30 Aug 2015

'கவர்னரின் ஹெலிகாப்டர்'- எஸ் கேபி கருணா

கவர்னரின் ஹெலிகாப்டர்'
'கவர்னரின் ஹெலிகாப்டர்' வம்சி பதிப்பகத்தில் வெளியாகியுள்ள புத்தகம் இது. சமீபத்தில் வாசித்த  சுவாரசியமான எழுத்து  நடை கொண்ட புத்தகம். இதன் புத்தக வெளியீட்டுகிற்கு பங்கு பெற்றபோது ஓர் புத்தகவும் வாங்கி திரும்பினேன்.  

வாசகர்களை வாசிப்பில் மயங்க செய்யும் எழுத்து நடை கொண்ட இப்புத்தகத்தை  ஒரே நாளில் வாசித்து முடிக்கலாம். 18 கட்டுரை-கதைகள் அடங்கிய 224 பக்கங்கள் அடங்கிய புத்தகம் இது. எழுத்தாளர் தன் வலைப்பதிவு ஊடாக வெளியிட்ட முதல் கதையை புத்தகத்திலும் முதல் கதையாக சேர்த்திருப்பது சிறப்பாக உள்ளது.

எழுத்தாளர் மறைந்த எழுத்தாளர் சுஜாதவின் தீவிர ரசிகராக இருந்துள்ளார் என்பதை இரண்டாவது கதை தெரிவிக்கின்றது. இவருடைய ஆதர்ச எழுத்தாளர் தற்போது கனடா நாடு ரொறொன்ரோவில் வசித்து வரும் பிரபல ஈழ எழுத்தாளர் அ. முத்து லிங்கம் முன்னுரை அளித்திருப்பது மிகவும் சிறப்பு. தனது முன்னுரையில் எழுத்தாளருக்கு எழுத்து இயற்கையாகவே கைகூடுகின்றது என குறிப்பிட்டுள்ளார். இவருடைய கதையில் எழுத்தில் சகல நுட்பவும் நிறைந்து உள்ளதாக அ முத்துலிங்கம் பறைசாற்றுகின்றார்.



புத்தக ஆசிரியர் தன்னுடைய 40வது வயதில் எழுத்தை ஒரு விளையாட்டாக துவங்கி உள்ளதாக  குறிப்பிட்டுளார். இருப்பினும் எழுத்தாளனுக்கு உரிய பொறுப்புடன் தான் எழுத விரும்புவதாகவே குறிப்பிட்டார் தனது ஏற்புரையில். 


கதையா கட்டுரையா என்ற விவாதம் கடந்து தன் நினைவில் நின்ற உண்மைக் கதைகளை  சில புனவுகள் கலந்து கட்டுரையாக;  இயல்பான மொழியில் எழுதியிருக்கும் சிறப்பு என்னை கவருகின்றது. பொதுவாக சில புத்தகங்களில் கதைகள் ஊடாக செல்லும் போது  அதன் நிகழ்வுகளில் மனம் லயிக்க பல தடைகள் எழுத்தில் வருவது உண்டு.  ஆனால் இப்புத்தகம்; வாசிப்பு என்பதை மறந்து நாம் அந்த சம்பவத்தில் நம்மை அறியாது உருகும், மயங்கும் அல்லது லயித்து  போகும் சூழலை  உருவாக்குகின்றது. 



கதைகள் வெறும் கற்பனை கதைகள் அல்லாது அதில் வாழ்க்கையும் அடங்கி இருப்பதால் ஓர் உயிரோட்டமான உணர்வை தருகின்றது. மேலும் கதைகளில் நாம் காணும் சின்ன சம்பவங்களிலும் நம் கலாச்சாரத்தின் அறம் பொதிந்து உள்ளது நம் சிந்தனையை மேம்படுத்துகின்றது. 

சாமந்தி போன்ற கதைகள்  கதையல்ல உண்மையான அரசியல் நிலைவரத்தை;  மண்ணின் மைந்தர்க இளிச்சவாயர்களாக மாற்றப்படுவதை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். 


சைக்கிள் டாக்டர் கதை காட்சிகள் சத்திய ஜித் ராயின் திரைப்படத்தில் சில காட்சிகள் மறுபடியும் நம் நினைவலகளில் புகுந்து  துன்பப்படுத்துவது போல் டாக்டர் நினைவுகள் நம்மை அறியாது வந்து செல்கின்றது. 

மதுரை வீரன் போன்ற கதைகள் மிகவும் மனித நேயமிக்க கதைகள். நாம் வாழும் சமூகம் இன்னும் ரொம்ப மோசமடையவில்லை என நம்பிக்கை கொள்ள வைத்த பல சம்ப்வங்கள் இடம் பெற்றிருந்தது.  ஆனாலும் இறந்தவர் நிலவரம் என்னவானது என மனம் கேட்டு கொண்டிருந்தது

பிரியாணி கதை, ரசித்து சிரித்து வாசித்த கதை. கதை ஆசிரியரின் ஆர்வக் கோளாறு பாராட்டப்பட வேண்டியதே. விளையும் பயிர் முளையிலே தெரியும் என சிறு குழந்தையாக இருக்கும் போதே எழுத்தாளரின் பார்வை, அறியும் ஆர்வம் தன்னை சுற்றி நிழலும் சமூகத்தை பற்றி  அறிய வேண்டிய ஆர்வம் கண்டு கொள்ளலாம். 

மரங்கள் போன்ற கதைகள் ஒரு படைப்பாளி முதலில் இயற்கை நேசிப்பவனாகவே இருப்பவனாகவே இருக்க இயலும். இயல்பாகவே இயற்கையுடன் ஓர் புரிந்துணர்வுள்ள ஆசிரியருக்கு மனிதர்களை அணுகுவதும் புரிந்து கொள்வதும்  பார்க்கப்பதும் எளிதாக அமைகின்றது.


எல்லா வாசகர்களையும் கவர்ந்த 'கவர்னரின் ஹெலிகாப்டர்' சுவாரசியமான  கதை என நான் எடுத்து சொல்வதற்கு இல்லை. ஓர் உண்மை சம்பவத்தை ஓர் கதை போன்று எழுதிய விதம் சிலாக்கிக்க தகுந்தது.  சம்பவங்களை தொகுத்த விதம் அருமை. கதை முடிவில் கவர்னரை பற்றி ஓர் இரு வார்த்தைகள் பதிந்து செல்வது எழுத்தாளரின் புத்தி சாதுரியத்தையும் காட்டுகின்றது.

அட்சயப் பாத்திரம் என்ற கதை இலங்கை தமிழர்கள் மற்றும்  தமிழக தமிழர்கள் உறவை பதிவு செய்து வைத்துள்ள அருமையான நிகழ்வு. மேலும் அவர்கள் போராட்ட குழு அரசியலை சொல்லாது சொல்லி சென்றுள்ளது.  .

எஸ் கே.பி பொறியியல்  கல்லூரியின் தாளாளராக இருந்து கொண்டு கடுமையான வேலைப்பளு மத்தியில் ஒரு புத்தகம் வெளியிட்டிருப்பது என்பது அவரின் வளமான பால்ய கால நினைவுகளின் வெளிப்பாடு என்று இருந்தாலும்  ஒரு சிறந்த படைப்பாளி ஒரு போதும் றைந்திருக்க இயலாது என்றும் வெளிப்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் உயரமான் வறண்ட கரும் பாறைகளில் இருந்து ஊற்றாக கொப்பளிக்கும் நீர், பூமியை வந்தடைந்து அருவியாக பாய்வது போல் அவரின் படைபாற்றலில் வாசகர்களை சிறப்பான சிந்தனைக்குள் சம்பவங்களுக்குள் அழைத்து செல்கின்றது இப்புத்தகம். ஒவ்வொரு கதையும் சிறந்த  உத்தியுடன்  சமூக அக்கறையுடன்; எந்த ஓர் அதிமேதாவித்தனவும் இல்லாது  இயல்பாக எளிமையாக அழகாக கவித்துவமாக அழைத்து செல்கின்றது  என்பதாக்கும் இதன் சிறப்பு. 

புத்தக வெளியீட்டில்  வாழ்த்துரைத்த வண்ணதாசன் தன் எழுத்தை பல இடங்களில் நினைவூட்டுவதாக குறிப்பிட்டார். அதே போன்று கவிஞர் கலாப்பிரியாவும் எடுத்து கூறவேண்டிய புத்தகம்  என குறிப்பிட்டார். வெறும் விளையாட்டாக வலைப்பதிவில் பதிந்து வந்த  பதிவுகள் புத்தகமாக மாற பதிப்பாசிரியர் பவா செல்லத்துரை மற்றும் அவருடைய மனைவி ஷைலஜாவின்  ஊக்கம்,    உறுதுணையாகியுள்ளது என புரிந்தது. 


 அ முத்துலிங்கம் கூறியிருப்பது போல் மாணவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். நிச்சயமாக என் மாணவர்களுக்கு இக்கதை அமைப்பை பற்றி கூற வேண்டும் என புத்தகத்தை மிகவும் கவனமாக என் நூலகத்தில் வைத்துள்ளேன். புத்தக ஆசிரியரின் வலைப்பதிவு  

புத்தகம் கிடைக்குமிடம்,புத்தகம்


29 Aug 2015

ஊரடங்கு உத்தரவு-புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு!


பி. என். எஸ் பாண்டியனின் புத்தகமாகும் 'ஊரடங்கு உத்தரவு'.  1979ல் மத்திய அரங்கேரிய ஓர் துயர் மிகு அரசியல் போராட்டத்தை பின்புலமாக கொண்டு  எழுதியுள்ளார்.  எந்த அரசியல் சார்பற்ற நிலையில் மிகவும் துல்லியமாக அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்த புத்தகம் என்பது இதன் சிறப்பாகும். இவர்  15 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கையாளராக பணிபுரிகிறவர் . வரலாறு மற்றும் தகவல்தொடர்பியலில் முதுகலை படம்பெற்றவர் மட்டுமல்ல . பல அரசில் ஆய்வுகளை மேற்கொண்டு பல பத்திரிக்கை மற்றும் இதழ்களில் எழுதி வருபவர் என்ற சிறப்பும் உண்டு.




 பிரஞ்சு நாட்டின் ஆளுமையில் இருந்த  பாண்டிச்சேரி, இந்திய சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து 1954 ல் தான் சில வரையறுக்கப்பட்ட திட்டத்துடன் இந்தியாவுடன் இணைந்தது. 1979ஆம் ஆண்டு, பாண்டிச்சேரியை இந்திய மாநிலங்களுடன் இணைக்கும் திட்டத்துடன் அன்றைய  பாரத பிரதமர் மொராஜ் தேசாய் பேச, அதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் வண்ணம் எழுந்த மக்கள் போராட்டம் அதை தொடர்ந்து நிகழ்ந்த  கலவரம் பின்பு அது அரசியலாகி  பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையை  பற்றி விலாவரியான விளக்கத்துடன் தொகுக்கப்பட்ட புத்தகம் ஆகும் இது.





1947ல் இந்தியா ஆங்கிலேயரின் ஆளுகையில் இருந்து சுதந்திரம் பெற்றிருந்தாலும் 1954 நவம்பர் 1 ஆம் தியதி தான்  பிரஞ்சு ஆளுகையில் இருந்து இந்தியா நாட்டுடன் யூனியன் பிரதேசமாக இணைகின்றது. புதுச்சேரியின் தனிதன்மை காக்கப்படும் மக்கள் விரும்பினால் ஒழிய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கலுடன் புதுச்சேரியை இணைக்க போவதில்லை  என நேரு தலைமையிலுள்ள இந்திய அரசாங்கம் கொடுத்த உறுதி மொழிக்கு மொராஜி தேசாய் சவால் விடுகின்றார். அவர் விருப்பத்திற்கு அன்றைய தமிழ முதல்வர் உதவதும்  இக்கலவரத்திற்கு  பின்புலமாக அமைகின்றது.


மொராஜி தேசாயின் கருத்துப்படி சிறு மாநிலங்கள் நாட்டிற்கு செலவினங்களை கூட்டுகின்றது என்பதாகவே இருந்தது.  பாண்டிச்சேரியில், மக்கள் ஆட்சி துவங்கிய முதலே அதிகாரப் போட்டியால் ஸ்திரதன்மையற்ற ஆட்சி நடைபெறுகின்றது. பின்பு அதிமுக தலைமையில்  ராமசாமி, பாலா பழவனூர் போன்றோர் ஆட்சி செய்யும் வேளையில் மறுபடியும் ஆட்சி மாற்றத்தை சந்திக்கின்றது.  இம்முறை மத்திய அரசு கவர்னர் ஆட்சியை அமல்ப்படுத்துகின்றது. மத்தியில் அவசரகாலசாட்டம் பிறப்பிக்க பட்ட நிலையில்  புதுச்சேரியில் ஆட்சி ஆளுனரின் கட்டுப்பாட்டில் 5 வருடங்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கின்றது.  இப்படியான சூழலில் அன்றைய பாரத பிரதமர் மொராஜி தேசாய் சென்னை வந்து திரும்பும் வேளையில்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்  தமிழ் நாடு, கேரளா, ஆந்திராவுடம், பாண்டிச்சேரியின் பிரதேசங்களை இணைக்கும் தேவை பற்றி கூறி செல்கின்றார்.   பல நூறு வருடங்கள் வெளிநாட்டவர்களில் ஆளுமையில் இருந்த புதுச்சேரி தன் தனித்துவமான கலாச்சரத்தை பேணும் நோக்கில் அந்நிய மாநிலங்களுடன் இணைய விரும்பவில்லை. மத்திய அரசின் தீருமானத்தை எதிர்க்கும் வகையில் குடியரசு தினத்தை புரக்கணிக்க முடிவெடுக்கின்றனர்.   அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள், பந்த் என  தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி கொண்டிருந்த பொது மக்கள் மீது ஆயுதப்போலிஸ் துணையுடன் அரசின் வன்முறை தாக்குதல் நிழழ்த்தப்படுகின்றது.  அந்த 10 நாட்கள்  பாண்டிச்சேரி வரலாற்றின் கறுப்பு தினங்களாக பதியப்படுகின்றது. சுதந்திர போராட்டத்தில் கூட தாங்கள் இப்படியான வன்முறையை சந்திக்கவில்லை என புதுச்சேரி மக்கள்  கூறுகின்றனர்.

 டி ராமசந்திரன் என்ற பாதுகாப்பு அமைச்சார் தன் பெண் ஊழியரான ராதாபாய் என்பவரை பாலியலாக துன்புறுத்தினார் என குற்றம் சாட்டப்படுகின்றார். ஆனால் கலவரம் பிற்பாடு இவரே மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பில் வருகின்றார். வழக்கறிஞராக இருந்து அரசில்வாதியாக மாறின பாலா பழனூர் போன்றோர் அரசியல்வாழ்க்கை அஸ்தமித்ததும் இக்கலவரத்துடன் தான். அரசியல்வாதிகள் பதவி போட்டியில் சிலர் சிறைக்கு செல்ல சிலர் சகுனிகளாக வலம் வர முடிவில் அவர்களே பதவியை அலங்கரிப்பதுடன் சுகமாக வாழ; கலவரத்தை காணச்சென்ற பொது மக்கள் கொல்லப்பட்டது கொடூர நிகழ்வாகும்.

கலவரத்தில் கொல்லப்பட்ட பாண்டுரஙன் ஒரு மின் தொழிலாளி ஆவார். எந்த அரசியலும் தெரியாத அவர் மனைவி பின்பு அரசு கொடுத்த பணியின் துணையால் தன் குடும்பத்தை வறுமையுடன் நடத்தி செல்வதையும் பதிந்துள்ளார் ஆசிரியர். அதே போன்று அக்கலவரத்தில் இறந்த இளைஞர் குடும்பம் எந்த உதவியும் பெறவில்லை. போலிஸ் தோட்டக்களும் கலவரத்திலும் பங்கு கொண்ட சாதாரண எளிய மக்களையை குறி பார்த்து செல்கின்றது.


செஞ்சி நாயக்கர்களில் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது  புதுச்சேரி.  1512ல் போர்துக்கீசியர் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். பின்பு டென்மார்க் நாட்டினரின் வணிக இடமாக உருமாறுகின்றது.  16ஆம் நூற்றாண்டு மத்திய வேளையில் அகபாத் நிசாமின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது.  வியாபாரம் செய்து வந்த  பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி,. ஆளுகை புரிபவர்களுக்கு    பணம் கடம் கொடுக்கின்றது. பணத்தை திருப்பித் தர இயலாத சூழலில் புதுச்சேரியின் சுங்கவரியை வசூலிக்கும் உரிமையை பிரஞ்சு பெற்று கொள்கின்றது.  பின்பு  1677 ல் மராட்டிய மன்னன் சிவாஜியின் ஆளுகைக்கு புதுச்சேரி வருகின்றது. பணத்தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியை ஆளுனரான ராஜாராம் விற்க முற்படும் போது புதுச்சேரியை டச்சுகாரர்கள் வாங்கி கொள்கின்றனர் . 1697ல் டச்சுகாரர்களீடம் இருந்து புதுச்சேரியை  பிரஞ்சுகாரர்கள் மீண்டும் வாங்கினர்.  1761ல் ஆங்கிலேயர் வசம் புதுசேரி வருகின்றது.  பின்னர்  கி. பி 1763 ல் மேற்கொண்ட  பாரீஸ் உடன்படிக்கை ஊடாக இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் உள்ள   தங்களுக்கு சொந்தமான இடங்களை மீட்டு கொள்கின்றது. பின்பு 1793 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகள் ஆங்கிலேயர்கள்  வசம் செல்கின்றது.  1816ல் ஆங்கிலேயர்கள் சில பகுதிகளை பிரஞ்சுகாரர்களிடமே திருப்பி கொடுத்து விட்டனர்.  [விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பாரதியார் அரவிந்தர் மற்றும்  வ வெ.அய்யர் போன்றோருக்கு அடைக்கலம் கிடைக்க உதவியதும் இவ்வகையாக அரசியல் கட்டுப்பாடுகளாகும்]

புகழ் பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன்,  முன்னுரை தந்துள்ளார். ஜூனியர் விகடன் ஆசிரியர் ப திருமாவேலனின் அணிந்துரை அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்  மற்றும் எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர் வெ பாலன் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

18 Jul 2015

புரக்கணிக்க வேண்டிய மாம்பழச் சங்க திருவிழா உதவல் நிகழ்வு

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஆண்டுதோறும் ஜுலை மாதத்தில் நடைபெறும் மாம்பழச் சங்க விழா  கடந்த 235 வருடங்களாக நடைபெறும் ஓர் நிகழ்வாகும். கிறிஸ்தவத்தை தழுவிய இந்து மக்கள் வருடத்தில் ஒரு முறையேனும் ஒன்று கூடி கொண்டாடும் நோக்கத்துடன் அறுப்பின் பண்டிகை என்ற பெயரில் துவங்கப்பட்டதாக கூறப்படும் திரு விழாவாகும் இது. தற்போது இந்த விழாவின் சிறப்பாக சொல்லப்படுவது அங்கு கூடும் ஆயிரக்கணக்கான ஏழை-எளியோருக்கு அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து வருவதாகும்.

கிறிஸ்தவ நம்பிக்கை கோட்பாடு பிரகாரம் வலது கரம் கொடுப்பது இடது கரம் அறியாது இருக்க வேண்டும் என்றே யேசு நாதர் கூறியுள்ளார். நாம் செய்யும் உபகாரங்கள் இன்னொருவரை அவமதிக்கவோ நம்மை அகங்கார நிலைக்கு கொண்டு செல்லவோ கூடாது என்பதே இதன் பொருள்.  ஆனால் இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை நேரடியாக கண்ட போது கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாட்டை  அவமதிப்பது போலவே தெரிந்தது. 

அங்கு பிச்சை எடுக்க வந்தவர்கள் ஏழை எளியோர் அல்ல அவர்கள் அரசின் எல்லா இனாமும் வளர்ச்சி திட்டங்களும் பெற்று சொந்த குடியிருப்புகளில் வசித்து வரும் எம் ஜி ஆர் காலனியை  சேர்ந்த குறவ இன மக்களே. இவர்களின் நோக்கவும் உதவி பெறுவதாக இருக்க வில்லை. தொழில் சார்ந்த பிச்சை எடுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடம் கொடுக்காது  பிச்சை இடும் மக்களுக்கு அச்சுறுதல் கொடுக்கும் வண்ணம் சண்டையிட்டு ,  தங்கள் இளவல்கள் கேளிக்கையில் அமர்ந்து  இருக்க; பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்துடன் ஆரவாரத்துடன் அமர்ந்திருந்தனர். உண்மையான தொழில் முறை பிச்சைக்காரர்கள் இடம் கிடைக்காது  பயந்து ஒடுங்கி பயந்து கொண்டு நின்றிருந்தனர். 

பிச்சை கொடுக்க வந்தவர்கள் கிறிஸ்தவ கோட்பாட்டுக்கு இணங்க தங்கள்  சொத்தின் பத்தில் ஒன்றோ அல்லது தங்கள் விளைவெடுப்பில் இருந்து  நல்ல ஒரு பகுதியோ அல்ல; மாம்பழச் சங்கம்  என்ற பெயரிற்கு இணங்க மாம்பழம் கூட கொண்டு வரவில்லை.  தமிழம் எங்கும் சிந்தி கிடக்கும் அரசின் விலையில்லா அரிசியுடன் வந்திருந்தனர்!
  

இன்றைய நிலைவரப்பிரகாரம் தமிழகத்தில் பல கிராமங்களில் 5 முதல் 35 கிலோ அரிசி இனாமாகவே மக்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் இவர்கள் உள்ளம் கைகளில் அள்ளி கொடுக்கும் அரிசி இவர்கள் பொய்மையான, உலகை ஏமாற்றும் வாழ்க்கையை  குறிக்கின்றது.   ஒரு பிடி அரிசியுடன் "உழைத்து சாப்பிடுங்கள் இரந்து சாப்பிடாதீர்கள் என  உபதேசித்த மூதாட்டியின் முகத்தில் அரிசியை திரும்பி எறிந்த சுவாரசிய நிகழ்வுகளையும் காண இயன்றது.

அரிசியை திண்-பண்டங்களை கொடுக்க வந்த இடத்தில் வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் வாக்குவாதத்தில் ஏற்படுவதும் சண்டை இட்டு கொள்வது சாதாரண நிகழ்வாக இருந்தது. குறவ  ஆண்கள்  கைகளின் கம்புடன் வந்துள்ளனர். மிரட்டி தட்டில் பணம் போட வைக்கின்றனர்.

இந்த நிகழ்வில் ஒரு பக்கம் இரவல் கொடுப்பவர்கள் ஆணவம் வாங்குபவர்கள் அடாவடித்தனமான நடவடிக்கைகள்  மத்தியில் அல்லல் பட்ட காவல்த்துறை அதிகாரிகள் நிலை தான் பரிதாபமாக இருந்தது. 


இந்தியாவில் நெடுநாள் நிலவிய பல மோசமான பழக்கவழக்கங்களுக்கு சாவு மணியடித்த மதம். கிருஸ்தவம். மாம்பழச்சங்க திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இது போன்ற கீழ்த்தரமான நிகழ்ச்சிகளுக்கு எந்த மதச்சாயவும் பூசாது ஒழிக்க வேண்டும்.  உன்னிடம் இரு உடை இருந்தால் உடையில்லாதவனுக்கு ஒன்றை கொடு என்றும் "நான் ஆண்வரின் வழியில் வர என்ன செய்ய வேண்டும்" என்ற போது உனக்குள்ள அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடு என்றே கூறியுள்ளார் யேசுபிரான்.  அரசிடம் இருந்து இனாம் அரிசியை பெற்று ஏழைகளுக்கு என்று ஏழை அல்லாதோருக்கு கொடுப்பதால் எந்த பிரயோசனவும் இல்லை.

ஒரு ஏழைத்தாய் மற்றும்  ஒரு பரிசேயன்  காணிக்கை இடுவதை முன் நிறுத்தி கொடுப்பதற்கான மனநிலையை பற்றியும் பைபிளில் கூறப்பட்டுள்ளளது. ஆகையால் கொடுப்பது "எவ்வளவு?, என்ன?" என்பதையும் விட மனநிலையும் முக்கியம். காணிக்கை என்ற பெயரில் தான் எல்லாம் உள்ள வசதிபடைத்தவனாகவும் ஆண்டவரின் நேரடி ஆசிர்வாதம் பெற்றவராகவும் பெறுபவரை மிகவும் கீழ்த்தரமாக எண்ணுவதும் பாபமாகும் மனிதநேயமான செயல் அல்ல. 

அங்கு ஐஸ் விற்று கொண்டிருந்த முதியவரிடம் பேசி கொண்டிருந்த போது ஒன்று அல்லது இரண்டு ரூபாய் மட்டுமே காணிக்கை கிடைப்பதாகவும்,கிடைக்கும் அரிசியை இந்த மக்கள் உணவகங்களில் விற்பதாகவும் கூறினார். புளியம் பெட்டி போன்ற கோயில் வளாகத்தில் பிச்சை எடுக்கும் பெண் அங்கு 100 ரூபாய் கிடைப்பதாகவும் இங்கு வந்தும் அமரவும் இடம் கிடைக்கவில்லை, தரவில்லை என வருந்தி கொண்டு நின்றார். 

அங்கு காணிக்கை இட்டு சென்று கடந்து சென்ற முதிய பெண்மணியிடம் இரவல் ஒரு பிடி அரிசியை பற்றி வினவிய போது அவரின் கொடுப்பவள் என்ற ஆணவவும் பெறுபவரை பற்றிய அக்கறையின்மை யும் புலன் பட்டது. 

பிச்சைக்காரர்களுக்கு உதவுகின்றேன் என கூறி மனித இனத்தை அவமதிப்பது சரியான முறையல்ல.  பாளையம் கோட்டை என்பது கள்ள ஊழியக்காரர்களின் கோட்டையாகும். ஆயிரங்களை ஊழியம் என்ற பெயரில் கொள்ளை இடுபவர்களுக்கு கொடுத்து விட்டு அரசு கொடுக்கும் இனாம் அரிசியை  பிச்சையாக கொடுத்து புண்ணியத்தை தேடலாம் என்று நினைப்பது இறைவனை ஏமாற்றுவதற்கு சமம்  ஆகும்.

பிரார்த்தான கூடாரங்கள் கட்டும் கிறிஸ்தவர்கள் பிச்சைக்காரர்களுக்கு குடியிருப்புகள் வேலைவாய்ப்புகள், பண்பான வாழ்க்கை சூழல் அமைத்து கொடுக்கலாம். காணிக்கை என்று கள்ள தீர்க தரிசிகளிடம் கொடுப்பவர்கள் ஒரு ஏழை குழந்தைக்கு பள்ளி/கல்லூரி குழந்தைகளுக்கு விடுதி கட்டணம் தேர்தல் கட்டணம் கல்வி கட்டணம் போன்றவை நடத்தலாம். பிச்சைக்காரர்களை தேடி வீதிக்கு வர வேண்டாம். கிறிஸ்தவர்கள் பெரும் பகுதி வேலை இல்லா திண்டாட்டம்,  வாழ்க்கை சூழல் அற்று பிச்சைக்காரர்களாக மாறி கொண்டிருக்கின்றனர். . ஶ்ரீதனம் என்ற பெயரில் பெண் பிள்ளை பெற்றவகளை தென் தமிழக கிறிஸ்தவர்கள் பல குடும்பங்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வருகின்றனர். பல கிறிஸ்தவ  பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்க வசதி அற்றி முதிர் கன்னிகளாக உள்ளனர். 

இவர்களுக்கு உதவலாம். மைதானத்தில் ஆள் சேர்த்து, காவலர்களின் உதவியுடன் நிகழ்த்தி வரும் இந்த உதவி வைபவம் வெறும் ஆசாரம் மட்டுமே. இந்த நிகழ்ச்சியால் கொடுப்பவர்களுக்கோ வாங்குபவர்களுக்கோ எந்த நல்லதும் நடக்க போவது இல்லை. இதும் வெறும் படம் காட்டும் காட்சிகள் மட்டுமே.  இஸ்லாமியர்கள் பணக்காரர்கள் திருமண வைபத்தில் தங்கள் ஏழை உறவினர்கள் குழந்தைகள் திருமண வைபவத்தையும் நடத்த அனுமதித்து உதவுகின்றனர். இது போன்ற அர்த்தமுள்ள உதவும் குணம் தான் தேவை. லஞ்சம் வாங்கிய பணம் அநியாயமான சம்பாதித்த பணம் போன்றவத்தையாவது ஏழைகளுக்கு கொடுத்து பாவத்தை கழுவலாம். அவையையும் பெரிய கொள்ளக்காரர்களுக்கு கொடுத்து கடவுள் கிருபை தேடுபவர்கள் அரசு அரசியை ஏழைகளுக்கு கொடுத்து புண்ணியம் தேட நினைப்பது கிறிஸ்தவர்களின் அவல நிலையை மட்டுமே உணர்த்துகின்றது. 


மத நிகழ்வுகள் சமுதாயத்தில் நல்லுறவிற்கு, சமத்துவ நிலை வளர  உதவ வேண்டும்.  தான் உள்ளவன் எதிரே நிற்பவன் ஏழை, இல்லாதவன் என்ற ஏற்ற தாழ்வை வளர்த்த கூடாது.  

12 Jul 2015

பெண்ணின் கருவறையும் கற்பகிரகவும்


நேற்று மருத்துவமனையில் கண்ட இளம் பெண்ணின் சிரிப்பில் இருந்த சோகம் சில சம்பவங்களை நினைவூட்டி கொண்டிருந்தது. நானும் அத்தானுடன் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல். அவரோ டென்னீஸ் பார்ப்பது போல் பார்வையால் நேரம் போக்கி கொண்டிருக்கின்றார். நோயாளி தீவிர கவனிப்பு அறையில் இருப்பதால் குளிரூட்டப்பட்ட அறை, தனி கவனிப்பு என்று தூங்கி கொண்டிருக்கின்றார். நோயாளியுடன் இருப்பவர்களுக்கு தான் மருத்துவமனையின் பிரத்தியேக சத்தம், கழிவறை நாற்றம் என அல்லல் படவேண்டி வருகின்றது.  நோயாளிகளின் உறவினர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய இருக்கைகளும்   தொலை நோக்கு பார்வை இல்லாது வசதியற்ற  நிலையில் உள்ள தான் நம் இடுப்பு வலியையும் தாங்கி தான் இருக்க வேண்டியுள்ளது. 


மருத்துவ மனைகள் நோயாளிக்கு ஆனது மட்டுமல்ல என்ற நோக்கில் வருங்காலத்திலாவது  இயற்கை காற்று புகிரும் வண்ணம், சில செடி கொடிகளுடன் கட்டமைக்க வேண்டும். காணும் இடம் யாவும் உயிரற்ற சுவருகளும் அழுக்கு படிந்த நடை பாதைகள் மூச்சடைக்கும் நாற்றம் என எரிச்சல் கொள்ள வைக்கின்றது.   இவையும் தாண்டி சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் மைதானமாகவும் மருத்துவ மனை நடைபாதைகளை பயண்படுத்துவது விழிப்புணர்வு இன்மையை காட்டுகின்றது.

அந்த இளம் தாயின் தாய், தன் ஆதங்கத்தை மிகவும் நிதானமாக கொட்டி கொண்டிருந்தார்.   எதிர்பார்த்த நாட்களை விட பிரசவம்  3 வாரம் முந்திவிட்டதால் குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை எடுத்து வரை இயலவில்லை. முன்கூட்டி பிறந்த குழந்தை என்பதால் மருத்தவ தனி கண்காணிப்பில்  இருக்க வேண்டிய சூழல். தாய், பால் கொடுக்க மட்டும் சென்று திரும்புகின்றார்.   கடினமான பிரவ நாட்களில் ஒரு தாய்க்கு ஆறுதலாக இருப்பது தன் மார்போடு சேர்ந்து உறங்கும் குழந்தை தான். அக்குழந்தையின் அருகாமையும் அருகில் இல்லை என்பது தாயின் சிரிப்பையும் மீறி சோகம் கண்ணில்  ஓடுகின்றது. 

குழந்தையின் தாய்க்கு இப்படியான வருத்தம் என்றால் சேயின் தாய்க்கு தன் மகளுக்கு பிரசவத்தோடு கொடுக்க வேண்டிய கவனிப்பு, உணவு  கொடுக்க இயலவில்லையே என்ற வருத்தம். வீட்டில் இருக்கும் மருமகள் சமைத்து கொடுக்கும் மனநிலையில் இல்லையாம். மகனிடம் கூறின போது  நான் அண்ணியிடம் சொல்ல இயலாது நீங்கள் அப்பாவிடம் கூறி அண்ணனிடம் சொல்ல சொல்லுங்கள் என கூறி சென்றாராம். 

உறவின் மாட்சிமையில் நிலைகொள்ளும் நம் குடும்ப அமைப்பில் இது போன்ற மனப்பாங்குகள்  பொறுப்பின்மை உறவின் அர்த்தத்தை மறைக்க செய்கின்றது.   மகளை காண வந்த  மாமியார் வீட்டினரோ தங்கள் பாட்டிற்கு சில உபதேசங்களை போகும் வழியே சொல்லி மறைகின்றனர்.


இதே மாமியார் குழந்தை வளர்ந்து வரும் போது தன் வாரிசு என கொண்டாடுவதும் பெண் வீட்டார் ஒதுங்கி இருந்து பெண்ணின் சுகங்களை காணும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.   தன் வயதான நாட்களில் தன் மருமகள் தயவில்  சேவையும் மகன் உதவியுடன்  அதிகாரத்தில் பெறும் நிலையில் தான் உள்ளனர் . பெண் குழந்தைகள் அற்ற வெறும் மகன்களை மட்டும் வளர்க்கும் தாய்மார்கள் இரக்க குணத்தில் சிறிது பிந்தங்கி இருப்பதாகவே  சொல்கின்றனர். 

பொதுவாக முதல் பிரசவம் வரை மென்மையாக வளரும் பெண்கள் மனதில் வன்மம் வளரவும் முதல் பிரசம் காரணமாகின்றது. என்ன தான் காலாகாலம் கொண்ட முறை என்றாலும் பிரசவ நேரம் பிறந்த வீடு புகுந்த வீடு என்ற பாகுபாடு இல்லாது அளவற்ற அரவணைப்பு, அன்பு பெரிதும் தேவையாக உள்ளது.  ஆனால் நம் கலாச்சார சூழலில் முதல் பிரசம் என்பதை 'முறை' என்ற பெயரில் பெண் வீட்டார் தலையில் முளகரப்பதற்கும் பெண் வீட்டாரிடம் தங்கள் அதிகாரத்தை நாட்டவும் முறை பெற மட்டுமே பயண்படுத்துகின்றனர் எனபது மிகவும் வருந்த தக்கது. இது போன்ற சூழலை எதிர் கொள்ளும் பெண்களால் ஒரு கடமை என்பதை கடந்து அன்பால் நேசத்தால் மாமியாரை ஒரு போதும் நோக்க இயலாது. 

இவையும் போதாது என்று பிரசம் ஆன தாய்மார்களை மருத்துவ மனை நிர்வாகம் வழி பாதைகளில் கட்டில் போட்டு கிடத்தியிருப்பது பெரும் அவலம். பல பெண்களுக்கு பிரசம் பின்பு நரம்பு சம்பந்தமான நோய்கள், கர்ப்பபை தொற்று என பல நோய்களுக்கு உள்ளாகவும் இது காரணமாகின்றது. இது போன்ற சூழலை முன் கூட்டியை கண்டு தான் இறைவனை வழிபடும் தலமாக கற்ப கிரகத்தை உருவகப்படுத்தியுள்ளனர். நம் இறை நம்பிக்கை வழிமுறைகள் எல்லாம்  வாழ்க்கையோடு ஒட்டாது வெறும் ஆசாரமாகவே முடிவுறுவதும்   சமூக அவலம் தான்.

சமூக மாற்றம் என்பதை தனி நபர் விருப்பம், மாற்றம் என்பதை கடந்து    ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்றால் கணவருக்கு விடுப்பு மட்டுமல்ல உடன்  இருந்து கவனித்து  கொள்ளவும் பயிற்சி தேவை. பிரசவ நேரம் கணவன் அருகாமையை சட்டத்தால் நடைமுறைப்படுத்த வேண்டும். பிரசவம் என்பதின் வலியை பெண் மட்டும் ஏற்று கொள்ளாது ஆணும் சரிசமமாக பங்கிட்டு கொள்ளவேண்டிய சூழல் அமைய வேண்டும். பிரசம் என்பதை பெண்வீட்டார் கடமையாக பார்க்காது ஆண் வீட்டாரும் தங்கள் சுமையை ஏற்கும் சூழலுக்கு இறங்க வேண்டும்.

21 Jun 2015

“ஆர் என். ஜோ டி குருஸின் கொற்கை”


கொற்கை நாவல் கையில் எடுத்ததும் வாசித்து விடுவோமா என்ற அச்சத்தையும்  மிஞ்சி வாசிக்க வைத்தது விருவிருப்பான எழுத்து நடையும்  சுவாரசியமான கதையுமாகும்.  1914 ல் துவங்கி 2000 ஆண்டு முடிய 80 வருட கால மூன்று தலைமுறைகளின் கதை சொல்லும் ஒரு நெடுநாவல் ஆகும். கொற்கையில் வரலாற்று முக்கியம்,  அதன் வளமை,  பரதவர்களின் வாழ்க்கையை சொல்லும் கதைமாந்தர்கள்; முக்கியமாக கொற்கையில் குடியிருந்தவர்களும் பெரியதுறை போன்ற பக்கத்து ஊரில் இருந்து குடியேறியவர்கள் கோயில்பட்டி போன்ற ஊர்களில் இருந்து பிழைக்க வந்த நாடார் இனமக்கள் 25க்கும் மேற்பட்ட குடும்ப  மக்கள் கதை மாந்தர்களாக கொண்ட 1128 பக்கங்கள் உள்ளடங்கிய மாபெரும் நாவல் ஆகும் "கொற்கை". இலக்கிய பின்புலன் இல்லாத சூழலில் உருவாகியுள்ள இப்புத்தகம் ஜோ டி குரூஸின் அயராத உழப்பின் தன் இன மக்கள் மேல் கொண்ட தீராத நேசத்தின் தன் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவருடைய ஏக்கமும், தாங்கள் ஏமாற்ற பட்டதை எண்ணி வெகுண்ட அவருடைய கலங்கிய உள்ளவுமே இப்படியான ஒரு நாவலின்  உருவாக்கத்திற்கு காரணமாக இருந்துள்ளது. பரதவ இனத்தை சேர்ந்த மனிதர்,  ஒரளவு இன்னல்கள் இல்லாத ஒரு நிலையில் வாழும் ஓர் அதிகாரி அச்சமூகத்தில் புரக்கணிக்கப்பட்ட கடைநிலை மனிதனை எண்ணி வருந்துவது அவருடைய மனித நேயத்தையே காட்டுகின்றது. ஒரு மிகப்பெரும்  பின்  புலன் கொண்ட சமூகம் தன் நிலையில் இருந்து வீழ்ந்து அடையாளம் அற்று போக காரணமான இருந்து  காரணிகளை தேடிய குரூஸ் கண்டு பிடித்த சில உண்மைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் பதிந்து சென்றுள்ளார்.  

நெய்தல் நிலத்தில் சொந்தக்காரர்களான  மக்களின் ஒற்றுமை இன்மை சொந்த இனத்தோடு கொண்ட  பகைமை உணர்வு, பொறாமை, பெண்கள் மேல் கொண்ட அதீராத இச்சை உணர்வால், தன் தொழிலில் சரிந்ததும்  மற்றும் வேற்று இன மக்கள் தங்கள் ஊரில் குடிபுகுந்து தங்கள் உரிமைகளை  பறித்து சென்றதையும் கடற்கரை மொழியினூடாக சுவாரசியமாக விவரித்துள்ளார். வட்டார மொழியான கடற்கரை மொழி தான் இந்நாவலின் தனி தன்மைக்கு  சாற்றாக உள்ளது. வாசிப்பவர்கள் முதல் 20 பக்கம் புரிந்து வாசிக்க சிரமம் கொண்டாலும் . பின்பு நாமும் அந்த மொழியை பேசும் நிலைக்கு தள்ளப்படும் நிலைக்கு எட்டுகின்றோம். மொழி என்பது வெறும் பேசும் கருவி மட்டுமல்ல ஒரு இனத்தின் அடையாளம் பண்பாடு, வாழ்க்கையாக மாறுகின்றது,  வட்டார மொழியை பயண்படுத்தியதால் அவ்வூர் வழக்கு சொற்கள் பழமொழிகள், வசை மொழிகள், கேலி கிண்டல்களை அப்படியே அறிந்து கொள்ள இயல்கின்றது. இது ஒரு வரலாற்று நாவல் என்பதால் சில சம்பவங்கள் வரலாற்று நிகழ்வுடன் உணர்த்தி  காலத்தையும் துல்லியமாக பதிவு செய்துள்ளார்.


நிலம் சார்ந்த விவசாயிகள்  போன்றே கடலை நம்பி இருந்த கடலோடிகள் பல காலகட்டங்களில் புரக்கணிக்கப்பட்டதை,, ஏமாற்றபட்டதை கொற்கை" விளக்குகின்றது. மிக முக்கியமாக தங்கள் நிலத்தின் உரிமையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என எண்ணி மதம் மாறுவதும் அந்த மத மாற்றமே தங்களுக்கான அடையாளத்தை துறக்க தங்களுக்கான தலைமையை, பண்பாட்டை இழக்க காரணமானதை திறம்பட விவரித்துள்ளார்.  மதம் என்பது ஆன்மீகம் கடந்து மனிதர்களை ஆட்டி படைக்கும் கருவிகளாக உருவாகும் போது சாதாரண மக்கள் நிலை குலைந்து போவதும் அடிமையாக மாறுவதும் மட்டுமல்லாது அடையாளம் அற்ற ஒரு ஜனமாக உருவாகுவதை கதையினூடாக காண்கின்றோம். சாதாரண மக்கள் என்றிகல்லை அவ்வின மக்களை பிரதிநித்துவ படுத்திய மன்னரே இந்த சூழலில்  தன் மதிப்பை மான்பை இழந்து கடைசியில் தன் கிரீடத்தையும் மதத்தலைமை முன் கண்ணீருடன் துறக்கும் நிகழ்வு  யாரையும் கண் கலங்கி விடச்செய்யும்.
 
இவ்நாவலின் இன்னொரு சிறப்பு என்பது ஒவ்வொரு கதாபாத்திரவும் நம் மனகண்ணில் வாழ்ந்து செல்கின்றனர் என்பதாகும். பிரதான கதாபாத்திரமான பிலிப் தன் வறுமையின் காரணமாக பெரிய துறையில் இருந்தும் வேலை தேடி தன் சித்தப்பா லொஞ்சின் ஊரான கொற்கைக்கு வந்து சேருகின்றார். அங்கோ சித்தி உருவத்தில் துரத்திய காமப்பேய் இவர் பிள்ளைகள் காலத்திலும் இவருக்கு பல தொல்லைகள் தருகின்றார். 

சித்தப்பா லொஞ்சின் ஒரு விபத்தில் இறந்து போக  சித்தப்பா மகன் ரஞ்சனும் சில வருடங்களில் அகால மரணம் அடைகின்றார் . பிலிப் தனக்கு அடைக்கலம் கொடுத்த ஆண்டாமணியார் மகள், தன்னைவிட வயதில் மூத்த, இளம் வயதிலே விதவையான சலோமியை திருமணம் செய்து கொள்கின்றார்.   ஒரு வாழாவெட்டிக்கு வாழ்க்கை கொடுத்தார் என்ற காரணத்தால் இவர் ஒரே சகோதரியும் பிரிந்து செல்கின்றார். . இவர் வறுமையில் வளர்ந்தாலும உழைப்பால் தண்டல் ஆகிய பிலிப்பு தன் ஏழு பிள்ளைகளையும் நல்ல நிலையில் மணம் முடித்து வைக்கின்றார். ஆனால் ஊதாரிகளான தன்னலம் பிடித்த பிள்ளைகளால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்.  ஒரு மகன் தனக்கு பிடித்த பெண்ணை மணம் செய்ய அனுமதிக்க வில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொள்ள, இன்னொரு மகனோ சொத்துக்கு என பெற்ற தந்தையை அடிக்கும் இழிநிலைக்கு எட்டுகின்றான்.  கணவர் இறந்தும் கணவர் வீட்டில் இருந்து தன் மகனை படிக்க வைக்கும் எழிலரசி மாமனாரை பாசமாக நோக்கும் மகளாகவும் மிளிர்கின்றார்.  நேர்மையால் வாழ்க்கை நெறியில்  உயர்ந்த பிலிப்பு, இரத்த உறவுகளிடம் தோற்று போகும் அவலநிலையும் காண்கின்றோம். சண்முகவேல் நாடாரின் அறிவுரைக்கு இணங்க சந்தன மாரியை சந்திக்க வேண்டும், பொறுப்புக்களை பிள்ளைகளிடம் விட்டு விட வேண்டும் என பல திட்டங்களுடன்  சென்னையில் இருந்து கொற்கை நோக்கி வரும் பிலிப்பின் உயிர் பயணத்தில் முடிவதுடன் நாவலையும் முடித்துள்ளார்.

எழிலரசியின் சகோதரான வரும் அமுதமன் கதாபாத்திரம் கதை ஆசிரியராக தான் இருக்க வேண்டும். 

மதம் என்ற ஆயுதத்தால் ஒரு இனத்தின் இயல்பான சிந்தனை ஆற்றல் மழுங்கி மட்டையாகி போனதையும், நிறுவனமாக்க பட்ட கிறிஸ்தவத்தின் கீழ் எவ்வாறாக ஒரு போராட்ட குணமுள்ள மக்கள் மண்டியிடப்பட்டனர் என்ற வேதனையையும் கதைமாந்தர்கள் வழியாக விவரித்துள்ளார்.. விமரிசையாக கொண்டாடப்படும் பனிமயமாதா திருவிழா  சப்பர பவனி தற்போதும் உலகம் ஒட்டும் பாக்கும் அற்புத நிகழ்வாக விளங்குகின்றது. சந்தமனைமாரியின் வரலாறு திருத்தி எழுதப்பட்டது எப்படி எனவும்  காணலாம்.

பரதர்களின் மன்னர் பாண்டிய பதி காலத்தால் அழியாத சோகத்தின் பதிப்பாகும். பல நூற்றாண்டுகளாக ஒரு இனத்தின் மன்னராக இருந்தவரின் முடிவு நம்மையும் தீரா துயரில் ஆழ்த்தியது. அவருடைய கடைசி நாட்கள், மரணம், அவருடைய ஆளுகையே அவரே மறுதலித்த வைத்த விதம் நம்மை கனக்க செய்தது. மன்னனின் வாரிசோ தனக்கு இனி அதிகாரம் ஆட்சி  வேண்டாம் என  ஒரு வங்கி குமஸ்யதாவாக பணி புரிந்து;  காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாட்டுக்காக சேவை செய்து மறையும் துயர் நிலையும் எந்த மனிதனையும் கண் கலங்க செய்யும். மன்னனின் மகளோ கொழும்பில் நடந்த இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து தனது சகோதரன் பராமரிப்பில் மீதி காலத்தை தள்ளுகின்றார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்று அடையாளம் இழந்து சிதறி போனது வருத்ததை வரவழைக்கின்றது.

மதலேன் என்ற கதாபாத்திரம் ஒரு பெண் எதிர் கொண்ட கொடும் துயருக்கு சாட்சியாக உள்ளது. சந்தேக நோய் கொண்ட கணவனுக்கு மனைவியாக வேண்டி வந்த மதலேன் தன் உண்மையை விளக்க  திராணியற்று கணவர் கண் முன்னே தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றார். மதலேன் வாழ்க்கைக்கு பெரும் இடஞ்சலாக இருந்த அவர் அத்தை மகன் பாதிரியார் பபிலோன்  மனித குணமே அற்ற அரக்கனாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.

தூத்துகுடியின் குடிநீர் விநியோகத்திற்கு வழி வகுத்து சிலுவை பர்னாந்து போன்ற தலைமைகள் பரதவர்கள் மத்தியில் உருவாகாதது பெரும் குறையாகவே கதாசிரியர் எடுத்து காட்டுகின்றார். 

ஒரு காலத்தில் பல தலைமுறைகளாக ஏற்றுமதி வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த சிங்கராயர் குடும்பவாரிசு  செல்வதாஸ் 2000 ஆண்டுக்களில் காலில்  பழைய மூன்று செருப்புகளை ஒன்றாய் சேர்த்து தைத்து அணிந்து நடந்து சென்ற வறுமை நிலை கண்ட கதாசிரியர் தன் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? என்ற தேடுதலில் முடிவு தான் இப்புத்தகம்.. பரதவரின் பூர்வீக பூமியான தூத்துகுடியில் இன்று பரதவர்கள் அடையாளம் இழந்ததின் காரணம் நாவலில் விரிவாக விவரித்துள்ளார். ஒற்றுமை இன்மை, ஒரு தலைமையை ஏற்று கொள்ள விரும்பாது ஆள் ஆளுக்கு ராஜாங்கம் செய்ய நினைத்த இனம், . தலைமையாக உருவாகியவர்களும் இனமக்கள் நலம் என்பதை விடுத்து தன் நலத்தை நாட இனத்தின் அழிவு துவங்குகின்றது.நமது கலாச்சாரத்தின் அடிப்படையான குடும்பங்களில் காணும் உறவு கேடுகள் கணவருக்காக விட்டுக் கொடுக்காத மனைவி மனைவிகளுக்கு துரோகம் செய்யும் கணவர், கூட்டு குடும்பத்தில் நம்பிக்கை வைக்காத பண்பு,. சொந்த சகோதரனின் வளர்ச்சியை தடுக்க நினைத்து  மற்று இனங்களுக்கு இடம் கொடுத்த கொற்கை கடைசியில் கொற்கையில் எல்லா வணிக பிடிப்புகளும் மற்று இனங்கள் ஆளுகைக்கு உட்பட்ட போது வெறுமெனே வேடிக்கை பார்க்கும் சூழலுக்கு வறுமை பிடிக்குள் வீழும் துயர் நிலையும் காண்கின்றோம்.  

கொழும்பில்  நடந்த அரசியல் மாற்றங்கள் இனக்கலவரங்களும் கடலை நம்பி இருந்த மக்களுக்கு பாதகமாக அமைகின்றது. கொற்கையை விட கொழும்பை நம்பி சென்றவர்கள் இனக்கலவரத்தில் தங்கள் சொத்தை இழந்து அனாதர்களாக கொற்கை வந்தடைகின்றனர். போரில் ஈழத்தமிழர்கள் போன்றே  பாதிக்கப்பட்ட மக்களாக கொற்கை மக்கள் மாறுகின்றனர். சிங்களவர்களும் கொற்கை தமிழர்களும் திருமணத்தால் இணைந்த சமூகத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளர்.




பரதவர்கள் என்ற ஒரே இனம் தங்கள் வசதி வாய்ப்புகள் சார்ந்து பிரிந்ததும்  மேசைக்கரர்கள் என்ற பணக்காரர்கள் ஆங்கிலேயர்களுடன்  பின்பு அரசியல் அதிகாரத்துடன் சேர்ந்து தங்கள் இனத்தையே நெருக்கும் அவல நிலையும் காண்கின்றோம்.  இப்படியாக பிரிந்து வளர எண்ணிய இனம் மற்று இனத்தின் ஒற்றுமையான வளர்ச்சிக்கு முன் சிந்தி சிதறி ஒன்றுமில்லாது ஒடுங்குகின்றது.  மாற்றங்களுக்கு அனுசரித்து தன்னை மாற்றி கொள்ளாத பரத இனம் தன் முடிவை தானே தேடி கொண்டதாக காண்கின்றோம். இவர்களின் ஒற்றுமை இன்மையான மனநிலைக்கு கிருஸ்தவ தழுவலும் ஒரு காரணமாக கதை ஆசிரியர் காண்கின்றார். கிறிஸ்தவமும் தங்கள் மத வளர்ச்சிக்காக பயண்படுத்திய இவ்வினத்தின் வளச்சியை முன்நிறுத்தவில்லைஎன ஆசிரியர் நிறுவுகின்றார்.

முத்துலிங்கம் –சண்முகவேல் நாடார் குடும்பத்தை முன்நிறுத்தி நாடார் இனமக்கள் ¯உழைப்புடன் தங்கள் தலைமைக்கு என ஒரு இடம் கொடுத்து முன்னேறியதாக குறிப்பிடுகின்றார். . ரேவதி பர்னாந்தை திருமணம் செய்ததும் சில்வியா ரமேஷ் நாடாரை திருமணம் செய்து நாடார் இனத்துடன் கலந்து வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுவதையும் அறியலாம். 

இப்புத்தகம் பல எதிர்ப்புகளை சந்தித்ததில் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையை கேள்வி எழுப்புகின்றது. அதே போன்று கடவுளின் மறு அவதாரமாக காணும் துறவியர் செய்யும் அட்டூளியங்களையும் கூறியுள்ளார். ஜோ டி குரூஸ் அடிக்கடி பல பொது கூட்டங்களில் கூறுவது போல் இவருடைய அடிப்படை பள்ளி கல்வி கல்லூரி படிப்பு யாவும் கிறிஸ்தவ பள்ளிகளில் அமைந்துள்ளது. சிறப்பாக இவர் தூய சவேரியார் மேல் நிலைப்பள்ளி லயோளா கல்லூரி மாணவர் ஆவார். கதாசிரியரின் ஆயிரம் கண்களை திறந்து விட்டதும் அவர் குறைப்படும் நிறுவனமாக கிறிஸ்தவ பாதிரியார்களின் பள்ளிகளே. யேசு சபை துறைவிகளால் மட்டுமே ஆழ்ந்த சிந்தனையுள்ள கேள்விகள் எழுப்பும் மனிதர்களை உருவாக்க இயலும் என்பதற்கு  எடுத்து காட்டாக ஜோ குரூஸும்  திகழ்கின்றார். (இன்று இந்தியா அளவில் முழு விச்சில் செயலாற்றும் பல அரசியல்வாதிகள் கலைஞர்கள் யேசு சபையில் கல்வி நிறுவனகளில் உருவாகியுள்ளவர்களே.) பிலிப் சந்தன மாரியை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் பயணிக்க ஆனால் அவர் சந்திக்காதே பயணம் நிறைவு பெறுகின்றது. கிறிஸ்தவர்களால் திரும்பவும் தாய் மதம் திரும்பி நிம்மதியாக வாழ இயலாது என்பதை தான் பிலிப்பின் நிறைவு பெறாத விருப்பத்துடன் முடிவு எட்டுகின்றது. 
அடிப்படையில்  பாதிக்கப்பட்ட தன் இன மனிதர்களுக்காவும் குறிப்பாக அடிமட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இந்த நாவல் ஆசிரியர் போற்றுதலுக்குரியவரே. பரத இன பெண்களை மோசமாக சித்தரிகரித்தார் என குற்றம் சாட்டபட்டு வழக்கும் தொடுக்கபட்டுள்ளது. இக்கதையில் 100 க்கும் மேற்பட்ட பெண் கதாபாத்திரங்களை பரிசயப்படுகின்றோம். ரஞ்சிதம், வலேறியா,  போன்ற கதாபாத்திரங்களை பொய்மையாக புகழ இயலாது ஆனால் சாரா பாட்டி, விர்ஜித், சலேமியா, ரேவதி சுகந்தி, சில்வியா போன்ற பல பெண் கதாபாத்திரங்களை காலத்தால் அழியா வண்ணம் சிறப்பாக படைத்துள்ளார்.

இந்த நாவலின் பாதிப்பில் இருந்து அவ்வளவு எளிதாக யாராலும் வெளி வர இயலாது. பல ஆயிரம் வருடங்களாக பல நாடுகளுடன் வணிகம் செய்து வந்த மக்களின் வீழ்ச்சி அதன் தாக்கம்  எளிதாக நம்மை விட்டு மறைய போவதில்லை. கொற்கைக்கு இனி செல்லும் போது ஒவ்வொரு தெருவும், நாம் காணும் மனிதர்களும் மேலும் பரிசயம் கொண்டவர்களாக தெரிவார்கள். சமீப காலங்களில் அணு உலைகள் மணல் கொள்ளை என தினம் காணும் செய்தியில் வரலாற்று உண்மை;  நம்மையும் சுடுகின்றது.  தேரிக்காட்டு பயலுக என அவர் திட்டுவது கூட இப்போது  வேதனையாக தெரியவில்லை. அது ஒரு இனத்தின் தீராத வேதனையின் குரலாகத்தான் ஒலிக்கின்றது. உண்மைகள் பிடிவாதமானவை, மறைக்க இயலாதவை. மறுக்க இயலாதவை.  இந்த புத்தகம் ஜோ குரூஸின் மட்டும் பார்வை அல்ல ,ஆதங்கம் அல்ல ஒரு இனத்தின் அழு குரலாகும். . ஏக்கமாகும், எதிர்பார்ப்பாகும்.  ஒரு முறை வாசித்து என் அறிவுக்கு எட்டியவை நினைவுக்கு எட்டியவை பகிர்ந்துள்ளேன். பாலியல் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தன் தாயை சந்தித்த கோபால் மயக்கு மருந்து அடிமையான மகனால் கொல்லப்பட்ட தாய் என பல மனிதர்களை நாம் சந்திக்கவைக்கும் நூல்.)