27 Feb 2014

பெண்ணே உன் நிலை தான் என்ன?


உமா மகேஸ்வரி மரணம் பெண்கள் உலகை நடுங்க வைப்பது சிந்திக்கவைக்க வேண்டியது. ஒரு புறம் கொடூரத்தின் உச்சம் மறுபுறமோ கொடும் புறக்கணிப்பின் நிலை!  சமூக பண்பாட்டு சூழல், லாபம் மட்டுமே கண்ணோக்கும் வர்த்தக நிறுவனக்களின் அலட்சியம் என இந்த நிகழ்ச்சி மனித மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டியது; சிறப்பாக தமிழக அரசின்  கண்ணை திறக்க வேண்டியது.

இப்பெண் காணாமல் போய் விட்டார் என்ற போது காவலர்கள் காதலர்களை தேடவும் அலுவலம் உடன்பணியாற்றுபவர், தெரிந்தவர் தான் செய்திருக்க கூடும் என பல ஊகாபோகங்களுடன்  ஒரு இளம் பெண்ணை சந்தேகப் பார்வையும் இளக்கார தொனியிலும் தான் நோக்கினர். ஒரு மதிப்பு மிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறவர்; தந்தையில் புகார் பெற்றும் போலிஸ் துரிதமான தேடுதலை முடுக்கவில்லை. அவர்கள் சந்தேகம் முழுதும் இளம் பெண், அதுவும் வேலைக்கு போகும் பெண், திருமணம் ஆகாதவர் என்ற குறுகிய பார்வையிலே இருந்தது. குற்றத்தை தடுக்க இயலாது போயிருந்தாலும் அந்த உடலைக்கூட கண்ணியமான முறையில் பெற்று கொடுக்க இயலவில்லை என்பது நம் சமூக பாதுகாப்பு அற்ற தன்மையை தான் காட்டுகின்றது. எல்லாம் முடிந்து 10 நாட்களாகி விட்ட நிலையில் இவர்கள் புலணாய்வு திறமையை பறக்கும் ஆளில்லா விமானம், ஏடிம் வங்கி என புல்லரிக்கும் கதைகளை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கின்றனர். பெற்றோருள்ள, கல்வியறிவு பெற்ற வேலையிலுள்ள பொறியாளரான பெண் நிலையை இவ்வகை என்றால் சாதாரண தெருவோர பெண்கள் நிலை என்னவாக இருக்கும்!

 இரவு நேரம் தனியாக பாதுகாப்பாக செல்ல தகுந்த வழியா? என்று சிந்தித்து அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்று கிளம்பி இருக்கலாம். அல்லது  இவர் நண்பர்களிடமோ பெற்றோரிடமோ தன் நிலத்தகவலை சரியான நேரம்  அறிவித்திருந்தால் தேவையற்ற ஊகங்களை தவிர்த்து தேட இயன்றிருக்கலாம்.  இளம் வயதில் வேலைக்கு போகும் இவ்வித பொறியாளர் பெண்களுடன் சில காலம் தங்கியிருந்து அவர்கள் தினசரி வாழ்க்கையை காணும் சூழல் எனக்கிருந்ததால் என்னை இச்சம்பவம் மிகவும் நிலகுலைய செய்தது. 

பொறியாளர் படிப்பே மிகவும் கடினமானது. மிகவும் அறிவாற்றலுள்ள பெண்கள் குழைந்தைகளை, பொறியாளர்களாக உருவாக நேரடியான விருப்பம் இவர்களுக்கு உள்ளதோ இல்லையோ காளான் போன்று முளைத்த பொறியல் கல்லூரியில் இவர்களை சேர்த்து கொள்ளவும் குடும்ப கவுரவத்திற்கு என பெற்றோரும் படிப்பிக்க ஆவல் கொள்கின்றனர். பல பெண் குழந்தைகளால் இந்த படிப்பை எளிதாக படித்து கரையேற முடிவதில்லை. மேலும் இவர்கள் பாடத்திட்டத்திலும் இவர்களை சிறந்த இயந்திர மனிதர்களாக மாற்ற கொடுக்கும் உற்சாகம் அவர்கள் உடல் உளவியல் நலனில் கொடுப்பதில்லை. பல பொறியாளர் பெண்களுக்கு சமூகத்தை பற்றிய பெரிய புரிதல் இல்லை. இதனால் தான் பாட்டு பாடி கிண்டல் அடித்தவன் அவன் தரம் என்ன எச்சூழலில் வாழ்பவன் என பார்க்காது  செருப்பை கழற்றி அடிக்கும் உளவியல் கொடுத்ததும். என்ன தான் பொறியியல் வல்லுனர்கள் ஆகினும் சாதாரண மனிதர்களுடன் வாழ தகுந்த சில பாட திட்டங்கள் அவர்களுக்கு புகுத்துவதும் நல்லது.


இக்கால பெண் உடை நடையில் "மாடேன்" ஆக இருந்தாலும் அவர்கள் அவர்களாக வளருவதற்கான தளங்களும் குறைவு. பல பொறியாளர் பெண்கள் பெற்றோர்களும் படித்தவர்கள் வசதியானவர்கள்  என்பதால் இவர்களை கைபேசி ஊடாக 'ரிமோட் controll' போன்று தங்கள் வளையத்திற்குள் வைத்துள்ளனர். ஒரு சிறு நோய் வந்தாலோ ஏன் தங்கள் துணி மணிகளை கூட சுத்தமாக வைக்க தெரியாதவர்களாக குழந்தைகள் போன்றே வளர்க்கப்படுகின்றனர். இவர்களாக தங்களை வளர்த்து கொள்ளவும் நேரமோ பொறுமையோ இல்லை.  வாரம் ஒரு தேற்வு அதன் போட்டி என இவர்கள் 4 வருடம் உருண்டு ஓடுகின்றது. 5 வருடம் முன் 30-40 ஆயிரம் என்று ஆசை காட்டி ஆள் பிடித்து வேலை கொடுத்த நிறுவனங்களும் இவர்கள் எண்ணம் பெருகப் பெருக 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் முதலே கொடுக்கின்றனர்.  வேலையில் கொஞ்சம் சோடை போனாலும் வேலை போய் விடும் என்ற சூழலில் தினம் 10 முதல் 14 மணி நேரம் உழைக்கின்றனர். இவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளோ உணவோ போதிய சத்தோ சுகாதாரமோ ஆனது அல்ல. இவர்களுக்கு விடுமுறை என்பது ஞாயிறு மட்டுமே. இவ்வளவு சிக்கலிலும் வேலையை விட மனம் வருவதில்லை என்று மட்டுமல்ல முடிவதில்லை. மிக பெரும் கல்லூரி கட்டணத்தில் படித்த இந்த இளம் பெண்கள் தலையில் படிப்பு கடனும் இருக்கும். இவையும் மீறி சில பெற்றோர்கள் இவர்கள் இங்கு கஷ்டப்படுவதை ஊருக்கு வரும் போது கரைவச்ச சேலை வாங்கி வா, தம்பிக்கு பீஸ் கட்டனும் என்ன போனே எடுக்க மாட்டுதே என்ற திட்டு வேற.

உற்றோர் உறவினர் இல்லாத இந்த சென்னை பட்டிணத்தில் அவர்களுக்கு ஒரே பொழுது போக்கு சரவண ஸ்டோரில் போய் பர்சேஸ் பண்ணுவது இன்னும் பல பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது. . வயதில் திருமணம் என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்கா இயலாத அளவிற்கு சூழலின் விதியில் தள்ளப்படுகின்றனர்.

ஒரு காலம் 6 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியில் அனுமதிக்காத பெற்றோர் இன்று  சமூக அந்தஸ்து கருதி ”என் பொண்ணும் வேலைக்கு போறா”, ”அதும் சென்னையில் வேலையில் இருக்கிறா” என்பதை பெருமையான உள்ளத்துடன் ஏற்று கொள்கின்றனர். இங்கோ வேலையிடத்தில் நெருக்கம், தங்கும் இடத்தில் நெருக்கம், தனிப்பட்ட மனப்போராட்டம் என பாலாவில் படத்தில் காணும் தேயிலை தோட்ட கல்வியறிவு அற்ற பெண்களை விட கொடும் துயரில் இக்கட்டில் வாழ்கின்றனர்.

இந்த கொலையை நிகழ்த்தியிருக்கும் அன்னிய மாநில அந்த மனித மிருகங்கள் வாழ்க்கை அதை விட கொடுமையானது. தொழிலுக்காக தன் சொந்தம் பந்தம் வீடு உறவு எல்லாம் விட்டு வந்த இவர்கள் சென்னையிலுள்ள 50 ஆயிரம் தெருவோர மனிதர்களுடன்  இவர்களும் சென்னையை நிரப்பி விடுகின்னர். கேரளாவில் தமிழனை நடத்துவதையும் ஈழத்தை நம் சகோதர்கள் நடத்தப்படுவதையும் கண்டு இரத்த கண்ணீர் வடிக்கும் மனித நேயர்கள் கொண்ட மாநிலத்தில் பீகார், வங்காளக்காரர்களை மனிதர்களாகவே பார்ப்பதே இல்லை. மற்று மாநிலத்தான் வீட்டில் வளர்க்கும் நாயை விட கேவலமாக நடத்தப்படுகின்றான். பல உணவங்களில்  இதே மாற்று மாநில சிறுவர்கள் வேலை செய்கின்றனர். இந்தியனுக்கு துபாய் போல தமிழகம் துபாயாக  தெரிவதால் வந்து சேரும் இந்த மனிதர்கள் இங்கு மனிதர்களாக நடத்தப்படாது மிருங்களாக நடத்தி மிருகமாகவே மாறி போனவர்கள். சென்னையில் நடக்கும் கட்டிடப்பணியில் ஏற்பட்டிருக்கும் இவர்கள் வேலை நேர விபத்தில் இறந்தால் சொந்த தேசத்தை திரும்ப காண முடியாதவர்கள் என்று மட்டுமல்ல இங்கே அனாதை பிணங்களாக புதக்கப்படுகின்றவர்கள்.வழியோரங்களிலும் ஒதுக்குபுறங்களிலும் தங்கி தங்களுக்கான ஜீவனை நடத்துவர்கள்.

ஒன்று தமிழக அரசு இவர்களுக்கான மனித உரிமைகளை பெற்று தந்து  சகமனிதனாக வாழ வழி செய்ய வேண்டும்.  அல்லது இவர்கள் எல்லோரையும் தமிழக எல்கையை விட்டு விரட்ட வேண்டும். அல்லாது இது போன்ற துயருக்கு முடிவில்லை. இங்குள்ள தமிழர்கள் அனாதமாக அன்னிய நாட்டில் வேலை செய்ய எங்கோ இருந்து இங்கு அகதியாக இன்னும் சில மனிதர்கள் வேலை செய்ய என்பது முதளித்துவ சுரண்டல் மட்டுமே நாம் காணும் சமூகமெங்கும். அரசியல், சமூக, பொருளாதார என எல்லா சுரணலும் ஒன்றாய் ஆட்டிப்படைக்க பாவம் ஒன்றுமறியா பெண்கள் உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுகின்றன.Migrated labour

இதில் மிகவும் என்னை வருந்தச் செய்தது இந்த மீடியாவின் செய்தி ஆக்கமாகும். அந்த பெண்ணுக்கு நேர்ந்தது தன் உடன் பிறந்தவருக்கு அல்லது தனக்கு தெரிந்தவருக்கு நேர்ந்திருந்தால் வரிக்கு வரி விடாது எழுதி அவரின் மாண்பை கெடுக்க முனையுவார்களா? அப்பெண்ணின் பெற்றோர் உடன் பிறந்தோர், அறிந்தவர்கள் எல்லோரையும் அவமதிக்கின்றனர் விளாவாரியான செய்தியூடாக. செய்தியை நோக்கும் போது ஒரு கொடியவன் இன்னும் தூண்டப்பட்டு பெண் உடல் இவ்வளவு மலிவானதா என்ற எண்ணத்தில் தான் எட்டுவான். பத்திரிக்கை செய்திகளுக்கும் ஒரு  மனித நேயம் வேண்டும். அச்சடிப்பது இயந்திரமாக இருந்தால் கூட அதில் பணி செய்யும் தோழனே உனக்கும் அந்த கொடிய மிருகத்திற்கும் என்ன வேறுபாடு?  

9 Feb 2014

உலக திருமண நாள்-Feb 9



 உலக திருமண நாள்-Feb 9; திருமண பந்ததை உறுதிப்படுத்த அதன் தேவையை உணர, பலப்படுத்த இந்நாளை சிறப்பாக கொண்டாட வேண்டியது அவசியமாக உள்ளது. கடவுள் செய்த முதல் பணியே இரு மனிதர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கி மகிழ்ந்து வாழச் வழி செய்தது தான்.

திருமணம் என்ற பந்தத்தை நிலை நாட்ட எல்லா மதங்களும் போட்டி போட்டு செயலாற்றுகின்றது. துறவறம் போன்றவை மனிதனால் உருவாக்க பட்டிருப்பினும் திருமணம் மட்டுமே இயற்கையால்/ கடவுளால் நிறுவப்பட்டது. இரு வெவ்வேறு மனிதரின் எல்லா நிலையிலுமான வகையிலுமான சங்கமாக பார்க்கப்படுகின்றது. 
இந்திய காலாச்சார சூழலில் திருமணம் என்ற நிகழ்ச்சிக்கு பெரும் பணம் செலவழித்து நடத்தினால் கூட; அதை சிறப்பாக நடத்தி செல்ல தகுந்த வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை. பல மனிதர்கள் காதல் அளவுக்கு திருமண வாழ்க்கையை ரசிக்காது போனதற்கு காரணவும் இதுவே. திருமணம் என்பதை ஒருவர் இன்னொருவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள துணியும் போது உறவின் சுவாரசியம் மறைந்து போகிறது. காதலில் இருக்கும் ஈர்ப்பும் சுதந்திரவும் திருமணத்தில் பறி போகும் போது மனிதன் திருமணம் என்ற பந்ததை பல வகையாக குறை கூறி அதில் இருந்து தப்பி ஓடப் பார்க்கிறான்.

ஆனால் சரியாக புரிந்து, அணுகுபவர்களுக்கு இது போன்ற ஒரு மகிழ்ச்சியாக சுதந்திரமான இயல்பான, பாதுகாப்பான வாழ்க்கை முறை இல்லை என்றே கூற வேண்டும். காலங்கள் மாறியிருப்பினும் ஆண்-பெண் வில் பாரிய மாற்றமில்லை. குஷ்வந்த் சிங் சொல்லியுள்ளார் வீட்டிலுள்ள மாமியாருக்கு எப்போது பேரப்பிள்ளை தேவையோ அப்போது தான் மகனை மனைவி பக்கம் அணுக அனுமதிப்பார்களாம். இன்று நவ நாகரீக வாழ்க்கையில் அவ்விதமான அடிமத்த பிடியில் இருந்து தப்பித்து நகரத்தில் தனிக்குடித்தனம் நடத்தும் குடும்பத்திலும் மனைவியை பற்றி கணவர் கூறுகின்றார் “சினிமாவுக்கு அழைத்தால் கூட வருவதில்லையாம். காரணம் தினம் வேலைக்கு போகும் பெண் அந்த ஒரு நாள் அடுத்த வார அலுவல் வேலைக்காக தன்னை தயார்ப்படுத்தும் போது தங்கள் திருமண உறவை மறந்து போகின்றனர்.

இன்று வேலை போன்ற காரணங்களால் பிரிந்திருக்க வேண்டிய சூழலில் வெறும் தொலைபேசிதான்  திருமண பந்ததை காத்து வருகின்றது. இவையும் முன்னேற்றம் என்ற பெயரில் நுழைந்த பேராபத்து தான். “தனி நபர் முன்னேற்றம்” என்ற பெயரில் திருமணத்தை பற்றிய /கணவன் மனைவி உறவை பற்றி தவறான கீழ்த்தரமான சிந்தனை இப்பந்தத்திற்கு மேலும் அச்சுறுத்தல் ஆக மாறுகின்றது; பகடி என்ற பெயரில் பல தவறான கருத்தை வளர்த்து வைத்துள்ளனர். 
ஆண் பெண் சமம், போன்ற கருத்தியலும் திருமண பந்ததின் சுவையை குறைக்கின்றது. வெற்றிகரமான திருமண உறவை நாடுபவர்கள் நானும் நீயும் சமம் என்பதை நிலைநாட்ட முயலாது இருவரும் வேறுபாட்டில் தங்களை  சமரசப்படுத்தி கொள்ளும் வாழ்க்கையாக காண வேண்டும். சிலரோ, எளிதாக பாலியல் உறவை வைத்து கொள்ளும் இயக்கமாகவும் காண்கின்றனர். வெறும் ஊதியம் பெறும் அலுவலகத்தில் மற்று மனிதர்களுடன் அனுசரித்து போக பழகிய மனிதர்கள் ஒரே வீட்டில் வசிக்கும் இருவர்ன் ஆரோக்கியமான உறவை பற்றி எண்ணி பார்ப்பதில்லை. அன்பு பாசம் என்பதை அடித்தளமாக எடுத்து கொள்ளும் போது அங்கு ஆள, ஆளப்பட வாய்ப்பில்லை.



என்னதான் வேலை என்றாலும் கணவன் மனைவி தங்களுக்கு என சில மணி நேரங்களை நிச்சயமாக ஒதுக்க வேண்டும். அங்கு தங்கள் பெற்றோருக்கோ ஏன் அன்பு நமது பிள்ளைகளுக்கோ கூட இடம் இல்லை. அந்த நேரம் என்பது  நடைநேரமாக இருக்கலாம், சாப்பாட்டு நேரமாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட நேரம் திறந்த உரையாடலுக்கு தேவை. ஆனால் பல வீடுகளில் பெண்களாகட்டும் பக்கத்து வீட்டு பெண்ணிடம் உறவினர்களிடம் உரையாடுவதில் காட்டும் அக்கறை, ஆண்களோ நட்பில் மயங்கி கிடக்கும் சூழலில் தங்கள் குடும்ப உறவை மறந்து போகின்றனர்.

பல திருமணம் பந்தம் பணத்தாலும் வசதி வாய்ப்பு எண்ணத்தாலும் உருவாகுவதால்; வேலை, அழகு, பணம் கவுரவம் நுழையும் போது உண்மையான மகிழ்ச்சி கிடைக்கபெறாது  இவ்வுறவின் சாரம் அற்று போகின்றது. பல கணவர்கள் தங்கள் மனைவியை பற்றி புறம் பேசுவதும் பெண்களோ தன்னை சார்ந்திருப்பவர்களிடம் கணவரை குறை கூறி தங்களை தியாக பிம்பங்களாக பறைசாற்றவதையும்  சலித்து கொள்வதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
பெண் எப்போதும் ஆணிடம் இருந்து  கருதல், புரிதல், மதிப்பு, ஆராதனையை எதிர் பார்க்கின்றாள். அதுபோலவே ஆண் பெண்ணிடம் இருந்து நம்பிக்கை, ஏற்று கொள்ளுதல், பாராட்டுதல், உற்சாகப்படுத்துதல் எதிர் பார்க்கின்றான். இந்த பந்ததில் நீ கொடுத்ததை நான் திரும்பி தருவேன், நீ இப்படி என்றால் நான் அப்படி என்று இல்லாது இருவரும் போட்டி போட்டு கொண்டு அன்பை காதலை கொடுக்கவும் பெறவும் கடமைப்பட்டுள்ளனர்.
தற்கால பெண்கள் அலுவல ஆளுமையை வீட்டில் புகுத்தி மன அழுத்ததில் உள்ளாகாது குடும்ப வாழ்க்கையும் சமூக/அலுவலக வாழ்க்கையும் பிரித்து பார்க்க பழக வேண்டும். பெண்கள், கணவரின் அருகாமையில் உணரும் சுதந்திரம் மகிழ்ச்சி, நம்பிக்கை வேறு எங்கும் உணர இயலாது.திருமணம் சொர்க்கத்திலல்ல நம் எண்ணத்தில் நம் மனதில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.