13 Jul 2012

என் மகன் எந்த வகுப்பில் படிக்கின்றான்?





என் மகன்  9 வகுப்பில் படிக்கின்றான் என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து இன்னும் சில புதிர்களை தூக்கி போட்டான். தனக்கு 10 வகுப்பு பாடவும் கற்பிக்கின்றார்கள் 10 ஆம் வகுப்பு புத்தகம் வேண்டும் என்பதாகவே இருந்தது. மெட்ரிக் பள்ளி பாடத்திட்ட புத்தகத்திற்க்கு என்றே 3980 ரூபாய் கட்டியுள்ளோம். . ஆனால் பள்ளியில் இருந்து கிடைத்ததோ சமச்சீர் பள்ளி பாடத்திட்ட புத்தகம். மொத்ததில் 21,800 ரூபாய் வாங்கியிருப்பதோ மெட்ரிக் பள்ளி பாடத் திட்டம் கற்பிக்க.

 9 ஆம் வகுப்பு பாடப்புத்தகம் சும்மா பெயருக்கும் மட்டும் தானாம். நடைமுறை  செயல்முறை படிப்புக்கு 10ஆம் வகுப்பு பாடபுத்தகம் வேண்டுமாம்.  கடைகளில் பழைய இருப்பு இல்லை என்று சொல்லி விட்டனர். இது ஒரு வழியில் சென்று கொண்டிருக்க   பழைய புத்தகம் கிடைக்குமா என்று உறவினர்கள் தெரிந்தவர்களிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.  இணையத்தில் கண்டு பிடித்து முதல் மாத வகுப்பு தேர்வுக்கான பகுதியை மட்டும் மறுபதிப்பு(print) எடுத்து  கொடுத்து விட்டேன். நேற்றைய தினம் 10 வகுப்பு பாடப்புத்தகம் கொடுத்து விட்டனர் என்றான்.


மகன் புத்தகப்பை 30 கிலோவுக்கு மேல் ஏறி விட்டது.  தினம் ஒரு மூட்டையை சுமந்து கொண்டு ஒரு தெரு தள்ளி பள்ளி வாகனம் பிடிக்க ஓடிவதை  மௌனமாக கண்டு களிக்க வேண்டியது தான்.வீட்டிலும் புத்தகம் அடுக்க ஒரு புது அலமாரை வேண்டும் போலுள்ளது.  9ஆம் வகுப்பு சமச்சீர், மெட்ரிக், 10 ஆம் வகுப்பு சமச்சீர் புத்தகம் 20 க்கு மேலான நோட்டு புத்தகங்கள் என புத்தக வியாபாரி போன்றுள்ளான்!

என் மகன் 9, 10 வகுப்புகளை ஒரே தலைச்சுமடாக சுமப்பதை கண்டு மனம் நொந்து  நானும் 9, 10 வகுப்பு வீட்டில் இருந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். ஐய்யோகோ..... கொடுமை கொடுமை.. தமிழில்  10 இயல். ஒவ்வொரு இயலிலும் இரண்டு பாடம், கவிதை, இலக்கணம், உபபாடக் கதை என நாலு பிரிவு. இந்த கவிதை பக்கங்கள் புறநானூறு, திருக்குறல் என்று ஒரு 14 வயது சிறுவனை எவ்வளவு தமிழால் வதக்க இயலுமோ அந்த அளவு வதைக்கும் படியாக உள்ளது. என்னதான் இனிப்பாக இருந்தாலும் திகட்டும் அளவு கொடுத்து வெறுக்க வைப்பது போல் தான் திருக்குரலை தினித்துள்ளனர். திருவள்ளுவரை திட்டாத மாணவர்களே இருக்க மாட்டார்கள். சரி பிள்ளைகள் உபபாடத்திலாவது சுவாரசியமான சிந்திக்க தகுந்த கதை படிக்கின்றார்களா என்றால் அது ஒரு பெரும் கொலைக்களம்.

இனி சமூகவியல் என்ற பாடங்கள் நோக்கினால் அதன் வடிவமைப்பே மிகவும் கேலிக்குரியது. சரித்திரத்தை வளைத்து உடைத்துள்ளனர்.  ஆங்கிலம் சொல்லவே வேண்டாம். ஆங்கிலத்தை ஆங்கிலமாக கற்று கொடுக்காது தமிழ் ஆங்கிலமாகத் தான் உள்ளது.
 எனக்கே சந்தேகம் வந்து விட்டது 9 என்ற படியில் கால் வைக்காது  பத்தாம்  வகுப்பில் தாவி சென்று 2 வருடம் படித்து குறுக்கு வழி வாழ்க்கை கற்று கொடுக்கின்றார்களா?

ஒன்றும் விளங்க வில்லை. இந்த அரசியலால் பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களும் பலிகடாவாகி விட்டனர். 

இப்படி படித்து வரும் மாணவர்களிடம் கல்லூரி வகுப்புகளில் ஒரு சிறு கட்டுரை தமிழில் எழுதி  தர கூறும் போது ஒரு அழகும் இல்லாது  100 தவறுகளுடன் எழுதி தருவதை கண்டுள்ளேன்.

8 Jul 2012

ஜெ. ஷக்தி- அவள் முடிவும்!

முதல் பகுதி!  காலையில் நான் முன் வாசல் திறக்கும் போதே சக்தி வந்து  காத்து நிற்கின்றாள். அவள் அப்பாவின் இரண்டாவது மனைவி மகனையும் அழைத்து வந்திருந்தாள். அவள் வசிப்பது எங்கள் 3 தெருவு தள்ளியுள்ள குடிசைமாற்று குடியிருப்பில் தான்.

உண்மை தான் நாங்கள் 5 வருடம் முன்பு இங்கு வீடு கட்டிய போது சில வீடுகள் மட்டுமே இருந்தன.  இந்த குடிசை மாற்று குடியிருப்பு கூட ஒரு தமிழக மந்திரியின் கீழ் இருப்பதாகவும் இங்கு ஒரு கல்லூரி வர இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஒரு கல்லூரி வரவுள்ளது என்பது பக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு  பெருமையாகவும் இருந்தது .  ஒரு நாள் கட்டிட வேலை ஆரம்பித்தது. அரசு ஊழியர்கள் குடியிருப்பு என கூறினர், பின்பு இது அரசு கீழ்-நிலை ஊழியர் குடியிருப்பு என கூறி வந்தனர். சமீபத்தில்  குடியிருந்தவர்கள் கல்லூரி என சொன்னது பொய்யா என்று வாய் திறக்கும் முன் அடுத்த அறிவிப்பு வந்தது; இது குடிசை மாற்று வாரியம் என்று. காம்பவுண்டு வீட்டுக்காரர்கள் இந்த குடியிருப்பு தங்கள் பகுதிக்கு வருவதை ஆகும் மட்டும் எதிர்த்தார்கள். வழி இல்லை என கண்டவர்கள் வீட்டு சுற்று சுவர் உயரத்தை கூட்டி நல்ல நாயாக பார்த்து வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.

அரசு சொன்னது போல் இம்மக்களை இங்கு குடியமர்த்தியது இரண்டு வருடம் முன்பு.  இங்கு குடி வரக்கூடாது என்று இப் பகுதி சமீப மக்கள் எந்த அளவு எதிர்த்தார்களோ அதே போல்  இங்கு குடி வருவதில் துளி அளவும் விருப்பம் இருந்ததில்லை இவர்களுக்கும்.  அவர்கள் வாழ்வாதாரம் ஜங்ஷனை சுற்றியே   இருந்தது.  தாமிரை பரணி ஆற்றுக்கரையில் வீடு வைத்து குடியிருந்தவர்கள்.  இதில் பல மக்கள் லட்சம் செலவில் கட்டிய வீட்டை விட்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். நடந்து அரசு பள்ளிக்கு போய் வந்த இவர்கள் பிள்ளைகள் பேருந்தில் பள்ளிக்கு சென்று வரப்பட்டனர். இம்மக்களும் தினம் குறைந்தது 24 ரூபாய் செலவாகியது வசிக்கும் இடத்திலிருந்து வாழ்வாதாரம் தேடி சென்று வர. மேலும் பெட்டி  போன்று கட்டியிருக்கும் வீடு அவர்களுக்கு பிடிக்கவே இல்லை. மூன்றாவது  மாடியில் குடியிருக்கும் முதியவர்கள் பெரும் அவதிக்கு உள்ளானர்கள். கோழி வளர்க்க ஆடு வளர்க்க தடை! அரசு வேப்பமரம் வைத்து கொடுத்துள்ளதாம்.  டவுண் சென்று வரவும் செலவு என்ற நிலையில் பக்கத்திலுள்ள வீடுகளில் துணி பாத்திரம் தேய்ப்பதே தங்கள் தொழிலாக வைத்திருந்தனர். சில பெண்கள் டவுணில் சென்று பூ வாங்கி வந்து கட்டி விற்றனர்.

இதில் இளைஞர்கள் முதியவர்கள் வெட்டி பேச்சுடன் அங்கு இருந்து காலம் தள்ளுவதையும்  காண இயன்றது. சில மக்கள் எங்கள் பகுதி மக்கள் அவர்களுடன் சகஜமாக கதைக்க விரும்பாததை கவலையுடன் குறிப்பிட்ட போது அதுவும் தங்களுக்கு பாதுகாப்பு தான் என்று மற்று சிலர் கூறி வந்தனர்.

இரண்டு நாள், இரண்டு குட்டி யானையில் சென்று ஆணையர் அலுவலக ஒப்புதலுடன் இரண்டு பேருந்தை கொண்டு வந்தனர் எங்கள் பகுதிக்கு. பேருந்து வந்து சேர இன்னும் பல வருடங்கள் ஆகும் என ஏங்கிய நாங்களும் மகிழ்ச்சியுடன் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தோம். வீட்டிலுள்ள  தோட்டத்தில் பப்பாளி கொய்யப்பழம், சீத்தா, சப்போட்டா, நெல்லி என  இரக்கமில்லாது கொய்யப்பட்டாலும் சகித்து கொள்ள வேண்டி வந்தது. அவர்கள் குடியிருப்பு நாயை விரட்டுகின்றது என்ற காரணத்தால் எங்கள் தெரு நாய்கள் எல்லாவற்றிர்க்கும் ஒரே நாள் விஷம் வைத்து கொன்றது தான் மறக்க இயலாத துக்கமாக மாறியது.  இரவுகளில் அவர்கள் வீட்டு குழந்தைகளை தெருக்களை பொது கழிவிடமாக மாற்றுவதும் தெருவெல்லாம் குப்பையும் குளவுமாக எங்கள் பகுதி அடையாளம் கூட மாற்றப்பட்டும் விட்டது இந்த இரண்டு ஆண்டுகளில். காவலர்கள் நடமாட்டவும் அதிகரித்துள்ளது தற்போது. சில வேளைகளில் சண்டையிட்டு மண்டை உடைத்தவர்களை கூட்டி செல்ல ஆம்புலன்ஸுகளும் ஆரவம் எழுப்பி வந்து சென்றது.  இருந்தாலும் ஆள் அரவம் அற்ற எங்கள்  தெருவு பெண்களுக்கு சக்தி போன்ற பெண்கள் மிகவும் உதவியாக இருந்தனர்.

வந்ததும் கொடுத்த சிறு உணவை எடுத்து கொண்டு கிச்சு கிச்சு என்று வேலையை ஆரம்பித்து விட்டாள்.  தன் கதையையும் வரண்ட சிரிப்புடன் சொல்லி கொண்டே வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். 8 ஆம் வகுப்பில் மூன்று முறை தோற்றதால் படிக்க வேண்டாம் என அவள் அப்பா சொல்லி விட்டாராம். ஜங்ஷனில் பல் பொடி கம்பனியில் பொதி நிறைக்கும் பணிக்கு சென்று வ்ந்தாளாம். காலை 9 முதல் இரவு மாலை 6 வரை வேலை இருக்கும் என்றும் அண்ணனும் கொத்தனாராக வேலை செய்வதால் வீட்டில் அடுப்பு ஊத பிரச்சனை இல்லை என்றும் சொல்லி கொண்டு வந்தாள். அவள் முதிர் வயதான பாட்டியும் வேலைக்கு செல்வதாகவும் தன்னை நன்றாக பார்த்து கொள்வதாகவும் தன் அப்பன் வேறு கல்யாணம் செய்து ஜங்ஷன் பக்கம் இருப்பதாகவும் கூறினாள்.

அவள் வேலை செய்யும் பாங்கு மிகவும் பிடித்திருந்தது எனக்கு. வேலையை ஒரு ஈடுபாட்டுடன் செய்தாள். காய்ந்த இலையும் கம்புமாக இருந்த முற்றம் தூய்மையாக மாறி விட்டது. என்னிடன் சில பழைய உடைகளும் வாங்கியவள் பக்கத்து வீட்டில் துணி துவைக்க தேவை என்றால் சொல்லி வைய்யுங்கள் என்று சொல்லி சென்றாள். நான் சிறிய பணம் கொடுத்த போது எனக்கு வேண்டாம் சைக்கிள் கிடைத்து விட்டதே என இன்முகத்துடன் மறுத்தாள். வற்புறுத்தி கையில் தினித்த போது வாங்கி கொண்டாள்.

ஒரு சில நாட்கள் பின் சைக்களுடன் தூரத்தில் வருவதை கண்டேன். ஷக்தி நலமா என்றதும் அக்கா நீங்கள் என் பெயரை மறக்கவில்லையா. சைக்கிளை பழுது பார்த்து விட்டேன். உங்களிடம் காட்டி விடலாம் என்றே வந்தேன். வாரக் கடைசி நாட்களில் வந்து துணி அலம்பி தருகின்றேன் என்று சொல்லி சென்றவள் சில வாரங்களில்  சொன்னது போல் வந்து வேலையும் செய்து தந்து சென்றாள்.

பின்பு பல மாதங்களாக காணாது இருந்ததால் எங்கள் வீட்டு முற்றவும் குப்பையாக காட்சியளிக்க; பூக்கார அக்காவிடம் ஷக்தியை தெரியுமோ என்ற போது உங்களுக்கு தெரியாதா அவளை போலிஸ் பிடித்து சென்று விட்டது. லோக்கல் தொலைகாட்சியில் பார்க்கவில்லையா அவள் 3 நபர்களுடன் பிடிக்கப்பட்டாள் என்றார். எனக்கு ஆச்சரியம் எப்படி இப்பிள்ளை இந்த சூழலில் விழுந்தது. அந்த குடியிருப்பில்  இந்த தொழில் செய்பவர்கள் வசிப்பதையும் சில பெண்கள் கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டி கொண்டு தவிப்பதையும் நேரிலே கண்டுள்ளேன். ஆனால் ஷக்தி போன்ற வேலையில் ஈடுபாடுள்ள பெண் எப்படி மாட்டினாள் என்று ஆயிரம் கேள்விகள்.  அக்கா, நேரம் பிந்தினால் பாட்டி தேடுவாள்  கிளவி கண்டமேனிக்கு திட்டுவா என்று சொல்லி சிரித்து கொண்டிருந்தாளே என்று என் மனம் பதறியது.

அவளை மறந்து விட்ட நிலையில் பல மாதங்கள் பின்  ஷக்தி போன்றே ஒரு சின்ன பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். உற்று நோக்கிய போது ஓ ஷக்தி தான் தலை கிராப் வெட்டி நவீன உடையுடன் சிரித்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். என்னம்மா நிறைய நாட்களாக காணவில்லையே என்ற போது  அக்கா பின் தலையில் அறுவை சிகித்சை, திருவனந்தபுரத்தில் சிகித்சையில் இருந்தேன் என்றாள். இப்போது கண் புருவம்  வில்லாக வளைத்து வெட்டப்பட்டிருந்தது.  பழைய ஷக்தி அல்லாது புது ஷக்தியாக தெரிந்தாள். ஆனால் கண்ணில் ஒரு சோகம் நிழலாடியது கண்டேன். உன்னை பற்றி கேள்வி பட்டேன் என்று அவளிடம் கேட்க மனம் வரவில்லை. இருந்தும் சிறிய மனக்குழப்பம் பயம்.  ஆனால் அவளோ  வேலை இருந்தால் செய்து தருகின்றேன் என்றாள். இந்த முறை துணி துவைத்து தந்தவள் பழையது போல் ஈடுபாடாக செய்யவில்லை அவ்வளவாக பேசவும் இல்லை.   வாரம் கடைசி நாள் வந்து பணம் வாங்கி கொள்கின்றேன் என்று சொல்லி சென்றவள் பின்பு வரவே இல்லை.

ஒரு நாள் முச்சந்தியில் வைத்து பார்த்தேன். ஒரு நாள்  குடியிருப்பில் கொட்டடி சத்தம் கேட்டதும் என்ன என விசாரித்த போது ஷக்தி என்ற ஒரு சிறு பெண்ணை அவள் அப்பன் அடித்து கொன்றுவிட்டான் என்றார் பூக்காரி !




7 Jul 2012

நன்றி வணக்கங்களுடன் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 ஒவ்வொரு வருடவும் ஒவ்வொரு கனவுகள் நிறைவுகள். அவ்வகையில் இந்த  வருட பிறந்த நாள் சற்று பெரிய மனதாங்கலுகளுக்கு மத்தியில் துவங்கியது. "வடை போச்சே"ன்னு காக்கா அழுதது போன்று  அந்த  நரியின் கொடிய நினைவுகள் மத்தியில் இந்த பிறந்த நாள் கடந்து வந்தது.

காலை 7.30 வரும் பள்ளி வாகனத்தை பிடிக்க வேண்டிய இளைய மகன்; "இன்று உங்கள் பிறந்த நாள் போன்றே எனக்கு தெரியவில்லை. நீங்கள் என் நண்பர்களுக்கு மிட்டாய் வாங்கி தரவில்லை" என்றான். தம்பி  உங்களை போன்ற குழைந்தைகள்  தான் கொண்டாடுவார்கள் அடுத்த வாரம்  உன் பிறந்த நாளை கொண்டாடுவோம். மாலை பள்ளி விட்டு வந்ததும் உனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி தருகின்றேன் என்று சமாதானம் கூறி ஒரு முத்தம் கொடுத்து அனுப்பினாலும் முகத்தில் தெளிவில்லாது திருப்தி இல்லாதே சென்று கொண்டிருந்தான். 

பெரியவர் இன்னும் முரட்டு பிடியாக நான் இன்று சாம்பார் கொண்டு போக இயலாது  நல்ல  கறி வைத்து தாருங்கள் என்று கூறி கொண்டிருந்தான். ஆகா...... அவனுக்கும் கறி ரெடியாகி விட்டது. அவன் பள்ளி  வாகனம் ஓட்டிக்கு வீட்டு முன் வந்து செல்ல வசதியில்லையாம் ஆகையால் ஒரு தெரு நடந்து சென்றே  வாகனத்தை பிடிக்க வேண்டும். 

பிள்ளைகள் அனுப்பி விட்டு அத்தானுக்கும் காலை சாப்பாடு எடுத்து கொடுத்தாலும் மனதில் ஒரு நிம்மதி இன்மை, வருத்தம், பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. கடந்த மே 4 தேதிகளில் துவங்கிய மனப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர எடுத்த சில என் நீக்கங்கள் தவறாக எடுக்கப்பட்டு  நான் எதிர்பாராத சில இழப்புகளை சந்திக்க வேண்டியாகி விட்டது. கடந்த 60 நாட்களில் என்ன எல்லாம் மாற்றங்கள் வாழ்க்கையில். ஒரு நேர்முகம், வெற்றி, கலகம், உடன் தோல்வி.......நினைத்து பார்க்க பார்க்க விடை தெரியாத கேள்விகளும் வெறுப்பும்  தான் இருந்தது. 

எல்லா வருடவும் ஆலயம் சென்று வணங்கி வரும் நான், இந்த வருடம் ஆற்றலற்று வீட்டிலிருந்தே கடவுளை நினைத்து கொண்டேன்.  எந்த இடத்தில் தவறு நிகழ்ந்துள்ளது எனக்கு பிடிபட வில்லை.  என் வேலையில் மட்டும் தான் கவனமாக இருந்தேன். அவர் வழியிலே நான் குறுக்கிடவில்லையே. வாழ்க்கை நுணுக்கங்களை, வாழும் கலையை கற்று கொள்ளும் முன் ஒவ்வொரு பிறந்த நாளாக வந்து செல்கின்றதே என்ற வருத்தவும் என்னை விட்ட பாடில்லை.

புதுத்துணி வாங்கி கொடுத்தும் முகம் தெளிவில்லையே என்று கண்ட  கணவர் தன்னுடன் வெளியில் வர  அழைத்தார். உடன் கிளம்பி விட்டேன்.  இப்போது அவருடன் சில தூரம் பயணிப்பது தான் சில சிந்தனைகளை விலக்க உதவுகின்றது. எனக்கு பிடித்த புத்தகக் கடைக்கு தான் அழைத்து சென்றார். நிறைய புத்தகங்கள் குவிந்து கிடந்தன.  அப்போதிருந்த  மனநிலையில் ஓஷோவின் 'எதிர்ப்பிலேயே வாழுங்கள்' என்ற புத்தகம் தான்  என்னை கவர்ந்தது. 

கடந்த 6 மாதமாக நான் எதிர்க்காமலே கொடும் எதிர்ப்பிலயே வாழும் சூழல். ஏன் அந்த நபர் என்னை எதிர்த்தார் என எனக்கு பிடிபடவில்லை.  அவர் எதிர்ப்பு என் அமைதியான மனநிலையை பாதித்து கொண்டே இருந்தது.  பல வருட கனவு வேலை, மிகவும் பிடித்த வேலை செய்யும் சூழல், பண்பான அதிகாரிகள் ஆனால் என்னுடன் வேலை செய்யும் பெண்ணால் முதல் நாளே புரக்கணிக்கப்படுகின்றேன். "உங்களுக்கு வேலை கொடுத்ததே செல்லுபடியாகாது பாவம் உங்களை நினைத்து தான் சும்மாதிருக்கின்றேன் இல்லை என்றால் முதல்வரிடம் சென்று உங்களை துரத்தி விடுவேன்". என்றார். எனக்கு இதன் உள்நோக்கம் புரியவில்லை பதில் சொல்லவும் விளையவில்லை. ஆனால் நீங்கள், உங்கள் என்ற வார்த்தைகள் ஆறு மாத முடிவில் இது.. அது..என்று மாறிவிட்டது. என்னை திட்டி கொண்டிருக்க என்னுடன் பணி செய்பவர்கள் அதை கேட்டு கொண்டிருக்க, நான் தொலைகாட்சி செய்தி காண்பது போல் அந்த நபர் முகத்தை பார்த்து கொண்டே இருந்தேன். முறையிட்ட அதிகாரியும் இதை பெரிது படுத்த வேண்டாம் என்ற போது   இதை பதிவு செய்து அதினும் மேல் அதிகாரியிடம் முறையிடவும் தோன்றவில்லை எனக்கு!


ஆனால் இந்த வேலைக்கும் என் கனவுகளுக்கும் 20 வருட பழக்கம் இருந்தது. அன்று 11ஆம் வகுப்பு கல்லூரியில் தான் நாங்கள் கற்றோம். மோனாம்மா என்ற பேராசிரியரை கண்டது முதலே என் பேராசிரியை கனவும் சேர்ந்து வளர்ந்தது.  மேல் படிப்புகாக வீட்டில் அனுமதி கேட்டதும் நல்ல மாப்பிள்ளை இப்போது வந்துள்ளார், "உங்கள் விருப்பதிற்க்கு நாங்கள் இருந்து விட்டு  பின்னால் வருத்தப்பட இயலாது. போகிற வீட்டில் ஆசை உள்ளவர்கள் படியுங்கள்", என்று சொல்லி விட்டார்கள். பின்பு வாழ்க்கை நினைத்து பார்க்காத திருப்பங்களை தந்து விட; விட்ட படிப்பை பிடிக்க சிறிய மகன் முதல் வகுப்பு போகும் மட்டும் காத்திருக்க வேண்டி வந்தது.  அவர்கள் பள்ளியில் சென்ற போது நான் பல்கலைகழகம் நிதம் 2 மணி நேரம் பயணித்து  3 வருடத்தில் படிப்பை முடித்து என் வாழ் நாள் லட்சியத்தை அடைந்தேன்.   என் வாழ்க்கைக்கு  நல்ல சில அர்த்தங்கள் கொடுத்த வேலை இது. 

ஆக்கபூர்வமான  சேவை செய்ய வாய்ப்பு தந்த வேலை என்பதால் இந்த சிறுபிள்ளைத் தனமான "இரு பெண்கள் பொறாமை சண்டை" என மற்றவர்களால் அழைக்கும்  இந்த வழக்கை சண்டை சச்சரவு என்று இழுக்காது முகநூல் வழியாக உங்களுக்கும் எனக்கும் புரிதல் தேவை  என்று மிகவும் மனித நேயத்துடன்  மிகவும் பண்புடன் சகமனிதையாக கேட்டு கொண்டதையே ஒரு பெரும் ஒழுக்க பிரச்சனையாக மாற்றி எனக்கு முட்டுகட்டை இட்டு தன் மனநோயால் வந்த ஆக்ரோஷத்தை  தனித்து கொண்டுள்ளார் அந்த பெண்.


 முகநூலை மிகவும் ஆபத்தான ஆபாசமாக பார்க்கும் அவளுடைய பார்வையில்  சிலுவையில் அறைய கொண்டு போகும் முன் யேசு நாதரிடம் "உண்மை என்றால் என்ன " என்று கேட்ட போது அமைதி காத்த அதே சூழலில் நானும் தள்ளபப்ட்டு விட்டேன் என்று புரிந்து விட்டது.  இனி என் நியாயங்கள் எண்ணங்கள் எடு பட  போவதில்லை என்பதும் தெரியும். 

வாய் சண்டை இடுபவளிடம் வார்த்தைகளால் ஏன் நட்பு பேணக்கூடாது என்று விளையாட்டாக எடுத்த முடிவு வினையில் முடிந்ததா அல்லது உலக சூக்சுமம் அற்ற என் போக்கு  என்னை துயரில் ஆழ்த்தியதா என இன்னும் விளங்க வில்லை. விசாரணை செய்யாது,  என் நிலை எடுத்து சொல்லும் வாய்ப்பு தராது தண்டிக்கப்பட்டுள்ளேன். 

என் நண்பர்கள் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் என் மனம் இந்த பிறந்த நாள் அன்று மிகவும் துன்புற்று தான் இருந்தது. பாவி செல்லுமிடம் பாதாளம் என்பது போல் இணையவும் சரியாக கிடைக்காது இருந்த நேற்றைய தினம் அதி காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரத்தின வேல் ஐயா தொலைபேசியில் வாழ்த்துக்கள் அளித்தார்கள். என் நலனில் பெரிதும் விரும்பி நோக்குபவர் ஐயா. பல அரிய புத்தகங்கள் வாசிக்க சொல்லி அனுப்பி தந்துள்ளார். என் ஒவ்வொரு நடைவடிக்ககளும் ஒரு பொறுப்புள்ள தகப்பனாக இருந்து வழி நடத்துபவர்.  காலை 11 மணிக்கு சுவிஸ்லிருந்து ஸ்ரீ அண்ணா தொலைபேசியில் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்தியது மனதிற்க்கு ஆறுதல் கொடுத்தது.  இந்த வருடம் வர இருக்கும் "நான் சொல்வதெலாம் உண்மை "என்ற புத்தகம் வெளியிட பெரிதும் உருதுணையாக வழிகாட்டியாக இருப்பவர் என் சகோதரரும் தோழரும் புத்தக ஆசிரியருமான  ஸ்ரீ கந்தராஜா கங்கைமகன்.

 இரவு லண்டனில் இருந்து சுபி அக்காள் "ஓ அந்த விடயத்தை தள்ளி குப்பையில் போடுங்கள், பழையது பழையதாக இருக்கட்டும் புதியவையை பற்றி சிந்திக்கள்" என்று அழுத்தி கூறி என் மனப்போராட்டத்திற்க்கு முற்று புள்ளி வைத்தார்.  தூங்க செல்ல இருந்த வேளையில்  லண்டனில் குடியிருக்கும் ஈழ சகோதரி ஜமுனா நதி அக்காள்  "நீங்கள் கடந்ததை விடுத்து வருவதை எண்ணுங்கள், உங்களால் முடியும் என வாழ்த்திய  போது இன்னும் நம்பிக்கை பிறந்தது நல்ல நல்ல மனித உறவில் மனித வாழ்வில். 

இன்று காலை முகநூல்  சுவர் பக்கம் வந்த போது தான் முகநூல் உள் பெட்டி வழியாக 99 என் நண்பர்கள் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர். ஸ்ரீ வில்லிபுத்தூர் ரத்தினவேல் ஐயா சுவரில் 166 விருப்பங்களுடன்  115 வாழ்த்துக்கள் பெற்றதை கண்டு மகிழ்ச்சியுற்றேன்.  நோர்வேயில் வசிக்கும் சகோதரர் மற்றும் நண்பர் பத்மன் அண்ணா சுவர் வழியாக  73 விருப்பங்களுடன் 35 வாழ்த்துக்களும் பெற்ற நான் இன்று சாம்பலில் இருந்து உயிர்த்து எழுந்து மேல் நோக்கி பறந்த பீனிக்ஸ் பறவை போல் உணர்கின்றேன்.

நான் எதிர்ப்பில் மட்டுமல்ல அல்ல வாழ்கின்றேன் அதை விட நட்பு, பாசம், பண்பானவர்கள் மத்தியில் வாழ்கின்றேன் என்ற மகிழ்ச்சியில்  என்னை வரவேற்க்க இன்னும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றது என்று அகமகிழ்ந்து தங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பான நன்றி வணக்கங்கள் தெரிவித்து கொள்கின்றேன்.
முகநூல் வாழ்த்துக்கள்!
பத்மர் அண்ணா வாழ்த்துக்கள்! 


T.s. Kandaswami அன்பை அணையாக்கி. ஒழுக்கமெனும் நீர் தேக்கி, இன்முக வாய்க்கால் வழி, பரிவு எனும் அமுதூட்டி,சுற்றத்தையும் நட்பையும் பேணிப்பாதுகாக்கும் திருமகளே, பல்லாண்டு பல்லாண்டு உலகு போற்ற வாழ்வாயம்மா !!

3 Jul 2012

J.ஷக்தி- புதிரான மனிதர்கள்!

வாழ்க்கை நெடுக சம்பவங்கள் போன்றே பல புரியாத புதிரான மனிதர்களும் நம்மை கடந்து செல்கின்றனர்.   அது போல்   அன்பு, பாசம், துயர், வெறுப்பு, என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வினை தந்து செல்கின்றனர்.  அவ்வழியில் சமீபத்தில் என்னை சிந்தனையில் ஆழ்த்தியவள் ஜெ குடியிருப்பில் வசிக்கும் ஷக்தி என்ற 14 வயது இளம் பெண் சிறுமி!.

அவள் அறிமுகம் ஆகினதே  முற்றிலும் அறிமுகமே இல்லாத சூழலில். ஒரு நாள் வந்து என்னிடம் கேட்டாள் அக்கா உங்கள் வீட்டில் பயன்படுத்தாது 2 சைக்கிள் உண்டாமே.  அந்த வீட்டிலுள்ள பாட்டி சொன்னார்கள்.  எனக்கு ஒரு சைக்கிள் தந்தால் உதவியாக இருக்கும்.

எனக்கு இந்த பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் என்றுமே ஒரு குறையுண்டு.  ஒரு வித ஈனப்பிறவி. எந்த மனிதனும் மூதாட்டியின் புரணியில் இருந்து தப்பித்து கொள்வதில்லை. ஒரே புரணி. புகைச்சில் பிடித்த பெண்மணி.  அறுத்த கைக்கு சுன்னாம்பு கொடுக்காதவள், ஆனால் தன் பேச்சு  ஆற்றலால் ஊருக்கே பந்தல் போட்டு பந்தி வைத்து விடுவார்.

எம்மா....... உன்னை, என் மக மாதிரி நினைத்து சொல்லுதேன்,  ஆமா என் வயசுக்கான பேச்சான்னு நினைத்து விடாதே ...ஆனால் நேற்று மதியம் அந்த வீட்டில் ஒரு குண்டன் போனான்,  இவள் வீட்டுக்காரன் வீட்டு சன்னல் வழியாகத் தான் உச்சா போகிறான், அந்த வீட்டுல அப்பனை மகளை கொண்டு போய் விடுகின்றான்,  நேற்று எங்க பின் வீட்டுல, புருசனை பொண்டாட்டி மாட்டை வெளுப்பது போல் வெளுத்து விட்டாள் என்ற கதைகள் கற்பனை, எகத்தாளம் எல்லாம் கலந்து போய் கொண்டே இருக்கும்.  எங்கள் தெருவில் ஒவ்வொரு வீடு சந்திக்கவும் ஒவ்வொரு நேரம் வைத்திருந்தார் இந்த மூதாட்டி. அதில் எங்க வீட்டுக்கு வரும் நேரம் தான் எனக்கு பிடிக்காத நேரம். பிள்ளைகள் பள்ளியில் இருந்து வரும் நேரம் வந்து விட்டு மாலை சாயா, பலகாரம் சாப்பிட்டு அப்படியே கதைக்க  ஆரம்பித்தால் ஒரு நெடும் தொடர் போல் போய் கதை கொண்டே இருக்கும்.  இந்த கதையை ஒரு வழியாக முடிக்க வைத்ததால், மூதாட்டியும் கொஞ்சம் நாளாக எங்கள் வீட்டு பக்கம் வராது எதிர் வீட்டில் இருந்து எங்கள் வீட்டை நோட்டம் இடுவதை தான் கண்டுள்ளேன். மாமர மூட்டில் சாத்தி வைத்திருக்கும் சைக்கிள் கிளவி கண்ணில் எப்படி பட்டது என மனதில் கேட்டாலும் வந்து  கேட்கும் பிள்ளையின் முக பாவம்; 'இல்லை' என்று சொல்ல தோன்றவில்லை. மேலும்  சைக்கிளின்  தேவை  என்னை விட பல மடங்கு அதிகமாக இருந்தது அவளுக்கு என்று தோன்றியது.

பிள்ளைகளுக்கு  சைக்கிள் வேண்டும் என ஒரே பிடிவாதம். இளையவனுக்கு ஒரு பழைய சைக்கிள் கடையில் இருந்து வாங்கி கொடுத்து விட்டாச்சு. பெரியவருக்கு மேலும் கோபம், அவனுக்கு மட்டும் சைக்கிள், நான் உங்க பிள்ளையாக தெரியவில்லையா என்று பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்கின்றான்.

  தமிழகத்தில் வருடம் ஒரு முறை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு இலவச சைக்கிள் கொடுப்பது உண்டு.  அது பள்ளி தொடங்கி 6 மாதம் பின்பு தான் பல அறிக்கைகள் கொடுத்த பின்பு பள்ளி குழந்தைகள் கைகளில் கிடைக்கும்.  10, 11 வகுப்பு பிள்ளைகளுக்கு என்பதால் சில நேரம் தொடர்ந்து  இரண்டு வருடவும் சைக்கிள் கிடைக்கும்.  வீட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் உண்டு  கிடைத்த சைக்கிள் தேவை இல்லை என்று கருதினாலோ அல்லது குடிக்கார தகப்பனோ வீட்டில் கிடக்கும் சைக்கிளை பழைய கடையில் விற்று விடுவார்கள். அப்படி தான் புதிதான ஒரு அரசு பள்ளி சைக்கிள்  ஒன்று பழைய சைக்கிள் கடையில் இருந்து வாங்க இயன்றது.

சைக்கிளை கொண்டு வந்து 3 வாரம் தான் ஓட்டியிருப்பான்.  2 வீடு தள்ளியிருக்கும்  அரசு வாகன சாரதியின் மகள் "அத்தை  ரேஷன் வாங்க போக உங்க வீட்டு சைக்கிளை  தருவீர்களா"  என்றாள்.  அவ வீட்டிலும் 2 சைக்கிள் பார்த்துள்ளேன். ஆனாலும் ஒரு சைக்கிள் கொடுத்து உதவுவதிலுன் நாலு கேள்வி கேட்கக்கூடாது என்பதால் எடுத்து விட்டு போக சொல்லி விட்டேன்.  அவள் திருப்பி சைக்கிளை கொண்டு வந்ததும் "அந்த தூண் பக்கம்  சாத்தி வைத்து விட்டு போம்மா" என்று கூறிவிட்டு நான் என் வேலையில் ஆழ்ந்து விட்டேன்.

பள்ளி விட்டு வந்த மகன் சைக்கிள் எடுத்து இரண்டு முறை ஓட்டி வந்தவன் அம்மா சங்கிலி அறுந்து விட்டது என்று சைக்கிளை படுக்க வைத்து பழுது பார்த்து கொண்டிருந்தான். அப்போது தான் கவனித்தோம் எங்கள் சைக்கிள் சங்கிலி கழற்றப்பட்டு ஒட்டப்பட்ட ஒரு சங்கிலி மாட்டப்பட்டுள்ளது.  ஆகா பகல் கொள்ளையல்லவா நடந்துள்ளது.  இனி போய் அவளிடம் சண்டை போட்டு நம் வாயை அசிங்கப்படுத்தவா என்று என் கைகாசு போட்டு ஒரு சைக்கிள்  சங்கிலி மாற்றி கொடுத்து விட்டேன்.

ஆனால் எங்கள் பிள்ளைகளை சைக்கிளை எடுத்து கொண்டு காடு மேடாக சுற்றுகின்றனர். ரோட்டோர பள்ளத்தில் விட்டு விளையாடுகின்றனர்.  குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் மாற்றி விட்டனர் சைக்கிளை!  சைக்கிள் பழுது பார்க்க வேண்டிய தொகையை எழுதி தந்தனர்.  தலையே சுற்றியது.  அந்த சைக்கிள் அப்படியே கவனிப்பாரற்று தெக்கு மூலைத் தென்னைக்கு கூட்டாக பல மாதங்களாக சாய்ந்து நின்று விட்டது.


ஷக்தி வந்து கேட்ட போது தான் சைக்கிள் மவுஸு தெரிகின்றது.  அவளுக்கு அம்மா இல்லையாம். அப்பன் ஒரு முழுக்குடிகாரனாம் மேலும் ஒரு பெண்டாட்டியை கட்டி கொண்டு இன்னும் சில குழந்தைகளை பெற்று கொண்டு பக்கத்து தெருவில் இருக்கானாம்.  இவளும் இவள் அண்ணனும் அம்மா வழி பாட்டியுடன் புதிதாக கட்டியிருக்கும் 'குடிசை மாற்று குடியிருப்பில்' குடி வந்துள்ளார்களாம்.

அவள் கொஞ்சம்  நேரம் பேசி கொண்டே இருந்தாள்.  பாட்டியும் வீட்டு வேலைக்கு போவாளாம்.  இவள் திருநெல்வேலி ஜங்ஷனில் கம்பனியில் பொதி நிரப்ப போவாளாம்.  இங்கு வந்ததால் வேலையற்று போய் விட்டது என்றும் இந்த சைக்கிள் தந்தால் பெருமாள் புரத்திலுள்ள சில வீடுகளுக்கு பாத்திரம் துணி, துவைத்து கொடுக்க போவதாக கூறினாள்.

எனக்கும் சைக்கிளை இனாமாக கொடுக்க விருப்பமில்லை.  இனாமாக கிடைக்கும் பொருட்களுக்கு மதிப்பு இருக்காது என்ற எண்ணமே காரணம். நான் அவளிடம், உனக்கு இந்த சைக்கிளை இனாமாக நான் தர வேண்டாம்  சைக்கிளுக்கு பதிலாக வீட்டை சுற்றி பெருக்கி தந்து விட்டு எடுத்து செல் என்றேன். அவளும் முழுச் சம்மததுடன் காலையில் வெயில் வரும் முன் வந்து விட்டு செல்வதாக சொல்லி சென்றாள்.


தொடரும்................................. முடிவு!



14 Jun 2012

தள ஓடு- Weathering Tiles

களிமண்ணில் இருந்து சுட்டு எடுப்பது என்ற அர்த்தத்தில் வரும் பிரஞ்சு மொழி வார்த்தையில் இருந்து உருவானது ஆகும் டைல்ஸ்-ஓடு என்ற வார்த்தை!  அதன் பயன்பாடு கணக்கில் கொண்டு பல  வகையில் பிரிக்கலாம். ஓடுகளின் பயன்பாடு இன்று நேற்று துவங்கியது அல்ல. பி.ஸி 650 வருடங்களுக்கு முன்பே அப்போளா போன்ற கிரீஸ் கோவில்களில் ஓடுகள் பயண்படுத்திய சாற்றுகள் உள்ளன. சாக்கு மற்றும்  மரங்களை மேல்கூரையாக பயண்படுத்தி ஆதி மனிதர்கள்   தற்காப்பு கருதி ஓட்டு பயண்பாட்டுக்கு மாறினர். 

பணச் சிக்கனம் மட்டுமல்ல கடும் குளிரிலும் வெயிலிலும் மனிதர்கள் தாக்கப்படாது இருக்க உதவியது  என்றால் மிகையாகாது.  சிங்கள அரசர்களின் காலத்தில் தான் வழுவழுப்பான ஓடுகள் பிரபலமாகியதாகவும் அனுராதபுர கோயில்களில் இவை காணலாம் என்றும் வரலாறு சொல்கின்றது.  சூரியனின் கடும் சூட்டை உள்வாங்காது சிதறிவிடுவதே இதன் சிறப்பாகும். அதே போல் கடும் கூளிரிலும் இதமான காலநிலையில் வீட்டை வைப்பதிலும் ஓடுகளின் முக்கிய பங்கு உண்டு.

நெல்லையில், களிமண் பொருட்கள் சட்டி, பானை, ஓடுகளுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும் கூனியூர்.

களிமண்ணை ஒரு அறையில் இட்டு தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு இயந்திரத்தில் கொட்டுகின்றனர். இயந்திர உதவி கொண்டு மறுபடியும் பக்குவமாக பிசையபட்டு அடுத்த  இயந்திரத்தில் வந்து சேர ஒரு குறிப்பிட்ட அளவில்  சதுரமாக வெட்டி  நல்ல வெளிச்சம் வரும் அறைக்குள் வெயில் படாது நிழலில் காய வைக்கின்றனர். பின்பு காய்ந்த ஓட்டை சூளையில்(அடுப்பில்) வைத்து சுட்டு எடுக்க அழகிய ஓடு தயார் ஆகி விடுகின்றது. தரம் அனுசரித்து ஒரு ஓடுக்கு 8 ரூபாய் விலையில் இருந்து கிடைக்கப்படுன்றது.  வீட்டு மேல் தளத்தை அலங்கரிக்க தள ஓடு இன்றிமையாதது.



கிராம மக்கள் தங்கள் ஊர் நிலபுலன்களை விட்டு  அன்னிய தேசத்திலும் ஊரிலும் அல்லல் படாமல் இருக்க இந்த மாதிரியான உள்ளூர் வேலைகள் உற்சாகப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். 


தொழிலாளிகள் கிடைக்காது முதலாளி சிரமப்பட தகுந்த ஊதியம் இல்லை என்று தொழிலாளியும் சொந்த ஊர் வேலையை விடும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.  மேலும் ஓடு சூளைக்கு  அரசினிடம் பெற வேண்டிய பிரத்தியேக அனுமதிக்கு 100 ரூபாய் கட்டணம் என்றால்  1000 ரூபாயாக வலுகட்டாயமாக பிடுங்கப்படுகின்றது.

வருடத்திக்கு 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் பல மக்கள் கள்ள வேலையில் ஊதியம் பெற; உழைத்து மட்டுமே வாழுவேன் என்று பிடிவாதமாக உள்ளவர்கள் மட்டும் வேலைக்கு செல்லும் கிராம சூழலில் தற்போது தொழிலாளிகளின் பற்றாக்குறையும் பெரிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. 

தொழில் செய்ய இயலாத முதலாளிகளும் நல்ல விலைக்கும் தங்கள்  இடத்தை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விட்டு விட  உள்ளூர் வேலை வாய்ப்பு என்பது எட்டா கனியாக மாறுகின்றது.  இதன் தொடர்ச்சியாக கிராமங்களில் வறுமை, குற்றம், எல்லாம் பெருகி வேலை இன்மையான சூழலும் உருவாகுகின்றது. இதை எல்லாம் மனதில் கொண்டு முதலாளியும்  தொழிலாளியும் ஒரே போல் தங்களை போல் மற்றவர்கள்  மேல் கரிசனை கொண்டு  கிராம சமூகத்தின் சிறந்த வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும். வேலைக்கு சம்பளம் கிடைக்காது  போது போராடுவது போலவே வேலை செய்யாது  ஊதியம் பெறும் இழிவு நிலையில் இருந்தும் மக்களை காப்பாற்ற கம்யூனிஸ்ட் போன்ற இடதுசாரி கட்சிகள் முன் வரவேண்டும்.
உள்ளூர் தொழிலாளியும் முதலாளியேயும் சண்டையிட வைத்து தங்கள் மக்களை  பன்னாட்டு முதலாளிக்கும்  விற்று; மக்களை நகர சூழலுக்கு தள்ளி வாழ்கையை நரகமாக்க கூடாது என்பது மட்டுமே நமது ஆவல்.




13 Jun 2012

ஒற்றை மரம்!

ஆமா ......அப்படி தான் வளர்ந்தேன்.

சண்டைக்கு வரும்  பெண்டாட்டி தான் கேட்பாள் " உங்க அம்மா எப்படி தான் வளர்த்துள்ளோ"! என்று.

யார் வளர்க்க..... நானா வளர்ந்தேன் என்று மனதில் நினைத்து கொண்டேன்.

அம்மா, பாட்டி ஊரில் இருந்து 600 கி.மீ தள்ளி கர்நாடகா மாநில காப்பி தோட்டத்தில் அதிகாரியாக  வேலை செய்யும் என் அப்பாவுடன் திருமணம்.  ஒரு நடுக்காடு. அம்மா வயல் மட்டும் பார்த்து வளந்தவ.  பாம்பு, காட்டு பன்றி காட்டுயானை, புள்ளிப்புலி  நடமாடும் கொடும் வனம். குலை நடுங்கும் குளிர். எப்போதும் பெய்யும் மழை!

நான் பிறந்து இரண்டு  வயது முடிந்ததும் பாட்டி வீட்டுல  விட்டுவிட்டு போனா.  அப்போது தான் புது பெண்டாட்டியோடு வந்திருந்தார் சின்ன மாமா.  அத்தைக்கு கொஞ்சி விளையாடும் பொம்மையாக நான் வளர்ந்தேன். பக்கத்து வீட்டில் பெரிய மாமா, அத்தை மச்சான்கள் இருந்ததால் விளையாட பஞ்சம் இருக்காது. பெரிய அத்தைக்கும் எனக்கும் என்னமோ ஆகாது. அவ சொத்தை பிடுங்க வந்தது மாதிரி திட்டிகிட்டே இருப்பா. அம்மா வீட்டில் இருந்த போது அத்தையிடம் சண்டை போட்டதை சொல்லியே  என்னை அடிப்பா.  சில நேரம்  "போடி கிறுக்கி" என்று சொல்லிவிட்டு ஓடும் நான்; அவள் அடியை பயந்து இரவு  தான் வீடு திரும்புவேன் .  வளர வளர மச்சான்களும் சண்டை பிடிக்க ஆரம்பிச்சிட்டானுக.  எடுத்து எல்லாம் குற்றம். "எங்க வீடு நீ போ" என்று திட்டுவது எனக்கு வெறுப்பாக இருந்தது.  எங்க அம்மா வளந்த வீடு எனக்கும் சொந்தம் தான் என்ற ஆணவவும் எனக்கு இருந்தது. அவனுக விளையாட, நான் முற்றத்தில் இருந்து பேசாம பார்த்து கொண்டே இருப்பேன். 


பாட்டியும் சொல்லிடுவாக மக்கா அவனுக கூட மல்லுக்கு நிக்காதட. உங்க அப்பன் அம்மை வரும் போது நல்ல படிச்சு மார்க்கு வாங்கி காட்டுன்னு. அதனாலே என் தோழர்கள் எல்லாம் எங்க பக்கத்து ஊர் முத்துகுமார், சம்பத்து, செந்தில்ன்னு இருந்தாக.

 தாத்தா இலங்கையில் கடை வைத்திருந்தவர்.  முதல் கலவரத்தில் ஊரு வந்து சேர்ந்தார். கையிலிருந்த காசை கொண்டு ஊரில் வீடு, நிலம் வாங்கி போட்டு விட்டு மதுரையில  கடை வத்திருக்கும் போது இறந்து விட்டார்.  அதன் பின் பாட்டி வயலில் இருந்து வரும் வருமானத்தில் என் மாமாக்கள் அம்மாவை வளர்த்துள்ளார்.   வீட்டில் பசு மாடு வளர்த்தாக.  காலையில் பால் எடுத்து விற்று விட்டு பழைய சோறும் காணத் தொவயலும் எடுத்து கொண்டு வயலுக்கு போயிடுவாக. எனக்குள்ள உணவு உறியில் வீட்டில் தொங்கும்.  நானும் சிலநாள்  வயலுக்கு போவேன். கூட்டாளிகளுடன் விளையாட உடன்காட்டுக்கு போவதுதான் நேரம் போக்காக இருந்தது. கருவண்டை பிடித்து தீப்பெட்டியில் அடைத்து விளையாடுவோம். சில நாள் ஓணான் முட்டை பெறுக்கி வருவோம். அது உடையவே உடையாது. ரப்பர் பந்து மாதிரி துள்ளி துள்ளி வரும். சில நாள் ஆழ்வாத்திருநகரி குளத்தில் குளித்து விட்டு கோயில் மதில் சுவரில் பேச்சிமுத்து சம்பத்துடன் அரட்டை அடித்து கொண்டிருப்போம்.  பேச்சி முத்து பேச்சே காமடி கலாட்டா தான்.
நண்பர்களுடன் பொழுதைகழிக்கும் நான் வீட்டுக்கு போகவே மறந்திடுவேன். சில நாள் நான் ஊர் எல்கை எட்டும் போது பாட்டி என்னை தேடி நாசரேத் கோயில் பக்கம் நிப்பாக.  அடிக்கவோ திட்டவோ மாட்டாக ஏன் ராசா எங்க போனே எங்கல்லாம் தேடுவதாம் ....என்று கையை பிடித்து கூட்டி சென்று குளிப்பித்து சாப்பாடு தருவாக.

மாமா விடுமுறைக்கு வீட்டில் வருவது தான் கொண்டாட்டம். மாமா ஆந்திராவில் மிட்டாய் கடை வைத்திருந்தார்கள். வரும் போது தின்பண்டம் துணிமணி என்று மச்சானுகளுக்கு மாதிரியே எனக்கும் வாங்கி வருவார் . அன்று வரை  கஞ்சி, தொவையல் என்றிருக்கும் பாட்டி ஆடு, மீன் கோழி என ருசியான சமையலாக செய்து தருவார்.


ஒரு முறை மாமா ஒரு  பாட்டுப்பெட்டி வாங்கி வந்தார்கள். அதை வைத்து பாட்டு கேட்டு கொண்டிருக்க, நானும் சென்று அவர்களுடன் பாட்டு கேட்டு கொண்டிருந்தேன். பாட்டுப்பெட்டி ஒலி வரும் பக்கம் கை வைத்து பார்த்த  போது மச்சான் கையை பிடித்து தள்ளி விட்டான். அன்று தான் மச்சான் மேல்  முதல் வெறுப்பு தோன்றியது.  அத்தைகாரி பார்த்து கொண்டே நின்றாள்  அவனை தடுக்கவில்லை. அவன் செய்தது தான் சரி என்பது போல் அவள் பார்வையும் இருந்தது. அம்மாவும் அவளும் வெங்கலபானைக்கு சண்டை பிடித்ததை இப்போதும் நினைவில் வைத்து கொண்டு ”அவெ.. அம்ம மாதிரி தானே இருப்பான் என்றாள்.

பாட்டி மாலை தான் வயலில் இருந்து வருவாக. பாட்டி வந்ததும் மாட்டு தொழுவத்திலே போய் சாணி அள்ள மாட்டுக்கு தீனி கொடுக்க இருப்பாக. பாட்டி என்ற ஒரே ஜீவன் தான் நான் பேசுவதை எல்லாம் ஆசையாய் கேட்டுது.  வேலை முடித்து பாட்டி வந்து சமையல் செய்து முடிக்கும் முன் நான் வீட்டு பாடம் எல்லாம் முடித்து விட்டு சாப்பிட ரெடியா இருப்பேன். அடுத்த வீட்டில் அத்தை மச்சான்கள் சிரித்து பேசி கொண்டிருக்க நாங்க இரண்டு பேரும் எங்க வீட்டில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருப்போம். கயிறு கட்டிலில் என்னை தூங்க சொல்லிட்டு வாசலில் இருந்து பக்கத்து வீட்டு லில்லி சித்தி, ஆறுமுகநேரி கிரேஸ் பாட்டி கூட பேசிக்கிட்டு இருப்பாங்க.

வடக்குத்தெரு ஜோசப் பெரியப்பாவும் எஸ்டேட்டில தான் வேலை பார்த்தாங்க. பெரியப்பா பிள்ளைகள் புனிதா அக்கா, சகாயம் அக்கா, அவக அண்ணன் மோசஸும் எங்க காம்பவுண்டு வீட்டில தான் இருந்தாங்க. எனக்கு புனிதா அக்கா தான் பிடிக்கும். அவ தான் நான் திக்கி திக்கி பேசுவதை கிண்டல் செய்ய மாட்டா. எனக்கும் மோசஸுக்கும் சண்டை நடப்பதால்  பெரியம்மா தான் விடுமுறைக்கு வரும் போது திட்டுவாக. எலே நீ எப்பிள்ளைட்ட சண்ட போடுவீயோ? வாலை நறுக்கிருவேன்னு பயம் முறுத்துவாக.


 கிறுஸ்துமஸ் என்னக்கி வரும் பாட்டின்னு... பாட்டிட்டே கேட்டிட்டே இருந்தேன். பாட்டி ...... எலே எத்தனை தடவை தான் சொல்லிறது. அந்த கலண்டர பாரு. இன்னும் இருக்குடா 20 நாட்கள். பொறுடான்னு சொல்லிட்டே இருந்தாக.

இந்த முறை எங்க  வீட்டுல புதுசா பிறந்த தம்பியையும் கொண்டு வாராகளாம். அப்பா, அம்மா தம்பி  22 தியதி வருவாகன்னு கடிதாசி வந்துதுன்னு கிரேஸி பாட்டிட்டே சொல்வதை கேட்டிருந்தேன். பாட்டி;  விடுமுறைக்கு அம்மா வீட்டுக்கு வருவதை நினைத்து சந்தோஷபட்டாலும் பெரிய அத்தை கூட சண்டை இடுவதை நினைத்து கவலைப் பட்டுகிட்டே இருந்தாக.

அம்மா ஊரில் இருந்து வருவதால் காலையிலே பாட்டி மீன் வாங்க சந்தைக்கு போய்டாக.  நான் வாசலில் இருந்து பார்த்து கொண்டே இருந்தேன். தூரத்தில அம்மா இடுபில தம்பியும் அப்பா கையிலே பெட்டியுமா வந்து சேர்ந்தாக. 

அப்பா எப்போதும் போல்  இடி முழக்க சத்ததில ”எப்படிடா நல்லா படிக்கியா, முதல் இடம் உனக்கு தானேன்னு?” என்று கேட்டு விட்டு குளிக்க துண்டையும் எடுத்திட்டு குளத்திற்கு போய் விட்டார். பக்கத்து வீட்டு மோகன் மாமா சம்பத்தை தூக்குவது போல என்னையும் தூக்கி காத்தாடி போல சுத்த மாட்டாரா, தோளில் வைத்து கொண்டு குளத்திற்கு அழைத்து போக மாட்டாரா என்று ஆசையாக இருந்தது. கேட்கவும் பயமாக இருந்தது. முகத்தை பார்த்தேன். அப்பா என்னை பார்கவே இல்லை.  விருவிருன்னு நடந்து போயிட்டே  இருந்தார்.

குட்டி தம்பியை எட்டி பார்த்தேன்.  குண்டு குண்டா அழகா இருந்தான். என்னை பார்த்து சின்ன பல் காட்டி சிரித்தான். அம்மா உள்ளே போனதும்;  நான் ஓடி போய் அவனை தூக்க அவன் துள்ளி குதிக்க, அவனும் நானும் சேர்ந்து கீழை விழுந்து விட்டோம். அம்மா ஓடி வந்து கோபமாக  ”சனியனே, கூறு கெட்ட நாயே,’  என்று விறுகு கட்டயாலே  அடி அடின்னு அடிச்சா.

அந்த நேரம் பார்த்து பாட்டி வந்ததாலே தப்பிச்சேன்.  எலே வந்ததும் வராதுமா ஏலே பிள்ளையை போட்டு  அடிக்கேன்னே என்னை  மறைத்து பிடித்து  விட்டார்கள்.  சேலை முந்தனையால் என் கண்ணை துடச்சுவிட்ட  பாட்டி கைக்குள்ளாக இருந்து இப்போது என் தம்பியை திரும்பி பார்த்தேன் . அப்பவும்  அவன் என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். ஆனால் நான் சிரிக்கல,  அப்போது முதல்  அவன்  முதல் எதிரியா தெரிஞ்சான் எனக்கு.

வீட்டுக்கு வெளியில் இருந்து அழுது கொண்டே இருந்தேன். குசினியில்  அம்மாவும்  பாட்டியும் பேசி கொண்டிருந்தார்கள். பாட்டி தம்பியை எடுத்து மடியில் போட்டு என் ராசா, என் தங்கமுன்னு  கொஞ்சி கிட்டு இருந்தாக.

 மச்சான் அடித்ததை விட அத்தைக்காரி அடித்தை விட அம்மா அடிச்சது முதல் முறையாக வலித்தது.
 வீட்டுக்கு வெளியே வந்தேன் என் சைக்கிளை எடுத்து கொண்டு, இனி இந்த வீட்டு பக்கம் வரவே கூடாது என்று எண்ணி கொண்டு திரும்பி பார்க்காமே வேகமா,  மிதிச்சு போய்கிட்டே இருந்தேன். என் சைக்கிள்  வயல், வாய்க்கால்,  பனங்காட்டு வழியே  போய் கொண்டே இருந்தது! 

12 Jun 2012

வழக்கு எண் 18/9.

Vazhakku Enn 18 9 Review சமீப நாட்களாக வந்த  தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படத்தை பார்த்த ஒரு திருப்தி தந்த படம் "வழக்கு எண் 18/9".  சினிமா என்பது ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அப்பணியை இப்படம் சிறப்பாக செய்துள்ளது. இந்த படம் வழியாக தற்கால சூழல்களை மிகத் தெளிவாக ஆணித்தரமாக விளக்கியுளார்.  தற்போது தமிழக மக்கள் ரியல் எஸ்டேட் மற்றும்  கல்வி வியாபாரம் என்ற சுழியில் சிக்கி உள்ளதை   சினிமா என்ற ஊடகம் வழியாக அழுத்தமாக பதிவு செய்யப்படுள்ளதும் போற்றப்பட வேண்டியது.  ஏழைகள் வாழ்வு, பணக்காரர்களின் சுகம், தேவைக்கு என அல்லல்ப்படுவதை இயக்குனர் பாலாஜி சக்தி வேல் ஒரு சினிமா போன்று அல்லாது ஒரு சரித்திர உண்மை  போன்றே எடுத்துள்ளார்.
முன் பின் தெரியாதவனுடன் தன் பெற்றோர் அறிவுறுத்தலும் மீறி பழகும்  இளம் பெண்  கொடியவனிடம் மாட்டுவதும் இதனால் அவள் வீட்டு வேலை உதவி செய்யும் ஏழைப்பெண் பாதிக்கப்படுவதுமே கதை! மற்றும் தொலை பேசி என்ற மாபெரும் கண்டுபிடிப்பை இளம் தலை முறை எவ்வளவு கேவலமாக பயன்படுத்துகின்றது என்று பார்வையாளர்கள் கேள்வி கேட்காத அளவிற்க்கு நேர்மையாக  படமாக்கியுள்ளார்.  பெற்றவர்கள் வேலை, பிரோமோஷன் என்று குழந்தைகள் கவனிப்பை வேலையாட்களிடமும் தனிமையிலும் தள்ளி விடுவது வழியாக விளக்கின் ஒளியின் விழும் விட்டில் பூச்சுகளாக மாற்றுவதை அழகாக படம் பிடித்து காண்பிக்கபட்டுள்ளது.  மேலும் நிதானமாக  தீர்வு காண வேண்டிய இடத்தில் பெற்றோரின் அதி கோபம் மகளைகளிடம் கொடியவனையும் நல்லவனாக அடையாளப்படுத்துவதையும் காணலாம். 

ஏழைகள் கொள்ளும் தூய காதலும், நட்பும்;  தங்கள் நலன் பேணாமல் தான் நேசிப்பவர்களின் நலம் மட்டுமே காணும் இயல்பான அவர்கள் குணத்தை எடுத்து காட்டியுள்ளனர் இப்படம் ஊடாக. கேடுகெட்ட பணக்கார மாணவன் கூட ஒழுக்க இன்மையான ஒரு தாயின் நீட்சியான குணமாகவே காட்டப்பட்டுள்ளது.  இது இன்றைய சமூகத்தில் ஒரு உண்மையான அவல நிலையும் கூட.  பணம் சேர்க்க என்று கீழ்த்தரமான வாழ்கை நடத்தி கொண்டு இருக்கும் பெற்றவர்களை கண்டு வளரும் குழந்தைகள் எவ்வாறு சமூகத்தின் குற்றங்களின் ஆணிவேராக மாறுகின்றனர் என்று கண்கூடா காண்கின்றோம் பல வேளைகளில்.

நீதியின் காவலர்களான காவல்த்துறை பணக்காரர்களின் சேவகர்களாக மாறுவதும்  உண்மையை பொய்யாகவும்; ஒரு மனிதனுடைய ஏழ்மையை பயன்படுத்தி குற்றவாளியாக மாற்றுகின்றதும் துயரான உண்மைகள்.
படம் முடியும் போது காவலர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது எண்ணி மனம் ஆறுதல் கொண்டாலும் உண்மையில் இப்படி ஒன்றும் நடக்காது! பல நிரபராதிகள் ஜெயில் கம்பிக்குள் வாழ்கை முடக்கப்படுவதும் நிஜ குற்றவாளிகள் சமூகத்தை ஆளுமை செய்யும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளுமாக மாறுவதுமே நிஜத்தில் உள்ளது.

சமூக சிந்தனை தரும் கதை, திரைக்கதை, வசனம் என்று விருவிருப்பாக நகத்தியுள்ளார் இயக்குனர். பின்னணி இசை தான் பல இடங்களில் இடம் பொருள் அற்று ஒலிக்க செய்வதாக காண முடிகின்றது. இப்படம் பெரியவர்கள் என்பதை விட விடலைப்பருவ மாணவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இன்றைய திரைப்பட ரசனையில் மூழ்கியிருக்கும் மாணவர்கள் இந்த படத்தை கண்டிருப்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இப்படத்தை காண உற்சாகப்படுத்த வேண்டும் என்பது காலச் சிறந்தது.

இப்படத்தில்  நடித்துளவர்களும்   உயிரோட்டமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். காவலர் அதிகாரியாக நடித்தவர் நடிப்பை புகழ்ந்த அளவு இதில் கதாநாயகனாக நடித்த இளைஞன் அவன் நண்பனாக வரும் சிறுவனின் நடிப்பு பாராட்டப்பட்டதா என்பதில் நிச்சயமில்லை. 
போலிஸ் துறை இப்படத்திற்க்கு கண்டனம் தெரிவிக்க ஏன் முன் வரவில்லை! இந்த படத்தின் கதை தங்களின் தற்போதைய நிலவரவும் ஒன்று தான் என்று ஏற்று கொண்டுள்ளனரா?

 ஏழைகள் என்றால் தமிழன் முகவும் பணக்காரகளுக்கு தமிழன் அடையாளம் அற்று வேற்று மாநில சாயல்கொண்ட நடிகர்களை ஏன் இயக்குனர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது மட்டுமே மனதில் எழும் நெருடலான ஒரு கேள்வி!

9 Jun 2012

இரவில் குற்றாலம் !

நேற்றைய மாலை, மனுஷன் குருவி எல்லாம் வீட்டுக்கு அடையும் நேரம் நாங்கள் குற்றாலம் நோக்கி பறந்தோம். மாலை நேரம் என்பதால் வியாபாரம் , அலுவலகம், பள்ளி முடிந்து செல்லும் மக்கள் பிரயளமே எங்கும்.  கோழி குஞ்சு விற்பனைக்காரர் ஒருவர் எங்கள் வாகனத்திற்க்கு வழி விடாது அலைபெசியிலும் கதைத்து கொண்டு 90 டிகிரி சரிந்து இருந்து கொண்டு வேகமாக போய் கொண்டிருக்கின்றார்.  பூச்செடி விற்பனைக்காரர் செடியும் கொடியுமாக இருட்டுடன் கலந்து  செல்கின்றார்.  எப்போதும் குற்றாலம் செல்வது பகல் என்பதால் இம்முறை இரவு குற்றாலம் அழகை பார்க்க ஆவலாக சென்று கொண்டிருந்தோம். காலை விடிவு போல் பல மனிதர்கள் வாழ்க்கைக்கு இரவும் விடிகின்றது .

பழைய குற்றாலம் சென்று விட முடிவெடுத்து போய் கொண்டிருந்தோம். நாங்கள் செல்லும் நேரம் குற்றாலம் மின் வெட்டு நேரம்! பழைய குற்றாலம் செல்லும் வழியோரம் எல்லாம் செடி கொடி மரங்கள் காற்றில் ஆடுகின்றது மட்டும் தெரிகின்றது. கொடும் இருட்டில், வேர் விழுதுகள்  ஆலமரத்தை நமக்கு அடையாளம் காட்டி கொடுக்கின்றது. பழைய குற்றாலம் உங்களை அன்புடன் வரவேற்க்கின்றது என்று ஒரு பெரிய வளைவு அலங்காரத்தால் வரவேற்க்கப்பட்டோம். அங்கு கட்டணம் பிரிக்க யாரும் இல்லை.  சரி.. லாபம் தான்  எண்ணி கொண்டு முன்னோக்கி கொடும் வனம் வழியாக சென்று கொண்டிருந்தோம் நாங்கள். எதிரிலோ பின்னுக்கோ எந்த வாகனவும் இல்லை.  ஆள் அரவவும் இல்லை.  என மனக்கண்ணில்  பயம் அப்பி கொள்ள; நெஞ்சு படபடக்க ஆரம்பித்து விட்டது. பேய் படத்தில் காணும் போல் காற்றின் சத்தம் மட்டுமே அங்கு எங்கும். ஆகா ….காட்டு யானை வந்தால் என்ன செய்வது, மரத்தில் இருந்து புலி பாய்ந்தால், கார் நின்று விட்டால்….  என்று எண்ணிய போதே இன்னும் பயம் கவ்வி கொண்டது.  மேல் பகுதிக்கு எட்டி விட்டோம்.  தினதந்தி செய்தி தாளுக்கு செய்தி கொடுத்த விளம்பரம்  தவிர பயணிகளை வரவேற்க ஒரு பெருச்சாளி மட்டும் தான் அங்கு இங்கும் சுற்றி கொண்டிருக்கின்றது. நன்றியுடன் நம்மை வழியனுப்பும் வழிப்பலகைக்கு ஒரு வணக்கம் செலுத்தி விட்டு காரை போன வேகத்தில் திருப்பி வேகமாக மெயின் குற்றாலம்  வந்து சேர்ந்து விட்டோம்.

இங்கு ஒரு நபர் ஓடி வந்து 40 ரூபாய் மட்டும் வசூலித்து செல்கின்றார்.  இன்னும் மின்சாரம் வரவில்லை. என்னவர்  கைகளை பற்றி கொண்டு இருட்டில் கண் இல்லாதவளாக நடந்து செல்கின்றேன். குற்றாலம் குளிர் காற்று அடித்தாலும் என்னவரிடம் அனல் கக்கும் கோபம் தான் வந்தது.  மனிதன் இந்த இருட்டில் அழைத்து வந்துள்ளாரே! தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகத்துடன் தட்டி தடுமாறி நடக்க ஆரம்பித்தோம். வழி நெடுகே இருக்கும் வியாபாரிகள் தான் தங்கள் கையில் வைத்திருக்கும் விளக்கை  நமக்கு வழி காட்டி உதவுகின்றனர்.  சுத்தம் என்றால் என்ன என்று  இயற்கையை பார்த்து வக்கணம் காட்டும் குற்றாலத்தில் இருட்டில் நடந்து சென்று அருவிக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கு மிதமான கூட்டத்துடன் மக்கள்  மிதமான தண்ணீரில் குளித்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் பக்கம் ஒரு அம்மா, மகள் தவிர குளிக்க ஆட்கள் இல்லை.  ஆண்கள் தான் அரசு ஆணை என்ன பெரிய கொக்கா? என்ற மிதப்பில் எண்ணை தேய்த்து சோப்பு போட்டு வருடத்திற்க்கு ஒரு முறை குளிப்பது போல் ஆக்ரோஷமாக குளித்து கொண்டிருந்தனர்.  ஒரு சில ஆண்கள் உடுத்த துணியை மாட்டை அடிப்பதை போல் அடித்து வெளுத்து கொண்டிருந்தனர்.  ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பெண்கள் தவிர்த்து ஆண்கள் குழந்தைகள் அருவியில் கும்மாளம் போட்டு கொண்டிருந்தனர். பெண்கள் குளித்து முடித்து வரும் குழந்தைகளுக்கு தலை துவற்றி விடுவது காதில் பட்ட தண்ணீரை ஊதி வெளியேற்றுவது, தங்கள் கணவர்கள் ஈர உடை மாற்ற உதவி செய்வது என பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தனர். எங்கள் மகன்கள் ஆசை தீர குளித்து கொண்டிருக்கின்றனர்.   பெண்கள் பக்கம் சென்ற போது தான் பெர்லின் சுவர் போல் ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் சுவரை கண்டேன். யாரோ சில ஆண்மகன்கள் செய்த சில்மிஷ குற்றத்திற்க்கு ஒரு வரலாற்று அடையாளமாக பிரிக்கப்பட்டுள்ளது குற்றாலம் அருவி!  மேல் ஏறி குதித்து கூட பெண்கள் பக்கம் வர இயலாது.  

இரவு 10 மணி ஆகி விட்டது. நேராக கேரளா எல்கை செங்கோட்டை சென்று விட்டோம். புரோட்டாவுக்கு பிரசித்தியான இடம்.  மக்கள் பிரோட்டா வாங்க உணவகங்களில் அலை மோதுகின்றனர்.  ரகுமத் என்ற கடையில் புரோட்டா மற்றும்  சிக்கன்-65 வாங்கி கொண்டோம்.  இந்த கடையில் குற்றாலம் சீசன் நேரம் தினம் 1 லட்சத்திற்க்கு விற்க்குமாம். முதலாளி எளிமையாக அழகான சிரிப்புடன் கல்லாவில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு தன் புன்சிரிப்பை தூவி கொண்டு கல்லா பெட்டியை நிரப்பி கொண்டிருக்கின்றார். 

நாங்கள் சென்ற போது அவர் கவனம் முழுக்க ஒரு இளம் ஜோடிகள் மேல் இருந்தது. இளம் பெண் உணர்ச்சி வசப்படு தன் முழு அன்பையும் செலுத்தி பையனின் தோளில் சாய்ந்தும் சாயாமலும் கலந்துரையாடி கொண்டிருக்கின்றார். பையன் தெளிவாக தன்னை யாரும் கவனிக்கின்றார்களா என்று நோட்டம் விட்டு கொண்டு பதிலுரைத்து கொண்டிருக்கின்றான்.  வேண்டா வெறுப்பாக கடைக்குள் வரும் மனைவிகள் புரோட்டா கோழிக்காலை ஒரு கட்டு கட்டுகின்றனர். உணவகத்திற்க்கு வெளியே வந்த போது காந்தி தாத்தா போல் இடுப்புக்கு மட்டும் உடையணிந்த மனிதன் தனக்கும் ஒரு சாப்பாடு கிடைக்காதா என நின்று கொண்டிருந்தான். உணவக சிப்பந்தி வேகமாக வந்து ஒரு கப் வெந்நீரை  ஊற்றி விட்டு சென்று விட்டான். கொதித்த தண்ணீர் பட்ட அந்த எளிய மனிதன் திட்டி கொண்டே தான் உடுத்தியிருந்த உடையால் துடைத்து கொண்டிருந்தான். சிலர் குடி போதையில் தள்ளாடி தள்ளாடி நடந்து போகின்றனர்.

வரும் வழியில் பழக்கடை கண்டோம். எசக்கி பாண்டியன் அண்ணாச்சி கடையில் மாம்பழம் வாங்கினோம். அண்ணாச்சி தன்னை ஒரு நிழல் படம் எடுக்க வேண்டி கொண்டார். இணையம் வழியாக உலகம் உங்களை பார்க்க போகின்றது என்ற போது ஆச்சரியத்தின் உச்சியில் இந்த படத்திற்க்கு போஸ் கொடுத்தார். நெல்லையில் 90 ரூபாய் விலையுள்ள பழம் 60 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கு கிடைக்கும் அல்போன்ஸா வகை மாம்பழம் 30 ரூபாய்க்கும் கிடைக்கின்றது. பலாப்பழம் 140 ரூபாய் என்று சொல்கின்றார்.  எங்கள் பிள்ளைகள் குளித்த சுகத்தில் உண்ட மயக்கத்தில் தூங்கி விட்டனர்.


நெல்லை வந்து சேர்ந்து விட்டோம். அங்கு ஒரு பால் கவர் வாங்க இறங்கிய போது பல குடும்பங்கள் தெருவில் தூங்கி கொண்டிருக்கின்றனர். அதில் வேலை களைப்பில் பெற்றோர் ஆழ்ந்த துக்கத்தில் இருக்க 10 வயதுடைய மகன் கொசுக்கடியால் புரண்டு கொண்டிருந்தான்.  தூங்கி கொண்டிருந்த ஒரு மனிதன் கொசுக்கடியில் விழித்தெழ தூக்கம் வராது தன்னுடைய வேலையில் ஆழ்ந்து விட்டார். பகல் என்பது போலவே இரவும் சில மனிதர்களுக்கு ஒரு உலகம் தருகின்றது என எண்ணி கொண்டு ராப்பாடிகள் நாங்கள் எங்கள் வீடு வந்து நடுநிசி 1 மணிக்கு சேர்ந்தோம்.

28 May 2012

ராஜ மாணிக்கம் மகளும் வாத்தியும்!

ராஜ மாணிக்கம் கடை எங்கள் பக்கத்து கடை!   வெள்ளை வெளேர் என்று வாயில் எப்போதும் வெற்றிலையும், எகத்தாள பார்வையுடன் ராஜா போன்ற தோரணையுடன் வலம்  வருபவர்.  முதல் மனைவியின் முதல் பிள்ளை தூக்க வந்த பெண்ணுக்கு; பிள்ளைக்கு ஒரு வயது ஆகும் முன்  ஒரு பிள்ளையை கொடுத்து  இரண்டாவது பெண்ணாட்டியாக்கி கொண்டார்.  முதல் மனைவி சாத்தான்குளத்திலும் சின்ன வீடு கேரளாவிலும் இருந்தது. கதையிலிருக்கும் கலவரம் ஒன்றும் ராஜமாணிக்கம் உடையிலோ நடையிலோ இருந்தது இல்லை. தன் பெயரில் 3 லாறி 2 கடை என ராஜபோகமாக வாழ்ந்தவருக்கு எஸ்டாட்டிலுள்ள பல ஏழை பெண்களும் துணையாகி இருந்தனர் என்பதும் ஊரறிந்த உண்மை . யாரையும் மதிக்காது கீழ்த்தரமாக திட்டுவதால் முன்னுக்கு கூளை கும்பிடு போடுவனும் முதுகுக்கு பின் திட்டி விட்டு செல்வான்.

 பல நாட்களும் அடுப்பில் சட்டியை வைத்ததும் தான் கடுகு பருப்பு வாங்கி வர கடைக்கு அனுப்புவார்அம்மா. கல்கண்டு கையூட்டாக வாங்கி கொண்டு நானும் சலிக்காது கடைக்கு போய் பொருட்கள் வாங்கி கொடுப்பேன். என் பலவீனம் கல்கண்டுவில் உண்டு என புரிந்து கொண்ட ராஜமாணிக்கம் மகன்; அதாலே என்னை மடக்க 8 அணாவுக்கு கல்கண்டு கேட்டால் 2 ரூபாய்க்கு கல்கண்டு தருவான்.  தரும் போது கையில் தொட்டு தருவான்.  இதை அம்மாவிடம் சொன்ன போது "பாவிபய அப்பனை போல் இருப்பான் போல" என்று திட்டி... பத்து கடை தள்ளியுள்ள பெருமாள் கடைக்கு போக சொல்லிட்டாக.

ராஜமாணிக்கம் மக கோகிலா என் வயசு பெண். அவளும் நானும் நட்பாகவே இருந்தோம். என்னை கண்டால் ஆசை ஆசையாக ஓடி வந்து கதைப்பாள். எங்க ஊரில் கையில் கொஞ்சம் பணம் உள்ளவர்கள், எஸ்டேட் அதிகாரிகள் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வியில் படிப்பித்தனர். அம்மா என்னமோ அடுத்த வீட்டுக்கு போற பிள்ளைகளுக்கு பேருக்கு கல்வி இருந்தா போதும் என   என்னை சமீபத்திலுள்ள அரசு பள்ளியில் சேர்த்து விட்டார்கள். 

படிக்கிற பிள்ளை எங்கையும் படிக்கும் என்று தற்பெருமையாக பேசி கொண்டார்கள். 

கோகிலா, வேல் நாடார் மக மல்லிகா அந்தோணி சார் மக சுபா இவர்களை எல்லாம் பார்க்கும் போது என்னை அறியாமல் பொறாமையும் ஆற்றாமையும் ஒருங்கே சேர்ந்து வரும். அவக நல்லா பேசினா கூட பவுசு காட்டினாகளோ என்று மனது ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு கொள்ளும். அவக பேசுத  ஆங்கில-தமிழை உன்னிப்பாக கவனித்து கேட்டு கொள்வேன்.

ஆறாம் வகுப்பு முடிந்ததும் கிளாடிஸ் டீச்சர் வீட்டு டூயூஷன் போவதை நிப்பாட்டிய அம்மா வெங்கட் வீட்டுக்கு டியூஷன் அனுப்பினார்கள். வெங்கட், தமிழகத்தில் ஏதோ பல்கலைகழகத்தில் தங்க பதக்கத்துடன் பட்டபடிப்பு முடித்தவராம். மேலும் ஐ.எ.எஸ் தேற்வுக்கும் வீட்டிலிருந்து படித்து கொண்டிருந்தார் அப்போது.  வீட்டில் ஆராய்ச்சிக்கு என்றே விதவிதமான செடி வளர்த்தனர்.  அவன் அம்மா கூட இந்து  பெண் கடவுள் போல் அழகாக இருந்தாங்க. அவர்கள் அணிந்திருந்த ஒத்த மூக்குத்தி இன்னும் அழகு சேர்த்தது  அவர்களுக்கு. தினம் பூஜை கோயில் என்றே போய் வந்தார்கள்.


அழகான மிடுக்கான தோற்றத்துடன் உள்ள வெங்கட் முதல் வகுப்பிலே ஒழுக்கம் பற்றி தான் சொல்லி கொடுத்தான்.  ஒரு அட்டைவனை தயாராக்கி வீட்டில் தெரியும் இடத்தில் ஒட்டி வைக்கவும் சொன்னான். எழும் நேரம் படிக்கும் நேரம் விளையாட்டு நேரம் தூங்கும் நேரம் என பிரித்து அட்டவணையும் தயார் செய்து தந்து விட்டிருந்தான். அம்மாவிடம் கொண்டு காட்டின போது மெச்சினார்கள்.

பாத்தியா ஒழுங்கான இடத்தில் சேர்த்து விட்டால் படிப்பு தானா வரும் பீஸ் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை இங்கயே 10 வகுப்பு வரை படிக்க சொன்னாக.

டுயூஷன் 6 மணிக்கு சென்று விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதம் என்றாலும் பிரம்பு அடி விழும்.  நான் ராஜமாணிக்கம் மகள், அவ இளைய தம்பி, என் தம்பி என நாங்கள் 6 பேர் படித்தோம். டுயூஷனுக்கு வருவர்களை எல்லாம் சேர்க்க இயலாது நான் பீஸுக்காக படிப்பிக்கவில்லை பெயர் வேணும். நல்லா படிக்கவில்லை என்றால் எங்களையும் டியூஷன் வகுப்பில் இருந்து விரட்டி விடுவேன் என்று மிரட்டி கொண்டே இருந்தான்.  நான் ஆங்கிலம், கணக்கு பாடம் படித்தேன். ஆங்கில வழி கல்வி என்பதால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என்று கோகிலா தமிழ் படித்தாள்.

முதலில் எனக்கு அப்புறம் கோகிலா தம்பிக்கு என அனைவருக்கும்  பாடம் எடுத்து விட்டு வீட்டு பாடம் செய் என்று தள்ளி உட்கார வைத்து விட்டு கோகிலாவுக்கு நிறைய நேரம் தமிழ் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுவான். அப்படி தான் ஒரு முறை லக்ஷ்மி தேவியை பற்றி சொல்லி கொடுக்கும் போது மாதாவை இகழ்ச்சியாக பேச நான் துடுக்காக மறு கேள்வி கேட்க கோபம் கொண்டவன் தொடையில் நாலஞ்சு பிரம்பு அடி தந்து விட்டான். அன்றிருந்தே டியூஷனே பிடிக்கவில்லை.  இதும் போதாது என்று என்னையும்  கோகிலா தம்பியும் தள்ளி இருந்து படிக்க வைத்து விட்டு அவளை தன் அருகில் அமர வைத்து தமிழ் பாடம் சொல்லி  கொடுக்க என அவன் கை அவள் இடை பக்கம் சுற்றி சுற்றி போய் கொண்டிருந்தது .சினுங்கல் சத்தம் கேட்டு நான் கண்டு கொள்ள ஏதோ புரிந்தது ஆனால் தெளிவாக விளங்க வில்லை.  கெட்ட இடத்திற்க்கு வாத்தியான் கை போவுதுன்னு மட்டும் விளங்கியது. வீட்டுக்கு வந்து அம்மாவிடம் வகுப்பில் நடந்ததை விவரிக்கவும் டியூஷனே வேணாம்மா சே... படித்தவன் பார்க்க எவ்வளவு பண்பா இருக்கான் அவனுக்குள்ளும் இப்படியும் சாத்தானா என்று  சலித்து கொண்டார்கள். இந்த பொட்டை புள்ளைக்கும் விவரமில்லையே என்று வெறுத்து பேசி டியூஷனே வேண்டாம் என நிப்பாட்டி விட்டார்கள். 

பின்பு பள்ளி படிப்பு உயர் கல்வி, கல்லூரி திருமணம் என வாழ்கை உருண்ட நிலையில் இதை பற்றியே மறந்து விட்டேன். சமீபம் அந்த வாத்தியார் அப்பா மற்றும் ஒரே தம்பி ஒரு விபத்தில் இறந்த நேரம் இந்த வாத்தியானும் நான்கு வருடம் முன்பே எய்ட்ஸ் என்ற நோயால் மரணித்து விட்டான் என்று கேள்வி பட்டது திகிலாக தான் இருந்தது. ராஜ மாணிக்கவும் ஒரு நோய்க்கு என தமிழகத்தில் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்க  தனக்கு இருந்த திமிர் பேச்சால் மருத்துவரிடம் இடற; மருத்துவர் விஷ ஊசி போட்டு கொன்று விட்டார் என்று வதந்தி  பரவி இருந்தது எங்கள் ஊரில்.  ராஜ மாணிக்கம் மகளும் தந்தை இறந்த ஒரு வருடத்தில் 10 பகுப்பு தோற்ற கவலையில் இருந்து  மீள கடை வேலைக்கார பையனுடன் ஓடி போய் விட்டாள் என்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை!

26 May 2012

நெல்லையை மிரட்டும் டெங்கு!

பெண் கொசுவில் இருந்து பரவும் ஆடெஸ் ஆஜிபிற்றி (aedes aegypti) என்ற  வைரசால் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது.  அதிகாலை மற்றும் சூரிய அஸ்ட்தமனம் முன்னுமே இக்கொசுக்கள் மகக்களை கடிக்கின்றது.   இந்த வைரஸ் ஒரு மனிதனில்  2-7 நாட்களுக்குள் மனிதனை தாக்கி விடுகின்றது. பின்பு இந்நோய் தாக்கிய மனிதன்  டங்கு காய்ச்சல் பரவும் ஒரு கருவியாகி விடுகின்றான். இந்த காய்ச்சலை பற்றிய அறிவு 1907 வாக்கில் வந்திருந்தாலும் இதுவரையிலும் தடுப்பு ஊசியோ தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மருத்துவ  வரலாற்றில் கறுப்பு பக்கக்களே.. இது ஒரு பெரும் உலகலாவிய பிரச்சனையாக இரண்டாம் உலகப்போருக்கு பின் கண்டு பிடிக்கப்பட்டது. நகரமயமாக்கல், மக்கள் பெருக்கம், பூமி வெப்பமயமாகுதலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவ காரணமாகின்றது. 1960-2010 காலயளவுக்குள் 30 மடங்கு டெங்கு காய்ச்சல் பரவியதாக சொல்லப்படுகின்றது.

டெங்கு என்ற வார்த்தை ஸ்பானிஷ் என்ற மொழியில் இருந்து வந்திருந்தாலும் உலகம் முழுதும் உள்ள  40 % மக்கள்  இந்நோயின் அச்சுறுத்தலில் வாழ்கின்றனர்.   வருடம் 2.5% குழந்தைகள் இறந்து போகின்றனர்.

தற்போது தமிழகம் டெங்கு காய்ச்சல் பிடியில் மாட்டியுள்ளது. டெங்கு காய்ச்சலால் 1466 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 க்கு மேற்ப்பட்டோர் இந்நோயால் இறந்தும் போய் விட்டனர் என்பது துயரே. ஆனால் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் சட்டசபை மேஜையில் கொட்டுவதையும் தட்டுவதையும் விட்டு விட்டு ஆக்கபூர்வமான செயலாக்கத்தில் இறங்கியது போல் தெரியவில்லை. மத்திய குழுவை வரவழைத்துள்ளனர். மாநில சுகாதார நல அமைச்சர்கள் எங்கு உள்ளார்கள் என தெரியவில்லை.

நெல்லையில் தெருவெங்கும் வீட்டுமுன் கானுகள் அமைத்து அங்கு துர்நீர் கட்டி கிடக்கும் சூழலே உள்ளது. மேலைப்பாளயன் , பேட்டை பக்கம் செல்ல  இயலாதளவு துர் நாற்றம், அசுத்தம். நயினார் வேய்ந்தான் குளங்கள் திறந்த வெளி கழிப்பிடம் ஆகி விட்டது. நகராட்சி என்ற ஒன்று உயிருடன் உண்டா என்று தெரிந்து கொள்வதே தெருவுக்கு தெரு குழுவாக் நின்று புகைப்படம் எடுப்பதை கண்டு தான். வீட்டு சுற்று புறத்தை தூய்மையாக பேண கற்ரு கொடுக்கும் அரசு அலுவலங்கள் பின்பக்கம் சுற்றுப்புறம் பன்றிகள் இருப்பிடமாக் உள்ளது.  நகரத்தை போர்கால அடிப்படையில் சுத்தப்படுத்தாது புகைப்படம் எடுப்பது எதற்க்க்கு என்றுதான் தெரியவில்லை.

 தண்ணீரை தேங்கமலும் கொசுக்கடி படாமலும் இருப்பது ஒன்று மட்டுமே டெங்குகாச்சலில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி. காச்சல் வந்தத்ம் நேரம்  தாமதியாது இரத்தம் பரசோதனை மூலம் கண்டறிந்து மருத்துவ சேவை பெற வேண்டும். கவனிக்காது விட்டால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை என பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும்.ஆரஞ்சுப்பழச்சாறு, இளநீர் குடிப்பது வழியாக நீர் சத்தை தக்கவைத்து கொள்ள முடியும்.  முக்கியமாக மக்கள் கொசுக்கடி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

நெல்லை மதுரை என்று தமிழகம் முழுதும் பரவும் முன் அரசு விழித்தெழுந்து மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும் . அரசியல்வாதிகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தால் இன்னும் விழிப்புணர்வு கிட்டுமோ?.

20 May 2012

பள்ளிகளின் பகல் கொள்ளை!

பகல் கொள்ளை என்று கேள்வி தான் பட்டிருந்தேன். இப்போது நேரடியாக அனுபவிப்பதாகவே உள்ளது.   இந்த வருட  பள்ளி கட்டணம் செலுத்த சென்றால் நிர்வாகம் அறிவித்த தொகை பெரும் இடியாக் இருந்தது.  தலை சுற்றாது இருக்க நத்தை போல் ஓடும் காற்றாடி எந்திரத்தின் அருகில் நின்றால் பணம் பெறும் அலுவலக பெண் ஏதோஅரசு அதிகாரி போல் 'வரிசையில் நில்லுங்கள்' என கட்டளை இடுகின்றாள். 

எனக்கு முன் நிற்கும் பெரியவர் 12 வகுப்பு  படிக்க இருக்கும் தன் பேரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கட்டை மஞ்சை பையில் இருந்து எடுத்து கொடுக்கின்றார்.  எம் மகனுக்கு துவக்க கட்டணமாக ரூபாய் 17,765 செலுத்த கட்டளை இடப்படுகின்றோம்.  நமக்கும் கிடைக்கும் ரசீதில் ரூபாய் 4065 குறிக்கப்பட்டுள்ளது.  இது எல்லாம் சட்ட பூர்வமான தற்காப்பு என நமக்கு விளங்குகின்றது. இருந்தாலும் ஒன்றும் தெரியாத அபலை போல் முகத்தை வைத்து கொண்டு "நீங்கள் வாங்கிய தொகைக்கு ரசீது தரவில்லை" என்றதும் கூட்டம் மயான அமைதியாக நிற்க்கின்றது.  பணம் பெறுபவரும் எந்த முக பாவவும் அற்று 'வருகை அட்டையில் பதித்து தருவோம்'  என்று சொல்கின்றார். இந்த கொள்ளை எல்லாம் போதாது என்று வருடா வருடம்  சீருடையை  மாற்றி அதிலும் லாபம் பார்த்து விடுகின்றனர்.  இனி குழந்தை பத்திரமாக பள்ளி சென்று வீடு சென்று திரும்பி வர.பள்ளி வாகன- கட்டணம் செலுத்த வேண்டும். 


கல்வி தேவியில் காலடியில்  நிற்பதற்க்கான எந்த உணர்வும் மனதில் எழவில்லை.  பள்ளி அலுவலக அறையில் கூட சரஸ்வதி தேவியை ஆட்சி அம்மாவின் அடுத்த படியாக தான் தொங்க விட்டுள்ளனர்.  நம் பிள்ளைகளுக்கு ஊழலில் முதல் பாடம் கற்று கொடுக்கும் இடமாகவே படுகின்றது இன்றைய பள்ளிகள். பள்ளி தாயாளரும் ஒரு வியாபாரியாகவே நம்மை கடந்து செல்கின்றார். குழந்தைகள் விரிந்த விழிகளுடன் பெற்றோர் கட்டும் பணத்தை பார்த்து கொண்டே நிற்கின்றனர். இவர்கள் மனதில் கூட அப்பா விதைத்தை பணத்தை முடிந்த அளவு விரைவாக அறுவடை செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்க கூடும்.

கல்வி சேவையை வியாபாரமாக மாற்றும் சமூக அமைப்பை, சமூக சூழலை, அவல நிலையை  நினைத்து நொந்து கொள்வதை தவிற வழி இல்லை.