18 Aug 2022

இரவின் ஆன்மா- Kulashekar T (Writer and Filmmaker )

Kulashekar T (Writer and Filmmaker )

 இரவின் ஆன்மா


கொரோனா உலகம் முழுக்க ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு மாற்றத்தை விதைத்திருக்கிறது. நல்லதில் கெட்டதும், கெட்டதில் நல்லதுமென யின்-யாங் சுழற்சியில் ஒன்றின் தலையில் இன்னொன்று வாலாக பயணிக்கிறது. அப்படியாக அந்த நேரத்தின் பயன்பாடு, ஜோஸபின் வழியாக இப்படியொரு உலக சினிமா பற்றிய நூலாக வெளிப்பட்டிருக்கிறது. அவர் பார்த்து ரசித்ததில், வித்தியாசமான பெண் கதாபாத்திரங்களை கொண்ட சில படங்களை அவர் இந்த நூலில் ஆராதித்திருக்கிறார்.


இதற்கு இரவின் ஆன்மா என்று ஜோஸபின் தலைப்பு வைத்திருப்பதில் இருந்தே, இதில் ஊடாடும் பெண் கதாபாத்திரங்களின் அகவுலகம் எப்படியான நெருக்கடிக்குள் உந்தி தள்ளப்பட்டிருக்கிறது. எப்படியான ஓசை நிறைந்த மௌனத்திற்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அத்தனை அடர்வான இரண்டு சொற்களால் ஆன படிமம் இந்த நூலின் தலைப்பு. 



அவர் உலக சினிமா, இந்திய சினிமா என்று பிரித்து பயணித்து இருக்கிறார். இந்த கட்டுரையில் பிரதானமாக அவர் அலசியிருக்கும் உலக சினிமாக்களுக்குள் எப்படி எப்படி பயணித்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.


அவர் ஸோல்’ஸ் அட் நைட்

வயது என்பது விசாலமான மனதை பொறுத்தமட்டில் வெறும் எண் தான். அப்படி ஐம்பதை கடந்த லூயிஸ், ஜேன் இருவரை பற்றிய காதல் கதை. லூயிஸிற்கு ஒரு மகள். மனைவி இல்லை. தனிக்கட்டை. ஜேனுக்கு ஒரு மகன். அவளும் தனிக்கட்டை தான். இருவருக்கும் இடையே காதல் அரும்புகிறது. சேர்ந்து வாழ ஆரம்பிக்கிற தருணத்தில், ஜேன் மகனின் மகனை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுவன் லூயிசுடன் அப்படி ஒட்டிக் கொள்கிறான்.  


ஆனாலும், ஒரு கட்டத்தில் ஜேன் தன் மகனுக்கு விவாகரத்தாகி, இருப்பிடம் மாற்றலாகி விட்டபடியால், அவன் இருப்பிடம் போய் அங்கிருந்தபடியே பேரனை பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி அவளின் மகன் மூலம் முன்வைக்கப்படுகிறது.


லூயிஸ் அந்த பிரிவை ஏற்றுக் கொள்கிறார். அவர்களுக்கிடையே உள்ள விசாலமான காதல், அந்த தடையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது. நதியோட்டத்தோடு எந்தவித எதிர்வினையும் காட்டாமல் பயணிக்கிற சருகை போல அவர்கள் நடக்கிற அத்தனையையும் இயல்பாக எடுத்துக்கொண்டு பயணிக்க ஆரம்பிக்கிறார்கள்.


மீண்டும் தனிமை. இப்போது காதல் நினைவுகள் அவருக்கு துணையாக இருக்கிறது. ஒரு பெண்ணுடனான நேசம் என்பது அவளை உடமையாக்குவதல்ல. அவளின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பெறுதல் என்கிற பரஸ்பர புரிதலே காதலின் கூறு என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிறது இந்த படைப்பு.


அதன் பின் அவர்கள் வெகுதூரத்திற்கு பிரித்தெடுக்கப்பட்டு கொண்டு போகப்பட்டாலும், மனதால் சேர்ந்தேயிருக்கிறார்கள். கைபேசி வழியாக அவர்கள் தங்களின் காதல் கதையின் பக்கங்களை ஒவ்வொன்றாக பேச ஆரம்பிக்கிறார்கள்.


தமிழில் ரிதம் என்றொரு திரைப்படம் வந்தது. அதிலும் இப்படியொரு விசயம் பேசப்பட்டிருக்கும்.


இது ஜேனின் பார்வையில் சொல்லப்பட்ட காதல் கதை அல்ல. லூயிஸின் பார்வையில் சொல்லப்பட்ட காதல் கதை. அந்த வகையில் இது லூயிஸின் காதல் கதை. இதில் ஜேனின் கதை ஒரு கிளைக்கதையாகி விடுகிறது. லூயிஸ் காதல் நிமித்தம் அத்தனையையும் ஏற்றுக் கொள்கிறவராக இருக்கிறார். ஜேன் தன் காதலின் நியாயம் பற்றி மகனிடம் எடுத்துப் பேச துணியவில்லை. ஆணாதிக்க உலகில் உலவும் உலகளாவிய பெண் மனதின் வெளிப்பாடாக இதனை பார்க்கலாம். அந்த வகையில் தன் சராசரி தனங்களில் இருந்து ஜேனினால் மீறி காதலை கைப்பிடிக்க முடியாததால், இதை ஒரு பெண்ணிய கதாபாத்திரமாக, கருவாக பார்க்க முடியாது. ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட மனிதம் ததும்பும் கருவென சொல்லலாம்.


இந்த கதையை சுவையாக தன் கட்டுரையில் ஜோஸபின் எழுத்தாக்கி இருக்கிறார். வெயில் காலத்தில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து செல்லும் தென்றலாய் இந்த படைப்பில் அப்படியொரு காதல் ஊடாடி நம் இதயங்களை சிலிர்க்க வைத்து விட்டுச் செல்கிறது. 

*

தி லான்ட்ரோமேட்


இந்த படத்தின் கரு அவசியம் பேசப்பட வேண்டியது. இந்த உலகத்தில் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் நடத்தப்படும் நிறுவனங்கள் எத்தனை மோசடியானவையாக மாறிப் போயிருக்கின்றன. அத்தனையும் வாயில் நெய் ஒழுக பேசுவார்கள். பிரபல நடிகர்களை வைத்து ஆஹா ஓஹோ என்று விளம்பரப்படுத்துவார்கள். அந்த நடிகர்களும் காசு வாங்கிக்கொண்டு வாய் கூசாமல் பொய்களை கயமை புன்னகையோடு கக்கிச் செல்வார்கள்.


பெரும்பாலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏதாவது ஒரு வகையில் மோசடியில் ஈடுபட்டு மக்களை தந்திரமாக ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளிவந்த இமானுவேல் திரைப்படம் கூட அந்த விசயத்தை ஆழமாக பேசி இருக்கிறது. 


இந்த படைப்பு பொலீட்சர் விருது பெற்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து நடத்திய நிதி நிறுவனங்கள் எழுபத்தாறு நாடுகளில் வியாபித்து செய்த 3500 குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிய கட்டுரை தொகுப்பே ‘சீக்ரஸி வேர்ட் இன்ஸைட் தி பனாமா பேப்பர்ஸ்’ என்கிற நூல்.


யெல்லா என்கிற மூதாட்டி தன் கணவன் இறந்ததற்கான இன்சூரன்ஸ் தொகையை வாங்க முயற்சிக்கையில், அந்த நிறுவனம் ஒரு டுபாகூர் நிறுவனம் என்பது தெரிய வருகிறது.  

தன்னை அத்தனையும் கைவிட, தான் கொண்ட தன்னம்பிக்கையோடு சட்ட யுத்தம் நடத்தி அறத்தை நிலை நாட்டுகிறாள் யெல்லா. 


பெண்மை சக்தி மகத்தான சக்தி. அத்தனை சக்திகளுக்கும் மூலம் அது. அதன் வீரியத்தை அதன் சுதந்திரமே பட்டவர்த்தணப்படுத்தும். யெல்லா ஒரு எளிய பெண். அவன் வலிய பெண்ணாக சூழ்நிலை நிமித்தம் ஆக்கப்படுகிறாள். இது சந்தேகமில்லாமல் ஒரு பெண்ணிய படைப்பு தான். மேக்சிம் கார்கியின் தாய் நாவலிலும் இப்படித்தான் எதுவும் தெரியாத அம்மா, சூழ்நிலை நிமித்தம் ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் விழிப்புணர்வாக ஒரு கட்டத்தில் விசுவரூபமெடுப்பாள்.


எஸ்கேப் ஃபிரம் சோபிபார்


போலந்து நாட்டில் உண்டாக்கப்பட்ட வதை முகாம்களில் யூதர்கள் பட்ட பாடுகளும், அதில் சிலர் தப்பித்த கதையையும் இந்த படைப்பு பேசுகிறது. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. அப்படியாக உண்மையிலேயே இந்த வதை முகாமில் இருந்து தப்பித்த, எஸ்தர் ராப் என்கிற பெண்மணி இந்த ஆக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார். மோட்டார் சைக்கிள் டைரீஸ் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, சேகுவேராவுடன் அந்த பயணத்தில் ஈடுபட்ட நண்பரின் நேரடி அனுபவத்தை அந்த இயக்குநர் இப்படித்தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். டைட்டானிக் படத்தில் கூட அதிலிருந்து தப்பித்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் நேரடி அனுபவத்தை ஜேம்ஸ் கேம்ரூன் கேட்டு அறிந்திருக்கிறார்.


எந்த போராக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. ஒரு யுத்தம் துவங்குகிறபோது, முதலில் அங்குள்ள பெண்களே குறி வைக்கப்படுகிறார்கள். எண்ணிலடங்காத பலாத்காரம், வன்புணர்வு இதுகாறும் நடைபெற்ற, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யுத்தத்திற்கு பின்னும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. 


லிவ் டுவைஸ் லவ் ஒன்ஸ்


எமிலியோ என்கிற ஓய்வு பெற்ற கணித ஆசிரியருக்கு அல்சைமர் நோய் பிரச்னை வருகிறது. நினைவுகளை படிப்படியாக இழந்து கொண்டு வருகிறார். முழுமையாக நினைவு தப்புவதற்குள் தன் பால்ய கால சிநேகிதி மார்கரீட்டாவை சந்திக்க விரும்புகிறார். அவரின் பேத்தி பிளாங்கா அவருக்கு உதவுகிறாள். அவர்கள் பல சிரமங்களுக்கு பிற்பாடு அவளை சந்திக்கிறபோது, மார்கரிட்டாவும் அல்சைமர் நோயின் பிடியில் சிக்குண்டிருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். முடிவில் இருவருமே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து கவனித்து கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் பால்ய கால சிநேகித நினைவுகளோடு அவர்களின் வாழ்க்கை அங்கே மறுபடி துவங்குகிறது. உடம்பு தாண்டிய காதலை கொண்டாடுகிற தாத்தாவை நவயுக பெண்ணான பேத்தி பிளாங்காவிற்கு பிடித்து போகிறது. அதன் காரணமாகவே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க அவள் காரணமாக மாறிப் போகிறாள். பால்யமும், காதலும் மகத்துவமானது என்பதை பதின்பருவ பிளாங்கா உணர்ந்து கொள்கிற தருணம் இந்த படைப்பில் முக்கியமான ஒரு புள்ளி என்று தோன்றுகிறது.


45 இயர்ஸ்


குடும்ப அமைப்புகளின் போதாமையை பற்றி பேசுகிற படம். ஒரு அந்யோன்யமான தம்பதியர் தங்களின் 45 வது திருமண நாளை கொண்டாடுகிற அதே வேளையில், 50 வருடத்திற்கு முன்னால் இறந்து போன காதலியின் உடல் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வருகிறது. 


உடனே அந்த கணவர் காதலியின் நினைவில் கரைந்து போகிறார். அதை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி, அத்தனை காலம் அந்யோன்யமாக இருந்தும், அவரை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுக்கிறார்.


இதன் இயக்குநர் குடும்ப அமைப்பின் போதாமை குறித்து அவருக்கே உரித்தான கோணத்தில் யோசித்து இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறார். எப்போதும் குடும்ப அமைப்பு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமான உரிமைகளை வழங்குவதில்லை. ஆணுக்கு இருக்கிற உரிமைகள், பெண்ணுக்கு வழங்கப்படுவதில்லை. ஆண் எப்போதும் குடும்ப அமைப்பில் முதன்மை பாத்திரம் தான். பெண் இரண்டாம் நிலை பாத்திரம் தான் என்பதை இந்த படைப்பு சொல்லாமல் சொல்லி செல்கிறது.


இந்த படைப்பு தனிநபர்களை குற்றம் சுமத்துவதில்லை. நடக்கிற சிடுக்குகளுக்கு குடும்ப அமைப்பின் பார்வையை, எதிர்பார்ப்பையே காரணமாக முன்நிறுத்துகிறது. குடும்ப அமைப்பில் உள்ள பாலின சமத்துவமற்ற போக்கு இதன் வழியாக பூடகமாய் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. காதல் இனிப்பதும், கல்யாணம் அதிருப்தியை தருவதும் இதன் பின்புலத்தில் தான்- காதலிக்கிற போது அன்கன்டிஷ்னல் லவ்வை உணர்கிறார்கள். கல்யாணம் என்று வருகிற போது குடும்ப அமைப்பு அதன் சமனற்ற நிமித்தங்களை, நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்து விடுகிறது. எந்த ஒரு உறவிலும் அன்கன்டிஷ்னல் லவ் இருக்கிறபோதே, எதிர்பார்ப்பற்ற, அகம்பாவமற்ற, சுயநலமற்ற, சாசுவதமான அன்பை தரிசிக்க முடியும் என்பதை இந்த படைப்பு உணர்த்துகிறது.


தி டூ போப்ஸ்


இரண்டு அறம் சார்ந்த பாதிரியார்களுக்கிடைய நடைபெறுகிற ஆழ்மன விசாரனையே இந்த படைப்பு. ஒருவர் பிரான்சிஸ். இவர் கார்டினல் பதவி உயர்வு பெறுகிறார். ஆனால் தனக்கு எந்த அடையாளங்களும், அதிகாரங்களும் தேவையில்லை. பாதிரியாராகவே தொடர விரும்புகிறேன் என்கிறார். இவர் மரபை தாண்டிய சிந்தனை போக்கு கொண்டிருப்பவர். மற்றொருவர் போப் ஆக இருக்கிற பெனடிக். இவர் மரபார்ந்த சிந்தனை போக்கு கொண்டவர். இரண்டு பேருக்கும் இடையே உள்ள முரண்கள் அவர்களின் உரையாடல்களில் ஆக்கப்பூர்வமாக வெளிப்பட்டிருப்பதற்காக காரணம், இருவரும் மனிதத்தை மதிப்பவர்கள். 

மகாத்மா என்கிற பட்டம் கூட மோகன்தாஸை உறுத்தியே இருக்கும்.

ஜென் மனநிலை என்பது அடையாளமற்று இருப்பது. மனதை கழுவி கழுவி எடையற்ற இறகாய் பறக்க விட்டிருப்பது. அப்படியான இலக்கு நோக்கியே இருவரும் வெவ்வேறு பாதை வழியே பயணிக்கிறார்கள். 


போஸ்ட் மார்டனிஸத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று அதிகாரத்தை துறப்பது. அந்த வகையில் இரு நாயகர்களும் பின்நவீனத்துவவாதிகளாக உணரத் தக்கவர்கள். இறுதியில் பெனடிக் புதிய போப்பாக பிரான்சிஸை நியமிக்கிறார். அடையாளங்களை தொலைக்க விரும்புகிற நபரிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் உச்சக்கட்ட காட்சி.


இவர்களின் உரையாடல் மதத்தின் சாதக, பாதக நிகழ்கால அம்சங்களை அலசுகின்றன. மதங்கள் மானுடத்தை பண்படுத்துவதற்காகவே தோன்றியிருக்கிறது. அதேசமயம், அதில் அரசியல் சாயம் கலக்கப்படும் போது, அது நிறுவனமயமாகி விடுகிறது. ஆணாதிக்க சமூகத்தின் கூறுகளும், மதங்களின் அடிப்படைவாததன்மையும் அதில் கூட்டாச்சி செய்ய ஆரம்பித்து விடுகின்றன.


மனோ தத்துவத்தின் தந்தையாக போற்றப்படும் ஃபிராய்டின் நீட்சியாக கருதப்படுகிற கார்ல் யூங் 1914 ல் கலெக்டிவ் அன்கான்ஷியஸ்னெஸ் என்கிற தன்னைத் தானே தன்னின் கனவு நிலை குறித்த அன்கான்சியஸ் மனநிலையை ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஒவ்வொரு மனிதரின் ஐடன்டிட்டியில் அடையாளத்தில் அவரவர் மட்டுமே தனித்திருப்பதில்லை. காலங்காலமாய், யுகம் யுகமாய் மரபணுக்களின் வழியாக பயணித்து வந்திருக்கும், அவர்களின் மூதாதய பண்புகள் தொன்மங்களாக அவர்களோடு கூட்டு பயணம் நிகழ்த்தியவண்ணம் இருக்கிறதை அவர் கனவில் கண்டடைந்த ஓவியங்கள் வழியாக, கனவை தொடர்ந்த அடுத்தடுத்த நொடிகளில் வரைந்து வரைந்து சேகரித்து, அதற்கான விளக்கத்தோடு நூலாக்கி இருக்கிறார். அப்படியான கூட்டு ஆழ்உறைமனநிலை பண்புகளின் கூறுகளே ஓரினச்சேர்க்கை முதலான பல விசயங்களுக்கு காரணிகளாக இருக்கின்றன என்பதை அதில் விளக்கியுமிருக்கிறார். அப்படியான ஒரு விசயம் இந்த படைப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. 


இருக்கட்டும். கார்ல் யூங் எழுதிய அந்த நூல், ஒரே ஒரு பிரதி மட்டும் தான் அவர் பிரத்யேகமாக அச்சிட்டிருக்கிறார். அந்த நூலை யாருக்கும் அவர் தரவில்லை.  ஆனால் பத்திரமாக தன்னுடைய சேஃட்டி லாக்கரில் வைத்து இருந்து இருக்கிறார். 2007 ல் அவரின் வழி வந்த மனோவியலாளர்கள் முயற்சியில் அந்த நூல் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு அறிவியல் உலகில் மிகுந்த கவனிப்பை பெறுகிறது. அப்படியான கலெக்டிவ் அன்கான்சியஸ்னெஸின் சூட்சுமங்களை தான் இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து அலசி இறுதியில் அவர்களின் ஒற்றை இலக்கான மனிதம் என்கிற புள்ளிக்கு வந்து சேர்கிறார்கள். 


இந்த நூலின் மைய பண்பிற்கேற்ப இந்த படைப்பில் பெண் கதாபாத்திரம் எதுவும் இடம் பெறவில்லையே என்று தோன்றுகிறதா? அப்படியான பெண் கதாபாத்திரம் இல்லை தான். ஆனால், பாலின சமத்துவத்தை அடிகோல துடிக்கிற பெண் மனதின் ஆன்மா குறித்து பெண்மையை சமமாக பாவிக்க விரும்புகிற இந்த இரண்டு கதாபாத்திரங்கள் வாயிலாக அலசப்படுகிறது. அப்படித்தான், மதங்களின் தலைபீடங்களில் எந்த ஒரு பெண்ணும் அமர்த்தப்படுவதில்லை என்கிற சமனற்றதன்மையை மனிதத்தோடு இதன் மைய கதாபாத்திரங்கள் ஆய்ந்து பட்டவர்த்தனப்படுத்துகின்றன.


ரோமா


இந்த திரைப்படம் வெளிநாட்டு திரைப்படங்களின் பிரிவில் மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறது. அதில் ஒன்று இதில் வளர்ப்பு தாயாக நடித்திருக்கும் நாயகிக்கு கிடைத்திருக்கிறது. இன்னொன்று இதில் குழந்தைகளின் தாயாக நடித்திருப்பவருக்கு சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ் பிரிவில் கிடைத்திருக்கிறது. இதுவே இந்த படத்தை இந்த நூலின் ஆன்மா அலசுவதற்கான காரணமாகவும் அமைந்து விடுகிறது. 


நிராதரவாக விட்டுச் செல்லப்படுகிறது ஒரு வசதியான குடும்பம். அந்த குடும்பத்தின் ஆண் வேறொரு பெண்ணோடு சென்று விடுகிறான். இந்த குடும்பத்தில் இருந்த செவிலி பெண் அந்த குடும்பத்து அங்கத்தினராகவே மாறி அந்த குழந்தைகளை காப்பாற்றி, கரையேற்றுகிறாள். அவளுமே இந்த தாய் சந்தித்த துரோகங்களை சந்திக்கிறாள். அதன் விளைவாக கருவுற்று இறந்தே பிறக்கிறது அந்த குழந்தை. அதன் பிறகு தான் அந்த தாயின் மூன்று குழந்தைகளுக்கு அவள் பெறாத தாயாக உருவெடுக்கிறாள். இது இந்த படத்தின் இயக்குநர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் மீளுருவாக்கம். உண்மையான அந்த வளர்ப்பு தாய்க்கு இப்போது 72 வயது. பெயர் லிபோரியா ரோட்ரிக்ஸ். அவர் இந்த படத்தை பார்த்து விட்டு அழுது விட்டதாக தெரிவித்திருப்பதாக கூறுகிறார் இந்த நூலின் ஆசிரியர் ஜோஸபின்.


இந்த படத்தின் துவக்கத்தில் ஒரு படிம காட்சி இடம் பெற்றிருக்கும். அதில் படத்தின் நாயகியான அந்த பணிப்பெண் தரையை துடைத்துக் கொண்டிருப்பாள். அதில் ஒரு சாளரம். அதன் வழியாக வானம். அதில் கடந்து போகும் விமானம் என அத்தனை உயரங்களும் அவள் காலடிக்கு கீழ் பிம்பங்களாக நகரும். 


ஜோக்கர்


ஜோக்கர் என்கிற கதாபாத்திரம் நகைச்சுவை காமிக்ஸ் உலகில் மிக பிரபலம். அப்படியான ஆர்தர் ஃபிளெக் ஒர நகைச்சுவை நடிகராக ஆசைப்படும் ஒரு எளிய மனிதர் தான். நோய்வாய்ப்பட்ட அம்மா, ஏழ்மை, நிராசைகளின் படையெடுப்பால் ஆர்தரின் வாழ்க்கை தனது பிடியை படிப்படியாக இழக்க துவங்குவதாக இந்த கட்டுரை துவங்குகிறது.


மனநோயினால் அவதிப்படும் ஆர்தரின் வாழ்க்கை கட்டுப்பாடற்ற பிரமைகள், வன்முறை, அராஜகம் என சுழல்கிறது என்கிற வாக்கியம் ஜோக்கர் பற்றிய துல்லியமான சித்திரத்தை மனதில் பதிய வைத்து விடுகிறது. 

இரயிலில் ஒரு பெண்ணை சீண்டிய மூன்று நபர்களை கொலை செய்கிறவன், சோஃபி என்கிற கற்பனை காதலி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னை கைவிடாதல் அவள் என கற்பனை செய்து கொண்டு கொண்டாடுகிறவன், சிறுபிராயத்தில் தன்னை அம்மாவின் காதலன் கொடுமைப்படுத்தியதை அம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் என்பதை உணர்ந்ததும், அவளை கொலை செய்கிறவன் தான் மனபிறழ்விற்கு உட்படுத்தப்பட்ட இந்த ஜோக்கர்.


பெற்றோர்களின் நீட்சி அல்ல குழந்தைகள். பெற்றோர்களின் வழியாக வருகிறவர்கள். அவ்வளவே என்று கலீல் ஜிப்ரான் சொன்னது இங்கே போகிற போக்கில் ஞாபகம் வருகிறதை தடுக்க முடியவில்லை.


சராசரி பொதுபுத்தியும், சுயநலமுமாக இருக்கிற பெண்ணை எதிர்நாயகனின் தாய் கதாபாத்திரம் வழியாக காட்சிக்கு வைக்கிறது. இதுவும் உண்மையான பெண்ணியம் நோக்கிய பயணத்திற்கு சிந்தனையில் வழி வகுக்கிற பாதையை கட்டமைக்கிறது என்பது உண்மை தான்.


லாலாலேண்ட்


இந்த படம் காதலுக்காக காதலையே தியாகம் செய்கிற காதலை பற்றி கவித்துவமாய் பேசுகிறது. காதல் என்பது பெறுவதல்ல. கொடுப்பது. கொடுத்துக் கொண்டே இருப்பது என்பதை இங்கே பெண்மை தொட்டு செல்கிறது.


இதனை தொடர்ந்து சில இந்திய படங்களின் கட்டுரைகளையும் இந்த நூலில் இணைத்துள்ளார். அவை பற்றி சில வரிகளில் பார்க்கலாம். குயின். இந்த படம் தமிழில் முன்பு வெளிவந்த புது வசந்தம் என்கிற கதையின் மீளுருவாக்கம் என்று சொல்லலாம். தன்னை புரிந்து கொள்ளாத காதலனை துறந்து, தன்னை நம்புகிற நண்பர்களுக்காக வாழ துவங்குவது தான் இரண்டு படைப்பின் அடிநாதம். அப்படியாக தன்னை புரிந்து கொள்ளாத காதலனை துறந்து, புதிதாக கிடைத்த நண்பன் இத்தாலிக்காரனிடம் காதல் வயப்படுகிறாள் கதை நாயகி ராணி. தன் காதலை அவமதிக்கும் எதிர்நாயகனை நிராகரித்து, தன் காதலை மதிக்கும் இன்னொரு நபரை ஒரு பெண் காதலிக்கலாம் என்கிற சிந்தனையை பதிக்கிறாள் இந்த குயின்.


லஞ்ச் பாக்ஸ் கணவனால் தன் கனவுகள் யாவும் நிராசையாகி போன ஒரு பெண் புதிய காதலை தேடிக் கொள்கிற கதை. ஒன்ஸ் அகெய்ன் பெண் என்பவள் எதற்காகவும் பிறரை சார்ந்திருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிற படம். சார் என்கிற இந்தி படம் ரத்னா என்கிற கைம்பெண் அவள் வேலை செய்கிற வீட்டில் உரிமையாளரின் மனதில் இடம் பிடித்து எப்படி கரம் பிடிக்கிறாள் என்பதை பேசுகிறது. அவளுக்குள் எழும் தன்னெழுச்சி காரணமாக அவளுக்குள் இருந்த பொருளாதார ரீதியிலான காம்ளக்சில் இருந்து மீண்டு அவள் எப்படி மிளிர்கிறாள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த காதல் கதை. வித்யா பாலன் நடித்த ஷெர்னி வனங்கள், இயற்கை, விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடக்கிற யுத்தம் என்பது இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே நடக்கிற யுத்தகமாக விரிகிறது. இந்த உலகம் மானுடத்திற்கு மட்டுமானதல்ல. எல்லா உயிரினங்களுக்குமானது என்பதை இந்த படைப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது. வனவிலங்கு பாதுகாப்பு என்பது வாயில்லா ஜீவன்கள் மீது காட்ட வேண்டிய கருணை. அதை தான் முன்பே பல்லுயிர் ஓம்புதல் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். வனங்களையும், வனவிலங்குகளையும் மதிக்கிற போதே சுற்றுச்சூழல் சிறக்கும். கொரோனா போன்ற இயற்கை பிறழ்வுகளின் விசித்திரங்கள் வராது தடுக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிற கதை. காது கேட்காமல், வாய் பேசாமல் பிறந்த ஹெலன் கெல்லர் எப்படி பிரெய்ல் எழுத்துகளை கண்டுபிடிக்க காரணமாக இருந்தாரோ, அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி இந்த பிளாக் திரைப்படத்தில் வாழ்ந்து இருக்கிறார். தொடுவுணர்ச்சி வழியாக அவர் எப்படி ஒரு கல்விமானாக பரிமளித்தார். வாழ்வின் சவால்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை உணர்வார்த்தமாக வெளிப்படுத்துகிறது இந்த கதை. ஷிகாரா. விதுவினோத் சோப்ரா இயக்கிய படம். முக்கிய கதாபாத்திரங்களாக சிவ்குமார் அவனின் மனைவி சாந்தி மற்றும் அவனின் நண்பன் லத்தீஃப் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீர் பண்டிட்டுகளை இசுலாமிய அடிப்படைவாதிகள் காஷ்மீரை விட்டு வெளியேற்றிய மனித உரிமை மீறல் சம்பவத்தை பின்புலமாக வைத்து பின்னப்பப்டட கதை. இந்த படைப்பின் வாயிலாக தலைமை என்பது மக்களை பிரித்து ஆள்வது அல்ல. ஒற்றுமையாக சேர்த்து வைத்து ஆள்வதே என்கிற கருப்பொருளை முன்நிறுத்துவதாக இந்த கட்டுரை வாயிலாக ஜோஸபின் குறிப்பிடுவது சிந்தனையை தூண்டுகிற வரிகள். முத்தாய்ப்பாக, பிங்க் என்கிற படம் தாப்சி கதாபாத்திரம் வழியாக நோ மீன்ஸ் நோ என்பதை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. பிங்க் என்றால் பெண்களின் சுதந்திரம் என்று அர்த்தம். 


இப்படியாக தரமான உலக சினிமாக்களோடு, இந்திய சினிமாகளையும் சேர்த்து தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து இந்த நூலை சிருட்டித்திருக்கிற ஜோஸபின், புதிய சினிமா என்பதற்கு கலை அந்தஸ்தை இந்த புத்தகம் வாயிலாக வழங்கி இருப்பதை மனப்பூர்வமாக உணர முடிகிறது. எத்தனை விதமான பெண் ஆளுமைகள் இந்த படைப்புகளுக்குள் ஊடாடுகிறார்கள். அத்தனையையும் ஒரு சேர தரிசிக்கிற வாய்ப்பை இந்த நூல் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

*


      




9 Aug 2022

காட்டுத்தனம்-அழகுமித்ரன் -Novel

 

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி பிறப்பிடமாக கொண்ட அழகு மித்ரன் இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர். நாடகம், கவிதைகள், கதைகள் எழுதி வருபவர். ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது வனத்துறையில் பணியாற்றி வருகிறார்.

காட்டுத்தனம் என்ற நாவல்,  காட்டின் பாதுக்காப்பை மையமாக கொண்டு எழுதுப்பட்ட நாவல். கதை நடக்கும் காலம் 1980-2000  வரை உள்ள காலம்.  தீ-தடுப்பு காவலர் குடும்பத்தை கதாப்பாத்திரங்களாக கொண்டு கதை நகர்கிறது.  அக்குடும்பத்திலுள்ள தனலக்‌ஷ்மி கதை சொல்லும் பாணியில் கதையை அமைத்துள்ளார் ஆசிரியர்.

 

20 வருடம் கடந்த நிலையில், தனது சித்தப்பா மற்றும் தம்பி அர்ஜுன் குடும்பத்துடன் சொந்த ஊர் காண வருகிறார் தனலட்சுமி. இரயில் பயணத்தின் இடையில்  நினைவாக கதை விரிய ஆரம்பிக்கிறது.

காட்டின் அழகு, அங்கு இருக்கும் பறவைகள் உயிரினங்கள் அதன் பழக்க வழக்கங்கள், காட்டு பழங்கள், காட்டின் இயல்பு, பற்றி பல இடங்களில் விவரிக்க படுகிறது சுவாரசியமகா உள்ளது.  வயிற்று பிழைப்பிற்காக காட்டை நம்பி இருக்கும் காட்டின் அருகில் வசிக்கும் ஏழை மக்கள், அதே காட்டில் சாராயம் காய்ச்சும், கள்ளக்கடத்தல் செய்யும் அடாவடி சனங்கள், பெண்களை பாலியலாக துன்புறுத்தும் மக்கள், காடு கொள்ளைக்கு  துணை போகும் அதிகாரிகள் என்ற நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நல்ல அதிகாரிகள் காட்டை  காக்க வரும் போது  நிகழும் மாற்றங்கள் என கதை நகர்கிறது.

 

தனது தம்பி அம்மா அப்பா அடங்கிய குடும்பம். பாசமான அம்மா கலகலப்பான தினம் தினம் கதை சொல்லும்  அப்பா,  அனுசரனையான தம்பி என்று போய் கொண்டு இருந்த வீட்டில்;   திடீர் என தகப்பனார் இறப்பதுடன் தனலட்சுமியின் கல்வியும் தடை படுகிறது. தாயாரும் சுகவீனமாக மாறி விட்ட சூழலில், தனது தம்பியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு பாக்கியம் மற்றும் மற்றும் தனத்துடன் காட்டில் விறகு மற்றும் நெல்லிக்கா பெறுக்கி விற்று வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். தனத்திற்கு வன விலங்குமேல் இருக்கும் உணர்வுபூர்வமான  பிரியம் காடு தீ பிடிக்காது காப்பதுடன் தீ பிடித்தால் தடுக்க, தீயை அணைக்க என்று முனைப்புடன் செயல்படுகிறாள்.

 

இப்படி இருக்க செல்லன் என்ற ஒருவன் காட்டுக்கு செல்லும் பெண்களை பாலியலாக வல்லுறவு செய்யும் வழக்கம் உள்ளவனாக உள்ளான். செல்லன் வழியாக பண்ணையாரால் தான் தனது தந்தை தள்ளி விடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என தெரிந்து கொள்கிறாள்.  பண்ணையார் தனலட்சிமியின் அம்மாவிடம் தவறாக நடக்க ஒரு போது முயல்கிறான்,  அதை தனது அப்பாவிடம் அம்மா சொன்னதையும் தனலட்சுமி கேட்டு உள்ளாள். பண்னையாருக்கும் தனத்தின் அப்பாவிற்கும் நடந்த சண்டையில் தனலட்சிமியின் அப்பா இறந்து இருக்கலாம் என்று நம்பும் சூழல் வருகிறது.  தனது தகப்பனாரை செல்லன் அல்லது பண்ணையார் கொன்று இருக்கலாம் என்று நம்புகிறாள் தனம். செல்லன் ஒரு நாள் தனலட்சிமியை பாலியலாக துன்புறுத்த முயல்கிறான். தனக்கு நடந்த பாலியல் அச்சுறுத்தலையும் தனது தாயிடம் சொல்லாது தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வருகிறாள்.  ஆனால் அதில் இருந்து தாயின் வார்த்தை மீட்கிறது தனத்தை.  

இன்னிலையில் தனலட்சிமியின் சித்தப்பா வந்து தனது அண்ணன் குடும்பத்தை சென்னை தன்னுடன் அழைத்து செல்கிறார் . அங்கு சென்ற மூன்றாம் வருடத்தில் தாயும் இறந்து போகிறாள்.

எல்லாம் முடிந்து இருபது வருடம் கடந்த நிலையில் தனியாளாக  தொழிலில் பிரகாசிக்கும் தனலட்சுமி தன் தோழிகளை  சந்திப்பதுடன் குழந்தை குட்டிகளுடன் வாழும் தனது தோழிகளுக்கு   நிறைய பணம்  தந்தும் உதவுகிறாள்.

தற்போது செல்லன் பாறையில் வழுதி விழுந்து இறந்ததை  அறிகிறாள். போலிசால் விசாரிக்கப்பட்ட பண்ணையார் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறான். தனலட்சுமியிடம் கல்வி கற்ற கணபது தற்போது  வனத்துறை அதிகாரியாக உள்ளான்.

 

இந்த நாவலில் கடவுள் கண்டிப்பார், சட்டத்தை அணுகுவதை கதாப்பாத்திரங்கள் விரும்பாது இருப்பது, ஆண்களீன் பாலியல் வன்முறைக்கு பெண்கள் எளிதாக இலக்காகுவது என்ற வகையிலுள்ள சில இடங்களீல் உள்ள கதைப் பின்னல் காலச் சக்கிரத்தில் பெண்களை 19 நூற்றாண்டின் துவக்கத்திற்கு தள்ளுவதை அரசு ஊழியரான கதாசிரியர் தடுத்து இருக்கலாம்.

காட்டுத்தனம் குணம் கொண்ட தன லட்சுமி, யானைகள் கூட பணியும் தனலட்சுமியை காட்டுத் தனம் என்று புனைந்துள்ளார். தன் சகோதரன் திருமணம் செய்து குழந்தை குட்டிகளுடன் வாழ தனத்தை மட்டும் திருமணம் செய்ய விடாது தனி ஆளாக விட்டுள்ளது இயல்பயும் கடந்த  பெண் பரிசுத்தம் அல்லது பெண் விடுதலையா என்ற கேள்வி மனதில் மிஞ்சாது இல்லை.

 

 

 

 

  

தாணப்பன் கதிரின் முதல் சிறுகதை தொகுப்பு-சுற்றந்தழால்

 


திருநெல்வேலியை சேர்ந்த பா. தாணப்பன் என்கிற தாணப்பன் கதிர்  எழுதிய முதல் சிறுகதை தொகுப்பாகும் ”சுற்றந்தழால்” . தனது தந்தை ப். பரதேசியா பிள்ளை அவர்களுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர், கவிஞர், நெல்லையின் பிதாமகன் வண்ணதாசன் அவர்கள் முன்னுரை எழுதி உள்ளார்.

 

முன்னுரையில் எழுத்தாளர் குறிப்பிட்டு உள்ளது போலவே எழுத்தாளரின் வாழ்வோடு இணைந்த காட்சிகளை சிறுகதை எனும் உருவத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.

 

இத்தொகுப்பில்  ஆக 15 கதைகள் இடம் பெற்றுள்ளன.

ஆசாரம் , தீட்டு என வாழும் பிராமண குடும்பத்தில்  ஆணாக பிறந்து  பெண்ணாகி மாறின நபர்,  தனது தகப்பனார் இறந்த போது தனது தாயை தன்னுடன் அழைத்து செல்வதுடன்  முதல் கதை பிருகன்னளை முடிகிறது.

தாங்கள் வளர்க்கும் பசு தொலைந்து போவது அது பிற்பாடு கோயில் பசுவாக மாறுவதும், பசுவை பிரியும் துயருடன் கதை முடிகிறது.  அடுத்த கதை கொரோனா தொற்று மக்களை பாதித்த விதம், திருநெல்வேலி வாழ்க்கை சூழல் மாறின விதம்,   கொரோனா வேளையில் ஆட்குறைப்பு  என்ற பெயரில் நிர்வாகம் முடிவெடுத்த போது, சிறப்பாக வேலை பார்த்து வந்த ஆசிரியை இழந்த வேலை அதனால் பாதிப்படைந்த ஆசிரியையின் குடும்பம் என கதை நகர்கிறது.

 

 சுற்றந்தழால் என்ற கதை; திருமணம் ஆகி சடுதியில் விவாகரத்து ஆன தம்பதிகள் பற்றிய கதை. அடுத்த கதையில் தனது தாயாரின் தூண்டுதலால் விவாகரத்து கேட்ட மனைவி, பின்பு மனம் மாறி தனது காதல் கணவருடன் இணையும் கதை. அடுத்த கதையில் பிரஞ்சை இல்லாது கடந்து போகும் திருநெல்வேலி வரலாற்று இடங்களில் ஒன்றான தைப் பூச மண்டபம் பற்றி குறிப்பிட்டு உள்ளார் என்பது சிறப்பு.

 

எப்போதும் அம்மா வீட்டில் இருந்த  கிடைக்கும் பொருட்கள் மேல் பெண்களுக்கு எப்போதும் ஒரு ஈடு பாடு உண்டு. அவ்வகையில் கிடைத்த சாதம் குக்கர் உடையும் வரை பயண்படுத்தி கடையில் பழைய பொருளாக கொடுக்க வேண்டி வந்த துயரை சொல்வது நெகிழ்ச்சியாக உள்ளது நெளிந்த நேசம் என்ற கதையில்

 

’இறங்கும் மனிதர்களும் இரங்கா மனிதர்கள்’ என்ற கதை ஊடாக கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் தொழிலாளகளின் துயரை பற்றி அறிகிறோம்.

 

ஈரம் என்ற கதையில் பக்கத்து மாநிலங்களிடம்  உள்ள தண்ணீர் பிரச்சினை அரசியலாக இருக்கும் வேளையில், பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  தண்ணீர் பிரச்சினையை தீர்க்க இயலாது உள்ள சூழலை  விளக்கியுள்ளார்.

அப்பாவிற்கும் தனக்குமான உணர்வு பூர்வமான உறவை,  டயறி எழுத்து போன்றவற்றுடன் இணைத்து எழுதி உள்ளது உணர்வு பூரமாக உள்ளது.

 


நவீன கலத்தில் வேலைக்கு போய் வந்து வாழும் அவசர வாழ்க்கையில் இணையம் ஊடாக பகிரும் வாழ்த்துக்கள் தரும் சின்ன சின்ன சந்தோஷங்கள் பறிறி அடுத்த கதையில் காணலாம்.

வீட்டில் வளர்த்த தென்னைம்பிள்ளை வெட்டப்பட்டதில் உள்ள சோகத்தை வடித்துள்ளார் அடுத்த கதையில்.

 

அடுத்த கதை ஒரே ஊரில் இருக்கும் காதலியின் பிரிந்து போக வேண்டிய பிரிவு அடுத்த  நிறைவு கதையாக திருநெல்வேலியில்  வயல்கள்  சாலைகளாகவும்  விபத்துக்களின் விளைனிலமாக மாறும் அவலம் பற்றி சொல்லப் பட்டுள்ளது.

 

இப்படி ஒவ்வொரு கதையும் திருநெல்வேலி மனிதர்களையும் திருநெல்வேலி வாழ்க்கையையும் இங்கய சமூக சூழலையும் விளக்கி விதம் எளிய, நேர்கோட்டில் கதை சொல்லும் பாங்காக இருந்தது. சில கதைகளுக்கு இன்னிம் மெனக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றியது.

மனித உறவுகள், சமூக பிரச்சினைகள், சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் என கதைகள் யாவும் சமக்காலத்தின் பிரச்சினையை  நினைவுப்படுத்தி கொண்டே இருந்தது என்றால் மிகை அல்ல.

 

18 Jul 2022

யாத்திரை ஆர். என். ஜோ.டி குருஸின் நாவல்!

 

 

தனது பாட்டி பிரகாசிக்கு சமர்பித்து,  செப் 2021 ஆண்டு வெளியான நாவல் ஆர். என். ஜோ.டி குருஸின் யாத்திரை.  புத்தகத்தை வாசித்து முடிக்கையில் இது நாவலா அல்லது வாழ்க்கை

 இது எழுத்தாளரின் ஆன்ம கத்கதம், விலாபம், குற்ற உணர்வு, குறை காணுதல்!  கதாப்பாத்திரம் இல்லை, கதைப்பின்னல் இல்லை, நாவலுக்கான ஒரு தொடர் பின்னல் இல்லை. ஆனால் கதாசிரியர் தன் மனப் போங்கை, மனக்குமுறலை, தம் சமூக அறச்சீற்றத்தை சொல்லிக் கொண்டே போகிறார் தன்  பல பல வயதினில் நடந்த .

 

கல்லூரி பருவம் முடியும் வரை கத்தலிக்க பாதிரியார்கள் மேலுள்ள கட்டுக்கடங்கா கோபம். அதற்கான வலுவான காரணம் கதாப்பத்திரங்கள் வழியாக சொல்லி இருக்க வேண்டும் .  கதை சொல்லி எல்லா இடத்திலும் விதிப்பவரும் அவதானிப்பவரும், கோபம் கொள்கிறவருமாக இருக்கிறார்.   ஒரு பக்குவமற்ற சிறுவனின் நோவாகவே இருந்தது பல குற்றச் சாட்டுகளும்.   பாதிரி  கதாப்பாத்திரங்கள் இவ்வாற்றாக செயலாற்ற காரணம் என்ன என்று தெளிவில்லை, தெரிவிக்கவும் இல்லை வாசகர்களை.  ஒரு கட்டத்தில் சீர் திருத்த பாதிரிகள் கல்யாணம் செய்து கொள்கின்றனர்,  இவர்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பது வரை பாகுபடுத்தி குற்றமாக சொல்லப்படுகின்றது.  காதாசிரியரின் கடந்த நாவல் கொற்கையிலும் கத்தோலிக்க பாதிரியார்களை பற்றி பல குற்றங்கள் சொல்லப்பட்டிருந்தது. அதே குற்றம் கூறுதல் இங்கும். இந்த தொகுப்பில் கதை ஆசிரியர் இடைப்பட்ட சில காலம் அல்லேலூயா பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொள்வதும் பின்பு தாய் மதம் மேலுள்ள விருப்பவும் கதையின் ஊடே சொல்லப்பட்டு உள்ளது.

கத்தோலிக்க பாதிரியார்கள் ஒரு பெரும் சமூகத்தை பிரதினித்துவ படுத்தும் மதத்தலைமைகள். அவர்களை ஆன்மீகம் சார்ந்த கட்டமைப்பு சார்ந்தா அல்லது அறம் சார்ந்தா கதை ஆசிரியர் முரண்படுகிறார் என்பதை வாசகர்கர்ளிடம் சேர்த்து இருக்க வேண்டும். போகிற போக்கில் மனதில் தோன்றினதை எல்லாம் விதறி விட்டு செல்வது சமூகத்தை ஆளுமை செய்யும் எழுத்தாளர்கள் அறமா என்ற கேள்வி எழாது இல்லை.

 

ஒரு வகையான பதட்டவும், ஒட்டாத ஓட்டமாக இருந்தது கதை சொல்லும் பாணி. பத்து புத்தகத்தில் பகிர வேண்டிய  கருத்துக்களை ஒரே புத்தகத்தில் நிரப்பி வழியச் செய்தது மாதிரி இருந்தது. கதை சொல்லி மட்டும் எல்லா இடத்திலும் சிந்தித்து கொண்டு இருந்தார், பேசிக்கொண்டு இருந்தார், மனஸ்தாபத்தில், உளச் சிக்கலில் இருந்தார்.

 

நீ ஆசைப்படாத எழுத்து ஒன்றில் தான் பதற்றமில்லாது இருந்தது. ஆனால் இப்புத்தகத்தில் பெரும் பதற்றம். எல்லாம் சொல்லியே தீர வேண்டும் என்ற நிர்பந்தம் வழிந்தது எல்லா பக்கங்களிலும்.

 

பைபிள் வருகிறது, மோசை வருகிறார், தச்சன் மகன் யேசு பல இடங்களில். பிரான்ஸ் அச்சீசி, போன்ற புனிதர்கள் அத்துடன் கதை சொல்லியின் அக்கா, பெரியவர், இளம் கத்தோலிக்க பாதிரியார்.  சடங்குகளை முன்னிறுத்தி  மெய்யான யேசுவை விட்டு, புனிதர்கள் வணக்கம் செய்கிறதை கேள்வி எழுப்பும் கதை சொல்லிக்கு இதன் காரணம் தெரியாதா?

கதை சொல்லி விமர்சிக்கும்  கிறிஸ்தவ கத்தோலிக்க பாதிரிகள் இந்திய குடும்பங்களில் இருந்து போய் பணியாற்றுகிறவர்கள் தானே!  அவர்கள் அப்படியான மன நிலைக்கு மாற்றப்படும் சமூக சூழல் என்ன, அவர்களை உருவாக்கும் கட்டமைப்பு என்ன என்பதை விடுத்து  காரிய காரணங்கள் சொல்லாது  ஒரு குழுவின் மேல் சேறை அள்ளி வீசும் மனப் போங்கு தான் என்ன?  பாதிரிகளும் இந்த சமூக அமைப்பின் நீட்சிகள் தான்.  கதை சொல்லியோ வெறும் வார்த்தை  மனித தாக்குதலில் கதையை நகத்துகிறார்.

 

சில இடங்களில் கதை சொல்லி; இரவில் குடித்து விட்டு ராப்பாடும் சன்னியாசியை தனது ஆன்மீக குருவாக ஏற்கும் மன நிலையில் உள்ளார்.

கதை காட்டாறு வெள்ளம் மாதிரி ஓடுகிறது. அந்த ஓட்டத்தின் வேகத்தில் வாசகர்கள் ஓட வேண்டும் என்றால் கதை சொல்லியின் முன்னைய நாவல்கள் , அவர் குறிப்பிட்ட கால அரசியல் எல்லாம் புரிந்து கொள்ளுதல் அவசியம்.  ஒபீர் துறைமுகம் பற்றி சொல்லியவர், ஒரு தகவலாக பகிர்கிறாரே தவிற ஆழமான உரையாடல்கள் இல்லை.  

முதுகலையில் படிக்கும் போது சந்தித்த விதவையின் கதை ஊடாக தன்னை நியாஸ்தராக முன் நிறுத்துகிறார். அந்த காதல் நினைவுகள் அவர் சகோதரி மற்றும்  பெற்றோர் தடை இடுவதுடன் முடிந்தது.

ஊரில் வந்து சேர்ந்த  புது இளம் பாதிரியை பற்றி ஒரு கதை ! பாதிரியிடம் வந்து சண்டை யிடும் வெளியூர் பெண்கள் கதை; கடற்கரை கிறிஸ்தவ மக்கள் அற வாழ்க்கையும் , மாண்பும் அப்படியா கெட்டு சீரழிது போய் விட்டதுஅதில் பாதிரியை குறை சொல்லும் நோக்கத்தில் தன் இனப் பெண்களின் கொச்சையான உருவம் காலாகாலத்திற்கு பதியப்படும் அவலம்.

இத்தனை குற்றம் குறைகளை போகிற போக்கில் எழுதி விட்டு, பக்கம் பக்கமாக கிறிஸ்தவ ஜெபங்களும் எழுதப்பட்டுள்ளது.  கத்தோலிக்கத்திலுள்ள சடங்குகளை எதிர்க்கும் கதை சொல்லிக்கு,  தாய் மதத்தில் இருக்கும் மமதையில் அங்குள்ள வணக்கங்கள் எல்லாமே சரியாக மேன்மை பொருந்தியதாக தெரிகிறது.

போகிற போக்கில் அல்லேலூயா கிறிச்தவம் செய்யும் ஆட் சேர்ப்பையும் பிஜேபி ஆட் சேர்ப்பு கொள்கையையும் பொருத்தி பார்ப்பதாக தெரிகிறது. அப்படி 12 வது அத்தியாயம் வரை சொல்லிய அத்தனை வசவுகளுக்கும் பிராச்சித்தம் என்பது போல 13 வது அத்தியாயத்தில் லயோலா கல்லூரி அதிபரை புகழ்ந்து, முடித்து உள்ளார் கதை ஆசிரியர்.  

 

கொற்கை புத்தகத்தில் பாதியார்களை  பற்றி எதிர்மறையாக எழுதியதில் வருத்தம் இல்லையா என்று லயோலா கல்லூரி பாதியாரிடம்,  வினவி தனது ஆன்ம திருப்பதிக்குள் நகர்கிறார் கதை சொல்லி.13 ஆம் அத்தியாயத்தில்  இருந்து அவன் என்று வளர்ந்த வந்த பிராதன கதாப்பாத்திரம் அவராக மாறுகிறது.  தனது மக்களின் வாழ்க்கையை எழுதுவது தனது சமுதாய பணி என்று பெருமைப்பட்டும் கொள்கிறது. கடற்கரை மக்களின் வாழ்க்கையிலுள்ள சுவாரசியம் எதுவும் தெரிந்து கொள்ள இயலாது. கதை சொல்லி கடற்கரை மக்களுக்கு மெசிகாவாக பிறந்து இனி அம்மக்களை உயிர்க்க செய்வது மாதிரியான தொனியில் தான் கதை நகர்கிறது.

பின் எழுத்தாளரின் கோபம்,  தனது முன்னைய புத்தகங்களை பற்றி விமர்சித்தவர்கள் பக்கம் திரும்புகிறது.  அடுத்த அத்தியாயத்தில் கதை சொல்லியின் கோபம் தன் எழுத்தை விமர்சித்த நண்பன் மேல் பாய்கிறது. 1 7 வது அத்தியாயம் முதல் கதை குடும்பம்,  தனது பெற்றோர் மனைவி குழந்தைகள் என செல்கிறது.

குழந்தைகளை கல்விச் சாலைகளில் சேர்வதற்காக கத்தோலிக்க முறைப்படி ஞானஸ்தானம் கொடுத்ததாக சொல்கிறார் கதை சொல்லி. ஒரு பக்கம் கத்தோலிக்க தலைமையை கத்தோலிக்கத்தை வெறுப்பதும் தன் குழந்தைகள் கல்விக்காக கத்தோலிக்கத்தை சார்ந்து இருப்பதின் தார்மீகம் தெரியவில்லை. இதில் தன் பிழைப்புவாதத்தை தான் முன் வைக்கிறார். அடுத்து மகன் பற்றி கதை செல்கிறது. தனிமை விரும்பியான கதை ஆசிரியர்  குடில் வாழ்க்கைக்குள் நுழைகிறார். 

 

அதன் பின் நண்பனுக்கும் தனக்குமான உறவு, நண்பன் தம்பி தற்கொலை அதை பற்றிய கருத்து, அடுத்து தாயின் பிரிவு, தாய்க்கும் தகப்பனுக்கும் இருந்த உறவு, தாயின் அடக்கத்திற்கு வராத தம்பியை பற்றி. இப்படியாக  முழுமையை நோக்கிய முற்று பெறாத சிந்தனையின் தொகுப்பே இப்புத்தகம்.

 

மறுபடியும் திரும்பி பார்த்தேன் நாவலா? ஆம் நாவல் என்று தான் எழுதி உள்ளது. சுயசரிதம் என்று எழுதியிருந்தால் ஒரு மனிதரின்  மன விசாரணையை வாசித்தோம்,  ஒரு ஆன்மாவின் கேவலை கேட்டோம் என ஆறுதல் கொண்டு இருக்கலாம்.

 

யாத்திரை என்பதை விட பிரார்த்தனை என்பதே பொருத்தமாக இருந்து இருக்கும்.  எழுதியவர் தான் எழுதியது நாவல் என்கிற போது  வாசிப்பவர் ஏற்காது இருக்க  இயலுமா? யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சாகித்ய அக்காதமி விருது பெற்ற ஒரு எழுத்தாளரின் சற்று சறுக்கலான நாவலாகவே இதை காண்கிறேன்.