18 Sept 2016

My Story என் கதை - கமலா தாஸ்


Image result for my story/kamala dass

ஆறு மாதங்களுக்கு பின் இரண்டே நாட்களில் ஒரு புத்தகம் வாசித்து முடிக்கும் மனநிலையை எட்டிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் இப்பதிவு பகிர முயல்கின்றேன்.

ஆங்கிலம் மற்றும் மலையாள எழுத்தாளர், கவிதாயினி மாதவக்குட்டியின் சுயசரிதையாகும் ‘My Story’

இயல்பிலே எழுத்து பாரம்பரியம் உள்ள நாலப்பாடு என்ற குடும்பத்தில் 1934 ல் பிறந்தவர் ஆவார் மாதவிக்குட்டி. தந்தை கல்கத்தாவில் பணிபுரிந்ததால் இவர் கல்வி, மற்றும் வாழ்க்கை மலபாரிலும்  கல்காத்தாவிலுமாக  கடக்கிறது. கான்வெற்றிலும் மற்றும் மேல்தட்டு பள்ளிகள், வீட்டிலும் தனி சிறப்பு ஆசிரியர்களால் சிறப்பான கல்வி  கிடைக்கும் சூழலில் வளர்கின்றார்.

 மேனோன் என்ற மேல் ஜாதியில் பிறந்த இவர் குடும்ப வழக்கப்படி தன்னை விட 15 வயது மூத்தவரான குடும்ப உறவினரான மாதவதாஸ்க்கு மனைவியாகின்றார்.

இயல்பாகவே விரைவில் வசைப்படும் குணம் உள்ளவராக காணப்படுகின்றார். தன் 12 வயதில் உடன் படிக்கும் 'குறுப்பு' என்ற மாணவரிடம் ஈர்ப்பு ஏற்படுவதாகவும் அவரை திருமணம் செய்ய போகிறேன் என்று தன் பாட்டியிடம் தெரிவித்தாக கூறுகின்றார். இ

அம்மாவும் பிரசித்தி பெற்ற கவிஞராக உள்ளவர். இருப்பினும் இவர் வாழ்க்கையில் பாட்டியை போன்று தாயின்  கருதலான அணைப்பில்  வளரவில்லை. 

ஒரு முறை, கல்கத்தாவில் தன் ஆசிரியையின் மகனைத் தேடி அவர் இருப்பிடம் செல்கின்றார். அந்த நபரோ பத்திரமாக ஒரு டாக்சி பிடித்து மாதவியை அவர் வீட்டில் கொண்டு சேர்க்கின்றார். பின்பு தன் சொந்த ஊருக்கு பயணிக்கும் வேளையில் தன் உறவு பெண்ணின் தூண்டுதலில் ஓரினசேர்க்கையில் உள்படுகின்றார்.

Image result for my story/kamala dass

தனதான துடுக்கும் அறிவாற்றலும் கொண்ட கமலா,   தன் தந்தையிடம் இத்திருமணத்தில் தனக்கு சம்மதம் இல்லை என ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்குறி எழாது இல்லை. மணப்பந்தலில் இருக்கும் போது, 18 வயதுள்ள ஓர் இளைஞன் மேல் தனக்கு இருந்த காதலை மறக்கவில்லை அந்த காதலனும் சாட்சியாகவே மாதவதாஸுக்கு மனைவியாகின்றார். முதல் புள்ளி முற்று புள்ளி என்பது போல் முதல் இரவு அன்றே  தனது கணவரின்   பாலியல் வன்முறை அவர் மேல் ஓர் வெறுப்பை உருவாக்குகிறது. பின்வரும் பக்கங்களிலும் தன் வணவர் உருவம், பல், தொழில் அவர் செயல்பாடுகள் எதிலும் இவருடைய எண்ணங்கள் ஒட்டவே இல்லை ஈர்க்கவும் இல்லை.  பல முறை நோய் தொற்றால் மருத்துவ மனையில் அவதியுறும் கவிதாயினியால் தன் நண்பர்கள் வந்து கண்டு, முத்தம் கொடுத்து சென்றதையும் நினைவு கூறும் ஆசிரியர், தன் கணவர் வந்ததாக குறிப்பிடவில்லை 

 தன் பிறந்த நாள் அன்று, தங்கள் அறையில் கணவர் நண்பருடன் செலவழிக்கும் கணங்களை வெளியில் இருந்து அழுகையும் வெறுப்புமாக காணும் சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.
பெரும் பணக்காரியாக , நிறைய தங்கம் இரத்தினங்கள் அணிந்து மகாராணி போன்று வாழ வேண்டும் என்ற ஆசை கொண்ட கமலாவால்; ஒரு வங்கி ஊழியர் மனைவியாக, தரித்திரம் பிடித்து, இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து கொண்டு, வசதியற்ற வீட்டுகளில் வசிப்பது பெரும் கவலையும் அவமானவுமாகவும் உள்ளது. தான் இருண்ட நிறம், தனக்கு அழகில்லை, தனக்கு பகிட்டான உடை இல்லை என்ற தாழ்வுணற்சியிலும் ஆழ்து  கிடக்கிறார் கமலா.

Image result for my story/kamala dassஒவ்வொரு முறையும் கணவரால் நேசிக்கப்படாது நிராகரிக்கப் படும்  வேளையில் தன் கவிதை எழுத்தால் ஆறுதலை தேடும் கவிதானியில் வாழ்க்கையில்  அக்கவிதைகளை பத்திரிக்கையில் பிரசுரிக்கும் வாய்ப்பு பெறுகின்றது திருப்புமுனையாக அமைகிறது வெறும் இல்லத்தரசியாக இருந்த கவிதாயிக்கு வாசகர்கள், ஆராதகர்கள்  அவருடைய வாழ்வியல் வட்டம் பெருகிறது.

தன் மனவெளியை  புரிந்து கொள்ள யாருமில்லை என்றிருந்த மாதவிக்குட்டிக்கு இத்தாலி நாட்டை சேர்ந்த போளோ கவிஞர் காதல் தீயுடன்  வந்து சேருகின்றார். தன் உற்ற நண்பன் மட்டுமல்ல தன் காதலனாகவும் மாற்றி கொள்கின்றார். ”உன் கணவர் குழந்தைகளை விட்டு விட்டு என்னுடன் வா உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன்” என்று இத்தாலி கவிஞர் அழைத்தாலும் தன் குடும்பம் தன் குழந்தைகள், தன் அப்பா குடும்பம், தன் சகோதரர்கள் எண்ணி விவாககரத்து என்ற நிலைக்கு எட்ட வில்லை. 

 தனக்கான பிடித்த பல நண்பர்கள் இவரை தேடி வருக்கின்றனர் அல்லது இவர் அவர்களுடன் செல்கின்றார். ஒரு இடத்தில் இவர் தொடர்ந்து புத்தகம் வாங்கும் கடை உரிமையாளர் இளைஞர் மேல் ஓர் ஈர்ப்பு வருகின்றது. கடை உரிமையாளர் பின்பு கவிதாயினியுடன் மேற்கொள்ள வேண்டிய உரையாடல்களை மனைவியின் துணையுடனே மேற்கொள்ளுவதை கமலா ஓர் இடத்தில் கேலியாக குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட ஆணுடன் தோன்றிய ஈர்ப்ப்பை இருவரும் உணர இவரை தேடி அந்த நபர்களே எட்டுகின்றனர். இவ்வாறாக ஒரு கணவனின் நிராகரிப்பு, கணவனுக்கு மனைவியின் மேலுள்ள ஈடுபாடின்மை ஒரு பெண்ணை காதலை தேடி தேடி கண்டடைய, தன் நிலைகடந்து பயணிக்க  வைக்கின்றது. ஆண்களிடம் தோன்றும் அதே ஈர்ப்பு பெண்களிடமும் பேணுகின்றார். தன் கணவரிடமும் இவைகள் பற்றி கூறுகின்றார். கணவரும் ”நல்லது தான் பெண் மருத்துவர் தானே உன்னை தவறாக பயண்படுத்த மாட்டார்” என்று கூறி அந்த உறவை வளரவே இடம் கொடுக்கின்றார்.

Image result for my story/kamala dassஆசிரியையின் உணார்வு பெருக்கம் மற்றும் அதீத மன அழுத்தம் அவரை குடிகாரியாக மாற்றுகின்றது. சில பொழுது நிலை தடுமாறி விழும் மட்டும் குடித்து வீடு வந்து சேர்க்கின்றனர் பின்பு மருத்துவ மனையில் சேரும் சூழலுக்கும் எட்டுகின்றார்.

கொல்கத்தா, பூனா, பாம்பே போன்ற ஊர்களில் கணவரின் மாற்றலுகளுக்கு இணங்க குடியிருக்க வேண்டியிருந்த மாதவியை தன் வீட்டு நினைவுகள் விட்டு வைக்காது துரத்துகின்றது.  சில காலம் தன் சொந்த  சொந்தஊரில் சொந்த வீட்டில்  வீட்டில் குழந்தைகளுடன் தங்கி விவசாயத்தில் ஈடுபடுகின்றார். தன் கணவரையும் வேலையை ராஜினாமா செய்து விட்டு தன்னுடன் இருக்கும் படி வேண்டுகின்றார். இந்த வேளையில் கேரளாவிலும் புகழ்பெற்ற கவிதாயினியாக சமூக ஆர்வலராக வலம் வருகின்றார். 

இவருடைய சுய சரிதையின் கதையின் சில பக்கங்கள் மலையாள இதழ்களில் வருவதால், கலாச்சார காவலர்களால் அவமதிக்கு உள்ளாகுகின்றார். மக்கள்  மத்தியில் குணம் கெட்ட பெண் என்ற அடையாளவும் நிலைபெறுகின்றது.  கணவனின், மற்றும் இளைய மகனின்  வேண்டுதலுக்கு இணங்கி மறுபடியும் பூனாவில் சென்று வாழும் சூழலுக்கு தள்ளப்படும் கமலா தன் சொந்த தேசத்தை பற்றியுள்ள ஏக்கத்திலே நாட்களை நகத்துகிறார்.

”என் மகன்களுக்கு என தன் சிதையில் சாம்பல்கள் மிஞ்சும் என் மகன்கள் துயர் ஆறும். அவர்களுக்கு நல்ல அறிவான மக்களை மருமக்கள் கொடுப்பார்கள். என் தலைமுறை  பெற்று பெருகி இந்த பூமியில் வாழ்வார்கள்” என  தன் ஆசையை குறித்து விட்டு தன் கதையை முடித்துள்ளார்.



Image result for my story/kamala dass
இந்த நாவல் 1971 ல் வெளிவந்தது. ஒரு திராவிட தென் இந்திய பெண்ணின் அதீத தைரியம் மற்றும் சுதந்திரமான மனவெளியின் வெளிப்பாடே இக்கதை. கதாசிரியின் உண்மை தன்மையை தன் வாழ்க்கையை எந்த சமரசவும் அற்று எழுத முன் வந்த துணிவை பாராட்டலாம். பல பெண்கள் திருமணம் இவ்வகையில் தான் முடிகின்றது. பிடிக்காத கணவனுக்கு பிள்ளைகளும் பெற்று கொடுத்து வாழ்ந்து முடிக்கின்றனர். அதன் வேதனையை அதன் பாதகங்களை எழுத்தூடாக விட்டு சென்றவர் கமலாதாஸ்.

தான் சந்திக்கும், சல்லபிக்கும், ஆண்களில் கிருஷ்ண பகவானை காண்பதும் தன்னை ராதையாக பாவிப்பதும் தன் பாட்டி கமலாவிடம் நீ கிருஷ்ணனின் மனைவி ராதை என்று சொல்லி கொடுத்ததின் வினையா அல்லது நம் கலாச்சார கதைகள் ஊடுருவி சென்றதின் விளைவா என்பது புதிரான கேள்வி தான். 

தன் தேவையை தன் ஆசையை  நிராகரிக்கப்பட்டதின் வலிகளை வேதனைகளை காகிதத்தில் வடித்தவர், கணவரிடம் சொல்லவே இல்லையா சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லையா என்பது தெரியாத கேள்விகள். 

இருப்பினும் 
கணவன் மனைவி உறவு என்பது; ஜாதகம், ஜாதி கடந்து மனதால் இணைய வேண்டியதின் அவசியத்தையும்  இந்த புத்தகம் அறியத்ததருகிறது .  

. அன்பு, அன்பு என்று அவர் அல்லோலப்படுவது அதற்கென அவர் உழன்று அழுவது பல இடங்களில் காணலாம். பெண் கவிஞியாக பல விருதுகளை பல நல் மதிப்புக்களை பெற்ற கவிஞிக்கு தன் சொந்த வாழ்க்கையில் எதிர் கொண்ட சவால்களுக்கு அவர் கை கொண்ட  முறை அவருக்கு உதவியதா என்றால் பல வேளைகளில்  அவர் மன உளச்சலிலே தன் காலத்தை கடத்தியதாகவே காணலாம்.

தன் முதல் மகனுக்கு உருவான முதல் காதலை வெகுவாக ரசித்து எழுதியுள்ளார் கமலா.  பிள்ளைகள் வளர்ப்பில், பெற்றோரை பராமரிப்பதில், தன் சகோதரங்களிடம், தன் மாமியார் என உறவுகளை நயமாக பேணுவதில் சிறந்து விளங்கினார். இருப்பினும் சொந்தங்கள் கொடுக்கும் அச்சுறுத்தலை வெறுக்கின்றார் வெடிக்கின்றார். 

உணர்ச்சி கொந்தளிப்பில் வாழ்ந்த ஓர் பெண்ணின் மனவும் அதை வெறும் உணர்வற்ற மனதுடன்  கண்டு, உடன் வாழ்ந்த கணவனின் உறவின் நிலைகளையை காட்டி செல்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது நபருடன் காதல் வருவதும் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், அதற்கு காரணமாக அன்பு, காதல்- இன்மை இல்லா வாழ்க்கை என்று கூறுவது அகத்தின் இயலாமையா அல்லது பெண் மனத்தின் இனம் புரியா ஏக்கங்கள் தானா என்று விளங்க வேண்டியுள்ளது. காதல் புனிதம் மட்டுமல்ல  காதல்  ஒரு வாதை, நோய் என்றும் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது இவருடைய சுயசரிதை வாசிக்கும் போது  
.இவர் எழுத்து நடை உண்மையை உண்மையாக சொல்லும் தைரியம், நம்மை அவரை நேசிக்க வைக்கின்றது.

ஆழமாக சிந்தித்து வாசிக்க வேண்டிய ஆன்ம கதை . ஏன் என்றால் இன்றும் பல பெண்கள் மணப்பந்தலில் இந்த மனநிலையில் துவங்கி, இருட்டிலே முடித்து, பிள்ளைகளும் பெற்று வளர்த்து வெளிச்சமே அன்று வாழ்க்கையை முடித்து விட்டனர்.  மாதவிகுட்டியைள போன்ற எழுத்தாளர்கள் தங்கள் வேதனைகளால் தங்கள் நிராகரிப்பின் வேதனையால் காலாகாலம் மக்கள் மனதில் எழுத்தாக வாழ்கின்றனர்.  
Image result for my story/kamala dassஇந்த புத்தகம் வித்தியா பாலம் நடிப்பில் தமிழ் திரைப்படமாக வரவுள்ளது.



தனது 67 வது வயதில் இதே காதல் தாகத்தால் மதம் மாறி, தன் சுதந்திரத்தையும் இழந்து அடிமையாக்கப்பட்டு  கிருஷ்ணரை முகமதாக மாற்றி காதல் பொய்யானது என்று நிரூபித்து சென்றவர் கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா!. http://josephinetalks.blogspot.com/2012/04/blog-post_12.html

12 Jun 2016

அன்பின் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை

விபத்து என்பது நிதம் நிதம் காணும் சகஜ  நிகழ்வாகி விட்ட சூழலில்,  விபத்து எதனால் நிகழ்கின்றது எவ்வாறு தவிற்திருக்கலாம்  என்ற சிந்தனையை விட  விதியுடன் இணைத்து நினைத்து நிம்மதி தேடவே விளைகின்றோம். 


இந்தியாவில் டெல்லிக்கு அடுத்து சென்னை விபத்து அதிகம் நிகழும் இடமாக கருதப்படுகின்றது. வாகனங்கள்  மோதுவதால் உருவாகும் விபத்தால் மணிக்கூறுக்கு 14 பேர் இறப்பதாக தரவுகள் கூறுகின்றன. ”ரோடு பாதுகாப்பு” என்ற தன்னாற்வ தொண்டின் கூற்றின் படி  ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒரு மனிதர் மரணித்து கொண்டு இருக்கின்றார். 

 NCRB ன் 2014 ஆம் ஆண்டு  கணக்கு ப்படி  நடைபெறும் 4 லட்சத்தி ஐம்பதானிரம் விபத்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் மரணித்து போக, நாலு லட்சத்திற்கும் அதிகமானோர் காயத்திற்கு உள்ளாகுகின்றனர். WHO வின் கணக்குப்படி கடந்த வருடம் மட்டுமே  2 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  இதில் மதியம், மாலை, நேரங்களில் தான் விபத்து அதிகம் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ள்ளது. 

எதனால் விபத்து என்பதற்கு அதிவேகம்,  போதையில் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம்,  இருக்கை பெல்ட் இல்லாது பயணிப்பது போன்ற காரணங்களை குறிப்பிடலாம். இதையும் தவிற்து பராமரிப்பற்ற ரோடு, செம்மையல்லாத விபத்தை உருவாக்கும் வகையிலுள்ள ரோடு உருவாக்கவும்  மற்றும் ஒரு சில காரணங்களே. . வாகன லைசன்ஸ் பெறாது ஓட்டுவது, சிறு குழந்தைகளை வைத்து ஓட்ட வைப்பது,  வாகனம் ஓட்டும் போது அக்களிப்பிலும் கேளிக்கையிலும் ஏற்படுவது என பல காரணங்கள் உண்டு.  

சமீபத்தில் இது போன்ற பொறுப்பற்ற ஒரு வாகன ஓட்டியால் பின்னால் இருந்து தூக்கி வீசப்பட்டு  தன் உயிரை இழந்தவரின் மனைவி என்ற நிலையில் ஒரு விபத்து என்பது எண்ணிக்கைகளில், ஆராய்ச்சியில் தரவுகளில் ஒதுக்கப்படுவது அல்ல. இதனால் பல குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகுவதை அவதானிக்கலாம். என்னவருக்கு விபத்தை உருவாக்கினவர் கூறின காரணம் ’தூங்கி விட்டேன்’ என்பதாகும்.  அவர் ஒரே வார்த்தையில் ’தூங்கி விட்டேன்’ என முடித்ததால் எத்தனை கனவுகள், எத்தனை சந்தோஷங்களை தூங்க வைத்து விட்டார் என வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நம்முடைய சமூக மாநில சூழலில் உயிர் இழைப்பயும் சந்தித்தது மட்டுமல்லாது இதற்கான சாற்றிதழ் பெற என அந்த குடும்ப உறுப்பினர்கள் அலைக்கடிக்கப்படுவதையும் கண்டு உணரலாம். சோகத்திலும் இது போன்ற நிலையை கடந்து வர மன வலிமை நிஜத்தை புரிந்து கொள்ளும் மனநிலையும் வேண்டும்

ஒரு கல்லூரியில் ஆசிரியையாக பணி புரிந்தும், என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மரணத்தை பதியவோ சாற்றிதழ் பெறவோ இயலவில்லை. முதல் காரணம் அறியாமை, யாராவது  நமக்காக எடுத்து தந்து விட் மாட்டார்களா என்ற  நற்பாசையே. தன் தேவைகள் உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களே  சாற்றிதழ்  பெற முயல்வதே சிறப்பாக இருக்கும். இது போன்ற  நெருக்கடியான  கட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள்  எளிதாக பெறுவது உபதேசம் மட்டுமாகவே இருக்கும். ஒரு இறப்பு சாற்றிதழ் பெறக்கூட ஐந்து நூறு  காந்தி தாத்தாவை கண்ணியமாக கண்ணில் காட்டும் சூழலே நம் அரசு அலுவலங்களில் நிலவுகின்றது. என்னவர் சம்பவம் நடந்த இடத்தில் மரணித்ததால் பிரேத அறிக்கை சாற்றிதழுடன்  மரண சாற்றிதழ் பெற இன்னும் சிக்கல் உருவாகியது. மரணம் மருத்துவ மனையில் நிகழ்ந்தால் மருத்துவ மனை நிர்வாகத்தின் கீழ் சாற்றிதழ் விரைவாக கிடைக்கும் சூழல் உண்டு. 

அடுத்து மரணித்தவருடைய வாரிசு சாற்றிதழ் பெறுவது. இந்த இரண்டு சாற்றிதழும் எல்லா தேவைக்கும் மிக முக்கியமானது. இறந்தவர் பெயரிலுள்ள கைபேசியை மாற்ற, சமையல் காஸ் பெயர் மாற்ற என  எல்லா தேவைக்கும் இரு சாற்றிதழும் மிக முக்கியமாகும்.  தற்போது இதை கைபற்றித்தர இடைத்தரகர்கள் உண்டு எனிலும் கையில் கிடைக்க  வெகுநாட்கள் காக்க வைக்கப்படுகின்றனர். 

இதையும் கடந்து பாதிக்க்கப்பட்ட்வர்களுக்கு கிடைக்க வேண்டிய அறிவுரைகள் தேவையான நேரம் தேவையானவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறுவதில்லை. 
எப்போதும் நம்முடன் வசித்த வாழ்ந்த மனிதர் மரணம்   அடையும் போது ஓர் பெரும் வெற்றிடம் நிலவுகின்றது. அதை ஈடு செய்ய யாராலும் முடியாது என்றாலும்   குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற சவாலை சந்திக்கின்றனர்.  இந்த தருணங்களில் தான் ஆறுதல்ப்படுத்த, அக்கறை உள்ளம் என்ற பெயரில் பல பல பயங்களை நம்பிக்கை இன்மையை விதைத்து செல்கின்றனர். அங்கு ஒரு தனிமையுடன் பயமும் பலவீனமும், பிடிப்பு இன்மையும் உருவாகின்றது. 

இனி ஒரு வாழ்க்கை உண்டு அதை வாழ்ந்தே தீர வேண்டும், தேவையற்ற அனுதாபம் காட்டி வருபவர்கள் நோக்கம் பல போதும் சரியானதாக இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை. முதலில் கவலைப்பட  நேரம் கொடுத்து விட்டு  பின்பு மீண்டு எழ பாதிக்கப்பட்டவர்களே முன் வர வேண்டும். யாரும் தரும் அனுதாபத்தால் வயிற்று பசியை போக்கிட இயலாது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. இது போன்ற தருணங்களில் மிக முக்கிய சொந்தங்கள் ஓடி ஒளிவதும்  பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் உரிமையையும் எடுத்து கொள்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முக்கிய தேவையை உணர அதை கிடைக்கப்பெற   செயலாக்கமாகும் முற்ப்போக்கானது.  மிக முக்கிய தீருமானங்கள்; விற்பது, உறவுகளை புதுப்பிப்பது, நட்புகளை புதிதாக சேர்த்து கொள்வது எல்லாமே நன்மையை விட தீமையை  விளைவிக்கும். அதனால் சம்பவம் நடந்து ஒரு சில வருடங்களுக்கு 
பல முடிவுகளை தள்ளி போட வேண்டும். விரும்பாதே கிடைத்த  தனிமையை பலன் தரும் வண்ணம் மாற்ற முயலவேண்டும் பாதிப்பிற்குள்ளான நபர்கள்.   

குறிப்பாக நல்ல நாட்களில் நம்மோடு சேர்ந்து பயணித்தவர்கள் சேர்ந்து உண்டவர்கள், நம் உதவியை பெற்றவர்கள் எல்லோரும் ஓடி வந்து உதவுவார்கள் என எதிர் நோக்கக்கூடாது. இருப்பினும் எதிர் பாரா உதவிகள் நமக்கு கிடைக்கும் அதை பயண்படுத்தலாம். எங்கள் வீட்டில் ஓர் பைக், கார் எங்கள் தேவைக்கு இருந்த வாகங்கள் அவர் விபத்துடன் இரண்டையும் இழந்தோம். உடன் பொது பேருந்தில் பயணித்து விரைவில் செல்ல வேண்டிய இடத்தை அடைய இயலாது மிகவும் துன்பத்திற்கு உள்ளானோம். என் மகன் நண்பன் அவன் இரு சக்கர வாகனத்தை மூன்று மாதம் கொடுத்து உதவினான்.


அடுத்த மனிதர்கள் செயல்களை பேச்சுக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பெரும் துன்பத்தையே விளைவிக்கும். எந்த சூழலிலும் பெறும் துயர்- பிரச்சினை இருப்பது போல் அதில் சில நல்ல பக்கங்களும் வசதிகளும் இருப்பதை கணக்கில் கொண்டு புதியதை நோக்கி நகருவதே பாதிப்புள்ளாவர்களில் அறிவான செயலாக்கமாகும்.  மற்றவர்கள் இத்தருணத்தில் அவர்கள் வஞ்சம் தீர்க்கவும் மறுபடியும் நம்மை ஒடுக்கி நொறுக்கவே முன் வருவர். 

நம் சமூக சூழலில் பாதிக்கப்பட்டவர் ஆணும் பாதிப்பிற்குள்ளாகினவர் பெண் என்றால் வாயில் அவல் போட்டு பேசவும் அம்போ என அவர்களை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்க உறவுகள்  நெருங்கிய உறவுகள் தயங்காது. இத கண்டு கொண்டால் முன் நோக்கி செல்லவும் இயலாது.    பதின்ம வயதில் பெற்ற பல நல்லொழுக்க உபதேசங்களை நாம் பெறுவோம். சிறப்பாக ஒரு பெண் என்ற நிலையில் என் குணத்தை கண்ணியமாக வைத்து கொள்ள மற்றவர்கள் உபதேசிப்பது பெரும் கேவலமாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் தூசி என எடுத்து தூக்கி போட்டு முன் செல்வதாகும் காலச்சிறந்தது. நம் வாழ்க்கை நம் கையில் இதில் மூன்றாம் நபருக்கு இடம் கொடுப்பதே சிறை தான். ஆனால் பாதிப்பிற்குள்ளான பல லட்சம் பெயரில் நானும் ஒருவர் என்ற புரிதலே அடுத்த கட்டத்தை நோக்கி நகர உதவும்.\

மற்று இழப்பில் கிடைக்கும் சாவகாசம், விபத்து மரண குடும்ப நபர்களுக்கு கிடைப்பதில்லை. . எனக்கான வருமான மார்கம், சமூக அந்தஸ்திற்கான வேலை, வளர்ந்த மகன்கள் உள்ள நானே பல இன்னல்களை நேர் கொள்ள வேண்டி வந்தது. தங்களுக்குள் உழலாது மிகவும் நேர்மறையானவர்கள், நம்மிடம் உண்மையான அன்பும் மரியாதை கொண்டவர்களிடம் அறிவுரை பெற்று நகர்வதாகும்  ஆக்கபூர்வமான செயல். . 

இருவர் பேசி முடிவு எடுக்கும் பல காரியங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கல், தன் சுயத்தை அன்பு செலுத்துதல், மதிக்கல், சுயமாக செயலாற்ற விரும்புதல் ஆகும் ஆகச்சிறந்த வழி.   சாம்பலில் இருந்து எழும் பக்‌ஷி போல் மனிதர்கள் எழ வேண்டும். வீழ்ந்து துவண்டு நொறுங்கி கிடப்பது அல்ல வாழ்க்கை மீண்டு வருவதே வாழ்க்கை. போனவர் முன்னே போக, பின்னால் கடமையை முடித்து போக சிறந்த வழியை தேடுவதாகும் யுக்தி. இதில் உணர்வை தள்ளி அறிவை பிடித்து கொள்ளும் போது எடுக்கும் முடிவுகள் எளிதாகின்றது.   

நானும் ஒடிந்த நொடிந்த தனித்த சூழல் கடந்து வர நல்ல நண்பர்கள் உதவினர். அரசு சாற்றிதழ் பெற்று தர, வாழ்க்கையின் நோக்கை உணர்த்த பல நண்பர்கள் உதவினர்.  என்னிடம்  இரக்கம் மொழியால்  பேசியவர்களை விட திடமான பல வழிகளை எடுத்துரைத்தவர்களே மனதில் நிற்கின்றனர்.  அவர்கள் யாவருக்கும் என்  நன்றிகள் மகிழ்ச்சிகள் பல  கூறி சாம்பலில் இருந்து பறந்து உயர்ந்த பீனிக்ஸ் பறவையை மனதில் கொண்டு எழுகின்றேன். 


பாபா அத்தான் இறந்த அன்று அவருக்கு சரியான அளவில் சட்டை கிடைக்கவில்லை என்ற உண்மை இன்னும் மனதை பிசைகின்றது. அவருக்கு செய்யும் பிராச்சித்தம் என்ற வண்ணம் அவர் பெயரால் உருவாகும் சமூக தொண்டு நிறுவனம் வழியாக  விபத்தால் உயர் இழந்தவர்களுக்கு சட்டை வேட்டியை எட்ட வைக்க வேண்டும்.   அகாலத்தில் கால யவனிகைக்குள் மறைந்த என்னவர் ஒரு 100 வருடமாவது வாழ்ந்தது போல் அவர் பெயர் சொல்லும் படி நல்ல சமூக அக்கறை கொண்ட செயல்களுக்கு வழி நடத்த வேண்டும். விபத்து நடந்த பின்பு விபத்தை எதிர் கொள்பவர்களுக்கு   பல விழிப்புணர்வு தகவலகள் , உடன் செய்ய வேண்டிய அணுக வேண்டிய அரசு அலுவலகம் , நிறுவனம் இவை பற்றி எல்லாம் நான் தெரிந்த அறிந்த தகவல்களை பகிர உள்ளேன். இந்த விடுமுறைக்கு நாங்கள் எங்கும் செல்ல வில்லை. என்னவர் நினைவுகளை புத்தக வடிவில் எழுதி முடித்துள்ளேன். விரைவில் புத்தகமாக வெளி  வ்ரும். கார் ஓட்ட கற்று விட்டேன். 

என் மாணவர்கள் வாழ்க்கைக்கு வெற்றி சேர்க்க உதவ வேண்டும், என் மகன்களை  நம்பிக்கை கொண்டவர்களாக, தைரியம் கொண்டவர்களாக உருவாக உதவ வேண்டும். 


இனி தனிமை இல்லை, தனிமை என நினைக்க நேரம் இல்லை, தனிமையிலும் பல இனிமை உண்டு.  விட்டு போன, மேற்கொள்ள வேண்டிய பயணங்கள் நிறைய உண்டு.  யார் அச்சுறுத்தலும் இல்லை. யாருக்கும் பதில் கொடுக்க வேண்டாம். குடும்பம், மாமியார், கடமை,  என்ற சிறை இல்லை. நான் என் மகன்கள், என் கடமை என ராஜாவும் ராணியுமாக என் விளையாட்டை  நானே ஆடி தீர்க்க கிடைத்த தருணத்தை சிறந்த  வழியில் கையாள உள்ளேன்.   நடந்ததும் நடப்பவையும் நடக்க இருப்பவையும்  நல்லவையே!!

9 Jun 2016

இறைவி -திரை விமர்சனம்

'

இறவி'  திரைப்படம்  கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாகுவதை கூறியுள்ள படம் என்று சொல்லப்படுகின்றது. கதாப்பாதிர படைப்பு ஒன்று கூட உருப்படியாக அமையவில்லை. ஒரு முழுக்குடிகார இயக்குனர், ஒரு முழு நேர ரவுடி, மாணவனான  பகுதி நேர ரவுடி என ஆண் கதாப்பாதிரங்களை வடிவமைத்துள்ளனர். பெண் கதாப்பாதிரங்கள் கணவர் ஜெயிலில் இருந்தால் கூட சுயமாக நிற்க தெரிந்த அஞ்சலி, ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை புரியும் அருள் மனைவி, எக்காரணம் கொண்டு உறவு சிக்கலில் சிக்கி தவிக்க விரும்பாத ஆனால் தன் தேவையை நிவற்தி செய்ய தெரிந்த கணவர் இழந்த பெண்.  இதில் யார் யாரையும் சாரத்தேவை இல்லையே.

எப்போதும் குடி கூத்தாட்டம் சிலை திருட்டு என சட்டத்திற்கு புறம்பான, மனித இயல்பிற்கே பொருந்தாத செயலாற்றும் ஆண்கள். வாக்கு வாதம் கணவர்களிடம் துவங்கும்  போதே கண்ணத்தில் அடிக்க தைரியமுள்ள மனைவிகள், அடி கிடைக்கும் போதும் வாங்கி கொள்ளும் மனைவிகள்! 
ஒரு ஆன்மா இல்லாத படம். எந்த காட்சியும் மனதில் பதியவில்லை, ஆண் பெண் சீனுகள் தான் அளவிற்கு மீறி காட்சிப்படுத்தியுள்ளனர். பார்க்கும் ஆடியன்ஸ் கற்பனை வளர்த்திற்கு என எதையும் விட்டு வைக்கவில்லை. இப்போதும் தமிழர்கள் எலலாம் தூங்கும் போதும் விளக்கை அணைப்பது இல்லையோ?

அஞ்சலிக்கு  டம்பிங் கொடுத்தவர்கள் இன்னும் சரியாக பேச கற்றிருக்கலாம்.  குடிகாரக்க ணவனை வெறுக்க வலுவான காரணமே இல்லை. மறுபடி காதலிக்கும் நபரும் குடிகாரர்தான். குடி நிறுத்தியவர் சிகரட் பிடிப்பதை விட வில்லை சிலை திருட்டை விடவில்லை கொலை செய்யக்கூட அஞ்சவில்லை. 

நீ என் அண்ணன்,  நீ என் உடன் பிறவா தம்பி என அன்பு மழையில் நனைபவர்கள் அவர்களுக்குள் பிரச்சினை என்றதும் கொல்ல மடிப்பதில்லை. பெண் பிரசினை என்றதும் மிகவும் கொடூரமானவர்களாக மாறி விடுகின்றனர். 

ஏதோ ஒரு கருத்து சொல்ல வந்திருக்கலாம், சொல்ல வந்த கருத்தில் தெளிவு இருந்திருக்க வேண்டும். ஆக மொத்தம் படம் ஏதோ போதையிலே இருந்து எடுத்தது போல்  இருந்தது. 

தேவைக்கதிகமான கெட்ட வார்த்தை பிரயோகங்கள், கெட்ட வாய் அசைவுகள் என மோசமான பக்கங்கள் கொண்ட மனிதர்களுடைய படம் இது.   அடியாட்கள், மற்றும் பணக்காரர்களுக்காக ஏமாற்றப்படும் அடியாட்களை பற்றி எத்தனை படம் தான் தமிழில் எடுக்க உள்ளார்கள்

கணவர் குடிகாரர் என்றதும் மனைவி நல்ல ஒருவரை தேர்ந்து திருமணம் செய்ய உள்ளாராம், இதற்கு பெற்றோரும் கூட்டு. இது எந்த ஊரில் நடக்கும் என்று தெரிந்தால் நல்லம். சம்பாதிக்கும் மகள்களுக்கே திருமணம் செய்து வைக்க தயக்கம் கொள்ளும் பெற்றோர்தான் இப்போது பெரும்வரியானோர். இதில் திருமணம் முடிந்த மகளுக்கு மணம் முடித்து வைக்கபோகிறார்களாம். 

இதில் கவனிக்கதக்க ஒரு கதாப்பாத்திரம் காதல் கணவனை இழந்த ஒரு பெண். அவர்  மேற்கொ ள்ளும் ஒவ்வொரு உரையாடலும் கொச்சையிலும் கொச்சை. எதற்கு ஆணை தேடுகிறார் என்பதற்கு தரும் விளக்கம், கொடுக்கும் முகபாவ அருவருப்பு. கணவர்   இழந்த பெண்களை பற்றிய சமூகப்பார்வையை அப்பெண் மூலம் திணித்துள்ளார் இயக்குனர். ஜன்னலோரம் சென்று அவன் செல்வதை கண்டு அழும் பெண் திருமணம் செய்ய அவனை மறுத்தது ஏன்? ஆக மொத்தம் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்தால் நாலு கேள்வி கேட்கும் சமூகம், ஒருவனுடன் கள்ளக்குடித்தனம் நடத்தினால் கண்டு கொள்ளாது இருக்கும் என்பதை சொல்கிறாரா அல்லது இது தான் கணவரை இழந்த பெண்களுக்காக வழி என சொல்லி கொடுக்கின்றாரா என தெரியவில்லை. 

இந்த தலைமுறை ஆண் பெண்கள் கொஞ்சம் பித்தம் கலங்கி மண்டை வெடித்து தான் சிந்திக்கின்றனர்,. டே மக்கா இயல்பா சிந்திங்கடா? சென்னை போன்ற சில நகர லகரியில் இருந்து விடுபட்டு படமெடுக்க முன் வர வேண்டும். கதையிலும் ஆழமில்லை கதாப்பாத்திர படைப்பிலும் அர்த்தமில்லை. கொடுத்த வேலையை நடிகர்கள் சிறப்பாக செய்துள்ளனர். எஸ் ஜே. சூரியா நடிப்பு அருமை. ஆனாலும் சார் இப்படி குப்பி குப்பியா நடித்து காட்டியிருக்கக் கூடாது! பாபி சின்ஹா நடிப்பு இயல்பாக தெரிகிறது.     சேது நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் காலம் நெருங்கி விட்டது. எடுத்ததிற்கும் கொலைகாரனாக மாறும் சேதுவை வெறுப்புடன் நோக்க தான் வைக்கின்றது இப்படம்.  அவருக்கும் அடியாட்கள் ரவுடி கதாப்பாத்திரங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் போல். ரவுடிகள் எல்லாம் கரடி மாதிரி தாடி மீசை வைப்பது தான் நிஜமா அல்லது சினிமா பாஷனா எனத் தெரியவில்லை. ஆக தமிழ்த்திரையுலகில்  நல்ல இயக்குனர் மனிதனை சிந்திக்க வைக்கும் கதைகளுக்கு பஞ்சம் ஆரம்பித்து விட்டது.  

இயல்பில் இருந்து வெகு தூரம் வெறும் கற்னையும், தப்பிதங்களான மனித உறவுகள், மோசமான  மனித நிலையை மட்டும் எண்ணி படம் எடுத்தால் இப்படி தான் அமையும். நல்ல வேளை வடிவுக்கரசியை ஒரு சீனை தவிற்து எல்லா சீனிலும் கோமா நிலைக்கு தள்ளி விட்டனர். அந்த அம்மா ஒரு சீனில் வந்தே அழுத அழுகை   வெறுப்படைய செய்தது. கணவர் இறந்து கிடக்கின்றார் மனைவி எந்த உணர்வும் அற்று குழந்தையுடன் பயணிக்க துவங்குகின்றார். பெண்கள் மழை நனைவதை பெண் விடுதலை மனநிலையை ஒருமைப்படுத்தியுள்ளாரா  இயக்குனர். 

இது போன்ற படங்களை எல்லாம் தியேட்டரில் போய் ரூபாய் கொடுத்து பார்ப்பதே நமக்கு பிடித்த செலவு தான். . அந்த  கொடுத்த ரூபாய்க்கான எந்த அழகியலும் எந்த நன்மையும் இது போன்ற படங்கள் சமூகத்திற்கு தரப்போவதில்லை. 

தமிழனின் வாழ்க்கை, பண்பு  இனி ஆராய்ச்சி உள்படுத்தும் வஸ்துவாக மாற போகின்றது. திருநெல்வேலி தியேட்டரில் பொதுவாக ஒலியை மிகவும் உயர்த்தி தான் வைப்பார்கள். பிவிடி தியேட்டரிலும் இதே நிலை தான். உரையாடல்களை கேட்கவே இயலவில்லை. கேட்ட உரையாடல்களும் அவ்வளவு செம்மையாக இல்லை. 

இந்த படம் கண்டால் ரவுடியாகவும், அடியாள் ஆகவும் குடிகாரனாகவும் மாறிவிட தன்னறியாது ஆசை வந்து விடும். தேவைக்கதிகமான கொலை தேவைக்கதிகமான சத்தம், அழுகை, அலம்பல் ஆட்டம் என ஆட்டம் கண்ட படம் இறைவி!