23 Oct 2015

மதங்கள் போதிக்க வேண்டியது மனித நேயம் மட்டும் தான்!

சமீபத்தில் வீட்டிற்கு விருந்தாளியாக ஒரு பாட்டியம்மா வந்திருந்தார்கள்.  பாட்டி போகிற போக்கில் வீட்டில் செடி கொடிகள் பராமரிப்பதில் யாருக்கு விருப்பம், பராமரிப்பு இன்னும் சரியாக இருக்க வேண்டும் என கூறி சென்றார். அத்துடன் உங்களுக்காக  ஜெபிக்கின்றேன் என்ற பெயரில் மகனுக்காக பேசும் திறனிலுள்ள குறைபாட்டை பெரிய குறையாக கூறி ஜெபித்ததை எனக்கு எரிச்சலை வருவித்தாலும் மகன் மனதைக்கருதி நான் அதை ஒரு பொருட்டாக மதித்தாகவே காட்டி கொள்ளவில்லை. 

என் மகன் பல துறைகளில் சிறந்தவன். இருப்பினும்  சில குறைபாடுகள் என்பது, இயற்கையின் நியதி, நம் வளர்ப்பில் உள்ல குறைபாடு, சிறு குழந்தையாக இருக்கும் போதுள்ள தாக்கம், பரம்பரையான சில குறைபாடுகள் என பல காரணங்கள் உண்டு. இதற்கு என ஒரே காரணமாக இறைவன் கிருபை, சாபம், தயை என்ற பெயரில் கதையளப்பதை நான் பெரிதாக எடுத்து கொள்வதே இல்லை.

இது ஒரு வகையான கிருஸ்தவ மனவியாதி. யாரை பார்த்தாலும் அவர்களில் குற்றம் கண்டு பிடிப்பது, அவர்கள் இயலாமையை சுட்டி காட்டுவது அவர்களுக்காக தான் ஜெபிக்கின்றேன் என்ற பெயரில் தேவையில்லாத குடும்ப விஷங்களில் தலை இடுவது.  இந்த வியாதி திருநெல்வேலி கிருஸ்தவர்களை பொறுத்து பெரிதாகவே தாக்கியுள்ளது. 

ஒரு முறை மகன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற குறைபாட்டுடன் அவன் தலைமை ஆசிரியரை சந்தித்த போது பெற்றோர்கள் ஜெபியுங்கள் என்றதும் எனக்கு பள்ளி மேலுள்ள மதிப்பே அற்று போனது. இன்னும் சில பள்ளிகளில் குழந்தைகள் செய்யும் இயல்பான சேட்டைகளை குசும்புத்தனங்களை சாத்தானின் செயல் என்று சொல்வார்கள்.  


பேருந்தில் பயனிக்கும் போது இது போன்ற மனவியாதி பிடித்தவர்களை இனம் கண்டு ஒதுங்கி கொள்வது உண்டு. சிறிதாக சிரிப்பார்கள் நாமும் உறவினர்களோ, மறந்து போன  தெரிந்தவர்களோ என் திரும்ப சிரித்து விட்டால் நம்மை பற்றிய சிறு விசாரணைக்கு பின் அவர்கள் வல்லமையை கொட்ட ஆரம்பித்து விடுவார்கள். 


ஒரு முறை ஒரு உறவினர் வீட்டில் தங்கின போது அவர் ஒரு தினஏட்டை காட்டி தந்து "ஒவ்வொரு மாதவும் ஒரு குறிப்பிட்ட சிலருக்காக ஜெபித்தாகவும் இந்த மாதம் உன் பெயரை குறித்து ஜெபிக்கிறேன் நீ சபை மாறி ஜெபித்தால் நிறைய வசதியாகி விடலாம்" என கூறினார். பணக்காரர் ஆவது செல்வ செழிப்புடன் வாழ்வது என்பது ஒரு மனிதனின் லட்சியமாக மாறும் போதே அங்கு தீமைகளின் அணிவகுப்பு  ஆரம்பமாகி விடுகின்றது. எனது லட்சியம் என் ஆசைகள் எனக்கு தெரிவதால் அவர் பேசின பேச்சை ஒரு பொருட்டாக நான் எடுக்கவில்லை என்றதும் அவர் என்னை  மதித்து உறவினராக சேர்த்து கொள்வது இல்லை என புரிந்து கொண்டேன். இது போன்ற மனிதர்களை விட்டு விலகியிருப்பது எவ்வளவோ மேல். ஒரு மனிதனுக்கு தேவை, அமைதி அது பணத்தால் வசதியால் வராது என்பது தெள்ள தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

இன்னும் சில கிறிஸ்தவ விஞ்ஞானிகள்; உங்கள் குடும்பத்தில் ஒரு சாபம் உள்ளது, அது உங்கள் கொள்ளு தாத்தா செய்த பாவம் என்ற தோரணையில் கதை ஆரம்பித்து விடுவார்கள். 

இது போன்ற நடவடிக்கை எல்லாம் அவர்களில் வாழ்க்கையிலுள்ள ஏமாற்றத்தை வெறுப்பை மறைத்து அதே நிலைக்கு இன்னும் சில மனிதர்களை எட்ட வைக்கும் யுக்தியாகும். 

பலர் இன்று செல்வ செழிப்பு சமூக அந்தஸ்து என கருதுவது; ஒரு அரசு பதவியில் இருப்பது நோகாமல் நொங்கு எடுப்பது என்பது போல் எளிதாக் சம்பாதிப்பது என அர்த்தம் கொள்கின்றனர். ஆனால் இதே கொள்கையில் வாழ்ந்து இன்று 70 வயதை கடந்து வீட்டின் ஓரமாக உட்காந்து கடந்த வாழ்க்கையை எண்ணி நிராசையுடன் தவிக்கும் பல வயோதிகர்களை கண்டுள்ளேன் ..   

சமீபத்தில் ஒரு எழுத்தாளர் நண்பரை சந்தித்து பேசி கொண்டிருந்த போது; அவருடைய கிறிஸ்தவ உறவினர் இவர் எழுத்து விருப்பத்தை எடுத்து கூறி "நீங்கள் ஆண்டவரிடம் திரும்புங்கள் புகழ்ச்சிகாக அலையாதீர்கள்" என கூறி அவரை வார்த்தையால் துன்புறுத்தியதை கூறி வருத்த பட்டு கொண்டார். 

இன்று முகநூல் போன்ற பக்கங்களிலும் சில நண்பர்கள்; கிறிஸ்தவர்களை  விமர்சித்து வருகின்றனர். இது போன்ற செயலை மதத்துடன் பார்க்காது அவர்கள்  மனநலனுடன் பார்ப்பதே சிறந்தது. வாழ்க்கை மேலுள்ள ஒரு வகையான வெறுப்பு அடுத்தவர்களை காணும் போதுள்ள பொறாமை போன்றவற்றை வெளிப்படுத்த கடவுளை துணைக்கு சேர்த்து கொள்கின்றனர். 
 

நான் குறிப்பிட்ட சில பக்தி குழுவுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதில்லை. இவர்கள் ஆத்மீகம் என்பதை ஏதோ  வசதி வாய்ப்பு கிடைப்பதையும்' பதவி' வேலை' வீடு கிடைப்பதாகவுமே பார்க்கின்றனர். வருடம் ஒரு முறை வரும் கிறிஸ்துமஸ் குழுவைக் கூட நான் கடமைக்கு என்றே வரவேற்பது. ஒவ்வொரு முறை வரும் போது நம் பெயரை கேட்பது பார்க்கும் வேலையை கேட்பது' அதற்கு தகுந்தது போல் அறச்செயலுக்கு என பணம் கேட்பது எல்லாம் வெறுப்பையே தருகின்றது. 

வீடு என்றதும் அவர்கள் நினைப்பது பெரிய  பங்களா போன்ற வீடுகள் வீட்டிற்கு முன் கார் வசதி போன்றவையாகும். குடும்ப சொத்து போன்றவை இல்லாது நியாமாக சம்பாதிக்கும் ஒருவனால் சராசரி வாழ்க்கை தான் சாத்தியம். இதை கடவுள் அருள் கிருபை என முடிச்சு போடுவது அப்பட்ட ஏமாற்று தனவும் திமிறுமாகும். இது போன்ற மனநிலை பெருகி வருவதை விடுத்து குறைவாதாக தெரியவில்லை.  அரசு அதிகாரியாக இருந்து லஞ்சம் வாங்கி சேர்த்து அதில் தசம பாகம் கொடுப்பதையோ அல்லது சொந்த சகோதரனையை ஏமாற்றி சொத்து, சேர்த்து அதன் ஒரு பாகத்தை நாலுமாவடிக்கு கொடுத்தால் பாவ நிவர்த்தி ஆகி விடும் என்று நினைப்பதை எல்லாம் பக்தி, கடவுள் வணக்கம், என எடுத்து கொள்ள இயலாது.


பொதுவாக கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் என்ற பொருள் தான் தகும். இதில் கொள்கை வழி பாட்டு முறை, மற்றும் அதிகார மோகத்தால் உருவாகினது பல ஆயிரம் சபைகள். இந்த சபைகள் எல்லாம் நிலை நிற்க வேண்டும் என்றால் மனவியாதி பிடித்த சில மக்களும் தேவை. 

பொதுவாக கிறிஸ்தவம் என்பது கத்தோலிக்க மதமாகத்தான் இருந்தது. இந்த சபை ஒரு தலைமை கட்டுபாட்டில் கோட்பாட்டுடன்  இயங்குவது ஆகும். ஒரு குறிப்பிட்ட நபரின் கருத்தை கிறிஸ்தவம் என்ற பெயரில் எடுத்து கொள்ள அனுமதிப்பது இல்லை.   ஒன்பது வருடம் துவங்கி பனிரெண்டு வருடங்கள் மட்டும் படித்தவர்களால் மட்டுமே மத நூலை பற்றி  போதிக்க இயலும். போதனையில் மாறுபாடு இருந்தாலும் கேள்வி கேட்க, தடுக்க வதளம் உண்டு, 

இன்று புற்றீசல் போல் பெருகிய பல தனி நபர் சபைகள் தங்கள் வாய்க்கு வந்ததை தங்கள் மனநிலைக்கு தங்கள்  ஆற்றல் அறிவின் அளவில் உபதேசிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் உபதேசிப்பது என்றால் மக்களை வசப்படுத்துவது அடிமைப்படுத்துவது அவர்கள் கருத்தை வலுகட்டாயமாக நிறுவது என்று மாற்றி விட்டனர். இவர்களை போன்றோரை முன்நிறுத்தி கிறிஸ்தவம் என்றாலே இது தான் கிறிஸ்தவர்கள் இவர்கள் தான் என முத்திரைகுத்தி குற்றம் சாட்டுவதையும் தவிற்க வேண்டும்.



மதம் என்பது மனதை பண்படுத்த என்றில்லாமல் மற்ற மனிதர்களை குற்றம் சுமத்தை வழிப்படுத்த என்று விளைந்தால் அது ஆபத்தில் தான் முடியும். எல்லாம் மதங்களும் போதிக்க வேண்டியது மனித நேயவும் உலகின் மேலுள்ள கருதலும் தான். கடவுள் நம்பிக்கை நேசம் என்பது ஒரு வகையான கற்பனை உலகை கடந்து தங்களுடன் வாழும் மக்களை நேசிக்கும் மனநிலைக்கு எட்ட வைக்க வேண்டும்.  இன்று பல கிறிஸ்தவ குடும்பங்களில் அவர்களால் தங்கள் கணவரை அல்லது மனைவியை நேசிக்க இயலாது ஆனால் கடவுளை கடுமையாக வணங்குவார்கள். கடவுள் மேலுள்ள பிரியம் என்பது சிலருக்கு தங்களுடன் உள்ள மனிதர்களை வெறுக்க செய்கின்றது. ஒரு மனிதர் மணிக்கூர் கணக்காக தான் செய்த அற்புத கிரியையை பற்றி பேசி கொண்டிருந்தார். பேச்சின் மத்தியில் அவர் கடைசியாக சிரித்த படம் அவர் கல்யாண ஆல்பத்தில் இருப்பதாக கூறினார். கடவுளின் அரிய செயல்கள் என்று பேசுபவரால் தன்னுடன் வசிக்கும் மனைவியை பற்றி பெருமையாக எண்ண ஒன்றுமில்லை. ஆனால் இது நடிப்பு.  

இவர்களை பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தெரிந்ததால்  தான் யேசு நாதர் கூறினார் "நீ மற்றவர்களை விதிப்பது போல் நீ விதிக்கப்படுவாய்", "உன்னை போல் உன் அயலானே நேசி" , காணப்படும்  உன் சகோதரனை நேசிக்காது காணப்படாத இறைவனை எவ்வாறு நேசிக்க இயலும். மதவாதிகளால் தான் யேசு நாதர் கொல்லப்பட்டார் இப்போதும் மதவாதிகளால் தான் அவர் வார்த்தைகளும் நோக்கங்களும் மாற்றப்படுகின்றது.