
நீங்கள் இல்லாத நாட்களா? நினைக்கவே இயலவில்லை! நான் லயோளா கல்லூரியிலும் நீங்கள் இங்குமாக ஒரு வருடம் பிரிந்திருந்தது நம் நியதி என்றீர்கள். ஆனால் அதை பிரிவாக நான் காணவில்லை நாம் ஓர் அழகான நினைவுகளுடன் வாழ்ந்தோம் பேசினோம், சண்டையிட்டோம் பயணித்தோம். .
என் கழுத்தை இறுக்க பற்றி கொண்டு நம் மகன்கள் கதறுகின்றனர். அத்தான் எங்களுக்கு தெரியாது எப்படி உங்கள் பிரிவை சரிகட்டுவோம் என்று, ஆனால் உங்கள் நினைவுகள் உங்கள் உழைப்பு, உங்கள் ஆசைகள் விருப்பங்கள் எங்களை வழி நடத்தும்.
அந்த பெப் 20 காலை 8 மணி ஏன் வந்தது? அந்த நாகர்கோயிலை சேர்ந்த கோயம்பத்தூரில் குடியிருக்கும் கார்க்காரன் ஏன் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டி வந்தான்? அவன் பெயர் அன்பாம்! , நீங்கள் ஏன் அந்த நேரம் பார்த்து அங்கு வந்து அடைந்தீர்கள்? ஒன்றும் புரியவில்லை. நீங்கள் தான் கூறுவீர்கள் நான் உன்னை, சாகும் வரை பார்த்து கொள்வேன் நீ என் குழந்தை. ஆம் நம் வாழ்க்கை அப்படி தான் ஓடின. நீங்கள் என் அன்பு குழந்தையாக இருந்தீர்கள், நான் உங்கள் செல்ல குழந்தையாக இருந்தேன். ஒரு சிறந்த நண்பன் போல் என்னை வழி நடத்தினீர்கள் என்னை பலப்படுத்தினீர்கள் என் வெற்றியில் அகமகிழ்ந்தீர்கள்.
அத்தான் இது போன்ற சூழலை நான் தான் முதலில் சந்தித்தேன் என்று இல்லை. ஆனாலும் உலகில் எனக்காக மட்டும் இருந்த உங்களை இழந்தது என் பூர்வ ஜென்ம பிழை தானே. நான் ஓர் நல்ல பணியில் வர எவ்வளவு ஆசைப்பட்டீர்கள். அத்தான் ஒவ்வொரு நொடியும் உங்கள் நினைவுகள் தான்.
சாம் ஜோயலை உங்கள் தோள் கொடுக்கும் உற்ற தோழனாக வளர்த்தீர்கள். அவனுக்கு கார் ஓட்ட கற்ற கொடுத்து கொண்டிருந்தீர்கள். ஜெரி எட்டாம் வகுப்பு போயும் அவனை சின்ன செல்ல குழந்தையாக நினைத்து சண்டையிட்டு கொண்டிருந்தீர்கள். பிள்ளை மெலிந்து விட்டான். இரவில் உங்களை எண்ணி அழுகின்றான். உங்கள் உடல் தான் பிரிந்துள்ளது அப்பா ஆத்துமம், ஆவி நம்மிடமே உள்ளது என்று அவர்களை பலப்படுத்தி உள்ளேன். சாம் ஜோயல் மிகவும் கருத்துள்ளவனாக வெளியில் காட்டி கொண்டாலும் அழுது புலம்புகின்றான். அத்தான் ................அத்தான்...................பாபா அத்தான்.................உங்கள் தலையணை போன்ற வயிற்றில் கிடந்து என்று விளையாடுவோம்.
கடவுளுக்கு பிடித்தவர்களை விரைவில் அழைத்து செல்வார் என்ற ஆறுதல் என்ன தேற்ற மறுக்கின்றது. ஆனாலும் அந்நியாத்திற்கு நீங்கள் நல்லவராக இருந்து விட்டீர்கள், யாரிடமும் எந்த கோபம், பகை இல்லை எல்லா உறவுகளும் சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற அதீத ஆசை, உங்கள் தாய் மாமாக்கள் இருவரும் வந்திருந்தனர். உங்கள் பெரியப்பா மக்கள் மூன்று பேரும் வந்திருந்தனர். உங்கள் அமெரிக்காவில் இருக்கும் சகோதரியும் அலைபேசியில் ஆறுதல் அளித்தார். உங்களுக்கு மிகவும் பிடித்த ராஜசேகர் மாமா கையில் தான் கடைசியாக கிடந்துள்ளீர்கள். எல்லோரும் உங்களை காண வந்திருந்தனர். தாயின், சகோதரனின் அன்பிற்கான ஏக்கம் தீர்ந்து விட்டதா? எட்டாம் தியதி, 14 ஆம் தியதி அங்கு நாசரேத் போய் மட்டன் குழம்புடன் சாப்பிட்டீர்களாமே? .................அத்தான் நீங்களே சரணம் என்றிருந்த நாங்கள் மூன்று பேரும் இனி என்ன செய்வோம்.
உங்க அப்பாவின் கடைசி சடங்கு கிரியையை நீங்களே செலவழித்த போது நீங்கள் எமாற்றப்பட்டதாக நான் குற்றம் சுமர்த்தினேன், உங்களை பண்ணையார் என்று கேலி செய்தேன். அத்தான் உங்கள் கிரியை மிகவும் அருமையாக எந்த குறைவும் இல்லாது உங்கள் சகலன், உங்கள் மச்சினன் உங்கள் உற்ற நண்பர்களால் நடத்தப்பட்டது. பத்தர் அண்ணா கரிசனையாக உங்களை விசாரித்து உள்ளார், உங்களை பற்றி முத்தாலக்குறிச்ச்சி காமராசர், தமயந்தி சைமன், வந்தியத்தேவன் போன்ற நண்பர்கள் பதிந்துள்ளனர். சிவமேனகை சிறந்த கவிதை ஒன்று பரிசளித்துள்ளார், நரேன் அண்ணா சுபி அக்காள் நொறுங்கி போய் விட்டனர். அண்ணன் வாய்விட்டு அழுது விட்டார். உங்களை காண இந்த முறை வர உள்ளனர்.
உங்கள் நண்பர்- சகோதரன் ரீகனிடம் தான் உங்கள் நிறுவனத்தை ஒப்படைத்து உள்ளேன். உங்கள் நண்பர்கள் உடைந்து அழும் போது உங்கள் நட்பை அன்பை தான் உணர்கின்றேன், குரு இன்னும் அழுது கொண்டே இருந்தார். நான் தான் ஆறுதல் கூறினேன். நான் மருத்துவமனை வந்தடையும் முன்பே உங்கள் நண்பர்கள் வெங்கடேஷ், சத்யா, டேவிட் ராஜா, ஞானப்பிராகசம் ஜெராள்ட் சார் போன்றோர் வந்தடைந்தனர்.
என் வேண்டுதலை ஏற்று நம் நண்பர் நாறும்பூ நாதன் , நம் பக்கத்து தெரு நண்பர் தினமலர் செய்தியாளர் முப்புடாதி போன்றோர் அங்கு நின்றிருந்தனர்.
உங்களுக்கு ஏதோ பலமாக அடிபட்டிருக்கலாம் என்று அழுது புலம்பின என்னை, "திடம் கொள்ளுங்கள் சார் போய் விட்டார்" என்றதும் உலகமே மொத்தமாக என் தலையில் விழுவது போல் இருந்தது. நமக்கு இரு குழந்தைகள் மட்டுமல்ல என் மாணவர்கள், நம் சாம் ஜோயேல் நண்பர்கள் என நூற்றுக்கிற்கு மேல் குழந்தைகள் அன்று உங்களை சுற்றி இருந்தனர். உங்களை தூக்கினது எல்லாம் அவர்களே. குழந்தை மனம் கொண்ட நீங்கள் குழந்தைகள் அரவணைப்பிலே இருந்துள்ளீர்கள்.
உங்க முகத்தையாவது காண வேண்டும் என நம் உறவினர்கள் நடு இரவு இரண்டு மணி வரை வந்து கொண்டிருந்தனர். வண்டிப்பெரியாரில் இருந்து எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் உங்களை அழகாக பார்க்க வேண்டும் அது தான் என்னுடைய ஆசை. ஆதலால் உங்கள் முகம் அழகாக இருந்த போதே நான் விடை தந்து விட்டேன். ஒரு வேளை நீங்கள் அதிசயமாக எழுந்து விடுவீர்களோ என்று நினைத்து உங்கள் கண்ணை திறந்து பார்த்தேன். ஒரு கணம் நீங்கள் மீண்டும் எழுந்து வருவீர்கள் என பேராசை கொண்டேன். உங்கள் காலில் தொட்டு கும்பிட்ட போது உங்களில் கண்ட சிறு காயங்கள் என்னை வேதனைப்படுத்தியது. நீங்கள் நான்கு மணிநேரம் உதிரம் சிந்தி இறந்தீர்கள் என்றதும் என் உயிரே நின்று விடும் போல் இருந்தது. ஆனாலும் நீங்கள் கடைசி நேரம் எந்த சித்திரவதையும் அனுபவிக்கவில்லை. உடன் இறைவினடம் சென்று விட்டீர்கள் என்றதும் தேற்றி கொண்டேன்.
எங்களை நினைத்து கொண்டு தான் இருப்பீர்கள், ஜெரியால் தான் ஜீரணிக்க இயலவில்லை. உங்கள் சகலன் "அண்ணா தான் உங்கள் தங்கையை எனக்கு தேடி தந்தார் நான் செலவு செய்வதை எண்ணி கவலை கொள்ள வேண்டாம் அவர் என் சொந்த அண்ணன் என்றார். அண்ணி உங்களையும் பிள்ளைகளையும் நான் ஆதரவுடன் கவனிப்பேன் என்றார்".
நீங்கள் கடைசியாக அணிந்து கழற்றி போட்டிருந்தது சுபி அக்காள் வாங்கி கொடுத்த சட்டை, நீங்கள் மரண நேரத்தில் அணிந்திருந்ததும் சுபி அக்காள் கொடுத்த டீ-ஷர்ட், நீங்கள் ட்றைய் வாஷுக்கு எடுத்து சென்ற ஓர் சேலையும் சுபி அக்காள் எனக்கு எடுத்து தந்த சேலை. அக்கா அக்கா என்று தாய்மை பாசத்துடன் அழைத்து வந்த சுபி அக்கா ஆசிர்வாதத்துடன் சென்றுள்ளீர்கள். சுபி அக்காவை சந்தித்தது முதல் தான் உங்கள் அம்மாவை நினைத்து ஏங்காது மகிழ்ச்சியாக இருந்தீர்கள். நம் சிங்கப்பூர் அத்தை கூறியுள்ளார்கள் பெப் 20 என்பது இந்து சகோதர்களை பொறுத்து புண்ணியமான தினமாம் அன்று இறப்பவர்கள் நேரடியாக இறைவன் உலகம் அடைந்து விடுவார்களாம்.
அத்தான் நீங்கள் ஆசைப்பட்டது மாதிரியே உங்கள் சபை கல்லறை தோட்டத்தில் வைத்துள்ளோம். இந்த முடிவை நான் தான் எடுத்தேன். எனக்காக நீங்கள் கல்லறையில் கூட தோற்க கூடாது. என் பாபா அத்தான் என்றும் கம்பீரமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அழகாக ஓர் இடம் கிடைத்துள்ளது. நீங்கள் விரும்பும் மார்கட் அந்தோணியார் ஆலயம் முன்புள்ள சீவலப்பேரி ரோட்டில் செடிகள் அருகாமையில் உங்களுக்கு இடம் தேர்ந்துள்ளனர் உங்கள் நண்பர்கள். ஒரு வேளை நாசரேத் என்று உங்கள் தாய்க்கு விருப்பம் இருக்குமோ என்று வினவினேன். அவர்கள். திருநெல்வேலி நோக்கி விரைந்து வந்து விட்டனர். உங்கள் மகன் சாம் ஜோயல் மிகவும் உறுதியாக , அப்பா நண்பர்கள் இருக்கும், அப்பா 12 வருடம் வாழ்ந்த திருநெல்வேலி மண்ணில் தான் இருக்க வேண்டும் என்றான். நாசரேத் கல்லறை தோட்டத்தை விட அழகான இடம் இது தான். நானும் உங்களை எந்நேரவும் சந்திக்கலாம். நீங்களும் நாசரேத்தை விரும்ப மாட்டீர்கள் எனத்தெரியும். வீட்டில் கத்தோலிக்க சபைப்படி தான் ஜெபம் நடந்தது.சகாயமாத ஆலய தந்தை எங்கள் கல்லூரி தந்தையர்கள் உங்களூக்காக ஜெபித்தனர். பின்பு ஆலயத்தில் சி. எஸ்.ஐ சபைப்படி ஜெபம் நடந்தது.

அத்தான் உங்கள் ஓர் அக்காள் சொல்கிறார் "நான் முகநூலிலில் இட்ட படங்களை கண்டு கண் வீழ்ந்ததால் தான் போய் விட்டிர்களாம்" அப்போது தான் நினைவு வந்தது உங்கள் தகப்பானார் இறந்ததை நாம் அறிவித்த போது, "உங்கள் அப்பா என் அப்பா மரண கிரியைக்கு வராததால் நான் வருவதை என் தாயார் விரும்ப மாட்டார், உங்கள் வீட்டில் ஏதும் நிகழ்வு என்றால் பங்கு எடுத்து கொள்கின்றேன் என்றார். உங்கள் சகோதரன் நீங்கள் பெட்டியில் இருப்பதை பார்க்க விரும்பவில்லையாம் அதனால் அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார். உங்கள் குடும்ப சொத்து பங்கை கருணை அடிப்படையில் கொடுப்பாராம், நான் கூறினேன் அது என்னவருக்கு இழுக்கு சட்டப்படி சமபங்கை உங்க மகன்களுக்கு கொடுக்க கூறினேன். எனக்கு நீங்கள் விட்டு சென்றது போதும்.

http://avargal-unmaigal.blogspot.com/2016/02/baba.html
http://www.dinamalarnellai.com/web/districtnews/2412
http://www.dinamalar.com/news_detail.asp?id=1461507&Print=1
http://www.maalaimalar.com/2016/02/20130117/killed-by-a-car-collided-near.html
http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/02/20192527/In-PlayankottaiCar-crash-Auditor-death.vpf