20 Jun 2021

அபூர் சன்சார்

சத்யஜித் ரே எழுதி இயக்கிய, 1959 ல் வெளிவந்த வங்காள மொழி திரைப்படம் ஆகும் அபூர் சன்சார்.  ’தி அப்பு’ முத்தொகுப்பின் மூன்றாம் பகுதி இது. (முத்தொகுப்பின் முதல் இரண்டு பாகங்கள் பதேர் பஞ்சாலி மற்றும் அபராஜிட்டோ.) பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் அபராஜிட்டோ என்ற பெங்காலி நாவலின் கடைசி பாதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.


அப்பு தன் தாயின் மரணத்திற்கு பிறகு தனிமையில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அப்புவின் நண்பன் புலு ஒரு உயர் வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இரு  நண்பர்களின் வாழ்க்கையின்  பார்வையும் வெவ்வாறாக இருந்தபோதிலும் அவர்கள் நட்பு தொடர்கிறது.  புலு, அப்புவின் கூர்மையான புத்திசாலித்தனத்திலும் நற்குணத்திலும் மதிப்புக் கொண்டவராக இருக்கிறார்.

புலு ஒருமுறை தனது உறவினர்கள் வீட்டு திருமணத்திற்கு அப்புவையும் அழைத்துச் செல்கிறார். திருமண நாளில், மணமகனுக்கு மன நோய் இருப்பது தெரிய வருகிறது. தந்தையின் எதிர்ப்பையும் மீறி மணமகளின் தாய் திருமணத்தை நிறுத்துகிறார். நடைமுறையில் உள்ள இந்து பாரம்பரிய கிராம வழக்கத்தின் படி, நியமிக்கப்பட்ட  நேரத்தில்  மணமகள் திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும்; இல்லையெனில் அவள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருக்க வேண்டியிருக்கும்.  இந்த இக்கட்டான சூழலில் அபுவிடம் மணந்து கொள்ள வேண்டுகின்றனர்.  முதலில் மறுத்தாலும் நண்பன் புலுவின் ஆலோசனையைப் பெற்று மணந்து கொள்ள ஒப்புக் கொள்கிறார் அப்பு.

 


ஒரு போதும் சந்தித்திராத அபர்ணாவை திருமணம் செய்து கொண்டாலும், அந்த உறவில் ஒரு ஒட்டுதலான உறவு உருவாகுகிறது.  அப்புவும்  தனிமையில் இருந்து விடுபட்டு அபர்ணாவுடன் கல்கத்தாவிலுள்ள தனது குடியிருப்பிற்கு  திரும்பும் அவர்களுக்கு இடையே ஒரு அன்பான உறவு மலரத் தொடங்குகிறது.


பணக்கார குடும்பத்தில் வளர்ந்தவரான அபர்ணா கணவனின் அன்பிலும்  காதலிலும் வறுமையிலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.  மேம்பட்ட வாழ்க்கையை வழங்க முடியாத நிலையாக இருந்தாலும், உண்மையான தீராத அன்பு அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை தருகிறது.  அபர்ணா வந்ததும் அப்பு இழந்த குழந்தைப்பருவத்தின் மகிழ்ச்சியை திரும்ப பெறுகிறார்.


தங்கள் மகன் காஜலைப் பெற்றெடுக்கும் போது, துரதஷ்டவசமாக,   அபர்ணா இறந்து விடுகிறார். அப்புவின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் மறுபடியும் சோகம் தாக்குகிறது.  இந்த நேரத்தில் அப்புவால் எளிதாக கடந்து வெளியே வர இயலவில்லை.  சுய பரிதாபம், அலைந்து திரிதல், வெறுப்பு, தனிமை  என துயர்மிகு வாழ்க்கையில் மூழ்கி போகிறார்.



முதல் கதை பதேர் பாஞ்சாலியில் ரயில்களை காண்பது அப்புவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அபராஜிட்டோவில் ரயில்  அப்புவைக் கவரவில்லை,  அதற்கு பதில் எரிச்சலை கொடுத்தது.   ஆனால் இறுதிப் படம் அபூர் சன்சாரில் ரயில் பயணம் சிலிர்ப்பை தருவில்லை.  வாழ்க்கையும் கொண்டாடும் படி இல்லை. ஆனால்  ரயிலை பயணங்களுக்கு சார்ந்து இருக்கும் சூழலில் இருக்கிறார்.

இரண்டாவது பாகத்தில் தாய் தனிமையில் இருந்தார்.  அபூர் சன்சாரில் அப்பு தனிமையில் அலைகிறான். தாயின் தனிமை போலல்லாமல், கைவிடப்பட்டதாக உணர்கிறார், தாய்க்கு வாழ்க்கை மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அப்பு உலகத்தையே வெறுக்கிறார்.

அப்புவை புத்திசாலியான மாணவனாக  கண்ட பார்வையாளர்கள்,  அபூர் சன்சாரில் ஒரு சிறிய குடியிருப்பில் வசித்து கொண்டு,  பொருத்தமான வேலை இல்லாது  ஒரு நாவலை எழுதிக்கொண்டு இருக்கும் கதாசிரியராக,  கிடைத்த  வாழ்க்கையில் திருப்தியடைந்து, தனது சுதந்திரத்தை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.

மனைவியின் மரணத்திற்கு குழந்தையே பொறுப்பு என எண்ணி குழந்தையை வெறுக்கும் அப்பு,  குழந்தயை சந்திப்பதை தவிர்த்து   தகப்பன் என்ற பொறுப்பை மறந்து பயணத்தில் நாட்களை கழிக்கிறார்.


அதே நேரத்தில் தாய் தகப்பனை இழந்த குழந்தை தனது தாய்வழி தாத்தா - பாட்டி வீட்டில் தறுதலையாக வளர்கிறது.  காஜலின் நிலையை கண்டு தாய் வீட்டு குடும்பத்தினரும் வருந்துகின்றனர்.

நண்பனின் வேண்டுதலுக்கு இணங்க, தன்னுடைய மகனை காண வருகிறார் அப்பு.  தன் சோகச்சுமைகளை களைந்ததாக தான் எழுதி வரும் காகிதைக் கட்டை மலைச்சரிவில் எறிந்து விட்டு   வாழ்க்கையின் யதார்த்ததை உணர்ந்து தனது மகனுடன் மீண்டும் ஒன்றிணைய முடிவு செய்கிறார்.

வெகுநாட்களாக தனது தகப்பனார் வருவார் என்று காத்திருந்த காஜல்,  தனது தகப்பனை  முதல் முறையாக பார்த்ததும், அவரை ஒரு தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை. தன் வெறுப்பை உமிழ்கிறான்.


இறுதியில், அவர் அப்புவை ஒரு நண்பராக ஏற்றுக்கொண்டு தனது தகப்பனுடன் கல்கத்தாவுக்குத் திரும்புகையில் அப்புவிற்கு  புதிதாக ஒரு வாழ்க்கை தொடங்குகிறது.

இத்திரைப்படத்தில் அபர்ணாவாக ஷர்மிளா தாகூர் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.  அப்புவாக நடித்த சௌமித்திரா சாட்டார்ஜியின்(Soumitra Chatterjee) இயல்பான நடிப்பை பற்றி எடுத்து சொல்லப்பட வேண்டியது. அவர் ஒரு சிறந்த ஒளிபதிவாளரும் கூட.

1959 ல் அகில இந்தியாவின் சிறந்த திரைப்படத்திற்கான ஜனாதிபதியின் தேசிய திரைப்பட விருது வென்றது.

லண்டன் திரைப்பட விழாவில்  பிரிட்டிஷ் திரைப்பட நிறுவன விருதுகள் பெற்றது.

1960 ல் சிறந்த அசல் மற்றும் கற்பனைத் திரைப்படத்திற்கான சதர்லேண்ட் விருது கிடைக்கப்பெற்றது.

14 வது எடின்பர்க் சர்வதேச திரைப்பட விழாவில் 1960 - சிறந்த வெளிநாட்டு படம் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (யுனைடெட் கிங்டம்) பரிந்துரைக்கப்பட்டவர் –

1962 - சிறந்த படத்திற்கான பாஃப்டா விருது பெற்றது.

32 வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான வரிசையில்  தேர்ந்தெடுக்க பட்டாலும் ஆஸ்கார் விருது பெறவில்லை.

1996 ஆம் ஆண்டில், தி வேர்ல்ட் ஆஃப் அப்பு மூவிலின் இதழின் "100 சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களில்" இப்படவும் சேர்க்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டில், திரைப்பட விமர்சகர் ரோஜர் ஈபர்ட் தனது "100 சிறந்த திரைப்படங்கள்" பட்டியலில் தி அப்பு முத்தொகுப்பை சேர்த்துக் கொண்டார்.

2002 ஆம் ஆண்டில், தி வேர்ல்ட் ஆஃப் அப்பு "தி நியூயார்க் டைம்ஸ் கையேடு டு எவர் மேட் 1,000 திரைப்படங்களுக்குள் இடம்பெற்றது.

2005 ஆம் ஆண்டில், தி அப்பு முத்தொகுப்பு டைம் பத்திரிகையின் ஆல்-டைம் 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

’அப்பு உலகம்’ உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தியது. கிரிகோரி நாவாவின் 1995 திரைப்படமான மை ஃபேமிலியின், இறுதி காட்சி அபூர் சன்சாரின் இறுதிக் காட்சியில் இருந்து நகல் எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜீன்-லூக் கோடார்ட், மற்றும் பால் ஆஸ்டரின் 2008 ஆம் ஆண்டு நாவலான மேன் இன் தி டார்க் ஆகிய படங்களில் ’தி வேர்ல்ட் ஆஃப் அப்பு’ பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அங்கு இரண்டு கதாபாத்திரங்கள் படம் பற்றி விவாதிக்கின்றன.

2012 ஆம் ஆண்டில் இந்த படம் சைட் & சவுண்ட் டாப் 250 பிலிம்ஸ் பட்டியலில்  235 இடத்தைப் பிடித்தது.

15 Jun 2021

அபராஜிட்டோ!

 சத்யஜித் ரே எழுதி இயக்கிய, அபராஜிட்டோ ,   பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் பெங்காலி நாவலான அபராஜிட்டோவின் கடைசி பாதியை அடிப்படையாக 1959 இல் வெளியான திரைப்படம்.  இது தி அப்பு முத்தொகுப்பின் இரண்டாம் பாகமாகும்.  முந்தைய படம் பதேர் பாஞ்சாலி (1955) முடிவடைந்த இடத்திலிருந்து இத்திரைப்படம் தொடங்குகிறது.

அபுவின் குடும்பம் வாரணாசியில், கங்கை நதிக்கு அருகில் ஒரு நகரில் குடியேறுகின்றனர்.  அப்புவின் தந்தை ஒரு பூஜாரியாக பணிபுரிந்து வர, தாயார் சர்பஜயா (கானு பாண்டியோபாத்யாய்) மற்றும் தந்தை ஹரிஹர் (பினாக்கி சென்குப்தா) ஆகியோருடன் வசிக்கிறான் பாலகன் அப்பு. பலபோதும் கணவரை இழந்த விதவைகளுக்கான பிரார்த்தனையில், பாடல்களில், சொற்பொழிவில் தனது தந்தை நேரம் செலவிடுவதை கவனிக்கிறான்.

அப்புவின் விருப்பம் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்பவரை அவதானிப்பது, நதிக்கரையில் நடக்கும் ஆசாரங்கள், மனிதர்களை கவனிப்பதில் கழிகிறது. இப்படி மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தில்  தகப்பனார்  ஹரிஹரின் திடீர்  மரணம் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.

ஒரு பணக்கார குடும்பத்தில் பணிப்பெண்ணாக தொடர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளார் அப்புவின் தாயார். ஆனால் அந்த வீட்டில் தன் மகனையும் வேலை செய்ய வைப்பதை கண்டு தனது மாமாவின் உதவியுடன் சொந்த  கிராமத்தில் உறவினர்களுக்கு அருகில் வசிக்க முடிவெடுக்கிறார்.


ஒரு பூஜாரியாக வேலை செய்து கொண்டு உள்ளூர் பள்ளியில் சேர்ந்து படிப்பில் சிறந்து விளங்குகிறான் அப்பு.  தலைமை ஆசிரியரும் அவன் மீது சிறப்பு அக்கறை காட்டுகிறார்.  உயர் கல்வி கற்க ஸ்காலர்ஷிப்புடன் கல்கத்தாவில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் சேர  தாயின் அனுமதி பெறுகிறான்.

அப்பு இல்லாத  வாழ்க்கை தாய்க்கு கடினமாக இருக்கிறது.  மகனின் நினைவாகவே  தாய்மையின்  மகிழ்ச்சி, தனிமை ஏக்கம் மற்றும் சோகம் ஆகியவற்றுடன் மல்லிடுகிறார் அப்புவின் தாயார்.  இதே நேரம் அப்பு நகருக்குச் சென்று, பள்ளி நேரத்திற்குப் பிறகு, ஒரு அச்சகத்தில் வேலை செய்யத் தொடங்குகிறான். படிப்பிலும் முழு கவனத்தையும் செலுத்துகிறான்.

தாய்க்கு,  மகனுக்கான ஏக்கமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன.  ஆனால் மகனுடைய படிப்பிற்கு தொந்தரவு ஏற்படாதவாறு தான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதையும் அப்புக்கு வெளிப்படுத்தவில்லை.  அப்பு தனது தாயின்  உடல்நிலை சரியில்லாததைப் பற்றி அறிந்ததும் கிராமத்திற்குத் திரும்புகிறான்.  ஆனால்  தாய் இறந்துவிட்டதைக் கண்டு மனம் உடைந்து போகிறான்.

அப்பு முன் இரண்டு கேள்வி எழுகிறது. தனது கிராமத்தில் பூஜாரியாக பணியை தொடர்வதா அல்லது நகரத்திற்கு சென்று கல்வியை  தொடர்வதா?  தாயின் சாம்படன் கொல்கத்தாவில் இறுதி சடங்குகளை செய்து கொள்கிறேன்  என்று மீண்டும் தனது பயணத்தைத் தொடங்குகிறான்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கும் மட்டுமல்ல, ஒரு வரலாற்றை பதிவது, கல்வியின் பெருமையை சொல்வது என ஒரு ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் அடங்கிய திரைப்படம் இது.

ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ரா, இத்திரைப்படத்தில்  ஸ்டுடியோ செட்களுடன் டிஃப்யூசர்களில் பவுன்ஸ் லைட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.

ரே 1958 இல் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான கோல்டன் கேட் விருதுகளையும், இந்த படத்திற்கான விமர்சகர்கள் விருதையும் வென்றார்.

இந்த படம் 1967 இல் டென்மார்க்கில் இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய அல்லாத திரைப்படத்திற்கான போடில் விருதை வென்றது.

. இது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான செல்ஸ்னிக் கோல்டன் லாரலை வென்றது.

லண்டன் திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் திரைப்பட நிறுவன விருதுகளில் இது FIPRESCI விருது மற்றும் விங்டன் விருதையும் பெற்றது.

இது வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் மற்றும் விமர்சகர்கள் விருது உட்பட 11 சர்வதேச விருதுகளை வென்றது.

இந்த படம் 1959 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த வெளிநாட்டு நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

13 Jun 2021

பதேர் பாஞ்சாலி

 சத்யஜித்ரே இந்திய சினிமாவில் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.   இவர்  ஒரு இந்திய பெங்காலி திரைப்பட இயக்குனர்.  20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக  அறியப்பட்டு வருகிறார். கலை மற்றும் இலக்கிய உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெங்காலி குடும்பத்தில் கல்கத்தாவில் பிறந்து, விளம்பர துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஒரு முறை தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்ற போது பிரெஞ்சு திரைப்படத் தயாரிப்பாளர் ஜீன் ரெனொயரைச் சந்தித்திருந்தார்.   பிற்பாடு விட்டோரியோ டி சிக்காவின் இத்தாலிய நியோரலிஸ்ட் திரைப்படமான சைக்கிள் தீவ்ஸ் (1948) ஐ லண்டன் பயணத்தின் போது  பார்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.  இந்த அனுபவம்   ரேயை சுயாதீன திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடச் செய்தது.

திரைப்படம், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உட்பட 36 படங்களை ரே இயக்கியுள்ளார். ரே ஒரு புனைகதை எழுத்தாளர், பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார்.  தவிர வெளியீட்டாளர், இல்லுஸ்ட்ரேட்டர், காலிகிராஃபர், இசை அமைப்பாளர், கிராஃபிக் டிசைனர் மற்றும் திரைப்பட விமர்சகர்.

அவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கி மகிழ்ந்தது.  ரேயின் முதல் படம், பதேர் பாஞ்சாலி, 1956 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனித ஆவண விருது உட்பட பதினோரு சர்வதேச பரிசுகளை வென்றது.  அபராஜிட்டோ (1956), மற்றும் அபுர் சன்சார் (1959) ஆகியவற்றுடன் தி அப்பு முத்தொகுப்பை உருவாக்கினார்.

ரேயின் முதல் திரைப்படமான பதேர் பாஞ்சாலி (1955) ஒரு எளிய குடும்பத்தின் கதை சொல்லியது.  கிராமத்திலுள்ள ஒரு ஹரி என்ற பூஜாரி.  வெளியூருக்கு வேலை தேடிச்செல்கிறார். வீட்டில் மனைவி, மகன், மகள் , ஒரு வயதான பாட்டி அடங்கிய சிறு குடும்பம் வறுமையால் தவிக்கிறது.

குழந்தை துர்காவும் வளர்ந்து வருகிறார்.  அடுத்தவர்கள் தோட்டங்களில் இருந்து தனது வீட்டிலிருக்கும் பாட்டிக்கு கொய்யாப்பழம் பறித்து வந்து வைக்கிறாள். வீட்டிலுள்ள பூனைக் குட்டிகளையும், கோழிகளையும் கவனித்து கொள்கிறாள். அத்துடன் தனது தாய் கொடுக்கும் சின்ன சின்ன வீட்டு வேலைகளையும் செய்து பழகுகிறாள். அந்த ஊரிலுள்ள மட்டுப்பாவு வீட்டிலுள்ள பெண் துர்கா கொய்யாப்பழத்தை திருடினாள் என்று தாயிடம் கோபப்படுகிறார். வீட்டிலிருக்கும் பாட்டியை, துர்காவின் தாயார் ”என் மகள் திருட, நீ தான் காரணம்” என்று கூறி திட்டுகிறார்.  முதிர்தாயும் கோபத்துடன் வெளியேறி விடுகிறார்.

பின்பு அப்பு பிறந்துள்ளான் என்று கேள்விப்பட்டதும் குழந்தையை பாராமரிக்க வந்து சேர்ந்தவர் இவர்களுடனே தங்குகிறார்.  துர்காவின் தாய்க்கு தங்கள் வறுமை ஒருபுறம்.  முதிய தாயை தங்கள் அரவணைப்பில் வைப்பது பெரும் பாரமாக படுகிறது. முதிர் வயது தாயும் ஒரு நாள் கடினமாக வெயிலில் பசிமயக்கத்தில் இறந்து விடுகிறார்.


அக்குடும்பத்திலுள்ள வறுமைக்கும் அப்பாற்பட்டு துர்காவும்   அவளுடைய தம்பி அப்புவும் அந்த கிராமத்தின் சூழலில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். துர்கா  தனது தம்பி அப்புவை மிகவும் பாசமாக பார்த்துக்கொள்கிறாள்.  இருவரும் இரயில் பார்க்க செல்வது, மழையில் நனைவது கிராமத்து குழந்தைகளுடன் விளையாட்டு என நாட்கள் செல்கிறது.


துர்கா இப்போது வளர்ந்து விட்டார். பக்கத்து வீட்டு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் போது தனக்கும் நடவாதா என ஏங்குகிறார். அந்த பணக்கார வீட்டில் ஒரு முத்து மாலை காணாமல் போகிறது.  துர்கா தான் எடுத்து இருப்பார் என அந்த வீட்டு பெண் பழிசார துர்காவை அவள் தாய் அடித்து விசாரிக்கிறார்.  துர்கா தான் எடுக்கவே இல்லை என சாதித்து விடுகிறாள்.



அடுத்து மழைக்காலம் துவங்குகிறது. துர்காவும் அப்புவும் மழை நனைந்து வீடு வந்து சேர்கின்றனர்.  துர்கா அந்த மழையில் காச்சல் வந்து இறந்து போய் விடுகிறார்.  அக்காவை இழந்த அப்பு தனிமையாகிறான்.

பட்டணத்திற்கு போன தகப்பன் மனைவி, மகளுக்கு துணிமணிகளுடன் வீடு  திரும்புகிறார். மகள் இறந்ததை அறிந்து மனம் உடைந்து,  கிராமத்து வீட்டை விட்டு விட்டு நகரம் நோக்கி நகர்கின்றனர்.


 பொருட்களை அடுக்கி வைக்கும் போது துர்கா திருடி ஒளித்து வைத்து இருந்த முத்து மாலை அப்புவின்  கைகளில் கிடைக்கிறது.  தன் இறந்து போன அக்காவின் கவுரவத்தை எண்ணி முத்து மாலையை,  யாரும் காணாது குளத்தில் எறிந்து விட்டு பெற்றோருடன் பயணத்தை தொடர்கின்றான்.

இத்திரைப்படத்தில் ரே கதை சொல்லிய விதம், ஒவ்வொரு சட்டத்திற்கும் கொடுத்த முக்கியம், கதையை காட்சிகள் ஊடாக நகத்தியது, சில குறிப்பிட்ட  படிவத்தை வைத்து காட்சிகளால் சொல்லிய விதம் எடுத்து சொல்லக்கூடியது.


கதையில் நாயகம் பிம்பமோ , எதிர்மறை கதாப்பாத்திரங்கள் வழியாக கதாநாயகன் கதை சொல்லாது ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையுடன் கதை நகர்ந்தது.

அறிவு சமூகமாக இருந்த வங்கத்தில் இருந்த வறுமையையும் சொல்லிய் படம் இது.

படத்தின் காட்சிகள் காண்பவர்களின் மனதில் அசை போட வைத்த வித்தைகள், கதையின் போக்கு, அதன் முடிவு, பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.  முக்கியமாக மனித உறவுகளை காட்டிய விதம், பாட்டிக்கும் பேத்திக்குமான பிணைப்பு, அக்காவிற்கும் தம்பிக்குமான அன்னியோன்னியம், குடும்பத்தின் வறுமையால் பெண்கள் பாதிக்கப்படும் விதம் என கதை இந்திய சமூகத்தின் வறுமை என்ற நோயை பற்றி இயல்பாக சொல்லி சென்றது.

 வாழ்க்கையில் ஒரு போது மறக்க இயலாத திரைப்படமாக மக்கள் மனதில் பதிந்து விடுகிறது பதேர் பாஞ்சாலி.

பிபுதிபூஷன் பாண்டியோபாத்யாயின் நாவலைத் தழுவி ரேயால் வரையப்பட்ட திரைக்கதை தான் மேற்கு வங்க அரசின்  தயாரிப்பில், வங்காள மொழி நாடகத் திரைப்படமாக வெளிவந்தது.   படத்தின் தயாரிப்பு செலவை சுருக்கும் விதம்  பெரும்பாலும் அமெச்சூர் நடிகர்களைக் கொண்டு, அனுபவமற்ற ஆனால் திறமையான குழுவினரால் எடுக்கப்பட்டது.

மிக முக்கியமாக, கதையோடு இசைந்த ரவி சங்கரின் கிளாசிக்கல் இந்தியன் ராகங்களைப் பயன்படுத்திய ஒலிப்பதிவு  படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தது.  எடிட்டிங் துலால் தத்தா.  சுப்ரதா மித்ரா ஒளிப்பதிவாளராக இருந்தார்.  பதேர் பாஞ்சலிக்கு ஸ்கிரிப்ட் என்பது  ரேயின் வரைபடங்கள் மற்றும் குறிப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்டது.  பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த வரைபடங்களையும் குறிப்புகளையும் சினமாதேக் ஃபிரான்சைஸுக்கு நன்கொடையாக வழங்கினார்.

8 Jun 2021

மலையாளத் திரைப்படம் Kala (கள)! ஒரு பார்வை - ஜோ

 

Kala ’கள’ என்பதை  தமிழில் களைதல் எனப் பொருட்படுத்தலாம்.. மலையாளத்திரைப்படம்  ’கள’(Kala) பார்வையாளர்களிடம்  களையக்கூறுகிறது.  படித்தவன், பன்பானவன், பணக்காரன் என்ற ஈகோக்களை களைய சொல்கிறது இத்திரைப்படம்.

தன்னை மட்டுமே சிந்திக்காது, தன்னை சுற்றியுள்ள மனிதர்களை, இயற்கையை, மிருகங்களை எல்லாவற்றையும் பரிவுடன் பார்க்க கூறுகிறது. ஹீரோ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் சீரோ ஆகுவதும், ஒன்றுமே இல்லாதவன்,  தாழ்ந்த இனம் என்று நினைத்துக்கொண்டு கீழ்மைப்படுத்தப்பட்டவன் வெற்றிக்களிப்புடன் நாயகனாக மாறுவதுமே ’கள’ திரைப்படம்.

இயக்கம் ரோகித் வி எஸ் , திரைக்கதை ரோகித் மற்றும்  புஷ்கரன், இசை டான் வின்சென்று, ஒளிப்பதிவு அகில் ஜோர்ஜ், படத்தொகுப்பு சமன் சாக்கோ என ஒரு இளைஞர்களின் கூட்டுப்  படைப்பு.

பொதுவாக கதாநாயகன் ,  சமூகத்தை, நபர்களை திருத்தும் படியாக கதை அமைத்து இருப்பார்கள். இத்திரைப்படத்தில் அகங்காரம் மற்றும் நாசீசிஸ்டிக் ஆன முதன்மை கதாப்பாத்திரத்தை எதிர்மறை கதாப்பாத்திரம் திருத்துகிறது  . படத்தின் முடிவில் பிரதான கதாப்பாத்திரம் எதிர்மறையாவதும், எதிர்மறை கதாப்பாதிரம் கெத்தாக ஹீரோ மாதிரி நடந்து போவதுடன் கதை முடிகிறது.

இந்த திரைப்படத்தில் ஆங்கிலத்திரைப்படம் ஜோன் விக்கின் சாயல் பல இடங்களில் தெரிகிறது. தன்னுடைய நாயை கொன்றவனை பழிவாங்குவது போல இத்திரைப்படத்தில் நாயை இழந்தவன், தன் நாயை கொன்ற முதன்மை கதாப்பாத்திரம் ஷாஜியை பழிவாங்குவதே கதையாகும். முதல்நாள் மாலை முதல் அடுத்த நாள் மாலை வரும் வரும் நடைபெறும் சம்பவங்கலை கோர்வையாக தொகுத்துள்ளர்.

பொதுவாக நாயக பிம்பம் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்ளும் வல்லவர்களாகவும்இருப்பார்கள். இதில் நாயக இடத்தில் இருப்பவன் தன் சொந்த வீட்டில் திருடும் அளவிற்கு தரம் கெட்டவனாக இருப்பான்.

கதையின் பின்புலனாக அட்டப்பாடி( பாலக்காடு); தமிழ்நாடு கேரளா எல்லை.  அட்டபாடியிலுள்ள ஒரு நில உரிமையாளரின் மகன் ஷாஜி. கல்லூரி தோழியான காதல் மனைவி, ஒரு மகன் மற்றும் கறுப்பி என்ற செல்ல நாய் இவர்களுடன் பூர்வீக  சொத்தை கட்டிகாத்து வரும்  அப்பா லால்.  தன் தந்தையை வயதான நேரம் கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் அட்டப்பாடிக்கு குடி பெயர்ந்துள்ளனர்.   ஷாஜியின் மனைவிக்கு தோட்டத்திலுள்ள வாழ்க்கை அலுப்பாக இருக்கிறது.  மகனின் கல்விக்காக மறுபடியும் பெங்களூர் போக விரும்புகிறார்.

அந்த வீட்டின் அடித்தளமாக, குடும்பச் சொத்து. அதை அனுபவிக்கும் மகன், அதை ஆகமட்டும் கண்காணித்து வரும் அப்பா! அப்பாவை கண்டு பயப்படும் மகன். தந்தை நிலத்தின் நிறம் கறுப்பாக உள்ளார். மகன் ஆடம்பர, படித்த தலைமுறையை பிரதிநித்துவப் படுத்தும் வெள்ளை நிறத்தொலி. நீளமாக வளந்த முடியுடன் மிருகம் மாதிரியான பார்வையும், தான் பணக்காரன் என்ற அகபாவவும், கறுப்பு நாயும்.

அந்த நாய் திமிறும் போது இழுத்து பிடிப்பான்,  நாய் என்பதை ஷாஜியில் ஈகோவுடன் பொருத்துகின்றனர்.  அந்த ஈகோவின் திசையில் ஈகோவை கைவிடாது வாழும் ஷாஜி. தன்னை கருணையாக நடத்தவில்லை என்று குமுறும் ஷாஜி , தன் மகனிடம், “ நீ ஆண், அழக்கூடாது, நீ விரும்புவதை போராடி எடுத்துக்கொள் என்பான்.  அந்த குழந்தையோ அந்த பெரிய வீட்டில் அத்தனை பெரிய நிலங்களுக்குள், வெளியே வர இயலாது, தன் தந்தையின் கண்டிப்பு மட்டுமல்ல தாத்தாவின் கண் காணிப்புடன் வீட்டினுள்ளில் வளர்கிறது.

பணக்கார வீடுகளில் இருக்கும் பெண்களுக்கும் நிம்மதி இல்லை.  பிறந்த வீட்டுக்கு கூட போராடித்தான் போக வேண்டி வருகிறது. தன் மனைவியுடன் உரையாடும் போதும் சிகரட் புகையை அவள் முகத்தில் ஊதி தள்ளும் செயல்பாடு, அவளோ புகை பிடிக்க கணவனிடம் அனுமதி கேட்கும் மன நிலை, அவள் விரும்பாத போதும் காமத்தை கட்டுப்படுத்த இயலாது சயனிக்கும் ஷாஜி.   இப்படி கதை நகர்கிறது.

ஷாஜியின் தகப்பனார், உதவியாளர் மணியன் ஊடாக தோட்ட வேலைக்கு ஆட்களை வருவிக்கிறார்கள். பாண்டிகளை (தமிழர்களை)அழைத்து வந்துள்ளேன், ஊதியம் குறைத்து கொடுத்தால் போதும் என்று கூறிக்கொண்டு மூன்று பேரை அறிமுகப்படுத்துகிறான்.

அடுத்த ட்ராக்கில் வேலையாட்கள் நான்கு பேர். அதின் தலைமையில் உள்ள பழங்குடி மனிதன், இதுவெல்லாம் நமது நிலம், மலையாளிகள் வசப்படுத்தி வைத்து நாம் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளோம் என்கிறான்.

வீட்டிலுள்ளவர்கள் காலை உணவு எடுக்கின்றனர். அதே நேரம் வீட்டிற்கு வெளியே தொழிலாளர்களும் உணவு எடுக்கின்றனர். பணக்காரனுக்கும் ஏழைகளுக்குமான உணவு வேர்பாடுகள் காட்டப்படுகிறது.

 

வேலைக்கு வந்த தமிழர்களில் ஒருவன் மூறின் நாயை ஷாஜி கொலை செய்திருப்பான். அதற்கு பழிவாங்கவே தொழிலாளியை போன்று வந்திருக்கிறான் மூற். அவன் நிலத்தில் பன்றிகளை வேட்டையாடி தின்று பிழைத்து வருகிற ஒரு தமிழர்.  பன்றியை தனது ஈட்டியில் சொருகி சுமந்து செல்லும் அளவிற்கு வலுவானவன்.  ஆனால் ஷாஜி ஒரு காட்சியில் மூறை பன்றியை போன்று இழுத்து சென்று கொண்டு இருப்பான்..

கதையின் முடிவிற்குள் வந்து விட்டோம். ஷாஜி வெற்றி பெற்றானா தன்னை விட ஏழையான தன்னைவிட தாழ்ந்த இனமாக கருதப்படும் தமிழன் வெற்றி பெற்றானா?

மனைவி தகப்பன் முன்பே வைத்து ஓட ஓட அடித்து துவைத்து, என்னை விட்டால் போதும் என்று பணியும் மட்டும் சண்டை தொடர்கிறது. பணக்காரன், படித்தவன், மேல் இனம் இவர்களின் பொய்மை பேசும் , வஞ்சகமான ஈகோக்களை அடித்து நொறுக்கி, ஷாஜி வளர்க்கும் நாய்க்கும் விடுதலை தந்து தன்னுடன் அழைத்து செல்கிறான் மூற்.

ஷாஜி மனைவிக்கு தன் கணவர் மேல் இருந்த மதிப்பான அடையாளம் உடைக்கப்படுகிறது. தனது அப்பாவை இரத்தம் சொட்ட சொட்ட அடித்த மூறை ஷாஜி மகன் ஆராதனையுடன் பார்க்கிறான்.

இத்துடன் கதை முடிகிறது.

பார்வையாளனை இருக்கை நுனியில்  வைத்து படத்தை காட்டிய யுக்தி, ஒளிப்பதிவு, தொகுப்பு, அகலமான காட்சிதொகுப்பு  காட்சி  அழகியலுக்கு சான்று.

மலையாளி தமிழன் இன வேர்பாடு, ஏழைப் பணக்காரர்கள் அந்தரம் இவையை வன்மத்துடன் பார்த்துள்ளார்ளா? பார்வையாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

எதற்கு இத்தனை வன்முறை? நீண்ட சண்டைக்காட்சிகள்.  அரை மணிநேரம் இவர்களுக்குள் நிகழும் அடி தடி சண்டை  அலுப்பூட்டுகிறது. தமிழ் திரைப்படங்களில் கட்டுண்டு புல்லரிக்கும் மலையாளி பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காகவா? தமிழர்களை இளக்காரமாக அழைக்கும் ’பாண்டி’ என்ற சொல்லாடலை சமீபகாலத்திரைப்படங்களில் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

இரத்தம் தெறிக்க தெறிக்க எடுத்து வைத்துள்ள இத்தகைய திரைப்படங்கள் குழந்தைகள் பார்வையில் படாது இருந்தால் நல்லது

https://youtu.be/9b9MovPPewk

எம்.டியின் நாலுகெட்டு-புத்தக விமர்சனம்!

 நாலுகெட்டு எம்.டி வாசு தேவன் நாயரின் சாகித்ய விருது பெற்ற மலையாள நாவல் ஆகும். முதல் பிரசுரம் 1958ல் வெளிவந்தது.

 
இந்திய எழுத்தாளர்களில் மிகவும் மதிக்கப்படும் ஒருவரான எம். டி. வாசுதேவன் நாயர், ஆகஸ்ட் 15, 1934 அன்று கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கூடலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
 
 தனது நன்கு வடிவமைக்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் மலையாளத்தில் சிறந்து விளங்கினார். மென்மையான காதல் மற்றும் மனிதனின் சூழலால் விளைந்த இயலாமை, துன்பம் அதன் உணர்ச்சி தீவிரம் மற்றும் அன்பின் கணங்களை  சித்தரிப்பது வழியாக வாசகர்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டனர்.  தனது பல நாவல்களில் கேரளாவில் நிலப்பிரபுத்துவத்தை நுட்பமாக தனது எழுத்து ஊடாக எதிர்ப்பவராக இருந்துள்ளார்.
ஒரு மாஸ்டர் கதைசொல்லியான எம்.டி., 1995 ஆம் ஆண்டில் ஒரு எழுத்தாளரான மிக உயர்ந்த இலக்கிய விருது ஞானபீட புரஸ்காரத்தால் கவுரவிக்கப்பட்டார். அதற்கு முன்பு, அவர் கேரள மாநில மற்றும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி போன்ற பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
 
கேரள சாகித்ய அகாடமியின் தலைவர் பதவி மற்றும் துஞ்சன் மெமோரியல் டிரஸ்டின் தலைவர் உட்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பல முக்கியமான பதவிகளை அலங்கரித்துள்ளார்.   இவரது படைப்புகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளனர். கேரளாவின் மிகவும் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பிரதான சினிமா இயக்குனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
 
இந்த நாவலிலும் பிரதான கதாப்பாத்திரம் அப்புண்ணி என்ற சிறுவன்.   தனது தகப்பனை மூன்று வயதிலே இழந்து விடும் அப்பூ, தனது தாய் பாராமரிப்பில் ஏழ்மை நிலையில் வளர்ந்து வருகிறான். தாய் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். காதலித்து திருமணம் செய்தார் என்ற காரணத்திற்காக தங்கள் குடும்பத்தில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டவர். பெரிய குடும்பத்தில் வளர்ந்த பெண், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊர் பணக்கார வீட்டில் வேலைக்காரியாக வேலை பார்த்து வருவார்.
பணக்காரக் குடும்பம், பாரம்பரியம், ஜாதி என்று மேட்டிமை பாராட்டும் ஆட்களின் வீட்டின் அகத்திலுள்ள பிரச்சினைகளையும் அங்கு நடக்கும் போராட்டங்கள், போட்டி பொறாமைகள், பாலியல் அத்து மீறல்கள் மற்றும் அவர்களின் அநியாயமான வாழ்க்கை முறை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.

இத்தருணத்தில் சங்கரன் என்ற ஒருவரின் உதவிகளை தாய் பெற்று வருவார். இது மகனுக்கு பிடிக்காது . தாயை வெறுத்து தன் தாயின் குடும்ப வீட்டில் இருந்து கல்வி கற்று கொண்டு இருப்பான். சூழலுக்கும் இயலாமைக்கும் மத்தியில் தாய்மை   அல்லல்ப்படும் நிலை, தன் தகப்பனை கொன்றவனைக்கூட மன்னித்த மகனால் தன் தாயை ஏற்று கொள்ள இயlஅவில்லை. ஓரிரு நாட்கள் தன்னுடன் சல்லபித்த பெண்ணை நினைத்து உருகுவான். ஆனால் தன் தாய் இன்னொரு உறவை நாடுகிறார் என்றதும் மன்னிக்க இயலாத குற்றவாளியாகி  விடுகிறாள்.
 
ஒரு குழந்தை தன் பால்ய வயதில் வெறுப்பின், ஒதுக்குதலில், கேலி கிண்டல் பேச்சுக்கு மத்தியில் வளந்ததால், பிற்பாடுள்ள வாழ்க்கையிலும் தன்னை நேசிப்பவர்களை புரிந்து கொள்ள இயலாது; எல்லோரிடமும் வன்மம் கொண்ட மனிதராக மாறியிருப்பான் அப்புண்ணி.. மாளுட்டி அன்பாக ஒவ்வொரு முறை வரும் போதும் தெரிந்தே ஒதுக்கும் கல் நெஞ்சக்காரனாக இருப்பான் அப்பூ.
 
10 ஆம் வகுப்பு முடிந்ததும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் நல்ல வேலை கிடைக்கிறது.  பல வருடங்கள் கடந்த நிலையில் மறுபடி சொந்த ஊருக்கு வரும் போது தன் தாயின் குடும்ப ஆட்கள் வறிய நிலைக்கு ஆளாகியிருப்பதை அறிவான்.  தன் தாயின் இயலாமையை உணர்ந்து, தன் தாயை ஏற்று கொள்வதுடன்,  தங்கள் தாயின் பூர்வீக வீட்டை அப்புண்ணி வாங்கி, தன் தாய் மற்றும் தனது இரண்டாம் தகப்பனாருடன் வீட்டில் குடிபுகிர்வதுடன் கதை முடிகிறது.  நாலுகெட்டு என்ற கேரளப்பாணி பிரமாண்ட குடும்ப வீட்டை உடைத்து நமக்கான சிறு வீட்டு கட்டலாம் என்று தாயிடம் தெரிவிப்பான்.  வஞ்சகத்தின் பழைய நினைவுகளை அழித்து புது மனிதனாக உருமாறியிருப்பான் இளைஞர் அப்புண்ணி.
 

ஒன்ஸ் அகெய்ன்(Once Again)-திரைப்பட விமர்சனம்

 மனைவியை இழந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதர் சஜ்ஜன்  பெர்னாண்டஸ் (இர்பான் கான்) உடனான இலா (நிம்ரத் கவுர்) வின் காதலை சொல்லிய கதை ”தி லஞ்சு போக்ஸ்”. https://www.ceylonmirror.net/40318.html

அதன் தொடர்ச்சி போன்று இரண்டு நடுத்தர வயது மனிதர்களின் பிரிவு, விரக்தி, ஏங்குதல், வாழ்க்கையின் மூச்சுத் திணறலில் இருந்து ஆறுதலான கசப்பைக் கண்டுகொண்ட இரு மனிதர்களின் கதையை, இந்தியா பிறப்பிடமாக கொண்ட ஜேர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கன்வால் சேதி எழுதி 2018ல் வெளிவந்த திரைப்படம் ”ஒன்ஸ் அகெய்ன்”.

 

தாரா, கணவரை இழந்த ஒரு பெண், தனது மகனின் உதவியுடன் ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார்.   தனது குழந்தைகளின் நலனைக்கருதி கவுரமாக உழைத்து கட்டுகோப்பாக வாழ்ந்து வருகிறவர்.  விவாகரத்து செய்யப்பட்ட ஒரு வயதான நடிகர் அமர், 15 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கனவுகளின் நகரம் மும்பையில்  தனியாக வசிக்கும் ஒரு செல்வந்தர். மற்றும் பிரபலமான திரைப்பட நட்சத்திரம்.தாரா அமரைப் பார்த்ததில்லை; ஆனால் தாராவின் உணவகத்தில் இருந்து தினம் அமருக்கு உணவு சென்று கொண்டு இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஆரம்பித்த அவர்கள் தொலைபேசி உரையாடல்கள், ஒருவருக்கொருவர் மணிநேரங்களுக்கு பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர்கிறது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, அவர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அவர்களின் காதல் வெளி உலகிற்கு தெரிய வருகிறது.  இது தாராவின் மகனான தேவிற்கு பெரிய அவமானமாக உள்ளது. தாயின் தவறான நடத்தையாக எடுத்துக் கொள்கிறார். தாயும் மகனுக்குமான உறவு முற்றிலும் முறிந்து விட்டது. தான் எதிர்பார்த்த விடயம் முடிந்ததும், ஒரு கட்டத்தில் தாராவுடனான உறவு அமருக்கு தன் புகழுக்கான இழுக்கு என நினைக்க ஆரம்பிக்கிறார். தூய காதலுக்காக  எதையும் இழக்க தயாராக இருந்த தாரா உடைந்து போகிறார். ஒரு பக்கம் தான் நேசித்து பாசம் காட்டி வளர்த்த மகன் வெறுக்கிறார். அடுத்தோ மோகம் கொண்டு வீழ்த்தி விட்டு இனி தாராவில் இருந்து தப்பித்து போக முயலும் காதலன் அமர்.

 

தாராவாக ஷெபாலி ஷா மற்றும் அமராக நீரஜ் கபி ஆகியோர் கதாபாத்திரங்களாக உண்மையில் வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டு அற்புதமான நடிகர்களின் கைகளில் கிடைத்த  ஒரு நுட்பமான கதை. ஒவ்வொரு சட்டகத்திலும் அவர்களின் இயல்பான நடிப்பு அவர்களின்  திறமையை  நிரூபிக்கிறது.  தாராவின்  பெரிய அழகான கண்கள் அன்பைப் போலவே கோபத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அத்தனை சிறப்பு.

படத்தில் எல்லா நேரத்திலும் இசை இல்லை, பெரும்பாலும் மவுனத்தை நம்பியுள்ளதும் சிறப்பாக உள்ளது. திரை வசனங்களும் மிகக்குறைவு,  அர்த்தச்செறிவான சிறு உரையாடல்களுடன் கதை இதமாக நகர்கிறது.  இது யதார்த்த சினிமாவின் கூறுகள் அடங்கிய  ஒரு திரைப்படம்.  சிறந்த கேமரா வேலை: மும்பை இரவுகள் அழகாக பிடிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பரந்த காட்சிகள் பான் ஷாட்களூடாகவும்,  இரவில் தெருக்களில் சலசலப்பு, ஷெபாலியின் உணவக சமையலின் காட்சிகள் படத்தின் சிறந்த தருணங்கள். மிகவும் அமைதியான மனநிலையில் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல்கள் சிறப்பாக செய்யப்பட்டன. வித்தியாசமான நடனம் மாண்டேஜ்களை உள்ளடங்கிய திரைப்படம் இது. எடிட்டிங்கில் மற்றும் நடன அசைவுகளில் இன்னும் கூர்மையை கடைபிடித்து இருக்கலாம். இந்த படத்தில் காட்டப்படும் ஆழ்ந்த காதலின் காட்சிகள்,  சில தருணங்களில் பார்வையாளர்களை பேச்சில்லாமல் செய்து விடுகிறது.

தனிமையின் கருப்பொருளைக் கொண்ட படமாக இருந்தாலும் படத்தின் முடிவில் அமர்  தாராவை தேடி வந்தாலும் கெஞ்சி கேட்டுகொண்டாலும், நட்பை பேணிக்கொண்டு அவரவர் விருப்பங்களுடன் தனித்து பயணிப்பதே சிறப்பு என முடிவெடுத்தது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.  அமருடனான ஒரு சாதாரண உரையாடலில், கடலை பயப்படுவதாகக் குறிப்பிடும் தாரா, முடிவில் கடல் பயணம் மேற்கொள்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.  அமர்  எப்போதும் தான் வெல்ல வேண்டிய உயரங்களை பார்ப்பவர். சுய நல விரும்பியும் கூட!  ஒரே நேரத்தில் நல்லவராகும் கொடியவராக தோன்றும் கதாப்பாத்திரம்.

தாரா,  ஆழமான அன்பிற்கும் நேசத்திற்கும் மதிப்புக் கொடுத்து எங்கும் தங்கள் மரியாதையை இழக்காத வண்ணம், இனி ஒன்று சேர வேண்டாம் என முடிவெடுப்பது பெண்மையில் ஆளுமையை மிளிரச்செய்கிறது.  பெண்கள் பணத்திற்காகவோ, உணர்விற்காகவோ ஒரு போதும்  மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது என்று சொல்லிய படமிது.   வயதான காதலை பற்றிய அழகான சித்தரிப்பு கொண்ட இத்திரைப்படத்தை முழுமையாக ரசிக்கலாம்.  காதலில் வலிமை, பலவீனம், அன்பு மற்றும் மன்னிப்பும் உள்ளது என்று சொல்லிய திரைப்படம் இது.

https://www.firstpost.com/entertainment/once-again-movie-review-shefali-shah-neeraj-kabis-sweet-romance-would-have-been-richer-with-more-restraint-5084961.html

லஞ்ச் பாக்ஸ்(Lunch Box) : திரை விமர்சனம்

 கடந்த வருடம் மறைந்த இர்பான் கான் நடித்த திரைப்படங்களில் சிறந்த ஒன்று  லஞ்ச் பாக்ஸ் திரைப்படம்.

இளா ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி.  கணவர் அலுவலகம் செல்ல, தனது  மகளை பள்ளிக்கு அனுப்பி விடுவது,  சமையல், மாடிவீட்டு வயதான பெண்மணியுடன் சிறிய உரையாடலகள்  என காலத்தை கடத்தி வருகிறார்.

ஒரு போதும் கரிசனையாக நடவாத கணவர்,  அலுப்பான ஒரே வேலைகள், தன்னை புரிந்து கொள்ள யாரும் இல்லை என்ற நிலையில் ஒரு வகையான மன அழுத்தத்தில் வாழும் பெண் இளா. கணவரை கவரும் வகையில் சிறப்பாக சமைக்க வேண்டும், சிறப்பாக  உடுக்க வேண்டும், கணவரின் பரிவான ஒரு வார்த்தைக்கு ஏங்கும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார்.

கணவருக்கு கொடுத்துவிடும் மதியச் சாப்பாட்டு பாத்திரம் வேறு யாருக்கோ போய் சேர்வதை கண்டு கொள்கிறார் .  யார் உணவை சாப்பிடுகிறார்கள் என அறியும் நோக்கில் ஒரு நாள்   நீங்கள் யார்” என வினைவி பாத்திரத்தினுள் ஒரு துண்டு தாள் வைத்து அனுப்புகிறார்.

தான் இன்ன அலுவலகத்தில் பணி புரிகிறேன்,  விரைவில் வேலையில் இருந்து ஓய்வுப் பெறப்போகும் ஒரு கணக்காளர்.  நீங்கள் அனுப்பின உணவு மிகவும் ருசியாக இருந்தது, நன்றி என ஒரு துண்டுத் தாளில் பதில் அனுப்பி விடுகிறார்.

ஒரு போதும் பாராட்டுப் பெறாத, நிளாவிற்கு இந்த வார்த்தைகள் நெகிழ்ச்சியை தருகிறது. நெருடலாக இருந்தாலும் துண்டு பேப்பரில் வாசிக்கக் கூடிய ஓரிரு வார்த்தைகளுக்காக காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் நிளா.

தன்னுடைய வலிகள், கணவரின் புரக்கணிப்பு, தன் பெற்றோரின் நிலை, என தொடர்கிறது கடிதங்கள் .  அந்த பக்கம் இருந்தும் பல போது ஆறுதல்களும், சில போது தன்னுடைய சொந்த வாழ்க்கை சோகங்களையும் பகிர்தல் நடக்கிறது.

இந்நிலையில் கணவருக்கு தன் மேல் விருப்பம் இல்லை என்றும் திருமணத்தை மீறிய ஒரு தொடர்பு பேணுகிறார் என்றும் கண்டு கொண்ட  இளா துயரில் மூழ்கிறார்.  தான், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் தனக்கு யாரும் இல்லை என்றும், செத்துப்போக விரும்புகிறேன் என்றதும் ’நானிருக்கிறேன்’ என பதில் அனுப்புகிறார் சஜ்ஜன்.

ஒரு கட்டத்தில் தனக்கு கடிதம் எழுதும் ஆளை கண்டு விடத்துடிக்கிறது இளாவின் மனம். இருவரும் சந்திக்க முடிவு எடுக்கின்றனர்.   ஒரு உணவகத்தில் இருவரும் குறிப்பிட்ட நேரத்தில் கண்டு கொள்ள முடிவெடுத்து தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

குறிப்பிட்டது போல் குறித்த நேரத்தில் உணவகம் வந்து சேர்ந்த இளாவை தூரத்தில் இருந்த   சஜ்ஜன் எளிதாக அடையாளம் கண்டு கொள்கிறார்.   இளா தன்னை விட மிகவும் இளமையான பெண்,  அவருடைய தற்காலிக இயலாமையை, வருத்தங்களை தன்னுடைய சுயநலனுக்காக பயன்பாடுத்தக்கூடாது என்ற  மனசாட்சி சத்தத்திற்கு இணங்கி, தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளாதே திரும்ப சென்று விடுகிறார் சஜ்ஜன்.

ஏமாற்றப்பட்டதாக எண்ணி வருந்தினாலும் வயதான மனிதரின் பரிவான, கருதலான மனதை அறிந்த இளா, தனது மகளுடன் சஜ்ஜனைத் தேடி அவருடைய அலுவலகம் செல்கிறார்.   ஆனால் அவர் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து  விட்டார் என்ற தகவல் அறிந்து ஏமாற்றமாக திரும்பினாலும்,  சஜ்ஜனை மறுபடியும் தேடி கண்டு பிடிப்பதில் முனைப்பாக இருக்கிறார்.

சஜ்ஜனோ காதல் உணர்வு தந்த மகிழ்ச்சியில், பெருமிதத்தால் உருவான பூரிப்பில் தன்னுடைய மீதமுள்ள வாழ்க்கையை  பயணங்களால், இசையால், புது மனிதர்களை சந்திக்கும்  மகிழ்ச்சியில் திருப்தி கண்டு  தன் வாழ்க்கையை நகத்த்தி கொண்டு இருப்பார்.

வாழ்க்கையில் பக்குவம் அடைந்த மனிதரும்,  வாழ்க்கையின் துயரின் உச்சத்திலிருக்கும் வெகுளியான பெண்ணுக்கும் உருவான மெல்லிய, இதமான காதலை அதன் இயல்பான போக்கில் விட்டு, நேர்மையான மனித உணர்வுகள், அதற்குள் இருக்க வேண்டிய சுயநலமற்ற அன்பைப் பற்றி சொல்லி; மெல்லிய ஒரு புல்லாங்குழல் கீதம் போல தழுவிச்சென்ற திரைப்படம் இது.

இளைமை துள்ளலாக  இர்பான் கானின் பல படங்களை கண்டுள்ள பார்வையாளர்கள்,  பணியில் ஓய்வுப்பெற போகும்,  வயதான, பக்குவமான மனிதராக நடித்திருக்கும் பாங்கு மிகவும் சிறப்பு.  ஒரு கணக்காளராக அலுவலகத்தில் பணி புரியும் நபர்களின் இறுக்கமான முகம், உடல்மொழி அப்படியே அவதானித்து அழகாக நடித்திருப்பார்.

நேரில் ஒரு பெண்ணும் ஆணும் சந்திக்கவே இல்லை. அவர்களின் உன்னதமான உணர்வை மட்டுமே வைத்து ஆர்பாட்டமில்லாது   காதலை  கொண்டாடும் ஒரு கதையை சொல்ல இயலும் என இயக்குனர் நிரூபித்துள்ளார்.

இருவரும் சந்தித்தார்களா இல்லையா என சினிமா காண்பவர்களுக்கே விட்டு வைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் வெற்றியும் இந்த முடிவு தான்.

இளாவாக நிமட் கவுர் தன்னுடைய தனித்துவமான நடிப்பாற்றலால் கவர்ந்துள்ளார்.

கதை, இயக்கம் ரிதேஷ் பட்ரா.   இர்பான் கான், நிர்மட் கவுர், நவாசுருதீன் சித்திக் பிரதான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை மாக்ஸ் ரிச்டெர், திரைக்கதை மிக்கேல் சிம்மண்ட்ஸ், படத்தொகுப்பு ஜோன் எஃப் ல்யோன் சிற்ப்பாகவே செய்துள்ளனர்.

கேன்ஸ் திரை விழாவில் மே,2013 ல் வெளியிடப்பட்டது.  இந்தி திரைப்படமாக இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் வெளியான திரைப்படம் இது.   22 கோடி பட்ஜெட்டில் எடுத்த திரைப்படம். 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சென்றது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த விருதுகளை எழுத ஒரு தனி பதிவே வேண்டும்.

திரைக்கதை, நடிப்பு, இயக்கம், படத்தொகுப்பு என பல நிலைகளில் பல விருதுகள் பெற்ற சிறந்த திரைப்படம் இது. யதார்த்தவாத சினிமாவை மிகவும் அழகியலுடன் அடுத்துள்ளனர். இந்த படத்தின் தொடர்ச்சியை போன்ற ஒரு கதை தான் 2018 ல் வெளியான ”Once Again’ https://www.ceylonmirror.net/40279.html ஹிந்தி திரைப்படம்.

https://youtu.be/sK3R0rvnlPs

https://youtu.be/BYd_xm3yhN8

திரைப்படம் ’கர்ணன்'-சில சமூக சிந்தனைகள்!

 

மாரி செல்வராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில், கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் தானு தயாரிப்பில் 2021 இல் வெளிவந்த திரைப்படம் கர்ணன்.  லால் , யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கவுரி கிஷன் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாப்பாத்தித்தில்  தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் ஜோடியாக ராஜீஷா விஜயன் நடித்து இருந்தார்.    சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, செல்வா ஆர்.கே படத்தொகுப்பும் செய்துள்ளார்.

 அதிரடி காட்சிகள், பரபரப்பான பின்னணி இசை,  சிறப்பான நடிப்பு என எல்லோர் மனதிலும் இடம் பெற்றத் திரைப்படம் ‘கர்ணன்’.

முதல் பகுதியில்,  ஒரு கிராமத்து வாழ்க்கையை திரைப்படங்களில் இருக்கக்கூடிய சில சுவாரசிய புனைவுகளுடன் சிறப்பாக காட்டியுள்ளனர்.


பெருவாரி காட்சிகள் பார்வையாளரின் உணர்ச்சியை  தூண்டி ஒரு  சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது இரண்டாவது பகுதியில்.   காவல்துறை  அதிகார சித்திரவதைகளிலிருந்து தன் கிராமவாசிகளை மீட்டு அவர்களைப் பாதுகாக்கும் வலிமை மிக்க இளைஞனாக கர்ணன் கதாபாத்திரம் வடிவமைத்துள்ளனர்.  .

மாரி செல்வராஜின் வலுவான ஸ்கிரிப்ட் படத்தை சுவாரசியமாக  நகத்துகிறது.  இது வன்முறை படமா என்ற கேள்விக்கு இல்லை வன்முறை படமாக இருக்கக்கூடாது என பார்த்துப் பார்த்து எழுதியுள்ளேன் என்கிறார் மாரி செல்வராஜ்.  இது ஒரு போர் படம் என்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் மற்றும் தான் சந்தித்த சூழல்களை பின்புலமாக கதை எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார்.

இத் திரைப்படம் சாத்தான்குளம் கொலையை நினைவுப்படுத்தியதை யாராலும் மறுக்க இயலாது.   சினிமாவிற்கும் உண்மைக்கும் தொடர்பு இருக்க போவதில்லை.  இருந்தாலும் ஆழமான சினிமா அறிவு சார்ந்த கருத்துக்கள் ஒரு சாதாரண பார்வையாளனுக்கு இருக்க போவதில்லை . அப்படி இருக்கையில் அதீத கற்பனைவளம் கொண்டு பலவித ஆயுதங்களை பாவித்து, அதிகாரவர்கத்தை ஆயுதத்தால் அடக்குவதாக எடுத்து இருக்கும்  இது போன்ற  திரைப்படங்கள் சமூகத்திற்கு கொடுக்கும்  பங்கு என்ன? இத்திரைப்படம் தந்த ஊக்கத்தால் காவல் நிலையங்களை எளிதாக எடைபோட்டு  ஒரு இளைஞன் செயல்பட்டால்,உண்மையில் என்னவாகும்?


மனித உரிமை மீறல்களை அதிகார வர்க்கம் கைகொள்ளும் போது, பொதுமக்கள் எப்படியாக சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றது போல் இரண்டாம் பகுதி அமைந்திருந்தால் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் . அதை விடுத்து சில உரையாடல்கள் நேரடியாக ஜாதி அரசியலை நினைவுப்படுத்துகிறது. வெற்று புரட்சியை தக்கவைக்கிறது.

அடுத்து கதை நடக்கும் ஊர் பெயர் பொடியன்குளம் என்பது பலரை 1995 ல் திருநெல்வேலி பக்கம் நடந்த கொடூர நிகழ்வை நினைக்க வைத்ததை யாராலும் மறுக்க இயலாது.  இந்த திரைப்படம் வெளிவந்த பின்பு, பல பத்திரிக்கையாளர்கள் , சமூக ஊடக நபர்கள் அந்த கிராமத்தை நோக்கி படை எடுத்தனர்.

பல வித மிருகங்களை இத்திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. அதை பற்றிய கேள்விக்கும் கதை எழுதி இயக்கிய மாரிசெல்வராஜ் பதில் நான் ஒரு சில புனைவுகளை நினைத்து கதை எழுதியுள்ளேன்.  பார்வையாளர்கள் அதையும் மீறி சிந்தித்து இருந்தனர் என்கிறார்.

திரைப்படம் என்பது வெறும் ஒரு பொழுது போக்கு கருவியா?

தமிழகத்தை பொறுத்த வரையிலும் சினிமா என்பது கலை என்பதையும் கடந்து  பண்பாடும், சமூக அரசியல் வாழ்க்கையை நிர்ணயிக்கும்   பெரும் கருவியாக  உள்ளது.  சினிமா என்ற  கலை மனிதர்களை சிந்திக்க வைக்க வேண்டும், தனது அடையாளங்களை கடந்து மனிதர்களை மனிதர்களாக  மதிக்க செய்யவேண்டும்,  இனங்களுக்குள் துவேஷத்தை வளர்க்க கூடாது என்று மட்டுமே மனித நேயர்களால் கருத இயலும்.   மற்றபடி கர்ணன் சிறந்த கலைஞர்களை கொண்ட ஒரு வெற்றி படம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

கவிஞர் ஒ. என்.வியின் திரைப்பட பாடல்கள்

 கவிஞரும் விமர்சகருமான கே. சச்சிதானந்தன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'ஓ.என்.வி கவிஞர்களிடையே ஒரு மனிதநேயவாதி, மனிதநேயவாதிகள் மத்தியில் ஒரு கவிஞர்'.

ஒ. என்.வியின் இலக்கிய வாழ்க்கை ஏழு தசாப்தங்களாக நீடித்த பாரம்பரிய உள்ளதாகும்.  நவீன, பிராந்திய மற்றும் சர்வதேச சங்கமமாகும் கவிதை வரிகள் அவருடையது. 'ஓ.என்.வி கவிதைகளில்  ஒரு மேதைத்தனம் , மனிதாபிமான கவலைகள் இரண்டும் அவரது எழுத்துக்களில் பிரதிபலித்தன.

மலையாள மொழிக்கான சிறப்பு அதன் கவிதை நயமாகும். மலையாள மொழியே கவிதை போன்று மென்மையானது.    ஒ என்.வி குருப்பின் கவிதை வரிகளுக்கு இசை அமைத்த ஜாம்பவான்கள்  வயலார், தேவராஜன் மாஸ்டர், ஜாண்சன் மாஸ்டர், மற்றும் ரவீந்திரன் மாஸ்டர் உட்படும்  திரை உலகம்.

தமிழ் திரைப்பாடல்கள் ஒலிக்காத கேரளா முக்கு மூலை இருக்க போவதில்லை. அந்த அளவு கேரளத்து மக்கள் தமிழ் இசையோடு கலந்து இருந்தனர்.  கல்யாண வீடுகளிலோ,  தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலோ, பேருந்து பயண்ங்களிலோ  தமிழ பாடல்கள் இல்லாது அவர்களால் சிந்தித்து பார்க்க இயலாது. அந்தளவு தமிழ் திரைப்பட பாடலகளை ரசித்தனர்.

 

ம்லையாளத்திரை இசைப்பாடல்கள் அந்த விதம் தமிழர்களில் கலராவிடிலும் மலையாளப்பாடல்களை தீவிரமாக ரசிக்கும்  தமிழர்களும் உண்டு.  ஓ என்.வி குருப்பின் பாடல்களை ரசிக்காது மலையாளத்திரைப்பாடல்களை கடக்கவே இயலாது..

ஓ.ன்.வி கடுமையான அகநிலை கவிதைகளிலிருந்து அண்ட பரிமாணத்தின் கவிதைகளுக்கு சென்றார்;  புராணக்கதைகளில் இருந்து அவர் உஜ்ஜயினி மற்றும் சுயம்வரம் போன்ற படைப்புகளாக  உயர்ந்தார்.  கலைக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான மோதலை உஜ்ஜயினியில் கையாள்கிறார்,  அதே போன்று சுயம்வரம் கவிதையில் iபெண்மையின் அவல நிலையை உணர்த்துகிறார்.

மலையாளத்திலும் சமஸ்கிருதத்திலும் தனது முதல் குரு ,   புகழ்பெற்ற மருத்துவரான  தந்தை எனக்குறிப்பிடுகிறார்.  தனது தந்தையின் அகால மறைவு 'நற்பகலில் சூரிய அஸ்தமனம்' போன்று, கவியின் வாழ்க்கையை இருளாக்கியது.   அங்கு கவிதைதான் தான் ஒரே ஆறுதல்.  தனது குழந்தைப் பருவத்தின் இருண்ட தனிமையில் கவிதை என்பது ஒரு ஒளியின் கதிர் ஆக இருந்துள்ளது ஓ. என்.விக்கு.

https://youtu.be/Aoa2t2nxEsk நிறங்கள் தன்........

கவிதை துக்கமான ஆத்மாக்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் ஓ.என்.வி. ஒரு கவிஞரின் வரிகள் பிரபலமடையும்போது வெறும் பாடலாசிரியர் என்று முத்திரை குத்துவதற்கான போக்கு உள்ளதையும் தெரிந்து இருந்தார்.  'ஓ.என்.வி கவிதைகள் உயர்ந்த இசைத் தரத்தைக் கொண்டிருந்தது,  அவ பழைய கருப்பொருள்களைக் கையாளும் போது ஒரு மறுமலர்ச்சியாளராக நீண்ட கதைகளாகவும்; இயற்கையைப் பற்றி எழுதினால் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தது.

https://www.youtube.com/watch?v=Zqi4Gb05bj4

கவிதை கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டும்; பின்னர் மட்டுமே உயரங்களை வெல்ல முடியும். இல்லையெனில் அது அலைகளில் சுழலும் நீர்நுரைகளாக மறைந்து விடும் என்கிறார் கவி. வேர்கள் எவ்வளவு ஆழத்தை ஆராய்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது பரவுவதற்கான வலிமையைச் சேகரிக்கும், இதனால் முழு வானமும் அதன் சொந்தம் என்று பெருமையுடன் சொல்கிறார்..

Idanaazhiyil Oru Kaalocha | Malayalam Film Song

கவிதை 'உருவத்தில் சிறியதாக ஹைக்கூ போன்றதும் என்றாலும்  அதன் வடிவத்தில் பெரிய மகாபாரதம் போன்றது என்கிறார்.   ஐம்பதுகளில், ஒரு வலுவான உலக அமைதி இயக்கம் இருந்தது,  இது இந்திய கவிஞர்களுக்கும் உத்வேகம் அளித்தது. உண்மையில் இது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக இருந்தது.  அது 'ஓ.என்.வி கவிதைகளையும் பாதித்தது மட்டுமல்ல ஊக்கப்படுத்தவும் செய்தது.

 

https://www.youtube.com/watch?v=cbEIvk_7-Bg  அருகில் நீ இருந்திருந்தால்

(தன் உயிர் தோழன் தேவ ராஜன் மாஸ்டரை பிரிந்து 12 வருடங்களுக்கு பின் சந்தித்த  நிகழ்வில் எழுதிய ஒரு அருமையான பாடலாகும் இது.   )

இடது அரசியலில் ஈடுபட்டவரான கவிஞர், தனிப்பட்ட கவிதைகள் முதல் பல்வேறு தலைப்புகளில்  ,  சூரியனுக்குக் கீழே உள்ள எல்லா கருப்பொருள்களிலும் எழுதினார். கவியின் வாழ்விற்கும் கலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.

அவரது கவிதைகள் உயர்ந்த இசைத் தரத்தைக் கொண்டிருந்தது.  பழைய கருப்பொருள்களைக் கையாளும் போது ஒரு மறுமலர்ச்சியாளராகவும், இயற்கையைப் பற்றி எழுதினால் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், தனக்கு ஏற்படும் எந்தவொரு கவிதை வடிவத்தையும் கருப்பொருளையும் தன்னிச்சையாக ஏற்றுக்கொள்ள கவிஞருக்கு சுதந்திரம் உண்டு என்றும் நம்பினார்.

O N V Kurupu shares Favorite songs | Manorama News

திரைப்படம் வைசாலி

ஒரு திரைப்பட பாடல் 'பயன்பாட்டு கவிதை'; மாறிய வடிவத்தை அடைகிறது என்கிறார்..  பல திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். 1500 கவிதைகள் உள்ளடங்கிய 21  கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ஏழு புத்தகங்களூம் வெளியிட்டுள்ளார். சுமார் 232 படங்களில்  1000 பாடல்களையும் மற்றும் நாடகங்கள் , ஆல்பங்களுக்காகவும் ஏராளமான பாடல்களையும் எழுதியுள்ளார். 1956ல் வெளியான ’காலம் மருன்னானு’என்ற திரைப்படத்திற்கான பாடல் வரிகளுக்கு இசையமைத்தது  பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜனின் மாஸ்டர் ஆகும். சிறந்த பாடலாசிரியருக்கான கேரள மாநில திரைப்பட விருது பன்னிரண்டு முறை வென்றுள்ளார். தேசிய விருது பத்மஸ்ரீ 1998 இல் பெற்றார்.

ஓ.என்.வி கலாச்சார அகாடமி

 தமிழ் கவிஞர் வைரமுத்து " தனது மெல்லிய மொழியுடன் தனித்து நிற்கிறார்” என்ற கருத்துடன் ஓ.என்.வி கலாச்சார அகாடமி விருது வழங்க முன்வந்தது.

யாரிந்த கவிஞர் ஓ.என்.வி!  ஒரு விழுமிய கவிஞர், விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர், புகழ்பெற்ற சொற்பொழிவாளர், புகழ்பெற்ற அறிஞர் மற்றும் தனித்துவமான கல்வியாளர்,  சமூக இயக்கங்களில்  பல நிலைகளில் செயலாற்றியுள்ளவர். ஸ்வராஜியம், தத்தம்மா போன்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளவர்.  கேரளா மக்களின் நவீன கவிதைகளின் அடையாளமாக அறியப்பட்டவர்.  இணையற்ற கற்பனை, படைப்பாற்றல் மற்றும் முற்போக்கான பார்வைகளால் மலையாள இலக்கியத்தில் அழியாத முத்திரையை விட்டுச்சென்றவர் தான் ஒ.என். வி குறுப்பு. இவருடைய பாடுபொருள் சாதாரண மக்களின் துயர்,  வாழ்க்கை சிந்தனைகள் உள்ளடக்கி, தனக்கான தனித்துவமான பாணியில் இருந்தது.  மலையாளத்தில் அவரது கவிதைப் படைப்புகள் சாதாரண மக்களின் இதயத்தையும் ஆன்மாவையும் தொட்டு, உத்வேகமாக மாற்றின.  குமாரனாசான், சங்கன்ப்புழாவிற்கு அடுத்து  மக்களால் அறியப்பட்டிருந்த  கவிஞர்களில் ஒருவராக இருந்தார்.  அதனால் மக்கள் கவிஞர் என அறியப்பட்டிருந்தார்.

கொல்லம் மாவட்டம் சவறாவில் 1931 மே 27 அன்று பிறந்தார்.   தனது எட்டு வயதில் நிகழ்ந்த தந்தையின் அகால மரணம் இவரை திருவனந்தபுரம் என்ற தலை நகரியில் இருந்து ஒரு சிற்றூரான கொல்லத்தில் கொண்டு சேர்த்தது.

கவிதைகளில் அவரது முதல் முயற்சி அவருடைய  பள்ளி நாட்களிலே தொடங்கியது. 1946 ஆம் ஆண்டு தனது 15 வது வயதில்  தனது முதல் கவிதைத் தொகுப்பு  ”முன்னோட்டு (முன்னுக்கு) ”  வெளியிட்டார்.  கவிஞரின் ஆரமபகால கவிதைகள் தேசபக்தி, பக்தி, பால்யம் தொலைந்த நிராசை உணர்வுகளின் பின்னணியில் எழுதப்பட்டது.

கவிஞர், தொழில்முறையில் ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்தார். டால்ஸ்டாயின் 150 வது பிறந்தநாளில் பங்கேற்க சோவியத் ஒன்றியத்திற்கு சென்ற இந்திய எழுத்தாளர்கள் பிரதிநிதிகள் குழு, யூகோஸ்லாவியாவில்  (1987) ஸ்ட்ருகா கவிதை விழா, அதே போன்று  பேர்லினில் (1998) உலக மாநாட்டு இவற்றில்  இந்திய பிரதிநிதி ஆக சென்றிருக்கிறார்.  சாகித்ய அகாடமியின் நிர்வாகக் குழுவில் ,கேரள கலாமண்டலத்தின் தலைவராகவும்  பணியாற்றியுள்ளார்.

சூரியனுக்குக் கீழே எதுவும் கவிதைக்கு அந்நியமானது அல்ல. தனக்கு ஏற்படும் எந்தவொரு கவிதை வடிவத்தையும் கருப்பொருளையும் தன்னிச்சையாக ஏற்றுக்கொள்ள கவிஞருக்கு சுதந்திரம் உண்டு என்றார் ஒ.என்.வி.

அங்கீகாரங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன.  1971 இல் கேரள சாகித்ய அகாடமி விருது, 1975 ஆம் ஆண்டில் கேந்திரா சாகித்ய அகாடமி விருது, 1981 இல் சோவியத் லேண்ட் நேரு விருது, 1982 இல் வயலார் ராம வர்மா விருதையும் வென்றிருந்தார்.

சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை தொடர்ந்து பன்னிரண்டு முறை வென்றுள்ளவர். இனி திரைப்பட பாடல்களுக்கு விருது பட்டியலில் தன்னை சேர்க்க வேண்டாம் எனக்கூறி ஒதுங்கினார். 1998 இல் உயரிய தேசிய விருது பத்மஸ்ரீயும் பெற்றார்.

தனது சொந்த தேசம் கேரளத்தின் நிலையை பற்றி பல விமர்சங்களும் வைத்திருந்தார்.  மற்றவர்கள் சுரண்டுவதற்கான அடிமைத்தனமான, அறிவுசார் பொருட்களை உற்பத்தி செய்யும் இடமாக கேரளா மாறிவிட்டது என்று கவலை கொண்டார்.

அடிப்படை கல்வி, ஒருவருடைய தாய்மொழியில் தான் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  தென்னிந்தியாவின் மொழி ’தமிழ்’ என்றே  பலர் நினைக்கிறார்கள். மலையாளம் உலகிற்கு ஒரு சாளரமாக மாற வேண்டுமென்று செயல்பட்டார். மலையாள மொழி கிளாசிக்கல் மொழியின் நிலையை அடையவும், கேரள கலாமண்டலம் ஒரு பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தைப் பெறுவதில் முக்கிய பங்கு ஆற்றியவர் ஒ. என்.வி குருப்பு.

ஒரு ஆசிரியராக தன் துறையை சேர்ந்த இளம் தலைமுறை ஆசிரியர்கள் ஒஎன்வி விமர்சனத்தில் இருந்து தப்ப இயலவில்லை.  ஆசிரியர் பணியில் ஒரு மணிநேரம்  கற்பிக்க நான்கு மணி நேரம் தயார் செய்ய வேண்டியிருந்தது . ஆனால் இன்று ஆசிரியர்கள் யு.ஜி.சியில் இருந்து கிடைக்கும் தங்கள் உரிமைகளுக்காக மட்டுமே பேரம் பேச ஒன்றுபடுகின்றனர் என்றார்.

மாணவர்களுக்கான ஆசிரியர்களின் பங்களிப்பு சந்தேகத்திற்குரியது .  இன்று, ஆசிரியர்கள் பணத்தைப் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண்டுள்ளனர், அவர்கள் ஓய்வுபெறும் போது ஒரு கல்லூரி திறக்கும் அளவிற்கு, பணத்தை சேர்த்து வைத்துள்ளனர் என்றார்.

மாணவர்கள் முதன்மையாக கல்வியை மதிக்க வேண்டும், அது அனைவருக்கும் கிடைப்பதற்காக அவர்கள் போராட வேண்டும்.  இன்று மாணவர்கள் மற்றவர்களின் வெறும் கருவிகள் ஆக உள்ளனர்.   அவர்களின் கண்கள் வெளிநாட்டு நாடுகளில் தான் உள்ளன, வெளிநாட்டில் குடிபுகிர்வது என்பது தான் அவர்களின் லட்சியமாக  உள்ளது.  மாணவர்கள் பாடகசாலைகளில் பல விஷயங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும், பின்னர் அவர்களின் பார்வையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் விரும்பினார்

கவிதைகளை பொறுத்தவரையில்  மனிதநேயம் என்ற கருத்தில்  வடிவமைக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஒரு திறமையான கவிஞர், தனது மரபு ரீதியான மொழியை அற்புதமான புதிய உயரங்களுக்கு உயர்த்துகின்றனர்.   அதனால் அனைவரும் கவிஞர்களை மதிக்க வேண்டும், ஆனால் கவிதைகளில் கவிதை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஓ.என் கிருஷ்ணகுருப் மற்றும் கே லட்சுமிகுட்டி அம்மா தம்பதியரின் மூன்று குழந்தைகளில் இளையவர், முதுமை காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி13, 2016 அன்று காலமானார்

கவிஞரின் பிறந்த நாளான மே 27 அன்று நடைபெறும் விழாவில் விநியோகிக்கப்படும் விருதுகள்;  ஓ.என்.வி கலாச்சார அகாடமியால் நிறுவப்பட்டது.  இந்த விருது, ரூ.3 லட்சம் பணப்பையை உள்ளடக்கியது.

2017 ல் முதல் ஓ.என்.வி இலக்கிய பரிசுக்கு பிரபல பெண் கவிஞர்-மற்றும் சமூக ஆர்வலர் சுகதகுமாரி தேர்வு செய்யப்பட்டார். அடுத்து 2018  ல் அக்கிதம் அச்சுதன் நம்பூரிசி, 2019 ல் பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், கடந்த வருடம் 2020 எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் லீலாவதி தேர்வாகியிருந்தார்.

கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞரும் பேராசிரியருமான டாக்டர் சேரன் ருத்ரமூர்த்தி ஓ.என்.வி அறக்கட்டளையின் முதல் சர்வதேச கவிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிட தகுந்தது

இந்த ஆண்டிற்கான ஒன்வி விருது, மறைந்த கவிஞர் ஓ.என்.வி.குரூப்பின் நினைவாக தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துக்கு புதன்கிழமை வழங்க இருந்தது.  ONV விருதுக்கு கேரளரல்லாத எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. விவாதங்களினால் விருதை ஏற்க வைரமுத்து மறுத்து விட்டார்.