15 May 2025

10ம் நூற்றாண்டு பிரம்மதேசம் கையில்‌சநாதர் கோவில்

 
























































ஸ்ரீ கைலாசநாதர் கோயிலின் மூல தெய்வமான பதரி வனேசுவரரை, படைப்பாளரான பிரம்மாவின் பேரனான ரோம மகரிஷி வழிபட்டதால், அந்த கிராமத்திற்கு பிரம்மதேசம் என்று பெயரிடப்பட்டது


முதலில் இந்தக் கோயில் ராஜ ராஜ சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. ராஜ ராஜ சோழ மன்னர் காலத்தில் இந்த கிராமம் நான்கு வேதங்களை ஓதுவதற்காக வேத அறிஞர்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்டது, எனவே சதுர்வேத மங்கலம் அல்லது பிரம்மதாயம் என்று பெயரிடப்பட்டது என்றும் நம்ப்படுகிறது. 


1000 ஆண்டுகளுக்கு முன் சீர்பெற்று விளங்கிய இடம், இன்று சிறிய கிராமமாக உள்ள பிரம்மதேசத்தில் பல்லவர் காலத்து சந்திரமௌலீஸ்வரர் என்ற திருப்போந்தை ஆழ்வார் கோயில், சோழர் கால உருத்திர கோட்டீஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், ஆதித்த க்ருஹம் என்ற சூரிய கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் கொண்டு சிறந்து விளங்குகிறது. 

 
























10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மதேசம் கையில்‌சநாதர் கோவில்  மூன்று கோபுரங்களும் ஏழு விமானங்களும் உள்ளன. இந்தக் கோயிலின் கருப்பொருள் தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோயிலைப்) போலவே இருக்கும்.. கைலாசநாதர் கோயில் சிற்பச் சிறப்பால் நிறைந்துள்ளது

கடனாநதி நதிக்கரையில் கரையில் உள்ள மூன்று ஸ்வயம்பு லிங்கங்களில் ஒன்றாகும் (மற்ற இரண்டு கோவில்கள் சிவசைலம் கோவில் மற்றும் திருவலிஸ்வரம் வாலீஸ்வரர் கோவில்கள் ஆகும்).

இது 'நவ கைலாயம்' கோயில்களில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது.  மேலும், இது சூரிய பகவானுக்கான நவகிரஹ ஸ்தலம் கும். ல்வியில் முன்னேற விரும்புவோருக்கான பிரார்த்தனை ஸ்தலமாகவும் விளங்குகிறது.

 

இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது, மேலும் சேரர்கள், பாண்டியர்கள், ஹோய்சாளர்கள் மற்றும் நாயக்கர்கள் ஆகியோரால் முக்கியமான சேர்க்கைகள் செய்யப்பட்டுள்ளன.

ராஜகோபுரத்திற்கும் பிரதான கருவறைக்கும் இடையில், திருவடரை மண்டபம் என்று அழைக்கப்படும் அழகியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட நீண்ட தூண் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் 10 சதுர அடிப்படையிலான தூண்கள் மற்றும் 12 சிங்க அடைப்புக்குறிகள் மற்றும் 12 துளி அடைப்புக்குறிகளுடன் செதுக்கப்பட்ட இரண்டு உருவமற்ற கொத்துத் தூண்களால் நிறுத்தப்பட்டு உள்ளது. தூண் மண்டபத்தின் கூரை கேரள மர கூரை கட்டிடக்கலையை வெளிப்படுத்துகிறது, ஆனால் அது கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது நடராஜர் மற்றும் சிவகாமியின் கல் உருவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சன்னதியைக் கொண்டுள்ளது. இந்த மண்டபத்தில் பல அழகான சிற்பங்கள் மற்றும் பல்வேறு கடவுள்கள், தெய்வங்கள், முனிவர்கள், இதிகாச கதாபாத்திரங்கள், யாழிகள், யானைகள் போன்ற புராண விலங்குகள், நடனம், இசை, போர் மற்றும் காமம் ஆகியவற்றை சித்தரிக்கும் தூண்களில் நுட்பமான சிற்பங்கள் உள்ளன.

 

கோயிலுக்குள் மர வேலைப்பாடுகள் மற்றும் மர சிற்பங்களுடன் கூடிய பிரதான நுழைவாயிலின் பெரிய கதவுகள், கேரளத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள் இந்தக் கோயிலில் வேலைசெய்ததை நிரூபிக்கின்றன. சோமவார மண்டபம் சிற்பிகளின் மற்றொரு தலைசிறந்த படைப்பாகும்.

 

 

பாண்டிய மன்னர்கள் மற்றும் ஹொய்சாள] மன்னர்களால் கட்டப்பட்டது. பெரிய வளாகச் சுவர்கள் மற்றும் 7 மாடிகளைக் கொண்ட முன் ராஜகோபுரம் மற்றும் 5 மாடிகளைக் கொண்ட பின்புற கோபுரம் ஆகியவை திருநெல்வேலியை ஆண்ட மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டன என்கிறது சான்றுகள்.

திருநெல்வேலியின் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்ட தென்னிந்தியாவின் சிறந்த கோயில்களில் ஒன்றாகும் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக வாய்ப்பு உள்ள இடமாகும்.  மேலும். அருகிலுள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையம் அம்பாசமுத்திரம் ஆகும், இது சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.



















 

 










7 May 2025

கதையும் காரணமும் - சாந்தினி சொர்க்கம் !


தனது குழந்தைப் பருவம் முதல் தனக்கு குழந்தை பிறக்க போகும் காலயளவு வரை கதையை ஒரே(லீனியர்) அடுக்கில் வரிசைப்படுத்தி எழுதியிருப்பது வாசிக்க எளிதாக உள்ளது. மிகவும் சுவாரசியமான, கொஞ்சம் பண்ணையார்த்தனமுள்ள உரையாடல்கள், இயல்பான எளிமையான மொழி என கதையை சுவாரசியமாக நகத்தி செல்கிறார். ஒளிவு மறைவு இன்றி நேர்மையாக எழுதிய பாங்கு அவருடைய எழுத்தின் பலம் ஆகும் . ஒரு இனத்தின் தனித்துவமான வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்டுள்ளதால் இன்னொரு நிலப்பகுத்திக்கு பயணித்தது போல உள்ளது.

குழந்தைப் பருவத்தில் செய்த சேட்டைகள், நட்புகள், முக்கியமாக முறைப்பெண்களுடன் உள்ள உறவு, அதில் வேம்புவை தனது நண்பன் விரும்புவதால் விட்டு வைத்ததாகவும் தேன் மொழியை தனக்கு இருந்த சோசிய நம்பிக்கையால் திருமணம் செய்ய இயலாது இருந்ததும், மறுபடியும் அவர்களை வாழ்க்கையின் சந்தித்த தருணங்களில் உருகி பேசினது, பேயின் துணையுடன் சல்லபித்தது என எதையும் விட்டு வைக்காது, ஒரு மனிதனின் நிஜமான வாழ்க்கையை அப்படியே பதிந்து வைத்துள்ளதற்கு எழுத்தாளரில் இருக்கும் இயல்பான துடுக்கும், அதையும் கடந்த தைரியமே சான்று..

சுயவரலாறாக எழுதப்பட்ட புத்தகம், பிற்பாடு பேய்க்கதையுடன் ஃபிக்ஷனாக உருமாறுகிறது. பேய் உண்டா இல்லையா என வாசிப்பவர்களை கடைசி வரை மிரட்டிக் கொண்டே இருந்தாலும் பேயை கண்தாக தோன்றின காரணத்தை சிறப்பாகவே சொல்லி விட்டார்.
கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஒவ்வொரு கேள்விக்கும் காரண காரியகளுடன் தனது மரபணு, தனது முன்னோர் வழக்கம் என தன்னுடைய பார்வையும் கலந்து கதையை ஒரு கருத்தாக்கத்திற்குள் கொண்டு வந்து உள்ளார்.

பேயையும் தன்னுடனே பயணிக்க வைத்து, பேயின் தாக்கத்தால் முறைப்பெண் , செல்வி என பெண்கள் உடன் ஏற்பட்ட உறவுகளை சமப்படுத்தி உள்ளார். இவர் கதையின் கதாப்பாத்திரங்களில் இருந்து பெண்கள் பிடிவாதத்தால், ஆண்கள் வல்லுறவிற்குள் தள்ளப்படுவது போன்ற ஒரு பார்வையும் ஏற்படுகிறது. வலிமையான ஆண்களால் பெண்கள் எப்போதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை விட பெண்களின் கட்டுக்குள் அடங்கா ஆசை மற்றும் பிடிவாதம் ஆண்களுக்கு வாய்ப்பு உருவாக்குகிறது என்ற கோட்பாட்டை நிறுவுகிறார்.

பழைய தலைமுறையில் இருந்து தாத்தா, அப்பா, மகன் என உருமாறும் ஆண்மை, அதன் நீட்சியான ஆண் அதிகாரம் உருமாறுவதையும் இக்கதையில் அவதானிக்கலாம்.
அடுத்து கதாசிரியரின் உரையாடல்களை; மனைவியிடம் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகள், தேன் மொழியிடம் பேசும் வார்த்தைகள், அடுத்து வேம்பு, கடைசியில் செல்வியிடம் உரையாடும் வார்த்தைகள் இவயை ஒரு வகைப்படுத்தி வேற்பாடுகளையும் பொருத்தங்களையும் ஆராயவே செய்யலாம். என்னதான் ஆணாதிக்கத்தின் நீட்சியான உரையாடல்கள் வழியாக பெண்கள் மனமுகுந்தே அக்கட்டுகளில் அகப்படுவதை, அல்லது பெண்களை வார்த்தைகளால் கட்டிப்போடும் வித்தையை அவதானிக்க வேண்டியுள்ளது. இத்தனை நேர்மையாக தன் மன ஓட்டத்தை எழுத இயலுமா என நாம் சந்தேகம் கொள்ளும் போதே, சாந்தினி பேயை கொண்டு வந்து நீதி விசாரணைக்கு உட்படாமல் தப்பித்தும் கொள்கிறார் கதாசிரியர்.


எல்லா பெண் கதாப்பாத்திரங்களையும் மிகவும் ஆக்கபூர்வமானவர்களாக தன்னிறவு கொண்டவர்களாக குறிப்பாக பேய் சாந்தினியை கூட வலுவான கதாப்பாத்திரமாகவே படைத்துள்ளார். இவரின் பேச்சில் மயங்குவதிலும் அப்பெண்களுக்கான தேர்வு, விருப்பம், பிடிவாதம் ஒவ்வொரு உறவிலும் வந்து செல்கிறது. பெண்கள் குற்ற உணர்ச்சியற்று தங்கள் வாழ்க்கைக்குள் நகரும் போது, எதனால் இப்படி நிகழ்கிறது என உளமருத்துவர், சோசியக்காரர், சாமியிடம் அறியும் நோக்கிலே பயணிக்கிறது கதை. முக்கியமாக தான் விரும்பின தன்னை விரும்பின பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முன்னெடுக்கும் ஒரு தன்னலமற்ற ஆணாகவே பரிணமிக்கிறது குணசீலன் கதாப்பாத்திரம்.
எல்லா பெண்களை விட பேயை விட தன் மனைவியை பயப்படுவதும் மரியாதை செலுத்துவதும் மதிப்பதும் நமது பண்பாட்டில் மனைவிக்கான முக்கியத்துவத்தையும் சொல்லாது சொல்லி செல்கிறது கதைப்பின்னல்.

உள நல மருத்துவர் இவருக்கு என்ன பிரச்சினை என வழி சொல்ல போகிறார் என வாசகர்கள் காத்து இருக்கும் போது மருத்துவரை ஒரு மனகுழப்பத்தில் தள்ளும் பகிடி சிந்திக்கவும் சிரிக்கும் படி தான் இருந்தது.

ஆனால் கதாசிரியருக்கு எல்லா மருத்துவம் விட ஆழமான சோசிய நம்பிக்கை உள்ளதை கதையில் பல இடங்களில் நிறுவ பார்க்கிறார். ஒரு விமர்சனமாக அல்லது பகுந்தாய்வாக பார்த்தாலும் சோசியத்தை நம்பாத என்னால் சில நேரம் சோசியம் பார்த்து பர்சோதித்து விடுவோமா என்று தோன்றாதும் இல்லை. கதாசிரியரின் எழுத்தின் வலிமையே அதுதான். தான் நம்பும் நம்பிக்கையை, பயத்தை, அச்சத்தை ஏதோ வகையில் வாசகரிலும் கடத்த இயல்கிறது.

சாந்தினிப் பேய்க்கு கண் காது வைத்து நகத்திய விதம் அருமை. கடைசியில் மந்திரவாதியின் உதவியுடன் பேய்களை ஜோடியாக வெளியேற்றுவது வரை கதையில் வந்துள்ளது. சாந்தினிப் பேயால் தேனு, செல்வி போன்றோர் வந்து போனாலும் ஒரு கணவன் மனைவி உறவை பற்றி அதற்குள் இருக்க வேண்டிய அன்பு அன்னியோன்னியம் மனைவியின் சாதுரியம், குடும்பத்தில் மனைவிக்கான இடம் என கதை இந்திய பண்பாட்டு அறத்தில் பயணிகிறது.

என்னதான் பேய்களை வைத்து விளையாடி தேனு , செல்வி கதை சொன்னாலும் அதன் உள்ளிருக்கும் புரியாத புதிரான ஆண்கள் இயல்பு விளங்குகிறது. உள டாக்டர் போலவே சாமியாரும் கதாசிரியரிடம் இருந்து கவனமாக தப்பித்து செல்கிறார்.

ஒரு மனிதனின் குணம் நிர்ணயிப்பது குழந்தைப்பரும் என்பதற்கு இணங்க கதாசிரியர் சிந்தையிலும் செயலிலும் , கருத்தாக்கத்திலும், தன் கருத்தால் மற்றவர்களை நிலைகுலைய வைப்பதிலும் பண்ணையார் தனமான குழந்தைப்பருவம் கூடவே பயணிக்கிறது.

சிவயோகியை பிரேமானந்தா ஆக்குவது முதல் உளமருத்துவரின் மனநிலைய கேள்விக்கு உள்ளாக்குவது என கதாசிரியர் தன்னுடைய வலுவான இடத்தை கதையில் திடமாக பதிப்பித்து செல்கிறார்.

தன்னுடைய கல்வியறிவு, செய்யும் தொழில்களில் கையாளும் நுட்பம் என விளாவரியாக தனது சிந்தனையை அப்படியே குறித்து வைத்து உள்ளார். கதாயாசிரியரின் தொழில் சார்ந்த முனைப்பு, தன்னம்பிக்கை, உழைப்பின் மேல் இருக்கும் அசையாத நம்பிக்கை, ஒவ்வொரு அத்தியாயத்லும் வாசிப்பவனுக்கு ஆக்கபூர்வமான சிந்தனையை தூண்டுகிறது. எத்தனை சோதனை வந்தாலும் நினைத்தை முடிக்கும், ஒரு தொழிலில் இருந்து இன்னொரு தொழிலுக்கு தாவும் வேகம், அறிந்து வைத்திருக்கும் விடயங்களை பற்றிய ஆழமான அறிவு, விவேகம் , கல்வி அறிவையும் தாண்டின ஞானம் அதை குறித்த கதாசிரியரின் சுயத்தில் கொண்ட பெருமையும் வாசிப்பவனை ஊக்கப்படுத்துகிறது.


எலிக் கால் பட்டு ஒரு கதாப்பாத்திரம் கத்தும். அது பேய் அல்ல, சொல்லாமல் கொள்ளாமல் வந்த செல்வி தான் என்பதை வாசகர்கள் எடுத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தாயத்து எலுமிச்சம், விபூதி இவை அனைத்தும் பல இடங்களில் வந்து செல்கிறது. விபூதி பூசியும் எலுமிச்சம் அருகில் இருந்தும் சாந்தினி பேய் உருமாறி வருவது மனதின் குடிகொண்டு இருக்கும் நிறைவேறாத அடிமனது ஆசைகள் தான் உண்மையில் வெல்லும் என சொல்ல வருகிறார் என எண்ணம் கொள்கிறேன்.

மோகனூ முதல் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வாசகனின் மனதில் பதிப்பித்து சென்றுள்ளார். கதாசிரியரின் மனசாட்சியாக நண்பன் மோகனுவை வைத்து கேட்கவைக்கப்பட்டுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைப்பவை. கடைசி பக்கம் 556 வரை சுவாரசியம் குறையாது வாசித்து விடலாம். சில பக்கங்கள் வாசிக்கும் போது உறக்க சிரித்தே வாசிக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் நமக்கு பேய் பிடித்து விட்டது என எண்ணி விபூதி அடிக்காது இருந்தால் சரி.

இது அமேசான் pen to publish 2019 போட்டியில் 50,000 பரிசு பெற்ற நாவல் என்பது குறிப்பிடத் தக்கது. 

ஜெர்கின் இன ஒரு ஜோடி வாத்து

அமெரிக்கன் ஜெர்கின் இன ஒரு ஜோடி வாத்து   6 மாதம் முன்பு வந்து சேர்ந்தது. சில பக்கத்து வீட்டு குழந்தைகள் வந்து,  எங்க வீட்டில் வாத்தை வளர்க்க இயலவில்லை,  நாய் விரட்டுகிறது.  ஜோடி 600 ரூபாய் வைத்து கொள்ளுங்கள் என கொண்டு விட்டு சென்றனர், அழகான அன்னம். அதன் ஜோடி சேர்ந்த நடை அதன் வெண்மை நிறம் எல்லாம் அழகாக இருந்தது. அதன் கண் மணிகள் உருட்டுவது கூட அழகு,

தண்ணீர் காணும் பக்கம் போய் காலைவைத்து அடித்து விளையாடி கொண்டு இருக்கும். அழுக்கு பிடித்த மண்ணில்  இருந்து கரையேறும் வாத்தின் அடுத்த பணி குளிப்பதாகும். தலையை மட்டும் தண்ணீரில் மூழ்கச்செய்து அது தன்னை சுத்தப்படுத்தி வெண்மையாக மாற்றும் அழகே அலாதி. தலையை சரித்து பார்ப்பதும் அன்ன நடை நடந்து ஓடுவதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பகலில் நீந்தி குளிக்க என்றே ஒரு நீர் தொட்டி அமைத்து கொடுத்திருந்தேன்.


உணவு நேரம் மட்டுமே மனிதனை அணுகும் . அல்லாது ”நீ யாரோ, நான் யாரோ” என்ற பாவத்தில் நடப்பது கொஞ்சம் திமிர் தானோ என்று கூட தோன்ற செய்தது.மிகவும் அமைதியாக கிடந்த எங்கள் வீட்டின் வெளிப்புறம் கிவாக்..... க்வாக்.... என குரல் எழுப்பி கொண்டு  நடப்பது காண்பது மட்டுமல்ல கேட்கவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

காலை எழுந்து கதவை திறக்கும் போது ஓடி வரும். வேலை முடிந்து வரும் போது குரல் எழுப்பி கொண்டு வாசலில் நிற்பது வரவேற்க ஆள் நிர்க்கின்றதே என்ற பெருமையும் தான் இருந்தது. முன் அறையில் இருக்கும் போது நம் பார்வை படும்  போல முன் வாசலில் படுத்து கிடப்பதும் , அடுக்களை பக்கம் வேலை செய்ய என கிளம்பி விட்ட பின் புறம் ஓடி வருவதும் ஏதோ ஒரு நட்பை மனதில் ஏற்படுத்தி கொண்டே இருந்தது


முதல் நாள் உணவை அதன் தட்டில் வைக்கும் போது இரண்டும் போட்டி போட்டு கொண்டு சாப்பாட்டை தட்டி கீழை சிந்திய  போது ’முட்டாள்’ வாத்து என திட்டி கொண்டே வந்து விட்டேன்..  . அடுத்த நாள் காலை ஒன்று மட்டும் தான் நடமாடி கொண்டு இருக்கின்றது, வீட்டின் நானாபக்கம் சென்று பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்டு செத்து கிடந்தது. கீரிப்பிள்ளையோ எறும்பு தீனி    (உடும்போ)  பிடித்து தின்றிருக்கும். இரத்தம் மட்டும் உறியப்பட்ட நிலையில் தென்பட்டது.

பின்பு ஜோடிப்பறவை உற்சாகம் இழந்து போனது. இப்போது தட்டில் சாப்பாடு இட்டாலும் போட்டி போட்டு உண்ண ஓடி வராது இணையை கூப்பிட்ட வண்னமே குரல் எழுப்பி கொண்டு நின்றது. பின்பு அதன் நடையும் மதிய நேரம் குளியலையும் நிறுத்தி ஒதுங்கி படுத்தே கிடந்தது. வைத்த சாப்பாடும் தின்ன பாடில்லை. சாப்பாடு அப்படியே கிடந்தது.  தினம் ஒரு முட்டை தரும் பறவை முட்டை இடுவதையும் நிறுத்தி விட்டது.

துணைக்கு ஒரு பறவையை கேட்டு வைத்திருந்தோம். மனிதனிடம் அண்டாதிருந்த பறவை இப்போது அருகில் வந்து நாயை போன்று கால் முட்டை மடக்கி கழுத்தை சாய்த்து படுத்து கொண்டு குரல் எழுப்பும். சென்று தடவி விட்டதும் ஆசுவாசமாக நடந்து செல்லும்.. இரண்டு நாள் இவ்விதம் தொடர்ந்தது. இரண்டாம் நாள் அது என்றும் முட்டை இடும் இடத்தில் இருந்து அழுது கொண்டு இருந்தது, அழைத்தும் வரவில்லை. காலை செடி மூட்டில் அப்படியே செத்து கிடக்கின்றது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளையும்   தனிமை கொல்லத்தான் செய்கின்றது.   அது நீச்சலடித்து குளிக்கும் தொட்டியும் சாப்பாட்டு பாத்திரவும் வெறுமையாக கிடக்கின்றது.

4 May 2025

எனது 11 வருட அழகான ஆசிரியப் பணி!



கல்லூரியில் இருந்து முதுகலை பட்டம் மாணவர்களுடன் கன்னியாகுமரி அனுப்பப்பட்டேன். அதற்கான அனுமதிக்கு 3.30 க்கு அருட் திரு புஷ்பராஜ் அவர்களை சந்தித்து கையெழுத்து பெற்றேன். அதே நாள் எனது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயணத்திற்கு முதல்வர் தந்தையிடம் மாலை 6 மணிக்கு கையெழுத்து பெற்றேன்.  அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு பயணம் என ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.


 காலை கிளம்பும் போது ஒரு 6 அடி நீளமுள்ள பாம்பை வீட்டு வளாகத்திற்குள் கண்டதும் அபசகுனமாக தான் பட்டது. பயணம் ஆரம்பித்தாச்சு, இளைய மகன் கைபேசி அழைப்பு அதிகாலை 5.30 க்கு  வந்திருக்கிறது. மகனிடமும் பயணம் விவரங்கள் இரவே தெரிவித்ததால் போய் கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் அழைத்து சொன்னேன். மகனோ உங்கள் கால் உடைந்தது போல கனவில் கண்டேன், அதுவே அழைத்தேன் என்றான்.


கைபேசியை வைத்து விட்டு பயணத்தில் ஆழ்ந்து போயிருந்தேன், முதுகலை மாணவர்கள் எண்ணத்திலும் வெறும் 9 பேர் என்பதால் பெரும் சிரமமாக தோன்றவில்லை. இவர்களுடன் பயணித்தாலும் மூன்று நாட்களுக்கு பின் என் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் மேற்கொள்ள வேண்டிய பயணத்தை பற்றி தான் சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. வகுப்பில் 43 மாணவர்கள் இருக்க வெறும் 10 மாணவர்கள் மட்டுமே 300 ரூபாய் தந்து இருந்தனர். பயணத்திற்கு வாகனம் முன்பதிவு செய்ய வேண்டுமா? வேண்டாமா என்ற சிந்தனையில் இருந்தேன்.

முதலில் பேச்சிப்பாறை நீர் தேக்க்ம், பின்பு சிதறால் மலைக்கோயில் அத்துடன் மதிய சாப்பாட்டை முடித்து விட்டு என்னுடைய தோழி அட்டைபெட்டி நிறுவனம் நடத்துகிறார். அங்கு மாணவர்களை அழைத்து சென்றோம். அருகில் உள்ள இன்னொரு நிறுவனமும் கண்டு விட்டு மாணவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கன்னியாகுமரி சூரிய அஸ்தமயம் கண்டு விட்டு வீடு திரும்பினோம். வந்து சேர இரவு 10 மணி ஆகி விட்டது. பயணம் மகிழ்ச்சியானது என்றாலும் மாலை 8 மணிக்கு முன்பு  வீடு அணைய இயலவில்லை என்ற ஒரு பதட்டம் இருந்தது. எங்கள் வீட்டு செல்ல நாயை வீட்டுக்கு வெளியே விட்டு விட்டு சென்றிருந்தேன். 



பயணத்தில் இருக்கும் போது தான் பக்கத்து வீட்டு தோழியிடம் இருந்து அழைப்பு வந்து இருந்தது. உங்கள் கல்லூரியில் இருந்து ஒரு தபால்  வந்துள்ளது என்றார். என்ன தபாலாக இருக்கும் என சிந்தித்து பார்த்தேன். நேற்று தான் செயலர், முதல்வர் என இருவரிடம் கையெழுத்து பெற்றுள்ளேன், ஏதாவது புத்தகம் வந்து இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.


வீடு வந்து சேரும் போது பக்கத்து வீட்டு தோழி நித்திரைக்கு போனது மாதிரி இல்லை. வீட்டில் மின் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.   அதனால் அழைத்து தபாலை தர இயலுமா என்றேன். அவரும் வந்து சுவர் பக்கம் நின்று தந்து விட்டு சென்றார்.


பயணக்களைப்பு. இருப்பினும் கல்லூரி ஆண்டு விழாவும் வரும் வாரத்தில் தான். ஒரு வேளை ஏதாவது விருது எதுமா என்ற சிந்தனையுடன் பிரித்து பார்த்தால் நீங்கள் வேலையை விட்டு ஏப்ரில் 20 ஆம் தேதி 2025 அன்று நின்று விடுங்கள் என்றிருந்தது.  மறுபடியும் என் நிர்வாகம் மேல் ஒரு நம்பிக்கை, இது யாராவது என்னை ஏமாற்ற அனுப்பி இருக்க கூடும் என்ற சிந்தனையில் மேஜை மேல் வைத்து விட்டு நித்திரைக்கு போய் விட்டேன். 



திங்கக்கிழமை  செயலர் அலுவலகத்தில் சென்று விசாரித்த போது அவர்கள் தான் அனுப்பி உள்ளனர் என கூறினர். கல்லூரி வேலைக்கு  சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக அனுப்பிவிட்டு எந்த முன்னறிவிப்பும் இன்றி வீட்டுக்கு அனுப்பின போஸ்டு மாதிரி,  நானும் தபால் போஸ்டாக  அனுப்புவமா என்று தோன்றியது, ஆனால் நான் என்ன தவறு செய்தேன், எதற்கு கோழையை போன்று இருக்க வேண்டும் என்று கடிதத்தையும் எடுத்துக்கொண்டு செயலர் அருட் திரு புஷ்பராஜிடம்”என்னை வேலையை விட்டு போகச் சொல்லும் காரணம் என்ன என்று அறியலாமா” என்றேன்.  அதிகார உச்சத்தில் கத்திகுளறி,  நீ மாணவர்களிடம்  கோபப்பட்டாய் , நீ சரியாக வகுப்பு எடுக்கவில்லை , உன்னை மாணவர்களுக்கு எளிதாக அணுக இயலவில்லை என நாய் கத்துன மாதிரி கத்தினார். அத்துடன் யாரோ முக்கிய நபர்களை வகுப்பில் கிண்டல் அடித்ததாகவும் கூறினார். 



இது என்னடா புதுக்கதையாக உள்ளது, விசாரிக்காமல் தண்டனையும் தந்து விட்டு குற்றங்களை தேடி ஒட்டுகின்றனர் என நினைத்துக் கொண்டு நான் இந்த எந்த தவறும் நான் செய்யவில்லை. ஒரு விசாரணை வைத்தால் என்னால் நிரூபிக்க இயலும் என்று கூறி வெளியேறி விட்டேன். 




மறுபடியும் ஒரு நம்பிக்கை இருந்தது. கல்லூரியில் 11 வருடங்கள் இதுவரை எந்த குற்றம் விசாரணையிலும், ஒழுங்கீனத்திலும் கேள்விக்கு உட்படாதவள். இதுவரை இருந்த முதல்வர்கள்,  செயலர்கள், அதிபர் தந்தையர்கள் என எவரிடமும் முரண்படவோ, கோபத்திற்கு உள்ளானதோ இல்லை. மிக முக்கியமான தருணங்களில் துறை சார்ந்து பல விடயங்களை நிர்வாகத்திடம் பேசி வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்றுள்ளேன். 


ஐந்து வருடம் முன்பு கல்லூரி அரசு ஊதியம் பெறுகிறவர்கள் நிர்வாகத்துடன் முரண்பட்டு போராட்டம் என இருந்த போது, சுயநிதி ஆசிரியர்கள் 10 பேரை வைத்து சுயநிதி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நிர்வாகத்துடன் செயல்படும்படி; பேராசிரியர்களை திரட்டவும் என்னை பயன்படுத்தும் அளவிற்கு நிர்வாகத்திற்கு நம்பிக்கையாகத் தான் இருந்தேன். அதில் என்னை எக்சிகுட்டீவ் உறுப்பினராக பயன்படுத்தி உள்ளது நிர்வாகம்.  




கல்லூரி நூற்றாண்டு கொண்டாடும் போது என் புத்தகங்களை வெளியிட்டு ’சாதனையாளர் பேராசிரியை’ என்ற விருதை பெற்றுள்ளேன். கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடிய போது என் தலைமையில் காட்சி ஆவணங்கள் உருவாக்கம் நடந்தது. இதுவரை துறையில் நடந்த மாணவர்கள் சார்ந்த பயணம், பயிற்சி பட்டறை என நூற்றுக்கு மேல் முன் நின்று ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்துள்ளேன். இதுவரை துறை தலைவர்களாக இருந்தது பாதிரியார்கள். அவர்களிடமும் வேலை செய்வேன் என்ற நல்ல பெயர் மட்டுமே எடுத்துள்ளேன். யாருடனும் முரண்பட்டது இல்லை.


 

கடந்த வருடம் துறைத்தலைவர் ஆக்கி விட்டு, அப்போது இருந்த முதல்வர்  அருட் திரு மரியதாஸ் எஸ்ஜெ. கொடுத்த  ஏச்சுப்பேச்சுக்கு  பயந்து ஒரே வருடத்தில்  தலைவர் பதவி வேண்டாம் என நானே கேட்டு ஒதுங்கி இருந்து கொண்டேன். தலைவராக இருப்பதை விட கற்பித்தலில் தான் எனக்கும் ஈடுபாடு இருந்தது. அவர்கள் எதிர் பார்க்கும் போல என்னால் வளைந்து, குனிந்து என்  பணிவை எனக்கு வெளிப்படுத்தவும் தெரியவில்லை.  நான் தலைவராக இருந்த போது மாணவர்களுக்காக 31 நிகழ்வுகள் நடத்தியுள்ளேன். மிக முக்கியமான கலைஞர்களை கொண்டு வந்து பயிற்சி பட்டறை நடத்திக் கொடுத்துள்ளேன்.






என் பணிமேல் மதிப்புள்ள மற்று நிர்வாக அருட் தந்தையர்கள்  ஆதரவு இருந்திருப்பதால் எந்த  பிரச்சினையையும்  நான் கண்டு கொள்ளவில்லை. ஒரு ஆசிரியையாக மிகவும் உற்சாகமாக மனத்திருப்தியுடன் பணி செய்து வந்தேன்.


 தலைமை பதவியில் இருக்கும் போது இன்னொரு துறை தலைவிக்கும் எனக்கும் சில உரசல்கள் வந்தது. அதையும் சுமூகமாக கல்லூரி நிர்வாகத்தின் அதிபர் தந்தையின் உதவியுடன் சமரசத்திற்குள் எட்டினோம்.  அன்றைய அதிபர் தந்தை ஹென்றி ஜெரோம் மிகவும்  பரிவோடு மரியாதையாக  நியாயமாக  நடத்தி இருந்தார்.  அப்போதைய முதல்வர் தந்தை எங்கள் துறை நாடக நிகழ்விற்கு அதிபர் தந்தையை அழைத்ததை மனதில் வைத்து உனக்கும் அதிபருக்கும் என்ன நட்பு என்றும் ஒருமுறை கேட்டு இருந்தார். ஆனால் எளிதாக பிரச்சினையை தீர்ப்பவர் என்பதால் அதிபர் தந்தையின் உதவியுடன் ஒரு பேராசிரியர் நாதன் முன்னின்று எனக்கும் கணிணி துறை பேராசிரியைக்குமான பிரச்சினையை ஐ தீர்த்து வைத்தார். எல்லாம் ஓய்ந்து இந்த வருடம் வெறும் துணை பேராசிரியையாக துறை தலைவி பதவியில் இருந்து விலக்கி விடப்பாட்டாலும்  மிகவும் அமைதியாக  என் பணி சென்று கொண்டு இருந்தது. 


ஆனால் இந்த வருடம் தலைவராக இருந்த நபர் பல ஈனச்செயல்கள் மாணவர்களை வைத்து செய்து வந்தாலும்  பல அச்சுறுத்தல்கள் கொடுத்தாலும் அதை நிர்வாகத்திடம் கொண்டு செல்லவோ அதை ஒரு பொருட்டாகவோ நான் மதிக்கவும் இல்லை, அவை என் ஆசிரியை பணிக்கு  பாதிக்கவும் இல்லை. ஆனால் கடைசி ஒரு மாதம் என்னிடம் யாரும் பேசாது ஆனால் முதுகில் குத்துவது போல சில செயல்கள் செய்து முடித்து கொடுத்துள்ளனர் என்பதை கையில் கடிதம் வந்த பின்பு தான் தெரிந்து கொண்டேன். 

முதல்வர் தந்தையிடம் என் பேராசிரியர் அருட் சகோதரி மூலம் என் பக்கத்தை  தெரிவித்து விட்டேன். கடைசி நம்பிக்கையாக தற்போதைய அதிபர் தந்தை தான்  இருந்தார். அவரை சந்தித்த போது என் பக்க நியாங்களை பொறுமையாக கேட்டாலும், நான் வேண்டி கேட்ட  விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை.  “கர்த்தர் ஆசிர்வதிப்பார்” எனக்கூறி அனுப்பி விட்டார்.




எனக்கு அதிர்ச்சி தான், இருந்தாலும் 11 வருட பணியை முடித்து கொள்ள நான் தயாராக இருந்தாலும், என்னை பற்றிய புகார்களை நியாயமாக விசாரித்து என் பக்கம் எதிரணி என்ன சொல்கிறார்கள் என்று அறியவும் ஆவல் இருந்தது,  இது ஏதோ மர்ம படம் மாதிரி நான் மாணவர்களுக்கு பெரும் எதிரி என கட்டுக்கதை சொல்லி வெளியேற்றியது மட்டுமே என் வலுவை உடைப்பதாக இருந்தது.  இதனால் என் மனசாட்சிக்கு எந்த குற்ற உணர்வும்  தோன்றவில்லை என்பதால் நான் அமைதியாக இருந்து கொண்டேன்.. 



என் மாணவர்கள் இச்சம்பவம் அறிந்தது முதல், தினம் அழைத்து ஆறுதல் படுத்தினர். தற்போது படிக்கும் மாணவரக்ளும் அத்தனை கட்டுப்பாட்டையும் கடந்து எனக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்சப் வழியாக தங்கள் ஆதரவை  அன்பை தெரிவித்தனர். 


நான் இக்கல்லூரியின் அதே சபை கிறிஸ்தவள் .  கல்லூரிக்கு கொடுக்க வேண்டிய டொனேஷன்   10 ஆயிரம் ரூபாய் நிர்வாகம் கேட்கும் முன்னே மறுப்பில்லாது கொடுத்தவள் தான். என் மகன் படிக்கும் போது நான் கட்டணம் கட்டி தான் படிப்பித்தேன், கல்லூரியில் இருந்து வேலை , அத்துடன் கிடைக்கும் கர்வமான பாதுகாப்பு வாழ்க்கையை மட்டுமே எதிர் நோக்கினேன். 

கடந்த ஒரு சில மாதங்களாகவே வேலை கிடைக்காது, வேலையிடத்தில் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் நினைத்து ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால் நானும் அதே பாதிப்பிற்கு உள்ளான போது; என் அம்மா, தங்கை காலை இரவு என என்னை கைபேசியில் அழைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு ஒரு பயம்  வாழ்க்கையில் பெரும் பகுதியை வேலைக்கு என்றே இருப்பவள் ஏதும் செத்து தொலைத்து விடக்கூடாது என பயந்தனர். அப்படி சாக ஒன்றும்  நான் கோழை இல்லை.  நான் என் மன உறுதியை நினைத்துக் கொண்டேன்.

என் கல்லூரி நண்பிகள், நண்பர்கள் தொடர்ந்து எனக்கு தைரியம் பகிர்ந்தனர். என் மகன்கள் இதுவரை உழைத்தது போதாதா? ஆசிரியை பணியை விட்டு விட்டு வேறு துறையை தேர்ந்து எடுங்கள் என உற்சாகப்படுத்தினர். அமைதியாக நிம்மதியாக பிடித்தபடி பயணம் செய்யுங்கள் என அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். இனியும் ஓடிக்கொண்டு இருக்க வேண்டாம் என்றனர். இருவரும் அதே வாரத்தில் வந்து என்னுடம் ஒரு வாரம் தங்கி தைரியம்  பகிர்ந்தனர்.


நான் சிரித்துக் கொண்டே  தான் வெளியேறினேன்.எனக்கு தண்டனை கொடுப்பது மூலம் அத்தனை தனியார் துறை ஆசிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்க தான் அருட் திரு புஷ்பராஜ்  விரும்புகிறார் என்பதை அனைவரும் அறிந்து இருந்தனர். என்னை பொறுத்தவரை 10 வருடம் எனக்கு பாடதிட்டம் அமைப்பதில் இருந்து எல்லா பணியிலும் பயிற்சி கிடைத்து இருந்தது. என் குறிப்பிட்ட 11 வருட காலயளவில் அதற்கும் மீறின சேவையை தான் முன் வைத்து உள்ளேன்.

என் பரிந்துரையால் வேலை பெற்று எங்கள் துறையில் இருவர் இருக்க, நான்கு பேரும் சேர்ந்து இருந்து முதுகில் குத்தி வீழ்த்த நினைத்ததை தான் கொஞ்சம் வலியோடு  சிரித்துக்கொண்டு கடந்து போகிறேன். 



 என் தோழர்கள் என்னை போன்று பயப்படத் தேவையில்லை. எங்கள் ஊரிலே பல கல்லூரிகள் அவர்கள் படிப்பிக்கும் பாடங்கள் உண்டு,. என் பாடத்திற்கு தான் அருகில் கல்லூரி இல்லை. கர்த்தர் சொல்வது போல மனிதன் அப்பத்தால்(ஊதியம்) மட்டும் வாழ்வதில்லை அவர் வார்த்தைகளால்/ நம்பிக்கையால் வாழ்கிறான். அடிமைகளாக இருக்க ஆசிரியர்கள் பணி தேவையில்லை,, அறிவால் விளைந்த கர்வத்தில் அதன் பொருட்டு உருவான ஓர்மத்தில் ஆசிரியர்களாக வாழ்வோம். ஒரு வேலை கொடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அடிப்படையில் மனிதர்களாக இருக்க மாட்டோம் என்று நினைப்பவர்களை பணிந்து போகும்படி கர்த்தர் சொல்லி உள்ளாரா? 


கிறிஸ்தவ கத்தோலிக்க பெண்கள் நீதிக்காக தைரியமாக போராடுகிறவர்கள்.  நீங்கள் கிறிஸ்தவர்களா? உங்கள் குடும்பங்களை விட்டு , சேவை புரிய என வந்து விட்டு பெண்களை தண்டிப்பதை பொழுது போக்காக கொள்ளலாமா? 11 வருடம் வேலை செய்துள்ளேன் இந்நிறுவனத்திற்காக.  நன்றி என்று கூட சொல்வதை எதிர்பார்க்கவில்லை. எவனோ எழுதிகொடுத்த பேப்பரை வைத்துக் கொண்டு என்னை மிரட்ட நினைத்த உங்கள் கோழைத்தனத்தை எண்ணி  வருந்துகிறேன். 


எனக்கு வேலை என்பது வளரும் தலைமுறைக்கு இந்த சமூகத்திற்கு செய்யும் சேவைக்கான வாய்ப்பு மட்டுமே.  2014 கில் 16 ஆயிரம் ஊதியம் பெற்றேன். தற்போது 30 ஆயிரம் பெற்றிருந்தேன். பெருவாரி பணத்தை யார் யாருக்கோ உதவினேன், என் மாணவர்களிடம் விசாரித்தாலே அவர்கள் சொல்வார்கள், என் பலம் என் மாணவர்கள் தான். என் மாணவர்கள் வாழ்க்கையில் நன்றாக வர வேண்டும் என சிலபோது சில கட்டுபாடுகள் சொல்லியிருப்பேன். அதன் பொருள் என் மாணவர்களுக்கு தெரியும். ஒரு ஆசிரியைக்கு முதலாளி அவள் மாணவர்கள் தான். நீங்கள் தரும் கூலியல்ல. நீங்கள் கூலி கொடுப்பதால் உங்களுக்கு நான் அடிமையும் அல்ல. 


அருட் திரு மரியதாஸ் சொன்ன வார்த்தைகள் நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை, ஒவ்வொரு பதவிக்கு ஒரு மதிப்பு உண்டு. ஆசிரியை என்ற நிலையை விட்டு நான் ஒரு அங்குலம் கூட இறங்கமாட்டேன். பதவியுள்ள பாதிரிகள் என்றால் எங்கள் யஜமானர்கள் அல்ல. மனிதம் அற்ற கிறிச்தவத்தில் கர்த்தர் எங்கே உள்ளார்!



 என்னை ஆறுதல்படுத்தின பரிவான  வார்த்தைகளால் நம்பிக்கை தந்த மற்றைய எங்கள் கல்லூரி  பாதிரியார்களை வணங்குகிறேன், நன்றியோடு உள்ளேன். 

ஆனால் அருட் திரு புஷ்பராஜ் போன்ற ஆட்களை கர்த்தரின் பெயரால் மன்னிக்கிறேன்.  ஒரு சிறு நன்றி தங்களுக்கு வேலை செய்பவர்களிடம் இருக்க வேண்டும், உங்கள் கோலும் கைத்தடியும் கர்த்தர் கொடுத்தவை. உங்கள் அங்கிக்கு மதிப்பு கொடுத்துதான் அன்று அமைதியாக நின்றேன். கர்த்தர் அந்த ஆளுக்கு சமாதனமும் அமைதியும் கொடுக்கட்டும்.  எல்லாம் நீங்கள் நினத்தது மாதிரியே நிறவேறி விட்டது. ஆமேன்.