9 Nov 2018

96 பப்பி காதல் - திரைப்பார்வை

பல நாட்கள் காத்திருப்பின் பின் 96 திரைப்படம் பார்த்தாச்சு.
22 வருடங்களுக்கு பின் நண்பர்கள் சந்திப்பது வரை அருமையான படம். விருவிருப்பான திரைக்கதை. அதன் பின்பு அப்படத்தை காண பார்வையாளர்களுக்கு பொறுமையும் சகிப்பு தன்மையும் கொஞ்சம் அதிகமாகவே வேண்டும். விஜய்சேதுபதியின் ராமசந்திரன் என்ற கதாப்பாத்திரத்தை ஒரு பாட்டுடன் ஆளுமையா காட்டிவிட்டு அப்படியே மழுங்கலடித்து விட்டனர்.

96 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மிடித்த நண்பர்கள் சந்தித்து கொள்கின்றனர் .22 வருடங்களுக்கு பின் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான சந்திக்கும் தருணம் ஜானு மலேஷியாவில் இருந்து வருகிறார். ஜானு கதாப்பாத்திரம் அன்றைய பெண்களின் மிடுக்கை பிரதிபலிப்பது அருமை. எப்போதும் ஒரு படி முன்னே சிந்திக்கும், செயலாற்றும் பொறுப்பான கதாப்பாத்திரம். நண்பர்களை காண தன் மகளை மலேஷிவில் விட்டு விட்டு ஒரு நாள் விடுமுறை என வந்து சேர்கின்றார். ஜானுவை கண்டதும் ராமசந்திரன் தலைசுற்றி விழுகின்றாராம் வெட்கப்படுகின்றாராம்(இதுவெல்லாம் ஓவரு). பின்பு இரவானது எல்லோரும் பிரிய ராமசந்திரனிடம் ஜானுவை ஹோட்டலில் விட்டு விட்டு போகச்சொல்கின்றனர்.

நண்பி. ”அவளை கொண்டு விட்டுட்டியா” என ராமிடம் கேட்க; அடுத்து ”நீ எங்க இருக்க” என ஜானுவிடம். இப்படி இயக்குனர்; பார்வையாளர்களை அவர்கள் படுக்கை அறைக்கு அழைத்து செல்லும் தமிழ் முட்டாள் தனத்துடன் நகர்த்தி, மலேஷியா போனாளா இல்லையா என உளவியல் சென்றிமென்றுடன் முடித்துள்ளார். ஜானுவோ உன்னுடன் பேச வேண்டும், உன்னுடன் இருக்க வேண்டும் என்ற உரையாடலுடன் அழகான மனித மாண்பை வெளிப்படுத்துகின்றார். மலேஷியாவில் இருந்து வந்த தோழியை விருந்து முடிந்ததும் ஒவ்வொருவரும் தனியாக விட்டு சென்றிருப்பார்களா? அப்ப்டியே சென்றிருந்தாலும் 40 வயதை கடந்த தோழமைகள் தங்கள் நண்பர்கள் பற்றி சிறுபிள்ளைத்தனத்துடனா யோசித்திருப்பார்கள்?

நடு இரவில் ஜானுவின் அறையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர், இரெயிலில் பயணிக்கின்றனர், ராம் வீட்டில் தங்குகின்றனர். எல்லா நொடியிலும் இயக்குனரின் பார்வை கதையிலோ கருத்திலோ அல்ல அவர்கள் வேலியை தாண்டி நடந்து கொண்டார்களா என்ற சந்தேகப்பார்வை தான்!!! அதில் ஜானு தூங்கும் இடத்தில் தாலி சென்றிமென்றையும் புகுத்தி விட்டனர். பள்ளி குழந்தைக்காதலில் வீழ்ந்த இரு நபர்கள் வெகுநாட்கள் கடந்து பொறுப்புடன் சந்தித்து கொண்ட போது என்ன நடந்தது என்ன நடக்க்க போவுது என்ற இயக்குனரின் கொச்சை பார்வை இருக்கே?

பத்தாம் வகுப்பு மாணவன் தந்தையின் கடனால் இரவோடு இரவாக சென்னை ஓடிப்போய் வாழ்ந்தார் என்று முடித்திருந்தால் ராமசந்திரன் கதாப்பாத்திரம் தப்பித்திருக்கும். யாரோ உதவியுடன் ஜானு படிப்பதை அவதானிக்கின்றார், உடுத்தி வந்த சேலைக்கலர் கூட நினைவு இருக்கிறது. ஜானுவை பிந்தொடர்ந்த விடலை பையனைக்கூட அடித்துள்ளான் ஆனால் ஜானுவை மட்டும் நேரில் பார்க்க துணியவில்லையாம். அதற்கு வாசந்தி உதவி வேற...!!????

எல்லா தருணங்களிலும் மிகவும் சரியாக நடந்த ஆளுமை கொண்ட ஜானு தனது 40 வது வயதில் கழிவறையில் இருந்து கொண்டு கதறி கதறி அழுகின்றாராம். தன்னால் காதலன் கிரோணிக் பாச்சிலாராக இருக்கிறான் எனத்தெரிந்ததும் ”நீ கன்னி கழியாதவனா? என்ற கேள்வி வேற. அடுத்து காதலன்; நீ சந்தோஷமா இருக்கியா என்றது, நான் அமைதியா இருக்கிறேன், பிரச்சினை இல்லை என்ற மழுப்பல் பதில் வேற....பல சீனுகள் நெருடல், லாஜிக் களைந்து கொண்டது, ஒரே நாளில் சந்தித்து மகிழ்ச்சியா பிரியா வேண்டிய 40 வயது மத்திய வயது நண்பர்கள் பதின்ம வயது பிள்ளைகளை போல் அழுது வழிஞ்சி, ஜானுக்காக ஒரு மலேஷியா டிக்கட் எடுக்க வைத்து நாடகத்தனமாக மாற்றி; ஜானு என்ற கதாப்பாத்திரத்தையும் உடைத்து படத்தை முடித்துள்ளனர்.


28 வருடங்களுக்கு பின்பு சந்தித்தபோது; நாங்கள் படிக்கும் வேளையில் மிகவும் பிரபலமாக இருந்த காதல் கதையின் கதாநாயகனான நண்பனிடம் ... “இப்போது என்ன தோன்றுகின்றது உன் பள்ளி காதலை பற்றி? எனக்கேட்ட போது. அவன் மறுமொழி சிரிப்புடன் சொன்னது இப்படியாக இருந்தது, அதை நினைத்தால் ஒரு வெட்கம், சே .......அது ஒரு குழந்தைத்தனமான விளையாட்டு. காதல் என விழுந்தனால் ஒரு பெண்ணிடம் மட்டுமே பேச்சு, சிந்தனை என என் பள்ளி பருவம் சுருங்கி விட்டது. அப்படி அல்லாது நட்பின் வழி நடந்திருப்பேன் என்றால் நிறைய தோழிகள் கிடைத்திருப்பார்கள்; அன்றே உங்கள் அனைவரிடவும் நிறைய பேசியிருப்பேன் என வருத்தப்பட்டார். பள்ளி நண்பர்களுடன் மறுபடி கதைக்கும் போது ” என்னடா எப்படி இருக்கேன்னு கேட்கும் தொனியும் , உரிமையும், சுதந்திரவும் காதல் வயப்பட்டு தோல்வியை கண்டவர்களால் அனுபவிக்க இயலாது என்றே நினைக்கின்றேன். வாழ் நாள் முழுக்க ஒரு அவமானத்தின் , அவநம்பிக்கையின் சோகத்தின் ஒரு நிழல் தொடரத்தான் செய்யும்.
படிக்கும் பருவத்தில் காதலை விட நட்பு பேணுவதே கர்வம். பள்ளி நண்பர்களிடம் இப்போது கதைக்கும் போது நம்மையறியாது குழந்தைகளாக மாறி விடுகின்றோம். வாழ்க்கையில் சந்தித்த கசப்புகளை, துயர்களை மறந்து எழுகின்றோம். ஆனால் இப்படத்தில் சந்தேகப்பார்வையில் நண்பர்கள் பிரிவதே அபத்தமாக இருந்தது.

விஜயசேதுபதி கதாப்பாத்திரப் படைப்பு சொதப்பி விட்டது. ராமசந்திரன் கதாப்பாத்திரம் விமர்சனத்தை எதிர்கொண்ட காரணவும்; முழுவளர்ச்சி பெறாத வெறும் ’சென்றிமென்று இடியட்”டாக முடித்ததால் தான். மாணவிகளுடன் பேசும் முறையும் ஒரு மாணவி கண்ணால் அநியாயத்திற்கு வழிவதும் ஐயோ கொடுமை.......
96 ல் அண்ணாத்தே அண்ணாத்தே ந்னு ஒரு புள்ளை உடன் சைக்கிளில் பயணிக்கின்றது. எந்த ஊரில் இப்படியான சுதந்திரத்துடன் தமிழ் குழந்தைகள் வளர்ந்தார்கள் என அறிய ஆவலுடன் உள்ளேன். சூட்கேசில் ஜானுவின் ஒரு ஜோடி உடையையும் சேர்த்து வைத்ததுடன் படத்தை முடித்தது; ராமசந்திரனின் புகைப்பட மாணவியை பற்றி ஜானு பிரத்தியேகமாக ராமசந்திரனிடம் எடுத்துரைப்பது என அடுத்த பகுதி படத்தை எடுக்கவும் பாதை அமைத்துள்ளனர்.

இப்படி இருவர் சந்திப்பு படுக்கையுடன் முடிந்ததா?அல்லாது தொடாது தமிழ் பண்பாடு தாலி சென்றிமென்றிடன் பிரிந்து சென்றனரா என்ற இயக்குனரின் தேடுதலை முடித்துள்ளார்.

தமிழ் சமூகம்; உணர்வு சென்றிமென்று முட்டாள்த்தனத்தில் மீண்டு வந்தால் கூட இந்த இயக்குனர்கள் விடமாட்டார்கள் போல. அப்படி இரு மனிதர்களின் ஆளுமை, குணம் நலன் விருப்பம் எல்லாம் ஒரு குறுகிய பார்வையில் மையம் கொள்ள வைத்து அழகான மென்மையான, கருத்தாக்கம் கொண்ட மனித உணர்வுகளை அதை அதன் நல்ல பாதையில் வெளிப்படுத்தி கொண்டாடவேண்டியதை கதறி கதறி அழ வைத்து படத்தை முடித்தது படத்தில் மேல் இருந்த எதிர் பார்ப்பை முடித்தது ஏமாற்றமே.

ஒரு பப்பி காதலை பிரமாண்டப்படுத்தி ஒரு கேலி காதலாக மாற்றியுள்ளனர்.
இருபாடல்கள் அருமை. முதல் பாடலில் பாடல் மட்டுமல்ல காட்சி அமைப்பு கூட அழகு.

1 Nov 2018

பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை



முதல் காட்சியே கறுப்பி என்ற ஒரு  நாயை இரெயில் தண்டவாளத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியுடன் திரைப்படம் துவங்குகின்றது.   சமூக அவலத்தை எடுத்து சொல்லும் கருத்துள்ள, சோகத்தை அள்ளிகொட்டும் கிராமத்துப்பாடல்.

அடுத்து ஆங்கில மீடியம், தமிழ் மொழிக் கல்வி என கல்லூரிக்குள் பார்வையாளர்களை அழைத்து செல்கின்றனர்.  அங்கு கிடைக்கும் ஒரு பெண் நட்பு கதாநாயகனுக்கு  படிக்கும்   உந்து சக்தியை தருகிறது.  கல்லூரித்தோழி தனது நண்பனான கதிரை தன் வீட்டு  கல்யாணத்திற்கு அழைப்பது, கதிர் அவமானப்படுத்தப்படுவது என கதை நகருகிறது.

சாதாரணமாக தமிழ்திரைப்படங்களில் போன்று, வலுகட்டாயமாக பெண்ணை கடத்தி செல்லுவது , திருமணம் என இல்லாது , மாறுபட்ட ஆளுமையான கதிராக படம் நிறைவு பெறுகின்றது இப்படத்தின் சிறப்பாகும்.

முதன்மை கதாப்பாத்திரத்தை இரெயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை முயற்சி செய்வதும், நாயை இரயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை செய்வது போன்ற காட்சிகள் விழுப்புறத்தில் கொலையுண்ட இளவரசனை நினைவூட்டுவதை மறுக்க இயலாது..

தமிழ் மண்ணின் கலைகள், இயல்பான உரையாடல்கள், கலைகளை உருவகப்படுத்திய விதம் அருமை.  . கதைத்தளத்திற்கு பொருந்தும் பாடல் வரிகள், பாடல்கள் வரிகள் இசை அழகு. கதிரின் நடிப்பும் அருமை. பரியன் தந்தையாக நடித்த நடிகரின் நடிப்பு அபாரம். திரைக்கதை விருவிருப்பாக நகர்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித்தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஆகும்.   சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2018 செப்டம்பர் 28 ஆம் நாள் திரைக்கு வந்தது.

பிரான்ஸ் Toulouse இந்தியத்திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை பெற்றது.  புதுச்சேரி நவதர்சன் திரைப்படக்கழகம் சார்பில் இந்திய திரைப்பட விழாவில் சங்கர்தாஸ் சுவாமிகள் விருதினையும் பெற்றுள்ளார் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ்.   2019 க்கான சிறந்த திரைப்படத்திற்கான     விருதினை யமகா பஃசினோ திரைவிழாவில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முரண்கள் :

முதன்மை பெண் கதாப்பாத்திர படைப்பு:  படிப்பில் கெட்டி ஆனால் சமூக அறிவில் சூனியம்.  90 களிலுள்ள பெண்களை போல் உணர்ச்சிவசப்படுகின்றார். பையன் பிரச்சினையில் உச்சத்தில் உயிர் போகும் போராட்டத்தில் உள்ளார்; பெண் கதாப்பாத்திரமோ மிட்டாய் வாங்கி கொடுத்து பக்குவமற்று   உருகுகிறது, அழுகின்றது, சிரிக்கின்றது, சினுங்குகின்றது.!!!

கல்லூரி முதல்வர்: கல்லூரி முதல்வர் பதவியை தன்னால் திரண்பட நேரடியாக செயல்படுத்த இயலாது மறைமுகமாக ஒரு கோஷ்டிக்கு இடம் கொடுத்து இன்னொரு கோஷ்டியை அடக்க நினைக்கும் நிர்ஜீவனான அதிகார நிலைபாடு. படிப்பு நம்மை உயர்த்தும் என்ற நல்ல கருத்தை முன் வைய்த்தவர்.  நாம் க்கல்வி கற்று உயர்பதவிக்கு வருவதால்  அடுத்தவன் நம் முன் கைகட்டி நிற்பான் என போதிக்கின்றது;  கைகட்டி நிற்பதும், கைகட்டவைத்து நிற்க வைக்கப்படுவதும் இழிவு நிலையே.

மாணவர்களுக்குள் ஒரு பிரச்சினை என்றதும் சரியான நடவடிக்க எடுக்க இயலாது  “நம்மால் அவன்களை அடக்க இயலாது, இவன் அடக்கட்டுமே, போராடி சாகட்டும் போன்ற வசனங்கள் சமூக வளர்ச்சிக்கு என்ன சொல்ல வருகிறது என சிந்திக்க வேண்டியுள்ளது.

பேராசிரியை கதப்பாத்திரம் : மாணவரும் மாணவியும் பேருந்து நிலையத்தில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். கரடி மாதிரி புகுந்த ஆசிரியையை கண்டதும் மாணவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆசிரியையோ,” நான் உனக்கு தேவதையா, எத்தனை தேவதை உண்டு என வினவும், வழியும் உரையாடல்கள் அரோசகமாக இருந்தது.  இரு மாணவர்களுக்கு  பிரச்சினை என்றால், சரியாக பிரச்சினையை புரியவைக்காது பெண் மாணவியிடம்” அவன் உன்னை காதலிக்கான்” என கல்யாணத் தரகர் வேலை செய்யும் அவலம்.

பெண் அப்பா கதாப்பாத்திரம்:  கல்யாணத்திற்கு வந்த பையனை தேவையில்லாது விசாரிப்பது, அறையில் பூட்டி வைத்து அடிவாங்க காரணமாக இருப்பது, அப்புறம் கெஞ்சுவது, கடைசி எல்லாம் முடிந்த பின்பு போய் ” என்ன நடக்குமோ தெரியாது அப்ப பாப்போம்” ன்னு எதிர்பார்ப்பை உருவாக்குவது. இவ்வளவு நேர்மறையான தகப்பன் தன் பெண் பிள்ளையிடம் வினவாது  இன்னொரு பெற்றோரின் மகனை அடிக்கும் மன நிலை என்னது.

ஆணவக்கொலைகள் செய்யும் முதியவர் கதாப்பாத்திரம்:  எந்த படத்திலும் காணாத வித்தியாசமான வில்லன்.  இரக்கத்தோடு மதிப்புடன் காண வேண்டிய முதியவர்களை கண்டாலே இனி பயம் தான் வரும்.

அரசியல் சட்டம் படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே ஜாதிய கட்டமைப்பில் நின்றுகொண்டு கல்வியை தொடர்ந்தால், சாதாரண கல்லூரி மாணவர்களின் நிலை தான் என்ன!  இளம் தலைமுறையிடம் இருந்து   அரசியல் மாற்றத்தை எதிர்நோக்க இயலுமா?

சமூகத்தில் புரையோடிகொண்டிருக்கும் அழுகி கொண்டிருக்கும் ஜாதி என்ற புண்ணை நவீன சிந்தனையால் தீர்வு தேடாது அடிமட்ட, சிந்தனையுடன் வன்மத்துடன் எதிர்கொள்வது போல் எடுக்கப்பட்ட பல காட்சிகள் புண்ணில் வேல் பாய்ப்பது போல் தான் உள்ளது.

சமூகத்தில் மற1ந்து வரும்  ஜாதிய அடையாளங்களை  படமிட்டு காட்டி இளம் சமுதாயம்  மனதில் ஒரு வன்மத்தை பரவவும் பல காட்சிகள் காரணமாக அமையும்.  வரலாற்று சம்பவங்களை  வைத்து எடுக்கப்பட்ட சமூக கருத்துள்ள ஆனால் வன்முறை ஜாதித் திரைப்படமாகவே உள்ளது.

ஒரு காட்சிyஇல்  மாணவர் கதிர் மாணவிகள் கழிவறையில் விழ வைக்கப்படுவார். மாணவிகள் அலறுவதும் கதிரை கண்டு பாம்பை காண்பது போல் நெளிவதும் ஓடுவதும் மிகவும் அபத்தமாக உள்ளது.  சட்டம் படிக்க வரும் மாணவிகள் இந்தளவு கோழைகளும் பயந்தாம் கொள்ளிகளுமா?

எத்தனை யுகங்களுக்கு தான் கல்லூரி சூழல், கல்லூரி பேராசிரியர்களை குற்றவாளிகளாக உருவகுப்பீர்கள்? அரசியலமைப்பு சட்டத்தில் கீழ் இயங்கும் அரசு , அரசின் கீழ் இயங்கும் சுதந்திர இந்தியாவின் கல்வி நிலையங்களில் நிலை இது தானா?

திரைப்படம் என்பது கோஷம் அல்ல, அறிவுரையல்ல,   ஆனால் மனித மனதை  சிந்திக்கவைக்க வேண்டும். மனித மனதில் அழகு உணர்ச்சிகளை உணரச்செய்பவை  ஆகும். மனிதர் மத்தியில் எந்த பெயரிலும் வன்மம் விதைக்கும் கருவியாக மாறக்கூடாது.   தமிழக மாணவர்கள் மனங்களிலும் பெரிய எதிர்மறையான அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல. தமிழ்கத்தில் புதிதாக உருவாகும் நீல அரசியலின் பிரசாரப்படங்களில் இதையும் உட்படுத்தலாம்.

 

 

13 Oct 2018

மீ….. டு…..


பாலியல் தேவை குற்றமல்ல, இயற்கை என பல கருத்துகக்ள் கொண்ட சமூகம் ஆகும் இந்தியா.  பெண்கள் துன்புறும் நாடுகளில் ’ஒன்றாவது’ இடத்தில் இருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் தான் ஒருவன் பாலியல்தேவைக்கு அழைத்தான் என  பல வருடங்களுக்கு பின் குற்றம் சாருவதும் அதை ஆதரிப்பதும்  அணிசேருவது விகடமாகத்தான் உள்ளது.
ஒருவனுக்கு பாலியல் தேவையின் பொருட்டு ஒருவளை அணுகினால் எனக்கு விருப்பமில்லை என்று விலகுவது/ஏற்பது அவர்கள் தனி நபர் விருப்பம்,  தேர்வை பொறுத்தது.  ஆனால் ஒருவனின் சபலத்தை வைத்து விளையாடி விட்டு இவன் ஒருகாலத்தில் என்னை அழைத்தான் என கதை விடுவது பல உண்மையான பாலியல் சுரண்டல்கள் வெளிச்சத்திற்கு வராது செய்து விடும்.

அனுராதா ரமணனிடம் மத தலைவர் முதலில் வேண்டுதளாக, பின்பு அச்சுறுத்தலாக.... ஒரு கட்டத்தில் கட்டாயப்படுத்தபட்ட  பின்பும் ’என்னால் இயலாது’ என்று ஒதுங்கிய அவரின் தைரியத்தை பாராட்டியிருக்க வேண்டும். அவர் பிற்பாடு ஜெயேந்திரர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற போதும் இந்த சமூகம் அவருக்காக குரல் எழுப்பவில்லை. ஜெயேந்திரன் ஆள் அனுப்பி வருவித்தது போல் இன்றைய சூழல் இல்லை. தொழில்நுட்ப வாளர்ச்சியால் பெரிதும் தகவல் தொடர்பு மாறி விட்டது. இன்று சமூகவலைத்தளங்கள் ஊடாக பாலியல் இச்சைகளை எளிதாக தெரிவிப்பதை காண்கின்றோம். இந்த இடங்களில் எல்லாம் பெண்கள் போராட்ட கொடியோடு கிளம்பியால் வாழ்க்கையே இதன் பின் போய் துலைக்க வேண்டி வரும். இது போன்ற அற்ப மனிதர்களை தங்கள் பக்கம் இருந்து விலக்குவதும் அதையும் மீறி வந்தால் சட்டத்தை அணுகுவதே  காலச்சிறந்தது.

இது ஒரு புறம் இருக்க பாலியல் இச்சையுடன் நடந்துகொள்வது கட்டாயப்படுத்துவது மட்டுமே பாலியல் சுரண்டலா? பல பெண்களை வேட்டையாட அல்லது சிறுமைப்படுத்த அவளுக்கு 100 பேரோடு பழக்கம். அவ திமிர் பிடிச்சவா? என அவதூறு பரப்பும் ஈனப்பிறவிகள் செய்வதும் பெண் பாலின வெறுப்புணர்ச்சியால் வரும் வன்புணர்வு தான். இவர்களுக்கு என்ன தண்டனை?

இன்று வேலை இடங்களில்; மேலதிகாரிகளின் நற்மதிப்பைப்பெற, உழக்காது ஊதியம் பெற, தகுதியற்ற அதிகாரம் பெற என பல பெண்கள் தங்கள் பாலியல் தகுதியை பயண்படுத்துகின்றனர். அந்த ஆண்கள் உதவியுடன் பலரை துன்புறுத்தி ஆட்சி செய்யவும் செய்கின்றனர்.
இன்றைய சமூக நிலையில் ஒரு சில  பெண்கள் தாங்கள் நினைத்ததை குறுக்கு வழியாக பெற பணம் அல்லது தன் உடலை தாரைவார்க்க தயங்குவது இல்லை என்பது நிர்மலா தேவி போன்ற நிகழ்வில் காண்கின்றோம். இப்போது மாட்டப்பட்டதால் சிறைச்சாலையில் உள்ளார். ஒரு வேளை அந்த பெண் நினைத்த பெரிய பதவியை அடைந்திருந்தால் இதுவெல்லாம் சகஜம் இதிலென்ன என்ற நினைப்புடன் பலர் அந்த பெண் முன் கைகட்டி சேவகம் செய்து கொண்டு இருந்திருப்பார்கள்.  இதற்கு எல்லாம் சரிப்பட்டு வராத பெண்கள் மாற்றலாக்கப்பட்டு, அதிக வேலைப்பழுவில் உட்படுத்தப்பட்டு கேவலப்படுத்தி பழியை தீர்த்து கொள்ளும் சமூகம் தான் இது. பல பெண்களுக்கு; நியாயமாக, எல்லா தகுதி இருந்தும் கிடைக்க வேண்டிய பல நன்மைகள் சில பெண்களின் குறுக்கு வழி செயலால் இழக்கும் பல உண்மைகள் உண்டு.


ஒருவன் நெருங்கினால் ’தனக்கு பிடிக்கவில்லை; வேண்டாம் எனில் நிலையாக நின்று எதிர்ப்பது ஆகும் பெண்களின் தைரியம், பெண்பலம். அல்லாது எல்லா நலன்களையும் பெற்று ஆட்சியையும் அதிகாரத்தை அனுபவித்து விட்டு பாலியலாக துன்புறுத்தினான் என குற்றம் சாட்டுவதில் என்ன  பெண் உரிமை உள்ளது. வீழ்ந்து எழுவதில் அல்ல விழாது செறுத்து நிற்பதும்  பெண்களின் பலம் தான். .
ஒரு பாடகி அல்லது ஒரு நடிகை எதிர்கொண்ட பாலியல் பிரச்சினைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இங்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏழை எளிய எதிற்க வலுவற்ற பெண்களுக்கு கொடுக்கின்றனரா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்கான ஒரு அமைப்பு கூட நம் தேசத்தில் இல்லை. மகளிர் காவல் நிலையங்கள் நியாயமாக நடந்து கொள்ளகூடிய சட்ட அலுவலகமாக  எழ வேண்டியது காலத்தின் அவசியமாகும். வீட்டின் படி தாண்டியவளை கேவலமாக பார்க்கும் சூழலில் தான் வாழ்கின்றோம்.

மூர்க்கமாக தன்னை எதிர்க்கும், தனக்கு கெடுதலை மட்டும் விளைவிக்கும் பல ஆண்களை செறுக்க வழியே அற்று  இருக்கும் பெண்கள் என்னை பாலியலாக துன்புறுத்தினான் என்ற ஆயுதத்தை எடுக்கும் சூழல் மட்டுமே பல இடங்களில் உள்ளது.

வேலை இடங்களில் மதிக்கப்படும் இனமாக பெண்களை பார்ப்பதில்லை. தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை அவ…. பொம்பளைன்னு…. மிகவும் எளிதா கேவலப்படுத்தும் ஆண்களை கண்டுள்ளேன். பெண்களை நேரடியான பாலியல் தொல்லைக்கு உட்படுத்த இயலாத;  நாலு ஆம்பளை ஒன்று  சேர்ந்தா அவ…இருக்கால்லே ஹீ…ஹி ன்னு வார்த்தைகளால் பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்குவதையும் கண்டுள்ளோம்
.
மீ….. டு….. போன்றவை அதன் நோக்கத்தில் இருந்து வழுகாது அதன் உண்மையான குறிக்கோளோடு நகரவேண்டும். ஒரு சாதாரண காய்கறி சந்தையில்; சாலையில், கட்டிட தொழிலாளியான பெண்ணும் தன் கருத்தை பதியும் காலம் வர வேண்டும். அல்லாது வியாபார விளம்பர மோகத்தில் உள்ளவர்களின் கைகளில் ஆயுதமாக மாறக்கூடாது மீ….. டூ…….

ஆசீபா படு கொலைக்கு வாய் திறக்காத மேனகா காந்தி கூட களத்தில் இறங்க துணிந்துள்ளார். பெண்கள் வேலையிடத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதை தெரிவிக்க ஒரு அமைப்பு மனித வளத்துறை மூலம் உருவாக்கலாம். கல்லூரியில் வேலை செய்யும் பெண்ணுக்கு கல்லூரி நிர்வாகியே பாலியல் தொல்லை கொடுக்கும் போது எதிர்க்க வழியற்று உழலும் பெண்களுக்கு அரசு என்ன அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. சரியான திட்டங்களும் அமைப்பும் இல்லாது பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது கடினமே. இந்த எல்லா ஓட்டைகளையும் அப்படியே விடுத்து விட்டு மேல் வர்க்க பெண்கள் மீடியாவில் சொல்லும் புழுகு மூட்டை எல்லாம் பாலியல் தொல்லை என போராடினால் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான பாலியல் தொல்லைகளை கண்டு  தடுப்பது எப்போது? பெண் வீட்டில் வண்புணர்விற்கு உள்ளாகின்றார், காவல் நிலையத்தில், படிக்க செல்லும் கல்லூரியில், வேலைக்கு செல்லும் அலுவலகத்தில் என விமோச்சனமே இல்லாது பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எதிர்ப்பை தெரிவிக்க நிவர்த்தி செய்ய நல்ல அமைப்பு வேண்டும், அதைவிட உடனே எதிர்க்க பெண்களுக்குமன வலிமை வேண்டும்.




1 Oct 2018

இந்திய இறையாமையை கெடுக்கும் மதஅடிப்படைவாதிகள்!!!


ரஃபேல் ஊழல் மும்முரமாக விவாதித்து கொண்டு இருந்தனர். ஆட்சிக்கே பங்கம் வந்து விடும் அளவிற்கு உள்கட்சியிலே கலவரம் ஆரம்பித்தது.. அதோ வந்து விட்டது “பெண்கள் சபரிமலைக்கு செல்லும் தீர்ப்பு சட்டம்”. திருமணத்திற்கு புறம்பான உறவு குற்றமல்ல என்ற ’448 சட்டம் ’ நல்லவர்கள் எல்லோரும் கள்ளக்காதல் பற்றியும், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட ஆலய பிரேவசம்னம் பற்றி ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்.

பெண்கள் சபரிமலைக்கு போராடி செல்வதில் என்ன பெரிய விடுதலை வரப்போகிறது. எல்லா மதவும் பெண்களை அடிமைப்படுத்துவதும் துன்புறுத்துவதும் தான். மதவாதிகளின் கைகளில் சிக்காதிருந்தால் அவ்வளவிற்கு நல்லது. பெண்களுக்கு மலையேற விருப்பம் எனில் குஜராத் இருந்து துவங்கி கன்யாகுமரி கடலில் வந்து விடும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகான எந்த பகுதிக்கும் பயணம் செய்யலாம். பெண்கள் வேண்டாம், பெண்கள் இல்லாத இடம் வேண்டும் என ஆண்கள் செல்லும், அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்தாவது பெண்களே சபரிமலையை புரக்கணித்திருக்கலாம்.  ஆண்கள் சபரிமலை பயனம் ஊடாகயாது பெண்கள் இல்லாத சூழலையும் தெரிந்து பார்க்கட்டுமே.
பெண் எத்துறையில் இருந்தாலும் அது காவல் ஆகட்டும் நீதித்துறையாகட்டும், கல்வி ஆகட்டும்  ஏன் அரசியல் பணிகளில் கூட இரண்டாம் இடத்தில் தான் தள்ளப்பட்டு உள்ளனர். ஒரே வேலைக்கு பெண்கள் சம ஊதியம் பெறுவதும், வேலை பெறுவதிலும், வேலையிடத்திலும் படிக்கும், ஆளும் இடங்களில்  சம அந்தஸ்து கிடைக்க போராடியிருக்கலாம்.
பெண்கள் எதிர் கொள்ளும் ஏதாவது வழக்கிற்கு நீதித்துறை பெண் என்ற நிலையில் இருந்து பார்த்து சரியாக நீதி வழங்கியுள்ளதா? நீதிமன்றங்களில் வழக்காடும் பெண் வக்கீல்கள் நிலையே இரண்டாம் நிலை தான்.  ஏதாவது மதவாதி பெண்கள் நலனுக்காக பேசியுள்ளார்களா? அதுவும் இல்லை, வேலைக்கு போகிறவள் வேசி, வேலைக்கு போனாலும் வீட்டு வேலை பிள்ளை வளர்ப்பு, ஆணின் பெற்றோரை பார்த்து கொள்ளுதல் எல்லாவற்றிலும் சம அந்தஸ்து உள்ளதா? எல்லா பொறுப்பும் பெண்கள் தலையில் தான் கட்டிவைக்கின்றனர். கடவுள் கதைகளிலாவது பெண்ணுக்கு முன்னிரிமை உண்டா / அதுவும் இல்லை. பின் எதற்காக ஆலயம் செல்வதை பெண்கள் விடுதலையாக பார்க்கின்றனர் என தெரியவில்லை.

அடுத்த ஆயுதம் 497 என்ற சட்ட திருத்தம்
  திருமணத்துக்குப் புறம்பான பாலுறவு தண்டனைக்குரிய குற்றம் அல்ல ஆனால் அந்தக் குற்றத்தைக் காரணமாகக் காட்டி திருமண ஒப்பந்தத்தை மீறியமைக்காக விவாகரத்து கேட்கமுடியும் என்றே கூறுகின்றது.  https://www.theweek.in/news/india/2018/09/27/adultery-grounds-for-divorce--not-criminal-offense--supreme-cour.htmlஇந்த சட்ட திருத்ததை ஒரு ஆண் தான் கோரியுள்ளார். திருமணத்திற்கு புறம்பான உறவு பெணுவதில் ஆண்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றோம், சம உரிமை என்ற அடிப்படை உரிமைப்படி பெண்களுக்கும் தண்டனை கொடுங்கள் என்று வேண்டியுள்ளார் நீதிபதி இது தனிநபர் நெறிசார்ந்தது. இருவருக்கும் இந்த செயல் ’குற்றமல்ல’ ஆனால் இந்த செயலில் ஏற்படுபவர்களை விவாகரத்து செய்து விடும் உரிமை உண்டு எனக்கூறியுள்ளார். சொல்லப்போனால்  தனி நபர் உரிமையை மதித்து கொடுத்த  அருமையான தீர்ப்பு.  

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், நமது கலாச்சாரத்தின் அடிவேர், மதம், ஜாதியுடன் கலந்தது. ஆனால் இரு-மனம் சேராது கள்ள தொடர்பு வைத்து கொண்டு வாழும் திருமணம் திருமணம் அல்ல. நேர்மையா ஒப்பந்தத்தை மதித்து வாழுங்கள்,  இருவரில் ஒருவர் மீறினாலும் இருவரே மீறினாலும் விவாகரத்து வாங்கி விட்டு ஒப்பந்ததில் இருந்து விலகி விடலாம். கள்ள தொடர்பு வைத்து கொள்ள கொடுக்கு லைசன்ஸ் அல்ல, தம்பதிகளுக்கு கொடுக்கும் அச்சுறுத்தல். கள்ள தொடர்பில் ஏற்பட்டால் விவாகம் இரத்து செய்ய உரிமை உண்டு.

இதிலும் கள்ள தொடர்பு பேணும் தம்பதிகள் தான் பயப்பட வேண்டும் அச்சம் கொள்ள வேண்டும்.. இந்த முட்டாள் ஊடகவும் மக்கள் மனநிலைக்கு ஒத்தது போல்  செய்தியாகவும் சம்பவங்களாகவும் சட்டத்தை திரித்து கூறுகின்றது.

எல்லோருக்கும், மேற்குலகு, நாகரிக வாழ்க்கை வேண்டும்,. பயண்படுத்த பொருட்கள் வேண்டும். ஆனால் சட்டம் மட்டும் காலா காலத்திற்கு மாற்றம் பெறாத காலசூழலுக்கு ஒவ்வாத காட்டுமிராண்டி சட்டம் வேண்டும்.

இது ஒரு வழியில் போய் கொண்டிருக்கிறது என்றால் மைனாடிட்டி என்ற பெயரில்; இந்தியாவின் அரசியல்மைப்பு சட்டத்தை மதிக்காது கூவிக்கொண்டிருக்கும் மதவாதியை வளர்க்கின்றது இந்த மதவாதி அரசு. நாட்டில், மக்கள் உரிமைக்காக, மனித நலனுக்காக போராடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து பல மாதம் சிறைச்சாலையில் போட்டு தண்டிக்கும் அரசு; அடுத்தவர்களின்  மத நம்பிக்கையை உணர்வுகளை கேலி செய்து கலவரம் உருவாக்கும் கள்ள மதவாதிகளை சட்டத்தால் தண்டிக்காது வேடிக்கை பார்த்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் கலவரம் வர காரணமாக செயல்படுகின்றது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழக கலாச்சார அடையாளமான கும்பகோணம் ஆலயங்களை ’சாத்தான் கூடாரம்’ என பரப்பி வரும் கள்ள மதவாதியை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் தங்களின் முகநூல் பக்கங்களில் இருந்து கொண்டு அந்த நபர் கூறிய அத்துமீறல் கருத்துக்கு நிகராக கிறிஸ்தவ மதத்தை பற்றி கேவலமாக கருத்து பகிர்ந்து கொண்டு; உண்மையான பன்முகத்தனமை கொண்ட கிறிஸ்தவர்களை மன வேதனைக்கு உள்ளாக்குகின்றனர். நாலுமாவடி கிறிஸ்தவம் அது ஒரு தனி நபர் கிறிஸ்தவம். கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கோ,கிறிஸ்தவ தலைமைக்கோ கீழ்படிந்தது அல்ல. எந்த வேலையும் அற்று. வீடு வீடாக காணிக்கை வாங்கி திரிந்த மனிதன் கோடிபதியாக மாறுகிறான் என்றால் இந்த ஊரில் உள்ள கிறிஸ்தவனின் அறிவீனம் தான். அங்கு சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் கிறிஸ்தவ மக்களிடம் இருந்து காணிக்கையாக வாங்கினது தான். ஆனால் அரசு கூறுவது ’வெளிநாட்டு பணம்’ என்று. கிறிஸ்தவர்கள் மதமாற்றுகின்றனர் என குற்றம் கூறி கொண்டே இது போன்ற தனிநபர் மதம் பரப்புவர்களை அரசியல்வாதிகள் சந்தித்து ரகசியம் ஒப்பந்தம் வைத்து அரசியல் நடத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. மதம் என்று ’மக்கள் இயக்கம்’ அல்லாது கார்ப்பரேட் ஆக மாறினதோ அன்று முதலே அரசுடன் இணைந்து ஊழல் செய்யும் அரசின் பங்காளிகளாகவும் மாறி விட்டது.
மத உணர்வுகளை தூண்டி விட்டதற்காக ஒரு பொதுநல வழக்கு பதிந்தாகக்கூட தெரியவில்லை. இவ்வகையில் பேசும் நபர் அப்படி முட்டாளும் கிடையாது. அந்த நபரின் பங்காளி தான் ”அடுத்தும் மோடியே பிரதமர்” ஆகுவார் என அருள்வாக்கு கூறியதுடன் மோடியை சந்தித்து ஆசிர்வாதவும் வாங்கி, வழங்கி சென்றதும்.  இந்த நாலுமாவடி நபரும் அரசியல் குறிவாக்கு சொல்வதில் சளைத்தவர் அல்ல. அடுத்த முதல்வரை தேவன் தேர்ந்து எடுக்க போகின்றார் என சோசியம் சொல்லி உள்ளார்.  https://www.facebook.com/suttavadai2/videos/1212345555596987/ யார் அந்த தேவ குமாரன் என்று தான் நோக்க வேண்டியுள்ளது. இது போன்ற பொறுபற்ற பேச்சுக்கள் அரசின் அனுமதியுடன், அரசுடன் இணைந்தே, மக்கள் கவனத்தை திருப்பும் நோக்குடன் வைரல் காணொளிகளை வெளியிடுகின்றனர் என்றே நான் சந்தேகிக்கின்றேன்.

பொறுப்பற்ற பேச்சால் சமூகத்தில் கலவரம் வெடிக்க வாய்ப்பு உண்டு. கிறிஸ்தவத்தில் பல நூறு பிரிவுகள் உண்டு. இதில் எந்த பிரிவு இது போன்ற முட்டாள் பேச்சு பேசினாலும்  அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஆபத்து தான். சொந்த தொழில் புரிந்து வரும் உழைக்கும் ஏழை எளிய கிறிஸ்தவ மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்..
அரசின் சூழ்ச்சியாகவே இதைக்கருதி, மதம் கடந்து, மத பாகுபாடுகள் களைந்து சமூக நீதிக்கு புறம்பாக, மனித நலனுக்கு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவர்களை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்..

கிறிஸ்தவத்திற்குள் நடக்கும் ஜாதி, சபைச்சண்டைகளுக்கு கணக்கே இல்லை. இதில் கேரளா, தமிழக ஆலயங்களை ’சாத்தான்’ என கூவிக் கொண்டு கலவரம் உருவாக்குபவர்கள் சட்டத்தால் கண்காணிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். அரசு இது போன்ற புல்லுருவிகளை பயண்படுத்தி கலவரம் கிளப்பி விடாது ஆரம்பத்திலே சட்டத்தால் தண்டிப்பது இந்திய இறையாமைக்கு நல்லது ஆகும்.

23 Sept 2018

மேற்குத் தொடர்ச்சி மலை!


ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்பட வேண்டும் காட்சி மொழி என்ன?திரைப்படம் என்ற ஊடகம்  எவ்வாறு  மக்களிடம் உரையாட வேண்டும் என்ற தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ’மேற்குத்தொடர்ச்சி’ மலை. என்ற திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும். இரானியன் படத்தை உலகப்படம் என கொண்டாடும் நம் இயக்கங்கள் தமிழில் ஒரு சிறந்த மக்கள் படம் வரும் போது பார்க்கவேண்டியதும் ரசிக்க வேண்டியதும் இது போன்ற படங்கள் மேலும் வர ஊக்கமாக  அமையும்.

தனது 11 வயது வரை கோம்பையில் பிறந்து வளர்ந்த இயக்குனர் லெனின் பாரதி, பிற்பாடு சென்னைக்கு குடிபெயிற்கின்றார். அவர் கண்டுணர்ந்த  மாந்தர்களை பற்றிய படம் தான் இது. அப்படத்தின் திரைக்கதையை இரண்டரை மணிநேரத்தில்  எழுதி முடித்தாக நேர்முகத்தில் கூறியுள்ளார்.

தமிழக கரைகாட்டில் வாழவழியற்ற சூழலில் கேரளா மலைக்காடுகளை தேடிப்புறப்பட்ட மனிதர்களின் கதை இது. கேரளா தமிழ் மலையாள மொழி அரசியல், பண்பாடு, வேலைவாய்ப்பு, மனிதர்களில் வாழ்வியல் என இப்படம் ஒரு காலத்தின் ஒரு நிலைப்பகுதியின் வரலாற்று படமாக மாறுகின்றது.  இந்த மனிதர்கள் மலைமுகடில் இருந்து ஏலக்காயை மட்டும் சுமந்து வரவில்லை தகவல்கள் பணம், கொடுக்கல் வாங்கல்கள் என மலைக்கு  கரைக்குமான பாலமாக தொடர்கின்றனர். அப்படியான சில மனிதர்களில் முக்கியமாக ரங்கசாமியின் வாழ்க்கையை சொல்வதே இக்கதை. 

ரங்கசாமி நல்லவர் மட்டுமல்ல உழைப்பாளி.  அவரின் ஆகப்பெரிய கனவு சொந்தமாக ஒரு இடம் வாங்க வேண்டும்  என்பதாகும்.  தனது திருமணத்தையும் விட ஒரு இடம் வாங்க வேண்டும், அதும் தன் தாயின் பெயரில் வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு வேலை பார்த்து வருகின்றார்.

ரங்கராஜின் ஒரு நாள் என்பது அதிகாலை நாலுமணியுடன் ஒரு  கட்டன் காப்பியுடன் ஆரம்பமாகின்றது. வழியில் கடந்து செல்லும் பாம்பு, யானை ஒன்றும் அவர்களுக்கு தடையல்ல. சகஜீவிகளாகவே அவர்களுடன் அதுகளும் வாழ்ந்து வருகின்றது அல்லது அந்த ஜீவிகளுடன் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எளிய மனிதர்கள் வாழ்க்கை, கடம் சொல்லி குடிக்கும் காப்பியில் இருந்து, கழுதையுடன் மல்லுக்கட்டிய நடைபயணம், சின்ன சின்ன உரசல்கள் சண்டைகள் இட்டு, வெகு விரைவில்  சமரசமாகி, இரத்தம் கக்கி சாகும் வரை வேலை செய்யும் மனத்துணிவுடன் உழைத்தே வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன்  வாழும் மக்களவர்கள். அவர்கள் உழைப்பு வெறும் பிழைப்பு சாந்தது அல்ல அவர்கள்  முதலாளியின் நலனும்  அன்பும் கலந்தது.
  
அவர்கள் மனிதர்களிடம் மட்டும் நேசமாக நடந்து கொள்ளவில்லை; அவர்களுடன் பயனிக்கும் கழுதையுடனும் பரிவுடன் நடந்து கொள்கின்றனர். கொலைக்கார யானையை கூட பரிவு கலந்த மரியாதையுடன் நோக்குகின்றனர்.  மனம் பிளர்வுபட்ட பாட்டியையும்  கேலியாக எகத்தாளமாக அல்ல; பரிவாக நோக்குகின்றனர்.  

 சீனியை வாயில் போட்டு தன் அன்பை வெளிப்படுத்தும் பெண்ணாகட்டும்,  ஏலக்காட்டு முதலாளி, கோபக்கார கங்காணி, சகாவு சாக்கோ  என எல்லா மனிதர்களும் அன்பால் பிணையப்பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவும் மனநிலையில் உள்ளனர்.  மலை உச்சியில் வசிக்கும் சாக்கோவின் தந்தைக்கு மகன் கொடுத்து விட்ட மருந்தை பெற்ற சாக்கோவின் அம்மா ரங்கராஜை வெறும் கையாக அனுப்பவில்லை. உங்க அம்மா எப்படி இருக்காங்க? மரச்சீனியை கொண்டு கொடு என்று  வெட்டி வைத்திருந்த கப்பை கிழங்கை  கொடுத்து விடுகின்றார்.

பஞ்சம் பிழைக்க வந்த லோகு முதலாளியாவதும், முதலாளியானதும் தனது இனமான தமிழனை, மலையாளி முதலாளிக்கு விற்கவும் தயங்கவில்லை. தொழிலாளி தலைவர் சாக்கோ மக்கள் போராட்டத்தில் உண்மையாக நிலைகொள்வதை உடைக்க மொழி அரசியலை ( மலையாளி தமிழன்(பாண்டி) எடுத்த முதலாளியை; தொழிலாளி நலனுக்காக கொலை செய்யவும் தயங்கவில்லை.

உழைப்பவர்கள் கட்சி என்ற அடையாளத்தில் நிலைகொள்ளும் கம்னீஸ்ட் கட்சியில் உள்ள ஒரு பிரிவினரின் துரோகத்தையும் வெளிகொணர்ந்தது; இயக்குனரின் எஸ்டேட் அரசியல் ஆழத்தையும், தார்மீக கோபத்தையும் நேர்மையால் விளைந்த தைரியத்தையும் தான் காட்டுகின்றது.

மீரா அத்தாவிடம் கூட  கடன் கேட்க கூச்சப்பட்டு, தன்மானத்துடன் மனம் நிறைய நன்மைகளுடன் வாழ்ந்த ரங்கு, கடைசியில் தான் ஆசையாக வாங்கி சேர்ந்த கொஞ்ச இடத்தையும் இழந்து, வேட்டிகட்டி வாழ்ந்த  தன்மான வாழ்க்கை கால்சாட்டை யூனிபோம் மாட்டி சுயம் இழந்து   அடிமையாக மாறுவதுடன்  கதை முடிகிறது.

இந்த படம், விவசாய நிலத்தை இழந்த விவசாயியை மட்டுமல்ல சில்லறை  முதலாளிகளை பண்ணாட்டு நிறுவனங்களிடம்  இழந்து தவிக்கும் உள்ளூர் முதலாளிகள் ; கல்விகற்று அடிமைகளாக வேலை பார்க்க வேண்டிவந்த  புதிய  தலைமுறை பற்றிய திரைப்படவுமே இது.

காட்சிப்படுத்தியிருக்கும் அழகு அலாதி. மேற்குத்தொடர்சி மலை என்பதே ஆச்சரியத்தின், அற்புதங்கள் நிரம்பிய செழுமையான காடுகள் நிரம்பியது தான். ஏரியல் ஷாட்டை மிகவும் அழகாக, தேவையான இடத்தில் பயண்படுத்தியிருக்கும் நுட்ப- அம்சம் கொண்ட படம் இது. வெறும் நடிப்புடன் நிறுத்தாது காட்சிகளும் கதையும் சூழலும் மாறும் போது மனிதனின் உடல் மொழியில் வரும் சிறு மாற்றங்களை கூட நுட்பமாக காட்சிபடுத்தியுள்ளனர். தோராது பெய்து கொண்டிருக்கும் மழை, மலைவேலையாட்கள் உடுத்தும் உடை, அணியும் கொங்காணி, அவர்கள் ஊர் டீக்கடைகள் எல்லாம் ஆராய்ச்சி மேற்கொண்டு அதே காலகட்டத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

சினிமாத்தனம் இல்லா இயல்பான வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக சொல்லிய படம் இது. சினிமா என்றால் குத்தாட்டம் புளித்த ஜோக், தனிநபர் வணக்கம் இல்லாது நிஜ-சினிமா அல்லது வாழ்வியல் சினிமா என்ற வகையில்  மனிதர்களை கதையில் வாழவைத்து படமாக்கியுள்ள இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.

திரைக்கதையில்  கதாப்பாத்திர படைப்பை; காட்சி அமைப்பையும்  கடந்து அவர்கள் பேசும் உள்ளூர்  உரையாடல்கள் ஊடாக நகத்தியிருப்பது சிறப்பு. நல்லதையே நினைத்து,  சுயநலன் தேடாது நன்றாகவே வாழ்ந்த மனிதர்கள்;   தங்களுக்கு வெளியிலான உலகத்தை தெரிந்திருக்காத மக்கள் உலக அரசியலில், உலகமய வியாபாரத்தில் சிக்கி சின்னாபின்னமாக அழிந்த அவலம் ஒரு திரைப்படமாக  உருவாக்கிய படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.





பணம் ஈட்டுவது, ஆடம்பரம், பாலியல் இன்பம், புகழ் மோகம்  என படம் எடுத்துவரும் இளைஞர்கள் மத்தியில் படத்தொழிழ் நுட்பத்தை அழகியல் சார்ந்து மட்டுமல்ல சமூககருத்தாக்கத்தின் மீட்சியாக பயண்படுத்திய இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும்.

தயாரிப்பாளர் விஜய் சேதுபதியையும் பாராட்டவேண்டும். தான் நடிக்க வாய்ப்பில்லாத படமாக இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படம் சமூகத்திற்கு தரவேண்டும் என்ற நோக்கில் லாப நஷ்டத்தை முன்நிறுத்தாது சமூக விழிப்புணர்வை மட்டுமே முன்நோக்கி படத்தை இயக்கிய அவருடைய சமூக பார்வையை நல்லெண்னத்தை சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

படம் வெளியாகும் முன்னே மரணப்பட்டு போன கணக்கப்பிள்ளை, மலையில் முகட்டில் ஹோட்டல் நடத்தும் அப்பத்தா, ரங்கசாமியின் மனைவியாக நடித்தவர்,   மீரா அத்தா என நடித்த அத்துணை பேரும்; எல்லோரும் நல்ல மனிதர்கள்.   உயிரோட்டமான, மனித நேயம் கொண்ட  மனிதர்களை பற்றி சொல்லிய நிஜ(ரியலிஸ்டிக்) திரைப்படம்.

இளையராஜாவில் இசை அருமை. 
எடிட்டர் விஷுவநாத் அவர்களின்கைவண்ணம் திரைப்படத்தை மென்மையாக பார்க்கும் சூழலை உருவாக்குகின்றது. தேனி ஈஷ்வரின் ஒளிபதிவு அருமையிலும் அருமை. க்லோசப் இல்லாது  நடிகரின் நடிப்பில்  அதீத நம்ப்பிக்கை வைக்காது கதையின் சாரத்தை நம்பி முன்நகத்திய அருமையான திரைப்படம் இது.


இன்று நெல்லையில் நடந்த பாராட்டுவிழாவிலும் என் மாணவர்களுடன்  பங்குபெறும் வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாட இடது சாரிகளோ , நாம் நம்பும் சமூகப்போராளி தலைமைகளோ விரும்பவில்லை என அறிந்தேன்.. 


இது இடுக்கி சார்ந்த தோட்டதொழிலாளி அரசியல் நிலவரம் தெரியாது கோபப்படுவது ஆகும். தொழிலாளியின் உரிமையை மீட்டு எடுக்க இடதுசாரிகள் போராடினார்கள் என்பதில் எதிர்கருத்து இல்லை, ஆனால் முதலாளிகள் போடும் கேவலம் பிச்சைக்கு என தொழிலாளிகளை  ஏமாற்றினதும், கொலை செய்ததும், கொலைச் செயப்பட்டதிலும் இடதுசாரிகளின் கை உண்டு என்றால் பொய்யாகாது. 


தமிழர்கள் உரிமையை, குடியிருக்கும் இடத்தை அபகரித்து விட்டு எந்த ஆதாரவும் அற்ற நிலையில் தமிழர்கள் கொண்டு விட்டுள்ளனர். 

இது போன்ற நல்ல படங்களால் மட்டுமே மதி- மயக்கத்தில் கிடக்கும் மனிதர்களை விழிப்புணர்வு செய்ய இயலும். 

ஒரு பிரசார தொனி இல்லாது, தொண்டை கிழியும்  ஒன்றை உரையாடல் இல்லாது இயல்பாக  மனிதர்கள்  வாழ்க்கையாக உள்ள இத்திரைப்படம் வெற்றி பெற்று வேண்டும்







16 Sept 2018

மலர்வதியின் “தூப்புக்காரி”

2012ம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற  நாவலாகும் மலர்வதியின் “தூப்புக்காரி”. இயற்பெயரான மேரிபுளோரா என்பதை தமிழ்மைப்படுத்தி மலர்வதி என்ற பெயரில் எழுதி வருகின்றார்.  

தனது 15 வது வயது முதலே, தன் வாழ்க்கையில் தான் கண்டுணர்ந்தவற்றை  தன்னை பாதித்த மனிதர்கள் வாழ்க்கையை எழுதி  இரும்பு பெட்டியில் பூட்டி வைத்திருந்த எழுத்தாளினி தனது முதல் நாவலை 2008 பதிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 


இப்புத்தகம் இவருடைய இரண்டாவது புதினமாகும். அச்சிட பணம் இல்லாத நிலையில் அச்சகரிடம் கடனாக அச்சிட்ட இப்புத்தகம் மூத்த எழுத்தாளர்கள் பொன்னீலன் போன்றோரின் உந்துதலின் பெயரில் சாகித்ய அகாடமி விருதிற்கு அனுப்பியதில் 2012ம் ஆண்டிற்கான இளம் சாகித்ய அகாடமி விருது,  தாமிர பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் பெற்றிருந்தது.  விருதை வாங்க பாட்னா செல்லவேண்டிய நிலையில் தனது வழிப்பயணத்திற்கு செல்ல பணபிரச்சினையால் அவதியுற்றது ஊடகச்செய்தியில் இடம் பிடித்திருந்தது. வறுமையில் பிறந்து, வறுமையில் வாழ்ந்த தற்போதும் வறுமையில் வாழும் ஒரு காதாசிரியரின் நாவல் என்பதும் இதன் சிறப்பாகும். 


தந்தை முகம் பார்க்கும் முன்னே வேறு பெண்ணுடன் பிரிந்து சென்ற நிலையில்; தனது ஐந்து குழந்தைகளை காப்பாற்ற வீட்டின்  பக்கத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளியில் மாதம் 30 ரூபாய் கூலியில்  துப்புறவு தொழிலாளியாக வேலை செய்து வந்த தன் தாயின் துயரை கண்டு வளர்ந்தவர் தான் கதாசிரியை.  எழுத்தாழினியாலும்  9-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் சூழல் வீட்டில் இருக்கவில்லை. இன்னிலையில் இரண்டு வருடம் முந்திரி பருப்பு கம்பனியில் வேலை செய்கின்றார். பின்பு தனது அண்ணனின் உதவியுடன் படித்து தமிழில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது இந்தப்பகுதியில் இருந்து வரும் "முதற்சங்கு'என்ற மாத இதழிற்கும்,"இலக்கிய சிறகு' என்ற நாளிதழுக்கும் பொறுப்பாசிரியராக உள்ளார்

மலர்வதியின் தூப்புகாரி என்ற நாவல் விழிம்பு நிலை மக்களின் கதையாகும். கதை இப்படியாக நகர்கின்றது.  தனது கணவர்  நோய்வாய்ப்பட்டு மரித்த நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவமனையின் கடன் அடைப்பதற்கு என  நாடார் சமுதாயத்தில் பிறந்த கனகம் துப்புறவு தொழிலை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றார். ஒரு துப்புறவு தொழிலாளியான கனகத்தை தன்னுடன் சேர்த்து கொள்ள தயங்கிய  உறவினர்களால், ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கனகம் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றார் பூவரசியும் தனியாக விடப்படுகின்றார். 

கனகத்தின் மகளான் பூவரசியும் தான் வெறுத்த துப்புறவு தொழிலயை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகின்றது. இதனிடே தன் ஜாதிக்காரனான ஒரு பணக்கார பையனுடன் காதல் மலருகின்றது. அவன் ஒரு குழந்தையை கொடுத்து விட்டு, வீட்டில் பார்த்தை பெண்ணை திருமணம் செய்து மறைய, தனித்து விடப்பட்ட பூவரசுவை சக்கிலியனான மாரி, தன் மனைவியாக ஏற்று வீட்டுற்கு அழைத்து செல்கின்றான். பூவரசுவை பிடித்த வேதனைகள் தான் விட்ட பாடில்லை. மாரியும் ஒரு விபத்தில் மரித்த நிலையில் தன் பெண் குழந்தையுடன் அதே துப்புறவு தொழிலாளியாக கனகத்தின் மகளாக  பூவரசு வளர்ந்த வறுமை நிலையில், பூவரசு மகளும் வளர்க்க வேண்டிய  சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.

துப்புறவு சமூதாயம் மேல்கொண்டுள்ள சமூகத்தின் பார்வை, இந்த மக்கள் வெகுகாலமாக எதிர்கொள்ளும் சமூதாயா புரக்கணிப்பு அவமதிப்பு பல சம்பவங்கள் ஊடாக சொல்லியுள்ளார். கேரளா எல்கையோரமுள்ள கன்யாகுமாரியில் ஜாதி வகைப்படுத்தலின் கொடுமையை விட வர்க்க பாகுபாடான இருப்பவன் இல்லாதவன் நிலை  பற்றி சொல்லியுள்ளார். துப்புறவு தொழில் என்பது ஒரு குறிப்பிட்ட  மக்களின் ஜாதியுடன் இணைந்து தொழில் என்பதையும் கடந்து வசதி வாய்ப்பு அற்ற, மேல்ஜாதி ஏழை மக்கள் மேல் நிர்பந்தமாக திணிக்கப்படுகின்றது என்பதையும் வலியுறுத்துகின்றார். ஒரு தலிது பிரச்சினையை மீறி இது மக்களின், யாருமற்ற பெண்களின் பிரச்சினையாக உணரவைக்கின்றார்.

கல்யாண வீட்டில் மேசையை சுத்தம் செய்ய நிற்கும் ஏழை வயதான பெண்களை கண்டு கடந்து போயுள்ளோம். விருந்துக்கு பந்திவைக்கும் மக்கள் அனைவரும் உண்ட பின் தன் வயிற்று பசிக்காக காத்து நிற்க வேண்டிய கொடிய நிலையும், கொலைப்பசியால் உணவை நேரமே உண்டார் என்று ஏளனப்படுத்தும், பசியை பற்றி தெரிந்திராத பணக்கார இரக்கமற்ற மனநிலையும் ஒரு சம்பவத்தால் எளிதாக வடிவமைத்துள்ளார்.   

பணம் இல்லா எளியவர்கள் என்ற ஒரே காரணத்தால் மிகவும் துச்சமான ஊதியத்தை கொடுத்து தலைமுறை தலைமுறையாக அடிமை நிலையை பேணவைக்கும் மருத்துவ நிர்வாகி என்ற பணக்கார கும்பலின் மனநிலையும் விளங்க பண்ணியுள்ளார். கதைமுடிவில் பூவரசிக்கு இருந்த ஆகமொத்த உரிமையான மகளையும் உன்னால் பிள்ளையை வசதியாக வளர்க்க இயலாது தத்து கொடுத்து விடு” என பிரிக்க நினைக்கும் முதலாளி மனநிலையும் விவரித்துள்ளார்.

ஆண் பெண் காதல் எந்த வகை காதல் மேன்மையானது, பண்பானவன் என்ற நினைத்த மனோவை விட அழுக்கன் என்ற அடையாளமுள்ள மாரி எவ்வளவோ மேல் என அவன் குணத்தால் அழுத்தமாக பதிந்துள்ளார்.

ஜாதிபெருமையும் வசதி பெருமையும் ஏழைகளின் வாழ்க்கைகோ வறுமையை போக்கவோ உதவவில்லை என்பதையும் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை தூப்புக்காரி என கதாப்பாத்திரம் அழைக்கப்படும் போதும் வாசகர்கள் நாமும் அந்த அவமான சொல்லில் மதிப்பற்ற விளியில் சுருங்கி போவதை உணரலாம்.

இலக்கியம் என்பது வாழ்க்கை, அது கற்பனை கலந்த வார்த்தை பிரயோகம் அல்ல என்பதை மலர்வதி நிரூபித்து விட்டார். கழிவறைகளும்,  அந்த நாற்றத்திலும் அழுக்குலும் அல்லல் படும் மனிதர்கள் நம்மை விட்டு அகலவில்லை. அது ஒரு தீராத அழுகையின்  அவலக்குரலாகவே உள்ளது. வாசிக்கும் ஒவ்வொருவரும் ’தூப்புக்காரி’ என்று விளிப்பதை விடுத்து மனித நேயத்தோடு அவர்களை நோக்கவும் அழைக்கவும் கற்று கொண்டிருப்பார்கள். அவ்வகையில் இது ஒரு விழிப்புணர்வு மனிதநேய நாவல் தான்.

தலிது எழுத்து என எழுத்தாளர் பொன்னீலன் முன்னுரையில் கூறியுள்ளார். ஒரு நாடார் இனத்தை சேர்ந்த பெண் எப்படி தலிது எழுத்தாளர் என்ற அனுகூலங்களை பெற இயலும் என விமர்சங்களுக்கும் உள்ளாகியுள்ளார். தான் தலிது எழுத்தாளர் அல்ல ஒரு எழுத்து போராளி என தன்னை முன் நிறுத்த அம்பை போன்ற எழுத்தாளர்கள் பணிந்துள்ளனர்.  ஆனான் என் வாசிப்பில் நான் கண்டது ஒரு குறிப்பிட்ட தலிது மக்கள் பிரச்சினை மட்டுமல்ல, ஏழ்மையால் சூழலால் தெருவிற்கு வேலைக்கு என வந்த  எல்லா எளிய நிலை பெண்களும் அனுபவிக்கும் அவலைநிலையாகும் தூப்புக்காரி என்ற நாவல் வழியாக நாம் காண்பது. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தலிது என அறியப்படவேண்டும் என்பது எழுத்தாழியின் ஆவாலாகும். அவர் வார்த்தைகளில் சொன்னால் ”நான் வாழும் சமூகத்தில் தலித் என்ற அடையாளம் பெற்று எவரும் இல்லை.. இங்கே பணத்தின் பெயரால், படிப்பின் பெயரால் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும் தலித்திய வலிகளே.. பாதிக்கப்பட்ட அத்தனைப் பேரும் என்னைப் பொறுத்தவரை தலித்துகள் தான்”



நாவலை கையிலெடுத்தால் வாசித்து முடிக்கும்  வரை நம்மை வைக்கவிடாது நகத்தும் வாழ்வியல் கதை. பல கதைமாந்தர்கள்; நாமும் நம் வாழ்க்கையில் கண்டு விலகி சென்றவர்கள், கண்டு கொள்ளாது கடந்து சென்றவர்கள் தான்.

கனகம் பட்ட வேதனையில் அவளின் ஒரே லட்சியம் தனது மகள் தன் தொழிலில் வரக்கூடது என்பதாகும். தன் இனத்தில் யாரேனும் கல்யாணம் செய்து அவ நிம்மதியாக வாழ வேண்டும் என்பதாவே இருந்தது. என் மகளை சக்கிலியன் பெண் கேட்பதா என்று வருந்திய தாய், சக்கிலியன் மாரியாவது தன் மகளை கல்யாணம் செய்து விடக்கூடாதா என ஏங்கும் நிலையில் வாழ்க்கை கொண்டு விடுகிறது, கணவன் கடத்தை அடைக்க கனகம் செய்த வேலை, தன் தாய் மருத்துவ கடன் அடைக்க என பூவரசியும் வேலையில் சேருகின்றார். 

இடையில் பாதுகாவலனாக காப்பாற்றி பூவரசுவிற்கு நல்ல வாழ்க்கை வேண்டும் அவ சந்தோசஷமா இருக்கனும் அவ பிள்ளைக்கு தகப்பனா இருக்கனும் என நினைத்த மாரியும் விபத்தில் மரிக்க; பூவரசு அதே கனகாவின் இடத்தில் வந்து சேருவது தான் திகைக்க வைக்கின்றது, வருந்த வைக்கின்றது. என்னடா வாழ்க்கை? ஏழை பரம்பரையா ஏழை தானா? விடிவே இல்லையா என நம்பிக்கையின்மைக்கு கொண்டு செல்கின்றது. மாரியை கதாசிரியர் எதனால் சாவடித்தார்? தான் வளர்ந்த அதே சூழலில் தன் மகளையும் வளர்க்க ஏன் துணிந்தார்? என்பது காதாசிரியரின் மாந்தர் படைப்பை பொறுத்தது. இருப்பினும் பூவரசின் வாழ்க்கையில் இனி வசந்தமே இல்லை என்பது முடிவில் ஒரு அகலாத வருத்ததையும் நம்பிக்கையின்மையும் விதத்துள்ளதா? என சிந்திக்க வேண்டியுள்ளது.  

மலர்வதியின் இப்புத்தகத்தை எனக்கு தருவித்த எழுத்தாளர் நாறும்பூ நாதனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். காட்டுக்குட்டியும் உடன் கொடுத்து விட்டுள்ளார். ஒரு விமர்சனத்துடன் சந்திக்கின்றேன். 

மலர்வதிக்கு என் வாழ்த்துக்கள் மென்மேலும் பல புத்தகங்கள் பதிப்பிக்க,

17 Jul 2018

சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”


சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல்  வெளிவந்த சோம அழகின்  “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும்.  திருநெல்வேலி  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலக்கியக்கூட்டத்தில் பாராட்டுப்பெற்ற நாங்கள் நாலுபேரில், ஒருவராவார் ’சோம அழகு.’ தற்போது மனோன்மணியம் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியான இளம் தலைமுறையின் அடையாளமான சோம அழகு என்ற இளம் நங்கையின் புத்தகம் வாசிக்க ஆவல் கொண்டேன்.
தனது முதல் புத்தகத்தை தனக்கு மிகவும் பிரியமான தாத்தாவிற்கு சமர்ப்பித்துள்ளார் அழகு . பேரா. தொ. பரமசிவத்தின் வாழ்த்துரையுடன் புத்தகத்திற்குள் நுழைகின்றோம். எழுத்தாளர் பாமரன் தலைப்பை கண்டு, கோபம் கொண்டாலும் எழுத்தை வாசித்த பின்பு  பேரன்பு கொண்ட  அணிந்துரை வழங்கியுள்ளார் என்பது சோம அழகின் புத்தகத்திற்கு இன்னும் அழகு சேர்க்கின்றது.

சோம அழகிற்கு பின்புலமாக; அழகு வளர்ந்த இனிமையான கூட்டுக்குடும்ப சூழல், அவருடைய அன்பான தாத்தா, பல்கலைகழக கணித பேராசிரியரான தந்தை, தொ பரமசிவம் போன்ற  கருத்துற்ற எழுத்து ஆளுமைகள் என்பது அவருடைய ஆளுமைக்கு மட்டுமல்ல அதின் தொடர்ச்சியான  எழுத்தாளுமைக்கும் உருதுணையாக உள்ளது.

கட்டுரைக்கு ’மெய் அழகு’ என வாழ்த்தியுள்ளார் பதிப்பாசிரியர் காவ்யா சண்முக சுந்தரம். ஆம் அவருடைய ஒவ்வொரு கட்டுரைக்கு ஜீவநாடியாக உள்ளது அவர் எழுத்தில் இழையோடும்  மெய்மை தான். எந்த கற்பனையும் இல்லாது உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளார்.

21 கட்டுரையை அழகான ஒரு மலர்ச்சரம் போல் தொடுத்து வாசகர்களுக்கு கொடுத்துள்ளார். அவருடைய எழுத்தில் வயதிற்கு அதீதமான பக்குவவும், எதையும் கேள்வி கேட்கும் இளைமையின் துணிவும், தேடுதலின் ஞானவும், சமூக அநீதிமேலான  வெறுப்பும், சில வரட்டுத்தனம் பிடித்த மனிதர்கள் மேலுள்ள  கோபவும்  எழுத்தாக எரிமலை போன்று கொப்பளித்து வெளிவருகின்றது,

 முதல் கட்டுரையிலே தற்கால நுகர்வுக்கலாச்சாரத்தை சாடுவதுடன் நவீன  மனிதர்கள் அடிமைப்பட்டு கிடக்கும் ஆடம்பர கடைகளில் இருந்து துவங்குகின்றார். நமது தெருவிலிருக்கும் அண்ணாச்சி கடை என்பது வெறும் கடை மட்டுமல்ல அது ஒரு மனித நேயத்தின் உன்னத நிலையில் இருந்து  பெரிய கடைகளில் உணர்வற்ற மனநிலையில் பொருள் வாங்குவதும் பணம் கொடுப்பதுமாக ஒழிந்து போனதை பெரும் வருத்ததுடன் பதிந்துள்ளார். அடுத்த கட்டுரையிலோ தனது தெருமூலையில் சைக்கிள் கடை வைத்திருக்கும் ஏழை யாரும் நினைவில் வைத்து கொள்ளாத அங்கிளை நேசத்துடன் நினைவு கூறுகின்றார்.
இவருடைய நையாண்டி கலந்த கோப வார்த்தைக்கு இந்தியா அரசில் விளையாட்டுத்துறையையும் தப்பவில்லை,  தாத்தா என்ற கதைசொல்லியை நினைவு கூறுகின்றார். தன் உறவினர்களில் மறக்க இயலாத நல்ல ஆளுமையான பெரியமாவை  புகழ்ச்சி மாலையால் நினைவுறும் சோம அழகு, உணவகத்தின் தங்களுடைய அதிகாரப்பெருமையை காட்டிய உறவினர்களை கடிந்தும் உள்ளார்,

கல்யாண வீட்டில் காணும் அதீத ஆடம்பரம் மட்டுமல்ல மரணவீட்டில் கூட உறவினர்கள் மனித உணர்வற்று நடந்து கொள்வதை சோம அழகால் சகித்து கொள்ள இயலவில்லை.


சர்க்கஸ் என்ற விளையாட்டை அழகால் ரசிக்க மட்டுமல்ல,  கயிற்றில் நடந்து சாகசம் புரியும் மனிதர்கள், அங்கிருந்த மிருகங்களையும் கரிசனையுடன் நினைத்து பார்க்கும் நெகிழ்ச்சியான மனம் கொண்டவராக இருக்கின்றார் அழகு.


சாதாரணமாக இளம் பெண்கள் என்ற ஒற்றை பார்வையில் இருந்து வாழ்வியல் தத்துவங்களிலும் வாழ்க்கையை பற்றிய கனவிலும் ஒன்றை யானையாக தன் தனி வழியில் மிகவும் மிடுக்காக அறிவுச்செறுக்குடன் தலைநிமிர்ந்து பெருமையாக நடந்து செல்கின்றார். 

அழகின் சிறப்பே அவரின் பார்வையில் உதித்த  மாற்று கருத்துக்களும்,  தன் கருத்தில் நிலைகொள்ள வேண்டும் என்ற அவருடைய விருப்பவும் பிடிவாதவுமாகும். 

அழகு ஒரு வித்தியாசமான சிந்தனைவளம் கொண்ட பெண்ணே. கடவுளை கண் மூடித்தனமாக நம்புவதை கேள்வி எழுப்புகின்றார். பெண்களுக்கான சுதந்திரத்தை கெடுக்கும் உறவுகளை தைரியமாக சாடும் துர்கையாகவும் சில இடங்களில் காட்சி தருகின்றார். பக்கத்து வீட்டு குழந்தையை கொஞ்சும் அன்பில் பேரன்பின் உருவமாயும் மாறுகின்றார்.

காணும் சமூக புரட்சி கொண்ட பெண்ணாக அன்பான நேசம் கொண்ட சிந்தனை வளமிக்க பெண்ணாக, சோம அழகு மிளிர்வதில் இவரின் தாத்தாவின் இடம் இன்றிமையாதது. அதனாலே தாத்தாவின் மரணத்தையும் அழகால் ஜீரணிக்க இயலவில்லை. ஆழமான அன்பின் காயமாகவே அவர் மனதில் நிலைகொள்கின்றது. தாத்தாவின் நோய், மரணம், அதன் பின் நடந்த சங்குகள், ஒரு பெண்ணாகையால் தனக்கு சுடுகாடு சென்று தாத்தாவிற்கு அஞ்சலி செலுத்த தடை விதித்தது எல்லாம் கனத்த இதயத்துடன் பதிந்துள்ளார்.

சோம அழகின் எழுத்தில் ஒரு  மெய்மையை தேடிய பயணம், கோபம், மகிழ்ச்சி, அப்பாவின் பாசமிகு மகள், பக்கத்து வீட்டு பைத்தியக்கார பாதிரியாரையும்  கரிசனையாக நோக்கும் இளகிய மனம் கொண்ட தாயுள்ளம், தான் ஒருபோதும் காணாத ஆனால் கதைகளில் கேட்ட வாழ்க்கையின் கொடூர சதியால் மிகவும் அவலநிலையில் மரித்த தற்கொலை செய்து கொண்ட  ஆச்சிகளையும் நினைவால் நினைத்து வருந்துகின்றார்,.

தனியாக சென்று வந்த இத்தாலிபயணத்தை பற்றியும் எழுதியுள்ளார்.

சோம அழகு நிறைய எழுத வேண்டும். தற்கால பெண்களின் அடையாளமான சோம அழகால் பல நல்ல கருத்தாக்கங்களை இளைய தலைமுறைக்கு சேர்க்கும் வலு உள்ளது,

அழகின் எழுத்திலுள்ள வார்த்தை ஜாலம் அழகு, அழகின் சமூக பார்வை மேன்மை பொருந்தியது, அவ்வகையில் இப்புத்தகம் மிகவும் அழகான அனுபவம் தந்த புத்தகம்.