தமிழர்கள் போற்றி வந்த பழந்தமிழிசை என்பது தொன்மம் நிறைந்தது. அதற்கு நீண்ட கால வரலாறும் உண்டு. தமிழரின் திணை வாழ்க்கையோடு தொடங்கிய தமிழிசை பாணர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. சங்ககால நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தொல்காப்பியம் ஆகியவற்றிலும், ஐம்பெரும் காப்பிய நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் பழந்தமிழிசை குறித்த செய்திகள் விரவிக் கிடக்கின்றன.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் உருவான பக்தி இலக்கிய கால கட்டத்திலும் பழந்தமிழிசை போற்றிப் பாதுகாக்கப்பட்டது. 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் பழந்தமிழிசை பின்னுக்குத் தள்ளப்பட்டது. அப்போது வந்த தமிழரல்லாத விஜய நகர ஆட்சியிலும், நாயக்கர் ஆட்சியிலும், அதன் பிறகு வந்த மராட்டியர் ஆட்சியிலும். தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் ஆட்சி அதிகாரத்தில் வந்த போது, தமிழிசையை புரக்கணித்து கர்நாடக இசையென அறியக்கொள்ள ஆரம்பித்தது.
மீண்டும் 18 – ஆம் நூற்றாண்டில் முத்துத் தாண்டவரும், அருணாசலக் கவிராயரும், மாரி முத்தாப் பிள்ளையும் தமிழிசை மீட்பிற்கு அடித்தளம் இட்டனர். இசை இலக்கணத்தை எழுதியவர்கள் வடமொழியாளர்கள் இசை இலக்கண நூல்கள் குழப்பம் நிறைந்தும் பிழைகள் மலிந்தும் இருந்தன. இசை இலக்கணங்கள் இசை இலக்கியங்களுக்குப் பொருத்தமற்றுக் காணப்பட்டன..
இந்நிலையில்தான் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பழந்தமிழிசையை மீட்க, அதன் உரிமையை நிலை நாட்ட, தமிழிசையே ஆதி இசையென உலகுக்கு அறிவித்தவர் இசைப் பேரொளி ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.
ஆபிரகாம் பண்டிதரரின் தந்தைவழி தாத்தா முத்துசாமி நாடாரின் 11 குழந்தைகளில் பத்து குழந்தைகள் காலரா நோயால் இறந்தனர். எஞ்சிய மகனுக்காக வேண்டிக்கொண்டு கிறிஸ்தவராக மாறினார். முத்துசாமிநாடார், சாம்பவர் வடகரையில் இருந்து பங்களாச் சுரண்டைக்கு வந்து அங்கே ஆங்கிலப் பாதிரியாரிடம் தோட்டக்காரராக பணியாற்றினார்.
ஆபிரகாம் பண்டிதர் தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற ஊரில் முத்துசாமி பண்டிதர் மற்றும் -அன்னம்மை அம்மாள் தம்பதிகளுக்கு ஆகஸ்ட் 2, 1859-ல் பிறந்தார். ஆபிரகாம் பண்டிதர் ஆரம்ப கல்வி பங்களாச் சுரண்டையில் முடித்தபின் 1870 முதல் 1878 வரை பன்றிகுளம் உயர்தர பள்ளியில் உயர்நிலை படிப்பை முடித்தார். அருகே உள்ள திருமலாபுரத்தில் தன் உறவினர் நடத்தி வந்த பள்ளியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1874-ல் திண்டுக்கல் நார்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். அப்பள்ளியை நடத்தி வந்த ரெவெ.யார்க் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு ஆண்டுகள் அங்கே ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆபிரகாம் பண்டிதர் நாஞ்சான்குளம் வேதக்கண் நாடார் மகள் ஞானவடிவு பொன்னம்மாளை டிசம்பர் 27, 1882-ல் திருமணம் செய்தார். ஞானவடிவு பொன்னம்மாள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர். தஞ்சையில் ரெவெ டபிள்யூ.எச்.பிளேக் ஆதரவில் இருவருக்கும் 1884-ல் ஆசிரியர் பணி கிடைத்தது. ஞானவடிவு பொன்னம்மாள் தஞ்சாவூர் பூக்கடைப்பள்ளி (லேடி நேப்பியர் கேர்ஸ்ல் ஸ்கூல்) தலைமையாசிரியையாகவும் ஆபிரகாம் பண்டிதர் அங்கே தமிழாசிரியராகவும் பணியேற்றனர்.
இவர்களுக்கு ஞானவடிவு பொன்னம்மாள் அன்னபூரணி, சௌந்தரவல்லி, சுந்தர பாண்டியன், ஆனந்த வல்லி, ஜோதிபாண்டியன், மரகத வல்லி என்னும் ஆறு குழந்தைகள் இருந்தனர்.
திண்டுக்கல் நார்மல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ரெவெ யார்கிடம் இருந்து ஆபிரகாம் பண்டிதர் 1876-ல் புகைப்படக்கலையை கற்றார். தனக்காக 15 x 12 டல்மெயெர் லென்சுடன் ஒரு புகைப்படக் கருவியை வாங்கி தொடர்ச்சியாகப் புகைப்படங்களை எடுத்து வந்தார். பல வேதிப்பொருட்களைக் கொண்டு நெகட்டிவ்களை கழுவி அவரே ப்ரிண்ட் செய்தார். பல புதிய கண்டுபிடிப்புகளையும் கழுவும் முறையில் செய்தார். இந்தியாவின் சிறந்த அமெச்சூர் புகைப்படக்கலைஞராகவும் பிரபலமானார். 1909-ல் லண்டனில் இருந்த அரசு கலைக்கழகம் (Royal Society of Arts) அமைப்பின் உறுப்பினராக தேர்வானார்.
ஆறாண்டுகள் அங்கே அவர்கள் பணியாற்றினர். திண்டுக்கல்லில் பணியாற்றுகையில் ஆனைமலைப்பட்டி என்னும் ஊரைச்சேர்ந்த பொன்னம்பல நாடார் என்பவரிடம் ஆபிரகாம் பண்டிதர் சித்தமருத்துவம் கற்றார். 1877-ல் அவருடன் சுருளிமலை மேல் மூலிகைதேடிச் சென்றபோது கருணானந்த முனிவர் என்பவரைச் சந்தித்து அரிய மூலிகைகளை பற்றித் தெரிந்துகொண்டார்.1890-ல் ரெவெ டபிள்யூ.எச்.பிளேக் இங்கிலாந்து திரும்பினார். ஆபிரகாம் பண்டிதர் பணியில் இருந்து நீங்கி கர்ணானந்தர் சஞ்சீவி மருந்துகளை தயாரித்து விற்கத் தொடங்கினார். அவர் மனைவியும் பணியை உதறி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டார். ஆபிரகாம் பண்டிதர் தயாரித்த செந்தூர சஞ்சீவினி என்னும் மருந்து பிளேக் நோய்க்கும் சமயசஞ்சீவினி மருந்து காலராவுக்கும் உதவுவதாக கருதப்பட்டதால் மிகப்பெரிய வணிகவெற்றியை அடைந்தார். தஞ்சையில் 1894-ல் பெரிய பங்களாவை கட்ட இயன்றது.
ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லில் இருந்த கந்தசாமிப் பிள்ளை என்பவரிடம் அச்சுமுறையை கற்றுக்கொண்டார். 1912-ல் தஞ்சையில் மின்விசையில் இயங்கும் முதல் அச்சகம் உருவாக்கினார்.
ஆபிரகாம் பண்டிதர் சோதிடத்தின் அடிப்படைகளை கந்தசாமிப் பிள்ளையிடம் கற்றார். தஞ்சையில் பின்னர் ஜோதிடவிமர்சினி சபா என்னும் அமைப்பை நிறுவி சோதிடத்தை கணிதநோக்கில் ஆராய்ந்தார். பின்னர் இசை ஆராய்ச்சியில் பன்னிரு ராசி சக்கரங்களின் கணிதமுறையை பயன்படுத்த இப்பயிற்சி அவருக்கு உதவியது.
ஆபிரகாம் பண்டிதர் தஞ்சை அருகே 100 ஏக்கர் நிலத்தில் கருணானந்தபுரம் என்று பெயரிட்டு விவசாயம் செய்தார். அங்கே அவர் முதல் முறையாக லிவர்பூலில் இருந்து இயந்திரங்களை வரவழைத்து ஆழ்துளைக்கிணறு போட்டு காற்றாடிமூலம் நீர் இறைக்கும் இயந்திரத்தையும் நிறுவினார். பண்டிதர் பண்ணை என அழைக்கப்பட்ட அந்த நிலம் அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. வேளாண்மைக் கண்டுபிடிப்புகளுக்காக 6 தங்கப்பதக்கங்கள், 37 வெள்ளிப்பதக்கங்கள், 7 பித்தளைப் பதக்கங்களை பண்டிதர் பெற்றார்.
அன்றைய கவர்னர் சர் ஆர்தர் லாலி பிப்ரவரி 22, 1890-ல் கர்ணானந்த புரத்திற்கு வந்தார். விவசாயக் கமிஷனர் சிவசாமி ஐயர், இராமநாதபுரம் அரசர் போன்றவர்களும் அவருடைய பண்ணைக்கு வந்திருக்கிறார்கள்.
ஆபிரகாம் பண்டிதர் மே 27, 1912-ல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி தமிழிசையின் அமைப்பு மற்றும் வேர்களை ஆராயத் தொடங்கினார்.1912 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் ஏழு இசைமாநாடுகளைச் சொந்தச் செலவில் தஞ்சையில் நடத்தினார். அன்றைய புகழ்மிக்க இசையறிஞர்கள் அதில் கலந்துகொண்டனர். அவற்றில் நிகழ்ந்த விவாதங்களின் அடிப்படையில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ராகங்கள் அமைந்துள்ள விதத்தை கணிதரீதியாக ஆராய்ந்து வரைமுறைப்படுத்தினார். அதற்கு மேலையிசையின் கணக்குமுறையை பயன்படுத்தினார். இதை அவர் ராகபுடம் என அழைத்தார்.
12 ராசி சக்கரம் என்பது சோதிடம் சார்ந்தது மட்டுமல்ல, அது தொன்மையான தமிழ் வானநூல் கணக்கும் காலக்கணக்கும் பிற கணக்குகளும் ஆகும் என கூறிய அவர் அதன் அடிப்படையில் பழந்தமிழ்ப்பண்கள் எப்படி அமைந்துள்ளன என்றும் அடிப்படைச் சுருதிகள் 24 என்றும் விளக்கினார். பழந்தமிழ்ப் பண்களுக்கு நிகரான சமகால கர்நாடக சங்கீத ராகங்களையும் அவர் சுருதிக் கணக்கின் அடிப்படையில் எழுதிக்காட்டினார். தன் ஆய்வுகளை கர்ணாமிர்த சாகரம் என்னும் நூலில் விளக்கினார். இந்நூல் தமிழிசையின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் ராக அடிப்படைகளே வடக்கே இந்துஸ்தானி இசையிலும் உள்ளன என்று 1916, மார்ச் 20 முதல் 24 வரை பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று விளக்கினார். அவருடைய இரு மகள்களும் வீணையில் அவர் கூறுவதை வாசிக்க கற்று இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருக்கையில் பிரபல பிடில் வித்வான் சடையாண்டிப் பத்தர் என்பவரிடம் இசையின் அடிப்படைகளைக் ஆபிரகாம் பண்டிதர் கற்றார். கர்நாடக சங்கீத இசைக்கீர்த்தனங்கள் எழுதவும் ராகக்குறிப்புகள் எழுதவும் தேர்ச்சி அடைந்தார். தொடக்கம் முதலே ஆபிரகாம் பண்டிதர் தமிழக இசை முழுக்கமுழுக்க தெலுங்கில் இருப்பதை மறுத்துவந்தார்.
96 இசைப்பாடல்களை எழுதி உள்ளார். ஜெகன்னாந்த பட்டு கோசாயி என்பவர் 41 பாடல்களுக்கு சுவரம் அமைத்து உள்ளார். 55 பாடல்களுக்கு தஞ்சை அரண்மனை வித்வான் வைணிகர் வெங்கடாசல ஐயர் சுவரம் அமைத்து கொடுத்தார். அவை தஞ்சை சாமியா பிள்ளையால் கற்பிக்கப்பட்டன. கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்ற பெயரில் 1917-ல் பிரிமியர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு நூலாக வெளிவந்தன.
வெங்கடாச்சல ஐயர், சாமி ஐயர், பஞ்சாபகேச ஐயர் ஆகியோரை தன் மகன்களுக்கும் மகள்களுக்கும் இசை கற்பிக்க ஏற்பாடு செய்து இருந்தார். அவர்களில் பலர் பின்னாளில் இசை ஆய்வாளர்களாக ஆனார்கள்.
அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய இசையை (பன் இசை) மீட்டெடுத்ததால், ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
ஆபிரகாம் பண்டிதரின் மகன் டாக்டர்.ஆ.வரகுணபாண்டியன் பாணர்கைவழி யாழ் என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இவரது பேரன் பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் இசைத் தமிழ் வரலாற்றுத் தொகுதிகளையும், புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள் போன்ற நூல்களைப் படைத்ததோடு சிறந்த இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
ஆபிரகாம் பண்டிதர் கிறித்தவ உண்மைகளைத் தமிழில் எடுத்துரைக்கும் பொருட்டு பைபிளின் அடிப்படை தத்துவக்கொள்கைகள் பற்றிய "நன்முறை காட்டும் நன்னெறி" என்னும் ஆய்வுநூலை எழுதி வெளியிட்டு உள்ளார்.
ஆபிரகாம் பண்டிதரின் மகன் ஜோதிப் பாண்டியன் புகைப்படக் கலையில் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றார். லண்டன் ராயல் புகைப்படக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். உலகம் முழுதும் பயணித்து தன்னுடைய புகைப்படங்களை காட்சிப் படுத்தினார். பண்டிதரின் கடைசி மகன் சௌந்தர பாண்டியன் தென்னிந்திய ரயில்வேயின் அதிகாரப் பூர்வமான புகைப்படக் கலைஞராக இருந்தார். ஆபிரகாம் பண்டிதரின் பேரன் தவப்பாண்டியன் தஞ்சாவூர் அமெச்சூர் புகைப்படக் கழகத்தைத் தொடங்கி நீண்ட காலம் நடத்தி வந்தார்.
1909-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசு ஆபிரகாம் பண்டிதருக்கு "ராவ் சாகிப்" என்னும் பட்டம் வழங்கியது.
லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸின் உறுப்பினர்; மதுரா தமிழ் சங்கத்தின் உறுப்பினர்; தஞ்சை நகராட்சி மற்றும் தாலுகா வாரியங்கள் மற்றும் மருத்துவமனை குழுவின் உறுப்பினர்; சென்னை விக்டோரியா சாதி மற்றும் கோஷா மருத்துவமனையின் ஆளுநர்; கோவை மற்றும் தஞ்சை அரசு வேளாண் கல்லூரியின் கௌரவ பார்வையாளர்; மற்றும் தஞ்சை ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர் எனும் பல பதவிகளை அலங்கரித்துள்ளார்.
1917 ஆம் ஆண்டில், அவர் தமிழ் இசை குறித்த தனது ஆராய்ச்சியை கருணாமிர்த சாகரம் என்ற 1346 பக்க புத்தகமாக வெளியிட்டார், இது இன்றுவரை இந்தத் துறையில் ஒரு முக்கிய படைப்பாக உள்ளது.
ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 31, 1919-ல் காலமானார். பண்டிதர் தோட்டத்தில் அவர் அடக்கப்பட்டார். தஞ்சையில் ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்த தெருவிற்கு அவரது நினைவாக ஆபிரகாம் பண்டிதர் தெரு என பெயரிடப்பட்டுள்ளது. ஆபிரகாம் பண்டிதரின் நூல்கள் தமிழக அரசால் 2008-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
https://worldtamilforum.com/historical_facts/abraham-pandithar-2/
https://www.jeyamohan.in/459/#.VqGiDvl96Hs
https://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-AbrahamPanditar-
karuNAmirta-sAgaram-Bk2-Ragas-1946-C2-0152.pdf
0 Comments:
Post a Comment