9 May 2015

புரக்கணிக்கப்பட்ட குருசடியின் வேதனை!

நண்பர்களுடன் எங்கள் ஊருக்கு போகவேண்டும் என ஆலோசனை கொள்ளும்  வேளையில்  எங்கள் ஊரின் நினைவுகள் ஆழ்ந்து விட்டேன். கடந்த 80 வருடமாக பெரியாரின் அடையாளமாக பலரின் ஆறுதலாக  இருந்த குருசடி இனி அங்கு இல்லை என்று நினைக்கும் போதே கவலை தொண்டையை அடைக்கின்றது . இந்த குருசடி ஒரு கிருஸ்தவ தேவாலைய வளாகத்தில் இருந்திருந்தாலும் மதங்கள் கடந்து பல மனிதர்களை தேற்றிய இடம். பல கலாச்சார, மத மக்களை ஒன்று கூட வைத்த இடம். அந்த பீடத்தில் மெழுதுவத்தி பத்த வைக்காத ஒருவர் கூட எங்க ஊரில் இருக்கமாட்டார்கள்.  குருசடியை திரும்பி பார்க்காது எந்த மனிதனும் அந்த பகுதியை கடந்து போயிருக்க மாட்டான். .  குருசடி உடைக்கப்படும் போது பொது  மக்கள் கண்ணீர் வடித்துள்ளனர் சிலர் தங்கள் மனதிலே ஏங்கி அழுதுள்ளனர். ஆனால் ஊடகத்தில் வந்த செய்தி ஆகட்டும் மக்கள் நாட்டின் வளர்ச்சியை கருதி     குருசடியை தானாக முன் வந்து உடைத்து ரோடு விரிவடைய உதவினர் என்று கூறியுள்ளது. குருசடியை ஏன் உடைத்தனர்? ஒரு இனத்தை அதன் இருட் நாட்களில் உழைத்த ஒரு இனத்தை வேருடன்  அழிக்கும் விரட்டும் நிகழ்வுக்கு முன்னோடியாக இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டுள்ளது.   
                                                      வண்டிப்பெரியார்  என்ற ஊர் கரைபுரண்டோடும் ஒரு நதியின் இரு கரையும் இணைக்கும் சிற்றூர் ஆகும். இக்கரை தமிழக மக்களும் அக்கரை பக்கம் மலையாள தேசவும் வியாபார தொடர்பாடல் பேணும் ஒரு வியாபார தலமாக இருந்திருக்க வேண்டும். இக்கரை அடையும் வண்டியிலுள்ள பொருளை ஒரு தோணியில் ஏற்றி பெரியார் நதியின் ஊடாக கரை கடந்தால் அந்த பொருட்கள் எளிதாக கேரளா தேசம் நோக்கி செல்ல இயலும். ஆதலால் வண்டிப்பெரியார் கரை ஓரம் எங்கும் தமிழ் வியாபாரிகளையை நீங்கள் இன்றும் காண இயலும். இந்த நதியில் எப்படி ஒரு பாலம் வந்தது என்றால் அது ஆங்கிலேயரின் திறமைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்து காட்டாகும். முல்லைப்பெரியார் டாம் கட்டின காலயளவில் உருவாகினது தான் இந்த பாலவும். புனலூர் பாலம் போன்றே கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் பாலம். ஆங்கிலேயர்களின் உழைப்பை எடுத்து காட்டும் வண்ணம் 100 வருடம் கடந்த பின்பும்  கனரக வாகனம் கடந்து போகும் போது ஏற்படும் ஒரு சிறு நடக்கத்துடன் நிலைகொள்கின்றது. இந்த பாலம் ஒரு குருவிக்கு எப்படி மரமோ அது போன்றே பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க அமரும் இடமாக இருந்தது . எந்த கஞ்சனும் பிச்சைக்காரர்களை ஏமாற்றி தப்பிக்க இயலாது. தேனம்மா அங்கு கண்டுள்ளேன். இரு கால்களும் முடமான ஒரு பெண் அங்கு இருப்பார். காளை கிறுக்கன் ஓயாது நடக்கும் வழியும் இதுவே. ஏன் என்றால் வண்டிப்பெரியாற்றில் ஒரு முறை நடப்பது என்றால் பாலத்தை கடந்து நடப்பது ஆகும்.                                                                                                                                                                                                                                        இந்த பாலத்தின் ஒரு கரையில் அழகான கிருஸ்தவ ஆலயம் உள்ளது. பாலத்தின் வயது ஆலயத்திற்கும் இருக்க வேண்டும். அதன் தோற்றம் ஒரு கப்பல் போன்று இருக்கும்.  வெளிப்புற சுவரில்  பரலோக அன்னை உயிர்ப்பது போன்ற ஒரு சித்திரம் தீட்டியிருக்கும். அந்த கோயிலின் ஒரு ஓரத்தில் இருந்து நோக்கினால் பாலத்தில் நடந்து செல்லும் மனிதர்களை காணலாம். பாலத்தின் அடியில் நடமாடும் மக்களையும் காணலாம்.  வெள்ளப்பெருக்கு வேளையில் அடித்து செல்லப்படும் வீடுகள் மிருகங்கள் ஏன் மனிதர்கள் கூட காணலாம்.                                                                                                                                                                         
அந்த ஆலயத்தின் உறுப்பினர்கள் என்பவர்கள் தோட்ட தொழிலாளர்கள் வியாபாரிகள்,  கொஞ்சம் மலையாள சகோதரர்கள்.  மலையாள மக்கள் லாட்டின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் வருவதை பெரிய பெருமையாக கருதுவதில்லை. அவர்கள் இன சிறப்பை, பரம்பரையை எடுத்து சொல்லும் ஆலயங்கள் நிச்சயமாக அது சிரியன் கத்தோலிக்க தேவாலயமோ அல்லது யாக்கபட் ஆலயமாகத்தான் இருக்க இயலும்.  வாரம் ஒரு ஞாயிறு தமிழ் திருப்பலி விழாக்களின் தமிழ் பாதிரியார்களின் செப வழிபாடு என்ற ஒரு சிறு சலுகைகளுடன் இந்த ஆலயத்தின்  கீழ் தமிழர்களும் கலந்து வந்தனர். அதிகாரத்தின் படிகளில் தமிழர்கள் வர முயல்வதில்லை. அப்படி வரும் ஒரு சில தமிழர்களும் ஜாதியின் பெயரால் வசதி வாய்ப்பின் பெயரால் தனித்து தனி தனி துருவமாகவே நிற்க கூடும்.                                        ரோட்டை வீதி கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்ததும் முதன் முதலாக எடுத்த முடிவு கடைகளை அப்புறப்படுத்துவது ஆகும். அப்படி கடைகளை அப்புறப்படுத்தினால் தேயிலத்தோட்ட தொழிலாளர்களை போன்றே பல மூன்று தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் வியாபாரிகளும் தங்கள் இடத்தை விட்டு நகர நிர்பந்திக்கப்படுவர்.  ஊர் உலக வாயை மூடும் நிகழ்வே குருசடியை இடிப்பது ஆகும். இந்த குரிசடியை இடித்தால் கொஞ்சம் பின்னால் தள்ளி இன்னொரு குருசடி கட்டுவது ஆலயத்திற்கு பெரிய பிரச்சினை ஆகாது. ஆனால் கடைகள் இடிக்கப்படும் போது கடை வியாபாரிகள் அங்கிருந்து குடிபெயர வேண்டும் தங்கள் வாழ்வாதாரத்தையை இழந்துள்ளனர்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களை புறம் தள்ளி ரோட்டை விரிவடைய வைப்பதிலா உள்ளது. கடந்த 30-40 வருடமாக அரசியல் நடத்திய கட்சிகள் எங்கள் ஊருக்கு என்ன செய்துள்ளது. வண்டிப்பெரியார் மக்கள் உதவியுடன்  சட்டமன்ற உறுப்பினாராக ஒருவர் 3 தடவை ஜெயித்து அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்னொரு கல்லூரி பேராசிரியரோ தமிழர்களின் ஓட்டு உதவியுடன் பார்லிமென்றின் சபாநாயகராக அலங்கரித்து வருகின்றார். வண்டிப்பெரியாரை சுற்றி சுற்றி வந்து அரசியல் நடத்தி இன்று கேரளா அரசியல் உச்ச வட்டத்தில் இடம் பிடித்து இருக்கும் மந்திரியும் உண்டு.                                                                                                                                                                                       

ஆனால் எங்கள் ஊரில் இன்னும் உருப்படியான ஒரு கல்லூரி இல்லை.  ஒரு கல்லூரி வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கு ஏக்கர் வைத்திருக்கும் எஸ்டேட் அதிபர்களிடம் கேட்காது, பொது மக்களிடம்  இடம் தாருங்கள் கல்லூரி தருகின்றோம் என்பர். கோட்டயம் போன்ற பகுதியில் கூட தமிழர்கள் ஓட்டை குறி வைத்து தமிழர்கள் நலம் பற்றி பேசிகிறவர்கள் தமிழர்களை மக்களாக கொண்ட ஊரைப்பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.  இலங்கையுள்ள மலையக தமிழர்களுக்கு உலக அளவில் ஓர் அடையாளம் உண்டு. ஆனால் தமிழ் கேரளா மலை தேசத்தவர் அடையாளமே அற்று அழிந்து கொண்டு இருக்கும் சூழலில் தான் உள்ளனர். மதம், அரசியல், பணம், இனம் சேர்ந்து ஒரு பக்கவும் வாழும் உரிமையே மோசம் போகும் மக்கள் இன்னொரு புறவுமாக எங்கள் ஊர் தலை விதி எழுதப்பட்டுள்ளது. 

6 May 2015

How ald are you? உங்கள் வயது என்ன?


35 வயதை கடந்த ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விருவிருப்பான திரைக்கதையுடன்   தொகுத்துள்ள குடும்பப் படம்" ஹவ்  ஓள்ட் ஆர்  யூ ?"  (உங்க வயது என்ன?)  இத் திரைப்படம் ஊடாக மஞ்சு வாரியர் 14 வருடம்  கழிந்து மறுபடியும் திரை உலகிற்கு காலெடுத்து வந்துள்ளார்.   இதே படம்  தமிழில் ஜோதிகா நடிப்பில் சூரியா தயாரிப்பில் வரவுள்ளது.  இரு படங்களுடைய இயக்குனர்  ரோஷன் ஆண்ரூஸ் என்பவராவார்.  மலையாளத்தில் சிறப்பாக ஓடின இப்படம் தமிழில் எவ்வாறு வரவுள்ளது என ஆர்வமாக காத்திருக்கும் வேளையில்  மலையாள மொழியில் எவ்வாறு இருந்தது என காணலாம்.                                                                                                                                                                                                                                                                                                         

நிருபமா ( மஞ்சு வாரியர் ) ஒரு அரசு அலுவலகத்தில் வேலை நோக்கும் ஒரு குமஸ்தா.  அரசு அலுவலகத்தில் வேலைபார்க்கும் பெரும்வாரியான மக்களின் அதே சோம்பல்,  திமிர்.  பொறுப்பின்மை.  ஏதோ அலுவலகம் வந்தோமா சம்பளத்தை வாங்குனோமா என்று வாழும் சராசரி வாழ்க்கை. கணவர் ஒரு தனியார் வானொலி ஊடகத்தில் வேலை பார்க்கின்றார். பதின்ம வயதில் ஒரு மகள்.  சிறந்த ஒரு வாழ்க்கையை தேடி வெளிநாடு செல்ல இருந்த இவர்களில்  கணவருக்கு மட்டும் அயர்லாந்தில் கிடைக்கின்றது. வயது காரணத்தை கொண்டு மனைவிக்கு விசா கிடைக்க தாமதம் ஆகுகின்றது. அப்பாவும் மகளும் வெளிநாட்டுக்கு போக தயாராகுகின்றனர். இவ்வேளையில் நாட்டின் அதிபர் பள்ளிக்கு வருகை தந்திருக்கும் வேளையில் மகள் கேட்ட கேள்விக்கு பதில் என்ற வண்ணம்,  அதிபரிடம்  சந்தித்து பேசும் அழைப்பு தாய் நிருபமாவுக்கு வருகின்றது. மகள் என்ன கேள்வி கேட்டிருக்க கூடும் என மகளிடம் கேட்டால் வெளிப்படுத்த அவள் விரும்பவில்லை. இந்நிலையில்  நாட்டின் அதிபரை சந்திக்க செல்லும் நிருபமா அங்கு பாதுகாப்பு என்று நடக்கும் ஆர்பாட்டத்தின் மத்தியில் அதிபரை கண்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து விடுகின்றார்.  இந்த சம்பவத்தால் நாட்டின் ஊடகம் தான் வேலை பார்க்கும் அலுவலகம், ஏன் வீட்டிலும் கணவர் மகளின்  கேலிக்கு உள்ளாகுகின்றார்.                                                                                                                                                                                                                            

        இத்தருணத்தில் அவர் கல்லூரி தோழியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. கல்வி கற்கும் காலங்களில் இருந்த ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும்  வாழ்க்கையை எதிர் கொண்ட விதம், அதன் விருவிருப்பை எங்கு தொலைத்தாய் என வினவுகின்றார். பெண்கள் எப்போதும் தனக்கான ஒரு கனவை பேண வேண்டும் என கூறி வாழ்கையை ஆக்க பூர்வமாக நோக்க வற்புறுத்துகின்றார்.  இப்படி இருக்க  நிதம் தான் பயணிக்கும் பேருந்தில் சந்திக்கும் வயதான மூதாட்டியை காண ,  வீட்டில் பேணி வளர்த்த  கீரையுடன் அவர் வீட்டிற்கு செல்கின்றார். வீட்டு வேலைக்காரியாக பணிபுரியும் மூதாட்டி தன்னையும் ஒருவர் அக்கறையுடன் சந்திக்க வந்ததை கண்டு உணர்ச்சி வசப்படுகின்றார் மேலும் தன் சோகக் கதையை கூறுகின்றார்.  ஒரு பெண்ணின்  எல்லா வயதிலும் புரக்கணிக்கப்படும் சூழலை உணர்ந்து கொள்கிறார் நிருபமா.  மூதாட்டி வேலை செய்யும் ஒரு பணக்காரர் வீட்டில் திருமணத்தேவைக்கு என இயற்கை விவசாயம் மூலம் பயிரிட்ட காய்கறிக்கு ஆர்டர் கிடைக்கின்றது. பக்கத்து வீட்டு பெண்களின் மற்றும் அரசின் ஊக்கத்துடன் வீட்டின் மட்டுப்பாவில் காய்கறி பயிறிடும் விவாசாயத்தை ஆரம்பிக்கின்றார். இப்படியாக ஒரு நாட்டின் ஆரோக்கியம் அவர்கள் உண்ணும் உணவில் உள்ளது.  வீட்டிலுள்ள சாதாரண பெண்கள் நினைத்தால் ஒரு பெரும் மாற்றம் கொண்டு வர இயலும் என ஒரு பிரசாரமே மேற்கொள்கின்றனர் இப்படம் ஊடாக.                                                                                                                                                                                                               

இந்த நிலையில் வெளிநாடு போன மகள் தன் தாயில் அன்பை தேடுகின்றார், .  காய்கறி தோட்ட திட்டம் வெற்றி பெற்றமையால் நாட்டின் அதிபரிடம் இருந்து விருது வாங்கும் நிகழ்வு வருகின்றது. கதாநாயகி மிகவும் தன்னம்பிக்கையுடன் அதிபரை சந்தித்து பாராட்டை பெறுகின்றார். வெளிநாட்டில்  வீட்டு வேலைக்கு ஆட்களை அமத்துவது எளிதல்ல நீயும் வந்தால் சிறப்பாக இருக்கும் என  கணவர் அவரை வெளிநாட்டுக்கு அழைக்கின்றார். தான் கனவு கண்ட வெளிநாட்டு வாழ்க்கை வேண்டுமா அல்லது ஒரு நோக்கம் கொண்ட வாழ்க்கை தேர்வு செய்ய வேண்டுமா என்ற சூழலில் தான் ஒரு மனைவியாக வீட்டில் ஒடுங்கி கிடைப்பதை விட ஒரு நல்ல லட்சியத்துடன் தன்மானத்துடன் வாழ்வதே சிறப்பு என்று எண்ணி கேரளாவிலே இருந்து கொள்கின்றார்.

மஞ்சு வாரியரின் இயல்பான நடிப்பால் படம் சிறப்பாக இருந்தது.  மேலும் பெண்கள் வாழ்க்கையில் எந்த வாயதிலும் கனவுடன் ஒரு நோக்கத்துடன் வாழ கடமை பட்டவர்கள் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.  ஒரு காட்சியில் கணவர் ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு அதிர்ச்சியூட்டும்  விரும்பாத தகவலை கூறுவார். கணவன் குழந்தைகள் தங்கள் தேவைக்கு  மகிழ்ச்சிக்கு என அம்மாக்காளை பயண்படுத்துவது கேலி செய்வது அவர்களை மதிக்காது நடத்துவது இயல்பாக சொல்லப்பட்டிருந்தது. ஒரே வயதாக இருந்தாலும் கூட பெண்கள் வயதுமுதிர்ச்சியாக காணப்படுவதும் கணவரின் கவனிப்பற்று ஆசையாக ஒரு நல்ல வார்த்தை கூட கேட்காது புரக்கணிப்படும் உலக நியதியும்  காட்டப்பட்டிருந்தது.  பதின்ம வயது மகள்கள் அப்பாக்களுடம் சேர்ந்து கொண்டு அம்மாக்களை கேலி செய்வது அவமதிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டநிலையில் சில காட்சிப்படுத்தல்கள் ஊடாக பெண்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர் என்பதை திறம்பட புரியவைத்துள்ளார் இயக்குனர்.   நம்மை சுற்றியிருக்கும் சமூகம் நம்மை மதிப்பது என்பது நம் ஆளுமையை பொறுத்தே என எடுத்து கூறும் படம் ஆகும் இது.                                                                                                                                               

இப்படத்தின் மஞ்சுவாரியருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள திரைப்பட முன்னாள் கதாநாயகன் குஞ்சாக்கோ போபன் ஆகும். 'காதலுக்கு மரியாதை' என்ற படத்தின் மலையாளப்பதிப்பு 'அனியத்திப் புறாவில்' நடித்திருந்தவர். இது போன்ற நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று கொள்ளவும் ஒரு தைரியம் வேண்டும். அலட்டாது நடித்திருந்தார். மஞ்சு வாரியரின் வயதை குறைக்க என நிறைய மேக்கப்  பயண்படுத்தியிருந்ததை தவிர்த்திருக்கலாம், இது  செயற்கை தனமாக பட்டது.  ஒரு திரைப்படம் என்பது வெறும் களியாட்டம் பொழுபோக்கு என்பதையும் கடந்து இன்றைய நாள் நம் சமூகம் அனுபவிக்கும் பூச்சி கொல்லிபயண்படுத்தும் காய்கறி விற்பனையை தடுக்கும் பொருட்டு; கதாநாயகர்கள் மூச்சு விடாது கூறும் டயலாகை நம்பாது சாதாரண பெண்களின் பங்கை  முன்நிறுத்தியுள்ள விதம் அருமை. மலையாள மக்களுக்கு பூச்சி கொல்லி மருந்தை பற்றிய ஒரு விழிப்புணர்வை சிறப்பாக கொடுத்துள்ளனர். பொதுவாக பெண்களை எடுத்து காட்டாக எடுக்கும் படங்களில் ஆண்களை தரம் தாழ்த்துவது உண்டு. அது போன்ற கருத்த்தாக்கத்தை இப்படம் முன்வைக்காது  சுயநலமான உலகில் பெண்கள் சுயமாகும் வாழ வேண்டிய தேவையை அழகாக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். பாடல்கள் சுமார் ரகம். காட்சியமைப்பு தேர்வு செய்த பாத்திர அமைப்பு சிறப்பாக இருந்தது.  முதல் முறை நாட்டின் அதிபரை சந்திக்கும் நிகழ்ச்சி நாடகத்தன்மையுடன் இருந்தாலும் கதைக்கு அழுத்தம் தர எடுத்த யுக்தியாக எடுத்து கொள்ளலாம். மகளாக நடித்திருந்த குழந்தையின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அங்கு இன்குமாக சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த "இங்லீஷ் விங்லீஷ்" படம் தாக்கம் தெரிகிறதை தவிர்க்க இயலவில்லை!


இந்த படத்தின் கருத்தை பற்றி கேரளா சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. கேரளா assemblyமேலும் இப்படத்தில் கதாநாயகி தன் சொந்த வாழ்கையிலும் பதின்ம வயது மகளை கணவர் திலீபின் பராமரிப்பில் விட்டு விட்டு விவாகரத்து பெற வேண்டிய சூழலுக்கு உள்ளானர்வர்.

2 May 2015

இந்தியாவின் வேர்கள் தேடி..........சிந்தாமணி கிராமம்.(Cinthamani)

இந்தியாவின் வேர்கள் தேடிய எங்கள் மேதினப் பயணம் சென்றடைந்தது சிந்தாமணி  கிராமத்தில் தான். நெல்லையில் இருந்து சாத்தான்குளம் போகும் வழியில் இந்த கிராமம் அமைந்துள்ளது.   நாங்குநேரி  தாலுக்கை  சேர்ந்த  இந்த கிராமம்   பாசமான மக்கள் திரும்பும் திசை எங்கும்  ஆலயங்கள், குளங்கள் என பசுமையாக உள்ளது.

2011சென்செஸ் பிரகாரம்  679  ஆண்கள் 650 பெண்கள் உள்ளடங்கிய   355 குடும்பங்கள் வசிக்கும் பகுதியாகும் இந்த கிராமம். கிராமத்தின் அருகே பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் இருப்பதால்  96% எழுத்தறிவு கொண்ட கிராமமாக விளங்குகின்றது.  18 % மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு என விவசாயத்தை நம்பி உள்ளனர்.


ஊர் ஆரம்பபள்ளியை வந்தடைந்தோம்.  ஊர் ஐஸ்க்காரர் எங்களை அன்புடன் வரவேற்றார். பள்ளிக்கூட நாட்களில் ஐஸ்க்காரரை கண்ட அதே மகிழ்ச்சியுடன் நாங்களும் ஐஸ் வாங்கி உண்டு மகிழ்ந்தோம். ஆனாலும் நம்ம கால சுவையான ஜவ்வரிசி ஐஸ் தற்போது இல்லை. பால் ஐஸ் கூட நாம் வாங்கி சாப்பிட்ட ருசி இல்லை. இந்த தலைமுறையை விட நாம் ஆசிர்வதிக்க பட்டவர்கள் தான். ஐஸ் சுவைத்து கொண்டே தன் விளையாட்டு வீரரான தந்தையின் விருது கோப்பைகளை ஐஸ்காரரிடம் கொடுத்து ஐஸ் வாங்கி தின்றதும் கோப்பைகள் காணாது போனதை  கண்டு பிடித்த அவருடைய தாயார் அடித்து உதைத்த   கதையை சுவைப்பட சொல்லி கொண்ருந்த  போது  அவ்வழியே உணவு -உண்ணா சாமியார்  வந்தடைந்தார். சாமியாரிடம் பேசின போது தான் அவர் பல மருத்துவ மூலிகை மருந்துகளை தயார் செய்து வருவதாக அறிந்தோம்.
.
எங்கள் குழுவிலுள்ள விடலை பசங்கள் சாமியாரிடம் நெருங்கி ரகசியமாக முகப்பருவை போக்க ஏதும் வழியுண்டா என வினவி கொண்டிருந்ததனர். இதுவெல்லாம் மருத்துவ உலகில் ஒரு பெரிய பிரச்சினையா கான்சரை போக்கும் மருந்தே தன்னிடம் உள்ளதாக கூறின சாமியார் தான் கடந்த இரண்டு வருடங்களாக வெதுவெதுப்பான நீர் ம்ட்டுமே பருகி வருவதாகவும்  வெறும் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து வரும் ரகசியத்தை கூறினார்.  இனி வானில் பறப்பதற்கான பயிற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

இந்த சாமியார் முன்னொரு வருடங்களில் என் ஜி ஓ காலனியை அடுத்த ஜெபா கார்டன் பகுதியில் வியாபாரம் செய்து வந்த சிறந்த  ஒரு வியாபாரி ஆவார்.  பின்பு காசிக்கு பயணம் மேற்கொண்டு தன் வாழ்க்கையை ஆன்மீகதில் திருப்பியதை அறிந்தோம்.  சாமியார்  விடைபெற்று செல்லும் முன் சாமி அருள் பாலித்தது போல் ஆண் உலகத்தின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மாபெரும் மருந்தை பற்றி விளக்கினார். மகிழ்ச்சியான ஆண் பட்டாளம்  தங்கள் பாரமான கிமாரவை தூக்கி கொண்டு கிராமத்திற்குள் உற்சாகமாக படை எடுத்தனர்.

சூரியன் உச்சியை தொட ஆரம்பித்ததால் கடும் வெயில் வாட்ட ஆரம்பித்தது.  இருப்பினும் நம் கிராம மக்களை சந்திக்கும் ஆவலுடன் வீதி வீதியாக சென்றோம். எப்போதும் போல் குழந்தைகள் துள்ளி விளையாடி கொண்டிருந்தது.    ஆயாக்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்து கொண்டு வாசல் படி கடந்து வந்து எட்டி பார்த்தனர். ஆயிரம் நன்றிகளை மனதில் நினைத்து கொண்டு குழந்தைகள் படங்களை கொள்ளையிட்டு கொண்டிருந்தோம். சின்ன சின்ன குழந்தைகளின் வஞ்சனை இல்லா சிரிப்பும் கேலிப் பேச்சுக்களும் மனதை கொள்ளை கொண்டன. ஒரு எட்டு மாதக்குழந்தை தன் பாட்டியில் கையில் இருந்து எங்களை நோக்கி சிரித்தது. அக்குழந்தை பிறக்கும் 12 நாட்களுக்கு முன்னே அதன் தந்தை இறந்து விட்ட துயர் செய்தியும் பகிர்ந்தார் அத்தாய். கோயில் அருகில் ஒரு பாட்டி முறம் கொண்டு நெல்லை புடைத்து கொண்டு இருக்க தாத்தா அருகில் இருந்து பரிவுடன் நோக்கி கொண்டிருக்கும் அரிய காட்சியை காண இயன்றது.                                                                         

கண்ணாடி அணிந்த ஒரு முதியவரை சந்தித்தோம். அவர் அப்போது தான் வேலை முடிந்து குளித்து விட்டு வீடு வந்து சேர்ந்தார். அழகான கறுப்பு முக்கு கண்ணாடி அணிந்திருந்தார். எங்கள் குழுவின்  தூண்களில் ஒருவரான முத்து குமார் சகோதருடன் அழகிய சிரிப்புடன் போஸ் கொடுத்தார்.


வீடுகளின் முன் பகுதியை தென்னம் கீற்றால் மறைத்துள்ளனர். பல வீடுகள் முன் நம் பாரம்பரியத்தின் அடையாளமான திண்ணைகள் உள்ளது. தந்தையும் இரு மகள்களும் எங்களை கண்டதும் சிரிப்புடன் வரவேற்றனர். .அவர்கள் அம்மா வயலுக்கு வேலைக்கு சென்றதாக கூறினர். மே தினம் அன்று கூட விடுமுறை அற்ற உழைப்பாளி பெண்கள் கொண்ட் நாடு நம்முடையது என்ற உண்மை சுட்டது! காலையில் சென்றிருந்தோம் என்றால் பதநீர் தந்திருப்பதாக கூறினர்..(எங்கள் குழு முதல்வரே அடுத்த முறை ஏனும் அந்த ஊருக்கு காலை அழைத்து செல்லுங்கள்) 

சூரிய ஒளி கண்ணை மட்டுமல்ல மண்டையையும் பிளர்க்க ஆரம்பித்து விட்டது. இனி நடக்க இயலாது என்ற சூழலில் ஒரு வீட்டு பக்கம் வேலி ஓரமாக நின்று கொண்டிருந்தோம். அந்த வீட்டில் குழந்தைகள் சத்தம் போட்டு கொண்டிருந்தனர். மழலை பள்ளியோ என நாங்கள் கூர்ந்து கவனிக்க  “ஏ பண்ணாடை டீவியை தொடாதை ஏய் சத்தம் போடாதை” என்ற கட்டளைகள் பாய்ந்து கொண்டிருந்தது. மே தின சிறப்பு நிகழ்ச்சி காண குமிந்துள்ளனர் என விளங்கியது. 

தொலைகாட்சியில் தஞ்சம் அடைந்த மக்கள் கிமாராப்படையை கண்டதும் வெளியே வர ஆரம்பித்தனர். கிராம உடையில் இருந்து சின்னச்சிறு குழந்தைகள் வடக்கு- தெற்கு என நவ நாகரிக உடையுடன் பவுடர் பூசி மேக்கப் இட்டு வெளியை வர ஆரம்பித்தனர். கிராம மக்கள் வீட்டில் தொலைபேசி தொலைகாட்சி வானொலி என தகவல் தொழிநுட்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என நாங்கள் நினைத்து கொள்ள; அவர்களோ  இவங்க எல்லாம் இந்த படங்களை இன்டெர் நெட்டுலை போட போராங்க, நம்ம ஊரை உலகமே பார்க்க போகுது என பேசி கொண்டிருப்பது கேட்டது.


என்னவர் வெயிலின் ஆதிக்கத்தை பொறுக்க இயலாது "போதும்டீ வெயிலில் போட்டு என்னை வறுத்து எடுக்காதே, வீட்டுக்கு போவோம் என கண்ணாலே பேசிக் கொண்டிருந்தார். வீட்டு நினைவால் வாடியது என்னவர் மட்டுமல்ல இல்லற அரசிகள் உடன் இல்லாது தனியாக வந்த கணவர்களும் பசியும் வெயிலும் மிரட்ட மனைவியர் புராணம் பாட ஆரம்பித்து விட்டனர். ஐ…ஐயோ எங்க வீட்டிலிருந்து 2 மிஸ்டு கால் வந்திடுச்சு என்னை தேட ஆரம்பித்து விட்டாளே………இன்னொரு நண்பர் போனை எடுத்து என்னம்மா என்று கேட்க .”டமால் டுமீல் என சத்தம் கேட்க அம்மா……….. அப்பா……….. என்று கிடைத்த வண்டியை எடுத்து கொண்டு சாமியோ! காப்பாத்து என்று  தங்கள் காதல் மனைவியரை தேடி பறந்தனர்.(வீட்டில் இருக்கும் மனைவியர் தங்கள் கணவர்களை நினைத்து பெருமை பட்டு கொள்ளலாம்  எப்போதும் என்னேரவும் மனைவி நினைவில் வாழும் பக்த கணவர்கள்!) நானும் தோழி அமுதாவும் சேர்ந்து கொண்டதால் சுவாரசியமான நிகழ்வுகளை கண்டு பேசி, கதைக்க, சிரிக்க இயன்றது.


நெல்லையை சேர்ந்த ஜானகி ராம் உணவக அதிபர் சிந்தாமணி ஊரை சேர்ந்தவர் என்பதால் எங்கள் குழு அவர்கள் ஊருக்கு சென்றிருப்பதை அறிந்து குடும்பத்தினருடன் வந்து வரவேற்று அறுசுவை உணவு அளித்து மகிழ்வித்தார். கிராமத் தலைவரான அவருடைய சகோதரர் உயர் திரு ராமசுப்பு, தங்கள் கிராமம் இந்தியா ஜனாதிபதியிடம் இருந்து இரண்டாவது முறையாக விருது பெற்றதை பெருமையுடன் குறிப்பிட்டார். சென்னையில் தொழில் அதிபரான அவர்களுடைய மாமா நவநீத கிருஷ்ணன் உறவினர் ரவி குடியாத்தம் போன்றோர் தங்கள் சொந்த ஊருக்கு வருகை தந்திருந்தனர். சென்னையில் வாகனங்களின் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தாலும் தன் ஊர் பசுமையுடன் திகழ வேண்டும் என்ற நோக்குடன் கிராமம் முழுதும் மரம் நட்டு வளர்த்தும் வருகின்றார். மரம் பராமரிப்புக்கு என்றே பணியாளர்கள் குழு மட்டுமல்ல அவைக்கு தினம் தோறும் தண்ணீர் கிடைக்க செய்யும் நோக்குடன் தண்ணீர் தொட்டி வாகனவும் வாங்கி கொடுத்துள்ளார்                                                                                                                                                                        13ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் காலம் தமிழகத்தில் குடியேறிய இவர்கள் இந்திய முழுக்க உணவக தொழில்களில் மிளிர்கின்றனர். கிருஷ்ணதேவராயர் காலம் தான் லட்டு போன்ற உணவு கலாச்சாரங்கள் நம்மில் புகுந்தது என நினைவில் கொள்க. இவருடைய மாமா வழக்கத்தில் இருந்தும் விலகி வாகன இதரி பொருள் தொழில்சாலை நடத்தி வருகின்றார். ஆறு தலைமுறையாக குடியிருக்கும் ரெட்டியார் குலத்தவர்களான இவர்கள் நாட்டின் எந்த மூலயில் இருந்தாலும் வருடம் ஒரு முறை தங்கள் கிராமத்திற்கு வந்து செல்வதை கடமையாக கொண்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாக பர்மா இலங்கை போன்ற நாடுகளுடன் வியாபாரம் செய்து வந்தமையால் இவர்கள் வீடுகளின் கட்டமைப்பு தோற்றங்களில் அதன் தாக்கம் தெரிகின்றது. நவ நாகரிக காலத்திலும் இவர்கள் வீடு தறை ஓடு கொண்டும் பழைமையின் கம்பீரமான கதவுகள், மற்றும் கட்டை மேல் சுவர்கள் என காலத்தால் அழியா வண்ணம் பழமையின் அழகுடன்  விளங்குகின்ற வீடுகளில் தான் தற்போதும் வசித்து வருகின்றனர். கால சூழலுகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்படுத்தியிருந்தாலும் பழமையின் எளிமையான அழகால் வீடுகள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.                                                                                                                                                                      
  அன்றைய தினம்    நெல்லை ஜானகி ராம் உணவக அதிபரால் நெல்லை புகைப்படகுழுவின் லோகோவும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாரியப்பன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன் அவ்வீட்டு பாட்டிகளை வைத்து  கேக் வெட்டி உண்டு அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டோம். விடுமுறைக்காலம் என்னதால் உறவினர்களால் நிறைந்து வழிகின்றது அவர்களுடைய வீடுகள்.   குழந்தைகளும் பெரியவர்களுடன் இணைந்து விருந்தினரை உபசரிக்கின்றனர் என்பது இனிமையான காட்சியாக இருந்தது.                                                                                                                                                                                                                                                                                இயற்கை விவசாயத்தில் அக்கறை கொண்டிருக்கும் ராம் குமார் அவர்கள் தங்கள் தோட்டத்தில் வைத்திருக்கும் தேனி வளர்ப்பு முறை பற்றி விவரித்தார். தேனிகள் அழிந்தது தான் நம் விவசாய சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறினார். பூச்சி விரட்டியே தேவை,  பூச்சி கொல்லிகள் அல்ல இவை  இயற்கையை அழிக்கவே உதவும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு குடும்பவும் தங்களுக்கான உணவு காய்கறிகளை உயிர்கொல்லிகள் தளிக்காது பயிறிட வேண்டிய  தேவையை பற்றியும் குறிப்பிட்டார்.  எங்கள் நோக்கத்தை உற்சாகப்படுத்தியதுடன் எங்களை சிறப்புற கவனித்து  அவருடைய குடும்பத்தார் சிறப்பாக அக்குடும்ப குழந்தைகள், உறவினர்கள் அனைவரும் இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.  
மே தினத்தை உழைப்பாளிகளுடன் செலவிட்டதை எண்ணி மகிழ்ந்து திரும்பினோம்.