12 Jul 2022

விதவைகளின் துயர் நீங்கியதா?

 

         


  உலகெங்கிலும், வாழும் சமூகத்தின் நம்பிக்கையின்படி கணவரை இழந்த பெண்களை வித்தியாசமாக அவலனிலையில்  நடத்தத்துகின்றனர். இவர்களை விதவைகள் என பொதுவாக அழைக்கின்றனர். விதவை என்ற வார்த்தை சம்ஸ்கிருதம் மொழியிலுள்ள வித்வா என்ற வார்த்தையில் இருந்து வருகிறது. இதன் பொருள் புரக்கணிக்கப்பட்டவர்கள் என்பதாகும்.  இந்தியாவில், இன்னும் மோசமாக நடத்தப்படுகின்றனர்.   மாமியார், உறவினர்கள் மற்றும் தன் சொந்த குழந்தைகள்  போன்ற குடும்ப உறுப்பினர்களால் பாதிப்பிற்கும் உள்ளாகும் இழிய நிலையில் பல பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தில் துரதிர்ஷ்டவசமான நபராக கருதப்படுகிறவர்கள்  விதவைகள்   தான். துக்க சடங்குகள் என்ற பெயரில் உடைகளில் கட்டுப்பாடு, அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்த தடை,  வளையல் அல்லது மூக்குத்தி, பூ, குங்குமம் மற்றும் நகைகள் அணிய தடை,  திருமணம் போன்ற சமூகக் கூட்டங்களைத் தவிர்க்க செய்தல், கோயில்களில் அனுமதிக்காது இருப்பது என பல பல பிரச்சினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும்  எதிர்கொள்ளும் சூழலில் தான் தற்போதும் உள்ளனர்.

 

விதவைகள் ஒரு துறவியைப் போல வாழ்க்கையை வாழ வேண்டும்,  புதிய ஆடை, நல்ல உணவு, பண்டிகைகளை புறக்கணித்தல் போன்ற  சமூக  ஒடுக்குமுறையில் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர்.

 

1829 இல் வில்லியம் பென்டிங்க் பிரபு என்பவரால் சதி வழக்கம் ஒழிக்கப்பட்டது. அதன் பிற்பாடு  ஜூலை 16, 1856 ல்  விதவைகளின் மறுமணச் சட்டம், இயற்றப்பட்டது. இந்த சட்டம்  விதவைகளின் மேம்பாட்டுக்கான  ஒரு சமூக சீர்திருத்தமாகும் ஒரு பெண் தனது முதல் திருமணத்தின் போது இருந்த அனைத்து உரிமைகளையும் பெறச் செய்தது இச்சட்டம்.  இச்சட்டம்  பணக்கார இந்து குடும்பங்களில் நடைமுறையில் இருந்த  மறுமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. விதவை மறுமணம் என்பது தாழ்த்தப்பட்ட அல்லது ஏழை மக்களிடையே பரவலாக இருந்ததையும் மனதில் கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் விதவைகளுக்கு திருமணம் செய்ய  போகும்  ஆண்களிடம் இருந்து  சட்டப்பூர்வ பாதுகாப்பையும் உறுதி செய்தது.

 

19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஏற்பட்ட முக்கிய சமூக மாற்றங்களில் முன்னோடியாக விளங்கிய ஒன்றாகும்.  பெண்களின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க இதுபோன்ற பல சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஆம் ஆண்டிலும் விதவைகளின் துயர் நீங்கியதா என்றால் இல்லை என்பதே உண்மை.

 

விதவையின் நிலை



2010 துவங்கி சர்வதேச, விதவைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிந்து, உதவவும், அவர்கள் பாதுகாப்பை  உறுதி செய்யும் நோக்கில்  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப் பட்ட தினமாகும் விதவைகள் தினமான டிசம்பர் 21.   இந்தியாவில்  40 முதல் 55 மில்லியன் பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்ந்து வருகிறதாக  கணக்கெடுக்க பட்டுள்ளது.

விதவைகள் மறுமணச் சட்டம் 1956, சொத்தில் பெண்களுக்கு  சமமான பங்கைப் பெற அனுமதித்தாலும், விதவைப் பெண்கள் கணவர் வழி சொத்து உரிமைகளை பெற  சட்ட உரிமைகள் பெறாத நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.  வாழ்க்கை ஆதாரத்திற்கான  பணமில்லாமல், ஒரு விதவை தனித்து விடப்படுகிறாள், அவள் தன் தந்தைவழி வீட்டிற்கும்   திரும்ப அனுமதிக்கப்படுவதில்லை.

 

”விருந்தாவனத்தில் விதவைகள் ஹோலி கொண்டாடுவதை வரவேற்கிறோம்” என சமீபத்தில் கேட்ட குரல்  "விதவைகள் நிலை இன்றும் மாறவில்லை என்பதையே குறிக்கிறது.

 

இந்தியாவின் புனித நகரம் என்று அழைக்கப் பட்டிருந்த விருந்தாவனம் இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. நகரத்தில் 4,000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஏறக்குறைய 60,000 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இந்த நகரத்தில் 20,000 விதவைகள் வாழ்கின்றனர் என்று கணக்குகள் சொல்கிறது. தற்போது விருந்தாவனம் 'விதவைகளின் நகரம்'என்ற பெயரில் மாறியுள்ளது. குடும்பத்தால் கைவிடப்பட்ட  ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த  நகரத்தில் வறுமையில் பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்து வருவதை காணலாம். வறிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட  விதவைகள் தங்கள் மரணம் வரை வாழும் இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் நெருக்கடியான குடியிருப்புகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது பிருந்தாவன்.

அனைவருக்கும் கவுரவமான வாழ்க்கை அடிப்படை உரிமை என்று கூறியுள்ள அரசியல் அமைப்பு கொண்ட நாட்டில் தான்  விதவைளுக்கான தனி ஊரும் அமைத்து வைத்துள்ளனர்.  பல ஆண்டுகளாக இந்த விதவைகளில் பெரும்பாலோர் வறுமை மற்றும் தனிமையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மூடநம்பிக்கை கொண்ட உறவினர்கள்;  விதவைகள் துரதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும், அவர்களின் கணவர்களின் மரணத்திற்கு காரணமாக  பெண்களைக் குற்றம் சாட்டும் நிலையும் உள்ளது.  வயது முதிர்ந்த நிலையிலும், தனது உணவைத் தாங்களே சமைத்து, வருமானத்திற்கு என  பிச்சை எடுக்கும் நிலையில் தான்  தள்ளப்பட்டுள்ளனர். வாழ்க்கையின் பெரும்பகுதியைச் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

 அனைவருக்கும் கவுரவமான வாழும் உரிமை என்று கூறிய அரசியலமைப்பு சட்டம் இப்பெண்களுக்கு கொடுக்கும் பதில் தான் என்ன?

 

 பிருந்தாவனத்தில் உள்ள பெண்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பிறகு, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் அரசு மற்றும் சிவில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சமூக-பொருளாதார நிலைமைகள் குறித்த தரவுகளை சேகரிக்க உத்தரபிரதேச அரசு இப்போது ஒரு குழுவை நியமித்துள்ளது.

2020 தொகுதிக்கு வருகை தந்த ஹேமா மாலினி, விருந்தாவனத்தில் சுமார் 40,000 விதவைகள் நிரம்பி வழிவதாகவும் தனது தொகுதிக்குள் இனி  விதவைகள் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியதாக விமர்சனங்களுக்கு உள்ளானார். ஹேமாலினியின் கூற்றுப்படி மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் ஏற்கனவே நல்ல கோவில்கள் இருக்கிறது, அவர்கள் அங்கு  தங்கலாம் என்றும் மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் இருந்து  மதுராவில் வரும் விதவைகளின் வருகையை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
 கிருஷ்ணர் பிறந்த ஊரில் இறந்தால் மோட்சம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையே விதவைகளை மதுரா விருந்தாவனுக்கு கொண்டு சொல்லப்படுகிறது.

 

இந்தியாவில் விதவைகளுக்கு ஆன சட்டங்கள் இருப்பினும் அதை நடைமுறைப்படுத்தும் சமூக சூழலும் இல்லை;   இதை  சிறப்பாக முன்னெடுக்க நேர்மையான அரசு அதிகாரிகளும் இல்லை.  
 
ஹேமாலினி போன்ற ஒரு பெண் சட்ட மன்ற உறுப்பினரால் விதவைகளை, குடும்பங்கள் புரக்கணிக்க கூடாது என்று சொல்லக்கூடிய அறிவு இல்லை, அரசு உதவிகளை உயர்த்த வேண்டிய தேவையை பற்றி சொல்லவில்லை. புரக்கணிக்க பட்ட பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசின் கடமைகளை பற்றி எடுத்து சொல்லாது, அதற்கு பதில் நாடு எங்குமுள்ள கோயில்களில் விதவைகளுக்கு அடக்கலம் கொடுக்க பணிகிறார். 
 விதவை என்ற வார்த்தையை கைபெண் என்று மாற்றுவதாலும் விதவைகளுக்கு எந்த நலனும் கிடைக்கபோவதில்லை. விதவை பெண்கள் பாதுக்கப்புக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசின் பக்கம் இருந்து வருவது மிகவும் அவசியம். வேலை வாய்ப்புகளில் தொழில் புரிய முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். வெளிநாடுகளில் என்பது போல கணவன் இறந்தால் சொத்தின் பங்கு மனைவிக்கு வந்தடைய எளியசட்ட முறைகள் அவசியம்.  பெண்கள் சுயசார்பாக நிற்கும் வரை எந்த முன்னேற்றவும் பெண்கள் வாழ்க்கையில் வரப்போவதில்லை. 
விதவை, கைபெண் என்ற வார்த்தை-மாற்ற மாஜிக்குகளில் நம்பாது தங்கள் பார்வையிலும் மனநிலையிலும் உருவாகும் மாற்றங்கள் ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் சுயசார்பான வாழ்க்கை முறைகள் மட்டுமே சமூக அவலங்களில் இருந்து காப்பாற்ற வலுவானது. 
http://www.francescabraghetta.com/en/2018/03/04/la-citta-delle-vedove/
https://www.inuth.com/india/international-widows-day-the-city-of-widows-in-india/
 

 

 

 

 

 

 

"பாதிக்கப்பட்ட மனநிலை" கொண்ட பெண்கள்

 


அப்தேக்கர் அன்றைய பெண்களுக்கு சொன்ன ஒரு அறிவுரையை இப்போதும் கவனிக்க  வேண்டியதும்   அதை செயல்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளோம். அப்தேக்கர் கருத்துப்படி   ” தாங்கள் முன்னேறிவிட்டோம் என்பதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் முதலில் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்கிறார் .

 

பெண்கள் நேர்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறும் அப்தேக்கர். பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி  மட்டுமல்ல அவர்கள் மனதில் லட்சியத்தையும் விதைக்க வேண்டும் என்கிறார். குழந்தைகள் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி, உயர்ந்த இடத்தில் எட்ட வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில்  பதியவைக்க சொல்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும்,  அதன் பெற்றோரைக் காட்டிலும் சிறந்த தொடக்கத்தைக் கொடுப்பதில் பெற்றோரின் கடமை உள்ளது என்கிறார்.

 

இன்றைய பெரும் பிரச்சினையை குழந்தைகள் மனப்பான்மை மற்றும்  மன எண்ணத்தை பெற்றோர்கள் எப்படி வளர்க்கிறார்கள் என்பதே.   இநிலையில் பெண்களுக்கு அப்தேக்கர் கொடுக்கும் அறிவுரை மிகவும் தேவையானதாக உள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி  நம்பிக்கையும் மகிழ்ச்சியும் விதைப்பது? அடுத்து தாழ்வு மனப்பான்மையை களையச் செய்து  தங்களால் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று குழந்தைகள் மனதில் பதிய வைப்பது எவ்வாறு ?;  என்றும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக  உள்ளது. 

பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை விட பக்கத்து விட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு;  வளரும் குழந்தைகளின் மகிழ்சியை மட்டுமல்ல அவர்கள் நம்பிக்கை எனும்  சிறகுகளையும் ஒடித்து பறக்க விடாது செய்து விடுகின்றனர். இந்த பெண்கள் மனப் பான்மையின் உறவிடம் எங்கிருந்து என ஆராயும் போது பெண்கள் வளர்ந்த சூழல், சமூக கட்டமைப்பு நினைவிற்கு வருகிறது. 

பெண்கள் விடுதலை, வளர்ச்சி, மேம்பாடு  என்பதை பற்றி உரையாடும் போது பெண்கள் மனப்பான்மையும் தங்கள் வளர்ச்சிக்கு எவ்விதம்  தடங்கலாக இருக்கிறதையும்  அவதானிக்க வேண்டியது அவசியமாகும்


பொதுவாக ஊடகவும் இன்றைய சமூகவும் பெண்களை ஒரு விக்டிம் அதாவது ஒரு பாதிக்கப்பட்டவர், பாதிக்கப்பட கூடியவர், வலுவற்றவர், என்ற நிலையில் கட்டமைத்து வைத்து உள்ளது.  இதில் சினிமா மற்றும் இலக்கியங்களின் பங்கும் சிறிது அல்ல. பல திரைப்படம் மற்றும் புனைவுகளில்  பெண்கள் பாதிக்கப்படுவதையை எழுதி பிரபல்யம் தேடிக்கொள்கின்றனர்.  வெகு ஜென ஊடகங்களிலும் பெண்களை பற்றிய வெற்றி செய்திகளை விட பெண்கள் பாதிப்படைந்த  சம்பவங்களைத் தான் பிரதான செய்தியாக கொடுத்து வருகின்றனர். இதில் சில இசங்களும் அதன் கருத்துக்களும் பெண்கள் மேம்பாட்டு என்பதை பெண்களின் தனித்துவமான செயல்பாடுகளை முன் நிறுத்த மறந்து விட்டது.

 தீவிரப் பெண்ணியம் Radical feminism கருத்துப்படி பெண்ணின் எல்லா பிரச்சினைக்கும் காரணம்  சமூகத்தின் கட்டமைப்பு என்கிற போது  மார்க்சிஸ்ட் பெண்ணியம் முதலாளித்துவ அமைப்புகளை அகற்றுவதன் மூலம் மட்டுமே பெண்களின் விடுதலையை அடைய முடியும் என்கிறது. இதுபோன்ற இசங்களை தீவிரமாக நம்பும் பெண்கள் தங்கள் மனநிலையில் கொண்டு வரவேண்டிய மாற்றங்களை பற்றி சிந்திப்பது இல்லை.

 

தொடர்ந்து பெண்கள்  விளிம்பு நிலையில் நிறுத்தப் பட்டுள்ளதால் பெண்கள்   வெற்றிப் பெற்ற (victorious) மனப்பான்மையை இழந்து பாதிக்கப்பட்ட (விக்டிம்) மனப்பான்மை என்ற நிலையில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

 

பாதிக்கப்பட்ட மனப்பான்மை என்பது ஒரு வகையான  நோய்க்குறி . ஆனால் இது ஒரு மரபுவழி நோய் அல்ல; மாறாக, வாழ்க்கை பாதையில் பெண்களே  கற்று கொள்ளும் அல்லது பலியாகி போகும் சூழல் தான் இது.  பாதிக்கப்பட்ட மன நிலையில்( victim)உள்ளவர்கள்  எப்போழுதும் தங்கள் வாழ்க்கையை  குற்றம்  கூறிக் கொண்டு இருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  தங்களுக்கு ஏற்பட்ட  எல்லா தோல்விகளுக்கும் துன்பங்களுக்கும்  மற்றவர்களே காரணம் என்று  குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மனப்பான்மை கொண்டவர்கள் தங்களுக்கு மட்டுமே கெட்ட விஷயங்கள் தொடர்ந்து நடப்பதாகவும், உலகமே அவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் நம்பி  கொள்கிறார்கள்.  அதே போல  தாங்களாகவே குழப்பமான மனநிலையால்  பல பிரச்சினைகளில் பிணைக்கப்படுகிறனர், இது மேலும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் சூழலை தடுத்து மேலும் பெண்களை பிரச்சினைக்குள் வைக்கிறது .

 

பாதிக்கப்பட்ட மனநிலை கொண்டவர்கள் பொதுவாக  மூன்று நம்பிக்கைகளைக் தீர்க்கமாக நம்புகின்றனர்:

 

1) தனக்கு கடந்த காலங்களில் நடந்துள்ள மோசமான விடயங்கள் இனியும்   தொடர்ந்துநடக்கும்.

2)    என்  துரதிர்ஷ்டத்திற்கு காரணம் மற்றவர்களே.

3) எந்த மாற்றவும் என் வாழ்க்கையில் நடக்க போவதில்லை, எந்த  முயற்சி எடுப்பதிலும் பலனில்லை என்ற எதிர்மறை மனநிலையில் மூழ்குவதை கண்டு கொள்ளலாம்.

பாதிக்கப்பட்ட மனநிலையின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று, தொடர்ந்து சுயமாக அழிக்க முற்படுகின்றனர் . ஒரு பாதிக்கப் பட்டவர்களின் தற்போதைய சூழ்நிலைக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டுகிறனர்.

அழகுமித்ரன் நாடகங்கள்- ஊசலாடும் உள்ளங்கள் மற்றும் சுகமான சுமைகள்’

 

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி பிறப்பிடமாக கொண்ட அழகு மித்ரன் இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர். நாடகம், கவிதைகள், கதைகள் எழுதி வருபவர்.  ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார்.  தற்போது வனத்துறையில் பணியாற்றி வருகிறார். இப்புத்தகம்  உரிமை ஆசிரியரிடமே உள்ளது. நாடகம் எழுத்து மேல் பாரிய பார்வை இல்லாத வேளையில் தனது எழுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள  நாடகத்தை புத்தகமகா வெளியிட்டு உள்ளார்.

 

ஊசலாடும் உள்ளங்கள்

ஊரில் பணக்காரரான பரசுராமன் உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த மனிதர். இவருக்கு மகன் பஞ்சவர்ணம் மற்றும் மகள் மித்திரா  உள்ளனர். மகள் மித்ரா ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறாள். பஞ்ச வர்ணம் அப்பாவின் உழைப்பில் வாழும் ஊதாரி மகன்.

காத்தமுத்து பரசுராமனின் தங்கை மகன். காலில் ஊனம் உள்ள காத்தமுத்து தனது மாமா வீட்டில் வளர்கிறான். பஞ்சவர்ணத்தின் எடுபிடியாக காலத்தை ஓட்டி வருகிறான். தனது மாமா மகள் மித்ராவை திருமணம் செய்யும் ஆசையில் உள்ளான்.

இக்கிராமத்திலுள்ள ஏழை செல்வம் வேலை கிடைத்து வெளிநாடு  செல்ல இருந்த இருந்த  நிலையில், தனது அக்காள் சுதந்திராவின் பாதுகாப்பை கருதி பரசுராமன் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டு செல்கிறான். அங்கு சுதந்திராவிற்கு பஞ்சவர்ணம் மேல் காதல் வருகிறது. கல்யாணம் முடித்த கையோடு மாமனார் மற்றும் மித்ராயை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள்.

இன்னிலையில் மித்ரா காதலித்து வந்த சூரியாவும் கைவிட்டு விடுகிறான். வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பின செல்வத்திற்கு தனது அக்கா செயல் ஆத்திரத்தை மூட்டுகிறது. செல்வம் தனது அத்தானுக்கு தைரியம் கொடுத்து அடாவடியான தனது அக்காவையே கொலை செய்ய துணிகிறான். அத்துடன் சுதந்திரா திருந்தி நல்ல மருமகளாக வாழ ஆரம்பிக்கிறாள்.  செல்வம் மித்திராவை திருமணம் செய்ய வாய்ப்பு இருந்தும், காத்தமுத்து காதலிக்கும் பெண் என அறிந்ததும் விலகி நிற்கிறான்.  ஆசைப்பட்டது மாதிரி காத்தமுத்து மித்ராவை திருமணம் செய்து கொள்கிறான்.  

 

அடுத்த கதை ’சுகமான சுமைகள்’.

இது கிறிஸ்தவ பின்புலம் கொண்ட கதை. அலெக்ஸ் ரோசி ஒரு கிறிஸ்தவ தம்பதிகள் ஆவர். அடாவடியான ரோசிக்கு முரடனான ஜோசப் என்ற சகோதரன் உள்ளான். அவனுக்கு அலெக்சின் தங்கை மேரியை திருமணம் செய்ய ஆசை. ஆனால் மேரிக்கோ சேவியர் மேல் காதல். சேவியர் பாதிரியார் பாதுகாப்பில் வளர்ந்த பெற்றோர் அற்றவன். தனது அண்ணன் அலெஸ், ஜோசப்பை தனக்கு வரனாக தேர்ந்தெடுத்த நிலையில் சேவியருடன் தலைமறைவாகி விடுகிறாள் மேரி.

பின்பு சேவியருக்கு மருத்துவ உதவிக்கு தனது அண்ணனை நாடுகிறாள். அண்ணன் தனது தங்கைக்கு உதவ முன் வருகிறான்.

ஜோசப்புக்கு நண்பனாக எடுபிடியாக கால் முடமான வேலப்பன் உள்ளான். வேலப்பன்  திருந்தி வாழ, ராஜேஷ் என்பவனை கொலை செய்த ஜோசப் ஜெயிலுக்கு போவதுடன் கதை முடிகிறது.

இரு கதைகளும் கதை துவக்கம், சம்பவங்கள் முடிவு என நேர்பாதையில் பயணிக்கிறது. இரு நாடகங்களும் குடும்ப கதைகள். இரு நாடகத்திலும் மருமகளாக வந்த பெண்கள் கொடூர பெண்களாக உள்ளனர். இரு நாடகத்திலும், கால் முடவு உள்ள நபர்கள் எடுபிடிகளாக உள்ளனர். இரு நாடகத்திலும் அவசரப்பட்டு காதலில் விழும் பெண்கள் உள்ளனர்.

சுவாரசியமாக வாசகர்களை வாசிக்க வைத்து செல்கிறது நாடகம்.  இரு நாடகமும் 19 ஆம் நூற்றாண்டு ஆணாதிக்க சமூக கட்டுப்பாடு பாணியில் உள்ளது.

பெண்கள் தங்களுக்கு தகுதியற்ற நபர்களை காதலிப்பது, காதலிப்பவன் கிடைக்காவிடில் சாகப்போறேன் என சொல்லும் உரையாடல்கள் காலத்தால் புறம் தள்ளக்கூடியவை.

ஆண் அடிப்படைவாதம் போலவே நாடகம் முழுதும் பெண்கள் அடாவடித்தனம் சொல்லபட்டுள்ளது. ஆண்கள் தங்கள் நிலையை மறந்து பெண்களுக்கு அடிமைகைளாக கையாலாகாத நிலையில் உள்ளது இரு கதையிலும் பொதுவாக உள்ளது.

நாடகம் எழுத விளைபவர்களுக்கு, உரையாடல் அமைக்க விரும்புகிறவர்கள் வாசித்து பலக வேண்டிய புத்தகமாக இருக்கும். சில தமிழ் சொல்லாடலை, பழமொழிகளை தாங்கி நிற்கும் புத்தகம் இரண்டும்.

இரு புத்தகங்களும் அமேசோனில் கிடைக்கிறது. amazon


10 Jul 2022

பண்ணையில் ஒரு மிருகம்

 


காலச்சுவடு பதிப்பகம் ஊடாக வெளிவந்த புத்தகம் ஆகும் ’’பண்ணையில் ஒரு மிருகம்”. கால் நடை பண்ணையில் வேலைபார்த்து போது முகம் கொடுத்த  சொந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நூல் என்று முன்னுரையில்  குறிப்பிட்டு உள்ளார் எழுத்தாளர்.

இலங்கை தீவைச்சேர்ந்த கால் நடை மருத்துவரான நோயல் நடேசன் காஞ்சிபுரம் அடுத்த ஒரு கிராமத்தில் ஒரு  பண்ணையில் மேற்பார்வையாளராக வேலைக்கு வந்து சேர்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. ஒரு மிருக மருத்துவராக இருந்தும் இலங்கையை சேர்ந்தவர் என்பதால்; ஒரு மருத்துவராக  பணி செய்ய சட்டச் சிக்கல்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.

எழுத்தாளார் வேலைக்கு சேரும் முன் தமிழகத்தை சேர்ந்த இன்னொரு மருத்துவர்,  அங்கு வேலை பார்த்து வந்ததும் கற்பகம் என்ற பெண்ணின் தற்கொலைக்கு காரணமாகி வேலையை விட்டு விரட்டப்பட்டதையும் அறிகிறார். டாக்டர் மனம் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பிக்கிறது. பிற்பாடு அங்கு வேலை செய்யும் மேஸ்திரி, ராமசாமி, ராணி, அன்பரசி,கிருஷ்ணன் போன்ற கதாப்பாத்திரங்கள் வழியாக பண்ணையில் நடக்கும் சம்பவங்களை தெரிந்து வருகிறார். இத்துடன் பண்ணையில் தற்கொலை செய்து கொண்ட மூக்குத்தி அணிந்த வெங்காய நிற சேலைக்காரி கற்பகம் மருத்துவரிடம் தன் கதையை சொல்ல ஆரம்பிப்பதுடன் கதை சுவாரசியாமாக நகர்கிறது. கனவா நினைவா என்று சந்தேகிக்கும் வண்ணம் பேய்க் கதைகளுடன் வாசகர்களும் திகிலுடன் பண்ணையில் டாக்டருடன் பயணிக்கிறோம்.


பண்ணையை  தளமாக கொண்டு எழுதப்பட்ட இக்கதையில் எழுத்தாளர் ஓர் மருத்துவர் என்பதால்  மிருங்களை  பற்றிய உயிர் அறிவியல், தமிழகத்தில் நிலவும் ஜாதி  வாழ்க்கை., ஜாதி மாறி திருமணம் செய்த சொந்த மகள் கணவரையே கொலை செய்த கார்மேகம் போன்றவர்களை கதாப்பாத்திரங்களை உலாவ விட்டுள்ளார். பொதுவாக ஆண் பிள்ளைகள் துஷ்பிரோயகம் ஆவதை கவனித்துக் கொள்ளாத தமிழக சமூக சூழலில் குறிப்பாக பண்ணையில் பாலியல் துஷ்ப் பிரோயத்திற்கு உள்ளாகும் சிறுவர்கள் கதையை  கதையின் போக்கில் ஒரு முக்கிய புள்ளியாக கொண்டு வந்துள்ளது சிறப்பாகும்

 

பெண்கள் குடும்ப சூழலாலும், மாமியார் மற்றும் கணவரால் துன்புறுத்தப் படுவது, மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இவைகளை பற்றியும் சொல்லியுள்ளார்.

கிராமத்து மக்கள் என்றாலே வெகிளியானவர்கள், நல்லவர்கள் என்று பலரும் எழுதி வரும் தமிழ் இலக்கிய சூழலில், கிராமத்து மக்கள் மனதில் குடிகொள்ளும் வன்மம், குறுக்கு சிந்தனைகள், தவறை அறிந்தும் துணிவாக செய்யும் முரட்டுத் தனம் போன்றவையையும் கதையில் கொண்டு வந்துள்ளார் டாக்டர்.

ஒரு கட்டத்தில் கருப்பையா தான் கற்பகம் மரணத்தின் காரணம் என்று தெரிய வருவதும் இத்தனை கொடியவன் உடன்  பண்ணையில் வேலை செய்ய பிடிக்காது வேலையை விட முடிவு செய்கிறார்.

கல்வி கற்றோர் என்றாலும் அகதிகளாக ஒரு நாட்டில் வாழும் போது என்னென்ன சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை அறிய இயல்கிறது.  பண்ணை முதலாளிகளின் மனபான்மை, மருத்துவர் வாசிக்கும் காரல்மார்க்ஸ் புத்தகத்தை ஒளித்து வைக்கும் கறுப்பையாவின் வன்மம் என இயல்பாக கதை  செல்கிறது..

கிராமத்தில் மக்களுக்கு ஒரு தோழராக  இருந்து தன் பணியை  திறம்பட செய்வது, பண்ணை மக்களை அன்பாக வேலை வாங்குவது, பண்ணை ஆட்களுடன் சினிமாவிற்கு செல்வது, எளிய மனிதர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க வீடு வரை செல்வது  என டாக்டர் கதாப்பாத்திரம் மனித நேயத்தின் உச்சம் தொடுகிறது.

 

கணவன் கொல்லப்பட கணவன் கொடுத்த ஆடு வளர்ப்புமாக வாழும்  கமலம் மேல் டாக்டருக்கு அளவு கடந்த பரிவு இருந்தும் கமலத்தை ஒற்றை கட்டையாகவே  கதையில் விட்டு சென்றது கொஞ்சம் பிற்போக்கு தனம் என்று தோன்றியது. பேய் கற்பகம் மற்றும் டாக்டர் உரையாடல்கள் கதையை சுவாரசியமாக நகத்தி சென்றது. கறுப்பையா பின் பக்கம் குத்து பட்டு கிணற்றில் விழுந்து இறந்த முடிவு; தவறு -தண்டனை என்ற காலாகாலத்து கதையோடு ஒத்து போகிறது.

 

சுருக்கமாக கதையாளரின் கதை சொல்லும் பாங்கு கதையை வாசித்து முடிக்கும் மட்டும் வாசகனை விருவிருப்பாக வைத்து இருந்தது என்றால் மிகை அல்ல.

கிருஷ்ண கோபாலின் செவலை சாத்தா'!

 


புலம் பதிப்பகம் ஊடாக வந்த 'செவலை சாத்தா'  எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் முதல் நாவல் ஆகும்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சுப . உதயகுமாரன் முன்னுரை வழங்கி உள்ளார்.

 

பங்குனி திருவிழாவிற்கு  என சாத்தா கோயிலுக்கு ஏழு ஆண்கள் மற்றும்  இரண்டு பெண்கள் நடை  பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் கதையும் ஆரம்பிக்கிறது.  25 வயது நிரம்பிய முதுகலை பட்டதாரி முருகன், அதே வயதுள்ள கிராமத்தான் அப்பாவு, பெருமாள், சாமியாடி அவர் மனைவி என ஒன்பது பேர் நடைபயணத்தில்  சோர்வு தெரியாது இருக்க பேசிக் கொண்டே செல்கின்றனர். இவர்கள் பேச்சின் பொருள் இட்லி டப்பா என்று அழைக்கப்படும்  அணு உலையை பற்றிய பேச்சாக இருக்கிறது. கோயிலுக்கு போய் சேர்ந்து சாமி கும்பிடுகையில் சாமியாடி மக்கள் ஊர் விட்டு போக உள்ளதாக கணியம் சொல்கிறார். கலங்கிப் போய் மாறி மாறி விவாதங்கள் செய்து கொண்டு சிலர் உலையை ஆதரித்தும் சிலர் அதை எதிர்த்தும் வீடு திரும்புகிறனர்.

 

குமரிக்கோடு-முக்குவிளை என்ற தலைப்பை  கொண்ட கதையை வாசிக்க தொடரும் வாசகர்கள் பின்பு  ஆலையை விட்டு யாக்கியாம்பரம் பண்ணையார், ஜெர்சி மாடுகள், யாக்கியாம்பரம் அனுபவிக்கும் பரம்பரைச் சொத்து என்ற சீற்றத்துடன்  சீனாக் கோழி,பிராயிலர் கோழி என  பொன்னம்மை நாடாச்சி  சாப்பிடும் கோதுமைப் புட்டு கதைக்கு   வந்தடைகிறோம்.

 

இதுவரை கதைசொல்லி தூரத்தில் இருந்து  மூன்றாம் நபர் பார்வையில்  கதாப்பாத்திரங்களை  நகத்துகிறார். பிற்பாடு  பிரபா என்ற பத்தாம் வகுப்பு மாணவி கதாப்பாத்திரம் பார்வையில் நகர ஆரம்பிக்கிறது.

சித்திக்கு துணையாக கேன்சர் மருத்துவமனையில் இருக்கும் பிரபா, தன் வறுமையால் இயல்பான குழந்தைப்பருவத்தை இழந்து தன்னுடைய படிப்பு செலவிற்காக   வேலை செய்ய வேண்டிய இடத்தில் நிற்கிறாள். அத்துடன்  கேன்சர் நோயின் கொடிய சூழலை ஓரிரு வரியில் விவரித்து விட்டு  போராளி மருதன் கதாப்பாத்திரம் வருகிறது. மருதன் என்ற கதாப்பாத்திரம்  சுப உதயகுமாரன் என்பது தீர்க்கமாக விளங்குகிறது.

போராட்டம், சொற்பொழிவு, மறைந்த பெண் முதல்வரை ஒருமையில் திட்டும் உரைகளுடன் கதை சீற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. உலையை ஆதரிக்கும் செல்லப்பாண்டி, துரை பாண்டி போன்ற கதாப்பாத்திரங்கள், போராட்ட குழுவின்  மருதன் -ஆண்டணி கோஷ்டி பிரிவு என கதையை எட்டுகிறோம்.

 

10 ஆம் வகுப்பு படித்து வந்த பிரபாவும்  இப்போது கல்லூரி படிப்பை முடித்து ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறாள். பல மனிதர்கள் இயல்புக்கு மீறின பருமன், உடலில் ஊறல் என பல பல புது வியாதிகளுக்கு மருந்து வாங்க வந்து போகிறதை பிரபா கவனிக்கிறாள். போராட்டங்களில் மக்களின் உரிமை நலனுக்காக சொற்பொழிவு ஆற்றி வரும் பேச்சாளராக வளர்கிறாள் பிரபா. போலிஸ்காரர்கள் விபத்து  மாரணத்தை கேள்விப் பட்டதும் பிரபா என்ற கதாப்பாத்திரம் நெஞ்சுக்குள் சந்தோஷச் குறுகுறுப்பு ஓடி மறைந்தது என்று குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர்.

 

யாக்கியாம்பரத்தின் மகள் லோலாயி அம்முவின் திருமணம் அணு உலையில் வேலை பார்க்கிற இஞ்சினியருடன் ஆடம்பரமாக நடக்கிறது.

அடுத்து சில பக்கங்கள் ஸ்ரெர்லைட் சம்பவங்கள், போராட்டம், துப்பாக்கி சூடு என செல்கிறது.  அடுத்து அணு உலை உடைந்து பாதிக்கப்பட்ட  குமரிக்கோடு, தமிழர்கள் அடைக்கலம் புகுந்த கேரளக் கோடில் அனுபவிக்கும் துயர் என மாநில வெறுப்பையும் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர்.

 

தனசேகரன் ஊரை விட்டு போவதை சாஸ்தா பாறை மேல் இருந்து பார்ப்பதுடன்  கதை நிறைவு பெறுகிறது.

 

ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையில் துவங்கிய கதை பல பல இயற்கை பிரச்சினையுடன் பயணித்து எங்கும்  ஆழமாக  மனதை தொடாது சம்பவங்களுடன்  பயணிப்பதை சில இடங்களில் காணலாம். அனைத்து விடயங்களும் தினசரியை வாசித்தவர்களால் தெரிந்த சம்பவமே. புதுமையாக அணு உலை உடைந்தால் நடக்கும்  சம்பவங்கள் வருகிறது. அதுவும் செர்னோபிலில் அணு உலை உடைந்த போது மனிதர்கள் எதிர் கொண்ட சம்பவங்களுடன் ஒத்து போகிறதா என்றால் …….அது இல்லை.

 

ஒரு நாவல் என்கிற போது கதைப் பின்னல் ஒரு கருத்தாக்கத்தில் ஊன்றி குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களுடன் நகர்ந்து இருக்க வேண்டும். பல பல சமூகப் பிரச்சினையை ஒரே கதையில் புகுத்திய உக்தி வாசகர்களை திசை தெரியாத படகு மாதிரி மாற்றியது.

ஒரு அணு உலைக்கு பின்னால் இருக்கும் அரசியல், மத தலைமைகளின்  நிலைபாடு மற்றும் தாக்கம், உள்ளூர் மக்கள் மனப்பான்மை, மீனவர்களின் குரல்கள் இந்த நாவல் வழியாக இன்னும் உரத்து  கேட்டு இருக்க வேண்டும். தென் தமிழகம் அத்துடன் சேர்ந்து கேரளம் , இலங்கை பாதிப்படைய உள்ள இயற்கை சூழலை  பற்றி இன்னும் தகவல்கள் முன் வைத்து இருக்கலாம். உலை துவங்கும் காலத்தில் தென் தமிழகத்தில் நிகழ்ந்த ஜாதி மோதல்களுக்கும் ஆலை உருவாக்கத்திற்கும் தொடர்பு இருந்ததா என கதையில் விளக்கியிருக்கலாம்.

அணு உலை போராட்டம் ஒரு பக்கம் நடக்க மக்கள் போராட்டம் என்பதை மருதன் போராட்டமாக சுருங்கி போனதை எவ்விதம் என்பதையும் விளக்கி இருக்க வேண்டும். போராட்டம் வெற்றி பெறாது ஒரு உலை இரண்டாகி இப்போது ஆறு உலைகள் என்றாகி விட்ட நிலையில்,  போராட்ட குழு உடைந்த பின்னனி என்னவாக இருக்கும். கடலோர மக்கள், கடலோடிகள், மற்றும் கடலை சாராத மக்கள், இரு பெரு கிறிச்தவ தலைமையின் கீழ் இருக்கும் மக்கள் கருத்து என்ன, உலை தமிழகத்திற்கு வர காரணமாக இருந்த அரசியல் கட்சி இந்த நாவல் கதைக்குள் வரவில்லை.

 

பாலைக்கோடு பசுமைக்குளம் என்ற அத்தியாயத்தில் நூலகர்

செஞ்சி வச்ச அணுகுண்டு வெடிக்குமா இல்லியான்னு பார்ப்பதற்கு ஜப்பான் மேல் அணுகுண்டு வீசி சோதனை செய்த அமெரிக்கா என்று குறிப்பிடுகிறார். இது உண்மையான வரலாற்றை தங்கள் தேவைக்கு தகுந்து திரிப்பது போல் ஆகாதா?

 

எது எப்படியோ, விருது நூலாசிரியர்கள் பூ, புஷ்பம் , சாத்வீகம், என எழுதி வரும் சூழலில் இது போன்ற சமூக நாவல், மக்கள் நலனில் அக்கறை கொண்ட நாவல் ஒரு எளிய எழுத்தாளரிடம் இருந்து மட்டுமே வந்துள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. நூல் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் பல புத்தகங்கள் தங்கள் எழுத்தில் வர வேண்டும்.