24 Sept 2025

வில்லியம் டிண்டேல் (William Tyndale):ஆங்கில வேதாகமத்தின் மற்றும் ஆங்கில மறுசீர்திருத்தத்தின் தந்தை

ஆரம்பக் கிறிஸ்தவ சபைக்கு எபிரேய வேதாகமமே ஒரே வேதாகமமாக இருந்தது.  கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் கிரேக்க மொழி ஆதிக்கம் செலுத்தும் lingua franca  சர்வதேச தொடர்பு மொழி ஆனது. அந்நேரத்தில் யூத பண்டிதர்கள் எபிரேய வேதாகமத்தை கிரேக்கத்திற்குத் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்கினர். அந்தப் பணி நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்தது.  இஸ்ரவேலரின்  பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து தலா ஆறு பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர் என நம்பப்படுகிறது.  

யூத வேதாகமத்தின் கிரேக்க மொழி பதிப்பு பின்னாளில் செப்துவஜிண்ட் (Septuagint ) லத்தீன் மொழியில் செப்டுவஜிண்டா, அதாவது "70" என்று அழைக்கப்பட்டது. கிரேக்க மொழி உலகில் பரவ ஆரம்பித்த போது  புதிய மதத்தவரான கிறிஸ்தவர்கள் செப்துவஜிண்டை ஏற்றுக்கொண்டனர். அதே சமயத்தில் கிறிஸ்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாடு நூல்களில் பல  கிரேக்கத்தில் எழுதப்பட்டு இருந்தன.  சிலவை அராமியத்திலும் எழுதப்பட்டு இருந்தன.

கிறிஸ்தவம் விரைவில் பரவியதால், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை காப்டிக், எத்தியோப்பிய, கோத்திக், மேலும் முக்கியமாக லத்தீன் மொழிகளுக்கு மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கி.பி. 405 ஆம் ஆண்டு, புனித ஜெரோம் (St. Jerome) செப்துவஜிண்டை ஒரு பகுதியாகக் கொண்டு லத்தீன் மொழிபெயர்ப்பை முடித்தார்.  இது வல்கேட் (Vulgate) என அழைக்கப்பட்டது. ஒருசில பிழைகள் இருந்தாலும், மேற்கு கிறிஸ்தவ உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அது நிலையான பதிப்பாக இருந்து வந்தது.


கி.பி. 6ஆம் நூற்றாண்டில், பாலஸ்தீனமும் பாபிலோனியாவிலும் இருந்த தால்மூது பாடசாலைகளின் எபிரேய பண்டிதர்கள் எபிரேய வேதாகமத்தை மீட்டெடுத்து முறையாக ஒருங்கிணைக்கத் தொடங்கினர். பல நூற்றாண்டுகள் கடின உழைப்பின் பின் உருவான மசோரெடிக் உரை (Masoretic Text), கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நிறைவடைந்தது. பின்னர் அது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் அச்சுக்கலை கண்டுபிடிக்கப்படும் வரை, மசோரெடிக் உரை  நம்பகத்தன்மையுடனும் பண்டிதர்களால் கையெழுத்துப் பிரதிகளாக பரவியது.

15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உருவான புதிய கல்வி இயக்கம், பண்டைய கிரேக்க மொழி ஆய்வை மீண்டும் உயிர்ப்பித்தது.  இதனால் புதிய மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. 

முக்கியமானதாக, நெதர்லாந்து மனிதநேய அறிஞர் டெசிடீரியஸ் எராஸ்மஸ் (Desiderius Erasmus) 1516-ல் கிரேக்க உரையும் தன் சொந்த லத்தீன் மொழிபெயர்ப்பும் அடங்கிய புதிய ஏற்பாட்டு பதிப்பை வெளியிட்டார். 

முழுமையான முதல் ஆங்கில வேதாகமம் 1382-இல் வெளியானது. இது ஜான் வைக்ளிஃப் (John Wycliffe) மற்றும் அவருடைய சீடர்களால் செய்யப்பட்டது எனக் கருதப்படுகிறது.  ஜெரோமின் வல்கேட், சிரியக், அரபிக், ஸ்பானிஷ், மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்புகளுக்கான அடிப்படையாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு உருவான டுவாய்-ரெயிம்ஸ் வேதாகமம் (Douai–Rheims Bible) (புதிய ஏற்பாடு 1582; பழைய ஏற்பாடு 1609–10) 20ஆம் நூற்றாண்டு வரையிலும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வேதாகமமாக இருந்து வந்தது.

மறுசீர்திருத்தம் (Reformation)

மறுசீர்திருத்தம் (Reformation) என்பது 16ஆம் நூற்றாண்டில் மேற்கு தேவாலயத்தில் நிகழ்ந்த மதப் புரட்சி ஆகும். இதன் தலைசிறந்த முன்னோடிகள் மார்ட்டின் லூத்தர் (Martin Luther) மற்றும் ஜான் கல்வின் (John Calvin) ஆவார்கள். மிகப் பெரிய அரசியல், பொருளாதார, சமூக விளைவுகளை ஏற்படுத்திய இந்த மறுசீர்திருத்தம், கிறிஸ்தவத்தின் முக்கிய கிளைகளில் ஒன்றான பிராட்டஸ்டண்டிசத்தின் (Protestantism) அடிப்படையாக அமைந்தது.

16ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தக்காரர்கள் தோன்றிய காலத்தில், நூற்றாண்டுகளாக, ரோமன் கத்தோலிக்க தேவாலயம்  குறிப்பாக போப்பரசரின் அலுவலகம் மேற்கத்திய ஐரோப்பாவின் அரசியல் வாழ்வில் ஆழமாக ஈடுபட்டு வந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட சதி முயற்சிகளும் அரசியல் சூழ்ச்சிகளும், தேவாலயத்தின் அதிகரித்த அதிகாரமும் செல்வமும் சேர்ந்து, அதனை ஆன்மீக ஆற்றலற்ற ஒன்றாக மாற்றின என்றுமட்டுமல்ல சபை மிகவும் சிக்கலான நிலையிலிருந்தது.

சபையின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு பாதிரியார்கள் விற்கும் indulgences ஆன்மீக சலுகைகள் அல்லது பாவ மன்னிப்புச் சீட்டுகள்  போன்ற தவறான பழக்கவழக்கங்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் இணைந்து தேவாலயத்தின் ஆன்மீக ஆட்சியைத் தளர்த்தின. இருப்பினும்    பெரும்பாலான மக்களுக்குப் தேவாலயம் ஆன்மீக ஆறுதலை வழங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் பாதிரியர்களுக்கு எதிரான மனநிலை இருந்தாலும், மொத்தத்தில்,  தேவாலயத்தில்  மக்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்து இருந்தனர், ஆனால், எதிர்ப்பாளர்களின் தாக்கத்தில் இவை அதிகப்படுத்தப்பட்டு பேசப்பட்டும் கொண்டிருந்தன என்றும் ஒரு குழுவினர் நம்பினர். அரசியல் அதிகாரிகள் தேவாலயத்தின்  செயல்பாடுகளை கட்டுப்படுத்த முயன்றது. அரசிற்கும் சபைக்குமிடையில் பதற்றத்தை உருவாக்கியது. 


இதற்கிடையில், ஜெர்மனியில் மார்ட்டின் லூத்தர், கிரேக்க மற்றும் எபிரேய அசல் உரைகளிலிருந்து முழுமையான வேதாகமத்தை ஜெர்மன்  மொழிக்கு மொழிபெயர்த்தார். அவரது ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாடு 1522-ல், முழு வேதாகமம் 1534-ல் வெளிவந்தது. இது ஜெர்மன் பிராட்டஸ்டண்டுகளுக்கான அதிகாரப்பூர்வ வேதாகமமாக இருந்ததோடு, டானிஷ், சுவீடிஷ் மற்றும் பிற மொழிகளுக்கான அடிப்படையாகவும் அமைந்தது.

1611-இல் வெளியான கிங் ஜேம்ஸ் பதிப்பில் (King James Version  இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு என அழைக்கப்பட்டது இது கிங் ஜேம்ஸ் I நியமித்த 54 அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. சொற்சொற் பொருள் மட்டுமல்லாமல், பல மரியாதைச் சொற்களையும் பயன்படுத்தியதால், அது ஜேக்கோபியன் ஆங்கிலத்தின் சிறந்த படைப்பாகும். 270 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலம் பேசும் பிராட்டஸ்டண்டுகளின் முக்கிய வேதாகமமாக இருந்து வந்தது.


வில்லியம் டிண்டேல் (William Tyndale) கி.பி. 1494 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் கிளாஸ்டர்ஷயர் அருகே பிறந்தார் .  வில்லியம் டிண்டேல் (William Tyndale) மார்ட்டின் லூத்தரின் காலத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கில அறிஞர் ஆவார்.  டிண்டேல் ஒரு திறமையான மொழியாளர்; லத்தீன், எபிரேய, கிரேக்க மொழிகளைச் சேர்த்து ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் ஒரு ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர், மனிதநேய அறிஞர், மற்றும் பிராட்டஸ்டண்ட் தியாகி என அறியப்படுகிறார்.


டிண்டேல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார். 1521-ல், அவர் வைட் ஹார்ஸ் இன் (White Horse Inn) எனப்படும் இடத்தில் கூடிக் கொண்டிருந்த மனிதநேய அறிஞர்களின் குழுவுடன் தொடர்பு கொண்டார். வேதாகமமே தேவாலயத்தின் போதனைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தமது சொந்த மொழியில் வேதாகமத்தைப் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் நம்பினார்.


அந்தக் காலத்தில் அச்சுத்தொழிலின் தாக்கமும், தாய்மொழிகளில் வேதாகமத்திற்கு ஏற்பட்டிருந்த தேவையும் காரணமாக, வில்லியம் டிண்டேல் 1523 ஆம் ஆண்டு கிரேக்க மொழியிலிருந்து நேரடியாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் விரும்பினார். 1523-ஆம் ஆண்டு, டிண்டேல் லண்டனுக்குச் சென்று புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அனுமதி கோரினார்.  காரணம், அக்கால இங்கிலாந்து அதிகாரிகள்  ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்திருந்ததால்; அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  கத்தோலிக்கர்கள் வேதாகமத்தை லத்தீன் மொழியிலேயே வைத்திருக்க விரும்பினர். இங்கிலாந்தில் தேவாலய அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியதால், 1524-ல் அவர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தார்; அங்கு லண்டன் வணிகர்களின் நிதியுதவியுடன் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.


அவரது புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு 1525 ஜூலையில் நிறைவுபெற்றது, கேலோன் (Cologne) நகரில் அச்சிடப்பட்டது. தன்னுடைய பாதுகாப்புக்காக, அந்தப் பதிப்பில் தனது பெயரையோ அடையாளத்தைக் காட்டும் விவரங்களையோ சேர்க்கவில்லை.  ஆனால் அந்நகரின் அதிகாரிகளின் அழுத்தத்தினால் அவர் அங்கிருந்து வெளியேறி, வோர்ம்ஸ் (Worms) நகரில் தஞ்சமடைந்தார். 



ஆனால், 1525 முதல் 1535 வரை வில்லியம் டிண்டேல் (William Tyndale)
மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதி, பிந்தைய ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான மாதிரியாக அமைந்தது.  அங்கு 1525-ல் இன்னும் இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டன. புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பை முடித்த பின், டிண்டேல் பழைய ஏற்பாட்டில் பணியாற்றத் தொடங்கினார். 1530-இல் மார்பர்க் (Marburg) நகரில் பெந்தட்யூக் (Pentateuch) முதல் ஐந்து நூல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டது. டிண்டேல் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்.  1526-ல் முதல் பிரதிகள் இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டன;  அதன் பிரதிகள் விரைவில் இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டு மக்களிடையே பிரபலமடைந்தன. டிண்டேல் உருவாக்கிய மொழி நடை, சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், அது ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளுக்கான பாணியை நிலைநிறுத்தியது. இருப்பினும்  அதிகாரிகளால் அவை தடைசெய்யப்பட்டன; மேலும்  அவரை மதவெறுப்பு குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர் .


அதிக கடனில் சிக்கியிருந்த ஹென்றி பிலிப்ப்ஸ் (Henry Phillips) என்ற நபரிடம் வில்லியம் டிண்டேலைத் தேடி பிடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.  பிலிப்ப்ஸ்  டிண்டேலைக் கண்டுபிடித்தால் பெரும் தொகை பணம் வழங்கப்படும் என அவருக்குச் சொல்லப்பட்டது.  1535-ஆம் ஆண்டு, பிலிப்ப்ஸ் அந்த்வெர்ப் (Antwerp) நகரின் வணிகர்களுடன் தொடர்பு ஏற்படுத்தத் தொடங்கினார். ஏராளமான சூழ்ச்சி மற்றும் ஏமாற்றுக்களின் மூலம், டிண்டேலின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்தார். டிண்டேலின் நெருங்கிய வட்டாரத்திற்குள் நுழைந்து, அவரோடு நண்பனாகவும் ஆனார்.

ஒரு நாள், டிண்டேலிடம் 40 ஷில்லிங்குகளை கடனாக வாங்கிய பின், பிலிப்ப்ஸ் அவரை உணவுக்கு அழைத்தார்.   இருவரும் ஒரு குறுகிய தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது, டிண்டேல் அரச படையினரால் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.  பின்னர், அவர் 500 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்டார். பெல்ஜியம் அருகிலிருந்த ஒரு கோட்டையில், குளிரும் இருளும் நிறைந்த சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். இரவில் மெழுகுவர்த்தி வேண்டியும், குளிரைத் தாங்குவதற்குத் துணி வேண்டியும் காவலர்களுக்கு கடிதம் எழுதினார்:  “இருட்டில் தனியாக உட்கார்வது மிகவும் சிரமமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டார். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் விண்ணப்பித்தது; எனது நேரத்தை  படிப்பில் செலவிட விரும்புகிறேன்.எனக்கு என் எபிரேய வேதாகமம், எபிரேய இலக்கணம், மற்றும் எபிரேய அகராதி பயன்பட அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.; என்று வேண்டியிருந்தார்.   அதாவது, தண்டனைக்கு காத்திருக்கும்போதே, அவர் தனது வேதாகமப் பணியைத் தொடர விரும்பினார். 18 மாதங்கள் கழித்து, தேவாலயத்தினால்  மதவெறுப்பாளி (heretic) என அறிவிக்கப்பட்டு,  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

டிண்டேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்:

  • “நம்பிக்கை தான் நீதிமானாக்கும்” என்ற அவர் நம்பிக்கை.  பாவ மன்னிப்பில் விசுவாசிக்காது, சுவிசேஷம் வழங்கும் இரக்கத்தை ஏற்றுக்கொள்வதே இரட்சிப்பிற்கு போதுமானது என்ற அவரது நம்பிக்கை முக்கிய குற்றமாக கணக்காக்கப் பட்டது.  

 மதச்சார்பற்ற கருத்துக்களுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, பில்வோர்டே (Vilvoorde) நகரில்  1536 அக்டோபர் 6 அன்று, அவரைத் தூக்குத் தண்டனை மற்றும்  எரித்துக் கொல்லவும் கொண்டுசென்றனர். கூட்டம் முன்னிலையில், அவரை ஒரு தூணில் கட்டினர்; கால்களின் சுற்றிலும் மரக்கட்டைகளும் வைக்கோலும் அடுக்கப்பட்டன; மேலாக துப்பாக்கி மையம் (gunpowder) தூவப்பட்டது. சங்கிலியும் கயிறும் அவரது கழுத்தில் பிணைக்கப்பட்டது.

அந்தக் கடைசி நொடியில், டிண்டேல் தனது இறுதி வார்த்தைகளைச் 
“கர்த்தாவே, இங்கிலாந்து அரசனின் கண்களைத் திறந்தருளும்!” என்று சொன்னார்: 

பின்னர் கயிறு இறுக்கப்பட்டது. டிண்டேல் உயிரிழந்தார். அவரது உடல் தீயில் எரிக்கப்பட்டது; துப்பாக்கியும் வெடித்ததால் காட்சி இன்னும் கொடூரமானதாகியது. தேவனுடைய வார்த்தையை இங்கிலாந்திற்குக் கொண்டுவந்த குற்றத்திற்காகவே, “கடவுளின் சட்டவிரோதன்” என்று அழைக்கப்பட்ட வில்லியம் டிண்டேல் தியாக மரணத்தைச் சந்தித்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இறுதி ஜெபம் நிறைவேறியது. இங்கிலாந்தின் ஹென்றி எட்டாம் (Henry VIII) அரசன் ஒவ்வொரு தேவாலயத்திலும் ஆங்கில மற்றும் லத்தீன் வேதாகமப் பிரதிகள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

டிண்டேலின் மொழிபெயர்ப்பு, அவரது காலத்திலிருந்து வந்த அனைத்து ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளிலும் காணப்படுகிறது. கிங் ஜேம்ஸ் (King James) புதிய மொழிபெயர்ப்பை ஏற்படுத்த 50 சிறந்த அறிஞர்களை நியமித்தார். ஆயினும், அவர்கள் கூட டிண்டேலின் பணியை மேம்படுத்த முடியவில்லை. கிங் ஜேம்ஸ் பதிப்பில் (1611), புதிய ஏற்பாட்டின் சுமார் 84% மற்றும் பழைய ஏற்பாட்டின் 76% டிண்டேலின் மொழிபெயர்ப்பே உள்ளது!

பல வழிகளில், வில்லியம் டிண்டேல் நவீன ஆங்கில மொழியின் தந்தை, அதேபோல் ஆங்கில வேதாகமத்தின் மற்றும் ஆங்கில மறுசீர்திருத்தத்தின் தந்தை ஆவார். இங்கிலாந்தின் அரசனிலிருந்து எளிய உழவன் வரை அனைவரும் தேவனுடைய வார்த்தையை அறியும்படி செய்வதற்காக ,பைபிளை ஆங்கில மொழிக்குத் மொழிபெயர்க்கும் பணிக்காக வில்லியம் டிண்டேல்  தனது உயிரை இழந்தார். 

அவர் மரணமடைந்த காலத்தில், அவரது 18,000  புதிய ஏற்பாட்டு பிரதிகள்   அச்சிடப்பட்டிருந்தன.  முழுமையான இரண்டு பிரதிகளும் ஒரு சிதைந்த பிரதியும்  லண்டனின் பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் உள்ளன.  அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்ந்தும் உயிர்வாழ்ந்து வருகிறது.


டிண்டேலின் மிகப் பெரிய சாதனை, ஆழமான கல்வி, எளிமையான நடையைப் பயன்படுத்தும் திறன், இலக்கிய அழகியைக் காக்கும் திறன் ஆகியவற்றை ஒரே பாணியில் இணைத்துச் செய்த மொழிபெயர்ப்பு. இது ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளில் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியது. எபிரேய பாணியின் சுவையைத் தக்கவைத்த அந்த ஆங்கில நடை, கிங் ஜேம்ஸ் பதிப்பு (1611) தொடங்கி அடுத்த 400 ஆண்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான மாதிரியாக இருந்தது.






0 Comments:

Post a Comment