22 Mar 2015

மனிதம் மரிக்கின்றது!

பாடசாலையின் முதல்வரான 72 வயது அருட் சகோதரி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது மிகவும் கொடூரமான நிகழ்வு. பாலியல் வல்லுறவு என்பது எந்த பெண்ணாலும் ஏற்று கொள்ள இயலாதது. ஆனால் முதி வயதில் இருக்கும் ஒரு பெண்ணை அவரின் அடையாளத்தை மதிப்பை சிதைக்கும் நோக்குடன் நடந்தேறியுள்ளது. 
 இந்தியாவில்  இச்சம்பவம் நடைபெற்றதை பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லைஉலகில் மிகவும் ஆபத்தான   டெல்லி நகரை தலைநகரமாக  கொண்டவர்கள்.  தென் ஆப்பிரிக்கா அமெரிக்காவிற்கு அடுத்த படியாக பாலியல் வல்லுறவு நடக்கும் மிகவும் மோசமான நாடுகளில் மூன்றாவது இடத்தை  சேர்ந்தவர்கள். நிமிடத்திற்கு 20 பேர் பாதிப்பிற்கு உள்ளாகுவதாக தரவுகள் தெரிவிக்கின்றது.

 ஆனால் பொதுவாக பெண்கள் தாக்கப்படும்  காரணமாக சொல்லப்பட்டது பெண்கள் அறைகுறை ஆடையுடன் நடந்து தங்கள் இச்சயை தூண்டி விடுவதால் தான், வீட்டில் இருக்க வேண்டிய பெண்கள்  இரவில் தெருவில் நடைமாடுவதால் என பல கருத்துக்களை மழை போல் சொரியும் வேளையில் துறவி உடையில் இருந்த வயதான பெண்மணியை தாக்குவதற்கு எந்த உணர்வு இவர்களை தூண்டியது என நாம் அறிய வேண்டியுள்ளது.

 இளம் வயது கல்லூரி மாணவியை தாக்கியவர்கள் இந்தியாவின் உலகமயமாக்கலின் விளைவாக உருவான புரக்கணிக்கப்பட்ட சேரி போன்ற இடங்களில் குடி இருந்தவர்கள், கல்வியறிவு அற்றவர்கள், குடிகாரர்கள் வேலைக்க்காரணங்களுக்காக குடும்பத்தை விட்டு , சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்து அடையாளமற்ற  உள்ளூர் அகதிகள் என பல அடையாளங்கள் இருந்தன.

 ஒரு சம்பவம் நடைபெற்றவுடன் கூப்பாடு போட்டு அடங்கி விடாது இந்த சமூகத்தை பிடித்துள்ள நோயை பற்றி ஆழமாக துருவ வேண்டியுள்ளது.   துறவி சகோதரி, ஒரு ஆசிரியையாக பணியாற்றுபவர் முதிய வயதில் இருந்தவர் என எந்த காரணவும் குற்றவாளிகளை பின் செல்ல வைக்கவில்லை. ஏற்கனவே உடன் படித்த மாணவிகளிடம்  தவறாக நடந்த மாணவருக்கு தண்டனை கொடுத்த காரணம் கொண்டு இவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ளது . பள்ளிக்கு வெளியில் வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டியிருந்துள்ளனர்.  இவர் காவல்நிலையத்திற்கும் புகார் அளித்துள்ளார். மேலும் அங்கு வேலை பார்த்த காவலாளிகளை வேலையை விட்டு நிறுத்தியதிலும் பிரச்சினை இருந்துள்ளது.

பெண்களை தண்டிக்க பாலியல் வல்லுறவு என்ற ஆயுதம் இந்திய கலாச்சாரத்தில்  புதிது அல்ல. சமீபத்தில் சார்கண்டு மாநிலத்தில் திருமணமான பெண்ணிடம் தவறான நடந்த ஆணின் தங்கையை; அப்பெண்ணின் கணவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளக்கப்படும் தண்டனை கிராம தலைமையயால் கொடுக்கப்பட்டது  நாம் தெரிந்ததே.  பழம் காலங்களிலும் போரில் தோற்ற அல்லது நாட்டில் கிளர்ச்சி செய்து தோற்றவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை வேற்று இனத்தவர்களுக்கு கொடுத்து  அந்த பெண்களின் தந்தை சகோதரர்கள், கணவனை அவமதிக்கும் வழக்கம் இருந்துள்ளதை வரலாற்றில் படித்துள்ளோம். ஆனால் இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண் என்பவர் இந்த சமூக வளர்ச்சிக்காக பொது நலனுக்காக தன் குடும்பத்தை தனக்கான உறவுகளை துறந்து துறவியாக வாழ்ந்து வந்தவர். குற்றவாளிகள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்றாலும் எந்த இனத்தை சேர்ந்தவர் என்றாலும் ஒரு முதிர் வயது பெண்ணிடம்  நடந்து கொண்ட இக்கொடும் செயல்  . வருந்ததக்கது.

தொடர்ந்து சம்பவிக்கும் நிகழ்ச்சிகளை அவதானிக்கும் போது  இந்திய ஆண்களுக்கு ஏதோ ஒரு மரபணு மாற்றம் நிகழ்ந்து வருவதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மாறி வரும் சமூக அமைப்பா அல்லது புரக்கணிக்கப்படும் மக்களின் எதிர் வினையா அல்லது உணவு பழக்க முறையால் ஏற்படும் ஆண்மைக்குறை சிக்கலா என்றும் நோக்க வேண்டியுள்ளது.

ஒரு காட்டமான கருத்தை பகிர்வதாலோ தண்டனை கொடுப்பதாலோ இது போன்ற நிகழ்ச்சிகளை தடுக்க இயலுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற குற்றவாளிகளில் குடும்ப பிண்ணனி மன உளவியல் நிலையை பற்றி ஆராய்ந்து தகுந்த முன் எச்சரிக்கையில் இறங்காவிடில் பெறும் ஆபத்தை தடுக்க இயலாது.


பல நினைப்பது போல பெண்- ஆண்கள் கல்வி பெறுவதாலோ விழிப்புணர்வு பெறுவதாலோ எந்த முன்னேற்றவும் ஏற்பட போவதில்லை. அடிப்படையாக சமூக அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை புரிதல் வர வேண்டியுள்ளது. மேலும் குற்றத்தை சில குற்றவாளிகளில் மட்டும் ஒதுக்காது இந்த மனநிலைக்கான காரணம் என்ன என்ற ஆராய்ந்து அறிவது மூலம் உணவு முறையில், வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவது மூலம் மடுமே தீர்வு காண இயலும். பெண்ணியம் சார்ந்த பெண்ணியல் கருத்தியல் போன்றவை இது போன்ற சிக்கலான ஆண்களை தடுத்த நிறுத்த உதவாது.

குடும்பம் என்ற அடிப்படை சமூகம் மேம்படுத்த வேண்டும். குடும்பம் என்ற அமைப்பில் வன்முறை, நம்பிக்கை இன்மை, தன்நலம்,  மலிந்து கிடக்கின்றது.  அன்பு என்ற உயரிய நிலை குடுமபத்தில் கூட இல்லாத  சூழல் தான் உள்ளது. இவையும் கயவர்கள் உருவாக காரணமாகின்றது.  அடிப்படையில் வன்முறையை அனுபவித்த, வன்முறையால் வளர்க்கப்பட்ட  நபர்களால் திரும்ப இச்சமூகம் இதே வன்முறையால் பாதிக்கப்படும் போது அது ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருமாறுகின்றது. இந்தியாவில் விவசாயத்தின் அழிவு குடும்பம் என்ற அமைப்பின் உடைவுக்கு காரணமாகினது. குடும்பம் என்ற அமைப்பு சிதறியது பல தனி நபர்களின் மனம் உடைய காரணமாகியுள்ளது. தனி நபர்களின் நிலை இது போன்ற சம்பவங்களில் பிரதிபலிக்கும் போது அது சமூகத்திற்கு  ஒரு பெரும் பாதிப்பாக உருவாகின்றது.                                                இனியும் குற்றவாளிகள் நீதிபீடத்தின் முன் கொண்டு செல்லவில்லை. இந்த மாநிலத்தை ஆட்சி புரிவது ஒரு பெண் தான். இச்சூழலில் இந்த சம்பவத்தை கிருஸ்தவ கன்னியக மடம் மன்னிப்பு, பிரார்த்தனை என்று மட்டும் பார்க்காது தங்கள் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் வேண்டியுள்ளது. உலகின் மாற்றத்தை இன்னும் புரிந்து கொள்ளாது 30 வருட காலசக்கிரத்தின் பின் நின்று நோக்காது தங்கள் சேவையை பாதுகாப்புடன் முன் நடத்த முன்வர வேண்டும். . இச்சம்பவம் அரசியலாக, உரிம மீறலாக ஒரு மதத்திற்கு நேரான தாக்குதல் என்பதையும் மீறி மனிதம் மரிக்கின்றதா என சீர் தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

3 comments:

  1. அருமையான ஆழமான கருத்துக்கள். இது ஒரு உளவியல் சிக்கல்தான். உங்களின் இந்த வரிகளைப் பற்றி (குடும்பம் என்ற அடிப்படை சமூகம் மேம்படுத்த வேண்டும். குடும்பம் என்ற அமைப்பில் வன்முறை, நம்பிக்கை இன்மை தன்நலம், மலிந்து கிடக்கின்றது. அன்பு என்ற உயரிய நிலை குடுமபத்தில் கூட இல்லாத சூழல் தான் உள்ளது. இவயும் கயவர்கள் உருவாக காரணமாகின்றது. அடிப்படையில் வன்முறையை அனுபவித்த, வன்முறையில் வளர்ந்த நபர்களால் திரும்ப இச்சமூகம் இதே வன்முறையால் பாதிக்கப்படும் போது அது ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருமாறுகின்றது. இந்தியாவில் விவசாயத்தின் அழிவு குடும்பம் என்ற அமைப்பின் உடைவுக்கு காரணமாகினது. குடும்பம் என்ற அமைப்பு சிதறியது பல தனி நபர்களின் மனம் உடைய காரணமாகியுள்ளது. தனி நபர்களின் நிலை இது போன்ற சம்பவங்களில் பிரதிபலிக்கும் போது அது சமூகத்திற்கு தரும் ஒரு பெரும் பாதிப்பாக உருவாகின்றது.) நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பே இல்லை. மிகப் பிரமாதமான கருத்துக்கள்.

    ReplyDelete
  2. பின்னூட்டம் ஊடாக என் சிந்தனையை உற்சாகப்படுத்திய தோழர் கவிப்பிரியன் அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் மகிழ்ச்சிகள்

    ReplyDelete
  3. வருத்தப்பட வைக்கும் நிகழ்வுகள். பின்னோக்கிப் போவது என்று நிற்குமோ?

    ReplyDelete