும் மட்டும் மருத்துவமனையிலே நிற்கவைத்து பார்த்த கொடூரம்.  அடுத்து தங்கள் பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நடேசன் குடும்பத்தாரின் /மேல்த்தட்டு படித்த வர்கத்தின் அகங்காரம். இப்படி சமூகத்திற்கு எடுத்துக்காட்டு அல்லாத கதாப்பாத்திரங்களை கொண்டு கதை சொல்லியதால் சமூகத்திற்கு என்ன பலம் கிடைக்க போகிறது.

ஒரு கதை என்பது காலத்தால் அழியாத உணர்வுகளாக இருக்கவேண்டும்.  முழுக்கதையுமே  மரண வீட்டின் ஓலம்,  உணர்வு கொந்தளிப்பு , சோகம் என வாசகர்களை சிந்திக்கவிடாதே  தடுக்கும் உணர்ச்சி கொப்பளிப்பு  நாவல் இது!

27 Jun 2021

கண்கவரும் பத்மநாபுரம் அரண்மனை

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் என்ற சிறிய கிராமம் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த வேணாடு இராச்சியத்தின் செழிப்பான தலைநகராக இருந்தது.  பின்னர் இது திருவாங்கூர் சுதேச மாநிலமாக பிரபலமானது.  புலியூர்குறிச்சி (உதயகிரி), அரண்மனைகள், பழைய கோட்டைகள் மற்றும் முக்கிய கோயில்களின் எச்சங்கள் இன்னும் உள்ளன. மதுரையின் நாயக்கர்களிடம் தங்களை பாதுகாக்க     வேணாடு ஆட்சியாளர்கள்,  இப்பகுதியைப் 10,000 வீரர்களைக் கொண்டு பாதுகாத்திருந்தனர்.

கல்குளம் ஒரு மிகப் பெரிய நகரம் ஆகும்... அரண்மனைகிழக்கில் இயற்கையான பாதுகாப்பை வழங்கிய மேற்குத் தொடர்ச்சி மலையின் கரடுமுரடான மலைத் தொடர்களால்  பலப்படுத்தப்பட்டுள்ளது, மறுபுறம் பெரும்பகுதி 24 அடி உயரத்தில் கல் மற்றும் செங்கல் சுவரால் சூழப்பட்டுள்ளது.  கல்குலம் மற்றும் அருகிலுள்ள உதயகிரியில் உள்ள கோட்டைகள் கி.பி 1600 க்கு முன்னர், ரவி வர்மா குலசேகரனின் ஆட்சியில்(1592-1609) கட்டப்பட்டது.

 குடியேற்றங்களுக்கு  அருகாமையில் இருப்பதால் அரண்மனையை நிர்மாணிப்பதற்கான பொருத்தமான இடமாக கல்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.   வளமான விவசாய நிலங்கள் மற்றும் ஏராளமான நீர் நிலைகள் இருந்தது குடியேற்றவாசிகளை வரவேற்றது.

 கோட்டைக்கும் நடுவில் பத்மநாபுரம் அரண்மனை அமைந்துள்ளது.  400 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த அரண்மனை ஆசியாவிலுள்ள மிகப்பெரிய மர அரண்மனையாக கருதப்படுகிறது.  6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தின் 15 க்கும் மேற்பட்ட அற்புதமான மாளிகைகள் கொண்டது இது. மார்த்தண்டா வர்மாவின் உத்தரவின் பேரில், கல்குலத்தில் அரண்மனைகள் புதுப்பிக்கப்பட்டு வலுவான கல் கோட்டையால் பாதுகாக்கப்பட்டன. அரண்மனை வளாகத்தில் இன்று நாம் காணும் பல கட்டமைப்புகள் வாஸ்துசாஸ்திரத்தைக் கையாளும் பண்டைய நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட நெறிகளை பின்பற்றி மார்தாண்டா வர்மாவால் புதுப்பிக்கப்பட்டன .பணிகள் முடிந்ததும், மார்த்தாண்ட வர்மா அரண்மனையை அரச குடும்பத்தின் தெய்வமான ஸ்ரீ பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்தார். பண்டைய கல்குளத்து கொய்கல் 'பத்மநாபுரம் கொட்டாரம்' என்று அறியப்பட்டது.

1750 ஆம் ஆண்டில் அனிழம் திருனால் மார்த்தாண்ட வர்மா அரண்மனையையும் கோட்டையையும் மீண்டும் கட்டியெழுப்பினார், அதன்பிறகு பழைய கல்குலம் அரண்மனை பத்மநாபுரம் என்று அழைக்கப்பட்டது. ஏ.டி 1839 பின் பத்மநாபுரம் அரண்மனையின் வீழ்ச்சி ஆரம்பித்தது. . வருடாந்திர நவராத்திரி ஊர்வலம், மற்றும் பிரமுகர்களின் அவ்வப்போதுள்ள வருகை தவிர அரண்மனை மூடப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு இந்த வளாகத்திற்குள் அணுமதி தடை செய்யப்பட்டு இருந்தது. உள்ளூர்வாசிகள் அரண்மனைகுள் பேய் என்று உண்டு என நம்பினர்! உள்ளூர் மக்கள் பெரும்பாலும் அசாதாரண சத்தங்களைக் கேட்பதாகவும் மற்றும் விசித்திரமான தோற்றங்களைக் கண்டதாகவும் கூறினர். இதனால் இரவு ஆனால் அரண்மனைக்குள் நுழையத்  யாரும் துணியவில்லை "என்று ராஜா ரவி வர்மா எழுதியிருந்தார்.

 

இந்நிலையில் திருவிதாங்கூரின் கடைசி மகாராஜா ஸ்ரீ சித்திரா திருனால் பாலா ராம வர்மா, ராணி தாய் சேது பார்வதி பாய், , மற்றும் திவான் சார். சி. பி. ராமசாமி அய்யர், ஆகியோரால், 1934 ஆம் ஆண்டில், திருவாங்கூர் அரசாங்கத்தின் கலை ஆலோசகர் ஜே. எச். கசின்ஸ் மற்றும் தொல்பொருள் துறையின் தலைவரான ஆர். வாசுதேவாவை நியமித்தனர். . 1935 ஆம் ஆண்டில், ராஜகுடும்பத்தின் முழு ஆதரவுடன், அரண்மனை ஒரு அருங்காட்சியக வளாகமாக மாற்றப்பட்டது.   மொழியை அடிப்படையாக கொண்டு மாநிலங்கள் உருவான போது கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவிலிருந்து துண்டிது தமிழநாட்டோடு இணைத்தனர். இருப்பினும், சரியான நேரத்தில் தலையிட்டும், பத்மநாபுரம் அரண்மனையும் அதன் பரந்த மைதானங்களும் கேரள மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இன்று, அரண்மனை வளாகத்தைக் காண பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களாக வருகிறார்கள்.

நாலு பெண்ணுங்கள்!(நான்கு பெண்கள்!)

 தகழி சிவசங்கர பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு அடூர் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய நாலு பெண்ணுங்கள்(நான்கு பெண்கள்) என்ற மலையாள திரைப்படம் 2007ல் வெளியானது. இப்படத்தில் பத்மபிரியா, கீது மோகன்தாஸ், மஞ்சு பிள்ளை, நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தின் வெவ்வேறு காலகட்டங்களில்(1940 முதல் 1960 வரையிலான ஆண்டுகள்), கேரளா ஆலப்புழா குட்டநாட்டுப் பகுதி மற்றும் விவித சமூக அடுக்குகளைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையை பற்றிய கதையிது.

இந்த திரைப்படம், கதைக்கரு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை மற்றும் திரை நுட்பங்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து அழகிய பிரேம்களுடன் இத்திரைப்படம் பெண்மையின் பயணத்தை விவரிக்கிறது.

இசை தாமஸ் காட்டுகடப்பள்ளி, ஒளிப்பதிவு ராதா கிருஸ்ணன் எம்.ஜெ,  எடிட்டிங் பி. அஜிதகுமார், கலை மார்தாண்டம் ராஜசேகரன் செய்ட்துள்ளனர்.  55 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் சிறந்த இயக்குநராகவும், பி. அஜித்குமார் சிறந்த எடிங்க் விருதையும் பெற்றார்.

முதல் கதை ‘ ஒரு சட்டத்தை மீறியதின் கதை!’


ஒருவனுக்கு மனைவியாக வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்யும் ஒரு தெரு விபச்சாரி குஞ்சிபென்னு (பத்மபிரியா) எதிர் கொள்ளும் பிரச்சினை தான் இதில்.  விபச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் போது கண்டிக்காத நீதிமன்றம், தன் காணவருடன் வாழும் போது விபசாரம்  குற்றம் என்ற பெயரில்  நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் காட்சியுடன் கதை முடிகிறது. இந்திய நீதி அமைப்பை கேலி பண்ணும் விதம் இக்கதை அமைந்திருந்தது.

கன்னி


குமாரி (கீது மோகன்தாஸ்)   ஒரு ஒரு ஏழைத் தொழிலாளி. தனது தகப்பன் சுகவீனமாக இருப்பதால் வீட்டை நடத்தும் பொறுப்பை மிகச் சிறிய வயதிலேயே ஏற்றுக் கொள்கிறார். இருப்பினும் மகள் கல்யாண வயதை எட்டுவதை தொடர்ந்து நாராயணன்(நந்து) என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர். நந்துவின் செய்லபாடுகள் வினோதமாக உள்ளது. மனைவியிடம் உரையாடக்கூட  விரும்புவதில்லை. நேரா நேரம் நல்ல சாப்பிட்டு விட்டு தனியாக தூங்கி விடுகிறார். சில காலம் கழிந்து  குமாரியை அவளது வீட்டில் கொண்டு விட்டு விட்டு திரும்ப அழைத்துச் செல்ல வரவேயில்லை. நாட்கள் செல்ல செல்ல, அவளுடைய குணம் சரியில்லாததால் தான் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன.  கடைசியாக குமாரி, தனக்கும் நாராயணனுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று சொல்வதுடன் கதை முடிகிறது.

சின்னு அம்மா

குழந்தைகள் இல்லாத சின்னு (மஞ்சு பிள்ளை) தனது அன்பான கணவருடன்  மிகவும் திருப்திகரமான  வாழ்ந்து வருகிறார்.  நீண்ட காலத்திற்கு முன்பே தமிழகத்திற்கு ஓடி போன நாராயண பிள்ளை, தமிழகத்தில் மனைவி மக்களுடன் வசதியாக வாழ்ந்து வருகிறவர். சொந்த ஊர் வந்த நாராயணன் தனது பள்ளி தோழி சின்னுவை  அவள் வீட்டில் தனியாக இருக்கும் போது சந்திக்க வருகிறான்.  சின்னுவிற்கு குழந்தை இல்லை என அறிந்ததும்,தன்னால் சின்னுவிற்கு ஒரு குழந்தை தரும் என ஆசை வார்த்தை கூறுகிறான். குழந்தை இல்லை என்ற அத்தனை ஏக்கவும், வருத்தவும் இருந்தும் கணவருக்கு நம்பிக்கை துரோகம் செய்த தகாத உறவில் தனக்கு ஒரு குழந்தை தேவை இல்லை என்பதை முடிவெடுத்து மறுக்கிறார்.

நித்ய கன்யகா(முதிர் கன்னி)

கடைசியாக, ஒரு நடுத்தர வர்க்கப் பெண் (நந்திதா தாஸ்) பற்றியது. அவரது தாய் , ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் அடங்கிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.  நந்திதாவை பெண் பார்க்க வரும் மணமகன் அவளது இளைய தங்கையை  விரும்புவதாகக் கூறி திருமணம் செய்து கொண்டு போகிறார்.

ஆண்டுகள் செல்ல செல்ல, மூத்த சகோதரனும் திருமணம் செய்து கொள்கிறான்.  பின்பு இளைய சகோதரியும் திருமணம் செய்து கொண்டு போக, தன் தாய் இறந்தவுடன், தங்கையின் குடும்பத்துடன் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள்.
அங்கு தங்கை குழந்தைகளை கவனித்துக்கொண்டு வாழ்க்கை சுமூகமாக போய் கொண்டு இருக்க , தங்கைக்கு அக்கா மேல் சந்தேகவும் பொறாமையும் பீடித்துக் கொள்கிறது. மனம் நொந்த நந்திதா தனியாக தனது வீட்டில் வாழ முடிவு எடுக்கிறார்.  தனிமையில் கள்ள உறவிற்கு ஒருவன் அழைக்கிறான்.  இறுதியாக தனது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மற்றவர்களின் விருப்பங்களை உடைத்து, சொந்தமாக வாழ முடிவு செய்தாள்.

இந்த படம் செப்டம்பர், 2007 இல் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, 51 வது லண்டன் திரைப்பட விழா,வியன்னா திரைப்பட விழா, சியாட்டில் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. . இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட விழாக்களில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளன.

மியாமி சர்வதேச திரைப்பட விழா அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுங்களைத் தேர்ந்தெடுத்தது.

 

24 Jun 2021

‘ஷெர்னி’ ஹிந்தி திரைப்படம்

 ‘ஷெர்னி’ ஹிந்தி திரைப்படம் நம்மை புலி சுவடுகளின் ஊடாக  காடுகளுக்குள் ஆழமாக அழைத்துச் செல்லும் , விறுவிறுப்பான, திரைப்படம். மனிதனுக்கும் மிருகங்களுக்குமுள்ள போர் மனிதனுக்கும் இயற்கைக்கும் நிகழும் போர் அதன் காரண காரணங்களுடன் துளியும் விரசமில்லாது மக்களை சென்றடையக்கூடிய திரைப்படம் இது.

அடர்த்தியான, பசுமையான காடுகள் ,  ஒளிரும் சூரிய ஒளியும் இருளும் விரவிக்கிடக்கும் காடுகளின் அழகு, புலியின் கர்ஜனையுடன் பறவைகள் மற்றும் விலங்குகளின் தனித்துவமான ஒலிகள், சுத்தமான நீரோடைகள், பூச்சிகளின் , இலைகளின் சலசலப்பு, - இவை அனைத்துக்கும் மத்தியில் அங்கு வாழும் காட்டின் மக்களும் வனபாதுகாவர்களின் வாழ்க்கையும் அடங்கிய மிகச்சிறந்த திரைப்படம்  'ஷெர்னி'.

இது மனித கதாபாத்திரங்களை மட்டுமல்ல,  அரசு திணைக்களத்தின் செயல்பாடுகள் குறித்தும், கிராமம் காடுகள் அதிலுள்ள வனவிலங்குகளின்  இருப்பின்  சிக்கலகளை குறித்தும் நுண்ணறிவை அளிக்கிறது இத்திரைப்படம்.

வழக்கமான பாலிவுட் திரைப்படங்களின்  ஆரவாரங்கள் இல்லாது ஆனால் விரசமல்லாத முறையில் அனைவருக்கும் காடுகளை பற்றி கற்றுக்கொடுக்கும்,  அதன் இயற்கை அழகியலுடன் சுவாரசியமான பல திருப்பங்கள் கொண்ட விருவிருப்பான திரைப்படம் என்றால் மிகையாகாது.

இத்திரைப்படத்தை  அமித் மசூர்கர் இயக்கியுள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதின் தேவையை பற்றிய மசூர்கரின் ஒரு ஆக்கபூர்வமான திரைப்படமாகும் இது.  அவ்வகையில்  ‘ஷெர்னி’ ஒரு தீவிரமான, புதிரான திரைப்படத்தை உருவாக்குகிறது.   இத்திரைப்படம்  கட்டாயமாக அனைவரும்  பார்க்க வேண்டியது.

அரசு, வனத்துறை அதிகாரிகள்,உள்ளூர் மக்கள், உள்ளூர் அரசியல், பழங்குடி மக்கள் வாழ்க்கை, அரசு அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கை என  சிக்கலான கதைகளை ஒரு வளமான காட்சி அமைப்புடன் சரியாக கோர்த்து தந்துள்ளார் இயக்குனர்.   ஆஸ்தா டிக்குவின் திரைக்கதை மிக நுணுக்கமானதும்  விரிவானதுமாகும்.  , ஹுசைன் ஹைட்ரியின் இசை படத்தின் கதைக்கு பொருந்தி போகிறது.

கேமரா ராகேஷ் ஹரிதாஸ்,  ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு அனிஷ் ஜான். இத்திரைப்படத்தை காண்பவர்களால்  காடுகளை காதலிக்காமல் விலகி நடக்க முடியாது.  காடுகளின் அழகு எளிதில் மயக்கி விடுகிறது. ஒரு காட்சியில்  வித்யாவின் உதவியாளர்களில் ஒருவர்  கூறுகிறார் “ நீங்கள் 100 முறை காட்டுக்குச் சென்று ஒரு முறை ஒரு புலியைக் கண்டிருக்கலாம் , ஆனால் புலி உங்களை 99 முறையும் கண்டு அவதானித்து இருக்கும்  என்பது  உறுதியாகும் என்கிறார்.  காடுகளில் யார் உயர்ந்தவர், காடுகள் யாருடையது,  காடுகளை பாதுகாக்க வேண்டியதின் தேவை என்ன என்பதை பழங்குடி மக்கள் தெரிந்தே வைத்து இருக்கின்றனர்.

 

ஒன்பது ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாத வன அதிகாரியான வித்யா வின்சென்ட்(வித்யா பாலன்)  மத்தியப் பிரதேசத்தின் காடுகளில் பிரதேச வன அலுவலராக (டி.எஃப்.ஓ )  பொறுப்பேற்கிறார்.  மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையிலான  மோதலை   சமநிலைப்படுத்தி உறவை மீட்டெடுக்க முடியுமா? என்ற கருத்தாக்கத்துடன் கதை  துவங்குகிறது.

வேலையில் பிரவேசித்ததுமே தன்னை காத்து பல சவால்கள் உண்டு என தெரிந்து கொள்கிறார்.   தனது வேலையை எவ்வளவு காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை.  ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் வித்யாவின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.  இருந்தாலும் மிகவும் சொற்பமான  சொற்களை உரையாடிக்கொண்டு  தனது வேலையில்  உறுதியாகவும் தீவிரமாகவும் செயலாற்ற ஆரம்பிக்கிறார்.  எத்தனை தடை வந்தாலும் அதை எதிர் கொண்டு முன்னேறுகிறார்.  தான் மிகவும் மதித்த தன்னுடைய மேலதிகாரியின் பொறுப்பின்மையை கண்டு  “உங்களை பார்த்து பரிதாபம் கொள்கிறேன் , நீங்கள்  ஒரு கோழை” எனக்கூறவும் தயங்கவில்லை.

வனத்துறையால் டி 12 என அடையாளம் காணப்பட்ட ஒரு புலியால்  கிராம ​​மக்களும் பண்ணை விலங்குகளும் இரையாக ஆரம்பிக்கின்றன. காடுகளால் சூழப்பட்ட கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு காடுகளில் மேற்கொள்ளும்  வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.   கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக இருக்கும் ஹசன் நூரானி (விஜய் ராஸ்),  கிராமக் குழுவின் உறுப்பினரான ஜோதி (சம்பா மண்டல்) , வனத்துறை கடைநிலை ஊழியர்களின் உதவியுடன் புலியிடம் இருந்து கிராம மக்களை மீட்டாரா?  புலியை உயிரோடு மீட்டாரா என்பதே கதை .

வித்யாவைப் பொறுத்தவரை, டி 12 ஐ உயிருடன் கண்டுபிடிப்பது மற்றும் கைப்பற்றுவது மிக முக்கியமானது,  உள்ளூர்வாசிகளின் உணர்வுகள், அரசியல்வாதிகள் கட்டியெழுப்பும் அழுத்தம், மேலதிகாரியின்  அணுகுமுறை என  புலியை பிடிப்பது  பெரும் சவாலாக மாறுகிறது.

இதனிடை காடுகளின் பாதுகாவலன் என தன்னை  தானே அழைத்துக் கொள்ளும் ஒரு அரசியல்வாதியின் கூட்டாளியான மிருக வேட்டைக்காரனான ரஞ்சனின் அத்துமீறல்கள்.  தான் வேட்டையாடிய புலிகளின் எண்ணிக்கையில் தன்னை பெருமைப்படுத்துக் கொள்ளும் அவனுடைய மனநிலை வித்தியாவை எரிச்சல் கொள்ளச்செய்கிறது.  புலியை சுட்டு கொன்று விட்டு எத்தனை அழகாக உள்ளது என்று கூறும் அவனின் வன்மம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது.  தாய் புலியை கொன்று விட்டாலும் அதன் இரு குட்டிகளை காப்பாற்றுவதுடன் கதை முடிகிறது.

வித்யா பாலன் ஒரு வித்தியாசமான , கச்சிதமான  மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை தருகிறார், ஒவ்வொரு காட்சியிலும் தனது கதாபாத்திரத்தின் அமைதியான உறுதியையும், ஆர்வத்தையும், மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். எந்தவொரு வியத்தகு செயலாக்கவும்  இல்லாமல், கோபத்தை பேசும் கண்களால் வெளிப்படுத்தி  சிறப்பாக நடித்துள்ளார்.  குறிப்பிட்ட  மிக சொற்ப காட்சிகளில் வந்தாலும்   நங்கியா (நீரஜ் கபி) தனது எதிர்மறை பாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் சிறப்பான முன்னுதாரணமாக அமையும்.

Sherni trailer

22 Jun 2021

பிக்கூ- சத்யஜிட் ரேயின் குறும் படம்

பிக்கூ என்ற குறும்படம்  குழந்தையின் மனதைப் பற்றிய ஒரு அற்புதமான ஆய்வு.  சிறுவர்களின் மனதை ஊடுருவும்  பெரியவர்களின் அபத்தங்கள் தான் இந்த குறும் படம்.

1980 ஆம் ஆண்டில், சத்யஜித் ரே திரைப்பட வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, ரேயை சுதந்திர திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளராக இருந்த ஹென்றி ஃப்ரேஸ் என்ற பிரெஞ்சு மனிதர்  ’பிரான்ஸ் 3’ என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலுக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்க அணுகினார்.  இந்த திட்டத்திற்காக, ரே தனது சொந்த சிறுகதைகளில் ஒன்றைத் தேர்வு செய்து   அதே ஆண்டில்,  பிக்கூவை உருவாக்கினார்.

ஆறு வயது  பணக்கார வீட்டு  சிறுவன் பிக்கூ .  முதல்நாள் இரவு தனது அப்பா,  அம்மாவிடம்  திருமணத்திற்கு புறம்பான உறவை பற்றி வாதிடுவதைக் கேட்க நேரிடுகிறது.   அவன் அம்மாவிற்கு அப்பா மேல் எந்த ஈடுபாடுமில்லை.  ஆனால் கணவரின் தகப்பனாருக்கு மருந்து எடுத்து கொடுக்கிறாள். கணவனின் துணியை தைத்து தனது கடமைகளையும் ஆற்றிக்கொண்டு இருக்கிறாள்.

படுக்கையில் இருக்கும் பிகூவின்  தாத்தா - இரண்டு மாரடைப்புகளில் இருந்து தப்பிய ஒரு வயதான மனிதர்.  அப்பாவி பிக்கூ கவனக்குறைவாக தனது தாத்தாவைப் பற்றி அவனது பெற்றோர்கள் உரையாடினதை  சொல்கிறான் தாத்தாவிடம்.   தான் குடும்பத்தின் மீது சுமை தவிர வேறில்லை என்பதை உணர்ந்து   தாத்தாவிற்கு மனம் நோக ஆரம்பிக்கிறது.

பிக்கூவின்   அப்பா  வேலைக்கு கிளம்பினதும் அம்மாவின் ஆண் நண்பனிடம் இருந்து அழைப்பு வருகிறது.  அடுத்த நாள் பள்ளி  விடுமுறை என்பதால் வீட்டிலிருக்கும் பிக்கூ தனதை தாயை சந்திக்க வரும் மாமா என்று அழைக்கும்  குடும்ப நண்பரை அவதானிக்கிறான்.சிறுவனுக்கு ஒரு படம் வரையும் நோட்டு புத்தகங்களுடன் வீடு வந்து சேர்கிறான் காதலன்.

அவனது தாயார் தனது நண்பர்  வந்ததும் உற்சாகமான பிகூவை வெளியே  தோட்டத்திற்கு சென்று அங்கு காணக்கூடிய அனைத்து பூக்களையும் வரைந்து வண்ணம் பூசுமாறு கூறுகிறார்.  அபர்ணாவைப் பொறுத்தவரை,  பாலியல் தேர்வுக்கான சுதந்திரம் வாழ்க்கையின் அடிப்படை என்று நமபுகிறவள்.  சிறுவனை படம் வரையக் கூறி வெளியே அனுப்பி விட்டு இருவரும் தனியறையில் சல்லபித்துக் கொண்டு இருக்கின்றனர்.   சிறுவன் தனக்கு கிடைத்த வண்ண  பென்சில்களில்  வெள்ளை நிறம் இல்லாததால் குழப்பம் அடைந்து;  தோட்டத்திலிருந்து தனது தாயை கத்தி கூப்பிட்டு, வெள்ளை பூவை வரைய கருப்பு பேன்சிலைப் பயன்படுத்துவதாக  தெரியப்படுத்துகிறார்.

அப்பாவி, குழந்தை பிகூவின் கேள்வி ஆழமானது குறிப்பாக அவரது தாயின் துரோகத்தின் பின்னணியில் இந்த கேள்வி அர்த்தச்செறிவானதும் ஆகும்.  ஏனென்றால் இங்கே ஒரு குழந்தை, கருப்பு நிறத்தை வெள்ளைக்கு பதிலாக  பயன்படுத்திக்கொள்வதற்கு முன் இருமுறை யோசிக்கவில்லை.  வயது வந்தோருக்கான உலகில் அத்தகைய செயலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறோம் .

இந்தச் சிறுவனின் கண்களில் வெளிப்படும் ஆழமான  மற்றும் அமைதியற்ற பெரும்பாலான சம்பவங்களின் முக்கியத்துவத்தை சிறுவன் உணரவில்லை.   உதாரணமாக, ஒரு குடும்ப நண்பரிடம் தனது தாயின் நடத்தை பற்றி பிகூவின் அப்பாவியான  விளக்கம், அவள் அந்த மனிதனுடன் ஒரு உறவு வைத்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

பிறகு தனது தாத்தா அறையில் போய் பார்க்கையில் தாத்தா இறந்து போனதையும் அவதானிக்கிறான். பிறகும் படம் வரைந்து கொண்டே இருக்கிறான்.   காதலனும் தனக்கு ஒத்துழைக்காத காதலியிடம் கோபப்படட்டு போய் விடுகிறான்.  மகனும் தாயை வெறுப்போடு பார்க்கிறான்.

திருமணபந்ததிற்கு  புறம் உறவு தேடும் பெண்கள் நினையான உறவுகளை மறந்து,  தங்களது குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியை இழந்து, பெற்ற குழந்தையின் முன்னும் சிறுமைப்பட்டு,  இயல்பான  மகிழ்ச்சி இல்லாது ஒடுங்கி போவதை காட்சிகள் ஊடாக  சொல்லியிருப்பார்.

காதலன்கள்  தங்களது இன்பத்திற்காக பெண்களை கட்டுப்படுத்தி பெண்கள் வாழ்க்கையில்  பிரச்சினையை உருவாக்குவதையும் காணலாம்.  கணவரும் பணம் ஈட்டும் அவசரத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் நபராக இருப்பதையும் சொல்லியுள்ளார்.

ஒரு பிரச்சினை, அதன் தளங்கள், அதன் தாக்கம், காரணம் என சத்தியஜித் ரே டிஜிட்டல் யுகத்திற்கு முன்பே பல கதைத் தளங்களையும் தொட்டு சென்று விட்டார்.

ஒரு பத்திரிகைக்கு சத்யஜித் ரே அளித்த பேட்டியில் , “பிகூ மிகவும் நுண்ணுணர்வு தாங்கின படம்.  இது ஒரு கவிதை , இது யாரையும்  குறை கூற முயலவில்லை. ஆனால்   ஒரு பெண்  திருமணத்திற்குப் புறம்பான உறவு பேணும் போது நம்பிக்கை இழந்தவளாக தன் குழந்தைகளின்  மென்மையான உணர்ச்சிகளைக் கூட மதிக்காதவராக கடின இதயம் கொண்டவ  இரக்கமற்றவராக இருப்பார்கள்.

ஆனால் இந்த கருத்துக்குகாக ரே விமர்சிக்கப்பட்டார். இந்த கருத்து வெறும் ஆண்களின் பார்வையிலுள்ள  கருத்து என்றனர்.