9 May 2015

புரக்கணிக்கப்பட்ட குருசடியின் வேதனை!

நண்பர்களுடன் எங்கள் ஊருக்கு போகவேண்டும் என ஆலோசனை கொள்ளும்  வேளையில்  எங்கள் ஊரின் நினைவுகள் ஆழ்ந்து விட்டேன். கடந்த 80 வருடமாக பெரியாரின் அடையாளமாக பலரின் ஆறுதலாக  இருந்த குருசடி இனி அங்கு இல்லை என்று நினைக்கும் போதே கவலை தொண்டையை அடைக்கின்றது . இந்த குருசடி ஒரு கிருஸ்தவ தேவாலைய வளாகத்தில் இருந்திருந்தாலும் மதங்கள் கடந்து பல மனிதர்களை தேற்றிய இடம். பல கலாச்சார, மத மக்களை ஒன்று கூட வைத்த இடம். அந்த பீடத்தில் மெழுதுவத்தி பத்த வைக்காத ஒருவர் கூட எங்க ஊரில் இருக்கமாட்டார்கள்.  குருசடியை திரும்பி பார்க்காது எந்த மனிதனும் அந்த பகுதியை கடந்து போயிருக்க மாட்டான். .  குருசடி உடைக்கப்படும் போது பொது  மக்கள் கண்ணீர் வடித்துள்ளனர் சிலர் தங்கள் மனதிலே ஏங்கி அழுதுள்ளனர். ஆனால் ஊடகத்தில் வந்த செய்தி ஆகட்டும் மக்கள் நாட்டின் வளர்ச்சியை கருதி     குருசடியை தானாக முன் வந்து உடைத்து ரோடு விரிவடைய உதவினர் என்று கூறியுள்ளது. குருசடியை ஏன் உடைத்தனர்? ஒரு இனத்தை அதன் இருட் நாட்களில் உழைத்த ஒரு இனத்தை வேருடன்  அழிக்கும் விரட்டும் நிகழ்வுக்கு முன்னோடியாக இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டுள்ளது.   
                                                      வண்டிப்பெரியார்  என்ற ஊர் கரைபுரண்டோடும் ஒரு நதியின் இரு கரையும் இணைக்கும் சிற்றூர் ஆகும். இக்கரை தமிழக மக்களும் அக்கரை பக்கம் மலையாள தேசவும் வியாபார தொடர்பாடல் பேணும் ஒரு வியாபார தலமாக இருந்திருக்க வேண்டும். இக்கரை அடையும் வண்டியிலுள்ள பொருளை ஒரு தோணியில் ஏற்றி பெரியார் நதியின் ஊடாக கரை கடந்தால் அந்த பொருட்கள் எளிதாக கேரளா தேசம் நோக்கி செல்ல இயலும். ஆதலால் வண்டிப்பெரியார் கரை ஓரம் எங்கும் தமிழ் வியாபாரிகளையை நீங்கள் இன்றும் காண இயலும். இந்த நதியில் எப்படி ஒரு பாலம் வந்தது என்றால் அது ஆங்கிலேயரின் திறமைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்து காட்டாகும். முல்லைப்பெரியார் டாம் கட்டின காலயளவில் உருவாகினது தான் இந்த பாலவும். புனலூர் பாலம் போன்றே கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் பாலம். ஆங்கிலேயர்களின் உழைப்பை எடுத்து காட்டும் வண்ணம் 100 வருடம் கடந்த பின்பும்  கனரக வாகனம் கடந்து போகும் போது ஏற்படும் ஒரு சிறு நடக்கத்துடன் நிலைகொள்கின்றது. இந்த பாலம் ஒரு குருவிக்கு எப்படி மரமோ அது போன்றே பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க அமரும் இடமாக இருந்தது . எந்த கஞ்சனும் பிச்சைக்காரர்களை ஏமாற்றி தப்பிக்க இயலாது. தேனம்மா அங்கு கண்டுள்ளேன். இரு கால்களும் முடமான ஒரு பெண் அங்கு இருப்பார். காளை கிறுக்கன் ஓயாது நடக்கும் வழியும் இதுவே. ஏன் என்றால் வண்டிப்பெரியாற்றில் ஒரு முறை நடப்பது என்றால் பாலத்தை கடந்து நடப்பது ஆகும்.                                                                                                                                                                                                                                        இந்த பாலத்தின் ஒரு கரையில் அழகான கிருஸ்தவ ஆலயம் உள்ளது. பாலத்தின் வயது ஆலயத்திற்கும் இருக்க வேண்டும். அதன் தோற்றம் ஒரு கப்பல் போன்று இருக்கும்.  வெளிப்புற சுவரில்  பரலோக அன்னை உயிர்ப்பது போன்ற ஒரு சித்திரம் தீட்டியிருக்கும். அந்த கோயிலின் ஒரு ஓரத்தில் இருந்து நோக்கினால் பாலத்தில் நடந்து செல்லும் மனிதர்களை காணலாம். பாலத்தின் அடியில் நடமாடும் மக்களையும் காணலாம்.  வெள்ளப்பெருக்கு வேளையில் அடித்து செல்லப்படும் வீடுகள் மிருகங்கள் ஏன் மனிதர்கள் கூட காணலாம்.                                                                                                                                                                         
அந்த ஆலயத்தின் உறுப்பினர்கள் என்பவர்கள் தோட்ட தொழிலாளர்கள் வியாபாரிகள்,  கொஞ்சம் மலையாள சகோதரர்கள்.  மலையாள மக்கள் லாட்டின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் வருவதை பெரிய பெருமையாக கருதுவதில்லை. அவர்கள் இன சிறப்பை, பரம்பரையை எடுத்து சொல்லும் ஆலயங்கள் நிச்சயமாக அது சிரியன் கத்தோலிக்க தேவாலயமோ அல்லது யாக்கபட் ஆலயமாகத்தான் இருக்க இயலும்.  வாரம் ஒரு ஞாயிறு தமிழ் திருப்பலி விழாக்களின் தமிழ் பாதிரியார்களின் செப வழிபாடு என்ற ஒரு சிறு சலுகைகளுடன் இந்த ஆலயத்தின்  கீழ் தமிழர்களும் கலந்து வந்தனர். அதிகாரத்தின் படிகளில் தமிழர்கள் வர முயல்வதில்லை. அப்படி வரும் ஒரு சில தமிழர்களும் ஜாதியின் பெயரால் வசதி வாய்ப்பின் பெயரால் தனித்து தனி தனி துருவமாகவே நிற்க கூடும்.                                        ரோட்டை வீதி கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்ததும் முதன் முதலாக எடுத்த முடிவு கடைகளை அப்புறப்படுத்துவது ஆகும். அப்படி கடைகளை அப்புறப்படுத்தினால் தேயிலத்தோட்ட தொழிலாளர்களை போன்றே பல மூன்று தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் வியாபாரிகளும் தங்கள் இடத்தை விட்டு நகர நிர்பந்திக்கப்படுவர்.  ஊர் உலக வாயை மூடும் நிகழ்வே குருசடியை இடிப்பது ஆகும். இந்த குரிசடியை இடித்தால் கொஞ்சம் பின்னால் தள்ளி இன்னொரு குருசடி கட்டுவது ஆலயத்திற்கு பெரிய பிரச்சினை ஆகாது. ஆனால் கடைகள் இடிக்கப்படும் போது கடை வியாபாரிகள் அங்கிருந்து குடிபெயர வேண்டும் தங்கள் வாழ்வாதாரத்தையை இழந்துள்ளனர்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களை புறம் தள்ளி ரோட்டை விரிவடைய வைப்பதிலா உள்ளது. கடந்த 30-40 வருடமாக அரசியல் நடத்திய கட்சிகள் எங்கள் ஊருக்கு என்ன செய்துள்ளது. வண்டிப்பெரியார் மக்கள் உதவியுடன்  சட்டமன்ற உறுப்பினாராக ஒருவர் 3 தடவை ஜெயித்து அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்னொரு கல்லூரி பேராசிரியரோ தமிழர்களின் ஓட்டு உதவியுடன் பார்லிமென்றின் சபாநாயகராக அலங்கரித்து வருகின்றார். வண்டிப்பெரியாரை சுற்றி சுற்றி வந்து அரசியல் நடத்தி இன்று கேரளா அரசியல் உச்ச வட்டத்தில் இடம் பிடித்து இருக்கும் மந்திரியும் உண்டு.                                                                                                                                                                                       

ஆனால் எங்கள் ஊரில் இன்னும் உருப்படியான ஒரு கல்லூரி இல்லை.  ஒரு கல்லூரி வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கு ஏக்கர் வைத்திருக்கும் எஸ்டேட் அதிபர்களிடம் கேட்காது, பொது மக்களிடம்  இடம் தாருங்கள் கல்லூரி தருகின்றோம் என்பர். கோட்டயம் போன்ற பகுதியில் கூட தமிழர்கள் ஓட்டை குறி வைத்து தமிழர்கள் நலம் பற்றி பேசிகிறவர்கள் தமிழர்களை மக்களாக கொண்ட ஊரைப்பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.  இலங்கையுள்ள மலையக தமிழர்களுக்கு உலக அளவில் ஓர் அடையாளம் உண்டு. ஆனால் தமிழ் கேரளா மலை தேசத்தவர் அடையாளமே அற்று அழிந்து கொண்டு இருக்கும் சூழலில் தான் உள்ளனர். மதம், அரசியல், பணம், இனம் சேர்ந்து ஒரு பக்கவும் வாழும் உரிமையே மோசம் போகும் மக்கள் இன்னொரு புறவுமாக எங்கள் ஊர் தலை விதி எழுதப்பட்டுள்ளது. 

1 comment:

  1. கேரளத் தமிழனின் உள்ளத்தின் வலி உங்கள் பதிவில் இழையோடுகிறது. இன்னும் இதுபோன்ற பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்

    ReplyDelete