18 Sept 2016

My Story என் கதை - கமலா தாஸ்


Image result for my story/kamala dass

ஆறு மாதங்களுக்கு பின் இரண்டே நாட்களில் ஒரு புத்தகம் வாசித்து முடிக்கும் மனநிலையை எட்டிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் இப்பதிவு பகிர முயல்கின்றேன்.

ஆங்கிலம் மற்றும் மலையாள எழுத்தாளர், கவிதாயினி மாதவக்குட்டியின் சுயசரிதையாகும் ‘My Story’

இயல்பிலே எழுத்து பாரம்பரியம் உள்ள நாலப்பாடு என்ற குடும்பத்தில் 1934 ல் பிறந்தவர் ஆவார் மாதவிக்குட்டி. தந்தை கல்கத்தாவில் பணிபுரிந்ததால் இவர் கல்வி, மற்றும் வாழ்க்கை மலபாரிலும்  கல்காத்தாவிலுமாக  கடக்கிறது. கான்வெற்றிலும் மற்றும் மேல்தட்டு பள்ளிகள், வீட்டிலும் தனி சிறப்பு ஆசிரியர்களால் சிறப்பான கல்வி  கிடைக்கும் சூழலில் வளர்கின்றார்.

 மேனோன் என்ற மேல் ஜாதியில் பிறந்த இவர் குடும்ப வழக்கப்படி தன்னை விட 15 வயது மூத்தவரான குடும்ப உறவினரான மாதவதாஸ்க்கு மனைவியாகின்றார்.

இயல்பாகவே விரைவில் வசைப்படும் குணம் உள்ளவராக காணப்படுகின்றார். தன் 12 வயதில் உடன் படிக்கும் 'குறுப்பு' என்ற மாணவரிடம் ஈர்ப்பு ஏற்படுவதாகவும் அவரை திருமணம் செய்ய போகிறேன் என்று தன் பாட்டியிடம் தெரிவித்தாக கூறுகின்றார். இ

அம்மாவும் பிரசித்தி பெற்ற கவிஞராக உள்ளவர். இருப்பினும் இவர் வாழ்க்கையில் பாட்டியை போன்று தாயின்  கருதலான அணைப்பில்  வளரவில்லை. 

ஒரு முறை, கல்கத்தாவில் தன் ஆசிரியையின் மகனைத் தேடி அவர் இருப்பிடம் செல்கின்றார். அந்த நபரோ பத்திரமாக ஒரு டாக்சி பிடித்து மாதவியை அவர் வீட்டில் கொண்டு சேர்க்கின்றார். பின்பு தன் சொந்த ஊருக்கு பயணிக்கும் வேளையில் தன் உறவு பெண்ணின் தூண்டுதலில் ஓரினசேர்க்கையில் உள்படுகின்றார்.

Image result for my story/kamala dass

தனதான துடுக்கும் அறிவாற்றலும் கொண்ட கமலா,   தன் தந்தையிடம் இத்திருமணத்தில் தனக்கு சம்மதம் இல்லை என ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்குறி எழாது இல்லை. மணப்பந்தலில் இருக்கும் போது, 18 வயதுள்ள ஓர் இளைஞன் மேல் தனக்கு இருந்த காதலை மறக்கவில்லை அந்த காதலனும் சாட்சியாகவே மாதவதாஸுக்கு மனைவியாகின்றார். முதல் புள்ளி முற்று புள்ளி என்பது போல் முதல் இரவு அன்றே  தனது கணவரின்   பாலியல் வன்முறை அவர் மேல் ஓர் வெறுப்பை உருவாக்குகிறது. பின்வரும் பக்கங்களிலும் தன் வணவர் உருவம், பல், தொழில் அவர் செயல்பாடுகள் எதிலும் இவருடைய எண்ணங்கள் ஒட்டவே இல்லை ஈர்க்கவும் இல்லை.  பல முறை நோய் தொற்றால் மருத்துவ மனையில் அவதியுறும் கவிதாயினியால் தன் நண்பர்கள் வந்து கண்டு, முத்தம் கொடுத்து சென்றதையும் நினைவு கூறும் ஆசிரியர், தன் கணவர் வந்ததாக குறிப்பிடவில்லை 

 தன் பிறந்த நாள் அன்று, தங்கள் அறையில் கணவர் நண்பருடன் செலவழிக்கும் கணங்களை வெளியில் இருந்து அழுகையும் வெறுப்புமாக காணும் சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.
பெரும் பணக்காரியாக , நிறைய தங்கம் இரத்தினங்கள் அணிந்து மகாராணி போன்று வாழ வேண்டும் என்ற ஆசை கொண்ட கமலாவால்; ஒரு வங்கி ஊழியர் மனைவியாக, தரித்திரம் பிடித்து, இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து கொண்டு, வசதியற்ற வீட்டுகளில் வசிப்பது பெரும் கவலையும் அவமானவுமாகவும் உள்ளது. தான் இருண்ட நிறம், தனக்கு அழகில்லை, தனக்கு பகிட்டான உடை இல்லை என்ற தாழ்வுணற்சியிலும் ஆழ்து  கிடக்கிறார் கமலா.

Image result for my story/kamala dassஒவ்வொரு முறையும் கணவரால் நேசிக்கப்படாது நிராகரிக்கப் படும்  வேளையில் தன் கவிதை எழுத்தால் ஆறுதலை தேடும் கவிதானியில் வாழ்க்கையில்  அக்கவிதைகளை பத்திரிக்கையில் பிரசுரிக்கும் வாய்ப்பு பெறுகின்றது திருப்புமுனையாக அமைகிறது வெறும் இல்லத்தரசியாக இருந்த கவிதாயிக்கு வாசகர்கள், ஆராதகர்கள்  அவருடைய வாழ்வியல் வட்டம் பெருகிறது.

தன் மனவெளியை  புரிந்து கொள்ள யாருமில்லை என்றிருந்த மாதவிக்குட்டிக்கு இத்தாலி நாட்டை சேர்ந்த போளோ கவிஞர் காதல் தீயுடன்  வந்து சேருகின்றார். தன் உற்ற நண்பன் மட்டுமல்ல தன் காதலனாகவும் மாற்றி கொள்கின்றார். ”உன் கணவர் குழந்தைகளை விட்டு விட்டு என்னுடன் வா உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன்” என்று இத்தாலி கவிஞர் அழைத்தாலும் தன் குடும்பம் தன் குழந்தைகள், தன் அப்பா குடும்பம், தன் சகோதரர்கள் எண்ணி விவாககரத்து என்ற நிலைக்கு எட்ட வில்லை. 

 தனக்கான பிடித்த பல நண்பர்கள் இவரை தேடி வருக்கின்றனர் அல்லது இவர் அவர்களுடன் செல்கின்றார். ஒரு இடத்தில் இவர் தொடர்ந்து புத்தகம் வாங்கும் கடை உரிமையாளர் இளைஞர் மேல் ஓர் ஈர்ப்பு வருகின்றது. கடை உரிமையாளர் பின்பு கவிதாயினியுடன் மேற்கொள்ள வேண்டிய உரையாடல்களை மனைவியின் துணையுடனே மேற்கொள்ளுவதை கமலா ஓர் இடத்தில் கேலியாக குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட ஆணுடன் தோன்றிய ஈர்ப்ப்பை இருவரும் உணர இவரை தேடி அந்த நபர்களே எட்டுகின்றனர். இவ்வாறாக ஒரு கணவனின் நிராகரிப்பு, கணவனுக்கு மனைவியின் மேலுள்ள ஈடுபாடின்மை ஒரு பெண்ணை காதலை தேடி தேடி கண்டடைய, தன் நிலைகடந்து பயணிக்க  வைக்கின்றது. ஆண்களிடம் தோன்றும் அதே ஈர்ப்பு பெண்களிடமும் பேணுகின்றார். தன் கணவரிடமும் இவைகள் பற்றி கூறுகின்றார். கணவரும் ”நல்லது தான் பெண் மருத்துவர் தானே உன்னை தவறாக பயண்படுத்த மாட்டார்” என்று கூறி அந்த உறவை வளரவே இடம் கொடுக்கின்றார்.

Image result for my story/kamala dassஆசிரியையின் உணார்வு பெருக்கம் மற்றும் அதீத மன அழுத்தம் அவரை குடிகாரியாக மாற்றுகின்றது. சில பொழுது நிலை தடுமாறி விழும் மட்டும் குடித்து வீடு வந்து சேர்க்கின்றனர் பின்பு மருத்துவ மனையில் சேரும் சூழலுக்கும் எட்டுகின்றார்.

கொல்கத்தா, பூனா, பாம்பே போன்ற ஊர்களில் கணவரின் மாற்றலுகளுக்கு இணங்க குடியிருக்க வேண்டியிருந்த மாதவியை தன் வீட்டு நினைவுகள் விட்டு வைக்காது துரத்துகின்றது.  சில காலம் தன் சொந்த  சொந்தஊரில் சொந்த வீட்டில்  வீட்டில் குழந்தைகளுடன் தங்கி விவசாயத்தில் ஈடுபடுகின்றார். தன் கணவரையும் வேலையை ராஜினாமா செய்து விட்டு தன்னுடன் இருக்கும் படி வேண்டுகின்றார். இந்த வேளையில் கேரளாவிலும் புகழ்பெற்ற கவிதாயினியாக சமூக ஆர்வலராக வலம் வருகின்றார். 

இவருடைய சுய சரிதையின் கதையின் சில பக்கங்கள் மலையாள இதழ்களில் வருவதால், கலாச்சார காவலர்களால் அவமதிக்கு உள்ளாகுகின்றார். மக்கள்  மத்தியில் குணம் கெட்ட பெண் என்ற அடையாளவும் நிலைபெறுகின்றது.  கணவனின், மற்றும் இளைய மகனின்  வேண்டுதலுக்கு இணங்கி மறுபடியும் பூனாவில் சென்று வாழும் சூழலுக்கு தள்ளப்படும் கமலா தன் சொந்த தேசத்தை பற்றியுள்ள ஏக்கத்திலே நாட்களை நகத்துகிறார்.

”என் மகன்களுக்கு என தன் சிதையில் சாம்பல்கள் மிஞ்சும் என் மகன்கள் துயர் ஆறும். அவர்களுக்கு நல்ல அறிவான மக்களை மருமக்கள் கொடுப்பார்கள். என் தலைமுறை  பெற்று பெருகி இந்த பூமியில் வாழ்வார்கள்” என  தன் ஆசையை குறித்து விட்டு தன் கதையை முடித்துள்ளார்.



Image result for my story/kamala dass
இந்த நாவல் 1971 ல் வெளிவந்தது. ஒரு திராவிட தென் இந்திய பெண்ணின் அதீத தைரியம் மற்றும் சுதந்திரமான மனவெளியின் வெளிப்பாடே இக்கதை. கதாசிரியின் உண்மை தன்மையை தன் வாழ்க்கையை எந்த சமரசவும் அற்று எழுத முன் வந்த துணிவை பாராட்டலாம். பல பெண்கள் திருமணம் இவ்வகையில் தான் முடிகின்றது. பிடிக்காத கணவனுக்கு பிள்ளைகளும் பெற்று கொடுத்து வாழ்ந்து முடிக்கின்றனர். அதன் வேதனையை அதன் பாதகங்களை எழுத்தூடாக விட்டு சென்றவர் கமலாதாஸ்.

தான் சந்திக்கும், சல்லபிக்கும், ஆண்களில் கிருஷ்ண பகவானை காண்பதும் தன்னை ராதையாக பாவிப்பதும் தன் பாட்டி கமலாவிடம் நீ கிருஷ்ணனின் மனைவி ராதை என்று சொல்லி கொடுத்ததின் வினையா அல்லது நம் கலாச்சார கதைகள் ஊடுருவி சென்றதின் விளைவா என்பது புதிரான கேள்வி தான். 

தன் தேவையை தன் ஆசையை  நிராகரிக்கப்பட்டதின் வலிகளை வேதனைகளை காகிதத்தில் வடித்தவர், கணவரிடம் சொல்லவே இல்லையா சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லையா என்பது தெரியாத கேள்விகள். 

இருப்பினும் 
கணவன் மனைவி உறவு என்பது; ஜாதகம், ஜாதி கடந்து மனதால் இணைய வேண்டியதின் அவசியத்தையும்  இந்த புத்தகம் அறியத்ததருகிறது .  

. அன்பு, அன்பு என்று அவர் அல்லோலப்படுவது அதற்கென அவர் உழன்று அழுவது பல இடங்களில் காணலாம். பெண் கவிஞியாக பல விருதுகளை பல நல் மதிப்புக்களை பெற்ற கவிஞிக்கு தன் சொந்த வாழ்க்கையில் எதிர் கொண்ட சவால்களுக்கு அவர் கை கொண்ட  முறை அவருக்கு உதவியதா என்றால் பல வேளைகளில்  அவர் மன உளச்சலிலே தன் காலத்தை கடத்தியதாகவே காணலாம்.

தன் முதல் மகனுக்கு உருவான முதல் காதலை வெகுவாக ரசித்து எழுதியுள்ளார் கமலா.  பிள்ளைகள் வளர்ப்பில், பெற்றோரை பராமரிப்பதில், தன் சகோதரங்களிடம், தன் மாமியார் என உறவுகளை நயமாக பேணுவதில் சிறந்து விளங்கினார். இருப்பினும் சொந்தங்கள் கொடுக்கும் அச்சுறுத்தலை வெறுக்கின்றார் வெடிக்கின்றார். 

உணர்ச்சி கொந்தளிப்பில் வாழ்ந்த ஓர் பெண்ணின் மனவும் அதை வெறும் உணர்வற்ற மனதுடன்  கண்டு, உடன் வாழ்ந்த கணவனின் உறவின் நிலைகளையை காட்டி செல்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது நபருடன் காதல் வருவதும் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், அதற்கு காரணமாக அன்பு, காதல்- இன்மை இல்லா வாழ்க்கை என்று கூறுவது அகத்தின் இயலாமையா அல்லது பெண் மனத்தின் இனம் புரியா ஏக்கங்கள் தானா என்று விளங்க வேண்டியுள்ளது. காதல் புனிதம் மட்டுமல்ல  காதல்  ஒரு வாதை, நோய் என்றும் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது இவருடைய சுயசரிதை வாசிக்கும் போது  
.இவர் எழுத்து நடை உண்மையை உண்மையாக சொல்லும் தைரியம், நம்மை அவரை நேசிக்க வைக்கின்றது.

ஆழமாக சிந்தித்து வாசிக்க வேண்டிய ஆன்ம கதை . ஏன் என்றால் இன்றும் பல பெண்கள் மணப்பந்தலில் இந்த மனநிலையில் துவங்கி, இருட்டிலே முடித்து, பிள்ளைகளும் பெற்று வளர்த்து வெளிச்சமே அன்று வாழ்க்கையை முடித்து விட்டனர்.  மாதவிகுட்டியைள போன்ற எழுத்தாளர்கள் தங்கள் வேதனைகளால் தங்கள் நிராகரிப்பின் வேதனையால் காலாகாலம் மக்கள் மனதில் எழுத்தாக வாழ்கின்றனர்.  
Image result for my story/kamala dassஇந்த புத்தகம் வித்தியா பாலம் நடிப்பில் தமிழ் திரைப்படமாக வரவுள்ளது.



தனது 67 வது வயதில் இதே காதல் தாகத்தால் மதம் மாறி, தன் சுதந்திரத்தையும் இழந்து அடிமையாக்கப்பட்டு  கிருஷ்ணரை முகமதாக மாற்றி காதல் பொய்யானது என்று நிரூபித்து சென்றவர் கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா!. http://josephinetalks.blogspot.com/2012/04/blog-post_12.html

12 Jun 2016

அன்பின் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை

விபத்து என்பது நிதம் நிதம் காணும் சகஜ  நிகழ்வாகி விட்ட சூழலில்,  விபத்து எதனால் நிகழ்கின்றது எவ்வாறு தவிற்திருக்கலாம்  என்ற சிந்தனையை விட  விதியுடன் இணைத்து நினைத்து நிம்மதி தேடவே விளைகின்றோம். 


இந்தியாவில் டெல்லிக்கு அடுத்து சென்னை விபத்து அதிகம் நிகழும் இடமாக கருதப்படுகின்றது. வாகனங்கள்  மோதுவதால் உருவாகும் விபத்தால் மணிக்கூறுக்கு 14 பேர் இறப்பதாக தரவுகள் கூறுகின்றன. ”ரோடு பாதுகாப்பு” என்ற தன்னாற்வ தொண்டின் கூற்றின் படி  ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒரு மனிதர் மரணித்து கொண்டு இருக்கின்றார். 

 NCRB ன் 2014 ஆம் ஆண்டு  கணக்கு ப்படி  நடைபெறும் 4 லட்சத்தி ஐம்பதானிரம் விபத்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் மரணித்து போக, நாலு லட்சத்திற்கும் அதிகமானோர் காயத்திற்கு உள்ளாகுகின்றனர். WHO வின் கணக்குப்படி கடந்த வருடம் மட்டுமே  2 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  இதில் மதியம், மாலை, நேரங்களில் தான் விபத்து அதிகம் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ள்ளது. 

எதனால் விபத்து என்பதற்கு அதிவேகம்,  போதையில் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம்,  இருக்கை பெல்ட் இல்லாது பயணிப்பது போன்ற காரணங்களை குறிப்பிடலாம். இதையும் தவிற்து பராமரிப்பற்ற ரோடு, செம்மையல்லாத விபத்தை உருவாக்கும் வகையிலுள்ள ரோடு உருவாக்கவும்  மற்றும் ஒரு சில காரணங்களே. . வாகன லைசன்ஸ் பெறாது ஓட்டுவது, சிறு குழந்தைகளை வைத்து ஓட்ட வைப்பது,  வாகனம் ஓட்டும் போது அக்களிப்பிலும் கேளிக்கையிலும் ஏற்படுவது என பல காரணங்கள் உண்டு.  

சமீபத்தில் இது போன்ற பொறுப்பற்ற ஒரு வாகன ஓட்டியால் பின்னால் இருந்து தூக்கி வீசப்பட்டு  தன் உயிரை இழந்தவரின் மனைவி என்ற நிலையில் ஒரு விபத்து என்பது எண்ணிக்கைகளில், ஆராய்ச்சியில் தரவுகளில் ஒதுக்கப்படுவது அல்ல. இதனால் பல குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகுவதை அவதானிக்கலாம். என்னவருக்கு விபத்தை உருவாக்கினவர் கூறின காரணம் ’தூங்கி விட்டேன்’ என்பதாகும்.  அவர் ஒரே வார்த்தையில் ’தூங்கி விட்டேன்’ என முடித்ததால் எத்தனை கனவுகள், எத்தனை சந்தோஷங்களை தூங்க வைத்து விட்டார் என வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நம்முடைய சமூக மாநில சூழலில் உயிர் இழைப்பயும் சந்தித்தது மட்டுமல்லாது இதற்கான சாற்றிதழ் பெற என அந்த குடும்ப உறுப்பினர்கள் அலைக்கடிக்கப்படுவதையும் கண்டு உணரலாம். சோகத்திலும் இது போன்ற நிலையை கடந்து வர மன வலிமை நிஜத்தை புரிந்து கொள்ளும் மனநிலையும் வேண்டும்

ஒரு கல்லூரியில் ஆசிரியையாக பணி புரிந்தும், என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மரணத்தை பதியவோ சாற்றிதழ் பெறவோ இயலவில்லை. முதல் காரணம் அறியாமை, யாராவது  நமக்காக எடுத்து தந்து விட் மாட்டார்களா என்ற  நற்பாசையே. தன் தேவைகள் உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களே  சாற்றிதழ்  பெற முயல்வதே சிறப்பாக இருக்கும். இது போன்ற  நெருக்கடியான  கட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள்  எளிதாக பெறுவது உபதேசம் மட்டுமாகவே இருக்கும். ஒரு இறப்பு சாற்றிதழ் பெறக்கூட ஐந்து நூறு  காந்தி தாத்தாவை கண்ணியமாக கண்ணில் காட்டும் சூழலே நம் அரசு அலுவலங்களில் நிலவுகின்றது. என்னவர் சம்பவம் நடந்த இடத்தில் மரணித்ததால் பிரேத அறிக்கை சாற்றிதழுடன்  மரண சாற்றிதழ் பெற இன்னும் சிக்கல் உருவாகியது. மரணம் மருத்துவ மனையில் நிகழ்ந்தால் மருத்துவ மனை நிர்வாகத்தின் கீழ் சாற்றிதழ் விரைவாக கிடைக்கும் சூழல் உண்டு. 

அடுத்து மரணித்தவருடைய வாரிசு சாற்றிதழ் பெறுவது. இந்த இரண்டு சாற்றிதழும் எல்லா தேவைக்கும் மிக முக்கியமானது. இறந்தவர் பெயரிலுள்ள கைபேசியை மாற்ற, சமையல் காஸ் பெயர் மாற்ற என  எல்லா தேவைக்கும் இரு சாற்றிதழும் மிக முக்கியமாகும்.  தற்போது இதை கைபற்றித்தர இடைத்தரகர்கள் உண்டு எனிலும் கையில் கிடைக்க  வெகுநாட்கள் காக்க வைக்கப்படுகின்றனர். 

இதையும் கடந்து பாதிக்க்கப்பட்ட்வர்களுக்கு கிடைக்க வேண்டிய அறிவுரைகள் தேவையான நேரம் தேவையானவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறுவதில்லை. 
எப்போதும் நம்முடன் வசித்த வாழ்ந்த மனிதர் மரணம்   அடையும் போது ஓர் பெரும் வெற்றிடம் நிலவுகின்றது. அதை ஈடு செய்ய யாராலும் முடியாது என்றாலும்   குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற சவாலை சந்திக்கின்றனர்.  இந்த தருணங்களில் தான் ஆறுதல்ப்படுத்த, அக்கறை உள்ளம் என்ற பெயரில் பல பல பயங்களை நம்பிக்கை இன்மையை விதைத்து செல்கின்றனர். அங்கு ஒரு தனிமையுடன் பயமும் பலவீனமும், பிடிப்பு இன்மையும் உருவாகின்றது. 

இனி ஒரு வாழ்க்கை உண்டு அதை வாழ்ந்தே தீர வேண்டும், தேவையற்ற அனுதாபம் காட்டி வருபவர்கள் நோக்கம் பல போதும் சரியானதாக இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை. முதலில் கவலைப்பட  நேரம் கொடுத்து விட்டு  பின்பு மீண்டு எழ பாதிக்கப்பட்டவர்களே முன் வர வேண்டும். யாரும் தரும் அனுதாபத்தால் வயிற்று பசியை போக்கிட இயலாது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. இது போன்ற தருணங்களில் மிக முக்கிய சொந்தங்கள் ஓடி ஒளிவதும்  பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் உரிமையையும் எடுத்து கொள்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முக்கிய தேவையை உணர அதை கிடைக்கப்பெற   செயலாக்கமாகும் முற்ப்போக்கானது.  மிக முக்கிய தீருமானங்கள்; விற்பது, உறவுகளை புதுப்பிப்பது, நட்புகளை புதிதாக சேர்த்து கொள்வது எல்லாமே நன்மையை விட தீமையை  விளைவிக்கும். அதனால் சம்பவம் நடந்து ஒரு சில வருடங்களுக்கு 
பல முடிவுகளை தள்ளி போட வேண்டும். விரும்பாதே கிடைத்த  தனிமையை பலன் தரும் வண்ணம் மாற்ற முயலவேண்டும் பாதிப்பிற்குள்ளான நபர்கள்.   

குறிப்பாக நல்ல நாட்களில் நம்மோடு சேர்ந்து பயணித்தவர்கள் சேர்ந்து உண்டவர்கள், நம் உதவியை பெற்றவர்கள் எல்லோரும் ஓடி வந்து உதவுவார்கள் என எதிர் நோக்கக்கூடாது. இருப்பினும் எதிர் பாரா உதவிகள் நமக்கு கிடைக்கும் அதை பயண்படுத்தலாம். எங்கள் வீட்டில் ஓர் பைக், கார் எங்கள் தேவைக்கு இருந்த வாகங்கள் அவர் விபத்துடன் இரண்டையும் இழந்தோம். உடன் பொது பேருந்தில் பயணித்து விரைவில் செல்ல வேண்டிய இடத்தை அடைய இயலாது மிகவும் துன்பத்திற்கு உள்ளானோம். என் மகன் நண்பன் அவன் இரு சக்கர வாகனத்தை மூன்று மாதம் கொடுத்து உதவினான்.


அடுத்த மனிதர்கள் செயல்களை பேச்சுக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பெரும் துன்பத்தையே விளைவிக்கும். எந்த சூழலிலும் பெறும் துயர்- பிரச்சினை இருப்பது போல் அதில் சில நல்ல பக்கங்களும் வசதிகளும் இருப்பதை கணக்கில் கொண்டு புதியதை நோக்கி நகருவதே பாதிப்புள்ளாவர்களில் அறிவான செயலாக்கமாகும்.  மற்றவர்கள் இத்தருணத்தில் அவர்கள் வஞ்சம் தீர்க்கவும் மறுபடியும் நம்மை ஒடுக்கி நொறுக்கவே முன் வருவர். 

நம் சமூக சூழலில் பாதிக்கப்பட்டவர் ஆணும் பாதிப்பிற்குள்ளாகினவர் பெண் என்றால் வாயில் அவல் போட்டு பேசவும் அம்போ என அவர்களை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்க உறவுகள்  நெருங்கிய உறவுகள் தயங்காது. இத கண்டு கொண்டால் முன் நோக்கி செல்லவும் இயலாது.    பதின்ம வயதில் பெற்ற பல நல்லொழுக்க உபதேசங்களை நாம் பெறுவோம். சிறப்பாக ஒரு பெண் என்ற நிலையில் என் குணத்தை கண்ணியமாக வைத்து கொள்ள மற்றவர்கள் உபதேசிப்பது பெரும் கேவலமாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் தூசி என எடுத்து தூக்கி போட்டு முன் செல்வதாகும் காலச்சிறந்தது. நம் வாழ்க்கை நம் கையில் இதில் மூன்றாம் நபருக்கு இடம் கொடுப்பதே சிறை தான். ஆனால் பாதிப்பிற்குள்ளான பல லட்சம் பெயரில் நானும் ஒருவர் என்ற புரிதலே அடுத்த கட்டத்தை நோக்கி நகர உதவும்.\

மற்று இழப்பில் கிடைக்கும் சாவகாசம், விபத்து மரண குடும்ப நபர்களுக்கு கிடைப்பதில்லை. . எனக்கான வருமான மார்கம், சமூக அந்தஸ்திற்கான வேலை, வளர்ந்த மகன்கள் உள்ள நானே பல இன்னல்களை நேர் கொள்ள வேண்டி வந்தது. தங்களுக்குள் உழலாது மிகவும் நேர்மறையானவர்கள், நம்மிடம் உண்மையான அன்பும் மரியாதை கொண்டவர்களிடம் அறிவுரை பெற்று நகர்வதாகும்  ஆக்கபூர்வமான செயல். . 

இருவர் பேசி முடிவு எடுக்கும் பல காரியங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கல், தன் சுயத்தை அன்பு செலுத்துதல், மதிக்கல், சுயமாக செயலாற்ற விரும்புதல் ஆகும் ஆகச்சிறந்த வழி.   சாம்பலில் இருந்து எழும் பக்‌ஷி போல் மனிதர்கள் எழ வேண்டும். வீழ்ந்து துவண்டு நொறுங்கி கிடப்பது அல்ல வாழ்க்கை மீண்டு வருவதே வாழ்க்கை. போனவர் முன்னே போக, பின்னால் கடமையை முடித்து போக சிறந்த வழியை தேடுவதாகும் யுக்தி. இதில் உணர்வை தள்ளி அறிவை பிடித்து கொள்ளும் போது எடுக்கும் முடிவுகள் எளிதாகின்றது.   

நானும் ஒடிந்த நொடிந்த தனித்த சூழல் கடந்து வர நல்ல நண்பர்கள் உதவினர். அரசு சாற்றிதழ் பெற்று தர, வாழ்க்கையின் நோக்கை உணர்த்த பல நண்பர்கள் உதவினர்.  என்னிடம்  இரக்கம் மொழியால்  பேசியவர்களை விட திடமான பல வழிகளை எடுத்துரைத்தவர்களே மனதில் நிற்கின்றனர்.  அவர்கள் யாவருக்கும் என்  நன்றிகள் மகிழ்ச்சிகள் பல  கூறி சாம்பலில் இருந்து பறந்து உயர்ந்த பீனிக்ஸ் பறவையை மனதில் கொண்டு எழுகின்றேன். 


பாபா அத்தான் இறந்த அன்று அவருக்கு சரியான அளவில் சட்டை கிடைக்கவில்லை என்ற உண்மை இன்னும் மனதை பிசைகின்றது. அவருக்கு செய்யும் பிராச்சித்தம் என்ற வண்ணம் அவர் பெயரால் உருவாகும் சமூக தொண்டு நிறுவனம் வழியாக  விபத்தால் உயர் இழந்தவர்களுக்கு சட்டை வேட்டியை எட்ட வைக்க வேண்டும்.   அகாலத்தில் கால யவனிகைக்குள் மறைந்த என்னவர் ஒரு 100 வருடமாவது வாழ்ந்தது போல் அவர் பெயர் சொல்லும் படி நல்ல சமூக அக்கறை கொண்ட செயல்களுக்கு வழி நடத்த வேண்டும். விபத்து நடந்த பின்பு விபத்தை எதிர் கொள்பவர்களுக்கு   பல விழிப்புணர்வு தகவலகள் , உடன் செய்ய வேண்டிய அணுக வேண்டிய அரசு அலுவலகம் , நிறுவனம் இவை பற்றி எல்லாம் நான் தெரிந்த அறிந்த தகவல்களை பகிர உள்ளேன். இந்த விடுமுறைக்கு நாங்கள் எங்கும் செல்ல வில்லை. என்னவர் நினைவுகளை புத்தக வடிவில் எழுதி முடித்துள்ளேன். விரைவில் புத்தகமாக வெளி  வ்ரும். கார் ஓட்ட கற்று விட்டேன். 

என் மாணவர்கள் வாழ்க்கைக்கு வெற்றி சேர்க்க உதவ வேண்டும், என் மகன்களை  நம்பிக்கை கொண்டவர்களாக, தைரியம் கொண்டவர்களாக உருவாக உதவ வேண்டும். 


இனி தனிமை இல்லை, தனிமை என நினைக்க நேரம் இல்லை, தனிமையிலும் பல இனிமை உண்டு.  விட்டு போன, மேற்கொள்ள வேண்டிய பயணங்கள் நிறைய உண்டு.  யார் அச்சுறுத்தலும் இல்லை. யாருக்கும் பதில் கொடுக்க வேண்டாம். குடும்பம், மாமியார், கடமை,  என்ற சிறை இல்லை. நான் என் மகன்கள், என் கடமை என ராஜாவும் ராணியுமாக என் விளையாட்டை  நானே ஆடி தீர்க்க கிடைத்த தருணத்தை சிறந்த  வழியில் கையாள உள்ளேன்.   நடந்ததும் நடப்பவையும் நடக்க இருப்பவையும்  நல்லவையே!!

9 Jun 2016

இறைவி -திரை விமர்சனம்

'

இறவி'  திரைப்படம்  கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாகுவதை கூறியுள்ள படம் என்று சொல்லப்படுகின்றது. கதாப்பாதிர படைப்பு ஒன்று கூட உருப்படியாக அமையவில்லை. ஒரு முழுக்குடிகார இயக்குனர், ஒரு முழு நேர ரவுடி, மாணவனான  பகுதி நேர ரவுடி என ஆண் கதாப்பாதிரங்களை வடிவமைத்துள்ளனர். பெண் கதாப்பாதிரங்கள் கணவர் ஜெயிலில் இருந்தால் கூட சுயமாக நிற்க தெரிந்த அஞ்சலி, ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை புரியும் அருள் மனைவி, எக்காரணம் கொண்டு உறவு சிக்கலில் சிக்கி தவிக்க விரும்பாத ஆனால் தன் தேவையை நிவற்தி செய்ய தெரிந்த கணவர் இழந்த பெண்.  இதில் யார் யாரையும் சாரத்தேவை இல்லையே.

எப்போதும் குடி கூத்தாட்டம் சிலை திருட்டு என சட்டத்திற்கு புறம்பான, மனித இயல்பிற்கே பொருந்தாத செயலாற்றும் ஆண்கள். வாக்கு வாதம் கணவர்களிடம் துவங்கும்  போதே கண்ணத்தில் அடிக்க தைரியமுள்ள மனைவிகள், அடி கிடைக்கும் போதும் வாங்கி கொள்ளும் மனைவிகள்! 
ஒரு ஆன்மா இல்லாத படம். எந்த காட்சியும் மனதில் பதியவில்லை, ஆண் பெண் சீனுகள் தான் அளவிற்கு மீறி காட்சிப்படுத்தியுள்ளனர். பார்க்கும் ஆடியன்ஸ் கற்பனை வளர்த்திற்கு என எதையும் விட்டு வைக்கவில்லை. இப்போதும் தமிழர்கள் எலலாம் தூங்கும் போதும் விளக்கை அணைப்பது இல்லையோ?

அஞ்சலிக்கு  டம்பிங் கொடுத்தவர்கள் இன்னும் சரியாக பேச கற்றிருக்கலாம்.  குடிகாரக்க ணவனை வெறுக்க வலுவான காரணமே இல்லை. மறுபடி காதலிக்கும் நபரும் குடிகாரர்தான். குடி நிறுத்தியவர் சிகரட் பிடிப்பதை விட வில்லை சிலை திருட்டை விடவில்லை கொலை செய்யக்கூட அஞ்சவில்லை. 

நீ என் அண்ணன்,  நீ என் உடன் பிறவா தம்பி என அன்பு மழையில் நனைபவர்கள் அவர்களுக்குள் பிரச்சினை என்றதும் கொல்ல மடிப்பதில்லை. பெண் பிரசினை என்றதும் மிகவும் கொடூரமானவர்களாக மாறி விடுகின்றனர். 

ஏதோ ஒரு கருத்து சொல்ல வந்திருக்கலாம், சொல்ல வந்த கருத்தில் தெளிவு இருந்திருக்க வேண்டும். ஆக மொத்தம் படம் ஏதோ போதையிலே இருந்து எடுத்தது போல்  இருந்தது. 

தேவைக்கதிகமான கெட்ட வார்த்தை பிரயோகங்கள், கெட்ட வாய் அசைவுகள் என மோசமான பக்கங்கள் கொண்ட மனிதர்களுடைய படம் இது.   அடியாட்கள், மற்றும் பணக்காரர்களுக்காக ஏமாற்றப்படும் அடியாட்களை பற்றி எத்தனை படம் தான் தமிழில் எடுக்க உள்ளார்கள்

கணவர் குடிகாரர் என்றதும் மனைவி நல்ல ஒருவரை தேர்ந்து திருமணம் செய்ய உள்ளாராம், இதற்கு பெற்றோரும் கூட்டு. இது எந்த ஊரில் நடக்கும் என்று தெரிந்தால் நல்லம். சம்பாதிக்கும் மகள்களுக்கே திருமணம் செய்து வைக்க தயக்கம் கொள்ளும் பெற்றோர்தான் இப்போது பெரும்வரியானோர். இதில் திருமணம் முடிந்த மகளுக்கு மணம் முடித்து வைக்கபோகிறார்களாம். 

இதில் கவனிக்கதக்க ஒரு கதாப்பாத்திரம் காதல் கணவனை இழந்த ஒரு பெண். அவர்  மேற்கொ ள்ளும் ஒவ்வொரு உரையாடலும் கொச்சையிலும் கொச்சை. எதற்கு ஆணை தேடுகிறார் என்பதற்கு தரும் விளக்கம், கொடுக்கும் முகபாவ அருவருப்பு. கணவர்   இழந்த பெண்களை பற்றிய சமூகப்பார்வையை அப்பெண் மூலம் திணித்துள்ளார் இயக்குனர். ஜன்னலோரம் சென்று அவன் செல்வதை கண்டு அழும் பெண் திருமணம் செய்ய அவனை மறுத்தது ஏன்? ஆக மொத்தம் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்தால் நாலு கேள்வி கேட்கும் சமூகம், ஒருவனுடன் கள்ளக்குடித்தனம் நடத்தினால் கண்டு கொள்ளாது இருக்கும் என்பதை சொல்கிறாரா அல்லது இது தான் கணவரை இழந்த பெண்களுக்காக வழி என சொல்லி கொடுக்கின்றாரா என தெரியவில்லை. 

இந்த தலைமுறை ஆண் பெண்கள் கொஞ்சம் பித்தம் கலங்கி மண்டை வெடித்து தான் சிந்திக்கின்றனர்,. டே மக்கா இயல்பா சிந்திங்கடா? சென்னை போன்ற சில நகர லகரியில் இருந்து விடுபட்டு படமெடுக்க முன் வர வேண்டும். கதையிலும் ஆழமில்லை கதாப்பாத்திர படைப்பிலும் அர்த்தமில்லை. கொடுத்த வேலையை நடிகர்கள் சிறப்பாக செய்துள்ளனர். எஸ் ஜே. சூரியா நடிப்பு அருமை. ஆனாலும் சார் இப்படி குப்பி குப்பியா நடித்து காட்டியிருக்கக் கூடாது! பாபி சின்ஹா நடிப்பு இயல்பாக தெரிகிறது.     சேது நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் காலம் நெருங்கி விட்டது. எடுத்ததிற்கும் கொலைகாரனாக மாறும் சேதுவை வெறுப்புடன் நோக்க தான் வைக்கின்றது இப்படம்.  அவருக்கும் அடியாட்கள் ரவுடி கதாப்பாத்திரங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் போல். ரவுடிகள் எல்லாம் கரடி மாதிரி தாடி மீசை வைப்பது தான் நிஜமா அல்லது சினிமா பாஷனா எனத் தெரியவில்லை. ஆக தமிழ்த்திரையுலகில்  நல்ல இயக்குனர் மனிதனை சிந்திக்க வைக்கும் கதைகளுக்கு பஞ்சம் ஆரம்பித்து விட்டது.  

இயல்பில் இருந்து வெகு தூரம் வெறும் கற்னையும், தப்பிதங்களான மனித உறவுகள், மோசமான  மனித நிலையை மட்டும் எண்ணி படம் எடுத்தால் இப்படி தான் அமையும். நல்ல வேளை வடிவுக்கரசியை ஒரு சீனை தவிற்து எல்லா சீனிலும் கோமா நிலைக்கு தள்ளி விட்டனர். அந்த அம்மா ஒரு சீனில் வந்தே அழுத அழுகை   வெறுப்படைய செய்தது. கணவர் இறந்து கிடக்கின்றார் மனைவி எந்த உணர்வும் அற்று குழந்தையுடன் பயணிக்க துவங்குகின்றார். பெண்கள் மழை நனைவதை பெண் விடுதலை மனநிலையை ஒருமைப்படுத்தியுள்ளாரா  இயக்குனர். 

இது போன்ற படங்களை எல்லாம் தியேட்டரில் போய் ரூபாய் கொடுத்து பார்ப்பதே நமக்கு பிடித்த செலவு தான். . அந்த  கொடுத்த ரூபாய்க்கான எந்த அழகியலும் எந்த நன்மையும் இது போன்ற படங்கள் சமூகத்திற்கு தரப்போவதில்லை. 

தமிழனின் வாழ்க்கை, பண்பு  இனி ஆராய்ச்சி உள்படுத்தும் வஸ்துவாக மாற போகின்றது. திருநெல்வேலி தியேட்டரில் பொதுவாக ஒலியை மிகவும் உயர்த்தி தான் வைப்பார்கள். பிவிடி தியேட்டரிலும் இதே நிலை தான். உரையாடல்களை கேட்கவே இயலவில்லை. கேட்ட உரையாடல்களும் அவ்வளவு செம்மையாக இல்லை. 

இந்த படம் கண்டால் ரவுடியாகவும், அடியாள் ஆகவும் குடிகாரனாகவும் மாறிவிட தன்னறியாது ஆசை வந்து விடும். தேவைக்கதிகமான கொலை தேவைக்கதிகமான சத்தம், அழுகை, அலம்பல் ஆட்டம் என ஆட்டம் கண்ட படம் இறைவி!  

8 Jun 2016

பள்ளிக்கூட நினைவுகள்!

 சில பழைய படங்களை கண்ட போது நினைவுகளும் தானே ஓடி வருகின்றது. நாங்கள் அரசு இடைநிலைப்பள்ளியில் படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் நினைவை சூழ்கின்றது. நாங்கள் மாணவிகள் செல்லும் போது உயர்நிலை மாணவர்கள் வழி மறித்து கலாட்டா செய்யும் வழக்கம் இருந்தது. மாணவிகள் அலறி சிதறி ஓடுவதில் அந்த விடலை பசங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி!
ஆனால் எங்கள் குழு சொல்லி வைத்து, அந்த பசங்க எங்கள் அருகில் சீண்ட வந்ததும் எடுத்து வைத்திருந்த சேப்டி பின்(ஊக்கு) வைத்து கிழித்து விட்டோம். இந்த செய்தி எங்கள் ஆசிரியர்கள் காதில் விழ எங்களிடம் விசாரித்து விட்டு உயர் நிலைபள்ளிக்கு தெரிவித்தனர். எங்கள் வீரத்தை ஆசிரியர்கள் பாராட்டினாலும் ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் இருந்தமைக்கு கடிந்து கொண்டனர். அந்த வருடம் நான் பள்ளி தலைவராக இருந்ததால் என் பொறுப்பற்றதனத்தையும் கண்டித்தனர்.
அந்த பள்ளியில் அந்த மாணவர்கள் தண்டனை என்ற வண்ணம் ஒரு வாரம் நீக்க அவர்கள் பெற்றோர்கள் எங்கள் வீடு தேடி சமரசம் பேசி வந்தனர். அந்த மாணவர்களோ நாங்கள் காம்பஸை எடுத்து குத்த வந்தோம் என புளுவி விட்டனர். பின்பு எங்கள் குழுவிற்கு காம்பஸ் என்ற அடைமொழி கிடைத்தது.
உயர்நிலை பள்ளிக்கு அம்மாவுடன் சேர சென்ற போது பள்ளி முதன்மை ஆசிரியை என்னை கண்டதுமே நீ தான் மாணவர்களை காம்பஸ் எடுத்து குத்த முயன்றாயோ? என்று கேள்வியுடன் அவர் கண்ணிலுள்ள முள்ளாகவே பின் வந்த மூன்று வருடத்திலும் என்னை பராமரித்து வந்தார். பின்பு வாய் நோக்கும் மாணவர்களை மாணவிகள் இட்டலி வைத்து எறிந்தால் கூட அதன் பின்புள்ள மூளை நானாக இருக்க வேண்டும் என தலைமை ஆசிரியை நினைத்து என்னையும் ஓர் குற்றவாளி போன்று விசாரித்து கொள்ளுவார். நம்ம ஊர் போலிஸிடம் மாட்டும் திருடாத கள்ளன் போல் தன் என் நிலை இருந்தது. அப்படி பள்ளிக்காலத்தில் காம்பஸ் , இட்டலி என பல கலாய்ப்புக்கு உள்ளாகியுள்ளோம். இப்போது உள்ள பெற்றோர் போல் பிள்ளைகள் விடையத்தில் பெரியவர்கள் தலையிட மாட்டார்கள், பெண்களும் இன்றைய பெண் பிள்ளைகளை போல அழுவாச்சிகள் அல்லாது வீர சூரமாக இருந்தோம்.
அன்று எங்களுடன் படித்த மாணவர்களை எல்லாம் இன்று அடையாளம் கண்டு பிடிப்பதே கடினமாகி விட்டது. மீசை தாடி என புது உருவத்தில் உள்ளனர் . இருப்பினும் அந்த பள்ளிக்கால நேசம், பாசம், மரியாதை என்றும் மறையாது இருப்பது அக்காலத்தின் அழகாகும்.

20 May 2016

அவள் அப்படி தான்!

நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில்  மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ருத்ரைய்யாவின் இயக்கத்தில் ஸ்ரீ பிரியா, ரஜினி காந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் இது.   முரண்பட்ட  பல கருத்துக்களை முன் நிறுத்தி 1978 களில் வந்த படம் என்பது நம்மை ஆச்சரியத்தில் உள்ளாக்குகின்றது.

பெண் உடல், பாலியல், ஆணாதிக்க பார்வை போன்ற பிரச்சினைகளை அலசி ஆராயும் சிறப்பான படம் இது. ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம்  இது. 

ஸ்ரீபிரியா போன்ற ஆளுமை கொண்ட நடிகைகள் காலம் கடந்து விட்டதே என்ற நினைப்பும் நம்மை வருந்த வைக்கின்றது. வெறும் கவர்ச்சிக்கும்  அல்லது நாயகனுடன் ஜோடி சேர என்ற நோக்கில் மட்டுமே கதாநாயகிகளை பெரும் வாரியான படங்களில் பயண்படுத்தி வரும் வேளையில் எல்லா சீனிலும் வந்து போகும் மிகவும் ஆளுமை கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது  பாராட்டும் படி இருந்தது. 

இந்த படத்தின் உரையாடல்கள் ஊடாக காண்பவர்களை சிந்திக்க வைக்கும் ஒவ்வொரு காட்சியும் மனதை விட்டு அவ்வளவு எளிதாக நகர இயலாது. 

எழுத்தாளர் வண்ண நிலவனின் திரை உரையாடல்கள் எடுத்து கொள்ளப்பட வேண்டியவை.  அடுத்தது இளைய ராஜாவில் இசை. குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாடல் உறவுகள் ஒரு தொடர்கதை  பாடல் என்ற பாடல் ஆகும்.

ஆறுதல் தேடி அலையும் ஓர் பெண் மனம் சந்திக்கும் துயரை நாம் காண்கின்றோம்.  தன் தாயின் செயல்பாட்டால் மன பிளர்விற்கு உள்ளான இளம் பெண் பின்பு தான் சந்திக்கும் ஆண்களிடம் எவ்வாறு உறவு சிக்கல்களில் உழலுகின்றார் என்று கதை செல்கின்றது.  ஒரே பெண் மற்று பலரின் அவரவர் பார்வையில் விதிக்கப்படுகின்றார். ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது அவரிடம் இல்லாது அவர் வாழும் சமூகப்பார்வையில் உள்ளதும் அப்பெண் அவர் எதிர் கொள்ளும் விதவும் தான் சிறப்பாக உள்ளது.

ஆண் ஆதிக்கம் கொண்ட மனநிலையில் ரஜினிகாந்த் வருகின்றார். பெண்கள் என்பர்களை ரசிக்க வேண்டும் ஆராயக்கூடாது, அவள் ஆண் தேடி அலைபவள் போன்ற உரையாடல்கள் வழி பெண்களை சித்தரிகரிப்பது  என்றால்; பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பதும் அவர்கள் உரிமை பற்றி எல்லாம் சிந்தித்து படம் எடுக்கும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் வருகின்றார்.

என்ன தான் பெண் உரிமை என பேசினாலும் தனக்கான ஒரு கொள்கை, சில கருத்துக்கள் வைத்துள்ள பெண்ணை திருமணம் என்றதும் மணம் முடிக்க யோசிக்கின்றார்.  பெண் உரிமை என்று எதுவும் தெரியாத வெகுளி பெண்ணை தன் மனைவியாக ஏற்று கொள்ளும் சமகால ஆணாக கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

ஆண் உலகம் பெண்கள் நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்டு பயண்படுத்தும் கதாபாத்திரமாக சந்திர சேகர் என்ற நடிகர் நடித்துள்ளார். உறவுகள் தொடரும் என்ற அழகிய இனிமையான பாடல் வந்துள்ளது இப்படத்தில். 

காலம் என்ன மாறினாலும் அடிப்படையில் பெண்களை பற்றியுள்ள பார்வை அதே போல் தான் இப்போது உள்ளது என இப்படம் காணும் போது விளங்கும். மனிதனின் புலன்படாத மனநிலைகளும் செயல்பாடுகளும் சரியாக அலசப்பட்டுள்ளது. 

கடைசியாக ஸ்ரீபிரியா எந்த முடிவும் அற்று நடுத்தெருவில் இறங்கி செல்வார். இது போன்ற பெண்கள் இனியும் ஜெனிப்பார்கள் மரிப்பார்கள் என முடிக்கப்பட்டுள்ளது. அதே போல் ”பெண் உரிமை என்றால் என்ன”? என்று கமல்ஹாசன் மணம் முடித்து கொண்டு வந்த சரிதாவிடம் கேட்பார். அவரும் ”எனக்கு தெரியாது” என்பார். தெரியாது இருப்பதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக உரையாடல்கள் வரும். இது போன்ற முடிவுகள் எடுத்து காட்டுகள் கூட இது போன்ற படங்கள் சமூகத்திற்கு தரும் எதிர் மறை கருத்து ஆகும். சுயமாக சிந்திக்கும் பெண்களால் ஒரு மனைவியாக வாழ இயலாது அவர்கள் நட்டாத்தில் தான் விடப்படுவார்கள் என்றா மறைமுகமாக சொல்ல வந்தார் என்று கூட மனதில் தோன்றாது இல்லை. பெண்கள் மகிழ்ச்சி என்பது விழிப்புணர்வு அற்று வெகுளியான வெளிதானா என்ற கேள்வியும் எழாது இல்லை. 

இருப்பினும் சிந்தனையை தூண்டும் படம். 

29 Apr 2016

விசாரணை!

மனித உரிமை மீறல்களை அடித்தளமாக கொண்ட படம் விசாரணை இன்று காணக் கிடைத்தது.  பொதுவாக போலிஸ் நிலையங்கள் மனிதர்களுக்கு அதீத பயத்தை கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் போலிஸ் அமைப்பை பற்றிய புரிதல், பயத்தை அள்ளி தந்து சென்றுள்ளது இப்படம். இது கற்பனையை கடந்த உண்மைக்கதையை மையமாக எடுத்த படம்.   தற்போது கோவையில் வசிக்கும் மு.சந்திரகுமார் என்கிற தமிழர் இருபதாண்டுகளுக்கு முன்பாக வேலை தேடி ஆந்திராவிற்கு சென்றிருந்த போது தான் அனுபவித்த கொடுமைகளை  ’லாக்கப்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதன் திரைப்பட உருவாக்கமே விசாரணை. 



கற்பனை என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான படங்கள், காதல் கதைக்கரு கொண்ட படங்களே மக்கள் மத்தியில் எடுபடும் என்ற சில கருத்தாக்கங்கள் நிலவும் திரைத்துறை சூழலில் சமூக அக்கறை கொண்ட  மனிதநேயத்தை பற்றியும்  மனித உரிமை மீறல்கள் பற்றி பேசும் இது போன்ற திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றது. 

கோடிகள்  ஈட்ட சாதாரண மனிதர்கள் அநியாயமாக வேட்டையாடப்படுவதும் அவர்கள் அடையாளமற்று அழிக்கப்படுவதும் தற்போதும் தொடர்ந்து வரும் அவலமாகும். மக்களை பாதுக்காக்க வேண்டிய காவலர்களை மக்கள் அழிவிற்கு காரணமாக இருப்பது மனதை பிழிகின்றது.  சாதாரண எளிமையான மக்கள் இது போன்று அழிக்கப்படுவது தற்போது எல்லா நிலைகளிலும் எல்லா துறையில் நிகழும் சம்பவங்களாகும்.  ஒரு சமூகத்தின் அடிப்படையான  குடும்பங்களில் கூட வறியவர்கள் வலியவர்களால் நசுக்கப்படுவது அழிக்கப்படுவதும் சமூக தளத்தில் கண்டு வருகின்றோம். 

விசாரணை என்ற பெயரில் தெருவில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்படும் குற்றவாளிகளை காணும் போது மாற்று சிந்தனையோடு அவர்கள் பக்க நியாங்களையும் உற்று நோக்க இப்படம் உதவ இயலும். 

வெற்றிமாறன் இயக்கம், எழுத்தில், தனுஷ் தயாரிப்பில்  திரைப்படம் திறம்பட வெளி வந்துள்ளது.  காலம் சென்ற எடிட்டர் கிஷோரின் திறமையில் படத்தின் விறுவிறுப்பிற்கு குறைவில்லை, கதாபாத்திரங்களுக்கு ஆன நடிகர்கள் தேர்வும் பாராட்டுதல்குறியது.  சிறப்பாக, கதாபாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் மிகவும் யதார்த்தவும் அர்த்த செறிவுள்ளதுமாக  விளங்குகின்றது.  புகழ் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்தை படமாக்கும் போல் சாதாரண மக்களில் எழுத்தையும் படமாக்குவதும் எடுத்து கொள்ளப்படவேண்டிய அம்சமாகும். 

 மனித சமுதாயம் சிறப்பாக, தமிழ் சமுதாயம் மனித  உரிமை மீறல்கள் பற்றி பெரிதாக எடுத்து கொள்வதில்லை. பணிவு, பதவி, பணம், உறவு, விதி  என்ற பெயரில்  எல்லா மீறல்களையும் தாங்கி கொள்கின்றனர். இது போன்ற படங்கள் மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வு கொண்டு வர இயலும். 
இது போன்ற படங்களுக்கு ஏதோ காரணங்கள் கூறி புரக்கணிக்காது தேசிய விருதுகள் மேலும் வெனிஸ் வெனிஸ் திரைப்பட விழாவில், மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற பிரிவில் விருது கிடைத்துள்ளதும் பாராட்ட ப்பட வேண்டியுள்ளது.

இந்தியாவில் கைதிகளால் ஜெயில் நிரம்பி வழிவதாகவே தகவல்கள் சொல்கின்றன. மூன்று லட்சத்திற்கு மேல் மக்கள் பெண்கள் உள்பட  ஜெயிலில் கழிகின்றனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு விசாரணை கைதிகள் ஆவார்.  குழந்தைகளின் தாய்மார்களான  2000த்திற்கும் மேற்பட்ட  பெண்கள் விசாரணை கதைகளாக உள்ளனர்.  சமீபத்தில் இந்தியாவில் நடக்கும் விசாரணை சூழலை பற்றி விவரித்த போது உச்ச நீதிமன்ற நீதிபதியே கண்ணீர் விட்டு அழுத செய்தியை பத்திரிக்கையில் வாசித்தோம்.  நளினி போன்ற மிக முக்கிய குற்றவாளிகள் என்று சொல்லப்பட்ட சிலரின் வாழ்க்கை தான் உலக வெளிச்சத்திற்கு தெரிந்தது. இளம் குற்றவாளியாக ஜெயிலில் சென்ற பேரளிவாளன் என்ற மனிதரின் வாழ்க்கையை பற்றி பத்திரிக்கை செய்தி ஊடாக அறிந்ததில் இருந்து பெரும் வேறுபாடு இல்லை விசாரணை போன்ற படங்கள் கூறும் கதைகளும். உலகில் அமெரிக்காவில் தான் அதிகம் மக்கள் அதாவது 21 லட்சம் BBC பேரை குற்றவாளிகள் என்ற பெயரில் ஜெயிலில் வைத்துள்ளனர். 1391 சிறைச்சாலைகள் இந்தியாவில் உள்ளன. 

ஜெயில் பற்றி கூறினாலே ஆங்கிலேயர் காலத்திலுள்ள அந்தமான் கலாபானி  சிறைச்சாலைப்பற்றிய கொடும் கதைகளை  பற்றி கூறிவிட்டு நகருவதே வழக்கமாக உள்ளது.  ஆனால் சுகாதாரம், மனித உரிமை மீறல்கள் என்ற நோக்கில் நோக்கினால் இந்தியாவிலுள்ள பலச் சிறைச்சாலைகள் சாராசரி தரத்திலும் குறைவாகத்தான் தற்போதும் உள்ளது. 

நெல்லை பாளையம் கோட்டை சிறைச்சாலையில் பல விமர்சனங்களையும் கடந்து  சிறைசாலைவாசிகள் கல்வி கற்க, பட்டம் பெற ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுதலுக்குறியது. மேலும் சிறைவாசிகள் உணவகம் நடத்துவது இயற்கை விவசாயம் மேற்கொள்ள வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளதும் எடுத்து சொல்லக்கூடியதே. 

திருவனந்தபுரம் சிறைவாசிகள் நல்வழிப்படுத்துதல் நிகழ்வுகள் நம்பிக்கை தரும்படியாக உள்ளது.https://www.youtube.com/watch?v=ZwuEGHYo4wg

24 Apr 2016

சமூக நியதி!

பாபா அத்தான் எனக்கு இன்னும் புரியாது இருப்பது இந்த சமூக நியதி தான்! என் விருப்பங்களை, என்னை புரக்கணிக்கும் பாங்கு நீங்கள் அன்று போன நாள் முதல் துவங்கி விட்டது. எனக்கு உங்களை பார்க்க 15 நிமிடம் அதுவும் அருட் தந்தையர் பிரார்த்திக்கும் நேரம் தான் கிடைத்தது. உங்களுடைய கடைசி பயணத்தில் என்னால் உங்களுடன் வர இயலவில்லை. பெண்கள் வரக்கூடாது என தடுத்து விட்டனர். உங்கள் உடை, நடை எல்லாம் உடனிருந்து கவனித்து வந்த எனக்கு உங்களுடன் வர மற்றவர்கள் அனுமதி பெற வேண்டி வருகின்றது.  நான் எப்படி துக்கம் அனுசரிக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என யாரும் அன்பாக சொன்னாலும் பிடிக்க வில்லை சமூகக்கருத்தாக கூறினாலும் பிடிக்கவில்லை. என்னை எனக்கு பார்த்து கொள்ள தெரியாதா? 

அடுத்த கட்டளை நானா பக்கவும் இருந்து வருகிறது. இனி பேசக்கூடாது இனி அமைதி காக்க வேண்டும். ஆம் இனி என்ன தான் பேசவுள்ளது எனக்கு. உங்க அதிகாரம், சத்தம், எல்லாம் அவர் இருந்த போது தான், இனி பெற்ற பிள்ளையை கூட நீங்கள் தான் அனுசரித்து போகவேண்டும் என்ற உபதேசம் வேறு.

அடுத்த சில நாட்களில் பணிக்கு திரும்பி விட்டேன். ஒருவர் எங்கள் துறையை சார்ந்த அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்துள்ளார். என்னை அழைத்தாலும் சென்றிருக்க மாட்டேன். நம் வழக்கமே நாம் சேர்ந்து செல்வது தானே. இருந்தும் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் மேம் உங்களுக்கு அழைப்பு வரவில்லையா என்றனர். நானும் கைபேசியில் பிரச்சினை இருக்கலாம். அழைப்பு பெறவில்லை என்று கூறி முடித்து விட்டேன். பல நாட்கள் கடந்து குறிப்பிட்ட நபர் என்னிடம் வந்து மேடம் உங்களை அழைக்கவில்லை நான்.  வருந்த வேண்டாம். ஒரு வருடம் கடக்கவில்லை பார்த்தீட்களா என்றார். இதுவெல்லாம் இந்த சமூகத்தின் இயல்பு தானா? ஒரு மனிதனை குத்தி விட்டு நோவு பார்ப்பது.  நம் தெருவில் நான் நடந்து போகும் போது யார் முகத்தையும் பார்ப்பதில்லை. காலம் மாறிவிட்டது சகுனம் பார்ப்பது இல்லை என்பதெல்லாம் பொய் அத்தான். உங்களுடன் கவுரவமாக நான் போன காலம் மாறி யாருக்கும் அச்சம் வராதவண்ணம் என் முகத்தை வேறு திசையில்  திருப்பி கொண்டு நானே நடந்து போகின்றேன். இன்னும் ஒரு தோழி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அந்த நிகழ்விற்கு சாப்பாடிற்கு அழைக்கும் போது என்னை அழைக்க தயங்கின்றார். இவரோ புரஸ்டன்ற் கிறிஸ்தவராம். நானே நீங்கள் என்னுடன் இல்லாத  எல்லா பொது நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், பயணங்கள் என ஒன்றுமே  விரும்பவில்லை. நம் மகன் கூறியுள்ளான் அவன் படித்து வேலைக்கு வந்த பின் நாம் முன்பு பயணித்தது போல் பயணிக்கலாம் என்றான். ஆம் நீங்கள் கூறி கொண்டிருந்த ராஜஸ்தான் கோட்டைக்கு செல்ல வேண்டும். நாம் விரும்பி செல்ல நினைத்த இலங்கை செல்ல வேண்டும். என் மகன் அழைத்து செல்ல நான் காத்திருப்பேன். 

நம் பிரிவு நமக்கானது நம் தனிப்பட்ட இழப்பு, தனிப்பட்ட கவலை கண்ணீர்.  இதில் ஏன் சுற்றி இருப்பவர்கள் கருணை, சமூக நடப்பு என்ற பெயரில் என்னில் சில விடையங்களை நிலை நிறுத்த பார்க்க வேண்டும்  என தெரியவில்லை. அத்தான் உங்கள் பெட்டியில் உங்களுக்கு பிடித்த வெள்ளை சட்டையை வைத்து அனுப்பினேன். நம் திருமணச்சேலையை வைத்து அனுப்ப அந்த நேரம் தவறி விட்டேன், ஆப்பிரிக்கா போன்ற தேசங்களில் அந்த ஆண்களுக்கு சொந்தமான உடைமைகளுடன் மனைவியும் வைத்து அனுப்புவார்களாம்.  நம் சமூகத்திலும் இதை தான் எதிர் நோக்குகின்றனர். ஆனால் இந்த சமூகத்தை எதிர் கொள்வதிலும் சில வசதிகள், சில பெண்மைக்கான வசதிகள் இந்த நிகழ்வில் உண்டு என்று தான் தோன்றுகின்றது. நான் எப்போது மற்றவர்களிடம் கதைக்கும் குணம் உடையவள். தற்போது நானாகவே என் வாய்க்கு பூட்டு போட்டு வருகின்றேன். விலகி போகவே விரும்புகின்றேன். நீங்கள் இல்லாது கதைக்க ஆர்வமாக இருக்கின்றேன் என யாரும் நினைக்க வேண்டாமே? நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள். உங்கள் நாசரேத்தை சேர்ந்த பால்ய கால நண்பர் பாலமுருகன் அண்ணா  நெல்லை ரெயில் சந்திப்பில் வைத்து சந்திக்கலாம் என்றதும் என்னையும் அழைத்து சென்றீர்கள் உங்களுடன். அதே போல் கிரீன் அண்ணா வந்த போதும் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். அப்போது மற்றொரு உங்கள் எஸ்டேட் குடும்பத்தையும் அங்கு வைத்து கண்டு வெகு நேரம் பேசி இருந்தோம். 

நம் எதிர்  வீட்டு நபர் உங்களை கொண்டு போன நேரம் சன்னல் கதவை அடைத்து விட்டு வெகுநேரம் கடந்த பின் ஜன்னல் வழியாக கொண்டு போய் விட்டார்களா என கேட்டு விட்டு ஜன்னலை திறந்தார்களாம். பின்பு 31 நாட்களுக்கு பின்பு தான் அடைத்த கதகை திறந்துள்ளனர். நம் மகன் நண்பன் அந்த வீட்டிலுள்ள சிறுவன் கூட 42 நாட்களுக்கு பின்பு தான் சாம் ஜோயலிடம் பேச கைபேசியில் அழைப்பு விடுத்துள்ளான்.  எதிர் வீட்டு சாமியாரை உங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கின்றேன். அந்த ஆளும் மனைவியும் வந்து நீங்கள் போன அன்று ஒன்றும் தெரியாது என பொய்யாக கதைத்து விட்டு ஞாயிறு அன்று வந்து விசாரித்து சென்றனர்.  பொதுவாக மரண வீட்டிற்கு வியாழன் ஞாயிறு அன்று மட்டும் தான் செல்வார்களாம்.  அன்று நான் அரசு மருத்துவ மனைக்கு போய் வரும் முன்னே நம் பக்கத்து வீட்டுகாரர்களூக்கு தெரிந்து விட்டது. என் வாயில் இருந்து கேட்க வேண்டும் என  அவர்கள் காம்பவுண்டுக்குள் இருந்தே கேட்டு கொண்டிருந்தனர். நீங்க தான் பேருந்து காத்து நிற்கும் போது இவர்களை பேருந்து நிலையத்தில் கொண்டு விடுவீர்கள். ஒரு நாள் நாம் இரவில் வீடு வந்து சேர நம் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபர் குடித்து விட்டு மரத்தின் அடியில் படுத்து கிடக்க ஒரு கணம் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் செல்லலாமா என்று யோசித்து விட்டு, என்ன நினைத்தீர்களோ ஓடி சென்று அந்த நபரை தூக்கி அவர் வீட்டிற்குள் விட்டு விட்டு வந்தீர்கள்.

மோசஸ் நம் வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி இருக்கும் நபர், உங்களை போகும் போதும் வரும் போதும் வழி மறித்து பேசுவாரே; அவரகள்  மகள் திருமணம் , பேரன் பிறந்த போது  நாம் மெனக்கெட்டு சந்தித்து பரிசு வழங்கி வந்தோமே. அந்த ஆட்கள் எல்லாம் நம்மை தெரியாத போல் நடித்து கொள்கின்றனர். இதனால் நான் பொதுவாக யாரை கண்டாலும் பேசாது விலகி சென்று விடுவேன். யார் அபசகுனம் என்று நினைக்கின்றார்கள் என எனக்கு விளங்கவில்லை. 

சில விடையங்களை அவர்கள் பல முறை அழுத்தி கூறி ரொம்ப நல்லவர்களாக மாறக்கூடாது தானே.  பலர் உங்க குடும்பத்தை பற்றி பண ஆசை பிடித்தவர்கள், அந்த தாய் ஈவிரக்கம் அற்றவர் என்ற போது ”அவ சமாளித்து கொள்வாள்” என்றனர். ஐந்து பட்டு சேலை வாங்கி கொடுத்து விட்டாச்சு எனக்கூறி   எத்தனை சேலை வாங்கி கொடுத்தனர். பட்டு சேலை கணக்கு பேசி வாங்கின என் மாமியார் எனக்கு பின்பு ஒரு பெயருக்கு கூட ஒரு சேலை எடுத்து தரவில்லை. எல்லாம் என் மனதில் ஆறிக்கிடந்த காயங்கள். தற்போது யாராவது என்னை ஆசுவாசப்படுத்த அல்லது அவர்கள் நல்ல மனதை எனக்கு புரிய வைக்க ஆரம்பிக்கும் போது என்னால் அமைதி காக்க இயலவில்லை. கொந்தளித்து போகின்றேன்.

எல்லா வசதி வாய்ப்பு இருந்தும் கல்விக்கு என செலவழிக்க பெட்டியை வித்தேன் சட்டியை வித்தேன் என சிலர் கணக்கு கூறும் போது வெறும் தனியார் நிறுவனத்தில் இருந்து கொண்டு எனக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கி தந்தீர்கள். ஒரு போதும் சொல்லி காட்டவில்லை .  நான் கேட்கும் முன்னே எனக்கு தேவையான புத்தகம் என்னிடம் வந்து விடும் உங்களால். உங்க தியாகம் அன்பு தான் எனக்கு பெரிதாக படுகின்றது. இன்று நீங்கள் முதலில் போய் விட்டீர்கள் என்பதற்காக நான் உங்கள் பக்கம் இருந்து நகல இயலாது. நீங்க தான் எனக்காக மிகவும் உழைத்தீர்கள். பலன் எதுவோ எனக்கு தெரியாது ஆனால் உண்மையான அன்பால் பொதிந்தது நீங்க மட்டும் தான். ஒரு பொருளை வாங்கி வந்தால் உடன் தருவது என்னிடம் தான். என் மகிழ்ச்சியான முகத்தை பார்க்க அவ்வளவு ஆசைப்படுவீர்கள். 10 ரூபாய்க்கு பெயருக்கு பூ வாங்கி தரக்கேட்டால் உங்கள் மனம் போல் வாங்கி தந்து என்னிடம் பணம் அருமை தெரிகிறதா என திட்டு வாங்குவீர்கள். நம் திருமணம் முடிந்த முதல் வருடம் எனக்கு ஒரு மோதிரமும் சுடியும் வாங்கி வந்து தந்தீர்கள். அன்றைய மனநிலையில் என்னை தேர்வு செய்ய அழைத்து செல்லவில்லை எனக்கூறி உங்கள் மகிழ்ச்சியைக்கூட நான் கெடுத்தது நினைவில் வந்து கொல்கின்றது.


உங்களை இழந்தது என் ஜென்மபாபம்.  என் கர்ம பாபம் அல்ல. நான் உங்களுக்கு உண்மையாகத் தான் இருந்தேன். நீங்க தான் என்னை மிகவும் நன்றாக வசதியாக வைக்க போகின்றேன் எனக்கூறி நாலு மாதமாக சில உங்கள் போக்குகளை மறைத்து வந்துள்ளீர்கள்.  உங்களை கட்டுப்படுத்தி உங்களை நேசிப்பது உங்களை காயப்படுத்தி விடக்கூடும் என உங்கள் போக்குக்கு அனுமதித்திருந்தேன். ஆனால் இந்த விபத்து நம் எல்லா நோக்கங்களையும் லட்சியங்களையும் வேரோடு அறுத்து விட்டது. இந்த சூழலில் யாரும் தன்னை தங்கள் தியாங்களை முன் நிறுத்தி என்னை புரியவைக்க நினைப்பது அபத்தவும் தன் அகங்காரவுமாகத் தான் இருக்கும். அதற்கும் நான் பதில் கொடுக்கக்கூடாது அமைதி காக்க வேண்டும் என்று நினைத்தால் நானும் உங்களைப்போல் கடவுளாகத்தான் மாற வேண்டும்.

என் வாழ்வில் எனக்கு கிடைக்காத மிகவும் உண்மையான, பண்பான தன்னிகரற்ற அன்பு, சுதந்திரம், அரவணைப்பு, மரியாதை எல்லாம் கிடைத்தது  உங்களிடம் இருந்து தான். மற்றவர்களுக்கு  எல்லாம் சில சுயநலங்கள் இருந்தது. உங்களுக்கு இருந்த ஒரே சுயநலம் நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் உங்க ஆசை நிறைவேறாது போய் விட்டது அத்தான். அந்த ஆசை நிறைவேற நானும் உங்களுடன் வந்து சேர வேண்டும். அந்த நாட்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

21 Apr 2016

வருடங்களை யுகங்களாக மாற்றிய விதி!

திருமணம்  முடிந்து அத்தான் வீட்டிற்கு சென்றாகி விட்டது.  சென்ற ஒரு மாதத்திலே எனக்கு புரிந்து விட்டது இது அவசரமாக முடிவாகின திருமணம். நானும் சில விடையங்களில் பக்குவமாகாத மனநிலையில் இருந்தேன்,  பல சம்பவங்கள் அங்குள்ள சூழல்கள் என் வீட்டில் இருந்தும் மிகவும் மாறுபட்டிருந்தது.  எங்கள் வீட்டில் அப்பா எங்களுக்காக எல்லாம் தியாகம் செய்பவராக இருந்தார். தன்னை விட பிள்ளைகள் சுகமாக இருக்க வேண்டும் என கருதுபவர். எங்கள் சுதந்திரத்தில் தேவை இல்லாது தலையிடாதவர். அப்பாவிடம் நான் அடி வாங்கினதாக ஒரே ஒரு முறை தான் நினைவு உள்ளது. அவருக்கு பாரிய கல்வி அறிவு இல்லை என்றாலும் பண்பானவர்.

ஆனால் அத்தான் வீட்டிலோ அவருடைய தந்தையிடம் யாரும் பேச இயலாது. அவர் மட்டுமே கதைப்பார். எப்போதும் ஆங்கிலப் புத்தகங்கள் தான் வாசிப்பார். தனக்கு காட்டுக்கு,  ஆலையம் செல்லும் போது அணிய, விருந்து வீட்டுக்கு செல்ல என பல காலணிகள் வைத்திருப்பார். பிள்ளைகளுக்கோ இரு செட் செருப்பு தான் இருந்தது.  ஒன்று வீட்டிற்குள் இட மற்றொன்று வெளியில் இட! எப்போதும் பிள்ளைகளை குற்றம் பாடி கொண்டே இருப்பார். அவர் வரும் போது வீட்டில் யாரும் கதைக்கக்கூடாது ரேடியோ சத்தமாக வைக்கக்கூடாது. பிரத்தியேகமாக டிவி ரிமோட் அவர் கையில் தான் இருக்க வேண்டும். முக்கியமாக  அவர் இருக்கும் நாற்காலியில் யாரும் இருக்கக்கூடாது. அந்த வீடு வீடாக தெரியவில்லை எனக்கு அலுவலகமாகத்தான் தெரிந்தது.


என் வீடோ வண்டிப்பெரியார் டவுண் மத்தியில் அவர்கள் வீடு நடுகாட்டில் அதும் கம்பனி வீடு. திருமணம் முடிந்த பின்பு தான் சொந்த வீட்டு, கம்பனி வீடு பிற்காலத்தில் வாடகை வீடு எல்லாம் விளங்கினது.  எங்கள் வீட்டில் எல்லாம் இருந்தும் இல்லாதது போல்  பாவிப்பர், அவர்கள் வீட்டில் பல விடையங்கள் வெட்டி பந்தாவாக காட்டி கொள்வர்.  தினம் இரவில் என்னவர் அப்பா ஒரு அவுன்ஸ் உயர் ரக பிராந்தி அருந்துவது எங்கள் குடும்ப சாப்பாட்டு மேஜையில் இருந்து தான். அதை தானாக குடிப்பதும் இல்லாது, திறம் உள்ளவன் சம்பாதித்து குடிக்கலாம் என்று தன் மகன்களுக்கே சவால் இடுவார்.  நான் என்னவரிடம் இதை பற்றி கேட்ட போது இவர் நாங்கள் பக்கத்து வீட்டில் சென்று குடிப்பதை அறியாது இருக்கார் என்றார். தன் பிள்ளைகளுக்கு தன் வீட்டு வருமான செலவுகளை பகிராது கற்று கொடுக்காது பிள்ளைகள் என்பவர்கள் தன் வீட்டு பைக் துடைக்க குடை போன்ற தொலைக்காட்சி ஆன்றனவை சரிசெய்யவே பயண்படுத்தி வந்தார்.

வெளியில் ஆசாரம் கட்டுப்பாடு, உள்ளே அராஜக ஆட்சி, எகத்தாளம் என்னை அந்த வீட்டை வெறுக்க செய்தது. காட்டுக்கு நடுவில் என்பதால் பாம்பு பயமும் என்னை தொற்றி கொண்டது. என் மாமனார் தேயிலைத்தோட்ட அதிகாரி என்பதால் வீட்டில் வேலையாட்கள்  மாடு வளர்ப்பது, செடி வளர்த்து, காய்கறி பால் விற்பது எல்லாம் எளிதாக இருந்தது. என்னவரோ அலுவலக அதிகாரி மேலும் கம்பனி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் தணிக்கைத்,துறையில் இருந்ததால் எல்லாற்றிலும் சுயகட்டுபாடும் தேவை இருந்தது அவருடைய மேலதிகாரியும் தேவைக்கு அதிகமாகவே கட்டுப்படுத்தியும் வந்தார்.   எங்கள் வீடு இன்னும் பெரும் கொடும் வனத்தில் என்பதால் வீட்டை சுற்றி சில குறிப்பிட்ட இடங்களில் சாரை பாம்பை காணலாம். எனக்கு பாம்பு தான் மிகவும் பயம். பாம்பை பற்றி எங்கள் பக்கத்து வீட்டு நண்பர்களிடம் கூறினால் பாம்பு நடு மத்தியில் விழுந்தது, குறுகே ஓடினது என பல பல .அதை விட பயங்கர கதைகள் சொல்வார்கள்.  

எங்கள் பெரிய மகன் பிறந்து 90 நாள் கடந்து சென்ற போது வீட்டில் வண்டு கத்தும் போல் சத்தம். அத்தான் டவுணில் இருந்து வந்த போது அந்த குறிப்பிட்ட சத்தம் வந்த திசையை காட்டி கொடுத்தேன். அது தேன் நிறமுள்ள ஓர் நல்ல பாம்பாக இருந்தது. அது போனதை கண்டோம். அது எங்கிருந்து வந்தது எங்கு போயிருக்கும் என பல நாட்கள் ஆராய்ந்து கொண்டிருந்தோம். இப்படி பல நெருக்கடி மத்தியிலும்  அத்தான் பாதுகாப்பில் இருப்பது மட்டுமே மகிழ்ச்சி. அவர் ஓர் அதிசயப்பிறவி. யார் யாருக்கு என்ன தேவையோ பார்த்து பார்த்து செய்வார். அது என் வீட்டார் ஆனாலும் அவர் வீட்டார் ஆனாலும் ஒரே போல் தான் செயல்படுவார். அவர் வீட்டார் என்றதும் கொஞ்சம் அதிகமாக பற்றை வெளிப்படுத்துவார் அவ்வளவே.  இந்த குணம் அவர் போகும் மட்டும் இருந்தது. அவருக்கு யார் என்ன செய்கின்றார்கள் என கணக்கிட மாட்டார். அவரால் என்ன செய்ய இயலுமோ அதை செய்து கொண்டே இருப்பார்.

அவருடைய பெற்றோர் அத்தானை ஒரு வகை தரித்திர சூழலில் வளர்த்தால் அவருக்கு தன் பிள்ளைகள் எவ்விதவும் கஷ்டப்படக்கூடாது என எண்ணி ஆற்றலையும் மிஞ்சி நல்ல பள்ளிகளில் கல்வி கொடுத்தார், தன் நிழலில் தன்னுடனே வைத்து வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.  பல போதும் தகுதிக்கு மீறியே பிள்ளைகளுக்காக செலவழித்தார். பெரியவர் எட்டாம் வகுப்பு ஆகினதும் இனி பைக் சரிவராது எனக்கண்டு கார் வாங்க ஆசைப்பட்டார். எங்கள் எல்லா ஆசையும் நிறைவேற்ற அவர் கடின உழைப்பு தேவைப்பட்டது, உழைத்து கொண்டே இருப்பார். தூங்கும் நேரம் தவிர்த்து ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார். சில நாட்களில்  பல மணிநேரம் தட்டச்சு செய்வதால் அவர் விரல்கள் வலிப்பது உண்டு, அப்போது கையை தடவி தரக் கூறுவார். கால் ஒரே நிலையில் வைத்து நீர் பிடித்தும் இருந்துள்ளது.  அப்போது நாங்களை எண்ணை தேய்த்து கொடுப்போம். இதனால் நான் காணப்பயிறை வேகவைத்து தண்ணீர் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அவர் போகும் சில மாதம் முன் எங்கள் மகன்கள் ”அப்பா உங்க வயிறு பெரிதாகி கொண்டே போகின்றது ஜிம்முக்கு வாங்க என அழைப்பார்கள். சில நாள் சில மணிநேர நடைபயிற்சியுடன் வந்து சேருவார். ஜிம்முக்கு போக நேரம் இல்லை என மறுப்பார். அப்போது அவரை ஆசுவாசப்படுத்த  ”டேய் அப்பாவின் அழகே இந்த வயறு தான். கடவுளின் பிள்ளைகள் கொழுத்த கன்றுகள் போல் இருபார்கள்” என்பேன்.


அவருக்கு பிடித்த நேரப்போக்கு பிள்ளைகளுடன் வீடியோ விளையாட்டு என்பதாக இருந்தது. சமீப காலமாக அந்த விளையாட்டை மறந்து விட்டார். தற்போது அவருக்கு  மன அழுத்தம் என்று தோன்றினால் வாகனத்தை எடுத்து கொண்டு சில நேரம் பயணம் செய்து வரவே விரும்புவார்.  அல்லது சமையல் செய்ய மிகவும் ஆசைப்படுவார். பாத்திரம் கழுகுவது, காய்கறி வெட்டுவது அரைத்து கொடுப்பது மட்டுமே என் வேலையாக இருக்கும்.  ஞாயிறு அன்று அத்தான் சமையலாகவே இருக்கும். காலையில் என்னையும் சந்தைக்கு  அழைத்து சென்று இலை உட்பட எல்லா காய்கறியும் வாங்கி வந்து பிரியாணி செய்வார். செய்து முடிக்க 11 மணியாகி விடும். நாங்கள் நால்வரும் ஒன்றாக உணவு எடுக்க அமருவோம். என் இருக்கை அத்தான் அருகில் தான் இருக்க வேண்டும். அவர் நடத்தின வாழ்க்கை ஆக்கபூர்வமாக, அன்பால் உருகி, உயிரோட்டதாக இருந்தது. இதில் நாங்கள் யாராவது வருத்தப்பட்டால் அவரும் வருந்தி விடுவார். அவரை வருந்த செய்ய வேண்டாம் என்றே அவர் உள்ள போது அவர் விரும்பாததை கதைப்பது இல்லை என்றிருந்தோம்.


பிள்ளைகளை நான் ஏதும்  வேலை செய்ய கூறினால் நான் செய்கிறேன். அவர்களை நிம்மதியாக இருக்க விடு.  தன் சிறு வயதில் இரவு உணவுக்கு முன் தன்  அம்மா உடமரக்கட்டையை வெட்டிப்போட கட்டாயப்படுத்துவதை வெறுப்புடன் நினைத்து பார்ப்பார். அதே போன்று இறச்சி குழம்பு கேட்டால் கிராம்பி எஸ்டேடில் இருந்த போது  கொக்கை வழி நடந்து சென்று பாம்பனார் டவுணில் இருந்து வாங்கி வரக்கூறுவதை நினைவு கூறுவார். தன் பெற்றோர் தன்னை நிர்பந்தித்தது போல் தன் பிள்ளைகள் நிர்பந்ததிற்கு உள்ளாகுவதை விரும்பவே மாட்டார்.


இது போன்ற அவருடைய சில விருப்பங்களாலே அவர் பல மடங்கு அதிகமாக உழைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். எங்கள் திருமணம் முடிந்த போது அவர் 6 ஆயிரம் ரூபாய் கடனுடன் தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு என ஒரு ரூபாய் கூட அந்த பெற்றோர் கொடுக்கவில்லை. நாங்கள் தூத்துக்குடியில் குடிபுகுந்த போது அத்தான் ஊதியத்திற்கு; வரிசை வீடு, பொதுக்கழிப்படம் உள்ள வீட்டிற்கு குடிப்புகிரத்தான் தகுதி இருந்தது. ஆனால் என் வசதி வாழ்க்கையை கருதி நல்ல தனி வீடாக பிடித்து குடியிருந்துள்ளோம். பண்டிகை என்றால் எங்களுக்கு எடுத்து தந்த பின் கடைசியாகவே அவருக்கான உடையை எடுப்பார். எங்கள்  திருமணம் ஆன பின் அவர் பெற்றோர் அவருக்கு அவர் பிள்ளைகளுக்கு ஒரு முறை கூட துணிமணிகள் எடுத்து கொடுக்கவில்லை என வருத்தப்படுவார். ஆனால் அத்தான் வசதியான பின் தன் பெற்றோருக்கு துணிமணிகள் எடுத்து கொடுக்க தயங்கினது இல்லை. இந்த புதுவருடம் தன் அம்மாவிற்கு ஒரு சேலை என்னை வைத்து தேர்ந்து எடுத்து அவர் கையால் கொடுத்தார். 


என் தோழிகள், என் வயது கொண்ட என் உறவினர்களை கண்டால் என் வாழ்க்கைத்தரம் மெச்சப்படவில்லை. பின் தங்கியே இருந்தது. ஆனால் எங்கள் அன்பால், எங்கள் பிணைப்பால் இல்லை என்ற நிலையை எல்லாம் உண்டு என செழுமையாக்கியிருந்தோம். அத்தானின் பிரிவைத் தவிற எந்த துயரையும் நாங்கள் எதிர்கொண்டிருப்போம். அதனால் தான் என்னவோ இறைவன் அத்தானை விரைவாக அழைத்து கொண்டார். ” எல்லாம் அத்தான்”  என்ற இடத்தில் ”இல்லை” என இறைவன் தீர்வு எழுதியதின் மர்மம் தான் விளங்கவில்லை. நல்ல குடும்பம் அரவணைப்புள்ள கணவன் வீட்டார் கருதலான  உறவினர்கள் என எல்லாமே இல்லை, இல்லை என இருக்க எங்களுக்கு எல்லாமான அத்தானே ஏன் அழைத்தாய் இறைவா? என்ன தத்துவமும், எந்த ஜெபமும், எவ்விதமான கடவுள் நம்பிக்கையும், எங்களை ஈடேற செய்யாது. எங்களை கைபிடித்து நடத்தியவரை அழைத்து சென்று விட்டு எங்களை ஓடிவரக் கூறுவது கூட கேலியாக சிரிப்பது போல் தான் உள்ளது. இன்றைய மனநிலையில் 10 வருடம் சொந்த வீடு என மகிழ்ச்சியாக இருந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு, நாங்கள் வாடகை வீடு தேடி போவது தான் நிம்மதியை தரும் போல் உள்ளது. எங்கள் இருப்பு, எங்கள் உயிர், மூச்சு சந்தோஷம் எல்லாம் அணைத்து என்ன பெரிய ஆசிர்வாதம் கிடைக்க உள்ளது எனத்தெரியவில்லை. ஐந்து வருடமாக கார் இருந்தும்  ஒரு முறை கூட ஓட்டுனர் இடத்தை எட்டி பார்க்காத என்னை கார் ஓட்ட கற்று கொள்ள அனுப்பி விட்டது அத்தான் பிரிவு!  பல வருடமாக சேர்த்து வைத்த கனவுகள் ஆசைகள்,எல்லாம் உடைந்து சிதற;  ஏக்கங்களுடன்  இனி புது கனவுகளை தேடி சேர்க்க வேண்டியுள்ளது


எதுவும் மனதில் ஒட்டவில்லை எதுவும் சிந்திக்க இயலவில்லை, எதைப்பற்றியும் அக்கறையும் இல்லை. ஏதோ நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றது , நான் எண்ணிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் நம் பிள்ளைகளுக்காக போட்ட உங்க கணக்கை நான் முடிக்க நினைத்தால் அதை நிறைவேற்ற இன்னும் 11 வருடங்கள் வாழ வேண்டும் அத்தான். நீங்கள் இல்லாது 11 யுகங்களாகத்தான் தெரிகிறது. உங்களுடன் வாழ்ந்த அந்த 19 வருடங்கள் மின்னல் என மின்னி மறைந்து விட்டது அத்தான்! இந்த சூழலை கடக்க நீங்க தான் உதவ வேண்டும். நீங்க தான் எந்த பிரச்சினையும் ஒரு பிரச்சினை இல்லை என அடிக்கடி கூறுவீர்களே. எங்கள் பிரச்சினை தான் தீர்க்க இயலாத பிரச்சினையாக உள்ளது.