9 Mar 2013

எனது வாழ்கையின் 3 தவறுகள்! The 3 Mistakes Of My Life!



அகமாபாத்தை சேர்ந்த உலகபுகழ் பெற்ற எழுத்தாளர் சேட்டன் பகத்தின்  2009 ல் வெளிவந்த நாவல் ஆகும் எனது வாழ்கையின் 3 தவறுகள்!    இந்த நாவல் கடந்த வாரம் வாசித்து முடித்தேன்.  அபிஷேக் கபூர் இயக்கத்தில்  பிப் 2013 ல்   வெளிவந்த ‘கேய் போ சீய்” என்ற திரைப்படம் இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்று அறிந்த போது  சுவாரசியம்  பற்றி கொண்டது. . டைம்ஸ் வார இதழ், உலகில் குறிப்பிடும் படியான 100 நபர்களில் ஒருவராக சேட்டன் பகத்தையும்  வரிசைப்படுத்தியுள்ளனர். ஆக்கப்பூர்வமான தொழில் அதிபர் வரிசையில் இவர் பெயரும் உட்படுத்தியுள்ளது அமெரிக்கா பன்னாட்டு நிறுவனம். உலக முதலீட்டு வங்கி பணியில் இருந்த சேட்டன் பகத் தற்போது முழுநேர எழுத்தாளராக உள்ளார் என்பது மேலும் குறிப்பிட தகுந்தது.

 சேட்டன் பகத்தில் கதைத் தளம்  இளைமை துள்ளலும், அதன்  சுறுசுறுப்பும், கபடமற்ற  மனிதர்களின் உறவை சொல்லும் படியாக உள்ளது. நாவல் எழுத்துக்கான  பொதுவான ஒரு நடையில் இருந்து   மாறுபட்டு வலைப்பதிவுகள் போன்ற  நெருக்கம் அருகாமையும் தருவதாக உள்ளது. கதை இப்படியாக துவங்குகின்றது. ஆசிரியர் சேட்டன் பகத், சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார். அகபாத்தை சேர்ந்த ஓர் இளைஞரிடமிருந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மின் அஞ்சல் வருகின்றது.  தன் கல்லூரி பேராசிரியர் உதவியுடன் தற்கொலைக்கு முயலும் இளைஞனை மருத்துவ மனையில் கொண்டு சேர்க்கின்றார்.  இளைஞனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன்   இளைஞரின் வாழ்கை கதையை,அவர்  அனுமதியுடன் நாவலாக வெளியிட்டுள்ளதாக கதையில் குறிப்பிடுகின்றார் .

மட்டைபந்து விளையாட்டை தளமாக கொண்டு மூன்று நண்பர்களின் வாழ்கையை சுற்றி பிணையப்பட்டது இந்த நாவல். மட்டைபந்து விளையாட்டுக்கு தேவையான பொருட்களை விற்கும் கடையை அகமபாத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் துவங்குகின்றனர். குடும்ப பின்னணி, அறிவாற்றல், விருப்பங்கள் என எல்லாவற்றிலும் மாறுபட்டவர்கள். ஆனால் நட்பால் ஒன்றித்தவர்கள். எதிலும் எங்கும் எப்போதும் வியாபரமே முழுமூச்சாக கொண்ட ஒருவர்; கடவுள் உண்டா இல்லையா என ஆராய்ச்சி மனநிலையில் உள்ளவர் என்றால், இன்னொருவரோ தான் வாழ்கை சிந்தைனையை முழுதுமக மட்டைபந்த்து விளையாட்டில் மட்டும் செலுத்துவர்.  இந்து பிராமணராக பிறந்த ஓமி என்ற நண்பராகட்டும் தன் மாமா வற்புறுத்தலுக்கு இணங்க கோயில் பூஜா வேலைகளிலும் மும்முரமாக இருக்கின்றார்.  இப்படியான சூழலில் தங்களுக்கான வியாபாரத்தை கோயில் வளாகத்திலுள்ள  வாடகை குறைவான ஒரு சிறு கடையில் துவங்குகின்றனர். இவர்கள் எதிர்பார்த்ததை விட வியாபாரம் சிறப்பாக செல்கின்றது. கோயில் காரியங்களில் செயல்ப்பட நிர்பந்திக்கப்படுவதாலும், வியாபாரம் மேலும் விருத்தியடைய நகர்புற கடை தேவை என்பதாலும்; நகரத்தில் ஒரு கடை ஏர்ப்படுத்துகின்றனர்.  இவர்கள் கனவை ஒரே நொடியில் தகர்க்கும் விதமாக குஜராத் பூகம்பம் வந்து செல்கின்றது.


நண்பர்களில் ஒருவரான இஷான் மட்டை பந்து பயிற்சி கொடுக்கும் போது, கோவிந்து கணிதம்  டியூஷன் வகுப்பு எடுத்து வருகின்றனர். நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் தங்கைக்கும் கணித வகுப்பு எடுக்க செல்கின்றார். இதுவே தன் வாழ்கையில் தான் செய்த முதல் தவறு என குறிப்பிடுகின்றார். இப்படியிருக்க நண்பர் தங்கை தனக்கு ஆசிரியராக வந்திருக்கும் கோவிந்திடம் காதல் வயப்படுகின்றார். இவரும் காதலில் வீழ்ந்து விடுகின்றார்.  இதுவே தன் வாழ்கையில் தான் கொண்ட இரண்டாவது தவறாக குறிப்பிடுகின்றார்.

இதனிடையில் இவர்கள் கடைக்கு வந்த அலி என்ற இஸ்லாமிய சிறுவனின் மட்டபந்திலுள்ள அசாதாரண திறமை இஷானை ஆச்சரியம் கொள்ள வைக்கின்றது. அவனுக்கு தேவையான பயிற்சி கொடுத்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரராக உருவாக்க இஷான் முடிவெடுக்கின்றார். இந்நேரம் குஜராத் மதக்கலவரம் நிகழ்கின்றது. இதில் இவர்கள் நண்பர் ஓமியின் மாமா மகன் கோத்திரா இரயிலில்  கொல்லப்படுகின்றான். இவர்களிடம் தஞ்சம் அடைந்த அலி என்ற சிறுவனை, பழி வாங்கும் நோக்குடன் மாமா, ஒரு கூட்டமாக  தாக்க வருகின்றார். இந்த களேபாரத்தில்  உயிர் நண்பர் ஓமி, ஓமியின் மாமாவும் கொல்லப்படுகின்றனர். சிறுவன் கையிலும் காயம் ஏற்படுகின்றது. சிறுவனை காப்பாற்ற இயலாத தன் நிலையை மூன்றாவது தவறாக  கோவிந்து வருத்ததுடன் உணர்கின்றார். 

இஷானும் தனக்கு தெரியாது தன் தங்கையை காதலித்து தனக்கு துரோகம் செய்ததாக எண்ணி தன் நண்பனை ஒதுக்குகின்றார். இந்த நிலையில் கோவிந்த் தற்கொலை செய்ய முடிவெடுத்ததுடன் கதையின் பின் காலம் நோக்கிய கதை சொல்லுதல் முடிந்து நிகழ்கால கதை பக்கம் வருகின்றோம்.


 இந்த நாவல் ஊடாக குஜராத்தில் இஸ்லாமிய- ஹிந்து சகோதர்கள் அடிப்படையில் கொண்டிருந்த பல நெருடலான தங்களுக்குள் கொண்ட வெறுப்பு உணர்வுகளை விவரித்துள்ளார். மக்கள் மத்தியில் தங்கள் மதத்தின் மேலுள்ள அதீத நம்பிக்கையால் எழுந்த வெறியும், சரியான புரிந்துணர்வு இல்லாத அவர்களுக்ளான உறவு நிலையையும் குறிப்பிட்டுள்ளார். ஹிந்துத்துவா என்பதை சகோதர அன்புடன் இணைத்து குறிப்பிடும் மாமா என்ற கதாபாத்திரம் தன் மகன் கொல்லப்பட்டார் என்று அறிந்ததும் சிந்தனையற்ற கொலைகாரனாக மாறுவது ஹிந்துத்துவா பற்றிய சிந்தனை பற்றிய நெருடலான உண்மையும்  இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் மத்தியில் நிலவும் தீவிர எதிர்ப்பு தன்மையை மதவாதிகள் பயண்படுத்துவதையும் தங்கள் கருத்துக்களில் வன்முறையாக இளைஞர்களை இணைப்பதையும் நாவல் விவரித்துள்ளது.  இப்படியான சமூக சூழலில்  படித்த இளைஞர்கள் கூட வீழ்த்தப்படுவதும், இரையாகுவதையும்   விவரித்துள்ளார். கோவிந்து போன்ற இளம் சமூகத்தினர் அடிப்படையில் எந்த கடவுள் பரப்புரையிலும் நம்பிக்கையில்லாதவர்கள். இருப்பினும் கோயில் வளாகத்தில் தங்கள் கடையிருப்பதால் அந்த மத கூட்டத்தில் தாங்களும் பங்கு கொள்ளும் சூழலுக்க்கு தள்ளப்படுகின்றனர். மத நம்பிக்கையால் மனிதர்களை பிரித்து வைத்துள்ளதை நாவலாசிரியர் மிகவும் விவரித்து குறிப்பிட்டுள்ளார். கொலை வெறியில் பச்சிளம் பாலகனை கூட விட்டு வைக்காத மததீவிரவாதத்தையும் உணர்த்துகின்றார்.


இஸ்லாமிய ஏழை சிறுவன். அவன் தந்தை கல்வியறிவுள்ள இஸ்லாமியர். தீவிரவாத குணமற்ற மனிதநேயரான மனிதர். ஆனால் அக்கலவரத்தில் அவர் குடும்பவும் அழிக்கப்படுகின்றது என்ற துயரான சம்பவவும் நாவலில் காண்கின்றோம். இஸ்லாமியர்கள் பிற சமூகத்துடன் சேராது, தனித்து தங்களுக்கான  தெருவுகளில் வாழ்வதையும், அச்சிறுவன் குண நலன் வழியாக பிடிவாத குணத்தையும் மற்றவர்களை புண்படுத்தும் செயல் வார்த்தைகளையும் புனைவுப்படுத்தியுள்ளார்.

 காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் நம்பிக்கை துரோகத்தையும், இதில் பெண்கள் செயல்பாடுகள் எவ்விதத்தில் வேகப்படுத்துகின்றது  எனவும் விவவரித்துள்ளார். காலத்தின் மாற்றத்தால் பெண் பிள்ளைகளில் காணும்  அதீத மாற்றம், தைரியம், அலைபேசியை பயண்படுத்தும் முறை என இளைஞர்கள் வாழ்கையை ஊடுருவி கதை படைத்துள்ளார் என்பதே இந்நாவலின் சிறப்பு!

இளைஞர்கள் வாழ்கை, வேலை வாய்ப்பு, வாழ்கை போராட்டம், இந்த தெருவுகளை ஆக்கிரமித்த மட்டைபந்து விளையாட்டு, நண்பர்கள் நட்பு, ,காதல் எவ்வாறு அவர்களுக்குள் பிளைவை ஏற்படுத்தியது என்றும் நட்புக்கும் கற்பு உண்டு என வலியுறுத்தி சென்றுள்ளார் ஆசிரியர்.


இருப்பினும் இந்திய் காங்கிரஸ் ஆட்சியில் கைதடி என்றும் மோடி அரசியல் சந்தைப்படுத்துனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இப்புத்தகம் கோடி வாசகர்களை சென்றடைந்துள்ளது. எழுத்து ஊடகமான நாவல், காட்சி ஊடகமாக உருமாறிய போது வாசகர்களை எவ்வாற்றாக ஊடுருவி சென்றுள்ளது என அறிய ஆவலாகத்தான் உள்ளது.  

8 Mar 2013

பெண்மையை போற்றுவோம்!



பைபிளில் ஒரு சுவாரசிய கதை உண்டு. கடவுள் மனிதனை மண்ணில்  இருந்து படைத்த பின்பு, தன் மூச்சு காற்றை நிரப்பி அவனுக்கு உயிரை கொடுப்பார். ஆண் தனியாக இருப்பதை கண்டு கலங்கிய கடவுள்,  தனியாக இருப்பது நல்லது இல்லை என்ற புரிதலில் அவனை தூங்க வைத்து அவன் விலா எலும்பை எடுத்து அவனுக்கு ஏற்ற துணையாக பெண்ணை படைப்பார். ஆண் தலையில் இருந்து படைக்காதது ஆண் தலையில் ஏறி அமர்ந்து கொண்டு துன்புறுத்த கூடாது  என்றும்; கால் எலும்பில் இருந்து படைக்காதது ஆண், பெண்ணை தன் காலில் போட்டு மிதிக்காது இருக்க வேண்டும்  என்று தானாம். ஆணின் இதயத்தில் வீற்றிருக்க வேண்டியவளே பெண் என்ற கருத்தினை வலியுறுத்துவதை   இக்கதையில் காண்கின்றோம். ஆம் பெண்மை போற்றுதலுக்குறியது. ஆண்களால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது. ஆண்மையை பெண்கள் ஆராதித்து ஆதரிப்பது போலவே,  ஆண்களால் பெண்மை போற்றப்பட வேண்டியது அவசியம். ஆனால் ஆதி காலம் முதல் இன்றுவரை ஆண் பெண் உறவு தங்களுக்குள் போட்டியிடுவதும் குற்றம் சாட்டுவதுமாகவே இருந்துள்ளது என்பது சரித்திர வரலாறுகள் சொல்கின்றன.

இன்னொரு கதை நினைவிற்கு வருகின்றது. கடவுள் தான் படைத்த முதல் மனிதர்கள் ஆதம்- ஏவாளிடவும் கூறுவார் 'நீங்கள் ஏதேன் தோட்டத்தில் எந்த பழம் வேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஒரு பழத்தை மட்டும் உண்ண வேண்டாம்" என்று. கடவுள் ஒன்றும் குறிப்பிட்டு சொல்லாது இருந்தால் கூட சும்மா இருந்திருப்பார்கள் இந்த மனிதர்கள். ஆனால் 'கூடாது' என்றதும் எளிதாக சோதனையில் வீழ்ந்து விடுவார்கள். கடவுள் தவறை கண்டு பிடித்து கேள்வி கேட்கும் போது ஆண் கடவுளிடம் கூறுவார் நீங்கள் துணைக்கு தந்த இந்த பெண் தான் என்னை தவறாக நடத்தி விட்டாள் என்று.  

ஆண்-பெண் உளைவியலை ஆழமாக பரிசோதித்தால் எந்த நிலையிலும் ஒரே போல் சிந்திக்க இயலாதவர்கள். பெண் இரக்கம் அன்பு பாசம் போன்ற உணர்வுகளால் தூண்டப்படும் போது ஆண்கள் அறிவு, வீரம், கோபம் சார்ந்த நிலைகளில் மட்டுமே சிந்திக்க இயல்கின்றது. இவர்கள் இருவரும் சேரும் போது,  ஒருவர் ஒருவரை நிபந்தனையற்று ஏற்று கொள்ளும் போது, ஒருவர் ஒருவரை தாங்கும் போது, இன்னும் சிறந்த ஒரு புதிய உறவு பிறக்கின்றது. இதில் யார் பெரியவர், யார் சிறந்தவர் என்பதை விட  இருவரும் ஒன்றாக செயலாற்றும் போது ஆக்கபூர்வமாக  மற்றொரு மாற்று சக்தி உருவாகுகின்றது என்பதே உண்மை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை விட ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பவர்கள். ஒருவர் குறையை இன்னொருவர் நிவர்த்தி செய்கின்றவர்கள் என்பதே இயற்கை நியதி.

இன்றைய நிலையில் பெண்கள் பெண்மை போற்றப்படுவது இல்லை என்பதையும் கடந்து மிதித்து நெரித்து உடைக்கப்படுகின்றது. இதற்கு காரணவும் இருபக்கவும் உள்ள புரிதலின் குறைபாடே. இவர்கள் போட்டி மனபாட்மையை இந்த சமூக இயக்கவும், நிறுவனங்களும் தவறாக எடுத்து கொண்டு தங்களுக்கு சாதகமாக பயண்படுத்தி கொள்கின்றது. வரலாற்றை பரிசோதித்தால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட  குறைந்த ஊதியம், அதீத  வேலை நேரம்  இவைக்கு எதிராகவே பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் தற்போதும் பெண்கள் அதே சூழலில் தான் உள்ளனர் என்பது வெட்கப்பட வைக்கின்றது. சில வேலைவாய்ப்பு இடங்களில் ஆண்கள்; வேலை செய்த இடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு பெண்களை புகுத்துகின்றனர். இதனால் பெண்கள் பலன் பெறவில்லை அவர்கள் நிலையில் இருந்து புரக்கணிக்கப்பட்டனர், சுரண்டப்பட்டுகின்றனர். ஒரு ஆணுக்கு கொடுக்கும் அதே ஊழியம் பெண்களுக்கு தரவில்லை ஆனால் இரு பெண்ணை ஒரு ஆண் செய்யும் வேலைக்கு புகுத்த படுகின்றனர். வாழ்கை தரம் உயர்ந்ததா என்றால் வீட்டு படிக்குள் துன்பப்பட பெண்கள் இன்று தெருவுகளில் வேலையிடங்களில் துன்பப்படுகின்றனர்.

பெண்மை என்றதுமே ஆண்மையை எதிர் திசையில் நிற்க வைத்து கேள்வி கேட்கும் சமூக அவலம் நிலவுகின்றது.  இது ஒரு மோசமான வழி காட்டுதல். ஒரு காளை வண்டியின் இருசக்கரம் போல் ஒருமித்து பயணிக்க வேண்டியவர்கள். இங்கு புரிதல்களில் தவறுகள் உள்ளதால்; ஆண்கள் தங்கள் மனநிலையில் இருந்து பெண்களை பார்ப்பதும், பெண்களை தங்களை போன்றே ஆண்களை பார்ப்பதும் அறிவின்மையை   தவிற வேறு ஏதுமில்லை!

பெண்கள் தன்னிறைவு பெற்று விட்டனர் என்பது எல்லாம் வருமானம் பணம், தொழில் சார்ந்த கணக்கு. உண்மையில் பெண்மையில் தரம் தலைமுறைக்கு தலைமுறை கீழ் இறங்குவதையே காண்கின்றோம். ஒரு சூழலை எதிர் கொண்ட யுக்தி, புத்தி, தைரியம், துணிவு பாட்டிக்கு இருந்த அளவு தாய்க்கு இல்லை தாய்க்கு இருக்கும்  மட்டும் மகளுக்கு இல்லை. பெண்களின் தரமான வாழ்கை தேய்ந்து தோய்ந்து வருகின்றது. பெண்மை என்பது பெண் முதலில் தன் பெண்மையை போற்ற முன்வர வேண்டும். அப்போதே அச்சமூகம் போற்றுதலுக்குறிய நிலையில் பெண்மையை வகைப்படுத்தும்.  இன்றைய நிலையில் இருபக்கவும் கோஷங்களும் வேஷங்களூம் அதிகரிப்பதை விடுத்து பெண்மையை போற்றுவதும் இல்லை மதிப்பதும் இல்லை என்பதே உண்மையாகி விட்டது.

பெண்கள் தங்கள் வருமானம், உடை அலங்காரத்தில் முன்னேறுவதை முன்னேற்றமாக காணாது தன் சிந்தனை சக்தியை, தன் ஆக்கபூர்வமாக செயலாக்கத்திலுள்ள வளர்ச்சியை முன்னேற்றமாக காண வேண்டும். பல பெண்கள் தங்கள் ஏமாற்று குணத்தாலும் தங்கள் நயவஞ்சக செயல்களாலும் பெண்மைக்கு மேலும் பங்கம் விளைவிப்பதுடன்,  மோசமான பிம்பமாக சமூகத்தில் தங்கள் தோற்றத்தை நிலைநிறுத்துவது வழியாக பெண் சமுதாய அளவீடுகளுக்கே அவமானம்  வர செய்து விட்டு செல்கின்றனர். இன்றைய வேலையிடங்களில் ஆகட்டும் அரசு நிறுவனங்கள், அரசியலில் ஆகட்டும் ஆண்களுக்கு நிகரான தில்லுமுல்லுக்களில் போட்டியிடுவதை விடுத்து தங்கள்  பெண்மைக்கு இணங்கும் விதம் போற்றும் விதம் நடந்து கொள்கின்றனரா என கேள்வி எழுகின்றது. பெண்கள் பெண்மைக்கு எதிரானது ஆண்களால் ஆன வன்முறை மட்டுமல்ல பெண்களால் நிகழும் வன்முறையும் தான்.

இன்றைய சமூகத்தின் வளர்ச்சிக்கு தரமான பெண்மையில் வளர்ச்சி அவசியம் தேவை. ஒரு சமூகத்தின் ஆக்கவும் அழிவும் பெண் தான். ஒரு சமூகத்தின் மனசாட்சியும் பெண்ணே! கட்டுப்படுத்தும் மூக்கணாம் கயறும் பெண் கையிலே உள்ளது. சில ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை தவிர்த்து மற்று அனைத்து பெண்களையும் இகழ்ச்சியாக காண்பதையும் கண்டு வருகின்றோம். ஒரு பெண்ணை இகழும் போது தன் தாயை, தன் சகோதரியை பழிப்பதாக உணர்ந்தாலே பெண்மை தழைக்க  துவங்கி விடும்.  ஒரு தாயின் இரக்கமே மனித குலத்தையே நிலைக்க செய்கின்றது. ஒரு மனைவியின் பாசம் ஒன்றும் இல்லாதவனை கூட வல்வனாக மாற்றுகின்றது. 
பெண் தன் பெண்மையின் கவுரத்தில் பெருமை கொண்டு நெகிழ்வதையும் தன் சக மனிதயான பெண்ணை போற்றுவதில் ஆண்கள் ஆனந்தம் கொள்ளும் காலம் வெகு விரைவில் அமைய வேண்டும்.
(பின் விபரம்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே போல் 24 விலா எலும்புகள் தான் உண்டு)பெண்கள் தின வரலாறு!

3 Mar 2013

மக்கள் போப் பெனடிக்ட்XVI

1995 ஆம் வருடம், தனது 78 வது வயதில் 265 வது போப் ஆக பதவி ஏற்ற போப் பெனடிக்ட்XVI, எட்டு வருடம் ஆகிவிட்ட நிலையில் தனது பதவியை விட்டு விலகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  முதல் போப், யேசு கிருஸ்து தேற்வு செய்த தனது  சீடர் சிமயோன்(பேதிரு) ஆவார். கல்வியறிவற்ற திருமணமாகி குடும்பஸ்தராக மீனவர் ஆவார். “என் பின்னே வா,… உன்னை மனிதர்களை பிடிப்பவரகளாக மாற்றுவேன்” என்ற வார்த்தையை கீழ்படிந்த அவர்; பின்பு  தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும் மட்டும் கிருஸ்துவின் போதனைகளை பரப்புவதில் மும்முரமாக இருந்தார். யூத ஜனங்களுக்கு நற்செய்தி அறிவிப்பிக்கவே பணியப்பட்டிருந்தார். ஆகையால் இஸ்ரயேல் தேசம் மட்டுமே தன் பணிதளமாக கண்டு செயலாற்றியவர்.

ரோமன் குடிமகனும் கல்வியில் சிறந்தவருமான பவுல் கிருஸ்தவம் தழுவிய போது கிருஸ்தவ போதனைகள் இஸ்ரேயல் தேசம் விட்டு ரோமா நாட்டிலும் பரவ ஆரம்பித்தது. கிருஸ்தவத்தில் பிறப்பிடம் யூதா தேசமாக இருந்தும் தற்போது அதன் தலைமை இத்தலி நாட்டின்  பகுதியான வத்திக்கானில் இடம் பெயர்ந்ததில்; வத்திக்கானை AD-313ல் போப்புக்கு பரிசாக கொடுத்திருந்த கான்ஸ்டைன் என்ற முதல் கிருஸ்தவ சக்கரவர்த்தியின் பங்கு உள்ளது.  1929ல் போப்பின் தலைமையில் தனி நாடாக பிரகடனம் செய்து கொண்டது.

போப் என்பவர் ஒரு மதத்தின் தலைமை குருமட்டுமல்ல, 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட வத்திக்கான் என்ற உலகிலே சிறிய நாட்டின் அதிபரும் ஆவார். அவர்களுக்கு என்றே தனி, ஆட்சி அதிகாரங்கள் உண்டு. சுவிஸ் ராணுவப்படையின் ஒரு குழு வத்திக்கான் காவல்  சேவை புரிகின்றது.  800 மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பினும் உலகனத்திலுமுள்ள கத்தோலிக்க கிருஸ்தவர்களின் கட்டுபாடு, கத்தோலிக்க துறைவிகள் பாதிரியார்கள் நடத்தும் லட்சக்கணக்கு  கல்லூரிகள், பல்கலைகழகங்கள், சேவை நிறுவனங்கள், இறையியல் கல்லூரிகள், கர்டினால்கள் என்ற உயர்நிலை குருக்கள், அவர்களின் அடுத்த நிலை குருக்கள் பிஷப்புகள், பாதிரியார்கள், டீக்கன்கள், கன்னியகமடங்கள், என ஒரு பெரும் நிர்வாகத்தின் கட்டுபாடும் வத்திக்கானிடம் தான் இருந்தது. 200 நாடுகளிலுள்ள 2.3 பிலியன் கத்தோலிக்க கிருஸ்தவர்களின் தலைவராக இருந்தாலும் உலகு அனைத்து மக்கள் கவனவும் போப் பக்கம் இருந்ததை மறுக்க இயலாது. உலகில் நடந்த பல யுத்தங்களுக்கு காரணவும், கட்டுப்படுத்தும் படியான இடத்தில் வத்திக்கான் இருந்தது என்றால் மிகையல்ல!

கத்தோலிக்க கிருஸ்தவ சபையில் திருமுழுக்கு பெற்ற உறுப்பினர்களாக இருக்கும் எவருக்கும் போப்பாக போட்டியிட தகுதி இருந்த போதும்   தற்போதைய வழக்கப்படி 120 கர்டினால்களில் இருந்து ஒருவரே போப் ஆக தேற்ந்தெடுக்கப்படுகின்றார். போப் தாமாக ஓய்வு பெறும் வழக்கம் பொதுவாக  இருப்பதில்லை. அவர்கள் பதவி காலம் அவர்கள் மரணத்துடன் நிறைவு பெறுகின்றதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் போப் பெனடிக்ட் தன் வயோதிகம் அதை சார்ந்த ஆரோக்கிய நிலை கணக்கில் கொண்டு; தன் சுய விருப்பம் சார்ந்து பிரார்த்தனை தியானம்  வழிகாட்டுதலால் விலகுவதாக அறிவித்துள்ளார். கண் பார்வை  கேள்வி குறை உள்ளதாகவும் சொல்கின்றனர் மேல் மட்ட அதிகாரிகள்.

பதவி விலகிய போப் பொதுவேதி நிகழ்ச்சிகளில் பங்குபெற தடையுள்ளது.    இனி வரும் மூன்று மாதங்கள் பேசாமடத்தில் வெளி உலகு தொடர்பில்லாது இருக்கவும் உள்ளார். பதவியில் முத்திரைகள் ஆன கை விரலில் அணிந்துள்ள தங்க மோதிரம் திருப்பி கொடுக்க வேண்டும். அதை அழித்து வரயிருக்கும் போப்புக்கு மோதிரம் அணிவிக்க உள்ளனர். அதிகாரத்தில் அடையாளமான கிரீடம், செங்கோல் இனி ஓய்வு பெற்ற போப்பால் பயண்படுத்துவது இல்லை, மேலும் சிவப்பு வண்ண காலணி அணிய தடை உண்டு. ஆனால் வெள்ளை உடையை தொடரவும் ஓய்வு பெற்ற போப் என்று அறியப்படவும் உள்ளார். ஜோசப் ரேட்சிங்கர் என்ற இயற்பெயர் அல்லாது தன் பதவி பெயர் போப் பெனடிக்ட்XVI என்றே அறியப்படுவார்.
ஒரு பெரும் பதவியிலுள்ள மாபெரும் மனிதர் தன் பதவியை விட்டு விலகி பதவி அதிகார பேராசை கொண்ட சமூகத்திற்கு வழி காட்டியுள்ளது பாராட்டுதல்குரியது. அவருடைய துணிவான நேர்மையான மனநிலையையும் காட்டுகின்றது இது. பதவி துறைப்பது என்பது சாதாரணம் அல்ல என்று இருப்பினும் இதன் முன்பும்  நான்கு முறை நடந்துள்ளது. இதே போன்று போப் கிரோகரிXII 1415தாமாக முன் வந்து பதவி விலகியுள்ளார். போப் செலஸ்டின் V ல் 1294ல் தன் பதவி விட்டு விலகிய பின், மனம் மாறி பதவியில் வரக்கூடும் என்ற சூழலில் வீட்டுகாவலில் வைக்கப்பட்ட நிலையில் 8 மாதம் கடந்து மரித்துள்ளார் என வரலாறு சொல்கின்றது. போப் பெனடிக்ட் IX  குற்ற செயல்களில் ஏற்பட்டதால் பதவியில் இருந்து விரட்டப்பட்டுள்ளார். முதன் முதலில் போப் ஆக இருந்து பதவி விலகி சென்றவர்18 வது போப்பான பொன்டைன் ஆவார். இது நிகழ்ந்தது  235ல் ஆகும்.

தற்போது பதவி விலகியுள்ள போப் ஜெர்மனியிலுள்ள பூன் பல்கலைகழகத்திலுள்ள புகழ் பெற்ற இறையியல் பேராசிரியர் ஆவர். பின்பு இப்பல்கலைகழகத்தின் துணை அதிபராகவும் உயர்ந்தவர். போப் என்ற வகையில் இவரை கண்டு  வருவதை விட இவர் சொற்பொழிவை கேட்கவே பல பொழுதும் மக்கள் விரும்பினர். கடவுளை பற்றிய அறிவை பாமரர்களுக்கு புரியும் வகையில்  எளிய முறையில் இறைவன் அன்பு- மனித அன்பு, நல்லிணக்கம் என்ற அடித்தளத்தில் பேசி வந்தவர் இவர். கடவுளில் அன்பு என்பது மனிதர்கள்  சுமூகமான உறவில் துவங்குகின்றது என்று பல முறை நினைவுப்படுத்தியவர். ஜெர்மன், பிரஞ்சு, லாட்டின், ஹீப்ரு, ஆங்கிலம், கிரீக் என பல மொழிகளில் வல்லுனர். தன் பதவி கால முதல் மூன்று வருடம் உலக நாடு சுற்றுப்பயணத்தில் விருப்பம் கொண்டிருந்தாலும் அடுத்த வருடங்களில் புத்தகம் எழுதுவதிலும் சொற்பொழிவு, கருத்தரங்கம் என சுறுசுறுப்பாக இயங்கி வந்தவர். இவரில் கருத்தக்களை பல சமூகத்தினர் பல முறை  கேள்விக்கு உட்படுத்தியிருந்துள்ளனர். இஸ்லாமிய மதத்தலைவர்கள், புத்த துறவி தாலாய்லாமா, ஹிந்து துறவிகளையும் சந்தித்து நல்லிணக்கம் பேணி வந்தவர். மற்று மதத்தலவர்களை சந்தித்து ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் வழிவகுத்தவர். கிருஸ்த ஆலையங்களில் பயண்படுத்தும்  பியானோ என்ற வாத்திய கருவி வாசிப்பதில் விற்பகர். தன் பெரும் வேலைப்பழு மத்தியிலும் தன் உடன் பிறந்தவர்களையும் நேசிக்க மறக்காதவர். இப்படியாக தன் வாழ்நாள் முழுவது மனித உறவும் இறைவணக்கவும் ஒரே போல் புனிதமானது என்று உணர்த்தி வந்தவர்.

சிலரால் நாத்திக போப் என்று கூட தூற்றப்பட்டார். தன் பதவி கடைசி நாட்களில் கிருஸ்தவ பாதிரிகளால் உருவான பாலிய ஊழல் சம்பவங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டவராக இருந்ததாக சொல்லியுள்ளனர். வத்திலீக்ஸ் போன்ற விவாதங்களும் அவரை துரத்திய வண்ணம் இருந்தது. வத்திலீக்ஸில் இவருக்கு நம்பிக்கைக்குரியவரான  சமையல்காரரை பயண்படுத்தியிருப்பதும் இதன் தூண்டுதலாக இருந்தவரை இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் ஓய்வும் பெற்று விட்டார். வத்திக்கான் நிர்வாகம் ஜெசுவிட், பெனடிக்ஷன், பிரான்சிகன் போன்ற சிறு குழுக்கள் கட்டுபாடில் இருந்தது போல் தற்போது குரியா என்ற குழுவின் ஆதிக்கப்பிடியில் உள்ளதாகவும் சொல்கின்றனர். சபையை எளிய தளத்திற்கு கொண்டு வர முயன்ற மாபெரும் மனிதர் இவர். பொதுவாக மதவாதிகள் என்றதும் ஊடகம், இணைய ஊடகம்  போன்றவற்றை பயண்படுத்துவதை பாவச்செயலாக பொருத்தி பார்க்கும் வேளையில் டிவிட்டர் போன்ற சமூக தளத்தின் தன் கருத்தக்களையும் பதிந்து தன்னையும் சமூகத்துடன் ஒரு கண்ணியாக இணைத்து கொண்ட அவருக்கு விடை சொல்வது வருத்தமே.

போப் என்ற வார்த்தையின் பொருள் தந்தை என்பதாகும். தமிழர்கள் போப் ஆண்டவர் என்று அழைப்பதும் கேரளாவில் புனித போப் என்று அழைப்பதும் ஒரு  தலைமையை அதன் அதிகார மரியாதையில் காணாது அவர்களே விரும்பாத புனிதம் என்ற பெயரில் ஒரு முகமூடியும் அணிவித்து சிறைப்படுத்துவதாக  உள்ளது.  ஆனால் அந்த பதவி சார்ந்த எல்லா தாச்சுறுத்தல்களையும் தடைகளையும் உடைத்து கொண்டு தான் கொண்ட கருத்துக்களை எழுத்தாலும் பேச்சாலும் பதிந்து வந்த போப் போற்றக் கூடியவர் ஆவார்.
ஒரு மதத்தலைவரின் மதிப்பும் அதன் தாக்கவும் அதன் உறுப்பினர்கள் சார்ந்தே உள்ளது. அவ்வகையில் சபையின் அடித்தள உறுப்பினர்கள் பற்றி அவர்கள் வாழ்கை பற்றி சபை அமைதி காப்பது துயரே. அடித்தள மக்கள் வாழ்கையை பக்தியில் மட்டும் சுழல விட்டு, அவர்கள் போராலும் நோய், வேலையில்ல பிணிகளில் உழலும் போது சபை கண்மூடி அமைதி காப்பதும் வருத்தமே. இஸ்ரேயல், ஈழம், எத்தியோப்பியா, அரபி நாடுகளில் கிருஸ்தவ அடித்தள உறுப்பினர்கள் மற்றும் பாதிரியார்கள் பெரும் சவாலை சந்தித்தே வருகின்றனர். இவையில் வத்திக்கானின் தாக்கம் ஆக்கவும் அறியும் படி இருப்பது கிருஸ்த சபை வளர்ச்சிக்கும் அதன் உறுப்பினர்கள் வாழ்கை நலனுக்கும் மிகவும் தேவை.  மதங்கள் வளர வளர அது ஒரு நிறுவனமாக உருமாறுவது அதன் அடித்தள உறுப்பினர்கள் தலைமையின் கண்ணில் எறும்பாகவும், கடைநிலை உறுப்பினர்களுக்கு தான் சார்ந்திருக்கும் மதத்தின் பிரமாண்டம் மலையாக கண்டு களியூறுவது வழியாகவும் அதன் நிழலில் மயங்கி கிடப்பதுமே உண்மை நிலையாக உள்ளது.  

26 Feb 2013

செல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை- ஜெ.சி டானியேல் என்ற தமிழர்!

2012 கேரளா அரசின் ஒன்றல்ல இரண்டல்ல ஏழு  திரைப்பட விருதுகளை தட்டி சென்ற படம் செல்லுலோயிட்.  சினிமா  ஆசையால்  பணம், நிம்மதி இழந்து தன் கடைசி நாட்களில் மருத்தவம் பார்க்க கூட வழியற்று  உற்றோர், உறவினரால் மற்றும் சமூகத்தால் புறம்தள்ளப்பட்டு 1975 ல் மிகவும் நிராதரவாக   மறைந்த  மருத்துவரான ஒரு தமிழனின் உண்மை கதையே இது.  அவர் தான்   மலையாள திரையுலகின் தந்தையான;ஜெ. சி டானியேல் என்ற கேரளா தமிழர்! 

புலைய ஜாதியில் பிறந்து  ஒரு மலையாளப் பெண் கலையின் மேல் கொண்ட விருப்பத்தால் சினிமாவில்  மேல் ஜாதி பெண்ணாக நடித்தார் என்று விரட்டியடிக்கப்பட்டு; பின்பு தமிழகத்தில் தலைமறைவாக வாழ்ந்து மரித்த ரோசி என்ற  மலையாள பெண்ணின் கதையும் சொல்லும் படவும் கூட!  

ஜீவநாயகம் சிரில் டானியேல் கிருஸ்தவ பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை லண்டனில் சென்று கல்வி கற்று வந்தவர். டானியேலுக்கு களரிபயிற்று என்ற கலை மேல் தீராத பிரியம்!  இக்கலையை பற்றி தனது 15வது வயதில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.  இக் கலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தகுந்த ஊடகம்,  காட்சி ஊடகமே என புரிதலில்  இக்கலை பற்றி ஆவணப்படம் எடுத்து வெளியிட விரும்பி திரைத்துறை பற்றி கற்க சென்னை செல்கின்றார்.  ஆனால் அங்கோ அவர் ஏற்றுகொள்ளப்படவில்லை..  கிருஸ்தவர்கள் திரைப்படம் காண்பதே பாவம் என்ற கருதிய கால சூழலில் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தால் படம் எடுத்தே தீர வேண்டும் என்ற உறுதியில்  மும்பை சென்று திரைப்பட நுணுக்கங்கள் கற்று அறிந்து  திருவனந்தபுரம் வந்து சேர்கின்றார். தன் லட்சிய கனவுக்கு என சொத்துக்கள் விற்று   4 லட்சம்(இன்றைய நிலவரப்படி   4 கோடி)ரூபாயில் முதல் ஸ்டியோ Travancore National Pictures)ஒன்றை திருவனந்தபுரத்தில் நிறுவுகின்றார்.  டானியேலின், தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, நடிப்பில்  முதல் ஊமைப்படமான விகதகுமாரன்(தொலைந்த குமாரன்)1928ல்   வெற்றிகரமாக வெளிவருகின்றது.

முதலில் இப்படத்தில் நடிக்க ஆங்கிலோ இந்திய நடிகையை தேர்வு செய்கின்றார். ஆனால் ஆங்கில நடிகையின் அகம்பாவ நடவடிக்கைகளை கண்டு மனம் கசந்த டானியேல் கேரளாவில் வயலில் வேலை செய்யும் ரோசம்மா என்ற இளம் பெண்னை  கதாநாயகியாக நடிக்க வைக்கின்றார்.

அக்காலயளவில் பெண்கள் திரைப்படங்களில் நடிப்பதை பாலியல் தொழிலோடு ஒப்பிட்டு தடுத்திருந்தனர். ஆனால் வயல் வேலை செய்யும் புலைய இனத்தை சேர்ந்த  ரோசி என்ற கிருஸ்தவ பெண் கலையில் மேல் கொண்ட ஈடுபாட்டால்  5ரூபாய் தினக்கூலியில் 10 நாள்  50 ரூபாய் கூலி பெற்று  நடித்து கொடுக்கின்றார்.  படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் பெண்ணின் தலையில் இருந்து ஒரு பூ எடுக்கும் காட்சியை கண்டு கோபம் கொண்ட பார்வையாளர்கள்  கீழ் ஜாதிக்காரப் பெண்ணை மேல்ஜாதிக்கார கதாபாத்திரம் தொடுவது போல் எப்படி நடிக்க வைக்கலாம் என கோபம் கொண்டு திரையை மட்டுமல்ல நடித்த பெண்ணின் குடிசையும் தீயிட்டு கொளுத்துகின்றன்றனர். உயிருக்கு பயந்து ஓடி வந்த  பெண் எதிரே வந்த  தமிழக லாறியில் ஏறி தப்பித்து நாகர்கோயில் வந்து சேருகின்றார். பிற்பாடு கேசவபிள்ளை என்ற அந்த லாறி ஓட்டுனரையே திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் தமிழச்சியாகவே தலைமறைவு வாழ்கை வாழ்ந்து மறைகின்றார். 


படம் நடித்தவருக்கே இந்த கதி என்றால் படம் தயாரித்து, இயக்கி, நடித்த டானியேல் நிலை என்னவாகும்.  அனைத்து பணம், நிம்மதி இழந்து தமிழகம் அகஸ்தியபுரத்தில் குடிபுகிற்கின்றார் அங்கு மருத்துவம் கற்று பல் மருத்துவராக தமிழத்தில் பல இடங்களில் பணிபுரிகின்றார்.

திருச்சியில் பணியாற்றும் வேளையில் தமிழக நடிகர் பி.யூ சின்னப்பாவின் அறிமுகம் கிடைக்க மறுபடியும் சினிமா ஆசையுடம் திரையுலகம் நோக்கி செல்கின்றார். இந்த முறை சின்னப்பா கோஷ்டிகளால் ஏமாற்றப்பட்டு இருந்த சொச்ச கொஞ்சம் பணவும் இழந்து தனிமையிலும் மன உளச்சலிலும் வீழ்ந்து விடுகிறார். 

 பக்கவாதம், பார்வைக்குறைபாடு என பல இன்னலுக்கு உள்ளாகி கொடும் வறுமையில் தன் மருத்துவ செலவுக்கு கூட வழியற்று கேரள அரசிடம் ஓய்வூதியம்  கேட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். 

அக்காலயளவில் அரசு பணியில் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்தவர் பிரபல மலையாள எழுத்தாளருமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன்.  இவரோ டானியேல் மலையாளி அல்ல,  இவர் தமிழர் என்பதாலும்  தமிழகத்தில் வசிப்பதாலும் தமிழக அரசை அணுக பரிந்துரைக்கின்றார். மேலும் படம் எடுத்தார் என்ற சாற்றுக்குறிய படச்சுருளை(செல்லுலோய்ட்) சமர்ப்பிக்க கட்டளையிடுகின்றார். ஆனால் இப்படச்சுருள் தன்  இளம் வயது மகன் ஹாரி நாடாரால் அழிக்கப்பட்டது இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீரத்திற்க்கு பெரிதும் தடையாகின்றது.  அது மட்டுமல்ல்  ஜெ.சி டானியேல் தான் முதல் மலையாளப்படம் எடுத்தார் என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டு  மாடேன் தியேட்டர் உரிமையாளர் டி ஆர்.சுந்தரம் தயாரிப்பில் வந்த 'பாலன்' என்ற பேசும் படமே முதல் மலையாளப் படம் என்ற அங்கீகாரம் பெற்றிருந்தது.  


நாடார் என்ற இனத்தை சேர்ந்த தமிழர்  பிராமண அரசு அதிகாரியான மலையாற்றூர் ராமகிருஷ்ணன், கேரளா முதல்வராக இருந்த கெ.கருணாகரன்  போன்றோரில் காழ்ப்புணர்ச்சியால் உதவிகளும் பெறாது தீராத மனத் துயருடன் 1975ல் உலக வாழ்கைக்கு விடைகொடுக்கின்றார்.  



இவருடைய காதல் மனைவி ஜானட் தன் கணவரின் எல்லா செயலுக்கும் ஆசைகளுக்கும் பக்கபலமாக இருந்ததுடன் இவருடைய கடைசி நாட்களில் மிகவும் கருதலாக நோக்கினார் என்று இவருடைய பேத்திகள் சான்றுபகிர்கின்றனர்.விவாதம்!

இப்படியாக ஒரு பெரும் கலைஞர் ஜாதி, மொழி, மாநில அரசியல் காழ்புணர்ச்சியால் அவமதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு வாழ்ந்து மறைந்ததை சொல்லும் படமே இது.  திரைப்பட பத்திரிக்கையாளரான சேலங்காட் கோபாலகிருஷ்ணனின் 'டானியல் வாழ்கை சரிதம்' மற்றும் வினு அபிராஹாமின் ‘நஷ்ட நாயகி’ என்ற புத்தகவும் ஆதாரமாக கொண்டு இப்படம் உருவாக்கியுள்ளனர். 
கேரளா அரசின் ஏழு  விருதுகள் கிடைத்திருந்தாலும் கேரளா காங்கிரஸ் அரசியல்வாதிகளையும், மலையாற்றூர் ராமகிருஷ்ணன் ரசிகர்களையும் கோபம் கொள்ள வைத்த படம் இது.  பல விவாதங்கள் எழுந்தாலும் உயிருள்ள போது ஒடுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்கை ஒரு சரிதமாக பதியப்படுவதும் அவரை கொண்டாட நினைத்த மலையாள இயக்குனர் கமலுக்கும் டானியேலாக நடித்திருக்கும் பிருத்விக்கும் வாழ்த்துக்கள். இசை எம்.ஜெயசந்திரன் இயக்கத்தில் வந்துள்ளது.

கலாச்சாரம், மதம், பண்பாடு என பல பெயர்களில் கலைஞர்களை; அவர்கள்: படைப்புகளை ஒடுக்கும் சூழலில் உண்மையாக உழைத்து நட்டத்தில் வாழ்ந்து மரிக்கும் கலைஞர்களின்  வாழ்கையை திரையில் கண்ட பார்வையாளர்கள் ஒரு சொட்டு கண்ணீர் பொழிக்காது திரும்பவில்லை என மலையாள ரசிகர்கள் சொல்லியுள்ளனர். கலைப் படம் என்பதை விட ஒடுக்கப்பட்ட ஒரு சிறந்த தமிழனின் வாழ்கையை சொல்லும் படம் இது என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

மேலும் பியு சின்னப்பா போன்றவர்கள் அரங்கில் நாயகர்களாகவும் வாழ்கையில் வில்லனாகவும் இருமுகம் கொண்டு வாழ்ந்து வந்ததை  கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது இப்படம். அதே போல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இடதுசாரி கொள்கையில் ஊறி அதை கதையாகவும் திரைக்கதையாகவும் விற்று காசு சம்பாதித்த போது அவர்கள் எழுத்திற்கும் செயல்களுக்குக்கும் இடையில் பெரும் முரண்பாடு இருந்துள்ளதை  இப்படம் கோடிட்டு காட்டியுள்ளது.  அதே போன்று  மலையாளப்பட முதல் சூப்பர் ஸ்டாரானாக சத்தியன் மாஸ்டரும் ஒரு நாடார் இனத்தவரே. அவரும் ஜெ.சி டானியேலுக்கு உதவவில்லை என்பதே வரலாறு.                                                                                                                
இப்படியாக சமூகத்தில் பெரும் பிம்பங்களாக இருந்து மறைந்தவர்களின் மறுபக்கத்தையும் விரல் நீட்டியுள்ளது.     இதே போன்ற படங்கள் தமிழிலும் உருவாகவேண்டும் அவயை ரசிகர்கள் அரசியலால் எதிர்க்காது அதே போல் ரசிக்கவும் ஏற்கவும் முன்வர வேண்டும்.  1992 துவங்கி கேரளா கலை- மற்றும் கலாச்சாரத்துறை ஜெ.சி டானியேல் பெயரில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை கொடுத்து வருகின்றது என்பது குறிப்பிட தக்கது. 

இந்த படத்தில் இடம் பெற்ற அத்துணை பாடல்களுமே சிறப்பு. மிக முக்கியமாக காற்றே காற்று என்ற பாட்டு. https://www.youtube.com/watch?v=FeF2yx4r3bI
 டானியேல் வாழ்கை- ஆவணப்படம் பி.கே ரோசி-முதல் மலையாள திரைப்பட நாயகி!

12 Feb 2013

அமிலத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள்!


ஸ்நேகா 
அமில வீச்சால் காரைக்கால் சேர்ந்த வினோதினி என்ற இளம் பெண் இன்று பலியாகியுள்ளது மிகவும் வருத்தம் தருவது மட்டுமல்ல வெட்கத்திற்குரியது.  உலக அளவில், வருடம்  1500 க்கும்மேல் அமில-தாக்குதல் நடக்கின்றது என்கிறது கிடைக்கும் தகவல்கள். இந்த பாதகச்செயலுக்கு  பெண்கள் 47%, ஆண்கள் 26% குழந்தைகள் 27% என்ற விகிதத்தில்  இலக்காகுகின்றனர்.  அமிலத்தை ஒரு ஆயுதமாக பாவிக்கும் நாடுகளாக  கம்போடியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் உள்ளது.

இந்தியாவை எடுத்து கொண்டால் வருடம் 150க்கு மேல் நபர்கள் அமில வீச்சால் பாதிக்கப்படுகின்றனர் என்று தகவகல்கள் தருகின்றன. பாதிக்கப்படும் நபர்களில் 80% பெண்கள் என்பது மிகவும் கவலைக்குறிய தகவல். பல பொழுதும் தங்கள் பாலிய ஆசைக்கு இணைக்காது இருப்பது, திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காது இருத்தல் காரணமாகினாலும், குடும்பப்பகையும் ஒரு காரணமாகத் தான் அமைகின்றது. இந்தியாவில் முதன் முதலாக அமில வீச்சால் ஒரு இளம் பெண்  பாதிப்பிற்கு உள்ளாகியது 1967 ல் பதிவாகியுள்ளது. தான் விரும்பிய பெண்ணை அப்பெண்ணின் தாய் திருமணம் செய்து தர சம்மதிக்க வில்லை என்ற காரணத்தால் ஒருவனால் அமிலம் வீசப்பட்டது.

இளம் மங்கைகள் மட்டுமல்ல திருமணம் ஆகிய பெண்களும் தங்கள் கணவர்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர். அதில் ஒருவரே மும்பையை சேர்ந்த ஷீரின் என்ற பெண். இவர்  இன்று இவ்வகையில் பாதிக்கப்படும் பெண்களை உதவ வேண்டும் என்ற நோக்கில் சமூக நல அமைப்பு (Palash) நடத்தி வருகின்றார்.  காயங்களில் இருந்து மீண்டு வந்தாலும் ஏற்பட்ட தழும்புகளால் தற்போதும் மக்கள் தங்கள் அருகில் இருந்து பயணம் செய்யப் பயப்படுகின்றனர், சிலர் கேலி செய்கின்றனர் என்று தன் கவலையை பகிர்கின்றார்.

ஸ்நேகா ஜகவெய்லி என்ற இளம் குடும்பத் தலைவியின் அனுபவமோ இன்னும் கொடியது. இவருடைய கணவர் சீதனம் வாங்கி வர நிற்பந்திக்க இவர்களுக்குளான சண்டை வலுக்கின்றது. தன் பெற்றோர் வீட்டில் அழைத்து வரப்பட்ட நிலையில் தன் கணவரால் அமில வீச்சுக்கு உள்ளாகின்றார். காவல்த்துறை- சட்டத்திடம் தன்னை காட்டி கொடுக்ககூடாது என்று கணவர் காலில் விழ இவர் மறுபடியும் கணவர் வீட்டில் வாழ முன் வருகின்றார். அங்கு மறுபடியும் பெரும் துன்பத்தில் கடந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.கணவர் விட்டில் தனிமைப்படுத்தபடுகின்றார். வீட்டு அடுக்களை,படுக்கையறைக்குள் செல்ல தடை விதிக்கின்றனர்.  மூன்றரை வயதான தன் சொந்த மகனையும் அவரில் இருந்து பிரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே துரத்துகின்றனர். பெற்றோர் மறுபடி ஏற்க மறுத்த நிலையில் இன்று மராத்தி திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுதுபவராக தன் வாழ்கையை கொண்டு செல்கின்றார்.

 மருத்துவர் எஸ். ஆர் விஜயலக்ஷ்மி  அமிலம் வீச்சால் பாதிப்படைந்தது அவர்  மருத்துமனை நடத்தி வந்த கட்டிட உரிமையாளராலே. முன் பணமாக வாங்கிய பணம் திரும்பித் தர மறுக்க காவத்துறை உதவியை நாடுகின்றார் மருத்துவர். கோபம் கொண்ட கட்டிட உரிமையாளர் அமிலத்தை தன் ஆயுதமாக பாவிக்கின்றார். இவர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் பணிசெய்து அமிலத்தால் பாதிக்கப்பட்ட பல நபர்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டியுமாக திகழ்ந்தவர்.

இப்படியாக மண்ணெண்ணைக்கு பதிலாக அமிலத்தை ஒரு ஆயுதமாக பாவிக்க ஆரம்பித்தது வேதனைக்கு உரியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை அணுகினாலும் சட்ட பிரிவை கூறி உடன் வழக்கு பதிவது இல்லை. இன்று மரித்து போன காரைக்கால் வினோதினி சம்பவத்திலும் குற்றசெயலில் ஏற்பட்டிருந்த ஒருவரை மட்டுமே ஜெயிலில் அடைத்துள்ளனர். குற்ற செயலுக்கு துணையும் பக்க பலமாக இருந்த மற்று பலரை கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவம் நடந்ததும் வினோதனி பக்கம் ஏதேனும் தவறு உண்டா என தேடவே ஒரு வகை சமூகம்  துணிந்துள்ளது.

அமிலவீச்சால் பாதிப்படைந்த  சோனாலி வாழும் உரிமை மறுக்கப்பட்ட தனக்கு இறக்வாவது உரிமை தரக்கோரி நீதிமன்றம் அணுகியிருந்தார். அவர் தேவையான மருத்துவ வசதி கிடைக்காது அரசு உதவியும் கிடைக்காது 7 வருடமாக தவிக்கும் போது 9 வருடம் கடும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் மூன்றே வருடத்தில் ஜாமியனில் வெளிவந்து விட்டனர். இதுவே நம் சட்டத்தின் நீதியின் போக்கு! பாதிக்கபப்ட்ட நபருக்கு அரசு உதவ வேண்டும் அல்லது யாரால் பாதிப்படைந்தாரோ அவரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர  வேண்டும். ஆனால் இது ஒன்றும் நடைபெறாது ஒரு இளம் பெண் தன்மானத்துடன் வாழும் உரிமையை பறித்ததும் இல்லாது பாதுகாப்பான வாழ்க்கைக்கும் தடையாக செயல்படுகின்றனர். இந்தியாவில் விலையில்லா பொருட்களாக மனிதர்கள்-பெண்கள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதையே இது குறிக்கின்றது. வாழவும் வழியற்று தங்கள் அடையாளவும் இழந்து மிகவும் மனசிக்கலாக சூழலில் பெண்கள் உயிர் வாழ தள்ளப்படுவது மிகவும் வருத்தம் தரக்கூடியதே.

தன் உருவத்தை மட்டுமல்ல சுயமரியாதையாக வாழும் உரிமையும் இழக்கின்றனர். சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர், அல்லது பாதிக்கப்படவர்கள் ஒதுங்கி வாழும் சூழலுக்கு தள்ளபப்டுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1099ஒன்பது வருடம் ஜெயிலும் 10 லட்சம் நஷ்ட ஈடு என்பது சட்டத்தால் கொடுக்கப்பட்ட தண்டனை என்றாலும் குற்றம் நிகழ்த்தும் அனைத்து நபர்களும் சரியாக விசாரிக்கப்படுவதோ தண்டனை பெறப்படுவதோ இல்லை. குற்றவாளியின் அரசியல் செல்வாக்கும் பணபலவுமே இவை எல்லாம் தீற்மானிக்கின்றது. இப்படியே இந்தியா செல்லுமாகின் பெண்கள் தங்கள் வாழும் உரிமையையே  இழந்து விடும் அபாயம் மிகவும் சமீபம்  வந்துள்ளதை காண்பார்கள்.                                                                                                                      
அமிலம் எளிதாக வாங்கும் சூழல் மக்களுக்கு வாய்ப்பதை தடைசெய்யவேண்டும். வீடுகளில் கழிவறை மற்றும் சுத்தப்படுத்த அமிலம் உபயோகிப்பதால், இன்று எல்லா மளிகை கடைகளிலும் 50 ரூபாய் கொடுத்தால் உடன் கிடைக்கும் மலிவு ஆயுதமாக அமிலம் மாறி உள்ளது.

என்னதான் ஆயுதம் கிடைத்தாலும் அதை கொண்டு இன்னொரு மனிதன் மேல் கொடிய தாக்குதல் நடத்த  இரக்கமற்றவர்கள்,மனநிலையில் கோளாறு அல்லது உளைவியல் நோய் தாக்கியுள்ளவர்களாலே இயலும். ஈரமான, இரக்கமான மனநிலையில் வாழும் மக்களை உருவாக்க அரசும் ஊடகங்களும் முன் வர வேண்டும்.  மரணம் கண்டு உணர்ச்சிவசப்படும் சமூகம் நிதானமாக சிந்தித்து இதன் ஆணி வேரை களைய முன் வரவேண்டும். பரபரப்புக்கு என்று எடுத்ததும் ‘மரண தண்டனை’ என்று கூக்குரல் இடாது வளரும் சமூகம் இது போன்ற குற்ற செயலில் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும், இதனால் அனுபவிக்கும் பாதிப்பை புரியவைக்க வேண்டும். இதில் ஆசிரியர்கள் பெற்றொர் பங்கு நிறையவே அடங்கியுள்ளது. கிடத்தே தீரவேண்டும் எனக்கில்லாதது யாருக்கும் வேண்டாம் என்ற மனநிலை யாவும் வளர்ப்பால் தொட்டில் தொட்டு பின் தொடர்வது. சரியான அணுகு முறையில் இவர்களை திருத்த அல்லது இவர்களை தனிமைப்படுத்துவதே சக மனிதர்களின் பாதுகாப்பிற்கு உகுந்தது. 

அரசும் முக்கிலும் மூலையிலுமுள்ள சாராய கடைகளை மூடி பண்பான மக்கள் வாழ்கைக்கு துணை செய்யவேண்டும்.  குடித்து வெறி கொண்டு அவன் அழிவதும் மட்டுமல்லாது சக மனிதர்களை அழிக்கும் அசுரர்களாக உருவாகுவதையும் நான் கணக்கில் கொள்ள வேண்டும். 
ஊடகம் பரபரப்பு செய்தி தயார் செய்யாது உண்மையான, ஆக்கபூர்வமான,ஆழமான செய்தியை கொடுக்க முன் வரவேண்டும். இந்த குற்றத்தில் ஏற்பட்டிருக்கும் நபர் கட்டிட தொழிலாளி என்கின்றனர், கடை வைத்திருப்பதாக செய்தி வருகின்றது , பாதிக்கப்பட்ட நபர் படித்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் என்றும் கூறுகின்றனர். வினோதினிக்கு இவ்விடையத்தில் துளியும் பங்கு இல்லாவிடிலும் இளம் அறிவான, அழகான பெண்ணின் தகப்பனான தந்தைக்கு இதில் பங்கு இல்லையா என்பதை ஒவ்வொரு தகப்பனும் கேட்க வேண்டியுள்ளது. இவனை போன்ற இளைஞ்சனிடம் ஏன் தொடர்பு வைத்திருந்தார், பணக்கணக்கு பேணினர், வீடுவரை நட்பை எதற்காக பேணினார் என்பதையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது. 

பழிக்கு பழி என்ற சிந்தனை பாமர மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிக்கையாளர்களை கண்டிக்க வேண்டியுள்ளது இத்தருணத்தில். என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபரின் தந்தையிடம், சீமானிடம், மக்களிடம் கேட்பது வழியாக ஒரு பாசிச போக்கை தான் தெரிந்தோ தெரியாமலோ மறைமுகமாகவோ உருவாக்குகின்றனர். விசாரணை, நீதிமன்றம், நீதியரசர்கள் எல்லாம் சட்டத்தால் நியமிக்கபட்டிருக்கும் போது தன் ஒரே மகளை இழந்து தவிக்கும் தந்தையின் மன உணர்வை தூண்டி விட்டு திரைப்பட வன்முறையை விட பெறும் கலவரத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவது ஊடக தற்மம் அல்ல, அழகல்ல. ஊடகம் என்பது மனிதனை சிந்திக்கவைப்பதற்கே அன்றி முரடர்களாகவும், மூடர்களாகவும் வெறியர்களாகவும் மாற்றுவதற்கு அல்ல என்பதை புரிந்து கொள்வார்களா?  இதுவே தமிழகத்தில் நடந்த கடைசி கொடிய துன்ப நிகழ்வாக இருக்கட்டும். வேறு எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்ற  எண்ணங்களுடன் முடிக்கின்றேன்.