22 Jun 2021

பிக்கூ- சத்யஜிட் ரேயின் குறும் படம்

பிக்கூ என்ற குறும்படம்  குழந்தையின் மனதைப் பற்றிய ஒரு அற்புதமான ஆய்வு.  சிறுவர்களின் மனதை ஊடுருவும்  பெரியவர்களின் அபத்தங்கள் தான் இந்த குறும் படம்.

1980 ஆம் ஆண்டில், சத்யஜித் ரே திரைப்பட வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, ரேயை சுதந்திர திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளராக இருந்த ஹென்றி ஃப்ரேஸ் என்ற பிரெஞ்சு மனிதர்  ’பிரான்ஸ் 3’ என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலுக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்க அணுகினார்.  இந்த திட்டத்திற்காக, ரே தனது சொந்த சிறுகதைகளில் ஒன்றைத் தேர்வு செய்து   அதே ஆண்டில்,  பிக்கூவை உருவாக்கினார்.

ஆறு வயது  பணக்கார வீட்டு  சிறுவன் பிக்கூ .  முதல்நாள் இரவு தனது அப்பா,  அம்மாவிடம்  திருமணத்திற்கு புறம்பான உறவை பற்றி வாதிடுவதைக் கேட்க நேரிடுகிறது.   அவன் அம்மாவிற்கு அப்பா மேல் எந்த ஈடுபாடுமில்லை.  ஆனால் கணவரின் தகப்பனாருக்கு மருந்து எடுத்து கொடுக்கிறாள். கணவனின் துணியை தைத்து தனது கடமைகளையும் ஆற்றிக்கொண்டு இருக்கிறாள்.

படுக்கையில் இருக்கும் பிகூவின்  தாத்தா - இரண்டு மாரடைப்புகளில் இருந்து தப்பிய ஒரு வயதான மனிதர்.  அப்பாவி பிக்கூ கவனக்குறைவாக தனது தாத்தாவைப் பற்றி அவனது பெற்றோர்கள் உரையாடினதை  சொல்கிறான் தாத்தாவிடம்.   தான் குடும்பத்தின் மீது சுமை தவிர வேறில்லை என்பதை உணர்ந்து   தாத்தாவிற்கு மனம் நோக ஆரம்பிக்கிறது.

பிக்கூவின்   அப்பா  வேலைக்கு கிளம்பினதும் அம்மாவின் ஆண் நண்பனிடம் இருந்து அழைப்பு வருகிறது.  அடுத்த நாள் பள்ளி  விடுமுறை என்பதால் வீட்டிலிருக்கும் பிக்கூ தனதை தாயை சந்திக்க வரும் மாமா என்று அழைக்கும்  குடும்ப நண்பரை அவதானிக்கிறான்.சிறுவனுக்கு ஒரு படம் வரையும் நோட்டு புத்தகங்களுடன் வீடு வந்து சேர்கிறான் காதலன்.

அவனது தாயார் தனது நண்பர்  வந்ததும் உற்சாகமான பிகூவை வெளியே  தோட்டத்திற்கு சென்று அங்கு காணக்கூடிய அனைத்து பூக்களையும் வரைந்து வண்ணம் பூசுமாறு கூறுகிறார்.  அபர்ணாவைப் பொறுத்தவரை,  பாலியல் தேர்வுக்கான சுதந்திரம் வாழ்க்கையின் அடிப்படை என்று நமபுகிறவள்.  சிறுவனை படம் வரையக் கூறி வெளியே அனுப்பி விட்டு இருவரும் தனியறையில் சல்லபித்துக் கொண்டு இருக்கின்றனர்.   சிறுவன் தனக்கு கிடைத்த வண்ண  பென்சில்களில்  வெள்ளை நிறம் இல்லாததால் குழப்பம் அடைந்து;  தோட்டத்திலிருந்து தனது தாயை கத்தி கூப்பிட்டு, வெள்ளை பூவை வரைய கருப்பு பேன்சிலைப் பயன்படுத்துவதாக  தெரியப்படுத்துகிறார்.

அப்பாவி, குழந்தை பிகூவின் கேள்வி ஆழமானது குறிப்பாக அவரது தாயின் துரோகத்தின் பின்னணியில் இந்த கேள்வி அர்த்தச்செறிவானதும் ஆகும்.  ஏனென்றால் இங்கே ஒரு குழந்தை, கருப்பு நிறத்தை வெள்ளைக்கு பதிலாக  பயன்படுத்திக்கொள்வதற்கு முன் இருமுறை யோசிக்கவில்லை.  வயது வந்தோருக்கான உலகில் அத்தகைய செயலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறோம் .

இந்தச் சிறுவனின் கண்களில் வெளிப்படும் ஆழமான  மற்றும் அமைதியற்ற பெரும்பாலான சம்பவங்களின் முக்கியத்துவத்தை சிறுவன் உணரவில்லை.   உதாரணமாக, ஒரு குடும்ப நண்பரிடம் தனது தாயின் நடத்தை பற்றி பிகூவின் அப்பாவியான  விளக்கம், அவள் அந்த மனிதனுடன் ஒரு உறவு வைத்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

பிறகு தனது தாத்தா அறையில் போய் பார்க்கையில் தாத்தா இறந்து போனதையும் அவதானிக்கிறான். பிறகும் படம் வரைந்து கொண்டே இருக்கிறான்.   காதலனும் தனக்கு ஒத்துழைக்காத காதலியிடம் கோபப்படட்டு போய் விடுகிறான்.  மகனும் தாயை வெறுப்போடு பார்க்கிறான்.

திருமணபந்ததிற்கு  புறம் உறவு தேடும் பெண்கள் நினையான உறவுகளை மறந்து,  தங்களது குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியை இழந்து, பெற்ற குழந்தையின் முன்னும் சிறுமைப்பட்டு,  இயல்பான  மகிழ்ச்சி இல்லாது ஒடுங்கி போவதை காட்சிகள் ஊடாக  சொல்லியிருப்பார்.

காதலன்கள்  தங்களது இன்பத்திற்காக பெண்களை கட்டுப்படுத்தி பெண்கள் வாழ்க்கையில்  பிரச்சினையை உருவாக்குவதையும் காணலாம்.  கணவரும் பணம் ஈட்டும் அவசரத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் நபராக இருப்பதையும் சொல்லியுள்ளார்.

ஒரு பிரச்சினை, அதன் தளங்கள், அதன் தாக்கம், காரணம் என சத்தியஜித் ரே டிஜிட்டல் யுகத்திற்கு முன்பே பல கதைத் தளங்களையும் தொட்டு சென்று விட்டார்.

ஒரு பத்திரிகைக்கு சத்யஜித் ரே அளித்த பேட்டியில் , “பிகூ மிகவும் நுண்ணுணர்வு தாங்கின படம்.  இது ஒரு கவிதை , இது யாரையும்  குறை கூற முயலவில்லை. ஆனால்   ஒரு பெண்  திருமணத்திற்குப் புறம்பான உறவு பேணும் போது நம்பிக்கை இழந்தவளாக தன் குழந்தைகளின்  மென்மையான உணர்ச்சிகளைக் கூட மதிக்காதவராக கடின இதயம் கொண்டவ  இரக்கமற்றவராக இருப்பார்கள்.

ஆனால் இந்த கருத்துக்குகாக ரே விமர்சிக்கப்பட்டார். இந்த கருத்து வெறும் ஆண்களின் பார்வையிலுள்ள  கருத்து என்றனர்.

0 Comments:

Post a Comment