2 Feb 2025

மாயூரம் நீதிபதி வேதநாயகர் பிள்ளை

 


திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 16 கி.மீ. தொலைவில் ‘வேளாண் குளத்தூர்’ என்ற ஊரில் மதுரநாயகம் பிள்ளை என்பவர் பெரிய பண்ணையாராக இருந்தார். அவருக்கு 50 வயது நடந்தபோது தீராத சூலைநோய் ஒன்று ஏற்பட்டது. நாட்டு மருத்துவமும், கோயில் வழிபாடுகளும் குறையைத் தீர்க்கவில்லை. மேலை நாட்டுக் கத்தோலிக்க குருக்களிடம் தனது குறையைக் கூறினார். அவர்கள் மருந்தளித்ததோடு இயேசுவை மன்றாடினால் நோய் நீங்கும் என்று உரைத்தனர். அவரும் இயேசுவை மன்றாடி மருந்துண்டார். தனது நோய் நீங்கப் பெற்றார். அதனால் அவரும் அவரது குடும்பத்தாரும், சைவ சமயத்தை விட்டுக் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினர்.




 மதுரநாயகத்தின் மகன்  சவரிமுத்துப் பிள்ளை என்பவருக்கும், ஆரோக்கியமரி என்பவருக்கும் மகனாக, 1826ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14ஆம் நாள்  வேதநாயகம் பிறந்தார்.  தமது ஊரில் இருந்த திண்ணைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். 

 தன் மகன் ஆங்கிலம் சுற்று அரசாங்க வேலை பார்க்க வேண்டும் என்று வேதநாயகரின் தந்தை விரும்பியதால் 

திருச்சிராப்பள்ளி தென் மாநில வழக்கு மன்றத்தில் (Southern Provinceal Gourt)  மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்த  தியாகப்பிள்ளையை அணுகித் தன் மகனுக்கு ஆங்கிலம் கற்றுத் தருமாறு வேண்டினார். வேதநாயகரை , தியாகப் பிள்ளை தன் மாணவனாக ஏற்றுக் கொண்டார்.

வேதநாயகர் அவர் வீட்டிலேயே தங்கியிருந்து, ஒரு குல முறைப்படி ஆங்கிலமும் அன்னைத் தமிழும் கற்றார்.  வேதநாயகரும் இரு மொழி வல்லுநர் ஆனார். இளமையிலேயே தமிழ்க் கவிகள் இயற்றும் திறமையும் பெற்றார். தியாகப் பிள்ளையிடம் வடமொழியும் பிரெஞ்சும்கூட ஓரளவு கற்றுக் கொண்டார்.

வேதநாயகரின் ஆசிரியரான தியாகப் பிள்ளை அலுவல் பார்த்துவந்த தென் மாநில வழக்கு மன்றத்தில்  நீதிபதியாக இருந்த  கார்டன் (Mr. Gorden)  வேதநாயகரை அந்நீதி மன்றத்திலே ஆவணக் காப்பாளராக (Record keeper) அமர்த்தினார். தன் 22ஆம் வயதில் (1848இல்) வேதநாயகர் அரசாங்க பணியில்  அமர்ந்தார். 

திருச்சிராப்பள்ளியிலிருந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு (District Court) 1850ஆம் ஆண்டில் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தேவைப்பட்டார். ஆங்கிலமும் தமிழும் அறிந்த பலர் அவ்வேலைக்காக விண்ணப்பித்தனர். அங்கு நீதிபதியாக இருந்த பாய்லோ என்பவர், விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்முகத் தேர்வு ஒன்று நடத்தினார். ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழிலும், தமிழிலுள்ளதை ஆங்கிலத்திலும் எழுதிக் காட்டுமாறு கட்டளையிட்டார். வேதநாயகரின் மொழி பெயர்ப்பு மற்றவர்களுடைய மொழி பெயர்ப்புகளை விடச் சிறந்திருந்ததாவ் வேதநாயகர் தேர்வு செய்யப்பட்டு மொழி பெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.


ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற அக்காலத்தில் ஆங்கிலமே ஆட்சிமொழியாக அமைந்திருந்தது. ஆகவே அரசாங்க சட்டங்களும் ஆணைகளும் நீதிபதிகளின் தீர்ப்புகளும் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆங்கிலம் அறியாத மக்களுக்காக இவற்றைத் தமிழிலே மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. நீதி வேண்டி நீதிமன்றத்திற்கு வரும் நம் மக்கள், தங்கள் முறையீடுகள் முதலியவற்றைத் தாமறிந்த தாய்மொழியாம். தமிழிலேயே எழுதித்தந்தனர். தமிழறியா ஆங்கிலேயர் நீதிபதிகளாய் இருந்ததால், அவர்களுக்காக அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. இந்த மொழி பெயர்ப்பு வேலையே வேதநாயகரின் முழுநேர வேலையாயிற்று.


அக்காலத்தில் மாவட்ட வழக்கு மன்றங்களில், வழக்குகளுக்குத் தீர்ப்பளிப்பதில் நீதிபதிக்கு உதவ, “காசியார்” என்ற சான்றாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். வழக்கின் முடிவில், நீதிபதியின் கருத்தும். காசியாரின் கருத்தும் ஒருமித்து இருந்தால், அத்தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படும். இன்றேல், மேலாணை நீதி மன்றமாகிய மாநில நீதி மன்றத்திற்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு மறுபடியும் ஆராயப்படும்.

மேஸ்தர் டேவிட்சன் என்பவர் மாவட்ட நீதிபதியாயிருந்தபோது, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடைவே சமைய அடிப்படையில் மூண்ட கலகவழக்கொனறு ஆராயப்பட்டு வந்தது. அதன் முடிவில், நீதிபதியும், காசியாரும் கருத்துவேறுபாடு கொண்டனர். அதனால் அவ்வழக்கு மாநில நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டியதாயிற்று. அதன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டிய வேலை வேதநாயகருடையதாயிற்று. அவரும் அவற்றைச் செவ்வனே முடித்து, நீதிபதியிடம் ஒப்படைத்தார். அதுபோது நீதிபதி டேவிட்சன் வேற்றூருக்கு மாற்றலாகிச் செல்ல நேர்ந்ததால், அவர் அந்த ஆவணங்களைப் பார்வையிட்டு, மேலாணை நீதி மன்றத்திற்கு அனுப்புவதற்காகத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.  டேவிட்சன் எதிர்பாரா வகையில் நோயுற்று இறந்தார். அவர் எடுத்துச் சென்ற ஆவணங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பப்படாமல் அவரிடமே தங்கிவிட்டன. வேதநாயகர் இதனை அறிந்து இருக்கவில்லை.

சிறிது காலம் சென்றபின், இந்து முஸ்லீம் கலக வழக்கு மாநில நீதி மன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டபோது, அது தொடர்பான ஆவணங்கள், மாவட்ட நீதி மன்றத்திலிருந்து வரவில்லை என்பது புலனாயிற்று. அவற்றை உடனே அனுப்பி வைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு ஆணை அனுப்பப்பட்டது. அப்போது நீதிபதியாயிருந்தவர் மேஸ்தர் கிரீன்வே என்பவர். அவர் டேவிட்சனுக்கு எதிர்மறையான கயமைக் குணம் படைத்தவர். ஆதலால், அரசாங்க ஆணை கிடைத்தவுடன், அவ்வழக்குத் தொடர்பான ஆவணங்கள் அனுப்பப்படாமைக்கு வேதநாயகரே காரணமானவர் என்று முடிவு செய்து, அவரை வேலையினின்று விலக்கினார். 

வேலையிழந்த வேதநாயகர் வேதனையுற்றார். ஆயினும் அநீதியை எதிர்த்துப் போராட எண்ணினார். ஆவணங்களை மொழி பெயர்த்து அப்போதைய நீதிபதியிடம் கொடுத்த செய்தியை மாநில நீதி மன்றத்தார்க்குத் தெரிவித்து மனுவொன்று எழுதினார். மாதங்கள் பல கடந்தன. மறுமொழியொன்றும் கிடைக்கவில்லை. மீண்டும் அதே உண்மைகளை விளக்கிக் கூறி மற்றொரு மனுவையும் அனுப்பினார். அது சென்று சேர்ந்தபோது, காலஞ்சென்ற நீதிபதியின் பெட்டியில் இருந்த ஆவணங்கள் மாநில நீதி மன்றத்திற்கு அந்நீதிபதியின் உறவினரால் அனுப்பப்பட்டு வந்து சேர்ந்து, வேதநாயகரின் கூற்றுக்குச்சான்று பகர்ந்தன. மாநில நீதி மன்றத்தார் வேதநாயகர் குற்றமற்றவர் எனக் கண்டு, அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளுமாறு மாவட்ட நீதிபதிக்கு ஆணை அனுப்பினர்.

அப்போது நீதிபதியாயிருந்தவர் மேஸ்தர் கவிண்டன்  அரசு ஆணையை மதித்து வேதநாயகரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளாமல், அவர் நோயுற்றவர் என்றும், மொழிபெயர்ப்பு வேலைகளைத் தாம் செய்ய இயலாமல் மற்றொருவரின் துணையுடனே செய்தவர் என்றும் காரணம் காட்டி மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். அவரது முடிவை ஏற்றுக்கொள்ளாத மேலதிகாரிகள், அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை இலண்டனுக்கு அனுப்பிவிட்டு, மேஸ்தர் ஆரிஸ் என்ற நல்லாரை நீதிபதியாக நியமித்தனர். ஆரிஸ் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் வேதநாயகரை அழைத்து வேலையில் அமர்த்திக் கொண்டார்.


சில ஆண்டுகட்குப்பின், 1856இல் மாவட்ட நீதிபதி (Dt. Munsiff) வேலைக்கு மனுக்கள் கோரப்பட்டன. நம் வேதநாயகர் மனு செய்தார். மற்றும் அறுபதுக்கு மேற்பட்டோரும் மனுச் செய்தனர். மனுக்களை ஆய்ந்த அரசினர் மூவரை மட்டுமே தேர்ந்தெடுத்தனர். அந்த மூவரில் ஒருவர் நம் வேதநயாகர் சென்னைள உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த முத்துசாமி ஐயரும், திருவாங்கூர் திவானாக இருந்த ரகுநாதராவும் ஆவர். 

 வேதநாயகர் முதலில் 1857இல் தரங்கம்பாடியில் மாவட்ட நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர், 1859இல் சீர்காழிக்கு மாற்றப்பட்டார். ஓராண்ருக்கு பின் மாயூரத்திற்குமாற்றப்பட்டார். அங்கு 1872ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீதிபதியாக வேலை பார்த்தார்.


அவர் மாயூரத்தில் நீதிபதியாக இருந்தபோதும், நேர்மையோடு பணியாற்றி வந்தார். இதனால் பிற நீதி மன்றங்களில் நீதி கிடைக்காது என்று அஞ்சிய பலர், தம் வழக்குகளை மாயூரத்திற்கு மாற்றும்படி அரசிற்கு மனு செய்தனர். இவற்றையெல்லாம் ஆராய்ந்த அரசு, வேதநாயகரை முதல்தர நீதிபதியாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தனர். 

நெல்சன் என்ற நீதிபதி ஒருவர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த நெல்சன் நீதிபதி   முன்னறிவிப்பு இன்றி மாயூரம் நீதிமன்றத்தைச் சோதனை செய்ய ஒருநாள் வந்தார். உடல் நலங்குன்றியிருந்த வேதநாயகர், அன்று விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்தார். நீதிபதி நெல்சனோ, அலுவலக ஆவணங்களைச் சோதனை செய்து, இல்லாத பல குற்றங்களைக் கண்டுபிடித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, தனது தலைமையிடமாகிய கும்பகோணத்திற்குச் சென்றார். அக்குற்றச் சாட்டுகளுக்கு நேரில் வந்து விளக்கம் தருமாறு வேதநாயகருக்கு ஆணையிட்டார்.  உடல்திலை காரணமாக, அவர் நேரில் செல்லவில்லை. நேரில் வந்து தம்மைக் காணாது புறக்கணித்ததைப் பெருங்குற்றமாகக் கருதிய நெல்சன், அவரை வேலையினின்றும் விலக்கவேண்டும் என்றும் அரசிற்குப் பரிந்துரை செய்தார்.

 வேலையினின்று தாமே விலகிச் கொள்ளுமாறும் ஆயுட்காலம் முழுவதும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளுமாறும் வேதநாயகருக்கு (Pension) அறிவுரை கூறிக் கடிதம் ஒன்றை அனுப்பினர். உடல் நலக்குறைவையும், குடும்பப் பொறுப்புகளையும், தமிழ்த் தொண்டு, பொதுநலத்தொண்டு ஆகியவற்றில் தனக்கிருந்த ஈடுபாட்டையும், ஆங்கில ஆட்சியில் நடைபெற்று வந்த அந்தப் போக்குகளையும்; மனத்தில் கொண்டு, அரசியலாரின் அறிவுரைக்கு இணங்கி, ஓய்வூதியம் பெற்று, வேலையினின்றும் விலகிக் கொள்ள விரும்புவதாக எழுதினார். நெல்சனோ, ஓய்வூதியம் தருதல் கூடாது என்ற போதும்  ஆங்கிலேய அரசு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பதினாறாண்டுகள் நல்ல நீதிநாயகராக பணியாற்றிய வேதநாயகர் 1872ஆம் ஆண்டு வேலையினின்றும் விலகினார்.

 வேதநாயகர் தம் 25 ஆம் அகவையில் (1851 இல்) காரைக்காலை சேர்த்த பாப்பம்மாள் என்பவரை மணந்தார். சிறிது காலத்திற்குப்பின், அவர் காலமாகவே, தன் தமக்கையான ஞானப்பூ அம்மாளின் மகள் இலாசர் அம்மையாரை இரண்டாம் தாரமாக ஏற்றார். சில ஆண்டுகள் கழித்து, அவர் மரித்து விடவே, புதுச்சேரியைச் சேர்ந்த மாணிக்கத்தம்மையாரை மணந்தார். அவர் ஞானப்பிரகாசம், சவரி முத்தம்மாள், இராசாத்தியம்மாள் என்ற மூன்று மக்களைப் பெற்றபின், அவரும் இறந்தார். அதன்பின்  புதுவையை சேர்ந்த  அண்ணுக்கண்ணம்மாளை மணந்தார். அவரது மறைவுக்குப் பின் அம்மாளம்மாள் என்பவரை மணந்தார். அவரும் தன் கணவனுக்கு முன்னதாகவே காலமாகிவிட்டார். இங்ஙனம் ஐந்து  மனைவியரை திருமணம் செய்தும் தம் இறுதிக் காலத்தில், தனியராகவே வாழ்த்தார் .

மாயூரத்தில் ஒரு மாடி வீட்டை விலைக்கு வாங்கி, அதில் தம் இறுதிக் காலம்வரை வாழ்ந்து வந்தார். 


சட்டத்துறைத் தொண்டு:

வேதநாயகர் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்த காலத்தில் வழக்கு விவரங்களும், அவை தொடர்பான சட்டங்களும் ஆங்கிலத்திலேயே இருந்ததால், ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாத வழக்குரைஞர்களும் மக்களும் அவற்றை அறியக்கூடவில்லை. ஆகவே 1805 ஆம் ஆண்டுக்கும் 1861ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முதன்மையான சட்டங்கள், வழக்குகள், தீர்ப்புகள் ஆகியவற்றைத்  தமிழில் மொழி பெயர்த்தார்.  இதனை,  மாயூரம் நீதிபதியாக இருந்த காலத்தில் : 1862இல் '“சித்தாந்த சங்கிரகம் “ (சித்தாந்த = சட்டம்; சங்கிரகம் = தொகுப்பு) என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார். தமிழ் மொழியில் வெளிவந்த முதல் சட்டத்துறை நூல் என்ற பெருமை இதற்கு உண்டு.

தமிழிசைத் தொண்டு :

அக்காலத்தில்—வேதநாயகர் மொழி பெயர்ப்பாளராக இருந்த காலத்தில்— தமிழ் நாட்டில் இசையரங்குகளில்— கச்சேரிகளில்—பாடப்பட்ட இசைப்பாடல்கள்  திருவாரூர் இசை மும்மணிகளான தியாகராயர், முத்துசாமி தீட்சதர், சாம சாத்திரி ஆகியோர்  இயற்றிய தெலுங்கு மொழி கீர்த்தளைகளே  இதனைப் போக்கத்  தாமே இசைப் பாடல்கள் இயற்றித் தமிழிசைத் துறைக்குத் தொண்டு செய்ய விரும்பினார். இசையறிவு இல்லாத தன்னால் இசைப் பாடல்கள் இயற்ற இயலாமையையும் எண்ணினார். அதனால், இசைப் புலவர் இருவரிடம், தன் ஓய்வு நேரத்தில் இசை பயின்றார். பின்னர், இசைப் பாடல்களை—கீர்த்தனங்களைத்— தமிழில் இயற்றினார். அவற்றை இசையரங்குகளில் பாடச் செய்தார். அவை தெலுங்கு கீர்த்தவங்களைவிடச் சிறந்திருப்பதைப் பலரும் ஏற்றுக்கொள்ளச் செய்தார். தமிழில் இசைப் பாடல்களை இயற்ற முடியாது என்றிருந்த குறையைப் போக்கினார். தொடர்ந்து முயன்று பல இசைப்பாடல்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார். இவ்விதம், இயற்றப்பட்ட 200க்கு மேற்பட்ட கீர்த்தனைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கினார். அவை மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றிப் பாடி மகிழத்தக்கவை. எனவே, அந்நூலுக்குச “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்” எனப் பெயரிட்டு, அதனை 1878இல் வெளியிட்டார்.



 கிறிஸ்து சமயச் சார்பாகத் தாம் பாடிய பல கீர்த்தனைகளைத் தொகுத்து ஒரு தனி நூலாக்கினார். அதற்குச் “சத்திய வேத கீர்த்தனைகள்” எனப் பெயரிட்டு 1889இல் வெளியிட்டார்.அவரின் இசைப்பாடல்ளை இன்றும் இசையரங்குகளிலும் வானொலியிலும் நாம் கேட்டு மகிழ்கிறோம்.

பெண்கள் முன்னேற்றம் :

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்களைப்போல் பெண்களும் கல்வி கற்றுச் சிறந்திருந்தனர். கவி பாடும் திறமையும் பெற்று விளங்கினர். ஆனால் முஸ்லிம் ஆட்சி இங்கு பரவிய காலத்தில் ‘பெண்ணடிமை’ ஏற்பட்டது. “பெண்கள் படித்தல் கூடாது;படித்தால் கெட்டு விடுவார்கள்” என்ற பல்லவி எங்கும் பாடப்பட்டது. வாழ்வில் சரி பங்காகிய பெண்களும் கல்வி கற்று அறிவுடையோராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் தையும் வேதநாயகர் உணர்ந்தார்.


தமிழ் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர் வேதநாயகர். நல்ல எண்ணங்கள் இளமையிலே நங்கையர் மனத்திற் பதிதல் வேண்டும் என்பது அவர் கொள்கை. அக் கருத்துக்கொண்டு எழுந்தது 'பெண்மதிமாலை' என்னும் நூல். வேதநாயகர் தம் பெண் குழந்தைகள் படிப்பதற்காக அதனை எழுதினார் என்று தெரிகின்றது. பிறந்த மனையிலும், புகுந்த மனையிலும் பெண்கள் சோம்பலின்றி வேலை செய்தல் வேண்டும் என்றும், வாழ்க்கைப்பட்ட பெண் இல்லாள் என்று சொல்லப்படுவதால் அவளே வீட்டுக்கு அதிபதி என்றும், இல்லறம் நடத்தும் பெண்கள் நாள்தோறும் அறஞ்செய்தல் வேண்டுமென்றும், மாதா பிதா குரு தெய்வம்-இவர்களிடம் அன்பும் பணிவும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்றும் [7]பெண்மதி மாலை கூறுகின்றது.

பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்பதைப் பல கட்டுரைகளாலும் எடுத்துரைத்தார் வேதநாயகர். பெண் கல்வி, பெண்மானம் முதலிய கட்டுரைகள் பெண்மதி மாலையிற் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதற்குள்ள நியாயங்களைப் பெண் மானம் என்னும் வியாசம் விளக்குகின்றது.

 பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டிய செய்திகளை இனிய இசைப் பாடல்களாக எழுதி, “பெண்மதி மாலை“ என்ற சிறு நூலாக 1809 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 

பெண்கள் முன்னேற்றத்தில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தி “பெண் கல்வி“, “பெண் மானம்“ என்ற இரு உரைநடை நூல்களை எழுதி, அவற்றை ஒரே நூலாக, 1870இல் வெளியிட்டார்.

பெண்கள் கல்வி கற்க வசதியாக, 1869இல் பெண்களுக்கெனத் தனிப்பள்ளியொன்றை மாயூரத்தில் சொந்தமாக தொடங்கி நடத்தி, பின்னர் தான் நகர மன்றத் தலைவரானபோது அதனை நகராட்சியின் பொறுப்பில் ஒப்படைத்தார்.

இவ்விதம்  பெண்கள் முன்னேற்றத்திற்காக இவர் அமைத்த அடிப்படையின் மீதுதான். திரு.வி.க., பாரதியார் போன்ற பிற்காலப் பெரியோரின் தொண்டுகள் தூண்களாக எழுத்து, இன்று மாதர் முன்னேற்றம் ஒரு பெரும் மாளிகையாகி நிற்கிறது.

தமிழில் புதினங்கள் இயற்றுதல் :

ஆங்கிலம் முதலிய அயல் மொழிகளில் உரைநடையில் அமைந்த புதுமைக் கதைகள் இயற்றப்பட்டிருப்பதையும் தமிழ மொழியில் அத்தகைய கதைகள் தோன்றாமையையும் வேதநாயகர்  நோக்கினார்.  நீதி நூலிலும், பெண் கல்வி முதலிய பிற நூல்களிலும் தான் வெளியிட்டிருந்த அரிய கருத்துக்களைக் கதை மாந்தர்களின் பண்புகளாக்கி ஒரு புதினக் கதையைப் புனைந்தார். அதனைப் “பிரதாப முதலியார் சரித்திரம்” என்ற பெயரில் 1879இல் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து,  , “சுகுண சுந்தரி“ என்ற sஇறிய புதினம் ஒன்றையும் 1887 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.


வேதநாயகர் கதை நூல்களும் சில இயற்றினார். அவற்றுள் தலை சிறந்தது பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் கற்பனைக் கதையே யாகும். அதுவே தமிழில் எழுந்த முதல் நவீனக் கதை (நாவல்) என்று சொல்லப்படுகின்றது. பிரதாபன் கதை நகைச் சுவை நிரம்பியது; படிப்போர் மனத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் பண்புடையது ; மூடப்பழக்க வழக்கங்களே ஒழிப்பது; நல்ல பழக்கங்கள் பரவ வழிகாட்டுவது; கதாநாயகனாகிய பிரதாபனது கள்ளங் கபடமற்ற உள்ளம் நம் கருத்தை அள்ளுகின்றது. அவன் தாயாகிய சுந்தரமும், மனையாளாகிய ஞானாம்பாளும் மதிநலம் வாய்ந்த மங்கையர் குலத்திற்கு அணிகலன்களாக விளங்குகின்றார்கள். சுருங்கச் சொல்லின் அந் நவீனம் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் கதையாகும். அக் கதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றதுஇவையிரண்டுமே, தமிழ் மொழியில் அமைந்த முதல் புதினக் கதைகளாகும். இன்று தமிழில் உரைநடையில் இயற்றப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புதினக் கதைகளுக்கு இவைகளே முன்னோடிகளும் வழிகாட்டிகளுமாகும் இதனால் இவரைத் “தமிழ்ப் புதினத்தின் தந்தை” என்று போற்றுவதும் பொருத்தும்.

நீதி நூல்:

மக்களுக்கு நீதியை அறிவிக்கும் ஒரு நீதிநூல் தேவை என்பதையும் எண்ணினார். . காலத்திற்கேற்ற தேவையாகிய அத்தகைய நூலொன்றைத் தானே இயற்ற முன் வந்தார். தனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் செய்யுட்கள் இயற்றிச் சேர்த்தார். இறுதியில் 400 செய்யுட்கள் கொண்ட அந்நூலை,“நீதி நூல்” என்னும் பெயரில் 1859 இல் தான் சீர்காழியில் நீதிபதியாக இருந்தபோது வெளியிட்டார்.

அதளைப் படித்த மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார் உள்ளிட்ட, தமிழறிஞர் அனைவரும் அவரைப் பாராட்டினார்கள். மகா வித்துவான் அவர்கள், அதனை மேலும் சிறிது விரிவு செய்யக் கோரினார். ஆகவே, வேதநாயகர் மாயூரத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில் மேலும் 200 செய்யுட்களை எழுதிச் சேர்த்து, 600 பாடல்களைக் கொண்டதாகத் திருந்திய பதிப்பாக, 1860 இல் வெளியிட்டார். 

கிறிஸ்து சமயச் சார்பு நூல்கள் :

இறைவனின் திருவருளை நினைந்து, “திருவருள் மாலை“ “திருவருள் அந்தாதி“ என்ற செய்யுள் நூல்களையும், தேவ அன்னையின் அருளைப் போற்றித் “தேவ மாதா அந்தாதி, என்ற செய்யுள் நூலையும்  1873 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

 அவ்வூர் பெரியநாயகி மாதா பேரில் ஒரு பதிகம்-10 பாக்கள் பாடினார். அதனையும் அத்தொகுப்பில் சேர்த்து வெளியிட்டார்.

பின்னர் தேவனைத் தோத்தரிக்கும் மாலையாக, “தேவ தோத்திர மாலை“ என்ற செய்யுள் நூலையும் எழுதி, 1889ஆம் ஆண்டில் வெளியிட்டார்.


பொதுநலத் தொண்டு:

நீதிபதிப் பொறுப்பிலிருந்து விலகிய வேதநாயகர், ‘தன்னால் இயன்ற அளவு போதுநலத் தொண்டும் செய்தார். மாயூரத்தைச் சேர்த்த பெரியோர் பலர், அவரை அந்நகர் மன்றத்தின் தலைவராக்கினர். . தனது பதவிக் காலத்தில் சாலைகள் அமைத்தல், கல்விச் சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதியளித்தல், துப்புரவு, சுகாதாரம் பெருகச் செய்தல் முதலிய பல்வேறு துறைகளிலும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து,வந்தார்


1876ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் மாயூரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. முதல் ஆண்டில் வறட்சியும், இரண்டாம் ஆண்டில் வெள்ளமும், மூன்றாம் ஆண்டில் விட்டில் பூச்சிகளும் இப்பெரும் பஞ்சத்திற்குக் காரணமாயின. சோற்று வளமுடைய சோழநாட்டில், சோறில்லாது மக்கள் வருந்தும் நிலைமை நீக்க நினைந்தார்

பெரும் நிலக்கிழார்கள். பெருஞ் செல்வர்கள், சைவ மடத்துத்தலைவர்கள் ஆகியோர் அளித்த உதவிகளுடன் தன் சேமிப்பையும் சேர்த்து, மாயூரத்திலும், சுற்றுப்புறச்சிற்றூர்களிலும் கஞ்சித் தொட்டிகள் வைத்து நடத்தினார்.

 கத்தோலிக்க சமய உலகத் தலைவராகிய பாப்பரசர் மூலமாக ஐரோப்பிய நாட்டு உதவியையும் பெற்று உதவினார். அம்மூன்றாண்டுகளும் முழு நேரப் பணியாகச் செய்தார்.  இக்காலத்தில், பஞ்சத்திலிருந்து மக்களைக் காக்குமாறு இறைவனை வேண்டி வேதநாயகர் பாடிய, “பஞ்சம் தீர் ஐயா, உம்மையன்றித் தஞ்சம் ஆர் ஐயா“ என்று தொடங்கும் பாடல் போன்ற பாடல்களும், பிற தனிப் பாடல்களும் தனிச் சிறப்புடையவை.

நல்லறிஞர் நட்பு :

வேதநாயகர் வாழ்ந்தகாலத்தில், தமிழகத்தில் வாழ்ந்த நல்லறிஞர் பலருடனும் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார். அவருள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர், திருசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையாவார். இவரது நட்பை இவர் வாழ்ந்த காலத்து மட்டுமன்றி இவரது இறப்பிற்குப் பின்னும் வேதநாயகர் போற்றி வந்தார்..


பிறசமயத்தாருடன் வேதநாயகர் வேற்றுமையின்றிப் பழகினர். சைவ சமயத்தைப் போற்றி வளர்ப்பதற்காகத் தோன்றிய திருவாவடுதுறை மடத்திற்கு வேதநாயகர் அடிக்கடி சென்று வந்தார். இன்னும், சைவ சமயத்தில் சிறந்த ஆர்வமுடையவரும், திருவாவடுதுறை ஆதீன மகா வித்வானும் ஆகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகரின் ஆருயிர் நண்பர். வேதநாயகரைப் பாட்டுடைத் தலைவனாக அமைத்து அம் மகா வித்வான் ஒரு [6]கோவை பாடினார். குளத்தூர் வேதநாயகர் மீது பாடப்பட்ட கோவையாதலால் அது குளத்தூர்க் கோவை என்று வழங்குகின்றது. அக் கோவையில் தன்னேரிலாத தமிழ்வேத நாயகன் என்றும், நூல் ஆய நோற்ற மதிவேத நாயகன் என்றும் அவர் பெருமையை மகா வித்வான் பாடியுள்ளார்.


பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவர்களிலே சிறப்பிடம் பெறுபவர், கிறிஸ்தவக் கம்பர் என்று போற்றப் பெறும் ஹென்றி ஆல்பிரட் கிருட்டிணப் பிள்ளையாவார். பாளையங்கோட்டைக் கல்லூரியிலே தமிழாசிரியப் பணியாற்றிய அவர், தாம் யாத்த ”இரட்சணிய யாத்திரிகத்தை” அச்சிட, சென்னை செல்லவிருப்பதை அறிந்த வேதநாயகர், சென்னை செல்லும் வழியில், மாயூரத்தில் தன்னைக் கண்டு, தன்னுடன் சில நாட்கள் தங்க வேண்டும் என்று கோரி அவருக்குக் கடிதம் எழுதினார். வேதநாயகரைப் பற்றிக் கேள்வியுற்றிருந்த கிருட்டினப் பிள்ளையும் அவ்வேண்டுகோளுக்கு இசைந்து மாயூரம் வந்தார். அவரைத் தன் இல்லத்தில் தங்கச் செய்து இனிதாக விருந்தோம்பியதோடு , மாயூரத்திலிருந்த மகாவித்துவான் உள்ளிட்ட தமிழறிஞர் அனைவரையும் ஓர் அவையாகக் கூட்டி அவர்கட்ருக் கிறிஸ்தவக் கம்பரை அறிமுகம் செய்துவைத்து அவர் பாடல்களை அவர் பாடிக் காட்டி விளக்கம் செய்ய வாய்ப்பளித்தார். 


திருவாவடுதுறை மடத்துத் தலைவராகிய சுப்பிரமணிய தேசிகர், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடிய முடிகொண்டான் கோபாலகிருஷ்னன், பாரதியார், புதுக்கோட்டை மாவட்டத் தலைமை நீதிபதியாயிருந்த, யாழ்ப்பாணம், சி. வை. தாமோதரம் பிள்ளை. புதுவை வித்துவான் சவரிராயலு உடன் நட்பு பாராட்டி வந்தார்.

வேதநாயகர் தம் இறுதிக் காலத்தில், ‘மகோதரம்’ (Dropsy) என்ற வீக்க நோயால் வேதனைப்பட்டார். மருத்துவம் பயனளிக்கவில்லை. தனது இறுதிநேரம் நெருங்குவதை உறுதியாக உணர்ந்தார். திருமறை குருக்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து, இறுதித் திருவருட் சாதனங்களைப் பெற்றார். தனது நல்ல நண்பர்களுக்கும் தனக்கு உதவியவர்களுக்கும் உரிய வகையில் நன்றி தெரிவித்துக் கடிதங்கள் எழுதி அவர்களிடமிருந்து விடை பெற்றார். 1889 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 21 ஆம் நாள் இரவு 11 மணிக்கு இறந்தார்.





இவர் கொள்ளுப்பேரன் விஜய் ஆண்டனி ஒரு தமிழகத் திரைக்கலைஞர் ஆவார்.


மூல கட்டுரை

அருமைநாயகம் சட்டம்பிள்ளை(1823-1918)

 

நாசரேத்தை அடுத்த பிரகாசபுரம் மூக்குப்பேறியை சேர்ந்தவர் அருமை நாயகம் சட்டம்பிள்ளை. அருமைநாயகம், சட்டம்பிள்ளை அல்லது சுத்தம்பிள்ளை எனப் பிரபலமாக அறியப்பட்டவர், ஒரு மதச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான கிறிஸ்தவ இந்து தேவாலயத்தை நிறுவியவர். இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக மேற்கத்திய மிஷனரிகளின் ஆதிக்கத்தை நிராகரித்தவர். ஒரு மதச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான இந்து -கிறிஸ்தவ தேவாலயத்தை நிறுவி வங்காள மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாகக் கொண்டு மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமயமாக்கப்பட்ட தேவாலயங்களுக்கு எதிராக போராட துணிந்தார்.  இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக மேற்கத்திய மிஷனரிகளின் ஆதிக்கத்தை நிராகரித்தவர்.

 

1642 ஆம் ஆண்டில் கொற்கையை அடுத்த வெள்ளக்கோயில் என்ற ஊரில் குடிபடைகளுடன் பெரும் நிலக்கிழாராக வாழ்ந்து வந்தவர்கள். திருமலைநாயக்கரின் பிரதிநிதியாக திருநெல்வேலியின் கவர்னராக நியமிக்கப்பட்ட வடமலையப்ப பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாகத் தமது நிலங்களைக் கொற்கைக் காணியாளரான, நற்குடி வேளாளர்களிடம் விற்றுவிட்டுக் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ராஜாவின் கோயில் என்ற ஊரில் குடியேறினர்.  18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாசரேத் நகரம் உருவாக்கப்பட்டபின், அவ்வூரை ஒட்டி அமைந்துள்ள பிரகாசபுரம் மூக்குப்பேரியில் குடியேறினர்

 

 சாயர்புரத்திலிருந்த எஸ்.பி.ஜி. (Society for the Propagation of the Gospel)யைச் சேர்ந்த செமினரியில்  இறையியல் கற்று போதகர் (Catechist) தேர்வில் முதலிடம் பெற்றவர். சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளும் கற்றுத்  தேர்ந்தவர் ஆக இருந்தார்.

 

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கள் மிஷன் நிறுவனங்களை நிறுவத் தொடங்கினர். முதலில் முதலூரில், அதைத் தொடர்ந்து பெத்லஹேம் மற்றும் நாசரேத் ஊரில் 1803ல் நிறுவினர். அக்கால அளவில் 5000 க்கும் அதிகமான நாடார் இன மக்கள் கிறித்தவர்களாக மாறினர்.

 

சாயபுரத்தைச் சேர்ந்த  உள்ளூர் மத போதகரான, பள்ளர் இனத்தை சேர்ந்தவர் டேவிட் . இவர் நாடார் இனமக்களை இளப்ப ஜாதி என்று அழைத்தார் என்ற ஒரு பிரச்சினை உருவானது.  கோபம் கொண்ட நாடார் மக்கள், ஹக்ஸ்டேபில்() வெள்ளைக்கார மிஷினரியிடம் முறையிட்டனர். டேவிட் மன்னிப்புகோரி பின் வேலையில் தொடர்ந்தார். பள்ளியின் கண்காணிப்பாளராக இருந்த சட்டம் பிள்ளையோ டேவிடை பள்ளியில் இருந்து வெளியேற்ற முயன்றார். அதை கேமரெரர் அனுமதிக்கவில்லை. இதனால் கேமரெராருக்கும் சட்டம் பிள்ளைக்கும் ஒரு பிணக்கு உருவானது. இந்நிலையில்  அருமைநாயகத்திற்கு முடிவான பெண்ணை  மணமுடிக்க கேமரெரர் அனுமதிக்கவில்லை.  தனக்கு நிச்சயமாயிருந்த பெண்ணை தானே இறைவழிபாடு செய்து 1850 ல் திருமணம் செய்து கொண்டார் போதகராக இருந்த சட்டம்பிள்ளை. இந்த நிலையில் மிஷினரிகளால்  பணிநீக்கம் செய்யப்பட்டார் அருமைநாயகம்.

 

மறுபடியும் போதகராக வேலையில் சேரும் முயற்சியாக மேலதிகாரிகளான வெள்ளைக்கார மிஷினரிகள் அனுமதி பெறும்  எண்ணத்துடன் அருமைநாயகம் நாடார் என்கிற சட்டம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது கால்டுவெல் வெளியிட்ட கையெழுத்து பிரதியான ”தின்னவெல்லி ஷானர்கள்: மதம் மற்றும் அவர்களின் தார்மீக நிலை மற்றும் பண்புகள் பற்றிய ஒரு எழுத்து” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. புத்தகத்தின் உள்ளடக்கத்தை கண்டு கொதித்து போனார். நாசரேத்துக்கு திரும்பி வந்த சட்டம்பிள்ளை, சில நண்பர்களையும் இணைத்து ஆங்கிலத்திலுள்ள கால்டுவெல்லின் கையெழுத்து பிரதியை தமிழில் மொழியாக்கம் செய்து தமிழகம், இந்தியா, மற்றும் மலேசியா பர்மாவில் இருந்த முக்கியமான நாடார்களுக்கு அனுப்பினார்.

 

ஐரோப்பாவின்  வாழ்ந்த  கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்களிடையே இந்திய மக்கள் கொடிய காட்டுமிராண்டி நிலையில் வாழ்கிறார்கள் என்பது போன்ற மிகையான தோற்றத்தினை உருவாக்கும் நோக்கிலும், இத்தகைய காட்டுமிராண்டி மக்களிடையே கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் பரப்புகிற உன்னதமான தியாகம் செறிந்த பணியினைப் பாதிரிமார்களாகிய தாங்கள் மேற்கொண்டிருப்பது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கிற வகையிலும் எழுதிப் பணம் வசூலிக்க ஏதுவாகவே அவதூறு நிறைந்த இந்நூலினைக் கால்டுவெல் எழுதியுள்ளார் எனச் சட்டாம்பிள்ளை  உரிய ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

 

இவரும் சில ஆதரவாளர்களும் சேர்ந்து பிரகாசபுரத்தில் தங்களுக்கு தனி ஆலயம் நிறுவினர். இந்நிலையில் கேமெரெரர் 20 வருடம் நாசரேத்தில் சேவை செய்த  இவர் தஞ்சாவூருக்கு 1858 ல் மாற்றப்பட்டார்.

 

கால்டுவெல்லின் தின்னவெல்லி ஷானர்கள் என்ற நூலைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டு, ஆங்கிலம் அறியாத தமிழக நாடார்கள் மற்றும் பர்மா, சிலோன் நாடார் சமூகத்தவர் மத்தியிலும் பரப்பினார். கால்டுவெல் பரப்பும் அவதூறுகளுக்கு பதில் உரைக்க 40 புத்தகங்கள், சில கைப்பிரதிகளும் வெளியிட்டார்.

 

கால்டுவெல்லில் எழுத்தால் அவமதிப்பிற்கு உள்ளான நாடார் இன மக்கள் குரலாக தமிழ் பாதிரியாக இருந்த மார்டின் வின்ஃபிரட் என்பவர் ’சான்றோர் குல மரபு’ என்ற புத்தகத்தை 1871 ல் எழுதினார். அவருடைய தந்தை வின்பிரட் 1875 ல் ’சான்றோர் குல மரபு கட்டளை’ என்ற இன்னொரு புத்தகத்தை எழுதினார். சாமுவேல் சர்குணனார் என்பவர் ’திராவிட சத்திரியா’ என்ற கையெழுத்து பிரதியை 1880 ல் எழுதினார். சர்குணனார் கையெழுத்து பிரதிக்கு பதில் இலங்கையை சேர்ந்த செந்திநாத ஐயரிடம் இருந்து ’சாணார்கள் சத்திரியர்கள் அல்ல’ என்ற தலைப்புடன் ஒரு புத்தகம் வந்தது.   சாணார்களுக்கு இடுப்பில் வேஸ்டி கட்ட கூட தெரியாது, கால்டுவெல்லால் தான் முன்னேறினர் என்று எழுதி இருந்தார். ”செந்திநாத ஐயருக்கு செருப்படி” என்ற பதில் கையெழுத்து பிரதியை வினியோகித்த குற்றத்திற்காக சர்குணனார் கைது செய்யப்பட்டார். ஞானமுத்து நாடார் மற்றும் விஜய் துரைசாமி கிராமணி போன்றோர் நாடார்கள் சத்திரியர்கள் என்பதற்கான சான்றுகளுடன் 1919துவங்கி 1020 வரை மாதாந்திர பத்திரிக்கைகள்  வெளியிட்டனர்

 

கால்டுவெல் ஸ்காட்லான்டு சென்றதும் அவர் திருநெல்வேலிக்கு திரும்பி வராது இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல புகார்கள் ஐரோப்பிய தலைமையான பிஷப் சென்றர்பரிக்கு அனுப்பினர் சட்டம்பிள்ளை குழுவினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் கிளாட்ஸ்டோனுக்கும் அனுப்பினர். ஆனால் பிரதமரான தன்னால் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட இயலாது என்று கூறி ஒதுங்கி கொண்டார்.

இந்து-கிறிஸ்துவ தேவாலயம்

1857 இல் சட்டம்பிள்ளையால் சட்டம்பிள்ளை 1857 இல் திருநெல்வேலி மாவட்டம் பிரகாசபுரத்தில் மிஷனரி அதிகாரத்தைத் தகர்க்க இந்து-கிறிஸ்தவ மதத்தை நம்பிக்கையாகக் கொண்ட தனது புதிய தேவாலயமான இந்து-கிறிஸ்தவ இந்து தேவாலயத்தை நிறுவினார். "இந்து" என்ற வார்த்தையை மதத்தை விட புவியியல் என்று விளக்கினார். ஒரே கலாச்சார சூழலில் வாழும் பொருளில் தனது ஆலயத்தை துவங்கினார். இந்தியாவில் மதம் மாறிய கிறித்தவர்கள் தங்கள் உள்ளார்ந்த சமூக, சமய மற்றும் கலாச்சார வகைகளைப் பயன்படுத்தி கிறிஸ்தவத்தை விளக்கவும் வெளிப்படுத்தவும் தொடங்கினர்.

 இந்து கலாச்சார நடைமுறைகள் யூத கலாச்சார நடைமுறைகளை ஒத்ததாக சட்டம்பிள்ளை கூறினார். அவர் இயக்கம் சில இந்து கலாச்சார நடைமுறைகளை பின்பற்றச் செய்தது. தேவாலயத்தின் சடங்குகளில்." இந்த தேவாலயத்தில் "பெண்களுக்குக் காரணமான சடங்கு அசுத்தங்கள்" போன்ற பழைய ஏற்பாட்டு சடங்கு நடைமுறைகள் நடைமுறையில் உள்ளன, ஏனெனில் இந்த வகையான நடைமுறைகள் இந்து மத சடங்குகளில் காணப்படுகின்றன.

 


1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான எழுச்சி ஏற்கனவே வட இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருந்தது. சட்டம்பிள்ளை தனது தேவாலயங்களில் மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக இரு மடங்கு உத்தியைப் பயன்படுத்தி கிளர்ச்சி செய்தார். கிறிஸ்துவை ஐரோப்பிய தேவாலயத்திலிருந்து பிரித்து, பூர்வீக மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கிறித்துவத்திற்கு இடமளித்து, மேற்கத்திய மிஷனரிகளின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் வெற்றி பெற்றார். பிரிட்டிஷ் ராஜ் ஆதரவுடன் புதிய ஏற்பாட்டை நோக்கி நகரும் மேற்கத்திய மிஷனரிகளுக்கு எதிரான மாற்று மருந்தாக புதிய ஏற்பாட்டை விட பழைய ஏற்பாட்டை ஆதரிக்கும் எபிரேய வேதங்களையும் யூத பழக்கவழக்கங்களையும் அவர் திருச்சபையில் கையகப்படுத்தினார்.

 

இந்து கலாச்சார நடைமுறைகள் யூத கலாச்சார நடைமுறைகளை ஒத்ததாக இருக்கிறது என்ற கருத்துக் கொண்டவர் சட்டம்பிள்ளை. அவரது அணுகுமுறையும் "இந்து கலாச்சாரம்” என்று கருதப்படும் இந்திய கலாச்சாரங்களை" அவரது நாட்டு சபை வழிப்பாடில் இணைத்துக்கொள்ள வைத்தது. உள்நாட்டு கலாச்சார பழக்கவழக்கங்கள் மிகவும் வரவேற்கப்பட்டன. ஐரோப்பிய பழக்கவழக்கங்கள் என்று தோன்றிய அனைத்தையும் நிராகரித்தனர், மேலும் அவர்களின் தேவாலயம் மற்றும் மத சேவைகளை உள்நாட்டு வழிகளில் ஏற்பாடு செய்தனர். சாஷ்டாங்கம், தியானம், சாம்பிராணி பயன்படுத்துதல், தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்யும் போது கைகளை மடக்குதல், வைனுக்கு பதிலாக புளிக்காத திராட்சை சாறு பயன்படுத்துதல் மற்றும் தரையின் உட்கார்ந்து திருச்சபையின் சடங்குகள் செய்வதை கிறிஸ்தவ ஆராதனையில் நடைமுறைப்படுத்தினார். பழைய ஏற்பாட்டு சடங்குகளான இந்து மத சடங்குகளில் இருப்பது போன்ற "பெண்கள் சார்ந்த  சடங்கு அசுத்த நடைமுறைகளும் இந்த தேவாலயத்தில் பின்பற்றுகின்றனர். ஆங்கிலிகன் தேவாலயத்தில் மணிகளைப் பயன்படுத்துவது போலல்லாமல், தேவாலய கோபுரத்திலிருந்து ஒரு எக்காள சத்தம் விசுவாசிகளை வழிபாட்டிற்கு அழைக்க பயன்படுத்துகின்றனர். மேலும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் கைகளையும் கால்களையும் கழுவுகிறார்கள், பொதுவாக வழிபாடு சனிக்கிழமை நாட்களில் நடைபெறும். இந்த தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை வேலை செய்ய மாட்டார்கள். சனிக்கிழமைக்கான உணவு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முன் செய்யப்படுகிறது. பழைய ஏற்பாட்டு நாட்களில் பின்பற்றப்பட்ட பண்டிகை நாட்களைக் கொண்டாட யூத நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றனர்.

 

 

கான்ஸ்டன்டைன் மற்றும் தியோடோரஸ் போன்ற ரோமானிய மன்னர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, புனித திருச்சபையின் சட்டங்களில் திருமணம் தொடர்பான அவர்களின் சொந்த ஒழுக்கக்கேடான விதிகளை அறிமுகப்படுத்தினர்; அதை, உண்மையான பாதையில் இருந்து விலகிய ஐரோப்பியர்கள் பின்பற்றினர்  என்றும் சட்டம்பிள்ளை எழுதினார்.

 

எபிரேய பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களை ஏற்க வேண்டும் என்று சட்டம்பிள்ளை பிரசங்கித்தார். சத்தம்பிள்ளையின் கூற்றுப்படி, ஆங்கிலிக்கன் சபை என்பது ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் பல தார்மீக குறைபாடுகள் மற்றும் மீறல்களில் ஒன்றாகும். ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் கிறிஸ்தவத்தின் அசல் வடிவத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட சிதைவுகளைச் சரிசெய்ய  சட்டம்பிள்ளை முயன்றார்.

 வை. ஞானமுத்து நாடார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் பணி செய்த ஒரு தமிழ் கிறிஸ்தவ எழுத்தர். பழங்கால மற்றும் நாடார் இனத்தின் பிரதிநிதி ஆக இருந்தார். பிரிட்டிஷ் அரசு கால்டுவெல்லைத் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் புண்படுத்தும் புத்தகத்தை அகற்ற வேண்டும் என்று கோரினார். 1880 மற்றும் 1885 க்கு இடையில் மதம் பரப்ப கிராமங்களுக்குச் சென்ற பிஷப்புகளுக்கு இடையூறு விளைவித்தார். மிஷினரிகளின் சாதி பற்றிய அவதூறான அறிக்கைகளை திரும்பப் பெறக் கோரி, SPG மிஷனரிகளுக்கு எதிராக ஞானமுத்து தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். ஞானமுத்து தொடர்ந்து ஐரோப்பிய மிஷினரிகளுக்கு எதிராக எழுதினார்.

 

ஐரோப்பிய மிஷனரிகள் தங்கள் மதம் மாறியவர்களை அவர்கள் உணர்வு நிலையை புரிந்து கொள்ளாது மரியாதை இல்லாது நடத்துகின்றனர். ஆனால் பரலோக ராஜ்யத்திற்கு சமமான உரிமைகோரல்களைக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்வது போல் நடிக்கின்றனர்.

 


மேற்கத்திய திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சி செய்த படித்த நாடார்கள் அடங்கிய சட்டம்பிள்ளை இயக்கம், கால்டுவெல்லுக்கு எதிராக ”தின்னவேலி ஷானர்கள் “ என்ற புத்தகத்தை நீக்கக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கால்டுவெல்லின் ஷானர்களின் சித்தரிப்புக்கு எதிரான, அவர்களின் கூற்றுகளை நிரூபிக்க நாடார்கள் தொடர்ச்சியான வாதங்களை முன்வைத்தனர், தெரு முனையில் சொற்பொழிவு செய்து, துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர், மேலும் 1880 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் ராஜாவிடம் அதிகாரப்பூர்வ மனுவை தாக்கல் செய்தனர். கேவலமான Tinnevelly Shanars வெளியீட்டை திரும்பப் பெறவும் மற்றும் ராபர்ட் கால்டுவெல்லை கண்டிக்கவும் பரிந்துரைத்தனர்.இதன் விளைவாக பிப்ரவரி 1880 ஆம் ஆண்டு CMS பதிவில் அச்சிடப்பட்ட ஒரு கடிதத்தில், குறிப்பாக ஷனர்கள் "இந்துக்கள் அல்ல" என்ற அவரது மதிப்பீட்டை அறிக்கைகளை ஓரளவு திரும்பப் பெற்றதாகத் தெரிகிறது.

 

1881ஆம் ஆண்டில் கால்டுவெல்லின் History of Tennevelli என்ற நூல் சென்னை அரசினர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூலிலும் நாடார் குலத்தவர் பற்றிய அவருடைய கருத்து எந்த மாற்றமுமின்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகச் சான்றோர் சமூகத்தவர்கள் கால்டுவெல்லுக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்தனர்.

 

 அந்த ஆண்டிலேயே அவர் திருநெல்வெலிப் பகுதியில் நிம்மதியாக வாழ முடியாத நிலை தோன்றியதால் கோடைக்கானலில் குடியேற நேர்ந்தது. 1891ஆம் ஆண்டில் கோடைக்கானலிலேயே மரணமடைந்த பிறகுதான் அவரது உயிரற்ற உடல் இடையன்குடிக்குத் திரும்ப நேர்ந்தது

 

மேலும் வங்காள மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாகக் கொண்டு மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமயப்படுத்தப்பட்ட தேவாலயங்களுக்கு எதிராகப் போராட வழிவகுத்தது மட்டுமல்ல அன்று முதலே கிறிஸ்தவத்தின் இந்தியமயமாக்கல் என்பது ஆரம்பமானது.  

 

செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தின் துவக்கம்

இந்திய சூழலில், சமூக, கலாச்சார மற்றும் மத ரீதியாக தென்னிந்தியாவில் முதல் செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தை நிறுவுவதற்கு மறைமுகமாக பொறுப்பானவராகவும் சட்டம்பிள்ளை இருந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.  

1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்தில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் பிரதிநிதி ஆற்றிய சொற்பொழிவு அடங்கிய சிறு புத்தகத்தின் நகலைப் பெற்றார். அதன்வழி பல்வேறு மதங்களில் உள்ள உண்மைகள் மற்றும் பொதுவான தன்மைகளை வெளிக் கொணர்ந்தார். ஏழாவது நாளை ஓய்வுநாளாகக் கடைப்பிடிப்பது யூதர்கள் மட்டுமே என்று நம்பிய சட்டாம்பிள்ளை, ஓய்வுநாளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் நியூயார்க்கு மிச்சிகனில் உள்ள பேட்டில் க்ரீக்கில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். பதிலாக F. M. Woolcox என்பவர் ஒரு சில புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை பதில் அனுப்பினார்.

 

1906 இல், ஜே.எஸ். மினசோட்டாவைச் சேர்ந்த ஜேம்ஸ் தென்னிந்தியாவில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதன்படி, அவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பெங்களூருக்கு அட்வென்டிஸ்ட் மிஷனரியாக அனுப்பப்பட்டார்.  1908 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் ஜி.எஃப். ஏனோக் மற்றும் ஜே.எல். ஷாவுடன் சேர்ந்து ரயிலில் திருநெல்வேலிக்கு வருகை தந்தனர், மாட்டு வண்டியில் நாசரேத்தை அடைந்தவர்களை சட்டம்பிள்ளையின்  இந்து ஏக இரட்சகர் தேவாலயத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அற்புதமான சடங்குகளுடன் வரவேற்றனர். அவர்கள் ஒரு உள்ளூர் பள்ளியில் பத்து நாட்கள் தங்க வைக்கப்பட்டனர், ஜூலை 2, 1908 அன்று, ஜேம்ஸ் பெங்களூரை விட்டு வெளியேறி நாசரேத்தில்  தங்க முடிவு செய்ததால், தேவாலயம்; ஜேம்ஸுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.

 

தென்னிந்தியாவில் செவன்த்-டே அட்வென்டிஸ்ட்களின் முதல் தேவாலயம் 50 உறுப்பினர்களுடன் 30 ஜனவரி 1915 அன்று பிரகாசபுரத்தில் முறையாக துவங்கப்பட்டது, இருப்பினும், அது உண்மையில் 1908 ஆம் ஆண்டிலேயே ஜேம்ஸ் மற்றும் சி.ஜி. லோரி தலைமையில் சமய வழிபாட்டுடன் செயல்பட்டது.  பின்னர், பிரகாசபுரத்தில் ஜேம்ஸ் மெமோரியல் பள்ளி என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தையும் தொடங்கியது அட்வென்டிஸ்ட் சர்ச்.