10 Jul 2022

பண்ணையில் ஒரு மிருகம்

 


காலச்சுவடு பதிப்பகம் ஊடாக வெளிவந்த புத்தகம் ஆகும் ’’பண்ணையில் ஒரு மிருகம்”. கால் நடை பண்ணையில் வேலைபார்த்து போது முகம் கொடுத்த  சொந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நூல் என்று முன்னுரையில்  குறிப்பிட்டு உள்ளார் எழுத்தாளர்.

இலங்கை தீவைச்சேர்ந்த கால் நடை மருத்துவரான நோயல் நடேசன் காஞ்சிபுரம் அடுத்த ஒரு கிராமத்தில் ஒரு  பண்ணையில் மேற்பார்வையாளராக வேலைக்கு வந்து சேர்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. ஒரு மிருக மருத்துவராக இருந்தும் இலங்கையை சேர்ந்தவர் என்பதால்; ஒரு மருத்துவராக  பணி செய்ய சட்டச் சிக்கல்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.

எழுத்தாளார் வேலைக்கு சேரும் முன் தமிழகத்தை சேர்ந்த இன்னொரு மருத்துவர்,  அங்கு வேலை பார்த்து வந்ததும் கற்பகம் என்ற பெண்ணின் தற்கொலைக்கு காரணமாகி வேலையை விட்டு விரட்டப்பட்டதையும் அறிகிறார். டாக்டர் மனம் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பிக்கிறது. பிற்பாடு அங்கு வேலை செய்யும் மேஸ்திரி, ராமசாமி, ராணி, அன்பரசி,கிருஷ்ணன் போன்ற கதாப்பாத்திரங்கள் வழியாக பண்ணையில் நடக்கும் சம்பவங்களை தெரிந்து வருகிறார். இத்துடன் பண்ணையில் தற்கொலை செய்து கொண்ட மூக்குத்தி அணிந்த வெங்காய நிற சேலைக்காரி கற்பகம் மருத்துவரிடம் தன் கதையை சொல்ல ஆரம்பிப்பதுடன் கதை சுவாரசியாமாக நகர்கிறது. கனவா நினைவா என்று சந்தேகிக்கும் வண்ணம் பேய்க் கதைகளுடன் வாசகர்களும் திகிலுடன் பண்ணையில் டாக்டருடன் பயணிக்கிறோம்.


பண்ணையை  தளமாக கொண்டு எழுதப்பட்ட இக்கதையில் எழுத்தாளர் ஓர் மருத்துவர் என்பதால்  மிருங்களை  பற்றிய உயிர் அறிவியல், தமிழகத்தில் நிலவும் ஜாதி  வாழ்க்கை., ஜாதி மாறி திருமணம் செய்த சொந்த மகள் கணவரையே கொலை செய்த கார்மேகம் போன்றவர்களை கதாப்பாத்திரங்களை உலாவ விட்டுள்ளார். பொதுவாக ஆண் பிள்ளைகள் துஷ்பிரோயகம் ஆவதை கவனித்துக் கொள்ளாத தமிழக சமூக சூழலில் குறிப்பாக பண்ணையில் பாலியல் துஷ்ப் பிரோயத்திற்கு உள்ளாகும் சிறுவர்கள் கதையை  கதையின் போக்கில் ஒரு முக்கிய புள்ளியாக கொண்டு வந்துள்ளது சிறப்பாகும்

 

பெண்கள் குடும்ப சூழலாலும், மாமியார் மற்றும் கணவரால் துன்புறுத்தப் படுவது, மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இவைகளை பற்றியும் சொல்லியுள்ளார்.

கிராமத்து மக்கள் என்றாலே வெகிளியானவர்கள், நல்லவர்கள் என்று பலரும் எழுதி வரும் தமிழ் இலக்கிய சூழலில், கிராமத்து மக்கள் மனதில் குடிகொள்ளும் வன்மம், குறுக்கு சிந்தனைகள், தவறை அறிந்தும் துணிவாக செய்யும் முரட்டுத் தனம் போன்றவையையும் கதையில் கொண்டு வந்துள்ளார் டாக்டர்.

ஒரு கட்டத்தில் கருப்பையா தான் கற்பகம் மரணத்தின் காரணம் என்று தெரிய வருவதும் இத்தனை கொடியவன் உடன்  பண்ணையில் வேலை செய்ய பிடிக்காது வேலையை விட முடிவு செய்கிறார்.

கல்வி கற்றோர் என்றாலும் அகதிகளாக ஒரு நாட்டில் வாழும் போது என்னென்ன சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை அறிய இயல்கிறது.  பண்ணை முதலாளிகளின் மனபான்மை, மருத்துவர் வாசிக்கும் காரல்மார்க்ஸ் புத்தகத்தை ஒளித்து வைக்கும் கறுப்பையாவின் வன்மம் என இயல்பாக கதை  செல்கிறது..

கிராமத்தில் மக்களுக்கு ஒரு தோழராக  இருந்து தன் பணியை  திறம்பட செய்வது, பண்ணை மக்களை அன்பாக வேலை வாங்குவது, பண்ணை ஆட்களுடன் சினிமாவிற்கு செல்வது, எளிய மனிதர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க வீடு வரை செல்வது  என டாக்டர் கதாப்பாத்திரம் மனித நேயத்தின் உச்சம் தொடுகிறது.

 

கணவன் கொல்லப்பட கணவன் கொடுத்த ஆடு வளர்ப்புமாக வாழும்  கமலம் மேல் டாக்டருக்கு அளவு கடந்த பரிவு இருந்தும் கமலத்தை ஒற்றை கட்டையாகவே  கதையில் விட்டு சென்றது கொஞ்சம் பிற்போக்கு தனம் என்று தோன்றியது. பேய் கற்பகம் மற்றும் டாக்டர் உரையாடல்கள் கதையை சுவாரசியமாக நகத்தி சென்றது. கறுப்பையா பின் பக்கம் குத்து பட்டு கிணற்றில் விழுந்து இறந்த முடிவு; தவறு -தண்டனை என்ற காலாகாலத்து கதையோடு ஒத்து போகிறது.

 

சுருக்கமாக கதையாளரின் கதை சொல்லும் பாங்கு கதையை வாசித்து முடிக்கும் மட்டும் வாசகனை விருவிருப்பாக வைத்து இருந்தது என்றால் மிகை அல்ல.

1 comment:

  1. காச்சுவடுபோன்றதமிழகபதிப்பகங்களின்ஈழத்தவர்படைப்புக்கள்வெளியீடுசெய்யப்பட்டுநீண்டகாலஇடைவெளியின்பின்னரேஈழத்துவாசகர்களுக்குவாசிக்ககிடைக்கிறது.இக்குறையைவிர்க்கதமிழகப்பதிப்பகங்க ள்முன்வரவேண்டும்.

    ReplyDelete