18 Jul 2022

யாத்திரை ஆர். என். ஜோ.டி குருஸின் நாவல்!

 

 

தனது பாட்டி பிரகாசிக்கு சமர்பித்து,  செப் 2021 ஆண்டு வெளியான நாவல் ஆர். என். ஜோ.டி குருஸின் யாத்திரை.  புத்தகத்தை வாசித்து முடிக்கையில் இது நாவலா அல்லது வாழ்க்கை

 இது எழுத்தாளரின் ஆன்ம கத்கதம், விலாபம், குற்ற உணர்வு, குறை காணுதல்!  கதாப்பாத்திரம் இல்லை, கதைப்பின்னல் இல்லை, நாவலுக்கான ஒரு தொடர் பின்னல் இல்லை. ஆனால் கதாசிரியர் தன் மனப் போங்கை, மனக்குமுறலை, தம் சமூக அறச்சீற்றத்தை சொல்லிக் கொண்டே போகிறார் தன்  பல பல வயதினில் நடந்த .

 

கல்லூரி பருவம் முடியும் வரை கத்தலிக்க பாதிரியார்கள் மேலுள்ள கட்டுக்கடங்கா கோபம். அதற்கான வலுவான காரணம் கதாப்பத்திரங்கள் வழியாக சொல்லி இருக்க வேண்டும் .  கதை சொல்லி எல்லா இடத்திலும் விதிப்பவரும் அவதானிப்பவரும், கோபம் கொள்கிறவருமாக இருக்கிறார்.   ஒரு பக்குவமற்ற சிறுவனின் நோவாகவே இருந்தது பல குற்றச் சாட்டுகளும்.   பாதிரி  கதாப்பாத்திரங்கள் இவ்வாற்றாக செயலாற்ற காரணம் என்ன என்று தெளிவில்லை, தெரிவிக்கவும் இல்லை வாசகர்களை.  ஒரு கட்டத்தில் சீர் திருத்த பாதிரிகள் கல்யாணம் செய்து கொள்கின்றனர்,  இவர்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பது வரை பாகுபடுத்தி குற்றமாக சொல்லப்படுகின்றது.  காதாசிரியரின் கடந்த நாவல் கொற்கையிலும் கத்தோலிக்க பாதிரியார்களை பற்றி பல குற்றங்கள் சொல்லப்பட்டிருந்தது. அதே குற்றம் கூறுதல் இங்கும். இந்த தொகுப்பில் கதை ஆசிரியர் இடைப்பட்ட சில காலம் அல்லேலூயா பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொள்வதும் பின்பு தாய் மதம் மேலுள்ள விருப்பவும் கதையின் ஊடே சொல்லப்பட்டு உள்ளது.

கத்தோலிக்க பாதிரியார்கள் ஒரு பெரும் சமூகத்தை பிரதினித்துவ படுத்தும் மதத்தலைமைகள். அவர்களை ஆன்மீகம் சார்ந்த கட்டமைப்பு சார்ந்தா அல்லது அறம் சார்ந்தா கதை ஆசிரியர் முரண்படுகிறார் என்பதை வாசகர்கர்ளிடம் சேர்த்து இருக்க வேண்டும். போகிற போக்கில் மனதில் தோன்றினதை எல்லாம் விதறி விட்டு செல்வது சமூகத்தை ஆளுமை செய்யும் எழுத்தாளர்கள் அறமா என்ற கேள்வி எழாது இல்லை.

 

ஒரு வகையான பதட்டவும், ஒட்டாத ஓட்டமாக இருந்தது கதை சொல்லும் பாணி. பத்து புத்தகத்தில் பகிர வேண்டிய  கருத்துக்களை ஒரே புத்தகத்தில் நிரப்பி வழியச் செய்தது மாதிரி இருந்தது. கதை சொல்லி மட்டும் எல்லா இடத்திலும் சிந்தித்து கொண்டு இருந்தார், பேசிக்கொண்டு இருந்தார், மனஸ்தாபத்தில், உளச் சிக்கலில் இருந்தார்.

 

நீ ஆசைப்படாத எழுத்து ஒன்றில் தான் பதற்றமில்லாது இருந்தது. ஆனால் இப்புத்தகத்தில் பெரும் பதற்றம். எல்லாம் சொல்லியே தீர வேண்டும் என்ற நிர்பந்தம் வழிந்தது எல்லா பக்கங்களிலும்.

 

பைபிள் வருகிறது, மோசை வருகிறார், தச்சன் மகன் யேசு பல இடங்களில். பிரான்ஸ் அச்சீசி, போன்ற புனிதர்கள் அத்துடன் கதை சொல்லியின் அக்கா, பெரியவர், இளம் கத்தோலிக்க பாதிரியார்.  சடங்குகளை முன்னிறுத்தி  மெய்யான யேசுவை விட்டு, புனிதர்கள் வணக்கம் செய்கிறதை கேள்வி எழுப்பும் கதை சொல்லிக்கு இதன் காரணம் தெரியாதா?

கதை சொல்லி விமர்சிக்கும்  கிறிஸ்தவ கத்தோலிக்க பாதிரிகள் இந்திய குடும்பங்களில் இருந்து போய் பணியாற்றுகிறவர்கள் தானே!  அவர்கள் அப்படியான மன நிலைக்கு மாற்றப்படும் சமூக சூழல் என்ன, அவர்களை உருவாக்கும் கட்டமைப்பு என்ன என்பதை விடுத்து  காரிய காரணங்கள் சொல்லாது  ஒரு குழுவின் மேல் சேறை அள்ளி வீசும் மனப் போங்கு தான் என்ன?  பாதிரிகளும் இந்த சமூக அமைப்பின் நீட்சிகள் தான்.  கதை சொல்லியோ வெறும் வார்த்தை  மனித தாக்குதலில் கதையை நகத்துகிறார்.

 

சில இடங்களில் கதை சொல்லி; இரவில் குடித்து விட்டு ராப்பாடும் சன்னியாசியை தனது ஆன்மீக குருவாக ஏற்கும் மன நிலையில் உள்ளார்.

கதை காட்டாறு வெள்ளம் மாதிரி ஓடுகிறது. அந்த ஓட்டத்தின் வேகத்தில் வாசகர்கள் ஓட வேண்டும் என்றால் கதை சொல்லியின் முன்னைய நாவல்கள் , அவர் குறிப்பிட்ட கால அரசியல் எல்லாம் புரிந்து கொள்ளுதல் அவசியம்.  ஒபீர் துறைமுகம் பற்றி சொல்லியவர், ஒரு தகவலாக பகிர்கிறாரே தவிற ஆழமான உரையாடல்கள் இல்லை.  

முதுகலையில் படிக்கும் போது சந்தித்த விதவையின் கதை ஊடாக தன்னை நியாஸ்தராக முன் நிறுத்துகிறார். அந்த காதல் நினைவுகள் அவர் சகோதரி மற்றும்  பெற்றோர் தடை இடுவதுடன் முடிந்தது.

ஊரில் வந்து சேர்ந்த  புது இளம் பாதிரியை பற்றி ஒரு கதை ! பாதிரியிடம் வந்து சண்டை யிடும் வெளியூர் பெண்கள் கதை; கடற்கரை கிறிஸ்தவ மக்கள் அற வாழ்க்கையும் , மாண்பும் அப்படியா கெட்டு சீரழிது போய் விட்டதுஅதில் பாதிரியை குறை சொல்லும் நோக்கத்தில் தன் இனப் பெண்களின் கொச்சையான உருவம் காலாகாலத்திற்கு பதியப்படும் அவலம்.

இத்தனை குற்றம் குறைகளை போகிற போக்கில் எழுதி விட்டு, பக்கம் பக்கமாக கிறிஸ்தவ ஜெபங்களும் எழுதப்பட்டுள்ளது.  கத்தோலிக்கத்திலுள்ள சடங்குகளை எதிர்க்கும் கதை சொல்லிக்கு,  தாய் மதத்தில் இருக்கும் மமதையில் அங்குள்ள வணக்கங்கள் எல்லாமே சரியாக மேன்மை பொருந்தியதாக தெரிகிறது.

போகிற போக்கில் அல்லேலூயா கிறிச்தவம் செய்யும் ஆட் சேர்ப்பையும் பிஜேபி ஆட் சேர்ப்பு கொள்கையையும் பொருத்தி பார்ப்பதாக தெரிகிறது. அப்படி 12 வது அத்தியாயம் வரை சொல்லிய அத்தனை வசவுகளுக்கும் பிராச்சித்தம் என்பது போல 13 வது அத்தியாயத்தில் லயோலா கல்லூரி அதிபரை புகழ்ந்து, முடித்து உள்ளார் கதை ஆசிரியர்.  

 

கொற்கை புத்தகத்தில் பாதியார்களை  பற்றி எதிர்மறையாக எழுதியதில் வருத்தம் இல்லையா என்று லயோலா கல்லூரி பாதியாரிடம்,  வினவி தனது ஆன்ம திருப்பதிக்குள் நகர்கிறார் கதை சொல்லி.13 ஆம் அத்தியாயத்தில்  இருந்து அவன் என்று வளர்ந்த வந்த பிராதன கதாப்பாத்திரம் அவராக மாறுகிறது.  தனது மக்களின் வாழ்க்கையை எழுதுவது தனது சமுதாய பணி என்று பெருமைப்பட்டும் கொள்கிறது. கடற்கரை மக்களின் வாழ்க்கையிலுள்ள சுவாரசியம் எதுவும் தெரிந்து கொள்ள இயலாது. கதை சொல்லி கடற்கரை மக்களுக்கு மெசிகாவாக பிறந்து இனி அம்மக்களை உயிர்க்க செய்வது மாதிரியான தொனியில் தான் கதை நகர்கிறது.

பின் எழுத்தாளரின் கோபம்,  தனது முன்னைய புத்தகங்களை பற்றி விமர்சித்தவர்கள் பக்கம் திரும்புகிறது.  அடுத்த அத்தியாயத்தில் கதை சொல்லியின் கோபம் தன் எழுத்தை விமர்சித்த நண்பன் மேல் பாய்கிறது. 1 7 வது அத்தியாயம் முதல் கதை குடும்பம்,  தனது பெற்றோர் மனைவி குழந்தைகள் என செல்கிறது.

குழந்தைகளை கல்விச் சாலைகளில் சேர்வதற்காக கத்தோலிக்க முறைப்படி ஞானஸ்தானம் கொடுத்ததாக சொல்கிறார் கதை சொல்லி. ஒரு பக்கம் கத்தோலிக்க தலைமையை கத்தோலிக்கத்தை வெறுப்பதும் தன் குழந்தைகள் கல்விக்காக கத்தோலிக்கத்தை சார்ந்து இருப்பதின் தார்மீகம் தெரியவில்லை. இதில் தன் பிழைப்புவாதத்தை தான் முன் வைக்கிறார். அடுத்து மகன் பற்றி கதை செல்கிறது. தனிமை விரும்பியான கதை ஆசிரியர்  குடில் வாழ்க்கைக்குள் நுழைகிறார். 

 

அதன் பின் நண்பனுக்கும் தனக்குமான உறவு, நண்பன் தம்பி தற்கொலை அதை பற்றிய கருத்து, அடுத்து தாயின் பிரிவு, தாய்க்கும் தகப்பனுக்கும் இருந்த உறவு, தாயின் அடக்கத்திற்கு வராத தம்பியை பற்றி. இப்படியாக  முழுமையை நோக்கிய முற்று பெறாத சிந்தனையின் தொகுப்பே இப்புத்தகம்.

 

மறுபடியும் திரும்பி பார்த்தேன் நாவலா? ஆம் நாவல் என்று தான் எழுதி உள்ளது. சுயசரிதம் என்று எழுதியிருந்தால் ஒரு மனிதரின்  மன விசாரணையை வாசித்தோம்,  ஒரு ஆன்மாவின் கேவலை கேட்டோம் என ஆறுதல் கொண்டு இருக்கலாம்.

 

யாத்திரை என்பதை விட பிரார்த்தனை என்பதே பொருத்தமாக இருந்து இருக்கும்.  எழுதியவர் தான் எழுதியது நாவல் என்கிற போது  வாசிப்பவர் ஏற்காது இருக்க  இயலுமா? யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சாகித்ய அக்காதமி விருது பெற்ற ஒரு எழுத்தாளரின் சற்று சறுக்கலான நாவலாகவே இதை காண்கிறேன்.  

 

 

 

0 Comments:

Post a Comment