26 Aug 2012

உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு!

ஒரு  இன்று கூடும் உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பில் பங்குபெறும்   சக தோழர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன். பெண்கள் கருத்துக்களை மழுங்கலிடும் வேளையில் ஒரு வலைப்பதிவராக வலைபதிவு வழியாக என் கருத்துக்களை எண்ணங்களை பகிர்வது ஊடாக எழுத்தாளர் என்ற அங்கீகாரம், உலகளவில் சிறந்த நட்புகள், கருத்துக்கள், உதவிகள் கிடைத்தன என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

90 களில் அமெரிக்க கல்லூரி மாணவனால் உருவாக்கப்பட்ட வலைப்பதிவுகள் இந்தியாவில் செயலாற்ற 2004 ஆகின. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தொடர்ச்சியாக மற்றும் கணிணியின் பெருகிய பயண்பாட்டாலும், இன்றைய  இளம் தலைமுறை தகவல் பெற இணையம் நாடுவதாலும் வலைப்பதிவின் சிறப்பும் தேவையும் ஓங்குகின்றது. கடந்த மூன்று-நாலு வருட காலமாக தமிழ் வலைப்பதிவுகள் அதன் உச்ச நிலையை நெருங்கி வருவதை காணலாம்.  

தனி நபர் தளங்களான வலைப்பதிவுகள் உலகரங்கில், சிறப்பாக ஊடக சுதந்திரம் அற்ற அரேபிய நாடுகளில் கருத்து பரிமாற்றம் மற்றும் அரசியல் புரட்சிக்கு  நடுநாயகமாக விளங்கியதை நாம் கண்டு உணர்ந்தோம்.  சில  வலைப்பதிவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல பதிவர்கள் போலிஸ் அச்சுத்துறுத்தலுக்கு உள்ளாகி நாடு விட்டே குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், சிலர் நாடுகடத்தப்பட்டனர். பல வலைப்பதிவர்கள் காவலர்களால் சிறைப்படுத்த பட்டுள்ளனர். இதையும் மீறி பல வலைப்பதிவர்களை சிறந்த எழுத்தாளர்களாக வாசிப்பாளர்களின் உதவி பெற்ற பயணிகளாக , ஊடகவியாளனுக்கு இணையான சில போது அதையும் மீறின அங்கீகாரம் பெருமை கிடைக்கபெற்றனர்

இராக் போன்ற போர் சூழலுள்ள நாடுகளில்  ஊடகத்தை விட நம்பகதன்மையான செய்திகள் பெற ம்க்கள் வலைப்பதிவுகளையே நாடுகின்றனர். பல போதும் உண்மையான செய்திகள், மக்களை சென்றடைய அரசியல், உலக சந்தை  எனும் பல காரணங்களால் தடுக்கப்படும் போது வலைப்பதிவுகள் தகவல்கள் பெற ஒரு சிறந்த கருவியாக மாறுகின்றது.  இலங்கையில் நடந்த போர் நாட்களிலும் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கும் உரிமை மறுக்கப்பட்டு  இரும்பு திரை இட்டு முடக்கப்பட்ட  போது சாதாரண மக்களால் தகவல்கள் உலக பார்வைக்கு எட்டியது. பத்திரிக்கையாளர்களால் கிடைக்க பெறாத செய்திகள், தகவல்கள் கூட வலைப்பதிவர்களால் பெறப்பட்டது.  ஒரு மாற்று ஊடகமாகவே செயல்படுகின்றது என்றால் மறுக்க இயலாது.  இன்றும் ஈழ தமிழகர்கள் நிலை பற்றி பல பொய்கள் பரவி வரும் சூழலில் ஒரு சில வலைப்பதிவர்களாலே வெளி உலகிற்க்கு நிஜ நிலை தெரிகின்றது.சஞ்சயன் ஈழத் தமிழர்! 
மேலும் உலகு எங்கும் வசிக்கும் தமிழர்களை மொழியால் இணைக்கும் பாலமாகவும் செயல்பட்டு வருகின்றது.



தமிழ் வலைப்பதிவுகளை உற்று நோக்கினும் ஊடகத்தில் காணப்படாத அரசியல் கட்டுரைகள் கலையரசன், கலை இலக்கியம் பற்றி சிறந்த பக்கங்கள்,  உடல்  ஆரோக்கியம், சமூகம், விவாதத்திற்க்கு தயங்கும் பாலியல் பிரச்சனைகள், என பல தளங்களில் வலைப்பதிவுகள் ஊடாக சிறப்பாக இயங்குகின்றது.  தனி நபர்களால் எழுதப்பட்ட தின ஏடுகளின் பயன்பாடு  மறைய துவங்கிய நாட்களில் வந்த வலைப்பதிவுகள் ஒவ்வொரு மனிதனின் வரலாறையும் பதிந்து கொண்டிருக்கின்றது. சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து தகவல் உருவாகவும் வெளிவரவும் தளங்கள் அமைத்து கொடுக்கின்றது .

இன்றைய நிலையில் அரசியல் சமூகச் சூழலில் தமிழ் வலைப்பதிவுகளில் தேவை அதிகமாகி கொண்டு வருகின்றதையும் காணலாம். அரசு மக்களை விட்டு விலகி லஞ்சம், ஊழல் என தன் விருப்பதிற்க்கு ஆட்சி செய்ய முயல்வதும், பத்திரிக்கைத் துறையும் கை-வாய் கட்டி அடிமைகளாக மாறி  விட்ட நிலையில் அந்தந்த மாவட்ட பஞ்சாயத்து சமூக பிரச்சனைகளை வெளி கொண்டு வர வலைப்பதிவர்கள் முன்வர வேண்டும். காலத்தின் தேவை கண்டு சினிமா பொழுதுபோக்கு என்று மட்டுமில்லாது எல்லா நிலைகளிலும் சமூகத்தின் மேல் அக்கறை கொண்டு எழுத முன் வர வேண்டும்.

  ஜூனியர் விகடன், இந்தியா டுடே போன்ற வெகுஜன ஊடகங்களும் வலைப்பதிவர்களை உற்சாகப்படுத்த முன் வந்துள்ளது பாராட்டுதலுக்குறியதே மேலும் தங்களுக்குதேவையான செய்தியையும் வலைப்பதிவு வழியாகவே சேகரிக்கின்றனர்.

வலைப்பதிவு உலகமும் தான் சார்ந்த கருத்துக்கள் அரசியலில் நின்றுகொண்டு சண்டை இடுவதை விடுத்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் பகிரும் தளமாக உயர வேண்டும்.

பல பதிவர்கள் தனி நபர் தாக்குதலில் மூழ்குவதும் சில சுயலாபத்திற்க்கு என செயல்படுவதும், சில வலைப்பதிவர்களோ பின்னூட்டம் மற்றும் தங்கள் பதிவுகளால் அடுத்த  வலைப்பதிவர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும் வகையில் நடந்து கொள்வதும் தவிர்க்க வேண்டிய ஒன்றே!
 

தனி நபர்கள் கருத்துக்கள் என்ற நிலையில் எல்லோராலும் எல்லோர் கருத்தையும் அதே போல் அங்கீகரிக்க இயலாவிடிலும் மனித நேயம் கொண்டு பின்னூட்டம் இடவும் கருத்துரையாடலுக்கு வழிவகுக்கவும் முன்வர வேண்டும். நம் கருத்துக்கள் போலவே மற்றவர்கள் கருத்தக்குளையும் செவிமடுத்து  மோசமான மொழிகளால் பின்னூட்டம் இடாது கன்னியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதும் அவசியமே.


நட்பு வட்டத்தை பெருக்க, மேலும் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை கடந்து வெறும் "எழுத்தர்கள்" அல்லாது எழுத்தால் ஆளுபவர்களாக வலைப்பதிவர்கள் உயர வேண்டும். 

வலைப்பதிவர்கள் அனைவரும் ஒரு குழுவாக செயல்பட வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால் சில வலைப்பதிவு குழுமங்கள் சில சட்ட திட்டங்களை வகுத்து கொண்டு மற்று பல வலைப்பதிவர்களை தனிமைப்படுத்த விளையுவது வருந்த தக்கதே. மாற்று கருத்துக்களையும் வரவேற்க வேண்டும், மதிக்க வேண்டும்.

வலைப்பதிவர்கள் என்ற உறவை கொச்சைப்படுத்தும் படியாக வலைப்பதிவுகள் வெளியிடுவதும் தவிற்க வேண்டும்.

ஆங்கிலத்தில் போன்று பன்முகத் தன்மை கொண்ட வலைப்பதிவுகள் உருவாக வேண்டும். ஈழ வலைப்பதிவுகள் போன்று நம் மொழியை கலாச்சாரத்தை ஆக்கபூர்வமாக பதியும் வலைப்பதிவுகள் உருவாக வேண்டும்.
 

 வலைப்பதிவர் ஒருவருக்கு அரசாலோ சட்டத்தாலோ பிரச்சனை வரும் போது குழுவாக பாதுகாக்கவும் உதவ முன்வர வேண்டியதும் இது போன்ற மாநாடுகளும் கூட்டமைப்புகளுமே. 

பல வலைப்பதிவர் சந்திப்புகள் நண்பர்கள் சந்திப்பை கடந்து அடுத்த நிலைக்கு வருவதில்லை.  வலைப்பதிவு கூட்டமைப்பை கூட தனி நபர் நலனுக்கு தங்கள் அடையாளம் சாந்த நலனுக்கு ஏற்படுத்தி மறைகின்றனர்.  பொது நலம் கருதி எல்லோருக்கும் முக்கியவத்துவம் கொடுத்து ஒரு குழுவாக வளர  வேண்டியது மிகவும் அவசியம்.

 சிலர் மதம் சம்பந்தமாக எழுதக்கூடாது....இன்ன பல விதிமுறைகள் விதித்து சிந்தனையை மழுக்குவது ஒரு வளர்ந்த பண்பான சமூகத்திற்க்கு அழகல்ல! இப்படியான ஒரு சூழலிலை ஏற்படுத்தியால் வெகுஜன ஊடகம் போன்று சாரமற்று போகவே காரணமாகும். வலைப்பதின் பலமே விரும்புவதை விரும்பும் படி எழுதுவதாகும். தனி நபர் சுதந்திரம் ஒழுக்கமே ஓங்கி நிற்க வேண்டும். அல்லாது பாடசாலை போலுள்ள சட்ட திட்டங்கள் அல்ல!

தமிழ் வலைபதிவுகள் அனைத்தும் திரட்டும் படியான ஒரு பொது திரட்டி உருவாக வேண்டும்.

சிறந்த வலைப்பதிவர்கள், வயதில் மூத்த வலைப்பதிவர்களை பெருமைப்படுத்தவும் அவர்களுடைய அனுபவ அறிவுகள் பெறவும் முன் வரவேண்டும்.

வலைப்பதிவுகள் இன்று பல்கலைகழக படிப்பின் பாகமாகவும், ஆராய்ச்சியின் தளமாகவும் உள்ளது.  ஆகையால் வலைப்பதிவர் என்ற நிலையில் பெருமைப்பட்டு கொண்டு ஒரு சமூக பார்வையோடு முன் நடப்பதே வரும் காலங்களில் இதன் வளர்ச்சிக்கு உதவும். 

பள்ளி நாட்கள் என்பதால் வலைப்பதிவர் கூட்டமைப்பில் பங்குபெற இயலாவிடிலும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். இதற்க்கு முன் கை எடுத்த நல்லுள்ளங்களுக்கு வாழ்த்து கூறி அடுத்த நிகழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற  நினைவுடன் விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் தோழமைகளே!


7 comments:

  1. உங்கள் பதிவு பல் நோக்குகளை தொட்டுச் செல்கிறது.சம கால வாழ்க்கை குறித்த பல விசயங்களும் பதிவுகளில் அலசப்படுவது வரவேற்க தக்கது என்ற போதிலும் தமிழர்கள் அனைவருக்குமுள்ள களங்கமும், வரலற்றுக் கடமையும் ஈழப்பிரச்சினை.முள்ளிவாய்க்கால் காலகட்டத்திற்கும் அதனை தொடர்ந்த போர்க்குற்றங்களை பதிவு செய்தும்,ஐ.நா வரை பிரச்சினை சென்றும்,இலங்கை அரசுக்கு எதிரான சாத்வீகமான போராட்டக்குரல்கள் எழும்பியும் கூட உலக அரசியல் களநிலை இலங்கைக்கு சாதகமாகவே இருக்கிறது.முந்தைய கோபங்கள்,விசனங்கள் மெல்ல குறைந்து வருவதை பதிவுலகிலும் காண நேர்கிறது.காலப் போக்கில் இதுவும் மாறும் என்கின்ற வில்வித்தையை தெரிந்துதான் இலங்கையும் நாட்களை கடத்துகின்றது.

    எனவே ஈழப்பிரச்சினையை கலந்துரையாடலில் யாராவது தொட்டார்களா எனத்தெரியவில்லை.சஞ்சயன் தொடுப்பு பலருக்கும் போய் சேர்வது அவசியம்.

    வரும் கால இந்திய அரசியலில் குறிப்பாக தமிழக அரசியலை தீர்மானிக்கும் சுதந்திர கருத்து சக்தியாக பதிவுலகம் மாறுமா என்பதையும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஊடகமாக வலைப்பதிவுகள் வளர்வது அவசியம்.இதற்கு முதல் படியாக தங்கள் வாழும் வட்டார ந்ல்லவை,தீயவைகளை அலசுவதும்,பகிர்வதும் அவசியம்.

    பதிவுலகம் சுதந்திர தளமாக இன்னும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //வலைப்பதிவுகள் இன்று பல்கலைகழக படிப்பின் பாகமாகவும், ஆராய்ச்சியின் தளமாகவும் உள்ளது. ஆகையால் வலைப்பதிவர் என்ற நிலையில் பெருமைப்பட்டு கொண்டு ஒரு சமூக பார்வையோடு முன் நடப்பதே வரும் காலங்களில் இதன் வளர்ச்சிக்கு உதவும்.//

    ஆக்கபூர்வமான அலசல்..

    வலைப்பதிவர் சந்திப்பில் பங்குபெறும் சக தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கு நன்றி.அனைவரின் பங்களிப்பாலும் வாழ்த்துகளாலும் விழா சிறப்பாக நடை பெற்றது.

    ReplyDelete
  4. நண்பர் ராஜ நடராஜன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் சீறிய பார்வை கொண்ட எழுத்துக்கள் மேல் எனக்கு என்றும் ஈடுபாடு உண்டு. தங்கள் பின்னூட்டம் என் கருத்துக்கு வலுசேர்க்கின்றது. மிக்க நன்றி!

    ReplyDelete
  5. மருத்துவராகவும் எழுத்தாளருமான சகோதரர் தங்கராசா ஜீவராஜ் அவர்களுக்கு வணக்கம். என் ஈழ வலைப்பதிவு ஆய்வின் ஊடாக தங்கள் எழுத்தின் ரசிகையானேன். தங்கள் பின்னூட்டத்தில் மகிழ்கின்றேன். நன்றி வணக்கம்!

    ReplyDelete
  6. ஜோசெபின் நன்றாக சொன்னீர்கள். தனிமனித தாக்குதலை தவிர்த்து இந்த வலைப்பூவில் எத்துனையோ நல்ல விஷயங்கள பகிர்ந்து கொள்ளலாம்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete