22 Jun 2020

சுபி அக்கா மல்லிகைச் செடி


நேற்று, சுபி அக்கா அனுப்பி தந்தார்கள் ஒரு மல்லிகைச்செடி படத்தை. பின்பு உற்சாகமாகி விட்டேன். செடியை கண்ட மகிழ்ச்சியில் நடை போனேன் , என் கல்லூரித் தோழியை கண்டேன், மகிழ்ச்சியாக துங்க போனேன்
இந்தச் செடிககும் எனக்குமான தொடர்பு 22 வருட கால பழக்கம். பூப்போன்ற மனதுடன் புதுப் பெண்ணாக, மனமெல்லாம் ஆசையுடன் மாமியார் வீடு புகுந்த காலம்.
நினைத்தது போல என்னை காத்துக் கிடக்கவில்லை மாமியார் வீட்டு வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள், விசர்கள்.... ஆனால் என்னை ஒவ்வொரு நாளும் புத்துணர்வாக வைத்தது இந்த மல்லிகைச் செடி தான்.
அது ஒரு காடு,கொடும் வனம். பல மாதங்கள் மழை, பனி தான். யார் நட்டு வைத்த மல்லிகையோ வீட்டு வேலியாக இந்த மல்லியை மூங்கில் கம்புகளால் கட்டி, நல்ல பலமான செடி வேலியாக வைத்திருந்தனர்.
பல மாதங்கள் பூக்கும். அதன் வாசனை ஆகா .....மறக்கவே ஏலாது. வசந்தகாலம் என எழுதிவைத்தது போல் ஊரே பூக்களை பார்த்து பார்த்து போகும்படி இருந்தது..
எனக்கு செடியில் பூவைப் பார்க்கதான் ஆசை. ஆனால் சில எளிய பெண்கள் வந்து "இந்த அம்மாவிற்கு பூக்கள் பிடிக்காது " எனக்கூறி பறித்து செல்வார்கள்.
யாராரோ பறித்து செல்கிறார்களே என்ற ஆதங்கத்தில், நானும் பறித்து பூக் கட்டினாலும்,ஒழுங்காக பூ கட்ட தெரியாததால் பூ நழுவி கீழை விழும் . வாழை நாரு வைத்து, துணி நூல் வைத்தும் கட்டிப்பார்த்தாச்சு. பூவைப் பறித்து ஊசி நூலால் கொருத்தாலும் ஐய்யோ.... அதன் காம்பு என்ன வேதனைப்பட்டிருக்கும் என அதையும் விட்டு விட்டேன்.
அதன் பின் வட்டப்பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பூக்களை அதில் மெதக்கவிட்டு அழகு பார்த்துக்கொண்டு இருந்தேன்.
காலவும் ஓடினது. அந்த ஊரை விட்டு வெளியேற முடிவெடுத்தோம். இயற்கை, மலை, மழை , அருவிகள், என ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த ஊரை விட்டு விரட்டியது உலக மயமாக்கல். 2002 தூத்துக்குடி வந்து சேர்ந்தோம். பனியில் இருந்து தீயில் போட்டது மாதிரி ஆகி விட்டது அடுத்த வாழ்க்கை.
350 கிலோ மீட்டர் பயணித்து தெரியாத ஊர் வந்து சேர்ந்த போது மகனுடன் எடுத்து வந்தது இந்த மல்லிகைச்செடியையும் தான்.
பின்பு 8 வருடத்தில் 12 வாடகை வீடு மாறியிருப்போம். சில வீடுகளில் உப்பு தண்ணீர், சில வீடுகளில் செடி வைக்க இடமில்லை, சில வீடுகளில் செடி வைக்க அனுமதி இல்லை. இருந்தும் இந்தச் செடியும் எங்களுடனே பயணித்தது.
சொந்த வீடு வந்த பின்பு அதற்கும் நிலையான ஒரு இடம் கிடைத்தது. வீட்டுப்பிராணிகள் போன்றே செடிக்கும், அதை வளர்க்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு . சில வருடங்களாக நான் செடியை கவனிக்கவில்லை. பின்பு மறுபடியும் இணைந்துள்ளோம்.
சுபி அக்கா என்னிடம் பெற்றுக் கொள்ளும் ஒரே பொருள் செடி மட்டுமே. அப்படித்தான் இந்த செடியில் இரு கம்புகளை வெட்டி கொடுத்திருந்தேன். 7500 கி.மீ பயணம் செய்து லண்டனை அடைந்தது.
இந்த வெயில் பழகின செடி லண்டனில் வளருமா , பூக்குமா என பல அச்சப்பாடுகள் இருந்தாலும்; அக்கா பூவில்லாத செடியை கூட தனது அன்பால் பூக்க வைத்து விடுவார்கள்.
நேற்று முதல் பூவுடன் செடியின் படத்தை அனுப்பியிருந்தார்கள்.
அக்கா கை பட்டதும் செடி அதன் அழகிலும், நளினத்திலும் பூத்து நிற்பதை கண்டதும் மகிழ்ச்சிக்கு மட்டில்லை.
என் உலகம், பூக்களால் , இலைகளால் நிரம்ப ஆசைப்பட்ட உலகம்.
அக்காவை பற்றி கூறினால் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த கொரோனாக் காலத்தில் , எங்கள் இருவருக்கும் விடுமுறை என்பதால் வாரம் ஒரு முறை கதைக்க இயல்கிறது.
செடிகளை பற்றி,செடி வளர்ப்பை பற்றிக்கதைக்கிறோம். அக்காவின் ரோஜா பூந்தோட்டம் முன் ஊட்டி, மைசூர் ரோஜா தோட்டங்கள் அருகே வர இயலாது. "அக்கா, நீங்கள் இலை இல்லா பூக்களுக்காக என்ன மேஜிக் செய்கிறீர்கள் என்பேன்.
ஒவ்வொரு காலசூழலுக்கு இணங்க செடிகளை இடம் மாறி வைப்பது , செடிகளை வெட்டிக்கவனிப்பது, அக்காவை மாதிரி யாராலும் நேசிக்க இயலாது.
தமிழகம் வந்தாலும் நாங்கள் விரும்பிச்செல்லும் இடம் பூந்தோட்டங்களும் தான்.
அக்கா வீட்டில் பூத்த மல்லியை நினைத்து பூரித்து பூரித்து இன்னும் நிறைய எழுதலாம். செடி தரும் மகிழ்ச்சி அதிவல்லது‌.
Naren K Narendran, Gladwin Moses and 80 others
22 comments
1 share
Like
Comment
Share

Live Twice, Love Once


இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடும் வேளையில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையை பற்றி சொல்லியத்திரைப்படத்தை காண்போம்.
இந்ததிரைப்படம் 2019 ல்
Premios del Audiovisual Valenciano வின் சார்பில் ஆறு விருதுகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில், 3 act திரைக்கதை பாஃர்முலா கையாண்டுள்ளது எடுத்துச்சொல்ல வேண்டும்.
எமிலோ ஓய்வு பெற்ற ஓர் கணித பேராசிரியர். கணக்கு விளையாட்டு, வாசிப்புடன், தனிமையில் தன் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்.
ஒரு தெருவோரக்கடையில் காப்பி குடிப்பது, திரும்பி அதே வழியில் தன் வீடு வந்து சேர்வது என நாட்களை கடத்திக்கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் தனது நினைவாற்றல் குறைவதை கண்டு உணர்ந்து கொள்கிறார். உடன் மருத்துவ உதவியையும் நாடுகிறார். இருந்தாலும் தனது நோயை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இல்லை.
தனக்குள்ள நோய் யாருக்கும், மகள் கூட தெரியக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக மருத்துவ மனையில் வைத்து சந்தித்த மகள் அறிந்து கொள்கிறார்.
தன் தந்தையை தன் வீட்டில் வைத்து பராமரிக்க விரும்புகிறார்.
பிடிவாதக்காரரான தந்தையோ அதை விரும்பவில்லை, மகள் குடும்பத்தை சந்தித்து விட்டு மாலைக்கு முன் தன் வீடு திரும்பும் மனநிலையில் தான் உள்ளார்.
குறிப்பாக எப்போதும் கைபேசியும் கையுமாக இருக்கும் ப்ளாங்காவை எமிலியோ தாத்தா விரும்பவில்லை, வெறுப்பாக பார்க்கிறார். அதை விட அந்த குழந்தைக்கு தன் தாத்தா தன் வீட்டில் தங்குவது பிடிக்கவில்லை.
தாத்தா தனது பால்ய கால ஸ்னேகிதியை பார்க்கப்போக ஒரு பயணம் மேற்க்கொள்ள போவதையும் அறிந்து கொள்கையில் தானாகவே எமிலியோவிற்கு உதவ வருகிறாள். பால்யகால ஸ்னேகிதி பெயரை மட்டும் அறிந்திருக்கும் தாத்தாவிடம் தகவல்களை பெற்று இணையத்தில் தேட ஆரம்பிக்கிறாள்.
ஒரு நாள் பாடசாலையில் வைத்து, தனது அப்பா இன்னொரு பெண்ணுடன் உறவு பேணுவதை கண்டு கொள்கிறாள்.
அன்று மாலை தன் வீட்டிற்கு போய் தன் தந்தையின் முகத்தில் விழிப்பதை விட தன் தாத்தா வீட்டிற்கு போக விரும்புகிறாள். அங்கு செல்கையில் தாத்தா ஒரு பயணத்திற்கு கிளம்புகிறார். தானும் வருகிறேன் என்று பிடிவாதமாக தாத்தாவுடன் பயணிக்கிறார். பின்பு தாத்தாவிற்கும் பேத்திக்குமான அன்பான உறவு சுவாரசியமாக நகருகிறது. சாலை பாதைகளை கண்டடைய நவீன தொழில்நுட்பத்தை பயண்படுத்தி தாத்தாவிற்கு உதவுகிறார். இருவருக்குமான நட்பு மலர ஆரம்பிக்கிறது. கண்க்கில் புலியான தாத்தா எமிலியோவும் புது தொழில்நுடப்த்தில் கரை கண்ட ப்ளாங்கா அன்பும் ரசிக்க தகுந்ததாகவும் இனிமையானதாகவும் உள்ளது.
பயணித்து கொண்டிருக்கையில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டி வருகிறது. அங்கு சென்றால் முதியவர் பணம் சுரண்டும் அட்டையில் எண்ணை மறந்திருப்பார். இது பிரச்சினையாக காவல்த்துறையால் கட்டுப்படுத்தப்பட்டு எமிலியோவின் மகள் ஜூலியாவை வருவித்து இரண்டு பேரையும் ஒப்படைப்பார்கள்.
வாழ்க்கையின் முரண், ஒரு காலத்தில் சிறந்த பேராசிரியாராக இருந்த அறிவாளியான எமிலியாவும் தற்போது 10 வயது ப்ளாங்காவும் ஒரே நிலையை அடைகின்றனர்.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஸ்னேகிதி வேலை செய்த இடத்தை கண்டு பிடிப்பதுடன் தாத்தாவிற்கும் கைபேசி பயண்படுத்தும் வித்தையும் கற்றுக்கொடுக்கிறாள் ப்ளாங்கா.
பின்பு முகநூல் வழியாக தாத்தாவின் ஸ்நேகிதிய தேட முயல்கிறாள் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டதால் தனது தாத்தா எமிலியோ மற்றும் பெற்றோருடன் தாத்தா எமிலியோவின் காதலி மாரகரித்தாவை தேடிய பயணம் தொடர்கிறது.
அங்கு சென்று சேருகையில் இவர்களுக்கு ஒரு துயரான செய்தி காத்து கிடக்கிறது. எமிலியோவின் தோழி மார்கரித்தா, வீட்டை விற்று விட்டு வேறு இடம் நோக்கி புலம்பெயர்வதை அறிந்து கொள்கிறார்கள்.
எமிலியோ மகள் ஜூலியா மற்றும் பேத்தியுடன் இன்னொரு பயணத்தில் மார்கரித்தாவை கண்டடைந்து விடுகிறார்.இருந்தாலும் மார்கரித்தாவும் அல்சைமர் நோயால் பாதித்திருப்பதால் எமிலியோவை அடையாளம் கண்டு பிடிக்க இயலவில்லை. இருந்தாலும் மர்கரித்தாவின் சில சங்கேத செயல்களால் மார்கரித்தாவும், எமிலியோவை சந்தித்த காலத்தில் தான் உள்ளார் என புரிந்து கொள்கிறார்.
நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகம் ஆகிறது. கடைக்கு போன வழியை மறந்து வீட்டுக்கு திரும்ப இயலாது இருக்கிறார்.
பின்பு மகள் வீட்டில் தங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். எமிலியோ தன் நிலையை எண்ணி வருந்து கோபம் கொள்கிறார். மகளை விட பேத்தி ப்ளாங்கா தாத்தாவை இன்னும் புரிந்து பரிவாக பார்த்து கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் வீட்டிலும் வைத்து பார்க்க இயலா சுழல். ஒரு முதியோர் மருத்துவ இல்லத்தில் சேர்க்கின்றனர். அங்கு மர்கரித்தாவை காண்கிறார். இருவரும் அவர்கள் பதின்ம வயதின் நினைவுகளுடன் அங்கு வாழ்க்கையை தொடர்கின்றனர்.
மகளான ஜூலியா அவர் கணவர் பிலிப் பேத்தி ப்ளாங்கா; மூவரும் வயோதிகரான அல்சைமர் நோயாளியான எமிலியாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நடித்துக்காட்டி சமூகத்திற்கு விழிப்புணர்வு நல்கிய திரைப்படம்.
ப்ளாங்காவாக மபல்மா கார்போநெல் திறம்பட நடித்துள்ளார்.
மரிய மினகசி எழுத்தில், மரிய றிப்போள் இயக்கத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய ஸ்பானிஷ் திரைப்படம் இது.
ஜனுவரி 2020 ல் வெளியாகி மனிதத்தை போதித்த திரைப்படம் இது.
முதுமையின் அதுவும் அல்சைமர் நோயின் தாக்கத்தாலுள்ள வயோதிக த்தின் நிலை துயருரைச்செய்தாலும் என்னுடைய பாட்டியாருக்கு அல்சைமர் நோய் பாதித்த நாட்களை நினைத்து பார்த்தேன்.
அப்பாவும் இதே போன்ற பார்க்கின்சன் நோயுடன் கடந்து போவதை கண்டேன்.
அப்பாவின் தன் நல்ல வயதில் கம்பீரமாக கல்லாவில் அமர்ந்து புத்தகம் படிப்பது, வியாபாரம் செய்வது பின்பு கல்லூரி விடுதிக்கு காண வந்து கண்ணீருடன் திரும்ப சென்றது, கல்யாண நேரம் நாங்கள் உடை நகை அலங்காரத்தில் திளைத்து நின்ற போது அப்பா ஓடி நடந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தது பின்பு என் வீட்டிற்கு இரு செடிகள் வாங்கி வந்து குழி தோண்டி நட்டு தந்தது , ஒரு முறை விடுமுறைக்கு சென்ற போது, இரு நடுங்கும் கைகளை காட்டி, என்ன இப்படி என பரிதபித்தது, அடுத்த விடுமுறைக்கு சென்ற போது நிலம் குத்தி விழுந்து அடிபட்ட காயங்களை காட்டினது , தங்கை வீட்டு நிகழ்ச்சியில் எங்குள்ளோம் எதைச் செய்கிறோம் என அறியாது கூட்டத்தை கண்டு பயந்து கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல் திருதிருவென முழித்து, அம்மாவை தேடிக்கொண்டு சோபாவின் கரைகள் பிய்த்து கொண்டு இருந்தது, இப்போது நடக்க இயலா படுக்கையில் என அறிகிறேன்.
அப்பாவின் நினைவை அப்பாவின் இயலாமையான முகத்தை எமிலியோ முகத்தால் கண்ட திரைப்பட

15 Jun 2020

ஒரு யாழ்ப்பாணத்து வீடு.


ஒரு யாழ்ப்பாணத்து வீடு. தங்கராசு சைக்கிள்க்கடை; தங்கராசிடம் படம் எடுக்க ஆர்வமுள்ள நண்பன் ஜெயப்பிராகாசும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கதையின் பிறப்பிடம் என்றால் , யாரைப் பற்றிய கதை, கதைகள் நிரம்பிக்கிடக்கும் தனது ஊர்த்திருவிழா, தெருவுகள், மனிதர்கள் இப்படி கதைகளை பற்றி கதைத்துக்கொண்டு போவார்கள். அவர்கள் பேச்சினிடை ஈழத்து திரைப்பட வரலாறு முதல்த்திரைப்படம் என நீள , எதிர் வீட்டு பாக்கியா அக்கா வீட்டைப்பற்றியும் கதைக்கிறார்கள். பாக்கியம் அக்காவிற்கு இரு பிள்ளைகள் பொறுப்பான மகள் கமிலினி, அவள் தம்பி செந்தில். அவன் பொழுது போக்கு, பெட்டைகளுடன் ஊர் சுற்றுவதும், இப்போது நார்வேயில் இருந்து வந்துள்ளவருடன் ஊர் சுற்றிக் கொண்டு, பல பொருட்களை இலவசமாக பெற்று சுகமாக வாழ்ந்து வருகிறான். நார்வேயில் இருந்து வந்தவனுக்கு கமிலினியை கண்டதும் காதல் தொற்றிக் கொள்கிறது. கமிலினிக்கு அந்த ஊர் தபால் அலுவலக குமஸ்தாவுடன் காதல் உண்டு என அறிந்தும், பணவும் பொருட்கள் கொடுத்து, நார்வேக்கு செந்திலை அழைத்து போகிறேன் என்று ஆசை காட்டி பெண்ணை திருமணம் முடித்து கொள்கிறான். இந்த சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் கறுப்பு- வெள்ளையில் நடக்க அதே நேரம் கலரில் நார்வேயிலுள்ள ஒரு குடும்ப காட்சிகள் வந்து கொண்டிருக்கும். ஒரு குடும்பத்தில், கணவர், தனது தாய், வளர்ந்த பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண் திடீர் என தன் கணவரை பிரியும் முடிவை எடுப்பார். கணவருக்கு பெரும் கவலை. சமூகத்தில் கவுரவமான பல பதவிகள் உள்ள ஆள் . தன் மனைவி தன்னை பிரிந்தால்,இந்த சமூகம் என்ன நினைக்கும் என கலங்குகிறார். மனைவிக்கு தான், என்ன குறை வைத்தேன் என வருந்துகிறார். தனது காதலன் கனகு விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து குடியில் ஆட்பட்டு, மனைவியை பிரிந்து, நான்கு நாட்கள் அனாதமாக செத்து கிடந்தார் என்று அறிவதுடன் கமிலினியின் மனசாட்சி வருந்த ஆரம்பிக்கிறது. .....தன் மனப்போராட்டத்தில் தன் கணவரை பிரிய முடிவு எடுக்கிறார். மூத்த மகள் அம்மா எடுத்த முடிவை ஆமோதிப்பதும் இளைய மகளோ, தன் தாய் தன் தகப்பனாருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்றும் தாயிடம் முரண்பட்டுக் கொண்டிருப்பார். பின்பு அக்கா தன் அம்மா , அப்பாவின் நிலையையும் தங்கைக்கு விளங்கப் பண்ணுகிறார். தங்கை இப்போது அம்மாவை தான் விரும்புவதாகவும் அப்பாவை வெறுப்பதாகவும் கூறுகிறாாள். அக்காவோ "இல்லை.... நீ தவறாக நினைக்கிறாய். அப்பாவும் பாவம். அவர் நிலையும் வருத்தததிற்குரியது. தன்னை அன்புச் செய்யாத அம்மாவுடன் 25 வருடம் வாழ்ந்திருக்கார்"என்பார் ஆனால் அம்மாவின் ஏழ்மை நிலையை தனக்கு சாதகமாக எடுத்து அம்மா காதலை பிரித்தவர். அம்மா இதுவரை தன் குடும்பத்திற்காக தன் தாய் தம்பியின் நலனுக்காக, பின்பு தனது மகள்களுக்காக வாழ்ந்து வருகிறவர் என விவரிக்கிறார். இனியாவது தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும். 26 வருடமாக பிடிக்காத நபருடன் வாழ்ந்து வரும் அம்மாவையும் 26 வருடமாக மனைவியின் அன்பு கிடைக்காத தங்கள் அப்பாவையும் நினைத்து வருந்துகின்றனர். இருவரையும் அன்பாக ஏற்றுக்கொள்கின்றனர். தனது அம்மாவின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த தங்கள் மாமாவையும் , பாட்டியாரையும் வீட்டில் இருந்து போகப்பணிகின்றனர். மகள்கள் தங்கள் அம்மாவின் விருப்பத்தை மதிப்பதுடன், அம்மா தனக்க 25 வது வயதில் இழந்த வாழ்க்கையை மீட்பது மாதிரி கதை முடிந்துள்ளது. ஒரே திரைப்படத்தில் ஈழ மக்களது தங்கள் நிலத்திலுள்ள எளிமையான வாழ்க்கை, வெளிநாடுகளிலுள்ள பகிட்டான வாழ்க்கை. பிடிக்காத நபருடன் வாழும் பெண்ணின் மனச்சுமை, பணத்தால் எதையும் குறிப்பாக பெண் மனதை வாங்கலாம் என நினைத்த ஆணின் அறியாமை, காதலின் உண்மையும் அதன் பிரிவால் உண்மையாக காதலித்த இரு நபர்கள் வாழ்க்கை சென்றடைந்த துயர்கள், வறுமையில் கமிலினியின் அம்மாவின் செயல்பாடுகள் பின்பு வசதியான மருமகன் கிடைக்க போகிறான் என்றரிய அவருடைய குணத்தில் வந்த மாற்றம், பெண் பிள்ளைகள் என்ன தான் படித்திருந்தாலும் , பொறுப்பான பிள்ளைகளாக இருந்தாலும் தங்கள் உடன் பிறந்த சகோதரன் சுகமான வாழ்க்கைக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டி வரும் அவலம், பெண்ணின் துயரை பெற்ற தாயே கண்டு கொள்ளாது மகளை, தங்கள் வளமான வாழ்க்கைக்காக பயன்படுத்தும் கொடூர குணம், ஒரு தீருமானங்கள் எடுக்கையில் தாய்மார்கள் ஒழுங்கீனமான மகன் என்றால் கூட மகன்களின் அறிவுரை கேட்டு நடப்பதும், ஈழத்தில் அம்மனையும் தமிழ் இந்து கடவுளை வணங்கியவர்கள் சிங்கிடி பாபா போன்ற கடவுள்களிடம் போனது என உண்மையான உலகத்தை கண் முன் நிறுத்து உள்ளனர். நார்வேயில் எடுக்கப்பட்ட திரைப்படம். குறுகிய பட்ஜெட் படம் என்றிருந்தால் கூட அதன் கதை, திரைக்கதையில் கையாண்டுள்ள நுட்பம், திரை வசனத்தில் பயண்படுத்தியிருக்கும் வார்ததைகளின் கட்டமைப்பு, கலைத்துவமான ஒளிப்பதிவு என திரைப்படத்தின் தரத்தை நோக்கினால் ஒரு ஓவியமாக ஒரு முழு நேரத்திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்கள். படத்தின் கதை , திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்கம் இந்த பிரதான வேலைகளை சிவசாமி ப்ரேம் ராஜ் செய்துள்ளார். ஒளிப்பதிவு நல்லைய்யா ஸ்ரீகந்தன், சுரேஷ் குமார் இணைந்து பதிவு செய்துள்ளனர். இசை ரவிக்குமார் செய்துள்ளார். பாக்கியமாக சாந்தி மகேந்திரன், நவமதி பிராபாகரன், மற்றும் மாயந்தி யோகேஸ்வரன் கமிலியாக நடித்துள்ளனர், ஆதவன் மகேந்திரன் மற்றும் நல்லையா யோகேஸ்வரன் கமிலினியின் கணவராக நடித்துள்ளார். கனகுவாக யோகி சிவா தெய்வேந்திரன். சைக்கிள் கடை தங்க ராசு அண்ணன் துவங்கி ஜெயப்பிராகாஷ், அவர் மனைவியாக நடித்தவர் என எல்லோரும் படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். ஒரே கதையில் மூன்று தலைமுறை மாந்தர்களின் குண நல மாற்றங்கள், கனகு சகோதரி குடும்பம் வன்னியில் போரில் இறந்தது, சைக்கிள்க்கடை தங்கராசு அண்ணன் இந்தியாவில் அகதிமுகாமில் இறந்தது. கமிலினிக்கு நீதி கிடைக்க 26 வருடம் ஆனது என கதை விரிவடைந்துள்ளது. ஈழத்தவர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதிக்காக எத்தனை வருடம் காக்க வேண்டுமோ என ஒரு கதைக்குல் பல அடுக்கு கதையாக அந்த மண்ணின் மாந்தர்கள் அவர்களின் தொடர் துயர்கள், சொந்த நாட்டு அரசியல், புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள் சட்டம் ,வாழ்க்கை என யாழ்ப்பாணத்து சாதாரண குடும்ப கதை அயல்நாடுகள் என்று எப்படி பரந்து விரிந்து கிடக்கிறது என்று இத்திரைப்படம் அழகாக காட்சிகளை பகிர்கிறது. ஒரு நல்ல திரைப்படம் கண்ட உணர்வு. மனதில் மாயாது கிடக்கும் பல காட்சிகள் . க்ளாசிக் திரைப்பட வரிசையில் சேர்க்கக்கூடிய திரைப்படம் இது.
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DhT8ohmP-Q9E%26feature%3Dshare%26fbclid%3DIwAR2oe8yKzOeIWpXgp9cpVYXcT-vQIW1rp3IswqLdlZx6kHs2pkMIKxfjV04&h=AT3Vgj_9KVhXzFqH77O6RDUrupjXArNky4OQLRNJUxxwBA-Fg2udFfTckexAsXnr6Pv9hqDUX-cA7i-eNy464VH2HVuloS05aj5vYk8sLBjkGh8k-BNxT6EL28FZNbuIxJNpwvWjH8YYEUtBPk8e&__tn__=%2CmH-R&c[0]=AT0EMEzBEnaK1UIT-5iTGLfzwertoePyxpkfp1koVHHJ0Hr8BP1NYPZNnwtDafUFRMxPZTEmDZhJDyQl4lL77YH4FtwoOQNs4BOR8vVuRccLEkmwrWcaLtCuMbc-7NjRtKAZysuq_NAF2-IK6cd_







11 Jun 2020

சில்லுக்கருப்பட்டி

சில்லுக்கருப்பட்டி , ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தை பார்த்த திருப்தி தந்த  படம் இது.  நான்கு கதைகள் கொண்டது சில்லுக்கருப்பட்டி.  முதல் கதை பதின்ம வயது குழந்தைகளில் உருவாகும் அன்பிற்கும் காதலுக்கும் இடையிலான, நட்பும் காதலுமல்லாத ஒரு வித நேச உணர்வை கொண்டாடிய கதை.  இயல்பாக கதையை முடித்து இருந்தனர்.

அடுத்த கதை கேன்சர் நோயாளியான இளைஞனிடம் கொள்ளும் நட்பு, பின்பு அது அழகான காதல்  அடுத்த நிலையில் உறவாகவும் தொடர்கிறது.  ஒருத்தியின் உண்மையான எதிர்பாரா அன்பு, ஒருவனுக்கு தன் இருப்பிற்கான நம்பிக்கையை ஊட்டிய சூழலை எடுத்துக்கூறிய விதம் அருமை.

அடுத்து வயதான இரு நபர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கிறார்கள். இரு வயதான கதாப்பாத்திரங்களை அழகாக வடிவமைத்துள்ளனர். இது போன்ற ஆரோக்கியமான சிந்தனைகள், நமது தமிழ் சமூகத்திற்கு தரும் நம்பிக்கை கொஞ்சநஞ்சமல்ல.  வயோதிகர்களான இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுப்பதுடன் அடுத்த கதைக்குள் நகர்கிறோம்.

இக்கதையில் மத்திய வயது தம்பதிகளினுள் இருக்க வேண்டிய அன்பையும் கருதலையும் , திருமணம் என்பதின் முழுமையான புரிதல் அதன் எல்லா பரிமாணங்கள் பற்றியும் சொல்லியுள்ளது .   மூன்று குழந்தைகளின் பெற்றோர்கள்,  பல வருடம் ஒன்றாகவே ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பதால் நல்ல தம்பதிகளாக இருப்பது இல்லை என்று கூறிய கதை. ஒருவர் தனது இணையை அதே நிறை குறையுடன் ஏற்றுக்கொள்ளுதல்,  கணவன் மனைக்குள் இருக்க வேண்டிய அன்னியோன்னியம், அவர்களுக்குள் இருக்க வேண்டிய காதல், உரையாடல்கள், எப்படியான உறவு பேண வேண்டும் என குறிப்பிட்ட கதை.

மனிதர்களின்  அதி நுண் உணர்வுகளையும், அதன் அடிநாதமாக இருக்க வேண்டிய அன்பும், காதலும், பரிவும் பற்றி இயல்பாக சொன்ன கதைகள்.  பிரசார நெடி  இல்லாது,  அது அதுவாக, ஒரு தெளிந்த அருவி போன்று சொல்லப்பட்ட கதைகள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், எடிட்டிங் என நான்கு துறையையும் கையாண்டது  ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர்;   இணை இயக்குனராக புஷ்கர் காயத்திரி கூட்டணியுடனும் மிஷ்கினுடனும் பணியாற்றியவர்.   29 வயதான ஹலீதாகொடைக்கனாலில் பிறந்து வளர்ந்தவர்.  திரைத்துறையில் இணை இயக்குனராக பணி செய்து வந்திருந்தவர். இது இவருடைய இரண்டாவது திரைப்படம்.   தனது கல்லூரிப்படிப்பை சென்னை எஸ் ஆர் எம் கல்லுரியில் முடித்துள்ளார்.  இத்திரைப்படத்தை டிவைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.  2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா வெளியிட்டார்.

ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்கியது போல திரைக்கதையை கச்சிதமாக எழுதி முடித்துள்ளார்.

நடிகர்கள் தேர்வு மிகவும் அபாரம்.   சமுத்திர கனியிலிருந்து, சுனைனா, மணிகண்டன், புது முகம் நிவேதிதா சதீஷ், நடன ஆசிரியரும் பல முக்கியமான சமூக நிறுவனங்களில் செயல்புரிந்துள்ள லீலா சாம்சன்,  சாரா அர்ஜுன், ராகுல் என எல்லோரும்  போட்டி போட்டு நடித்துள்ளனர்.

பல வருடங்களுக்கு பின்பு தமிழ் சாயல் கறுப்பு நிறத்துடன் கிடைத்த தமிழ் முகம் நிவேதிதா சதீஷ் படத்தின் சிறப்பு.  பிரதீப் குமாரின் பின்னணி இசை படத்தின் அழகை கூட்டியுள்ளது. ஒளிப்பதிவு ஆறு பெயர் அடங்கிய குழு. சிறப்பான திரைப்படம்.   நல்ல வசூலுடன் வெற்றி வாகை சூடிய திரைப்படம்.   சில்லுக்கருப்பட்டி நமது மண்ணின் மணமுள்ள, இதமான உணர்வை தந்த   சிறந்த தமிழ்ப்படம்.

டொரண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.  சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படத்துக்கான 2-வது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

 

10 Jun 2020

திரைப்படம் 'மதிலுகள்'!


தமிழில் பொருட்படுத்த வேண்டியது சுவர்கள்!
இது ஒரு சுயபுராண கதை. புகழ்பெற்ற கேரளா எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரால் 1967 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு குறும் நாவலிது.
1989 ல் மலையாள திரை உலக ஜாம்பவான் அடூர் கோபாலகிருஷ்ணன் திரைக்கதை , இயக்கத்தில் வெளிவந்து பல விருதுகளை பெற்று தந்த திரைப்படம் ' மதிலுகள்'.
நடிப்பிற்கு மம்மூட்டிக்கும் இயக்கத்திற்கு அடூர் கோபாலகிருஷ்ணனுக்கும் தேசிய விருது பெற்று தந்தது. இதில் மறைந்த முரளி, ஸ்ரீ காந்து, திலகன் போன்ற திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர்.
1990ல் வெனீஸ் திரைப்பட திரைவிழாவில் சர்வதேச அளவிற்கு கவனம் கொள்ளப்பட்ட திரைப்படம்.
இசை சில இடங்களில் தேவையற்
ற சோக பாவத்தை தந்தாலும், விஜய பாஸ்கரின் இதமான பின்னணி இசை பல இடங்களில் மிகவும் நுண் உணர்வை வெளிக்கொணர்ந்து, அதன் ஆழமான பொருளை உணர்த்தியது. ஒளிப்பதிவு மங்கல ரவிவர்மன். எடிட்டிங் M. S மணி.
கதைக்குள் போவோம். எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரை ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் அடைக்கப்படுகிறார். ஜெயில் இவருக்கு புதிதல்ல. இருப்பினும் நீளமான சுவரை கண்டு நடந்து வந்து தங்கும் இடைத்தை அடைகிறார். ஜெயில் வார்னுடனான அவருடைய உரையாடல்கள் அவருடைய விசாலமான குணத்தை வெளிப்படுத்துகிறது.
எல்லோரோடும் இன்முகமாக, அமைதியாக பேசும் சுபாவம், எல்லோருக்கும் உதவும் குணம். இடது,வலது என இல்லாது அனைவரிடவும் நட்பு பாராட்டும் மனம் என போகிறது ஜெயில் வாழ்க்கை.
எழுத்தாளர் என்பதால் சிறை நிர்வாகம், வார்டன், சிறை அடுக்களையில் இருந்தும் சிறப்பு அன்பை பெறுகிறார்.
ஒரு மனிதனை தூக்கிலிடப் போகயில் அவருக்கான கட்டன்( பாலில்லா) தேனீர் தயார் செய்து கொடுக்கிறார். மரணததில் இரண்டே விடயம் தான் ஒன்று அழுது கொண்டு சாவது இன்னொன்று சிரித்து கொண்டு தைரியமாக சாவது. தூக்கிலிடப்போகும் மனிதரிடம் தைரியமாக மரணத்தை எதிர் கொள்ள சொல்லுங்கள் எனக்கூறி தன்னிடம் இருக்கும் பீடியை கொடுக்கும் பேரன்பு.
அங்குள்ள ஒவ்வொருவருடனும் கொலைக்குற்றவாளியோ திருட்டு குற்றவாளியோ யாராகினும் கரிசனையாக நோக்குகிறார், பழகுகிறார்.
அங்கு வைத்து தான் தன்னுடைய பள்ளி தோழனை சந்திக்கிறார். சிறைச்சாலையில் ஜெயிலரை அடித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக தண்டனை காலங்களை அதிகப்படுத்தி, கொடூர நிலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
பஷீருக்கு எதிலும் எந்த எதிர்ப்பும் இல்லை, தனக்கு கிடைப்பதை உண்டு அங்குள்ள சிறைவாசிகளிடம் கதைத்து கொண்டு , சிலரை அவதானித்து , ஆறுதல் பகிர்ந்து நாட்கள் கடருகிறது. அவர் வசிக்கும் இடத்தை சுற்றி ரோஜா பூந்தோட்டமாக மாற்றுகிறார்.
இப்படி இருக்க அரசியல் கைதிகளை எல்லாம் விடுவிக்கிறது அரசு. மகிழ்ச்சியாக எல்லோரிடவும் விடை பெற்று வெளியேற காத்திருக்கும் வேளையில், இவர் பெயர் மட்டும் லிஸ்டில் இல்லை என்பது பெரும் ஏமாற்றமாக மாறுகிறது.
நண்பர்கள் எல்லோரும் போகயில், தனிமைப்பட்டு , சோர்ந்து, ஜெயிலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது வரை திட்டம் இடும் மனநிலை கொண்டு கடும் மன அழுத்தற்கு உள்ளாகிறார்.
பின்பு காய்கறி தோட்டம் அமைக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு குருவி , அணில் போன்றவற்றோடு கதைத்து கொண்டு, தன் தனிமையை போக்கி வருகையில் சுவருக்கு அந்த பக்கம் இருந்து ஒரு பெண் குரல் எதிர்பாராவிதமாக வருகிறது, அந்த பெண் இவரிடம் ரோஜா செடி கேட்க, இவர் ரோஜா செடியை பூக்களுடன் கொடுக்க, அங்கு காதல் பற்றி கொள்ள ஆரம்பிக்கிறது.
ஒரு காய்ந்த குச்சியை மேல் நோக்கி எறியுவேன் உங்கள் சுவர் பக்கம். நான் இங்கு இருக்கிறேன் என்ற அடையாளம் , கதைக்க வரவேண்டும் என பணிகிறது பெண் குரல்.
வாழ்க்கையே பிடிக்கவில்லை , சோர்வாக உள்ளது, கவலையாக உள்ளது என சொல்லிக் கொண்டிருந்த பஷீர், இந்த காய்ந்த குச்சி எப்போது வருமென சுவரையே பார்த்து கொண்டு இருக்க ஆரம்பிக்கிறார். குச்சியை கண்டதும் ஆயிரம் பூக்கள் பூக்கிறது, நெஞ்செல்லாம் பனி பொழிகிறது, இப்படியாக காதல் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார்.
அந்த பெண்ணிடம் கதைப்பது , இவருக்கு கிடைத்த முட்டை, மீன் போன்றவற்றை அந்த பெண்ணுக்கு கொடுக்க, அப்பெண் நொறுக்கு தீனிகளை இவருக்கு கொடுக்க முகம் அறியா அக்காதல் , ஒலியினூடாக சுவாரசியமாக, உற்சாகமாக காதல் முன்னேறிக் கொண்டு இருக்கிறது.
இப்போது தனிமையும் இல்லை. ஜெயில் விட்டு புறம் உலகம் போகக்கூட விரும்பவில்லை.
சில உரையாடல்கள் மிகவும் சுவாரசியம்.
ஆண்: உன் வயது என்ன?
பெண் : உன் கண் எப்படி இருக்கும்.
பெண்: நீ என்னை மட்டும் தானே காதலிப்பாய்?
அழுகையாக வருது...
ஆண் : இப்போது கதை; அழாதே, இரவு அழுது கொள்
பெண் : நான் முதலில் சாக வேண்டும்
ஆண்: மரணம் யார் கையிலென்று சொல்ல ஏலாது...
இப்படி நாட்கள் நகர ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள செவ்வாய்க்கிழமை அன்று வியாழன் அன்று சந்திக்கலாம் என முடிவு எடுக்கின்றனர். புதன்கிழமை பஷீருக்கு ஜெயில் விடுதலை கிடைக்கிறது.
பெண்ணின் காதல் அந்தரத்தில் அல்லல்ப்படுவதை , ஒரு காய்ந்த குச்சி மேல் வருவதும் , விழுவதும், எழுவதுமாக காட்சிப்படுத்தியுள்ளார் அடூர், மிக அழகியலான திரை மொழியில்.
அவர்கள் சந்தித்து கொள்ளவே இல்லை. காணாது தொடாது காதலித்து, காணாதே கரைந்து காதல் செத்து
போனதால் இந்த காதல் கதை; சாகாவரம் பெற்று ,புத்தகம், நாடகம், சினிமா சிற்பம் என மக்கள் மனதில் மாறாது, மறையாது, பஷீரையும் இன்றும் நினைக்க வைத்து கொண்டே இந்த கதை வாழ்கிறது.
யாருக்கு வேண்டும் சுதந்திரம். என்ற டயலோக் உடன் கதை முடிகிறது.
ஜெயில் உள்ளில் வாழ்ந்த உண்மையான சுதந்திர வாழ்க்கை, ஜெயிலுக்கு வெளியில் இனி இருக்க போவதில்லை. நடித்துக் கொண்டு சுதந்திரமற்று வாழப்போவதை நினைவுப்படுத்தும் உரையாடல். அந்த பெண்ணை சந்திக்கும் எல்லா வாய்ப்பு இருந்தும் அந்த ஆண் சந்திக்க மாட்டார்.
ஒருவேளை சந்தித்து இவர்கள் கல்யாணம் செய்து குட்டிகள் பெற்று வாழ்ந்திருந்தால் இது சாதாரண கதையாக முடிந்திருக்கும்.
பார்க்காதே காதலின் உச்சத்தை தொட்டு ,காதலை தொலைத்த, காதலை கொன்ற காதல்கள் தான் என்றும் சாகாவரம் பெற்றவை.
இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும், உரையாடல்களும் , ஏதோ ஒன்றை வெளிப்படுத்தும். படம் பார்த்து முடிக்கையில் ஏதோ ஒரு திருப்தி. காதல் தோல்வியிலும் ஒரு சுகமான அனுபவம் பெறுவதை காட்சியூடாக உணரலாம். அதுவே அடூர் கோபால கிருஷ்ணன் என்ற இயக்குனரின் வெற்றியும்.
இப்போதும் பஷீர் மேல் வெறுப்பு வராது, அன்பு மட்டுமே பெருகும். கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கும் அழகும் அதுவே......மிகவும் எளிமையான இயல்பான காதல் கதை.
இந்த சிற்பம் பாலக்காட்டு சுல்தான் கோட்டையில் சிற்பி M.J இனாசால் செதுக்கி வைத்துள்ளனர். கதைகளுக்கு கலை உருவங்கள் மாறலாம் கலை கலையாகவே நிலை நிற்கிறது.

'45 Years

2016ல் சிறந்த நடிப்பிற்கு ஆஸ்கார் விருது வாங்கிய திரைப்படம் '45 Years'.
ஒரு குழந்தைகளற்ற தம்பதிகள் தங்கள் 45 வது வருட கல்யாண நாளை கொண்டாடும் திட்டத்தில் உள்ளனர். அதற்கான வேலையில் மும்முரமாக இருக்கையில் ; ஜெப்ன் 50 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்த காதலியின் உடல் சுவிஸ் மலைகளில் கிடைத்தாக தகவல் வருகிறது.
பெரியவருக்கு காதலியை போய் பார்க்க வேண்டும் , தனக்கு பணிவிடை புரியும் தன் மனைவியை மறந்து காதலி நினைவில் ஆழ்ந்து விடுகிறார். அவரை திருமணம் முடித்திருப்பேன் என்று வரை மனைவியிடம் கதைக்கிறார். அதன் பின்னுள்ள அந்த 6 நாட்களை பற்றியது தான் கதை.
பெரியவர் வீட்டிலே முடங்கி கிடக்க, காதலி நினைவாகவே இருக்கும் கணவரை ஆறுதல்ப்படுத்த கதைகள் கேட்ட மனைவி, ஒரு கட்டத்தில் காதலி பெயரையே சொல்லாதீர்கள் என சொல்லி விடுகிறார். கணவரின் அன்பை இழக்கிறோம் என்ற இயலாமையில் உருவான பொறாமையும் பீடிக்க ஆரம்பிக்கிறது.
இருந்தாலும் முதலில் வயோதிகத்தால் மலை ஏற இயலாது என சுவிஸ் மலைக்கு போவதை தடுத்த மனைவி, கணவர் மகிழ்ச்சிக்காக சுவிஸ் பயணத்திற்கு உதவ முன் வருகிறார்.
ஜெப் தன் மனைவியின் மனநிலையை புரிந்து, தன் தவறை உணர்ந்து பழைய படியும் மனைவிக்கு காலை காப்பி இட்டு தருகிறார், நாயை அழைத்து வெளியே போய் வருகிறார்.
பிரதானமாக தங்கள் திருமண நாளை கொண்டாட மனதில்லாது இருந்தவர் விழாவை சிறப்பாக கொண்டாடியதுமில்லாது தன் மனைவியின் தியாகம், நட்பை, அன்பை பாராட்டி ஒரு உரையும் நிகழ்த்துகிறார்.
நடனம் முடியும் தருவாயில் இருவரும் தங்கள் வாழ்க்கை வெற்றி பெற்றதாக கையை உயர்த்த கேய்ட் கையை இறக்கி விடுகிறார்.
அரை நூற்றாண்டு வாழ்ந்தும் திருமண பந்ததிற்குள் இருந்த ஆழமின்மை , கணவரின் காதலி மேலுள்ள அதீத காதலால் மனைவியின் பாசத்தை புரக்கணித்தது எல்லாம் நினைவிற்கு வர கேய்ட் மனம் ஒரு வகையான வருத்தம், வாழ்க்கையில் கண்ட அர்த்தம் இன்மைக்குள் இட்டு செல்கிறது.
முதிர்ந்த தம்பதிகளின் வாழ்க்கை, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை , கரிசனை, அவர்களுக்குள் இருக்கும் காதல் , அற்ப மனதால் எழுந்த பிரிவு, கடைசியில் கணவர் தன் தவறை உணர்வது , பெண்கள் திருமணம் என்ற பந்தத்தில் கணவர்களால் எதிர்கொள்ளும் நம்பிக்கை துரோகத்தை ஏற்கவும், மறக்கவும் இயலாது துன்புறுவது என நிதானமாக, ஆழமான கருத்துடன் எளிய நடையில் எடுத்துள்ளார்கள்.
நமது இயக்குனர்களும் முதிர் வயது மனதர்களின் உணர்வுகளையும் துல்லியமாக உணரக்கூடிய மெல்லிய அன்பை போதிக்கும் படங்கள் எடுப்பது நமது சமூகத்திற்கு தேவை.
நமது சமூக துர்பாக்கியம் ஆங்கிலேயர்கள் 70 வயதுக்கும் மேலுள்ளவர்களின் அழகான காதலை மையமாக வைத்து கதை எடுக்குகையில் இங்கு 60 வயது முதியவர்கள் கருணை கொலை செய்வதை பற்றி படம் எடுத்து மிரட்டுகின்றனர்.
இப்படம் பல விருதுகள் பெற்றுள்ளது.

The Hungry'

The Hungry' 'பசி' என்ற ஹிந்திப்படம் போbர்நிலா சாட்டர்ஜி இயக்கத்தில் 2017 வெளி வந்த து. ஒளிப்பதிவு லண்டனை சேர்ந்த நிக் கூகி. கனடா சர்வதேசப் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு இந்திய மொழி திரைப்படம்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் டைட்டஸ் அன்ட்ரோனிகஸின்
(Titus Andronicus) நவீன மறுபடைப்பாக்கம் என்கின்றனர்.
இரு வியாபார குடும்பம். வியாபார பங்குகளுக்காக எதிணி தொழிலதிபர் குடும்பத் தலைவியை தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைப்பது, அப்பெண்ணின் மகனை இந்தப்பக்கம் முதலாளி மகள் காதலிப்பது, சூட்சியால் அப்பெண்ணின் மகன்களை கொல்லவது, தனது மகனை கொன்று விட்டு மகன் மனைவியாக இருந்த பெண்ணை அடைய நினைப்பது என வில்லத்தனமாக படம் நகர்கிறது.
திருமணங்கள் , உறவுகளை தொழில் சார்ந்து ஏற்படுத்துவது, வியாபார லாபத்திற்காக ஈவு இரக்கமின்றி சொந்த மகனையே கொலை செய்வது, தொழில் கைபற்ற நினைத்து சொந்த மகன்களை இழந்து, எதையோ கைபற்ற நினைத்து இருந்ததை எல்லாம் இழந்து கடைசியில் ஆண்களின் வியாபார விளையாட்டில் பெண்ணும் பகடையாக இருந்து கடைசியில் ஒன்றும் ஒட்டாது எல்லாம் இழந்து தனிக்கட்டையாக கொலைகாரியாக நிற்பது கதை யோட்டம்.
தொழில் அதிபர்கள் ஆடம்பரமான
வாழ்கையும், பேராசையில் மனிதன் உடலையே கோழிக்கறி மாதிரி பொரித்து கொடுத்தும் தின்னும் நிலையில் இறங்குவதும்.....பணக்கார வீட்டு பெண்கள் மண்டையில் களிமண்ணுடன், வெற்று ஆடம்பரங்களுடன் நினைத்த ஆண்களை பயண்படுத்தியும், பயண்படுத்தப்பட்டும் வெற்றி கொள்ள நிற்பதும், பணக்கார வீட்டு தலைமுறைகள் கஞ்சா போன்ற போதையில் ஆழ்ந்து கிடக்கும் பைத்தியக்கார கூமுட்டைகளாக காட்டியுள்ள திரைப்படம் இது.
திரைக்கதை , இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு, தொழில்நுட்பம் பயண்படுத்தியிருக்கும் விதம், காட்சிப்படுத்துதலிலுள்ள அழகியல் எல்லாம் அருமை அற்புதம். ஆனால் கருத்தாக்கம் என்ன ?
இந்த கதை, இந்தியா போன்ற ஏழை நாட்டு மனிதர்களுக்கு கொடுக்கும் ஊக்கம் என்னது, சொந்தமாக வியாபாரம் செய்யும், வேலை பெறுபவர்களாக இல்லாது வேலை கொடுப்பவர்களாக இருக்கும் மனிதர்களை மனிதர்களின் ஆளுமையை சூதின் பைத்தியக்காரதனத்தின் மறு பதிப்பாக காட்டியிருக்கும் நோக்கம் என்னது?
இந்தியாவில் தொழில் புரிபவர்கள் மிகவும் குறைவு. தொழில் தொடங்குவது அதில் வெற்றி பெறுவது சாதாரண விடயம் அல்ல. இன்றைய இளைஞர்கள் 20-60 லட்சம் வரை கைலஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு காத்துக்கிடக்கும் இந்த அவல நாட்டில் தொழில் அதிபர்கள் சார்ந்து இவ்விதமான படங்கள் எடுப்பதின் மனநிலை தான் என்ன?
நசறுதின் ஷா(Naseeruddin Shah), டிஸ்கா சோப்ரா(Tisca Chopra), சயானி குப்தா (Sayani Gupta) and கரன் பண்டிட் (Karan Pandit) போன்ற சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஷேக்ஸ்பியரின் 400 ஆம் வருட நாடக எழுத்துலகை நினைவூட்டும் விதமாக லண்டன் சினிமாவின் நிதி உதவியில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
இந்தியா மட்டுமல்ல உலக அளவில் பிரசித்தமாக வேண்டும் என்ற நோக்குடன் உலகத்தரமான படைப்பாக வெளிவந்த படம்.
நாதுர்ஷா குறிப்பிடுகிறார் எனக்கு மோசமான கதாப்பத்திரங்களில் நடிக்க பிடிக்கும். அதற்காக இப்படியுமா?
அடுத்து டிஸ்கா தான் நடித்ததில் வித்தியாசமான அம்மா கதாப்பாத்திரம் என்கிறார்.
இன்னும் பரைசாற்றுகின்றனர், இந்தப்படம் தற்கால இந்திய கலாச்சாரத்தை பொதிந்துள்ளதாம்.
தொழில்அதிபர்களுடைய குடும்பத்தையும் ஆடம்பரங்களையும் அவ்வீட்டு பெண்கள் நெறிகளையும் வரட்டுத்தனமான இடதுசாரி மனநிலையுடன் எடுத்த ஒரு திரைப்படம்.
ஒரு திரைப்படம் நேர்மறையான அல்லது எதிர்மறையான கருத்துக்களை சமூகத்திற்கு தர வேண்டுமா?
இந்தியாவில் இருந்து உலக அளவில் கொடி கட்டி பறந்த பல தொழில் அதிபர்களின் வாழ்க்கையின் சரிவு பயங்கரம். உதாரணம் சத்தியம் கணிணி நிறுவன நிறுவனர், பிரிட்டானியா பிஸ்கட்- உலக கிங் ராஜன் பிள்ளை வாழ்க்கை, சமீபத்தில் தற்கொலை/ கொலை செய்து கொண்ட ஜோயி அறக்கல் வரை.
இவர்கள் வியாபாரங்களில் கொடிகட்டி பறக்கையில் அதன் வெற்றியின் பலனை அனுபவிக்கும் அரசு, தோல்வியை தழுவுகையில் தற்கொலை அல்லது கொலைக்குள் செல்லும் அவலம் எதனால்.
இது போன்ற திரைப்படங்கள் தொழில்புரிபவர்களை பற்றிய ஒரு மோசமான அடையாளப்படுத்துதலை தானே கொடுக்கிறது.
ஒரு வியாபாரி எதிர் கொள்ளும் சவால்கள், அவர்களின் வியாபாரம் சார்ந்த அல்லது வாழ்வியல் பிச்சினைகளை உண்மைக்கு புறம்பாக அல்லது கொச்சையாக எடுக்கும் மனநிலையை சரி செய்ய வேண்டும்.
இந்திய தேசத்தில் பல திரைப்படங்களில் கொலைகாரன்கள், கொள்ளையர்கள், நாட்டு ரவுடிகள், ஏமாற்று போராளி கும்பல்கள், நாடக காதல் கும்பல்களை எல்லாம் புகழ்ந்து எடுக்கையின் தேசத்தின் வளர்ச்சி , மேம்பாடு சார்ந்த மனிதர்களை புகழவில்லை என்றாலும் தூற்றாது இருக்கலாம்.
பணக்காரர்களை திட்டும் கேலி செய்யும் மனநிலை வளரும் நாடுகளான நம்மை போன்ற ஏழை நாடுகளில் வளர்ச்சியை பாதிக்கும். காயடிக்கப்பட்ட மனநிலையை உருவாக்குவது நல்லது அல்ல.
தவிர்த்து இருக்க வேண்டிய படங்கள் இது.

இரவில் நமது ஆன்மா_Our Souls at Night


திரைப்படம் இரவில் நமது ஆன்மா_Our Souls at Night
பிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் எதிர்வீட்டுகளில் 48 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த முதியவர்கள் சந்திக்கின்றனர். ஒன்றாக வசிக்கலாமே என்ற விருப்பத்தை தெரிவிக்கிறார் முதிர் பெண்மணி ஜேன் லூயிசிடம்.
ஒரு மகளுக்கு தகப்பனான லூயிஸ், மனைவியை இழந்தவர். அவருடைய வயது ஒத்த நண்பர்களுடன் சந்திப்பு, சாயா குடிப்பது, கதைப்பது என காலத்தை தள்ளுகிறவர்.
ஜேன் அழைப்பு விடுத்ததும் , அதிர்ச்சியானவர், அவசரம் கொள்ளவில்லை ஆலோசித்து பதில் சொல்கிறேன் என்கிறார்.
அவர்கள் சந்திப்பு நட்பாகி காதல் கொண்டு, சேர்ந்து உலகறிய வாழலாம் என முடிவெடுக்குகையில், ஜேனின் மகன் தன் மகனை பார்க்க வேண்டிய பொறுப்பை தாயாரிடம் கொடுக்கிறார்.
சிறுவன் மனிதர்களிடமே பேச விரும்பாத மனநிலையில் கைபேசி விளையாட்டில், எப்போதும் கைபேசியுடனே காலத்தை கழிக்க பழக்கப்பட்டவன்.
தன் அப்பா வழி பாட்டியுடன் தங்க விருப்பமில்லாது ஆனால் வேறு வழியற்று பாட்டி வீட்டில் தங்கி இருக்க முடிவெடுக்கிறான்.
பின்பு சிறுவனுடன் விளையாடுவது,சிறுவனை பயணம் அழைத்து போகுவது என லூயிஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்கிறது. சிறுவனுக்கும் லூயிசை பிடித்து போக சிறுவன் கைபேசியை தானாக தவிர்த்து, லூயிஸ் நட்பில் மகிழ்ந்து படம் வரைய கற்கிறான், லூயிசுடன் பயணிக்கிறான் லூயிஸ் பரிந்துரையில் ஒரு நாயை வளர்க்க ஆரம்பிக்கிறான்.
இப்படியாக இருக்கையில் ஜேனின் மகன் வந்து சேர்கிறான்.
தாயின் புது உறவில் மகனுக்கு விருப்பவும் இல்லை. அதிலுள்ள பல பிரச்சினைகளை சொல்கிறார். லூயிசை பற்றிய எதிர்மறை எண்ணங்கள், தன் தாயார் லூயிசுடன் பழகுவதை ஏற்று கொள்ள தடுக்கிறது.
தனது மனைவி பிரிந்து போய் விட்ட நிலையில், தன் மகனை வளர்ப்பதற்கு தாயின் உதவியை நாடுவதுடன், தன்னுடன் தங்க கேட்கிறான்.
அவருக்கோ மலர்ந்த காதலை விட்டு போக மனம் வராவிடிலும் தன் தனிப்பட்ட விருப்பத்தை விட தாய்மையின் கடமையில் உந்தப்பட்டவராக பேரனுக்காக தன் வீட்டை விற்று விட்டு, லூயிசை பிரிந்து, மகன் ஊரில் குடிபெயர்கிறார்.
லூயிஸ் பழைய படி தன் தனிமை உலகில்,தானே சமைத்து, தானே உண்டு ஆனால் இளமையில் விட்டுப்போன படம் வரைதலை மறுபடியும் துவங்குகிறார்.
ஒரு பெண்ணுடன் நேசம் கொள்ளுதல் என்பது அவளை சொந்தமாக்குவது அல்ல, அவள் மகிழ்ச்சியில், துன்பத்தில், பிரச்சினையிலும் பங்கு பெறுதல் என்ற புரிதலில் ஜேன் எடுத்த முடிவை ஏற்று கொள்கிறார் லூயிஸ்.
இருவரும் இடத்தால் விலகியிருந்தாலும் மனதால் பிரியாத நிலையில் தங்கள் நட்பை கைபேசி ஊடாக தொடர முடிவு செய்வதுடன் கதை முடிகிறது.
ஆண் பெண் உறவிலுள்ள நட்பும், அன்பும் புரிதலும் அழகாக படமாக்கிய திரைப்படம்.
இரு மனிதர்கள் உறவில்; புரிதல், தங்கள் குறை நிறைகளையும் பகிர்ந்து கொள்ளுதல், ஒன்றாக உணவு அருந்துதல், பயணம் செய்தல், கதைப்புதலும் உள்ளடங்கியுள்ளது என இரு மனிதர்களின் உறவை அழகாக சொல்லிய திரைப்படம்.
கலாச்சாரம் என்ற பெயரில் தனிநபர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது, குற்றப்படுத்துவது, அதிகாரம் செலுத்துவது என எதையும் கதைக்குள் முன்னிலைப்படுத்தாது இரு மனிதர்களின் அழகான இயல்பான உறவிலுள்ள சுதந்திரத்தின் தேவையை எடுத்து சென்ற விதம் அருமை.
முக்கிய கதாப்பாத்திரங்கள் இருவரும் 50 வருடங்களுக்கு பின் மறுபடியும் நடித்து உள்ளனர்.
திரைக்கதையை சலிப்பில்லாது நகத்திய விதம், கதையிலுள்ள சுவாரசியம் கதாப்பாத்திரங்களின் மாறும் தன்மை( transition), குழந்தைகளை எப்படியாக பராமரிக்க வேண்டும் என்ற படிப்பினையும் எந்த பரப்புரையும் இல்லாது இயல்பான நிலையில் அமைதியான ஓடத்தில் பயணித்த இரு நபர்கள் மனநிலையை சொல்லிய திரைப்படம்.
ஜேன் லூயிசை மறந்து விட்டாரோ என வருத்தம் கொள்கையில் இரு மனிதர்களின் அன்பு என்பது அடுத்து இருப்பது மட்டுமல்ல நெடு தூரத்தில் இருந்தாலும் மனதால் சேர்ந்திருப்பது என்ற கருத்தாக்கத்தில் அவர்கள் மறுபடியும் கைபேசியூடாக கதை பேச ஆரம்பிக்கையில் திரைப்படத்தை முடித்துள்ளனர்..
கென்ட் ஹாரப்ஃன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
அமெரிக்கன் முன்னாள் அதிபர் கிளிண்டன் முகச்சாயலுள்ள ரோபட் ரெட்போர்ட் நடிப்பு அபாரம். அவருக்கு போட்டியாக போஃண்டாவின் நடிப்பு அதிலும் சிறப்பு.
ஒவ்வொரு சட்டத்திற்கும், காட்சிக்கும் கொடுத்துள்ள ஆழவும் ( deep) மெனக்கெடலும் (treatment) அருமை.
இயக்குனர் பட்ராவின் கற்பனையும் அதை காட்சியாக வடித்த அவருடைய திறமையையும் பாராட்ட வேண்டும்.
காட்சியல் அழகியலுக்கும் முக்கியவத்துவம் கொடுத்த ரசனையான திரைப்படம்.
2018 ல். சிறந்த காதல் படத்திற்கான கோல்டன் ட்ரெயிலர் விருது பெறப்பட்டுள்ளது.
முதியவர்கள் வாழ்க்கையை மையக்கருத்தாக வைத்து முதியவர்களின் மனநிலையை ஆக்கபூர்வாக நம்பிக்கையூட்டும் விதமாக சொல்லியுள்ளதால் நான் விரும்பிய படங்களில் இதையும் சேர்க்க விரும்புகிறேன்.
தமிழகத்தில் திரைப்பட ஆட்கள், முதியவர்கள் என்றாலே இகழ்ச்சி, எள்ளாடல், கொலை உணர்வு துன்புறும் வதைக் கதைகளை தேர்வு செய்யாது; வயதானவர்கள் உணர்வுகளையும் மதிக்கும் இது போன்ற மனிதநேயத்தை குறிக்கும் படங்கள் எடுக்கும் காலம் விரைவில் வரவேண்டும.