7 Sept 2011

உங்கள் உயிர் யாரிடம்?


கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது நாகரிக உலகத்தில் மனிதநேயம் அற்ற செயல், பண்பற்ற காட்டு மிராண்டிதனம் என்ற வாதத்தின் அடிப்படையில் உலகில் 3ல் 2 பகுதி  இங்கிலாந்து ஆஸ்த்ரேலியா , ஜெர்மெனி போன்ற நாடுகள் உட்படும் http://blog.amnestyusa.org/deathpenalty/business-as-usual-for-death-penalty-outliers/ 139 நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்த போது; தற்போதும்  58 நாடுகளில் மட்டுமே நிலுவையில் உள்ளது.  இந்த கொடிய செயலை பின் தாங்கும் நாடுகளில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது சீனா அடுத்தது ஐந்தாவது இடத்தில் உள்ள உலக போலிஸ் என்று போட்டி போட்டு அநியாயம் புரியும் அமெரிக்க, அத்துடன் பாகிஸ்தான், இரான் போன்ற சில இஸ்லாமிய நாடுகளும், ஆத்மீயத்தின் ஊற்றாம் கருணையின் பிறப்பிடமாம் இந்தியாவும் ஆகும்.

1987 ஐக்கிய நாட்டு சபையில் மரண  தண்டையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்திற்க்கு வாக்கு எடுப்பு நடத்தி தோல்வி கண்ட போது மரண தண்டனை வேண்டும் என்று குரல் கொடுத்ததில் மகாத்மாவின் அஹிம்சை கொள்கை கொண்ட நம் இந்தியாவும் உண்டு என்பதே கசக்கும் உண்மை.   2000 ஆண்டில், மனித நேயர்களான 146 நாடுகளில் இருந்துள்ள 3.2 மிலியன் மக்கள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்து இட்ட மனு ஒன்றை ஐக்கிய நாட்டு சபை அன்றைய செயலாளர் கோபி அண்ணனிடம் சமர்ப்பித்துள்ளனர்.

1767 ல் Ceare Beccaria என்பவர் எழுதிய "குற்றங்களும் தண்டனைகளும்" என்ற கட்டுரை அமெரிக்க அறிவாளி வர்கத்தின் சிந்தனையை புரட்டி போட்டது.  இக்கருத்தாக்கத்தில் தாக்கம் கொண்ட  அமெரிக்க ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன்வெர்ஜீனியா மரண தண்டனைஎன்ற சட்டத்தையை மாற்ற  துணிந்தார்.  ஆனால் ஒரே ஒரு வாக்கால் இச்சட்ட மாற்றம் தோற்க்கடிக்கப்பட்டது.  19 நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்கர்களால் மரண தண்டனை ஒழிக்கப்பட்டாலும் ரஷ்யன் புட்சியில் பின் 1920 ல் மறுபடியும் மரண தண்டனையை  சட்டமாக்கியது துரதிஷ்டமே.   அமெரிக்காவில் சில மாகாணங்களில் மரண தண்டனை நிர்த்தி வைக்கப்பட்டுள்ளது, சில மாகாணங்களில் விஷ அறை, மின்சாரம், அல்லது மீதேல் ஊசியின் துணை கொண்டு மரண தண்டனை கொடுக்கின்றனர்.

சீனாவில் 17 ஆயிரம் நபர்களுக்கு மரண தண்டனை கொடுக்கபட்டுள்ளது. ஒவ்வொரு வருடவும் 100 மனிதர்களை தண்டனை என்ற பெயரில் அரசே கொலை செய்து வருகின்றதுஆள் கடத்தல், அரசுக்கு எதிராக கலகம் புரிதல், வருமான வரி ஏய்ப்பு செய்தல் ,மோசமான படம் தயாரிப்பது , இணைய குற்றங்களுக்கும்,  ஓரின சேர்க்கையளர்களுக்கும்  மரண தண்டனை உண்டு சீனாவில்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   இன்னும் பல இஸ்லாமிய நாடுகளில் ஆட்கள் கூடும் இடத்தில் கல்லெறிந்து கொல்வது துப்பக்கியால் சுட்டு கொல்வது போன்ற கொடூர முறைகளையும் கைய்யாளுகின்றனர்.                                                                                               
                                                                                                            மரண தண்டனை தேவை தான் என்று சொல்பவர்கள் சொல்லும் காரணங்கள் குற்றம் செய்தவர்கள் பெறும் தண்டனையால் மற்றுள்ளவர்களை பயமுறுத்துவதுடன், சட்டத்தை மீறும் மனிதர்களை சமூகத்தில் இருந்தே நிர்மூலப்படுத்துவது வழியாக மேலும் குற்றம் நடைபெறாது தடுப்பது, மனிதர்களை ஜெயிலில் அடைத்து காப்பதை விட செலவு குறைந்ததே  மரண தண்டனை போன்ற காரணங்கள் ஆகும்.

ஆனால் ஒரு குற்றத்திற்க்கு பதிலாக இன்னொரு குற்ற செயலா?, நிரபராதிகளும் தண்டிக்கப்படும் வாய்ப்புக்கள் உண்டு, எந்த சட்டமோ நீதியோ சக மனிதனை கொல்லுவதை ஏற்று கொள்ள இயலாது, மேலும் குற்றம் என்பது சமூகம் மற்றும் மரபணு மாற்றங்களாலும் நிகழ்வதால் குற்றவாளியை மட்டும் குற்றத்தின் காரணமாக கற்ப்பிக்க இயலாது என்ற காரணங்களால் மரண தண்டனை தேவையில்லை என்று பெரும் பகுதி மக்கள் குரல் கொடுக்கின்றனர்.

நாம் காத்திரமாக சிந்திப்போமானால் ஒரு அரசியல் தலைவனை கொல்லும் போது காட்டும் அக்கறை,  அரசியல் அமைப்பு சட்டத்தால் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் கொல்லப்படும் போது எடுத்து கொள்ளப்படுவது உண்டா என்பதே!  போபால் விஷவாயு விபத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட போதும், கேரளாவில் ஒரு முழு கிராமமே பூச்சி கொல்லி மருந்து பயண்பாட்டால் உடல்- உபாதைகளால் மரணத்தை தழுவ க காரணமான அதிகார வர்கத்திற்க்கு தண்டனை கொடுக்க முன் வருமா அரசியல் சட்டம்?;அல்லது சொந்த நாட்டு மலைவாழ் மக்களை ராணுவம் உதவி கொண்டு அழிக்கும் அதற்க்கு பக்கபலமாக இருக்கும் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளை தண்டித்துள்ளதா நம் சட்டம்? மேலும் ஊழலால் நாட்டில் மக்கள் வறுமைக்கும் சமூகத்திற்க்கு எதிரான குற்றங்களுக்கு திரும்பும் அவல நிலைக்கு காரணமாகும் ஆளும் வர்கத்திற்க்கு சட்டத்தால் தண்டனை உண்டா?

அரசியல் அமைப்பு சட்டம் 21  ன் படி வாழும் உரிமை கொடுத்துள்ள அரசு தண்டனை என்ற பெயரில் உயிரை பறிப்பது எவ்விதத்தில் நியாயமாகும் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.   இப்படியாக ஒரு கொலைக்கு பதில் இன்னொரு கொலையான மரணதண்டனை என்று ஒரு நாடு முன் மாதிரி காட்டி விட்டால் கிராமங்களிலும் பட்டி தொட்டிகளிலும்  நடக்கும் பழிவாங்கும் கொலைகள் பற்றி என்ன சொல்வது?

இதில் மற்றொரு சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால் 3 பேரும் தமிழர்கள் என்ற போது வந்த உணர்வு 2005 ல் கொல்கத்தாகாரர் சாட்டார்ஜியை தூக்கிலிட பட்ட போதே வந்திருந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்திருக்கலாம்.  நம் தமிழர்களின் இந்த குறுகிய மனம் தான் பல நல்ல செயல் ஆக்கத்தை தடுக்கின்றது. தமிழன் என்று அல்லாது எந்த ஒரு மனிதனும் இந்த மாதிரி இழிய சாவை தர கூடாது என்பதில் ஆற்வம் கொண்டிருக்க வேண்டும். சாட்டார்ஜி கூட தன் மரண வாக்கு மூலத்தில் "அடுத்த ஜென்மத்தில் நான் பணக்காரனாக பிறக்க வேண்டும். நான் ஏழை என்பதால் தான் என் நியாயம் கேட்கப்படவில்லை" என்று கூறி விட்டு 14 வருடம் கடும் தண்டனை அனுபவித்த பின்பு அவரின் மனைவி வயதான தாயின் வேண்டுகோளையும் கணக்கிலெடுக்காது உயிரை பறித்தனர்.
 
மகாத்மாவின் “பாவியை வெறுக்காதே பாவத்தை வெறு” என்ற கூற்றுக்கு எதிராக  குற்றவாளியை நாம் வெறுப்பதால் என்ன பலன் கிடைக்க போகின்றது.  வெறும் 18 வயது 6 மாதம் நிரம்பிய வயதில் ஜெயிலின் படிகள் கண்ட பேரறிவாளன் போன்றோருக்கு 20 வருடம் தனிமை சிறையிலில் உடலாலும் மனதாலும் தண்டனை அனுபவித்த பின்பு மறுபடியும் தூக்கு தண்டனை வழியாக உயிரை பறிப்பதில் அரசியல் பழி வாங்கள் தவிற எந்த நியாயவும் இருக்கபோவதில்லை.

ராஜிவ் காந்தியின் கொலை அரசியல் காரணங்களுக்காக நிகழத்தப்பட்டது. இன்றளவும் யாரால் நிகழ்த்தப்பட்ட்து என்று ஒரு முடிவுக்கு வர இயலாத சூழலில்  மூன்று உயிர்கள் அதுவும் பண, அரசியல் பலம் அற்ற ஏழை கூலிகளை கொலை செய்வதால் குற்றம் மறைந்து விடுமா?  ஆட்டோ சங்கர் தண்டனையிலும் இதுவே நிகழ்ந்த்து பெண்ணை கற்பழித்து கொலை செய்தது சமூகத்தில் பண-அரசியல் பலமுள்ள நபர் என்று தெரிவித்த பின்பும் பெண் ஏஜென்றாக செயல்பட்ட ஆட்டோ சங்கர் மட்டுமே தூக்கிலேற்றப்பட்டார். ஆனால் அந்த கொலைகளுக்கு மூல காரணமாயிருந்த அதிகாரிகளோ அரசியல்வாதியோ தண்டிக்கப்படவில்லை.  இப்படியாக சமூகத்தில் குரலற்ற ஏழைகளையும் பின்பலன் அற்றவர்களையும் மட்டுமே தண்டிக்க நம் சட்ட்திட்டங்கள் என்றால் அதை புரக்கணிக்கும் காலம் நெருங்கி விட்ட்து என்பதை மட்டுமே தீர்வு.

 இத் தண்டனைகள் வழியாக சமூகத்தில் இருந்து குற்றவாளிகளின் அடையாளத்தை ஒழித்து விடலாம் என்றால் அது தப்பு கணக்கு என்பதே வரலாறு படிப்பிக்கின்றது. தன் கடைசி மரண வாக்கு மூலமாக 90 பக்கம் எழுதி படித்து விட்டு சென்ற காந்தியின் கொலையாளி நாதூராம் கோத்சே இன்றும் ஒரு ஹீரோவாக வணங்கப்படுகின்றார். அதே போல் முன் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையாளிகள் பியாந் சிங், கேயார் சிங், மற்றும் சுகதேவ் சிங் இன்றும் பஞ்சாபில் சிக்கு இனத்தின் இரத்த சாட்சிகளாக போற்றப்படுகின்றனர். அவர்கள் தங்கள் மரண வேளையில் தங்கள் செய்கைகளுக்கு வருந்தாது தங்கள் லட்சியம் நிறைவேறியுள்ளதாக கதைத்து விட்டே உயிரைவிட்டுள்ளனர்.                                                                                                                                                            ஒவ்வொரு கொலையாளியையும் திருத்தவே ஜெயிலுகள் இருக்க வேண்டும் ஒழிய உயிரை பறிக்க அல்ல. இங்கு உயிரை காப்பது என்பது நம் உரிமையே, அதற்க்கு பதில் கருணை என்று ஜனாதிபதியிடமும் கொல்லப்பட்ட நபரின் மனைவியிடமும் கேட்பதில் அர்த்தம் இல்லை. அப்படியாகில் சட்டவும் அதன் செயலாக்கவும் அர்த்தமில்லாது மாறுகின்றது என்பது தானே பொருள்!  ஒரு  உயிரை நம்மால் கொடுக்க இயலாத மட்டும் உயிரை எடுக்கவும் தமக்கு உரிமை இல்லை என்பதை தனி நபர்கள் மட்டுமல்ல அரசு இயந்திரமும் புரிந்து முடிவெடுக்க வேண்டும்.  

12 comments:

  1. அருமையான படைப்பு சகோதரி...தொடருங்கள்...

    ReplyDelete
  2. யார் என்ன புலம்பினாலும் உலகம் அதன் பாட்டில் போய்க்கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  3. மனதை நெருடும் பதிவு ...
    வாழ்த்துக்கள்
    என் சகோதரி ...
    அன்புடன்
    யானைக்குட்டி

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு, அலசல்

    ReplyDelete
  5. >மனிதர்களை ஜெயிலில் அடைத்து காப்பதை விட செலவு குறைந்ததே மரண தண்டனை போன்ற காரணங்கள் ஆகும்.

    ஆனால் ஒரு குற்றத்திற்க்கு பதிலாக இன்னொரு குற்ற செயலா?, நிரபராதிகளும் தண்டிக்கப்படும் வாய்ப்புக்கள் உண்டு, எந்த சட்டமோ நீதியோ சக மனிதனை கொல்லுவதை ஏற்று கொள்ள இயலாது,

    சிந்திக்க வைக்கும் வரிகள்

    ReplyDelete
  6. அருமயா சொல்லி இருக்கீங்க. நல்ல பதிவு.

    ReplyDelete
  7. கொலை யார் செய்தாலும் குற்றமே. அதை அரசாங்கமே செய்யுமானால் அது மிகப்பெரிய குற்றம். அதுவும் அரசியல் காரணங்களுக்காக நிகழும் தாக்குதல்களுக்கு மரண தண்டனை என்பது மிகக் கொடூரமானது. உலகின் பல பகுதிகளிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்ட மரண தண்டனைக்கு எதிரான குரல் இந்தியாவிலும் ஓங்கி ஒலிக்கட்டும். சிந்திக்க வைக்கும் கட்டுரை தந்தமைக்கு நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete
  8. இன்று 139 நாடுகள் மரணதண்டனை வேண்டாமென கூறுகின்றன. நீங்கள் 75 நாடுகள் என கூறியது கவனக்குறைவென எண்ணுகிறேன். சாட்டர்ஜியின் மரணதண்டனையோ, அல்லது இப்போதும் மரணதண்டனயை எதிர்நோக்கியிருக்கும் அஸாம் மாநிலத்தின் கைதிக்காகவோ தமிழ்நாட்டினர் போராடியிருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது தவறு. தமிழனுக்காக தமிழன் குரல் கொடுப்பது தான் சரி. தமிழ் இன மக்களை, இனப்படுகொலை செய்ய இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ, தளவாட, பொருள் உதவி செய்தபோது, அதைத்தடுத்திட காட்டுக்கத்தல் கத்திய தமிழர்களுக்காக எந்த தேசிய இனம் குரல் கொடுத்தது? உனக்கு வந்தால் உனக்கு என எண்ணும் இந்தியாவில் தமிழர்களுக்கு விடுதலை கிடைத்தால் அதுவே நல்லது. மரணதண்டனை இல்லா தமிழகம் உலகின் பார்வையில் இடம்பெறும். உங்களது எண்ணம் சிறந்தது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  9. வழமை போல் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது..தொடராகவும் உள்ளது ......பாராட்டுக்கள் .ஆனால் அந்த மூவரையும் விடுதலை செய்யப் படும் வரை போராட்டம் தொடர வேண்டும் மரணதண்டனையும் முற்று முழுதாக ஒளிக்கப் படவேண்டும் .. நோர்வேயில் ஒரு பெண் மூன்று கொலை வழக்கில் கைது செய்து நிரூபிக்கப் பட்டுச் சிறைக்குச் சென்று 15 வருட சிறையை அனுபவித்து விட்டு வெளியில் வந்து வேலையுடன் சதாரண வாழ்வைத் தொடங்கி விட்டார் ... மக்கள் அவரைச் சாதாரணமாகவே பார்க்கிறார்கள் ..அவர் கிட்டத்தட்ட 15 வருடச் சிறையை அனுபவித்து விட்டார் ...இந்தியா எப்போ மனிதாபிமானத்தில் முன்னேறும்?

    ReplyDelete
  10. ஈரோட்டுக்கண்ணாடிSeptember 08, 2011 4:48 am

    சரித்திர சான்றுகளோடு,மனிதாபிமானத்தை மட்டும் மனதில் நிறுத்திய பதிவு!

    ReplyDelete
  11. நல்ல பதிவு. நிறைய கருத்துக்களை திரட்டி அழகாக எழுதியுள்ளீர்கள்.

    ஒருத்தனை கொல்வதுக்கு நாங்க யாருங்க. கடவுள் படைத்த உயிர். நல்லவனோ கெட்டவனோ உயிரை எடுக்கிற உரிமை சட்டத்துக்கு இருக்ககூடாது.

    ReplyDelete