29 Apr 2016

விசாரணை!

மனித உரிமை மீறல்களை அடித்தளமாக கொண்ட படம் விசாரணை இன்று காணக் கிடைத்தது.  பொதுவாக போலிஸ் நிலையங்கள் மனிதர்களுக்கு அதீத பயத்தை கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் போலிஸ் அமைப்பை பற்றிய புரிதல், பயத்தை அள்ளி தந்து சென்றுள்ளது இப்படம். இது கற்பனையை கடந்த உண்மைக்கதையை மையமாக எடுத்த படம்.   தற்போது கோவையில் வசிக்கும் மு.சந்திரகுமார் என்கிற தமிழர் இருபதாண்டுகளுக்கு முன்பாக வேலை தேடி ஆந்திராவிற்கு சென்றிருந்த போது தான் அனுபவித்த கொடுமைகளை  ’லாக்கப்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதன் திரைப்பட உருவாக்கமே விசாரணை. 



கற்பனை என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான படங்கள், காதல் கதைக்கரு கொண்ட படங்களே மக்கள் மத்தியில் எடுபடும் என்ற சில கருத்தாக்கங்கள் நிலவும் திரைத்துறை சூழலில் சமூக அக்கறை கொண்ட  மனிதநேயத்தை பற்றியும்  மனித உரிமை மீறல்கள் பற்றி பேசும் இது போன்ற திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றது. 

கோடிகள்  ஈட்ட சாதாரண மனிதர்கள் அநியாயமாக வேட்டையாடப்படுவதும் அவர்கள் அடையாளமற்று அழிக்கப்படுவதும் தற்போதும் தொடர்ந்து வரும் அவலமாகும். மக்களை பாதுக்காக்க வேண்டிய காவலர்களை மக்கள் அழிவிற்கு காரணமாக இருப்பது மனதை பிழிகின்றது.  சாதாரண எளிமையான மக்கள் இது போன்று அழிக்கப்படுவது தற்போது எல்லா நிலைகளிலும் எல்லா துறையில் நிகழும் சம்பவங்களாகும்.  ஒரு சமூகத்தின் அடிப்படையான  குடும்பங்களில் கூட வறியவர்கள் வலியவர்களால் நசுக்கப்படுவது அழிக்கப்படுவதும் சமூக தளத்தில் கண்டு வருகின்றோம். 

விசாரணை என்ற பெயரில் தெருவில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்படும் குற்றவாளிகளை காணும் போது மாற்று சிந்தனையோடு அவர்கள் பக்க நியாங்களையும் உற்று நோக்க இப்படம் உதவ இயலும். 

வெற்றிமாறன் இயக்கம், எழுத்தில், தனுஷ் தயாரிப்பில்  திரைப்படம் திறம்பட வெளி வந்துள்ளது.  காலம் சென்ற எடிட்டர் கிஷோரின் திறமையில் படத்தின் விறுவிறுப்பிற்கு குறைவில்லை, கதாபாத்திரங்களுக்கு ஆன நடிகர்கள் தேர்வும் பாராட்டுதல்குறியது.  சிறப்பாக, கதாபாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் மிகவும் யதார்த்தவும் அர்த்த செறிவுள்ளதுமாக  விளங்குகின்றது.  புகழ் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்தை படமாக்கும் போல் சாதாரண மக்களில் எழுத்தையும் படமாக்குவதும் எடுத்து கொள்ளப்படவேண்டிய அம்சமாகும். 

 மனித சமுதாயம் சிறப்பாக, தமிழ் சமுதாயம் மனித  உரிமை மீறல்கள் பற்றி பெரிதாக எடுத்து கொள்வதில்லை. பணிவு, பதவி, பணம், உறவு, விதி  என்ற பெயரில்  எல்லா மீறல்களையும் தாங்கி கொள்கின்றனர். இது போன்ற படங்கள் மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வு கொண்டு வர இயலும். 
இது போன்ற படங்களுக்கு ஏதோ காரணங்கள் கூறி புரக்கணிக்காது தேசிய விருதுகள் மேலும் வெனிஸ் வெனிஸ் திரைப்பட விழாவில், மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற பிரிவில் விருது கிடைத்துள்ளதும் பாராட்ட ப்பட வேண்டியுள்ளது.

இந்தியாவில் கைதிகளால் ஜெயில் நிரம்பி வழிவதாகவே தகவல்கள் சொல்கின்றன. மூன்று லட்சத்திற்கு மேல் மக்கள் பெண்கள் உள்பட  ஜெயிலில் கழிகின்றனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு விசாரணை கைதிகள் ஆவார்.  குழந்தைகளின் தாய்மார்களான  2000த்திற்கும் மேற்பட்ட  பெண்கள் விசாரணை கதைகளாக உள்ளனர்.  சமீபத்தில் இந்தியாவில் நடக்கும் விசாரணை சூழலை பற்றி விவரித்த போது உச்ச நீதிமன்ற நீதிபதியே கண்ணீர் விட்டு அழுத செய்தியை பத்திரிக்கையில் வாசித்தோம்.  நளினி போன்ற மிக முக்கிய குற்றவாளிகள் என்று சொல்லப்பட்ட சிலரின் வாழ்க்கை தான் உலக வெளிச்சத்திற்கு தெரிந்தது. இளம் குற்றவாளியாக ஜெயிலில் சென்ற பேரளிவாளன் என்ற மனிதரின் வாழ்க்கையை பற்றி பத்திரிக்கை செய்தி ஊடாக அறிந்ததில் இருந்து பெரும் வேறுபாடு இல்லை விசாரணை போன்ற படங்கள் கூறும் கதைகளும். உலகில் அமெரிக்காவில் தான் அதிகம் மக்கள் அதாவது 21 லட்சம் BBC பேரை குற்றவாளிகள் என்ற பெயரில் ஜெயிலில் வைத்துள்ளனர். 1391 சிறைச்சாலைகள் இந்தியாவில் உள்ளன. 

ஜெயில் பற்றி கூறினாலே ஆங்கிலேயர் காலத்திலுள்ள அந்தமான் கலாபானி  சிறைச்சாலைப்பற்றிய கொடும் கதைகளை  பற்றி கூறிவிட்டு நகருவதே வழக்கமாக உள்ளது.  ஆனால் சுகாதாரம், மனித உரிமை மீறல்கள் என்ற நோக்கில் நோக்கினால் இந்தியாவிலுள்ள பலச் சிறைச்சாலைகள் சாராசரி தரத்திலும் குறைவாகத்தான் தற்போதும் உள்ளது. 

நெல்லை பாளையம் கோட்டை சிறைச்சாலையில் பல விமர்சனங்களையும் கடந்து  சிறைசாலைவாசிகள் கல்வி கற்க, பட்டம் பெற ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுதலுக்குறியது. மேலும் சிறைவாசிகள் உணவகம் நடத்துவது இயற்கை விவசாயம் மேற்கொள்ள வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளதும் எடுத்து சொல்லக்கூடியதே. 

திருவனந்தபுரம் சிறைவாசிகள் நல்வழிப்படுத்துதல் நிகழ்வுகள் நம்பிக்கை தரும்படியாக உள்ளது.https://www.youtube.com/watch?v=ZwuEGHYo4wg

0 Comments:

Post a Comment