16 Sept 2018

மலர்வதியின் “தூப்புக்காரி”

2012ம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற  நாவலாகும் மலர்வதியின் “தூப்புக்காரி”. இயற்பெயரான மேரிபுளோரா என்பதை தமிழ்மைப்படுத்தி மலர்வதி என்ற பெயரில் எழுதி வருகின்றார்.  

தனது 15 வது வயது முதலே, தன் வாழ்க்கையில் தான் கண்டுணர்ந்தவற்றை  தன்னை பாதித்த மனிதர்கள் வாழ்க்கையை எழுதி  இரும்பு பெட்டியில் பூட்டி வைத்திருந்த எழுத்தாளினி தனது முதல் நாவலை 2008 பதிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 


இப்புத்தகம் இவருடைய இரண்டாவது புதினமாகும். அச்சிட பணம் இல்லாத நிலையில் அச்சகரிடம் கடனாக அச்சிட்ட இப்புத்தகம் மூத்த எழுத்தாளர்கள் பொன்னீலன் போன்றோரின் உந்துதலின் பெயரில் சாகித்ய அகாடமி விருதிற்கு அனுப்பியதில் 2012ம் ஆண்டிற்கான இளம் சாகித்ய அகாடமி விருது,  தாமிர பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் பெற்றிருந்தது.  விருதை வாங்க பாட்னா செல்லவேண்டிய நிலையில் தனது வழிப்பயணத்திற்கு செல்ல பணபிரச்சினையால் அவதியுற்றது ஊடகச்செய்தியில் இடம் பிடித்திருந்தது. வறுமையில் பிறந்து, வறுமையில் வாழ்ந்த தற்போதும் வறுமையில் வாழும் ஒரு காதாசிரியரின் நாவல் என்பதும் இதன் சிறப்பாகும். 


தந்தை முகம் பார்க்கும் முன்னே வேறு பெண்ணுடன் பிரிந்து சென்ற நிலையில்; தனது ஐந்து குழந்தைகளை காப்பாற்ற வீட்டின்  பக்கத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளியில் மாதம் 30 ரூபாய் கூலியில்  துப்புறவு தொழிலாளியாக வேலை செய்து வந்த தன் தாயின் துயரை கண்டு வளர்ந்தவர் தான் கதாசிரியை.  எழுத்தாழினியாலும்  9-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் சூழல் வீட்டில் இருக்கவில்லை. இன்னிலையில் இரண்டு வருடம் முந்திரி பருப்பு கம்பனியில் வேலை செய்கின்றார். பின்பு தனது அண்ணனின் உதவியுடன் படித்து தமிழில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது இந்தப்பகுதியில் இருந்து வரும் "முதற்சங்கு'என்ற மாத இதழிற்கும்,"இலக்கிய சிறகு' என்ற நாளிதழுக்கும் பொறுப்பாசிரியராக உள்ளார்

மலர்வதியின் தூப்புகாரி என்ற நாவல் விழிம்பு நிலை மக்களின் கதையாகும். கதை இப்படியாக நகர்கின்றது.  தனது கணவர்  நோய்வாய்ப்பட்டு மரித்த நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவமனையின் கடன் அடைப்பதற்கு என  நாடார் சமுதாயத்தில் பிறந்த கனகம் துப்புறவு தொழிலை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றார். ஒரு துப்புறவு தொழிலாளியான கனகத்தை தன்னுடன் சேர்த்து கொள்ள தயங்கிய  உறவினர்களால், ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கனகம் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றார் பூவரசியும் தனியாக விடப்படுகின்றார். 

கனகத்தின் மகளான் பூவரசியும் தான் வெறுத்த துப்புறவு தொழிலயை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகின்றது. இதனிடே தன் ஜாதிக்காரனான ஒரு பணக்கார பையனுடன் காதல் மலருகின்றது. அவன் ஒரு குழந்தையை கொடுத்து விட்டு, வீட்டில் பார்த்தை பெண்ணை திருமணம் செய்து மறைய, தனித்து விடப்பட்ட பூவரசுவை சக்கிலியனான மாரி, தன் மனைவியாக ஏற்று வீட்டுற்கு அழைத்து செல்கின்றான். பூவரசுவை பிடித்த வேதனைகள் தான் விட்ட பாடில்லை. மாரியும் ஒரு விபத்தில் மரித்த நிலையில் தன் பெண் குழந்தையுடன் அதே துப்புறவு தொழிலாளியாக கனகத்தின் மகளாக  பூவரசு வளர்ந்த வறுமை நிலையில், பூவரசு மகளும் வளர்க்க வேண்டிய  சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.

துப்புறவு சமூதாயம் மேல்கொண்டுள்ள சமூகத்தின் பார்வை, இந்த மக்கள் வெகுகாலமாக எதிர்கொள்ளும் சமூதாயா புரக்கணிப்பு அவமதிப்பு பல சம்பவங்கள் ஊடாக சொல்லியுள்ளார். கேரளா எல்கையோரமுள்ள கன்யாகுமாரியில் ஜாதி வகைப்படுத்தலின் கொடுமையை விட வர்க்க பாகுபாடான இருப்பவன் இல்லாதவன் நிலை  பற்றி சொல்லியுள்ளார். துப்புறவு தொழில் என்பது ஒரு குறிப்பிட்ட  மக்களின் ஜாதியுடன் இணைந்து தொழில் என்பதையும் கடந்து வசதி வாய்ப்பு அற்ற, மேல்ஜாதி ஏழை மக்கள் மேல் நிர்பந்தமாக திணிக்கப்படுகின்றது என்பதையும் வலியுறுத்துகின்றார். ஒரு தலிது பிரச்சினையை மீறி இது மக்களின், யாருமற்ற பெண்களின் பிரச்சினையாக உணரவைக்கின்றார்.

கல்யாண வீட்டில் மேசையை சுத்தம் செய்ய நிற்கும் ஏழை வயதான பெண்களை கண்டு கடந்து போயுள்ளோம். விருந்துக்கு பந்திவைக்கும் மக்கள் அனைவரும் உண்ட பின் தன் வயிற்று பசிக்காக காத்து நிற்க வேண்டிய கொடிய நிலையும், கொலைப்பசியால் உணவை நேரமே உண்டார் என்று ஏளனப்படுத்தும், பசியை பற்றி தெரிந்திராத பணக்கார இரக்கமற்ற மனநிலையும் ஒரு சம்பவத்தால் எளிதாக வடிவமைத்துள்ளார்.   

பணம் இல்லா எளியவர்கள் என்ற ஒரே காரணத்தால் மிகவும் துச்சமான ஊதியத்தை கொடுத்து தலைமுறை தலைமுறையாக அடிமை நிலையை பேணவைக்கும் மருத்துவ நிர்வாகி என்ற பணக்கார கும்பலின் மனநிலையும் விளங்க பண்ணியுள்ளார். கதைமுடிவில் பூவரசிக்கு இருந்த ஆகமொத்த உரிமையான மகளையும் உன்னால் பிள்ளையை வசதியாக வளர்க்க இயலாது தத்து கொடுத்து விடு” என பிரிக்க நினைக்கும் முதலாளி மனநிலையும் விவரித்துள்ளார்.

ஆண் பெண் காதல் எந்த வகை காதல் மேன்மையானது, பண்பானவன் என்ற நினைத்த மனோவை விட அழுக்கன் என்ற அடையாளமுள்ள மாரி எவ்வளவோ மேல் என அவன் குணத்தால் அழுத்தமாக பதிந்துள்ளார்.

ஜாதிபெருமையும் வசதி பெருமையும் ஏழைகளின் வாழ்க்கைகோ வறுமையை போக்கவோ உதவவில்லை என்பதையும் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை தூப்புக்காரி என கதாப்பாத்திரம் அழைக்கப்படும் போதும் வாசகர்கள் நாமும் அந்த அவமான சொல்லில் மதிப்பற்ற விளியில் சுருங்கி போவதை உணரலாம்.

இலக்கியம் என்பது வாழ்க்கை, அது கற்பனை கலந்த வார்த்தை பிரயோகம் அல்ல என்பதை மலர்வதி நிரூபித்து விட்டார். கழிவறைகளும்,  அந்த நாற்றத்திலும் அழுக்குலும் அல்லல் படும் மனிதர்கள் நம்மை விட்டு அகலவில்லை. அது ஒரு தீராத அழுகையின்  அவலக்குரலாகவே உள்ளது. வாசிக்கும் ஒவ்வொருவரும் ’தூப்புக்காரி’ என்று விளிப்பதை விடுத்து மனித நேயத்தோடு அவர்களை நோக்கவும் அழைக்கவும் கற்று கொண்டிருப்பார்கள். அவ்வகையில் இது ஒரு விழிப்புணர்வு மனிதநேய நாவல் தான்.

தலிது எழுத்து என எழுத்தாளர் பொன்னீலன் முன்னுரையில் கூறியுள்ளார். ஒரு நாடார் இனத்தை சேர்ந்த பெண் எப்படி தலிது எழுத்தாளர் என்ற அனுகூலங்களை பெற இயலும் என விமர்சங்களுக்கும் உள்ளாகியுள்ளார். தான் தலிது எழுத்தாளர் அல்ல ஒரு எழுத்து போராளி என தன்னை முன் நிறுத்த அம்பை போன்ற எழுத்தாளர்கள் பணிந்துள்ளனர்.  ஆனான் என் வாசிப்பில் நான் கண்டது ஒரு குறிப்பிட்ட தலிது மக்கள் பிரச்சினை மட்டுமல்ல, ஏழ்மையால் சூழலால் தெருவிற்கு வேலைக்கு என வந்த  எல்லா எளிய நிலை பெண்களும் அனுபவிக்கும் அவலைநிலையாகும் தூப்புக்காரி என்ற நாவல் வழியாக நாம் காண்பது. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தலிது என அறியப்படவேண்டும் என்பது எழுத்தாழியின் ஆவாலாகும். அவர் வார்த்தைகளில் சொன்னால் ”நான் வாழும் சமூகத்தில் தலித் என்ற அடையாளம் பெற்று எவரும் இல்லை.. இங்கே பணத்தின் பெயரால், படிப்பின் பெயரால் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும் தலித்திய வலிகளே.. பாதிக்கப்பட்ட அத்தனைப் பேரும் என்னைப் பொறுத்தவரை தலித்துகள் தான்”



நாவலை கையிலெடுத்தால் வாசித்து முடிக்கும்  வரை நம்மை வைக்கவிடாது நகத்தும் வாழ்வியல் கதை. பல கதைமாந்தர்கள்; நாமும் நம் வாழ்க்கையில் கண்டு விலகி சென்றவர்கள், கண்டு கொள்ளாது கடந்து சென்றவர்கள் தான்.

கனகம் பட்ட வேதனையில் அவளின் ஒரே லட்சியம் தனது மகள் தன் தொழிலில் வரக்கூடது என்பதாகும். தன் இனத்தில் யாரேனும் கல்யாணம் செய்து அவ நிம்மதியாக வாழ வேண்டும் என்பதாவே இருந்தது. என் மகளை சக்கிலியன் பெண் கேட்பதா என்று வருந்திய தாய், சக்கிலியன் மாரியாவது தன் மகளை கல்யாணம் செய்து விடக்கூடாதா என ஏங்கும் நிலையில் வாழ்க்கை கொண்டு விடுகிறது, கணவன் கடத்தை அடைக்க கனகம் செய்த வேலை, தன் தாய் மருத்துவ கடன் அடைக்க என பூவரசியும் வேலையில் சேருகின்றார். 

இடையில் பாதுகாவலனாக காப்பாற்றி பூவரசுவிற்கு நல்ல வாழ்க்கை வேண்டும் அவ சந்தோசஷமா இருக்கனும் அவ பிள்ளைக்கு தகப்பனா இருக்கனும் என நினைத்த மாரியும் விபத்தில் மரிக்க; பூவரசு அதே கனகாவின் இடத்தில் வந்து சேருவது தான் திகைக்க வைக்கின்றது, வருந்த வைக்கின்றது. என்னடா வாழ்க்கை? ஏழை பரம்பரையா ஏழை தானா? விடிவே இல்லையா என நம்பிக்கையின்மைக்கு கொண்டு செல்கின்றது. மாரியை கதாசிரியர் எதனால் சாவடித்தார்? தான் வளர்ந்த அதே சூழலில் தன் மகளையும் வளர்க்க ஏன் துணிந்தார்? என்பது காதாசிரியரின் மாந்தர் படைப்பை பொறுத்தது. இருப்பினும் பூவரசின் வாழ்க்கையில் இனி வசந்தமே இல்லை என்பது முடிவில் ஒரு அகலாத வருத்ததையும் நம்பிக்கையின்மையும் விதத்துள்ளதா? என சிந்திக்க வேண்டியுள்ளது.  

மலர்வதியின் இப்புத்தகத்தை எனக்கு தருவித்த எழுத்தாளர் நாறும்பூ நாதனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். காட்டுக்குட்டியும் உடன் கொடுத்து விட்டுள்ளார். ஒரு விமர்சனத்துடன் சந்திக்கின்றேன். 

மலர்வதிக்கு என் வாழ்த்துக்கள் மென்மேலும் பல புத்தகங்கள் பதிப்பிக்க,

0 Comments:

Post a Comment