28 Apr 2025

அர்ஜென்டினா அழுக்குப் போரை (1976-83) முடிவிற்கு கொண்டு வந்த தாய்மார்கள் குழு !

அர்ஜென்டினா "அழுக்குப் போர்" (1976-83)
17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்,  அர்ஜென்டினாவிற்கு கத்தோலிக்க மதம் 16 ஜேசுட் மிஷனரிகள் ஊடாக அறிமுகமானது. அர்ஜென்டினாவின் பூர்வீக மக்களை, நயந்தும், கட்டுப்படுத்தியும் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றினர்.

அர்ஜென்டினா 1810 இல் ஸ்பெயினிலிருந்து சுதந்திரம் பெற்றது. இது கிரேட் பிரிட்டன் உட்பட பிற காலனித்துவ சக்திகளுடன் உள்ள வர்த்தக தடைகளை நீக்கியது. 1910-1929 ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் காலத்தில்  ​​ஐரோப்பிய குடியேறிகள், முக்கியமாக ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியர்கள் பெருமளவில் குடியேறியதன் மூலம், கத்தோலிக்க திருச்சபை பெரும் வளர்ச்சியை கண்டது.   கத்தோலிக்க மதம் இங்கு மிகவும் பிரபலமடைந்ததால் 1934 இல்,34வது நற்கருணை மாநாடு தென் அமெரிக்க நாட்டில் முதன்முறையாக பியூனஸ் அயர்ஸில் நடைபெற்றது.  அடுத்த சில ஆண்டுகளில், சர்ச் அதன் ஆதிக்ககத்தை அரசியல் அதிகாரத்தின் மேல்  செலுத்த ஆரம்பித்தது.

தலைவர் ஜுவான் டொமிங்கோ பெரோன் அர்ஜென்றினா நாட்டை மதச்சார்பற்ற நாடாக உருவாக்க முயற்சிகள் எடுத்தார், இதனால் ஏற்பட்ட  கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரை நாடுகடத்துவதில் சபை தன் பெரும் பங்கைக் கொண்டிருந்தது.  1955 இல் திருச்சபையிலிருந்து அவரை வெளியேற்றினர்.  இதற்கு பின்புலனாக அமெரிக்கா செயல்பட்டது என்றால் மிகை அல்ல . பிற்பாடு நாட்டின் வரலாற்றில் நடந்த ஆறு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளில் மூன்றில் ஒரு பங்குக்கு சபை வழிவகுத்தது.

அழுக்குப் போர் (Dirty War)


1976 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜெனரல் ஜார்ஜ் விடேலாவின் தலைமையில்  ஆட்சிக்கு வந்த அர்ஜென்டினா இராணுவ ஆட்சிக்குள் ஆனது. கிறிஸ்தவ சபையின் பெயரில் கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவதாக சொல்லிய விடேலா தான் ஒரு கத்தோலிக்க அரசாங்கத்தை வழிநடத்துவதாகக் கூறிக்கொண்டார். ஆனால் அர்ஜென்டினாவின் கொடிய அழுக்குப் போரின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல கத்தோலிக்கர்களைக் கொன்று துன்புறுத்தியது.  சபை நிலைமையைத் தணிக்க எதுவும் செய்யவில்லை, eன்றுமட்டுமல்ல  சர்வாதிகாரிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


என்ன நடக்கிறது என்பது தங்களுக்கு முழுமையாகத் தெரியாது என்றும், தங்களால் இயன்றவரை மக்களுக்கு உதவ முயன்றதாகவும் சபைத் தலைவர்கள் பிற்பாடு கூறியுள்ளனர். அர்ஜென்டினாவின் அழுக்குப் போரின் போது கத்தோலிக்க மதத்திற்கும் அரசு பயங்கரவாதத்திற்கும் இடையிலான உறவைப் பற்றிய சான்றுகள், காணாமல் போனவர்களுடனான நேர்காணல்கள், அரசு மற்றும் திருச்சபையின் ஆவணங்கள், களப்பணிகள்  மற்றும் பங்கேற்பாளர் கண்காணிப்பு ஆகியவற்றை குஸ்டாவோ மோரெல்லோ என்ற எழுத்தாளர்  விலாவரியாக எழுதியுள்ளார்.

சிலி மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போலல்லாமல், அர்ஜென்டினாவின் அரசியல் வன்முறை அரசியல் கத்தோலிக்க கொள்கையை பரப்புவதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருவியாகக் கருதப்பட்டது; கம்யூனிஸ்டு கெரில்லாக்களை ஒடுக்கும் விதமாக இராணுவ அரசாங்கத்தால் சபையின் ஆதரவைப் பெற முடிந்தது.


கத்தோலிக்கர்கள் மீது சுமத்தப்பட்ட வன்முறையை நியாயப்படுத்த அர்ஜென்டினா அரசாங்கம் கத்தோலிக்க மதத்தைப் எவ்வாறு பயன்படுத்தியது என்பதையும், அர்ஜென்டினாவில் உள்ள அதிகாரப்பூர்வ கத்தோலிக்க படிநிலை இந்த வன்முறையை எதிர்கொள்வதில் அவர்களின் மௌனம் ஊடாக எவ்வாறு நியாயப்படுத்தியது என்பதையும் மொரெல்லோ ஆராய்ந்து உள்ளார். மிகவும் கொடிய அரசு வன்முறையால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்த சிக்கலான சூழலில் தங்கள் சொந்த நம்பிக்கையை எவ்வாறு புரிந்துகொண்டார்கள்,  அர்ஜென்டினாவின் சர்வாதிகாரத்தின் கீழ் கத்தோலிக்கராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும் ஆராய்ந்து எழுதி உள்ளார்


அர்ஜென்டினாவின் அழுக்குப் போரின் போது - அரசாங்கத்தைத எதிர்த்துப் போராடினார்கள் என்ற குற்றம் சாட்டி, கம்யூனிசத்தை ஆதரித்தனர் என்பதற்காக 15,000 பேர் கொல்லப்பட்டனர், 8,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், சுமார் 6,000 பேர் நாடுகடத்தப்பட்டனர். 90 சதவீத மக்கள் கத்தோலிக்கர்கள் உள்ள ஒரு நாட்டில், கத்தோலிக்கர்கள் மற்ற கத்தோலிக்கர்களைக் கொன்று வருகிறார்கள் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று பாதிரியார் மொரெல்லோ கூறுகிறார். 'கத்தோலிக்கராக இருப்பதன் அர்த்தம் என்ன?"என்று சிந்திக்கவைத்த போராக இருந்தது அது என்கிறார்.

லத்தீன் அமெரிக்காவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் இரண்டாம் வத்திக்கான் கவுன்சிலின் சீர்திருத்தங்களும் ஒரே நேரத்தில் வந்தன. மத மாற்றத்திற்குப் பிறகு கத்தோலிக்கர்களின் நடவடிக்கைகள் தங்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டனர் என்பதின் தொடர்புடையவை என்று பாதிரியார் மோரெல்லோவின் பகுப்பாய்வு முடிவு செய்தது.

இந்த சகாப்தத்தில் அவர் மூன்று வகையான கத்தோலிக்கர்களை வகைப்படுத்தினார்:
1. மதச்சார்மின்மைக்கு எதிரானவர்கள், அனைத்து வகையான மாற்றங்களுக்கும் எதிரானவர்கள் (சமூக, கலாச்சார, மத);
2. ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடிமட்ட இயக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தவர்கள்; மற்றும்
3. நிறுவன ரீதியாக, பழமைவாதமாக இருந்தாலும் மாற்றங்களை விரும்புகிறவர்கள் மற்றும் அரசாங்கமும் கத்தோலிக்க திருச்சபையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நம்புபவர்கள்.


மலினப் போரின் போது கத்தோலிக்க திருச்சபையின் மௌனம் விமர்சனத்தை கொண்டிருந்தாலும் மற்றைய காரணிகள் ஆன  சபை, ஊடகங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக பேசாது இணைந்து செயல்பட்டன  என்கிறார்.
பாதிரியார் மொரெல்லோ மதம், அரசியல் மற்றும் வன்முறைக்கு இடையிலான உறவு இன்னும் உலகில் இருப்பதால், அழுக்கு போரில் என்ன நடந்தது என்பதைப் மக்கள் புரிந்துகொள்வது அவசியம் என்கிறார்.

இருப்பினும் அர்ஜென்டினா கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் கத்தோலிக்க மதம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.  அர்ஜென்டினா அரசியலமைப்பு கத்தோலிக்க திருச்சபைக்கு முன்னுரிமை சட்ட அந்தஸ்தை வழங்கி உள்ளது. கத்தோலிக்க பாரம்பரியம் அர்ஜென்றீனா சமூக வாழ்க்கை முறையில் குறிப்பாக அரசியல் ரீதியாக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்கிறார்.  அர்ஜென்டினா தென் அமெரிக்காவின் மிகவும் முற்போக்கான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அர்ஜென்டினா 1987 இல் விவாகரத்தையும், 2006 இல் பாலியல் கல்வியையும், 2010 இல் ஒரே பாலின திருமணத்தையும், 2012 இல் பாலின அடையாளச் சட்டத்தையும் சட்டப்பூர்வமாக்கியது.

பியூ(Pew Research Center ) ஆராய்ச்சி மையத்தின் கணக்கெடுப்புப்படி,1960 களில், லத்தீன் அமெரிக்க மக்களில் 90 சதவீதம் பேர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று தரவு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 2014 ஆம் ஆண்டின் தரவுப் படி 69 சதவீதம் பேர் மட்டுமே கத்தோலிக்கர்களாக அடையாளம் காணப்பட்டதாகக் குறிப்பிட்டு உள்ளது.
பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான ஜுவான் குரூஸ் எஸ்கிவெல் மேற்கொண்ட ஆராய்ச்சியும் இதே தரவைத் தான் சரி வைக்கிறது.


அர்ஜென்டினாவில் கத்தோலிக்கர் எண்ணம் குறைய முக்கிய காரணங்களில் ஒன்று பந்தகோஸ்தை சபைகளின் எழுச்சியாக இருக்கவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.  குறிப்பாக இளைஞர்கள் ,  ஏழைகள் மற்றும் முறையான கல்வி இல்லாதவர்களிடையே மத்தியில் பந்தகோஸ்தை சிறப்பான  இடம் பெற்றுள்ளது.
2,000 ஆண்டுகள் பழமையானது, பாரம்பரிய மற்றும் அதிகாரத்துவ நிறுவனமாக பெருமை கொள்ளும் கத்தோலிக்க திருச்சபை , சமூகப் பிரச்சினைகள் பிரார்த்தனை செய்வதன் மூலம் தீர்க்கப்படுவதில்லை, மாறாக கட்டமைப்பு மாற்றங்களால் தீர்க்கப்படுகின்றன என்பதை மறந்து போயுள்ளனர் என்கின்றனர்.

சில மக்கள் தங்களுக்கு எந்த மதம் மேலும் நம்பிக்கை இல்லை என்று அறிவித்து இருப்பதால் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று அர்த்தமல்ல, என்று திரு. எஸ்கிவெல் கூறுகிறார். அர்ஜென்டினாவில் எந்த மதம் அடையாளமும் பேண விரும்பாதவர்களில், 72 சதவீதம் பேர் ஆழ்நிலை "ஆற்றலை" நம்புவதாகக் கூறியுள்ளனர்; 34 சதவீதம் பேர் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை நம்புவதாகவும், 20 சதவீதம் பேர் இயேசு கிறிஸ்துவை நம்புவதாகவும் ; 29 சதவீதம் பேர் கடவுளை நம்புவதாகக் கூறினர்.

அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்ட போப் பிரான்சிஸ் இருப்பும் கத்தோலிக்க சபை உறுப்பினர் எண்ணிக்கைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் அளிக்கவில்லை என்கிறது தரவு.

புதிய போப், அந்த மோசமான போரின் காயங்களைக் குணப்படுத்தவும், கத்தோலிக்க படிநிலையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவுவார் என நம்பி இருந்ததாக கூறியிருந்தனர்..
தனது சொந்த மக்களை சந்திக்கும் விருப்பத்தில் இருந்த போப் தனது போப் அதிகார காலத்தில் சொந்த ஊர் செல்ல இயலாதே மறைந்து விட்டார் என்பது அர்ஜென்றீனா கத்தோலிக்கர்களுக்கு என்றும் துயர் தான்.
  
2. அழுக்குப் போர்

 அர்ஜென்டினா ராணுவ ஆட்சியின் ஏழு ஆண்டுகள்  (1976-83 அதிருப்தியாளர்கள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்காரர்களுக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்கள், "அழுக்குப் போர்" என்று அழைக்கப்படுகிறது.



அரசாங்கத்தின் சந்தேகத்திற்குரிய எதிர்ப்பாளர்கள் மற்றும் அப்பாவிகள் உட்பட 10,000 முதல் 30,000 பேர் வரை கொல்லப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் ஜனாதிபதி இசபெல் பெரோனை பதவி நீக்கம் செய்த இராணுவ ஆட்சிக்குழு, பல ஆண்டுகளாக தீவிரமடைந்து வந்த நகர்ப்புறத்தை தளமாகக் கொண்ட இடதுசாரி கிளர்ச்சியை ஒடுக்கியது.

 அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே, இராணுவ ஆட்சிக்குழு தேசிய சட்டமன்றத்தை மூடியதுடன் , தணிக்கை விதித்தது, தொழிற்சங்கங்களைத் தடை செய்தது மற்றும் மாநில மற்றும் நகராட்சி அரசாங்கங்களை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

1976 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பரவலாக இருந்த இடதுசாரி கெரில்லா நடவடிக்கைகளை அடக்கும் முயற்சியாக, தேசிய மறுசீரமைப்பு செயல்முறையை அறிமுகப்படுத்தியது.

தேசிய மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, நாசகாரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை தடுத்து வைப்பதற்காக 300 க்கும் மேற்பட்ட ரகசிய சிறைச்சாலைகளை அமைத்து மக்களைச் சிறைப்படுத்தியது.

வன்முறை போராளிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதாக கூறிய அரசாங்கம் மாணவர்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்கவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், இடதுசாரி ஆர்வலர்கள், மதகுருமார்கள் மற்றும் ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள் என்று கூறப்படுபவர்கள் அவர்களது குடும்பத்திர் என  பல்லாயிரக்கணக்கான காணாமல் போனவர்களில் அடங்குவர். இரவில் கைது செய்யப்பட்டு தடுப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள்  விசாரிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

முதலில், ர்ஜென்டினா பொதுமக்களில் பெரும்பாலோர் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு இந்த அடக்குமுறை அவசியம் என்று ஆதரித்தனர், ஆனால் சில ஆண்டுகளுக்குள், அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மக்ள் மத்தியில் எதிர்ப்பை வருவித்தன.

"அழுக்குப் போரில்" குழந்தைகளை இழந்த தாய்மார்கள் , ஜனாதிபதி மாளிகையை ஒட்டியுள்ள பிளாசா டி மாயோவில் நடத்தி வந்த வாராந்திர விழிப்புணர்வுப் போராட்டங்கள், "காணாமல் போனவர்கள்" மீது சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இருப்பினும், கடுமையான தணிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் ரகசிய காவல்துறையின் பொதுவான பயம் மூலம் ராணுவ ஆட்சியாளர்களால் பெரும்பாலான மக்களின் எதிர்ப்பை அடக்க முடிந்தது.

1980 வாக்கில், கிட்டத்தட்ட அனைத்து கிளர்ச்சி நடவடிக்கைகளையும் ஒடுக்கி விட்டிருந்தனர்,   இருப்பினும், அர்ஜென்டினா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றிய பதிவுகள் மற்றும் ஊழல் பற்றிய வளர்ந்து வரும் ஆதாரங்கள் வெளிவந்ததால், அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலை பாதிக்கப்பட்டது.
 
கிரேட் பிரிட்டனிடமிருந்து பால்க்லாந்து தீவுகளைக் கைப்பற்றுவதன் மூலம் அர்ஜென்டினா மக்களுடனான அதன் சட்டபூர்வமான பிடிப்யை மீட்டெடுக்க முயன்று தோல்வியுற்றது இதன்  ஆட்சியை மேலும் இழிவுபடுத்தியது . 1983 ஆம் ஆண்டு  அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற  ராணுவ ஆட்சி முடிவிற்கு வந்தது.

ஜனநாயக ரீதியாக டிசம்பர் 1983 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசாங்கம், "அழுக்குப்போர்" பற்றிய ஆதாரங்களை சேகரிக்க, காணாமல் போனவர்களின் மீட்புக்கான தேசிய ஆணையத்தை (CONADEP) உருவாக்கியது, இது 1976-83 ஆம் ஆண்டுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் இறுதியில் நீதியின் முன் நிறுத்தப்படும் செயல் திட்டத்தை  தொடங்கியது.

சர்வாதிகாரத்தின் கைகளின் சித்திரவதையிலிருந்து தப்பிய நோபல் பரிசு வென்ற அடோல்போ பெரெஸ் எஸ்கிவெல் கருத்துப்படி, அர்ஜென்டினா திருச்சபையின் அதிகாரத்தில் இருந்த குறிப்பிடத்தக்க பகுதியினர் ராணுவ ஆட்சியினருக்கு சந்தேகத்திற்கு இடமின்றி உடந்தையாக இருந்தனர். "மனித உரிமைகளுக்காகவும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தை தைரியத்துடனும் உறுதியுடனும் ஆதரிக்க ஒரு சில பாதிரியார்கள் மட்டுமே இருந்தனர்  என்று ஒரு அறிக்கையில் கூறினார்.


அர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும்
, சர்வாதிகார காலத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு குறித்து பல புத்தகங்களை எழுதியவருமான ஹொராசியோ வெர்பிட்ஸ்கி,  மக்கள்வாத ஜனாதிபதி ஜுவான் பெரோனின் விதவையான இசபெல் பெரோனின் அரசாங்கத்தை 1976 ஆம் ஆண்டில்  தூக்கியெறி அர்ஜென்டினாவின் இராணுவம், அமெரிக்காவால் நிதியுதவி செய்யப்பட்டு ஆதரிக்கப்பட்ட ஆபரேஷன் காண்டோர் எனப்படும் பெரிய அளவிலான அரசியல் சதித்திட்டங்களின் ஒரு பகுதியாகும் என்றார்.

இதன் விளைவாக உருவான இராணுவ சர்வாதிகாரம்,  அர்ஜென்டினாவின் குடிமக்களுக்கு எதிராக அழுக்குப் போர் என்ற  சித்திரவதை மற்றும் பயங்கரவாதத்திற்கு காரணமாகினது என்றார்.  

அரசியல் எதிர்ப்பாளர்களையும் இடதுசாரி, சோசலிச அல்லது சமூக நீதி காரணங்களுக்காக இணைந்திருப்பதாக சந்தேகித்த இராணுவ ஆட்சிக்குழு மக்களையும் விரட்டியடித்து, அவர்களை சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து கொலை செய்தது. இடதுசாரி ஆர்வலர்களை "பயங்கரவாதிகள்" என்று அழைத்து, சுமார் 30,000 பேரைக் கடத்தி கொன்றது. "பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதையின் போது இறந்தனர், மிகப்பெரிய குழிகளின் விளிம்பில் இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டனர், அல்லது விமானங்களில் இருந்து கடலில் வீசப்பட்டனர், போதைப்பொருள் செலுத்தப்பட்டனர்," என்று மார்குரைட் ஃபீட்லோவிட்ஸ் விளக்குகிறார். "அந்த நபர்கள் "காணாமல் போனவர்கள்" அல்லது டெசபரேசிடோஸ் என்று அறியப்பட்டனர்."
நம்பிக்கையற்ற தாய்மார்கள் குழு
 


1977 ஆம் ஆண்டில், நம்பிக்கையற்ற தாய்மார்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தத் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும், அவர்கள் பிளாசா டி மாயோவில் கூடி அணிவகுத்துச் சென்றனர். அரசாங்க அதிகாரிகள் முதலில் அவர்களை "லாஸ் லோகாஸ்", பைத்தியக்காரப் பெண்கள் என்று அழைப்பதன் மூலம் ஓரங்கட்டவும் அற்பமானவர்களாக காட்ட முயன்றனர்.  ஆனால் மக்களிடையே பின்னடைவு ஏற்படும் என்ற பயத்தில் இந்தக் குழுவை எவ்வாறு அடக்குவது என்று அவர்கள் குழப்பமடைந்தனர்.

ஆனால் ராணுவ  அரசாங்கம் அவர்கள் குழந்தைகள் மீது செய்த அதே வகையான வன்முறையை ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களுக்கு எதிராகத் திரும்பியது. டிசம்பர் 1977 இல், குழுவின் நிறுவனர்களில் ஒருவரான அசுசெனா வில்லாஃப்ளோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கொல்லப்பட்டு ஒரு வெகுஜன புதைகுழியில் வீசப்பட்டதாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தினர். குழுவின் நிறுவனர்களில் பலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால் பெண்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. அர்ஜென்டினா 1978 ஆம் ஆண்டு நடத்திய உலகக் கோப்பை போட்டி விளையாட்டு நேரம் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர், மேலும் தங்கள்  போராட்ட காரணத்தை வெளிப்படுத்த சர்வதேச செய்திகளைப் பயன்படுத்திக் கொண்டனர். அரசின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும்,. 1981 ஆம் ஆண்டில், அவர்கள் தங்கள் முதல் "எதிர்ப்பு அணிவகுப்பு"க்காக ஒன்றுகூடினர், இது 24 மணி நேர போராட்டமாகும் . இவர்களின் செயல்பாடு பொதுமக்களை இராணுவ ஆட்சிக்கு எதிராகத் திருப்பவும், மௌனம் களைந்து அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத  கொள்கை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் உதவியது.

1983 இல் அழுக்குப் போர் முடிவடைந்த பிறகு  காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் பாட்டிகள் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் கடத்தப்படுவதையும், கொல்லப்பட்டுவதையும், மற்று குடும்பங்களுக்குக் கொடுக்கப்படுவதையும்,  உண்மையான பெற்றோரைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் வளர்ந்த குழந்தைகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்னர்.

1984 இல் பாதிக்கப்பட்டவர்களூடன்  அமெரிக்க மரபியலாளர் மேரி-கிளேர் கிங்கில் இணைந்து பணியாற்றத் தொடங்கியது போராட்டத்தை வலுப்ப்டுத்த உதவியது.  பாட்டிகளின் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏவை, அவர்களின் பேரக்குழந்தைகளுடன் பொருத்த உதவும் ஒரு வழியை கிங் மற்றும் அவரது சகாக்கள் உருவாக்கினர். இந்த நுட்பம் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது,. ஆனால் இது ஒரு தேசிய மரபணு தரவுத்தளத்தை உருவாக்கவும் வழிவகுத்தது. இன்றுவரை, இந்த அமைப்பு டிஎன்ஏ அடையாள நுட்பங்களைப் பயன்படுத்தி 128 திருடப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

1983 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தை கைவிட்டு ஜனநாயகத் தேர்தல்களுக்கு ஒப்புக்கொண்டதிலிருந்து அழுக்குப் போர் முடிவுக்கு வந்துள்ளது.  அதன் பின்னர், கிட்டத்தட்ட 900 முன்னாள் இராணுவ ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
 ஆனால் அழுக்குப் போரின் கொடூரத்தால் காணாமல் போன குழந்தைகளின் மர்மம் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, டெசபரேசிடோக்களின் தாய்மார்களும் பாட்டிகளும் உண்மைக்காகப் போராடும் இடத்தில் தான்  உள்ளனர்.

1970களில் கத்தோலிக்க சபை இராணுவ அரசாங்கத்தை ஆதரித்து தேசபக்திக்கு அழைப்பு விடுத்தபோது, ​​ஜார்ஜ் பெர்கோக்லியோ(போப் பிரான்சிஸ்) ஜேசுட் அமைப்பின் தலைவராக இருந்தார் என்கிறது .  புதிய போப் ஆட்சியின் போது இடதுசாரி சார்புடைய பாதிரியார்களை புறக்கணித்ததாகவும், அவர்களின் கைதுகள் மற்றும் கொலைகளுக்கு நேரடியாகப் பங்களித்ததாகவும், சர்ச் படிநிலை மற்றும் இராணுவ ஆட்சிக்குழுவின் கூட்டுச் சதித்திட்டத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் போப் மேல்  குற்றம் சாட்டியுள்ளார்.
.
1976 முதல் 1983 வரை அர்ஜென்டினாவை ஆண்ட இராணுவ ஆட்சிக்குழுவால் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் கடத்தல்களின் "மோசமான போரின்" போது கத்தோலிக்க திருச்சபை மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் மௌனமாக இருந்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

எல் சைலென்சியோ" ("தி சைலன்ஸ்") என்ற தேவாலயத்தைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் முக்கிய பத்திரிகையாளரான ஹொராசியோ வெர்பிட்ஸ்கி , பெர்கோக்லியோ இரண்டு பாதிரியார்களை பாதுகாக்க வேண்டிய தனது உத்தரவை வாபஸ் பெற்றது வழியாக இராணுவத்திற்கு கடத்தலுக்கு பச்சைக்கொடி காட்டியதாகக் கூறுகிறார்.

17 Mar 2025

எனது ஆண்கள்- சாகித்ய அக்காதமி விருது/ காலச்சுவடு பதிப்பகம்

 

மலையாளம் மொழியில் என்ற  ஆணுங்கள் என்ற பெயரில் கேரளாவில் வெளியான புத்தகம், எனது ஆண்கள் என்ற பெயரில், தமிழில் முனைவர் பா. விமலாவால் மொழிபெயர்க்கபட்டு சாகித்திய அக்காதமி விருதும் பெற்றுள்ளது.  

 

இது ஒரு சுயவரலாறு என்பதால் இன்னொருவரின் வாழ்க்கையை  விமர்சிக்கவோ அதைபற்றி விவாதிக்கவோ இங்கு இடம் இல்லை. இருப்பினும்  தமிழ் வெளிக்கு  விருதுடன் வருகை தரும் போது எவ்விதமான புத்தகங்கள் தமிழுக்கு வருகிறது என்பதை அவதானிக்க பகிர்கிறேன்.   

 

பொருளடக்கம்

  •  முன்னுரை: கேரளத்தில் ஆண்கள்
  • மொழி பெயர்ப்பாளர் முன்னுரை
  • ரவுடிக் கட்டும் வரப்பு முத்தமும்
  • தட்டான் தொட்டால்...
  • சிறிலங்குச்சீ கதை
  • மசாலா தோசையும் கூரைப்பேனும்
  • இடைச்சந்துகளில் காதல்
  • சாராயமும் ஆணும் மங்களூரும்
  • விஜயா லாட்ஜில் மூன்று காதலர்கள்
  • பாரிஜாதம் பூத்துக் குலுங்கிய... 
  • காதலுக்கு பயதில்லை!
  • உண்மையான காதலன்

 

இப்படியான தலைப்பில் தமிழில் இப்புத்தகம் வெளிவந்து உள்ளது. 

இதன் மலையாளப்பதிப்பு டிசி பதிப்பகத்தால் எட்டாவது பதிப்பு கண்டுள்ளது. பக்கம் 118 ரூபாய் 125 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே புத்தகம் தமிழில் 159 பக்கத்துடன் 200 ரூபாய்க்கு காலச்சுவடு வெளியிடுகிறது. 2020 ல் முதல் பதிப்பு வந்துள்ளது


என்டே ஆணுங்கள் என்ற தனது புத்தகத்தின் மூலம்,  ஜமீலா மீண்டும் ஒருமுறை மலையாளிகளின் ஆண்-பெண் உறவுகளுக்கான அணுகுமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். இந்த வெளிப்பாடுகள் நிச்சயமாக சமூகத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று பின் அட்டையில் சூளுரைக்கப்பட்டுள்ளது

ஜெமிலாவின் தனி மனித வாழ்க்கை சார்ந்த மற்றும் பார்வைகள் உள்ளடங்கிய இப்புத்தகம் மலையாளி ஆண் பெண் உறவு நிலை பற்றி அறிய எவ்விதம் உதவும் என்ற கேள்வியுடன் புத்தகத்தை அணுகினால்  ஜெமீலாவின் தொழில் சார்ந்த வெளிப்பாடுகளை காணலாம்

தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இவ்வாறாக குறிப்பிட்டு உள்ளனர், கேரளா பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார், மேலும் பெண்கள் மீதான ஆண்கள் கண்ணோட்த்தை அணுகுமுறைகளை தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் எடுத்துக் காட்டுகிறார். 


தனது சொந்த அனுபவம் என்கிற போது தான் நளினி யார் என்ற கேள்வி எழுகிறது. அந்த சொந்த அனுபவம் பெருவாரி பெண்களுக்கான அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை.  அதனால் பெருவாரி மக்கள் அடங்கிய சமூகத்தை பற்றிய ஜெமீலாவின் பார்வை எவ்விதம் இருந்தது என அறியலாம்.

வீட்டு வறுமையால் தனது 17 வயதில் மண் அள்ள போன இடத்தில் இருந்து துவங்கிய பதின்ம வயது விளையாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது வரலாறு. (இவருடைய முதல் புத்தகத்தில் ஒன்பது  வயது துவங்கி வேலைக்கு போனதாக குறிப்பிட்டு உள்ளார். நளினியை, லாறியில் மண் அள்ள வந்த ஜோணி ஜொள்ளு விட்டது, அதன் பின்பு முத்தம் தந்தது  என நகரும் கதையில், நளினியின் ஒரு சுய விளம்பரத்துடன் துவங்குகிறது “நான் எதற்குமே வளைந்து கொடுக்காதவள், நான் தான் சரி,  நான் பெரிய வீட்டு பெண் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்தது ஜோணிடம் தோன்றின காதல் யாரிடமும் பின்பு தோன்றவில்லை என தன் வரலாற்றை ஆரம்பிக்கிறார். 


கல்யாணம் ஆகி இரு குழந்தைகளுக்கு தாய் ஆன நிலையில், தனது 27 வது வயதில் பாலியல் குழுவில் வேலைக்கு சேர்கிறார். இவர்கள் இது போன்ற குழுவில் நிலைத்து நிற்க சிலருடன் சில உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதற்கு காதல் என்கின்றனர். அந்நிலையில் மானிக்கா மேலும்  அதே காலபகுதியில் இன்னொருவருடனும் உறவு என்கிறார். இந்த உறவு என்பதை தனி உறவு தொழில் முறை உறவு என்று பயன்படுத்தி கொள்கின்றனர்.


இவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து சாராயம் மது, சிகரட் போன்றவை பரிசாக கிடைப்பதாக குறிப்பிடுகிறார். 1979 காலப்பகுதியில் வாரம் கடைசி நாட்களில் ஒரு தையல் டீச்சர் பாலியல் வேலைக்கு வந்தாகவும் சொல்கிறார். அவ்வகையில் டீச்சரை பார்க்க வரும் தங்க ஆசாரி இவருக்கும் வாடிக்கையாளர் ஆகிறார். அவர் தனக்கு விருப்பமான ஒருவர் என்கிறார்.  ஒன்றைரை வருடம் நீடித்த உறவை குட்டநாட்டை விட்டு வெளியேறியதால் தொடர இயலாது முறிந்தது  என்றாலும், அவன் நினைப்பு கனக்காலம் இருந்து என நினைவு கூற்கிறாள் ஜெமீலா.


அந்த பாலியல் குழுவில் இருந்து சண்டையிட்டு வெளியேறின ஜெமீலா திருச்சூர் தெருவை வந்தடைகிறாள். அங்கு தெருவில் நின்று வாடிக்கையாளர்களை பிடிக்கும் லைலாவுடன் கூட்டு கிடைக்க அவள் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு இவர்களுக்கு வாடிக்கையாளர்களை,இவர்கள் பக்கம் வருவித்து கொடுக்கும் பாலன் போன்ற எடுபிடிகள் சகவாசம், பணத்திற்காக கூட்டிகொடுக்கும் தொழில் செய்யும் ஆண்களை கண்டு கொள்ளவும் தங்கள் இணைப்பை விரிவாக்கவும் இயல்கிறது. 


இவர்கள் வாழ்க்கையில் சாராயம் சாதாரணமாக உள்ளது. பெண்களே சாராயக்கடை சென்று மது அருந்துகின்றனர். அப்போதைய திருப்தி, அப்போதைக்கு கிடைக்கும் வாடிக்கையாளர்கள் என்பதை தவிர்த்து , சமூக அக்கறை என எதுவும் இருப்பதாக இல்லை.  கள்ளு வாங்கி கொடுத்த பாலண்ணா, அவன் மனைவியை அவள் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு ஜெமீலாவை தேடி வருகிறான். எவன் வந்தாலும் ஜெமீலா கண் பணத்தில் தான். எவனிடம் பணம் எவ்வளவு இருக்கும் எதற்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்ற கணக்கு உள்ளது. அவ்வகையில் பணத்தை வாங்கி விட்டு வேலை பார்க்கும் ஆளாகவே உள்ளாள்.உணர்வால் ஏமாற்றப்படும் போது கடந்து போகும் ஜெமீலா பணத்தால் ஏமாறாது இருக்க மிகவும் கவனமாக உள்ளாள். அதை தனக்கு இழுக்கு என்றும் நினைத்துக் கொள்கிறாள்.


”பாலண்ணா,  பணத்தை பார்த்தால் தான் இதில் எல்லாம் எனக்கு விருப்பம் வரும் என்கிறாள்”. அவன் கன நாட்களாக  கஷ்டப்பட்டு சேர்த்து வைத்து இருந்த ஐந்து  ரூபாயை கொடுக்கிறான். அப்படி தனது மனைவி லக்‌ஷ்மிக்கு தெரியாம பாலா தன்னுடன் வந்ததில் ஜெமீலாவிற்கு அப்படி ஒரு பெருமை. ஜெமீலாவில் இந்த பெருமை எங்கும் குறைவில்லை. வாழ்வது பிழைப்பது எல்லாம் ஈன வழியாக இருந்தாலும்  தன் அழகை பற்றிய ஒரு மேம்பட்ட பிம்பம் ஒட்டிக் கொண்டே இருக்கிறது.  தன் அழகை, முடியை, கண்னை பார்த்தால் எந்த கொம்பனும் விழுந்து விடுவான் என பலபோதும் பெருமை கொள்கிறாள்.  அதே போல் தலைக்கனமாக தெரிகிறவனை தனக்கு பின்னால் வரவைப்பதில் ஒரு வன்மம் பிடித்த இன்பத்தை தொடர்ந்து பேணுகிறாள்.  இதே பாலன் பின்பு ஜெமீலாவிற்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் ஆளாக வலம் வருகிறான்.  பாலன் என்பவனை கூட்டி கொடுப்பவன் என்று அல்ல அறிமுகப்டுத்தி கொடுப்பவன் என்று சொல்ல வேண்டும் என சொல்கிறாள்.  நளினி வாழ்க்கை முழுக்க மற்றவர்களை தனக்கு கீழ் வைக்கும்  ஒரு தந்திரம் உள்ளது. அதை திட்டமிட்டே செய்கிறாள்.


இப்படியே போய் கொண்டு இருக்க லைலாவிற்கும் ஜெமீலாவும் தங்களது வாடிக்கையாளர்களை; ஒருத்திக்கு தெரியாது இன்னொருத்தி திருடிக்  கொள்கிறார்கள்.  இதில் ஒரே வீட்டில் தங்கி இருந்தாலும் இவர்களுக்குள்  பாலியல் வியாபாரத்தில் போட்டி நிலவுகிறது.  இதனிடையில் அரசு கொடுக்கும் வீட்டை கைபற்ற வேண்டும், வீட்டின்  உடமையாளன் ரவியையும்  தன்வசப்படுத்தி காசு பணம் பார்க்க வேண்டும் என ஜெமீலாவில் எண்ணம் பரபரக்கிறது.  ஜெமீலாவின் தேடல்களில்  முழுக்க பணம் பணம் என்றே உள்ளது . ஆனால் ஒரு போதும் பணத்துடன் வாழவும் இல்லை. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் உடை கிடைக்கும்  கிடைக்கும் இடத்தில் வாழ்க்கை என காலத்தை நகத்துகிறாள்.

 இதில் கரீம் என்பவன் லைலா மற்றும் ஜெமீலாவை ஒரே நேரம் வைத்துக்கொள்ள திட்டமிட; ஜமீலாவிற்கு   இரண்டாம் நிலையில் விருப்பம் இல்லை என்பதால் கார் ஓட்டுனர் பழனிமலையை பின்பு காதலன்/ வாடிக்கையாளன் ஆக்கி கொள்கிறாள். அதற்கு முக்கிய காரணமாக பழனி கையில் பணம் இருக்கிறது என்கிறாள். 

 நளினி ஜெமீலாவிற்கு  இவர்கள் மனைவியை விட்டு வருவதால் அவர்கள் குடும்பங்களில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் எல்லாம் தெரிகிறது.  ஆனால் ஜெனீலாவின் நினைப்பு ’தான் ஒரு ஆல்பா பெண்’ என்பதாகவே பல போதும் உள்ளது. தனது முடி மற்றும் முக அழகை வாடிக்கையாளர்கள் மனைவியுடன் பொருத்தி பார்த்து தன்னில் பெருமைப் பட்டுகொள்கிறாள். . பழனி நளினிக்காக தன் மனைவியை விட்டுவிட தயாராக இருந்தான் என்பதை பெருமையாக நினைத்துக் கொள்கிறாள். இதில் மலையாளியான பழனி பூ வாங்கி கொடுத்து தன்னை சினிமாவிற்கு அழைத்து செல்வதில் தமிழ் சாயல் இருந்தது என புளகாகிதம் அடைகிறாள். இதில் பழனிக்கு தன் மேல் காதல் உருவானது என சில உருட்டும் விடுகிறார் ஜெமீலா. வேசியிடம் போய் பேசி தன் சகோதரி கணவனை பிரித்து கொண்டு வருவதை சிறுமையாக நினைத்தார்களாம் பழனியின் மச்சிர்கள் ஆனால் அவர்கள் வந்தாலும் ஜெமீலாவிற்கு வாடிக்கையாளர்கள் ஆகி இருப்பார்கள் என்று பெருமிதம் கொள்கிறாள். ஒரு வழியாக பழனியை இவளிடம் இருந்து மீட்டு பழனி மச்சினன்கள் தன் தங்கையில் வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றனர்.


 ஜெமீலா கண், மனம் முழுக்க 20, 30 50 ரூபாய் என்று தான் உள்ளதே தவிற அவளுக்கு யாரிடமும் ஒரு பரிவும் இல்லை. இங்கே நிறைய ஆண்களை தனக்கு சுற்றும் சேர்த்து இடியப்ப சிக்கலாகும் வாழ்க்கையில் இருந்து விடுபட கேரளா திருச்சூர் செல்கிறாள் நளினி. அங்கு கண்ணாடி விற்கும் பாபு அறிமுகம் ஆகிறான். அவன்  மனைவியை போன்றே உடன் அழைத்து செல்கிறான். இவர்கள் தொடர்பை அறிந்த பாபுவின் காதலி பிரியாவும் பிரிந்து போய் விடுகிறாள்.

அக்காலத்தில் இருந்து நான் அழகானவள் என்ற எண்ணம் தனக்கு உண்டு எனவும் உடல்முழுக்க சீலப்பேன் பிடித்த பாபு, இவளை கல்யாணம் செய்ய எண்ணினாலும் தன்னுடைய மற்ற விஷயங்கள் எல்லாம் நின்று விடுமே என்று நினைத்த ஜெமீலா,  விருப்பம் அது இதுன்னு தன்னுடைய பணத்தை கொடுக்காது போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். அதே போல பாபுவை தேவை முடிந்ததும் களட்டி விடுவதிலும் உன்னிப்பாக இருக்கிறாள்.

அடுத்து சுனில் என்ற பிராமணன் உடன் சுற்றுகிறாள். இரவில் ஒரு பள்ளிக்கூட அறையை தாங்கள்  பயன்படுத்தியதாக சொல்கிறாள் ஜெமீலா. பாடசாலை அறையை பள்ளியறையாக மாற்றினதில் ஜெமீலாவிற்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை.  அப்படி இரவில் கிடைக்கும் பணத்தை வைத்து பகலில் சுற்றித்திரிந்து வாழ்வதாக சொல்கிறாள். ஆனால் பிராமணன் 50 ரூபாய் கொடுத்து தன்னுடன் மட்டுமே வரவேண்டும் என நிபந்தனை விதிக்கிறான். அவனுடன் சேர்ந்து வீட்டு மாடிகளில் ஏணி வைத்து செல்வது என உற்சாகமாக திரிலிங்காக இருப்பதாக சொல்கிறாள். பணம் கொடுப்பவன் நிர்ணயிக்கும் இடங்களுக்கு செல்வது அவர்கள் கட்டுபாட்டில் பயணிப்பது என இவர்கள் கட்டற்ற கட்டுப்பாடு 50 ரூபாய் கொடுப்பவனில் அடிமையாக மாறுகிற போது ஜெமீலா பணத்திற்காக சகித்தும் கொள்கிறாள். 

ஜெமீலா பாலியல் தொழிலாளியான பின்பு சுனிலிடம் முதல் காதல் வந்ததாம். 5-6 மாதங்கள் கடந்த நிலையில் சுனிலின் வீட்டில் மாட்டி கொள்கிறார்கள். அங்கு அவன் அண்ணன் கருணன் இவளை தனக்கு அமைத்து தர சுனிலிடம் கேட்டதாக  எழுதி வைத்து உள்ளாள். பின்பு திரில் போய்  சுனில் மறைய, தோட்டிக்காரன் தங்கப்பனுடன் செல்கிறாள். தோட்டியுடன் தான் செல்வதால் பிராமணன் சுனில் தன்னில் விரும்பவில்லை என்ற சமூக ஜாதி புரட்சி பொய்யையும் எழுதி வைத்துள்ளார்.அப்படி எழுத்துக் கலையையும் தன் நலம்  சார்ந்து உருவாக்க மெனெக்கெட்டுள்ளார்.


அந்த ஆண்கள் இவளிடன் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்கள் அழகு, எதிர்பார்ப்பை  பற்றி நளினியிடம் சொல்கிறது  நளினிக்கு  பொறாமையையும் இயலாமையும் உருவாக்குகிறது. நளினி தனது வாடிக்கையாளர்களில் தனது இதமான காதல் அனுபவத்தை, பரிவான கணவனை தெரிந்தோ தெரியாமலோ  தேடுகிறாள் ஆனால் யாருக்கும் மனைவி ஆகி கட்டுக்குள் வாழவும் விரும்பவில்லை.  ஆனால் நளினிக்கு நல்ல குடும்பம் கணவன் அமைய வில்லை என்பதை எங்கும் குறையாக வைத்துக் கொள்ளவும் இல்லை.  

அடுத்து நளினியின் பயணம் மாங்களூர் பார்த்து செல்கிறது.  அங்கு வேலாயுதன் என்ற ஒருவன் கணவன் பணிக்கு கிடைக்கிறான். அதில் மாத்தூஸ் என்ற ஒருவனுடன் சண்டையிடும் சூழல் வருகிறது. அதன் பின் கோயக்கா ரவுடி தொடர்பு கிடைத்த நளினிக்கு,  தான் ஒரு பேட்டை ரவுடி என்ற நினைப்பை வரவைக்கிறது. தான் ரோட்டில் நடந்து செல்லும் போது    வழியில் செல்பவர்கள் வணக்கம் சொல்வார்கள் என்பதில் பெருமை கொள்கிறாள். இவள் ரவுடி ஆனதால் ஹமீதுக்கு இவள் மேல் ஆராதனை என்றும் நினைத்துக் கொள்கிறாள். மாத்தூஸிடம் சண்டை என்றதும் மாத்தூஸுடன் வாழும் பெண்ணை குறை சொல்ல ஜெமீலா தயங்கவில்லை. அவள் தன் கணவனை விட்டு விட்டு மாத்தூஸுடன் சேர்ந்து வாழ்கிறாள் என்பது ஜெமீலாவிற்கு இகழ்ச்சியாக உள்ளது. 

 

அடுத்து  கேரளா வந்து லாட்ஜுகளில் பாலியல் தொழில் செய்து வருகிறதை  விண்வெளிக்கு சென்றது மாதிரி கதை விடுகிறார். அங்கு வைத்து சாகுல் ஹமீதை சந்தித்தாகவும் அவனை கல்யாணம் செய்ததாகவும் அடுத்த வரலாற்று பொய் புரள்கிறது. சாகுல் ஜெயிலுக்கு போக வேண்டி வந்ததால் அவனை காப்பாற்ற மறுபடியும் பாலியல் தொழில் செய்தது போலவும் கதை விடுகிறார்.

 இவருடைய முதல் புத்தகம் ஒரு பாலியல்தொழிலாளியில் சரித்திரத்தில் சொன்ன சாகுல் கதைக்கும் இங்கு சொல்லும் கதைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. https://josephinetalks.blogspot.com/2014/07/blog-post_27.html


அப்படி 5 ரூபாயில் ஆரம்பித்து, 2000 ஆண்டுகளில் 200 ரூபாய் கட்டணம் பெறும் தொழிலாளியாக மாறுகிறாள் நளினி. ஆனால் வழியே வந்தது வழியே போகும் என நளினி பணத்தை துரத்த, திட்டமிடாத செலவு வாழ்க்கையால் வறுமை நளினியை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

 

நளினி இனி தன் சரிதை என எழுதாமல் புனைவு புதினம் என்றே எழுதி துவங்கலாம்.

இந்த கதை எப்படி கேரளா பண்பாட்டு தளத்தை கேள்விக்கு உள்ளாக்கும். அரசே மீட்பு பணி செய்து இவர்களுக்கு வேலைகள் அமைத்து கொடுத்தாலும் இவர்கள் விரும்பும் ’திரில் பாலியல்’ வாழ்க்கையை விட்டு வரப்போவது மாதிரி இல்லை.

இப்புத்தகம் ஒரு சராசரி பெண்ணுக்கு என்ன கருத்தாக்கம் தருகிறது. திரில் காதல் போன்ற வார்த்தைகள் தேன் புரட்டின ரொட்டி  இருப்பது போல இருந்தாலும்,  அதை சுற்றி ஈக்கள் மொய்த்தது  போன்ற வாழ்க்கையை சராசரி பெண்கள் விரும்புவார்களா? பெருவாரி நளினியின் வாடிக்கையாளர்களான ஆண்கள் ஒரு நாள், ஒரு முறை, ஒரு மாதம், கூடிப்போனால் ஒரு வருடத்துடன் இவளை விட்டு போய் விடுகின்றனர் அல்லது நளினி இடம் பெயர்ந்து தப்பித்து போய் விடுகிறாள்.

முதல் புத்தகத்தில் இருந்த நேர்மையான எழுத்தை சவால் விடும் விதம் பொய்களில் மெனையப்பட்ட, கட்டற்ற கற்பனையின்  தொகுப்பாக  இப்புத்தகம் உள்ளது.

முன்னுரையில் தமிழ் ஆண்களுக்கு மலையாளி பெண்கள் மேல் இருக்கும் மரியாதை மலையாளி ஆண்களுக்கு இல்லை என குறைபடுகிறார்.  தமிழ் ஆண்கள், சாதாரண மலையாளிப் பெண்களை பற்றி கொண்டு இருக்கும்  இளக்கார பார்வையை  நாகர்கோயிலில் குடிபுகுந்து இருக்கும் நளினிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் நல்லது.

கட்டற்ற பாலியல் தேவை, வெட்கம் மானம் அற்ற ஒரு பெண்ணின் பணத்திற்கான வேட்கையும், ஆண்கள் மேல் கொண்ட வன்மமும், தனது பிடிவாதங்களுக்காக எவ்வித  சகதியிலும் உருள்வேன் என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணின் வாழ்க்கை சரிதையை தமிழ் வெளிக்கு கொண்டு வரும் நமது இலக்கிய அரசியல் உலகின் நோக்கம் என்னவாக இருக்கும். 

 இப்படியான ஒரு சூழலில் எந்த தமிழ் பெண்ணும் வரக்கூடாது என்றா! என்று தெரியவில்லை. ஆனால் நளினிக்கு தான் வாழ்ந்த வாழ்க்கை மேல் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அவருக்கு ஆண்கள் மேலுள்ள எகத்தாளம் ஆள்மனதில் உள்ள வெறுப்பை ஆண்களை வெறும் பிண்டம் போல நினைத்து எழுதி வைத்து உள்ளார்.


இலக்கியவாதிகளுக்கும் பாலியல்தொழிலாளிகளுக்கும் நிறைய இலக்கிய உறவுகள் உண்டு, அதை மலையாள எழுத்தாளர்கள் பூனத்தில் குஞ்சப்துள்ள போன்றோர் சொல்வது மாதிரி எந்த தமிழ் எழுத்தாளனும் உண்மையை சொல்லப் போவது இல்லை.


 இது பெண்ணியமா?  பெண் விடுதலையா, பெண் பார்வையா, ஆண் விரோதமா என்றில்லாது இந்திய அரசியல் அமைப்பு தரவேண்டிய கவுரவமான வாழ்க்கைக்கு எதிரான வாழ்வியல் ஆக உள்ளது. இது போன்ற புத்தகங்கள் அரசின் கண்ணை திறக்க வேண்டும். 


ஒரு பாலியல் தொழிலாளியான பெண் ஆண்கள் மேல் வைத்துள்ள நையாண்டியை வாசித்து தெரிந்து கொள்ளலாம். பாலியல் தொழிலாளி எழுதிய புத்தகம் என்பதால் பாலியல் கல்வி சார்ந்து ஏதும் கற்க உண்டா என்று பார்த்தால் மொத்ததில்  மனப்பிறழ்வு பாலியல் இன்பத்தை எடுத்துரைப்பது போல தான் உள்ளது. தொட்டால் 10 ரூபாய், பார்த்தால் 20, பேசினால் 30, படுத்தால் 50 என ஜெமீலாவில் பணப்பாலியல் எண்ணங்களின் தொகுப்பாகவே உள்ளது.

உள்ளடக்கம் யாருக்கானது என்பதே கேள்வி. பாலியல் தொழிலை எடுக்க போகும் பெண்களுக்கு என்றாலும் இப்புத்தகம் மிகவும் நுணுக்கமற்றது, அருவருப்பான வாழ்க்கை பார்வையை சொல்வது. பெண்களை பயன்படுத்தும் ஆண்கள், ஆண்களுக்காக சண்டையிடும் பெண்கள் என பெண்களை வெறும் சதை பிண்டமாக பார்க்கும் சமூகத்திற்கு  தன்னை முழுமனதோடு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொடுத்த 'திரில்' நளினியுடையது மட்டுமே இதன் கருத்தாக்கம். 

பாலியல் தொழிலில் உள்ள நுட்பத்தை, எங்கே நிற்க வேண்டும் எவ்விதம் உடை அணிய வேண்டும், எப்படி பேசவேண்டும்,  யார் யாருடன் இருந்தார் போன்ற பெருமை  தவிர்த்து இத்தொழிலால் உடல், உள்ள நிலையில் பாதிக்கப்பட்டதை பகிரவே இல்லை. இத்தொழிலில் இருக்கும் போது தன்னுடைய பெற்ற பிள்ளைகள் பாதிப்படைந்ததை பற்றியோ, ஊர் ஊராக இடம் பெயர்வதால் தங்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கையை இழப்பதை பற்றியோ குறிப்புகள் இல்லை. 

இன்னொரு புறம் அரசு பெண்களுக்கான கன்னியமான வாழ்க்கை உரிமையை பெற்றுதரவேண்டும். அதை கண்டு கொள்ளாத விதம் பெண்களை மேலும் பாலியல் பொருளாக மாற்றும் பொதுமைப்படுத்தும் ஒரு தந்திரமும் இப்புத்தக குரலில் உள்ளது 

பொதுவாக மலையாளப்புத்தகம் அதன் மூல மொழி மலையாளத்தில் வாசிக்க விரும்பும் நான், இப்புத்தகத்தின் மொழிப்பெயர்பாளரான என் தோழிக்காக வாங்கி வாசித்தேன்.  மொழி பெயர்ப்பு சிறப்பு எளிதாக வாசிக்க இயன்றது. புத்தக அட்டையும் ஆண்களை விழுங்கும் பெரும் பாம்பின் படத்துடன் சிறப்பாக வந்துள்ளது 


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பல திரைப்படங்களில், விபச்சாரம் தவறில்லை என்றும், விபச்சாரிகள் அனுதாபம் தேடுபவர்களாகவும், சில சமயங்களில் மற்ற தொழில்களைப் போலவே இது ஒரு உன்னதமான தொழிலாகவும் காட்டப்படுகிறது. விபச்சாரம் உலகின் மிகப் பழமையான தொழில் என்று மக்கள் கூறுகிறார்கள். அது ஒரு தொழிலா? இது மனிதகுலத்திற்கு எதிராக செய்யப்பட்ட மிகப் பழமையான குற்றம் என்றும், அது நிறுத்தப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்களை சமூகத்தின் மற்றவர்களுடன் ஒருங்கிணைப்பதில் அரசாங்கங்கள் கடுமையாக பாடுபட்டு அவர்களை இந்தக் கொடூரமான தொழிலில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி, பெண்களை விற்காமல் கண்ணியத்துடனும், பிரகாசமான எதிர்காலத்துடனும் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு .

 பாலியல் தொழிலை கைவிடத் தயாராக இருக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு  அரசை கேட்க வேண்டும். அத்துடன் பாலியல் தொழிலாளிகளூக்கான லைசன்ஸ் கொடுக்கலாம். அதற்காக தான் நளினி போராடியும் வருகிறார்.