27 Aug 2011

ரதிநிர்வேதம்- 1978-2011



இந்த வருடம் ஜூன் 2011 ல் டி.கெ ராஜிவ் குமார் இயக்கத்தில் கேரள திரை உலகில் ஆஹோஓஹோ என்று புகழ் மாலையுடன் வெளிவந்த படம் ரதிநிர்வேதம்.  மலையாள தொலைகாட்சி சானல்கள் தொடர்ந்து பேசி கொண்டிருந்த படம் இது, கிளாசிக் படம் என்று போற்றப்பட்ட படம் என்றதால் பார்க்கலாம் என்று  ஆவல் கொண்டேன்.  மேலும் இதே பெயரில் இதே கதையில்இதே திரைக்கதையில் 30 வருடம் முன்பு 1978 ல் ஜெயபாரதி நடிப்பில் வெளி வந்த  படத்தின் மறுபதிப்பே இப்படம் என்பதும் ஒரு கூடுதல் தகவல்.  

                                                                                                     படத்தின் கதை இப்படியாக சொல்லப்பட்டுள்ளது. கதைத் தளம் எஸ்டேட் ஏரியாவில் குடியிருக்கும்  இரு வீட்டு குடும்ப நபர்கள் மிகவும் பாசமாக  உறவினர் போல் பழகி வாழ்ந்து வருகின்றனர். ஒரு வீட்டில் இரணடு அக்கா தங்கைகள்  தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அக்காளின் கணவர் வெளிநாட்டிலும், தங்கை கணவர் ராணுவத்திலும் பணி புரிகின்றார்.  அக்காவுக்கு ஒரே மகன்.  இப்போது தான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் நாட்களை எதிர் நோக்கி இருக்கின்றான். தங்கைக்கு  2 குழந்தைகள்.  பக்கத்து வீட்டில் 26 வயதுள்ள  ஜெயபாரதி (ரதி) தகப்பன் இழந்த சூழலில் தாய் மாமா -அம்மா  பாதுகாப்பில் இருக்கின்றார். அக்கா அக்கா என்று பாசமாக பழகி வரும்  பக்கத்து வீட்டு பையனுக்கு  திடீர் என்று அக்கா மேல் காமம் வந்து விடுகின்றது.  தன்னை 2 வயது முதல் தூக்கி வளர்த்த அக்கா இப்போது உடை அணிந்திருந்தால் கூட நிர்வாணமாகவே தெரிகின்றார். சரியான தருணம் பார்த்து தன் காதலை  கொச்சையான தன் செயலால் அக்காவுக்கு தெரியப்படுத்துகின்றான். அக்காவும் பையன் தப்பாக வளர்ந்து விட்டான் என்று  சுதாரித்து ஒதுங்கி இருந்து கொள்கின்றாள். ஆனால் பையன் தன் கண்ணீரால் அக்கா நீ இல்லாவிடில் சாக போகிறேன் என்று அக்காவின் மனதில் மறுபடி இடம் பிடிக்கின்றார். அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கின்றார் அவருடைய விதவையான அம்மா!  பையனுக்கு கல்லூரிக்கு போகும் நாளும் வந்து விட்ட்து.  அக்காவை சந்தித்து 'நான் அடுத்த விடுமுறைக்கு வரும் முன்னே நீ உன் கணவர் வீட்டுக்கு போய் விடுவாய்'; அதனால் இன்று இரவு ஒரு குறிப்பிட்ட இடம் வந்து சேர  அக்காவிடம் வேண்டுகின்றான். அக்காவும் இடம் வந்து சேர மழையும் இடியும் சேர்ந்து வர முதலில் அக்கா மறுத்தாலும் இரண்டு பேரும் ஒன்றாக கலந்து விடுகின்றனர்அக்கா பையனிடம் விடை பெற்று வீடு திரும்ப போகும் போது பாம்பு காலில் தீண்டி விடுகின்றது. அக்காவை மருத்துவ மனைக்கு கொண்டு போகின்றனர். அடுத்த நாள் காலை பையன்  கல்லூரிக்கு பேருந்தில் ஏற அக்காவை சுடுகாட்டுக்கு எடுத்து செல்கின்றனர். இதுவே காலம் சென்ற  பத்மராஜன் திரைக்கதையில், அமரர் அரவிந்தன் இயக்கத்தில் ரதிநிர்வேதம்என்ற பெயரில் 1978 ல் வெளிவந்த படம்.  

ஜெயபிரதாவுக்கு 26 வயது என்கின்றனர்  கதைப்படி. ஆனால் 36 வயதுக்கிற்க்கு மேல் அவர் முகம், உடல் காட்டி கொடுக்கின்றது. அக்கா என்பதை விட காட்சிகளால் சித்திஅம்மா போன்ற உருவத்திலே தெரிவதால் இருவரும் வரும் காட்சிகள் காண அருஅருப்பாக உள்ளது. பையனுக்கு வந்த காதலை அக்கா ஏற்று கொள்ளாத நிலையில் ஏன் இரவில் சின்ன பையனை நம்பி போனார் என்று கேள்வியாகவே உள்ளது.

                                                                           அடுத்தது கதையில் மையமே விடலை பருவ பையனினின் காதல் பற்றியதே அவனுக்கு அக்கா, கணவர் வீடு போகும் முன் அனுபவித்து விட்டு தான் கல்லூரி செல்லுவேன் என்று அடம் பிடிப்பதின் மனநிலை தான் விளங்க வில்லை.  விடலைப்பருவ காதல் இந்த அளவு வன்மம்  நிறைந்ததா? அது தன்னலம் அற்ற காமம் குறைவான பாச உணர்வு கொண்ட தெய்வீக காதலாக தானே இருக்கும் என பலருடைய அனுபவ கதைகள் கேட்க வைக்கின்றது.

                                                                    அக்காவும் சில அக்காக்களை போல் அணைப்பது போல் கட்டி பிடிக்கவோ, மறைவாக கிள்ளி வைக்கும் ரகமோ அல்ல.  ரொம்ப நல்ல அக்காபையான்னு தான் அழைக்கின்றார், பையனை ஒரு தாய் அன்புடன் தான் நேசிக்கின்றார். ஒரு போது கூட அக்காவுக்கு பையன், அந்த பார்வையில் தெரியவும் இல்லை.  இருந்தும் அக்காவை காணும் போது எல்லாம், அவர் உடை இல்லாது தெரிவதும்   அக்கா மனதை பார்க்காது உடலை மட்டும் பார்ப்பதும் அக்கா ஒன்றும் புரியாத வெள்ளைந்தியாக இருப்பது தான் நெருடலாக உள்ளது.  இந்த சூழலில் பையன் அழைத்தானாம் அக்காவும் போய் படுத்தாராம்.  இந்த கருத்து தான் பெண் உளைவியலுக்கு எதிரானதாகப் படுகின்றது.

மேலும் இப்படத்தை புகழ்ந்த பல ஆண்கள், இது எல்லா ஆண்கள் வாழ்விலும் நிகழும் சூழல் என்றும் அதை திரையில் கண்ட போது ஆனந்தம் கொண்டதாக சொல்லியுள்ளனர். ஆனால் பல ஆண்கள் முதல் காதல் அவர்கள் ஆசிரியைகள் பக்கத்து வீட்டு அக்காவாக இருந்த சூழலிலும் உடலே உயிர்என்று அலைந்திருப்பார்களா என்று இந்த விமர்சனத்தை வாசிக்கும் ஆண்கள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.
                                                                                                                                    மேலும் ஆண் பையன் வயதில் இப்படியாக சேட்டை செய்வான் என்றும் பெண் தான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என உரையாடல்கள் வழியாக ஆண்மகன்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். பெண்மையை அவர்கள் மனவலிமையை கொச்சைப்படுத்துவதாகவும் தான் உள்ளது.  அப்படியும் பெண்கள் உண்டு என்று இயக்குனர் காட்ட விரும்பினால் அக்கா பாத்திரபடைப்பில் மாற்றம் கொண்டு வந்திருக்க வேண்டும்.

அடுத்து இந்த  திரைப்படத்தை முடித்திருப்பது ஒரு பாம்பு சென்றிமென்ட் வைத்தே. அந்த பாம்பு  அப்பெண்ணை மட்டும் ஏன் கடித்தது பாம்பு கூடவா ஆணாதிக்க பாம்பு என்ற கேள்வி எழாது இல்லை.  சமூக நீதியின் படி தப்பு செய்த பெண் இனி பூமியில் உயிருடன் இருக்க கூடாது என்றும் ஆண் அதை ஒரு தூசி போல் தட்டி விட்டு அடுத்த வேலைக்கு செல்வதும் பெண் மேலுள்ள காலாகாலம் தொட்டுள்ள எண்ணமே நிலை நாட்டுகின்றனர்.  

திரைக்கதை, கதைத்தளம், கதாபாத்திரம் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் கதை ஓட்டையாகவே இருந்ததுகேரளா கிராமப்புறத்தில் இருக்கும் இரு வீடுகளை கதைத்தளமாக  கொண்டு இதே கதையை அப்படியே அதேபடியாக  நடிகர்களை மட்டும் மாற்றி 30 வருடம் கடந்து விட்ட நிலையில் ராஜிவ் மேனோன் இயக்கத்தில் அதே பெயரில் படமாக்கிள்ளனர்.  ஜெயபாரதிக்கு பதில் ஸ்ருதி மேனோன் என்ற நடிகை நடித்துள்ளார். ஜெயபாரதியை விட யதார்த்தமாக நடித்திருந்தார் இருப்பினும் படத்தில் சொல்லியிருக்கும் வயதை விட முதுமை காட்டியது. மேலும்  நடிப்பு திறமையுள்ள நடிகைகளின் உடலை வன்மையாக காட்டி கதையில் வரும் எல்லா ஓட்டைகளையும் மறைக்கலாம் என்று எண்ணுவது நல்ல யுக்தி அல்லபடத்தின் காலமாக 1978 என்றே காட்டப்படுள்ளது

காட்சி ஊடகம் வழியாக பெண் உடலையும், ஆண்-பெண் உடல் உறவையும் இதே போல் காட்சியாக எடுத்து பாலியல் பற்றியும் பெண் மனது பற்றியும் சமூக நிலை பற்றியும் எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாது எடுத்த இந்த படத்தை  மீடியா ஏற்று கொண்டு விளம்பரப் படுத்தியிருந்தாலும்; மக்கள் ஒரு தரமான படமாக ஏற்று கொள்ளவில்லை என்பது பாராட்டுதல் குறியது. திரைப்பட ரசனையில் மக்கள் நல்ல நிலையை எட்டி விட்டனர் என்றே காட்டுகின்றது இப்படத்தின் வெற்றி நிலைவரம்.  பாலியல் பற்றி எவ்வளவோ அறிவு வளர்ந்து விட்ட நிலையில், இன்னும் ஆண் பெண் மனநிலைகள் பற்றி சரியான அறிவுகள்  பெற வேண்டிய தருணத்தில் இப்படியான படத்தை எடுத்து இயக்குனர்கள் தங்கள் பெயர், நேரம், பொருள், ஆவியை விரயமாக்கவே செய்கின்றனர் என்று மட்டுமல்ல மனிதனை மிருங்களுக்கு சமமாக காட்டுகின்றனர்.  

ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மை என்று மாற்றுவது போல் மீடியாவின் துணை கொண்டு வெறும் சாரம் அற்ற ஒரு படத்தை  அதி மகத்தான படம் என்ற வளையத்திற்க்குள் கொண்டு வந்திருப்பது உண்மைக்கு மாறானதே.

கதை,  படம் பிடித்த விதம் எல்லா நிலைகளிலும் இது ஒரு மட்டமான படமே என்று இப்படத்தை குப்பையில் போட்டு விட்டு அடுத்த ஒரு சிறந்த படம் தேடி கொண்டு வருகின்றேன் என்று உறுதி அளித்து விடை பெறுகின்றேன்,  நன்றி வணக்கம்

22 Aug 2011

மனதோடு கதைப்போம்: Srikandarajah கங்கைமகனின் ஆத்மலயம்


மனதை நினைத்தால் ஒன்றும் பிடிபடவில்லை.  நேற்று வரை அக்களிப்போடு வண்ணத்து பூச்சி போன்று துள்ளி பறந்து திரிந்த மனம் துவண்டு விட்டது. மலையின் உச்சியில் சுதந்திரமாக நிற்கின்றேன் என்று சொல்லிய மனம் இப்போது  பள்ளத்தில் விழுந்தது போல் இருந்தது.  என் எண்ணங்கள் “சிறந்தது எடுத்து கொள்” என்று சொல்கின்றதை  என் மனம் “உனக்கு வேண்டாம் என்று தடுக்கின்றது”, மனதிற்க்கு பிடித்த சில விடயங்களோ புத்தி “வேண்டாம் வேண்டாம் ஆபத்து” என எச்சரிக்கின்றது.   மனதே நீ யார், நீ எங்கு இருக்கிறாய், நான் உன் கையிலா அல்லது நீ என் கையிலா ஒன்றும் புலன்படவில்லை. என்னை சுற்றி அரசியல், சமூகம், பக்தி, அறிவு என்ற தலைப்பில் 7-8 புத்தகம் விரிந்து கிடைக்கின்றது . ஆனால் வாசிக்க  ஒன்றிலும் மனம் பதியவில்லை. சினிமா படம் கணிணி திரையில் ஓடுகின்றது நானோ தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன், கட்டிலில் சென்று படுத்தால்  வந்த தூக்கம் என்னை விட்டு விலகி சென்றது போல் இருந்தது. கடலில் தத்தளிக்கும் ஓடம் போல் இருந்தது என் மன நிலை.  இனி மனதை பற்றி தெரிந்து கொள்வது தான் என உறுதி எடுத்தேன். எது எதையெல்லாமோ பற்றி விழுந்து விழுந்து படிக்கின்றேன் என்ன ஆட்கொள்ளும் என்னோடு உறவாடும் என் மனதை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம் என்று தேடிய போது எனக்கு கிடைத்த புத்தகமே “ஆத்மலயம்’. இதன் ஆசிரியர் டென்மார்க்கை சேர்ந்த ஈழ தமிழரான சிறிகந்தராஜா கங்கைமகன்  ஆவார்http://www.facebook.com/srikandarajah.kankaimakan.  புத்தக வாசிப்பிலும் எழுத்திலும் முத்திரை பதித்துள்ள இவர் சிறந்த சொற்பொழிவாளரும் அரட்டை அரங்க பேச்சாளரும் ஆவார். 



லண்டனில் ஏப்ரில் 17 தியதி இதன் வெளியீடு நடந்தது.  தமிழகத்தில் தகிதா பதிப்பகம் வழியாக வந்துள்ள  இப்புத்தகம் தமிழகத்தில் எல்லா ஊர் கடைகளில் தற்போது கிடைக்கின்றது. 


ஆசிரியரின் கூற்று படி 
ஆன்மாவும் வ்வொரு ஆன்மாவும் நிறைவு நிலையை அடையவேண்டும் என்பதே விதிக்கப்பட்ட நியதி.  வ்வோர் உயிரும் முடிவில் அதன் பிராப்தத்தின்படி பரிபூரண நிலையை அடையவே இறைவனால் வழிநடத்தப் படுகின்றன. இப்போதைய நமது வாழ்வு முன்பு நாம் செய்த செயல்களின் பயனாக நாம் மனத்தால் நினைத்த நினைப்புக்களின் பலனாக எமக்குக் கிடைத்ததாகும். இதுபோன்றே இனி வரப்போகும் வாழ்க்கை யானது தற்பொழுது நாம் செய்யும் செயல்களுக்கும், சிந்திக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்ப அமையும் என்பது விதி. ஆதனால்தான் நமது விதியை நாமே நிர்ணயித்துக் கொள்கின்றோம் என்பதனை ரிசிகளும், ஞானிகளும் தங்களது மெய்ப்பொருள் கருத்துக்களாக மனிதனின் காலடியில் காணிக்கையாக வைத்துச் சென்றுள்ளனர்.  மனிதனது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நமக்குக்கிடைத்த இடைத்தங்கல் முகாம் தான் இந்த உலகம். நீ ஏற்றுக்கொண்ட பாத்திரமும் அங்கேதான் நடிக்கத் தொடங்குகின்றது.ஒரு உயிரின் மனத்தின் வலிமையினால் ஓர் ஆன்மாவின் உயர் ஆற்றல்களும், அதன் சாத்தியக் கூறுகளும் சிலருக்கு விரைவாகக் கிளர்ச்தெழுகின்றன. ஆன்மவிழிப்பு உண்டாக்கப்படுகின்றது. அதனால் ஆன்மிகத்தேடல் விரைவுபடுத்தப்படுகின்றது. முடிவில் மனிதன் புனிதமானவனாக, நிறைவுள்ள வனாக ஆக்கப்படுகின்றான். இக்கருத்துக்களை மையப்பொருளாக வைத்து வெளிவரவிருக்கும் ஓர் ஆனமீகத் தேடலுக்கான தலைப்பே ஆத்மலயம் என்ற நூலாகும்.http://udumalai.com/?prd=aathmalayam&page=products&id=9103
                                                                                                                                                                                      மனதை பற்றியும் நம் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் நம் மனதிற்க்கும் ஆன தொடர்பை பற்றியும் மனதை கட்டுக்குள் வைக்கும் தியானத்தின் தேவை சிறப்பை  பற்றியும் பகிர்ந்துள்ளார். மனதை வெறுமையாக வைப்பது வழியாக எவ்வாறு மன மகிழ்ச்சியுடன் வாழலாம் என்றும் கதைத்துள்ளார்.

ஒருமனிதன் எந்தப் பொருளில் அதிகமாகப் பற்று வைக்கின்றானோ அந்தப் பொருட்களாலேயே அவன் துன்பப்படுகின்றான். எந்தப் பொருட்களில் ஒருவன் பற்று வைப்பதில்லையோ அந்தப் பொருட்களால் அவனுக்குக் துன்பமும் தோல்வியும் இல்லை.

மேலும் பயம் என்ற நம் உணர்வை களைய வேண்டிய தேவையும் மனதை தூய்மையாக வைக்கும் வழி முறைகள் தற்போதைய உலகின் மகா விபத்தான மனிதனின் பொறாமை குணம், நாட்டை மட்டுமல்ல குடும்பத்தை அழிக்கும் வன்முறையும் பற்றியும் சிறப்பாக சொல்லியுள்ளார்.

எனவே தெளிந்த புத்தியும், மனோவேகமும் கொண்டு ஆற்றப்படும் கருமங்களே ஒருவனது வாழ்வில் நிலைத்து நிற்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை ஒருவன் தொடர்ந்து செய்யவேண்டுமானால் உடலில் சக்திப் பெருக்கமும், புத்திக் கூர்மையும் அவசியமாகின்றது. இதற்கு ஆரோக்கியமான அளவான உணவும், மன ஒழுக்கமும் இன்றியமையாததாகும்.

என் கலக்கமுற்ற மனதிற்க்கு  மருந்தாக இருந்தது இப்புத்தகம். மனதை பற்றியும் அதை காத்திரமாக கவனித்து நம் வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு செல்லவும் வழிமுறைகள் கிடைத்தன. நம் மனம், ஆன்மா மேல் அக்கறையுள்ளோர் நிச்சயமாக வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்.

ஆசிரியுடைய எழுத்து நடையும் ஆத்மீய புத்தகங்கள் வாசிக்கும் போது நாம் அனுபவிக்கும் விரசம் தட்டாது புரியும்படி  நம் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சம்பவங்களின் ஊடை சுவாரசியமாக நம்மை நடத்தி சென்றுள்ளார்.  கொடுகாற்றில் அகப்பட்ட கப்பல் போல் இருந்த நம் மனம்  தெளிவான கரை வந்து சேருவதை புத்தகத்துடன் பயணிப்பவர் யாவரும் உணரலாம்.

20 Aug 2011

மனித உணர்வுகள் இல்லாத தமிழ் இன உணர்வாளர்கள் ?


எலி தொல்லை பெரிய தொல்லை பாருங்கோ.  வீட்டில் மட்டுமல்ல வயலிலும் இதன் அட்டகாசம் பயங்கரம் தான் போல்.  சமீபத்தில் தமிழக சட்ட சபையில் தேமுக கட்சியினர் விவசாயிகளுக்கு எலிப் பொறி இனாமாக கொடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருந்தனர்

கால் நூற்றாண்டு முன்பு, என் வீட்டில் அப்பாவின் நண்பர்கள் குடும்பம் எங்கள் குடும்பம் என 4 குடும்பமாக வேளாங்கண்ணி  கோயிலுக்கு சென்றிருந்தோம். அப்பாவுக்கு வேளாங்கண்ணி போனால் உணவகம் பிடிக்காது எங்களுக்கும் அப்படி தான் ஏன் என்றால் இட்லி தான் வாங்கி சாப்பிட வேண்டும் என கட்டளை இட்டு விடுவார். வெளியூர்காரர்கள் என்றால் ந்நியாயமா பில்லை போட்டிடுவான், கண்டது கடியதும் வாங்கி சாப்பிடாதீங்க  என கூறி அடுப்பு, பானை, கரண்டி எல்லாம் வாடகைக்கு பிடித்து வேளாங்கண்ணியில் இருந்து வரும் வரை மீனும் சோறும் தான். அந்த சிறுபிள்ளை புத்தி இப்போது எனக்கு வேறுவிதமாக என் மகன்களிடமும் வருவது உண்டு.  நாங்கள் ஹோட்டல் சென்றால் எங்கள் மகன்கள்  உணவு அட்டவணயை கையில் எடுக்கும் போதே என்னுள் ஒரு எலி ஓட ஆரம்பித்து விடும். ஒரு போதும் கண்டிராத பெயராக தேடுவார்கள்.  உலகம் எங்கள்  நெல்லையிலும் அடங்குவதால் வாயில் பெயர் வராத அனைத்து உலக- உணவு வகைகளும் இங்கு  கிடைக்கும்.  அதன் விலை தான் கொடுமையானதாக இருக்கும் . பல போதும் சாப்பாடு பில்லை என்னவர் என்னிடம் காட்டுவதில்லை. நானும் பார்க்க விரும்புவதில்லை, பின்பு சாப்பிட்ட ருசி என்னை விட்டு ஓடி மறைந்து  விடும் என்பதால்!

 எலிக்கதைக்கு வருகின்றேன். பாட்டியை வீட்டு காவலுக்கு வைத்து விட்டு வேளான்கண்ணி ஆலயம் சென்றிருந்தோம்.  நடு இரவில் நடப்பது போல் ஒரு சத்தம் கேட்டுள்ளது. பாட்டியும்  பயந்து போய் பக்கத்து வீட்டு வைத்தியரை அழைக்க  அவர் எங்க ஊர் ஆட்களை எல்லாம் அழைத்து கம்பும் தடியுமாக வீடு முழுதும் தேடியுள்ளனர்.  கடைசியில் பார்த்தால் ஒரு பெருச்சாளி தான் வீட்டின் உள்ளில் இருந்து ஓடியுள்ளது.   பின்பு அம்மா கள்ளன் கொள்ளையடித்து போயிருந்தால் கூட இந்த மாதிரி வருத்த பட்டிருக்க மாட்டார்; பாட்டி ஊரை கூட்டி அவமானப்படுத்தி விட்டார்கள் என்று தான் பல நாட்கள் துயரத்தில் இருந்தார்.

எலியை சாவடிப்பது பெரும் பாடு.  எங்கள் கடை எலியின் மாளிகையாக   தான்  இருந்தது.   ஒன்றை கொன்றால் போட்டிக்கு என கூட்டம் கூட்டமாக குட்டி போட்டு வைத்திருக்கும்.  காலில் போடும் ஷூவில் இருந்து சாக்கு, மேஜை அறைகள்என அவை இல்லாது இடமே இல்லை என்றாகி இருந்ததுஒரு பூனை வளர்த்து எலியை பிடிக்கலாம்  என்றால் பூனை தரும் தொல்லை பெரும் தொல்லையாக  இருந்ததுஒரு முறை அப்படி தான் என் தம்பியார்  எலியை அடிக்கிறேன் என்று   தரை ஓட்டை அடித்து  உடைத்து அவன் அடி வாங்கினது தான் மிச்சம்  எலியோ  தப்பி ஓடி விட்டது .   இனி விஷம் வைத்து கொல்லாம் என்றால் அதன் நாற்றம் வீட்டை விட்டு விலக பல நாட்கள் ஆகும்.  விஷம் வைப்பது சொன்னால் எலி காதுக்கு கேட்டு விடும் என்பதால் இரு செவி அறியாது எலிப்பொறியில் சுட்ட தேங்காய் துண்டை இரவு வைத்து விடுவார்கள் அம்மா . பெரிய எலி என்றால் தேங்காயை தின்று விட்டு ஓடி இருக்கும். ஏப்ப சாப்ப குட்டி எலிகள் தான் மாட்டியிருக்கும்அதை லாவகமாக சாக்கில் போட்டு அடித்து கொல்வது தான் எங்கள் கடை பையனுகளின் வீரச்செயல்!   எனக்கு எலி கண்ணை கண்டால் இரக்கம் பொத்து கொண்டு வரும் ஆனால் ஒரு முறை எங்கள் வீட்டு அலக்கு இயந்திரத்தின் குழாயை கடித்து சேதப்படுத்திய போது அத்துடன் என் கோபம் ஆரம்பம் ஆகியதுபெருச்சாளி கறி ரொம்ப சுவை என்று சுட்டு தின்னவர்கள் சொல்லியுள்ளார்கள்.  குற்றாலத்தில் குரங்கு நடப்பது போல் எங்கள் வண்டிபெரியாரில், இரைவில் பெருச்சாளி ரோடு வழி ஓடி நடக்கும்எலி வீட்டிற்க்குள் வந்து விட்டது என்றாலே பின்பு எங்களுக்கு கிலி தான்.

இதே மாதிரி ஒரு தொல்லை எலிகள் தான் தமிழக அரசியலில் இருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள்!   தமிழன்  என்றால் யார் தான் இவர்கள் பார்வையில்? அதற்க்கு என்ன தகுதி வேண்டும் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டுமா? அல்லது தமிழ் மொழியில் தான் பேச வேண்டுமா? அல்லது ஈழத்தில் பிறக்க வேண்டுமா?

 நம்மூர் இன உணர்வாளர்களுக்கு தமிழர்கள் என்றால் ஈழ தமிழர்கள் மட்டும் தான்!  அவர்களுக்கு ஒன்று என்றால் அறிக்கை விடுவார்கள் அரசியல் விளையாட்டு விளையாடுவார்கள்.  ஆனால் இது எல்லாம் அவர்கள் மேல் உள்ள பாசமா என்றால் அது தான் இல்லை.  ஒன்று அரசியல் வியாபாரம் அடுத்தது பெண்கள் 7 நாட்களில், முகம் வெளுக்க பெfயர் லவ்லி தேய்ப்பது  போல் தன்னை இன உணர்வாளன் என்று நிலை நிறுத்துவது வழியாக அரசியலிலும் கொள்ளையிட  ஒரு குறுக்கு வழி மட்டுமே.  

ஈழ தமிழர்கள் அறிவிலும் எழுத்திலும், தன்மான உணர்விலும், மொழி பற்றிலும் பல தமிழக தமிழர்களை விட சிறந்தவர்களே. சமீபத்தில் பிரான்ஸில் இருந்து வந்த என் ஈழ நண்பர் குடும்பத்துடன் உணவகம் சென்றிருந்தோம். எந்த ஊர் என்று கேட்டவர்களிடம் அவர் இலங்கை என்று சொல்வதை தான் காண இயன்றது.  பிரான்ஸில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் கூட தமிழில் நன்றாக கதைக்கின்றனர். அவர்கள் முகநூல், வலைப்பதிவு பக்கங்கள் எல்லாம் தமிழ் மொழியை பாவிப்பதையே விரும்புகின்றார்கள். நம் நிலை என்ன; சென்னை எப்போதோ பறங்கி தேசம் ஆகி விட்டது, இனி மதுரை, நெல்லை, கோயம்ப்த்தூர் என அதன் பிடியில் அகப்படும் நாள் வெகு அருகில் தான் உள்ளது.  ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்; ஆசிரியை அழகான ஆங்கில உச்சரிப்புடன் ஒரு வெள்ளைகாரியை விட அழகாக ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்.  எவ்வளவு திறைமையான மொழி ஆற்றல் என்று மனதில் நினைத்து கொண்டிருந்தேன்.  ஒரு தமிழ் பாட்டுடன் நடனம், என்றதை அவர் இவ்வாறு  "அடுத்து வருவது 'நல்ல நல்ல  பில்லைகளை நம்பி'…..” நொந்து விட்டேன்.  இதுவே எல்லா நிகழ்ச்சியிலும் இங்கு காண்பது தான்.  “டமில் டாய் வால்த்து, குற்றுவிலக்கு” இதெல்லாம் இங்கு அறிவாளிகளின் லட்சணம்.  தமிழகத்தை பிடித்துள்ள ஒரு நோய்!   நாங்கள் கேரளாவில் 75 வருடம் முன்பு குடியேறினோம் அங்கு நான் கண்ட தமிழ் ஆவல் இங்கு இருப்பது போல் தெரியவில்லை.  சிறப்பாக சென்னையில் தமிழில் கதைத்து விட்டால் ரொம்ப கேவலைமான பார்வை நம்மை திரும்பி பார்க்கும்.   இந்த நோய் நம்மை விட ஆங்கிலம்  கதைக்கும் மலையாளிகளிடம் கண்டதில்லை.

ஈழ தமிழர்கள் கெட்ட நேரம்! போருக்கு முன்பு ஏதோ உங்கள் உதவியை நாடியிருப்பார்கள் அதற்க்கு தான் 3 லட்சத்திற்க்கு  மேலான  மக்கள் மரணத்திற்க்கும்,  50 ஆயிரத்திற்க்கும் அதிகம் பெண்கள் விதைவை ஆவதற்க்கும், அவர்கள் இருந்த நினையை விட மிக மோசமாக ஆடு மாடுகள் போன்று முள் வேலிக்குள் முடக்கப்படுவதற்க்கும் உதவி செய்துள்ளீகள்.   தலீவா நாங்க உங்க பின்னால் உண்டு என உசுபேற்றி விட்டு தலைவர் பிராபகரன் வீட்டில் புலி வளர்க்கிறார் அப்படி இப்படி என்று பத்திரிக்கைகளில் கொடுத்து விளம்பரம் தேடி  தன் அரசியல் வாழ்க்கையை வளப்படுத்தினர் இந்த இன உணர்வாளர்கள்.   மே 2009  நாளில் இங்கு நடந்தது தான் என்ன?; அங்கு மக்கள் போரில் உயிர் விட்டு கொண்டிருந்த போது எல்லா ஊடகவும் பாடல் ஆட்டத்தில் இருந்த்து.  அதைக்கூட வசதியாக  மறந்து விடுவோம், போர் மூண்ட போது முத்துகுமார் என்பவர் என் உடலை ஆயுதமாக்குங்கள் என கூறி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த நிகழ்வை பற்றி இயக்குனர் ராமின் கட்டுரை படிக்கும் போது  வெள்ளையன் என்ற வியாபாரிக்கு,  படம் பிடிக்கும் இயக்குர்களுக்கு  மற்றும் சாதாரண மக்களுக்கு இருந்த  இன பாசம், பற்று கூட தலைவர்களுக்கு இல்லை என்று புரிந்து போய் விட்டது.  மக்களுக்கு  புரிந்ததாலே ஓய்வெடுத்து கொள்ளுங்கள்  என வீட்டுக்கும் அனுப்பி விட்டார்கள்.  

ஆனால் இப்போது இந்த பெருச்சாளி,  சுண்டெலி, பன்றி எலி,  நச்செலி எல்லாம் சேர்ந்து ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டது.  நெல்லையில் ஒரே சுவரொட்டிகள் தான் தமிழகத்தை தமிழ் இனத்தை காப்பாற்ற போகிறார்களாம்.  இது எல்லாமே நாடகம் என்று மக்கள் புரிந்துள்ளதை, இவர்கள் எப்போது புரிய போகிறர்கள்ன் என்று தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஈழத்தில் இருந்து உலகநாடுகள் அனைத்திலும் குடிபெயர்ந்துள்ள ஈழ தமிழர்கள் அவர்கள் பிரச்ச்னைக்கான காத்திரமாக குரல் கொடுத்து கொண்டு இருக்கும் போது இவர்கள் அறிவு சாராது, உணர்ச்சி வேகத்தால் ஊளை இடுவதால் அவர்கள் குரலும்  நசுக்கப் படத்தான் போகின்றது.   ஈழ மண்ணின் பிரட்சனைகளுக்கு உண்மையாக தோள் கொடுபவர்களாக இருந்தால் போரால் வாழ்க்கை இழந்த பெண்களுக்கு வாழ்க்கைக்கு வழி சொல்லவோ அல்லது அங்கு அனாதமாக்கப்பட்ட குழந்தைகளுக்கு தத்து எடுக்கவோ, அவர்கள் அரசியல் பிரச்சனையை உணர்ச்சி வேகத்தில் எடுக்காது, உண்மையான மனித நேயத்துடன்  கதைக்க முன் வருவார்கள்.  நம் மண்ணில் அகதியாக தஞ்சம் அடைந்த ஈழ மக்களின்  கதி தான் என்ன?  நாம் இன்று நினைத்தால் நமது தமிழகத்திலிலுள்ள அகதி முகாமில் சென்று எளிதில் அவர்களை சந்திக்க  இயலுமா?  அல்லது அவர்களையும் நம் சமூக ஓட்டத்தில் இணைத்து  விட்டோமா? இலங்கை தமிழன் என்ற பாகுபாடுதான் அவர்களுக்கு இங்கும். ஏதோ தேற்வு நேரம் தலைவர்கள் அவர்களை சந்தித்து சிரித்து கதைக்கின்றனர்.

ஈழ மக்கள் உரிமைக்கு தன் உயிரை கொடுத்து போராடும் குழுக்கள் முகநூலிலும் உண்டு நானும் நட்பு வைத்திருந்தேன்சமீபத்தில் ஒரு ஈழ சகோதருக்கு படிப்பு வாய்ப்பு அறிய வினவினார்நல்ல பதில், கெட்ட பதில் என்றில்லை எந்த ஒரு பதிலும் வரவில்லை.…

ஈழ தமிழர்களை விட ஆதரவில்லாத அடையாளமில்லாத தமிழக தமிழர்கள் உண்டு அவர்களுக்கு என இந்த இன உணர்வாளர்கள் என்றாவது குரல் கொடுத்துள்ளார்களா? குழந்தைகளை பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படும் எத்தனையோ பெற்றோர்கள், ஆதரவு இல்லாத  சூழலால் தெருவில் தள்ளப்பட்ட பெண்கள், முதியவர்கள், குறைந்த பட்சம் குடியிருக்க ஒரு வீடு, இரவு சாப்பாட்டுக்கு வழி இல்லாத பல கோடி மக்கள், பன்னாட்டு அடிமைகள் ஆக்கப்படும் நம் இளைஞசர்கள், வானளவில் உயர்ந்த விலை ஏற்றம்,  இதை எல்லாம் இன உணர்வாளர்கள் அறிய  நாம் ஈழத்தில் தான் பிறக்க வேண்டுமோ?

இது மட்டுமா பிரட்ச்சனை சமச்சீர் கல்வி என்ற பெயரில் கல்வி மறுக்கப்படும் பள்ளி  மாணவர்கள்தண்ணீர்மணல்,  கல்குவாரி என்ற பெயரில் இயற்க்கை சுரண்டலுகள், மக்கள் உயிரை குடிக்கும் அணு உலைகளின் நிறுவல்கள், எங்கு பார்த்தாலும் நாற்றம் பிடித்த தெருவுகள், சுகாதாரமற்ற  பேருந்து நிலையங்கள், லஞ்சம் வாங்கும் அரசு அலுவலங்கள், கொள்ளையடிக்கப் படும் தனியார் ஊழியர்கள், பெண்கள் நலம் பாதிப்பு என எண்ணில் அடைங்காதவை.

சமீபத்தில்  தமிழகம் வந்த சிங்களர்களை அடித்து தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்போரை முன் நின்று நடத்தியவர்களிடம் சீட்டுக்கு என கைகட்டி வாய்கட்டி நின்ற உணர்வாளர்களூக்கு சாதாரண மக்களை கண்டவுடன் எப்படி வீரம் பொத்துகிட்டு வருகின்றது என்று தான் தெரியவில்லை. ஈழப்போர் அமெரிக்க -ரஷியா ; இந்தியா-சீன என்று மாறிவிட்ட சூழலில் உணர்ச்சி பேச்சுக்கு விடை கொடுத்து  ராஜபக்சேவின் மனித உரிமை மீறல் பற்றி ஐநாவில்  கொண்டு சென்று, அவர்கள் சொந்த மண்ணில் தன்மானமாக வாழ சாதகமான சூழல் உருவாக்கி கொடுப்பது தான் காலச் சிறந்தது. வன்னி மக்கள் இன்றும் முள்கம்பிக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இன்னும் பல ஆயிரம் ஈழப் போராளிகள் நிலை என்ன என்பதே தெரியவில்லை. உண்மையை சொன்னால் ஒரு ஈழ தமிழர்களுக்கும் இன உணர்வாளர்கள் மேல்  கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.  

இனியாவது இன உணர்வாளர்கள், தாங்கள் ஊதி கெடுத்த சங்கை உடைக்காது  விட்டால் மிஞ்சிய கொஞ்சம்  உயிர் வாழ இயலும்!

15 Aug 2011

திரைக்கதை - மலையாளம் திரைப்படம்



சில நாட்கள் இப்படி தான் எந்த வேலையிலும் மனம் ஈடுபடுவதில்லை. ஒரு மலையாளப்படம் கண்டு விடுவோமே என்றுதிரைக்கதை’(Script) என்ற மலையாளப் படம் பக்கம் வந்து விட்டேன்.                                                                                                                                                                                                         


2006-ல் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2008 ல் வெளிவந்தது தான் திரைக்கதாஎன்ற மலையாளப்படம்.    தேசிய அளவில் அந்த வருடத்திற்கான மலையாள மொழியில்  மிக சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகைக்குள்ள விருது பிரியா மணிக்கும் வாங்கி தந்த படம் இது. மேலும் அனூப் மேனோன் என்ற நடிகருக்கு சிறந்த உதவி குணச்சித்திர நடிகர் என்ற மாநில விருதும் பெற்று தந்தது இப்படம்.  மலையாளத் திரையுலைகில் ஒரு எடுத்து கொள்ளப்படும் இயக்குனரான  ரஞ்சித்தின் இயக்கதில் மூன்று கதாபாத்திரங்களில் ஊன்றி கொண்டு   விரசமே இல்லாது கதையை நகர்த்தி சென்றுள்ள பாங்கு தான் இப்படத்தின் சிறப்பு.  படம் திரைக்கதை, காட்சிகள் நகர்த்தும் விதம், அர்த்தமான கதை அம்சத்துடன், அழகாக ரசிக்கும் படி எடுத்துள்ள இப்படம் மலையாளி ரசிகர்களால் மிகவும் பாராட்டு பெற்றது. அலட்டாது ஆனால் காண்பவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுத்து கொண்டே முன் செல்கின்றது இப்படத்தின் கதைசொல்லும் யுக்தி  படம் முடிவு காட்சி ஒரு போதும் நாம் கற்பனைக்கு செய்து கொள்ளாத வண்ணம் அன்பு, கவலை, பாசம், காதல் என எல்லாம் கலந்து முடித்துள்ளது இன்னும் படத்திற்க்கு சிறப்பு சேர்க்கின்றது.

இந்த படம் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை கதை என்றும் சொல்லப்பட்டிருந்தது. இதன் இயக்குனர் ரஞ்சித் இது ஸ்ரீவித்யாவுடைய கதை அல்ல ஒரு நடிகையின் கதை மட்டுமே என்றும் தெளிவுப்படுத்தியிருதாலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு  ஈடு கொடுக்க இயலாத சூழலில் ஸ்ரீவித்யாவின்  72-76 களில் கமல்ஹாசனுடன் கொண்ட காதலும் அவருடைய கடைசி மரண நாட்களும் நினைவுப்படுத்திய காட்சிகள் உண்டு என்று வெளிப்படுத்தினார்.

 பிரபல கர்னாடக இசை கலைஞைரான M.L  வசந்தகுமாரியின்  மகளான ஸ்ரீவித்யா தன்னுடைய 13 வயதில் 1969-ல் சட்டம்பிக்கவலா’(தெம்மாடிமுக்கு-தமிழ் பொருள்) என்ற மலையாளம் திரைப்படத்தில் கால் பதித்தது வழியாக திரை உலகில் பிரவேசித்தார்.  60 வயது சத்தியனுடன் ஜோடி சேர்ந்து நடித்து தேசிய விருதும் பெற்றார்.  1972-76 ல் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் தனது 19 வயதில் ரஜனிகாந்தின் மனைவியாகவும் வயதான பெண்ணிடம் காதல் கொள்ளும் இளைஞன் கமல்ஹாசனின் காதலியாகவும் நடித்து தன் நடிப்பு திறைமையால் முத்திரை பதித்தார் சினிமா உலகில்.  அப்படத்தில் நடிக்கும் போது தான் இப்பத்தில் சொல்லப்படும் காதல் அவர்களுக்குள் நிகழ்ந்தது என்றும்;  இரு குடும்பங்களும் அவர்கள்  திருமணம் அனுமதி தந்திருந்த போதும் இருவரும் பிரிந்தனர் என்றும் சொல்லப்படுகின்றது .  பின்பு குடும்ப நபர்களின்  எதிர்ப்பையும் மிஞ்சி 1978 ல் கெ.வி ஜோர்ஜ் என்ற தொழிலதிபரும் மலையாளப்படம் இயக்குனருமான ஜோர்ஜை கிருஸ்தவ மதம் மாறி திருமணம் செய்து கொண்டு ஸ்ரீவித்யாவும்,  தன்னை விட முதியவரான வாணி கணபதியை மணம் முடித்து கமல்ஹாசனும் தங்கள் வழிகளை தேடி கொண்டனர்.  

ஸ்ரீவித்யா தன் நடிப்பால் திரை உலகில் ஜுவலித்தது போல் தன் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெறாது பல போராட்டங்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார்.  தன் தாலிகட்டிய கணவன் ஜோர்ஜால் சென்னையில் குடியிருக்கும் வீட்டை பறிகொடுத்து தன் பணம் எல்லாம் அபகரிக்க பட்ட நிலையில் விரட்டி அடிக்கப் பட்டார். வெறும்  9 வருடம் மட்டுமே ஆன அவருடைய திருமண வாழ்வும் முடிவு பெற்று உச்ச நீதிமற்றம் தீர்ப்பு 90 ல் வந்து சேரும் வரை அவர் போராட்டம்   ஓயவே இல்லாது போய் கொண்டிருந்தது.  ஜோடி சேர்ந்து நடித்தவகளுடன் அவர்கள் அம்மா, சகோதரி ரோளில் (அபூர்வ சகோதரர்கள், தளபதி) நடித்து கொண்டு இருந்த ஸ்ரீவித்யா தன் பிறந்த ஊரான  சென்னையில் இருந்து  திருவனந்தபுரத்தில் குடியேறி அமைதியான சூழலில் மலையாளத் தொலைகாட்சி சீரியலுகளில் நடித்து வரும் கலையளவில் தான் கான்சர் உருவத்தில் வந்த காலன் அவர் உயிரை 2006 அக்டொபர் 19 அன்று முற்றும் பறித்து சென்றது.  தன் கடைசி நாட்களில் தன்னை யாரும் காண வருவதை விரும்பாத போதும், கொச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன் கேட்டு கொண்டதிற்க்கு இணங்க தன்னை காண அனுமதித்தாகவும், 30 வினாடி கண்ணீருடன் இருவரின் உணர்ச்சி மிக்க சந்திப்பு நடந்தது என்றும், உலகில் எந்த மூலையில் கொண்டு சென்றும் அவருக்கு மருத்துவ வசதி பெற்று தர விரும்புவதாக கமல்ஹாசன் கூறியதாகவும் ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றதுநாட்டிய பள்ளி துவங்க தன் சொத்துக்கள் யாவும் கேரளா அரசிடம் ஒப்படைத்து விட்டு  இந்த உலகை விட்டு சென்றார் ஸ்ரீவித்யா என்ற மாபெரும்  நடிகை!

திரைப்பட கதை இப்படியாக துவங்குகின்றது; நண்பர்களுடன் ஒரு உணவு விடுதி நடத்தி வரும் ஒரு இளம் இயக்குனர் அக்கி, அவர் தான் பிரத்வி ராஜ்.  தன் முதல் படத்தை வெற்றியுடன் இயக்கி பாராட்டு கிட்டிய பின்பு தன் அடுத்த படம் திரைக்கதை கருவை தேடுவதில் மும்முரமாக உள்ளார்இவ்வேளையில்  புகழின் உச்சியில் கொடிகட்டி பறக்கும் அஜய சந்திரன் என்ற ஹீரோ நடிகரின்(கமல்ஹாசன்முதல் காதலியும் முதல் மனைவியும் தென் இந்தியாவில் துளும்பி நின்ற நடிகை மாளவிக(ஸ்ரீவித்யா) எங்கே? என்ற தேடல் அற்புத நோயால் கவனிபாரற்று உற்றார் உறவினர்களை காண விரும்பாது; தான் வகுத்த தனிமையில் சுத்தம் சுகாதரம் அற்ற  சூழலில்   நாகர்கோயிலில் ஒரு ஆஸுபத்திரியில் கழியும் நடிகை மாளிவிகா பக்கம் கொண்டு விடுகின்றதுஇயக்குனர் நடிகையின் சம்மதத்துடன் நண்பர்கள் துணையுடனும் கேரளாவில் மிக அருமையான மருத்துவ மனையில் சேர்த்து கவனித்து கொள்கின்றார் மேலும் மாளவிகாவை அவருடைய காதல்  கணவருடன் சேர்க்கின்றார் என்பதே கதை!

தன் புகழின் உச்சியில் ஒரு பட்டத்து பூச்சி போல் பறக்கும் காலையளவில்,  வில்லன் வேடங்களிலிலும் இன்னும் அங்கிகாரம் கிடைக்காத நிலையில் இருக்கும் நடிகருடன் காதல் கொண்டு திருமணவும் முடித்து கொள்கின்றார் நடிகை மாளவிகா!  திருமணத்திற்க்கு  பின்பு நடிப்புக்கு முழுக்கிட்டு ஒரு சாதாரண குடும்ப தலைவியாக குழந்தை, கணவர் நலனை மட்டும் பேணி வாழ விரும்பும் சூழலில் தான் ஒரு குழந்தைக்கு தாய் ஆக போகிறேன் என்ற விடயவும் தெரிய வருகின்றது.  நடிகரோ குழந்தை தற்போது வேண்டாம் தன் நடிப்பு என்ற லட்சியத்திற்க்கு பாதிப்பு ஆகி விடும் என கூறி குழந்தையை அழித்து விட முடிவு செய்து மருத்துவ மனையிலும் அனுமதிக்கின்றார். நடிகை பல நாட்களுக்கு பின்பு தன் கருவை மட்டுமல்ல ஒரு போதும் குழந்தை பெற்று கொள்ள கூடாது என்ற நோக்கில் தன் கற்ப பாத்திரத்தை இணைக்கும்  faloppian tube  எடுக்கபட்டுள்ளதை தெரிந்து மனம் நொடிந்து போகின்றார்.  தன் தாய்மையை மதிக்காது தன்னை ஒரு உடலாக மட்டும் கருதிய கணவரில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்து  மது போதைக்கு அடிமையாகின்றார்.  தன் கணவரில் இருந்து வலுகட்டாயமாக விலகிய நடிகை, வாழ்க்கை போராட்ட்த்தின் மத்தியில் சிறு சிறு வேடங்கள் நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றார்இந்த காலையளவில் நடிகர் நினையாத உயரத்தை எட்டுகின்றார் அவர் மறுமணவும் புரிந்து வாழ்கை சுகமாக சென்று கொண்டிருக்கின்றது.  ஒரு முறை, இருவரும் ஒரே படத்தில் நடிக்கும் சூழலில் தன் பழைய கணவர் அழைப்பை ஏற்க்கும் சூழலை  தவிர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளருடன் 2 மணி நேரம் செலவழித்ததை அறிந்த நடிகர் முற்றும் அவரை மறந்து பிரிந்து விடுகின்றார்.

அற்புத நோயில் பிடியில் சிக்குண்டு இன்றோ நாளையோ என்று மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் தான் கணவர் நல்லவர் என்றும் அவர் தனக்கு அற்புதம் பாதித்திருந்ததாலே பெலோப்பி டியூபைய் எடுக்க காரணம்  என்று தெரிந்ததும்;  தான் துயரைப்பட கூடாது என்று எண்ணியே தன்னிடம் தன் கணவர் மறைத்தார் என்று அறிந்ததும் அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று அவரில் ஏக்கம் கொள்கின்றார்.     தன் கடைசி ஆசையாக தானும் கணவரும் முதல் முதலில் சந்தித்த வீட்டில் செல்ல வேண்டும் என்றும்  தெரிவிக்கின்றார்.  நடிகரும் தன்னுடன் அழைத்து செல்கின்றார். எனக்கு சாக விருப்பம் இல்லை உங்களுடன் வாழ வேண்டும் என்று கணவரிடம் சொல்லி அழுவதும் கணவர் தோளில் சாய்வதுடன் படம் நிறைவு பெறுகின்றது.


 ஆனால் பல கேள்விகள் மனதில் எழாதில்லை! பெண்ணின் பெண்மை, தாய்மை உணர்வு, உறவு எல்லாம் உள்ளடங்கி இருக்கும் இவ்வளவு பிரதானமான  சம்பவத்தை நடிகர் ஏன்  தன் மனைவியிடம் இருந்து மறைத்தார் என்பதே. ஒரு வேளை மறுபடி சொல்ல மனைவி அனுமத்திகாது இருந்தால் கூட ஒரு கடிதம் வழி, ஒரு தொலைபேசி வழி ,ஏன் ஒரு நட்பு வழியாவது தெரிவித்து தங்கள் பந்தத்தை புதுப்பித்திருக்கலாமே. பேச வேண்டியதை பேசும் நேரத்தில் மௌனம் காத்து ஈகோ என்ற பிரச்சனையால் ஒரு ஜென்மம் முழுதும் வாடி வதங்கி கணவனை புரிந்து கொள்ள இயலாது பிரிந்து சென்ற மனைவி தன் மரணம் நெருங்கும் போது மட்டும் கணவரிடம் மனதுருகும் அன்பு வந்ததால்  மனைவி என்ற தன் நிலையை நியாயப் படுத்த இயலுமா?  நடிகை, கணவருடன் உள்ள கோபத்தால் ஒரு முழு குடிகாரியாக மாறுகிறாள், ஒரு தாசி போல் அடுத்தவர் படுக்கையறையில் கூட தஞ்சம் அடைய விரும்பும் பெண் மனம் ஏன் கணவர் இதயத்தை தேட மறுக்கின்றது என்ற பல கேள்விகள் நம்மை தேடி வருகின்றது. சேர்ந்து வாழும் போது ஒருவருக்கொருவர் பின்னி இணைந்து பாசப் பிணைப்பால் வாழ்வதும் ஊடல் என்று வந்ததும் கீரியும் பாம்புமாக மாறுவதும், வாழும் ஒரே வாழ்க்கையை நரகமாக்கி சாகும் தருவாயில் உணர்ந்து என்ன தான் பலன்தினசரி வாழ்க்கையில் தேவையற்ற பிடிவாதம் வைராக்கியத்தால் வாழ்க்கை முழுதும் கண்ணீர் குடித்து பெண்களை கண்டுள்ளோம். அவர்கள் மனமாற்றம் பெற வேண்டும் என்று இயக்குனர் நினைத்தால் நல்லதே.    கணவருடன் உள்ள ஊடலால் தனிமையில் தினம் தினம் தீயில் உருகி வாழ்வதுடன் கணவரையும் சுடு கண்ணீரில் தள்ளியிடும் பெண்களுக்கு ஒரு நல்ல பாடமே இப்படம்.  தன் வாழ் நாளில் கணவரை ஒரு புழு போல் எள்ளி நகையாடி மரண நெருங்கும் போது உங்களுடன் வாழ வேண்டும் என்று அழும் பெண்ணின் புத்தியை பின் புத்தி என்று சாடுவதாகவும் தெரிகின்றது கடைசி காட்சி! தங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு வாழ்க்கையை நிகழ்வுகள் சம்பவங்கள் வார்த்தைகள் என ஏதோ ஒரு குற்றம் சுமத்தி மன்னிப்பு, கருணையை மறந்து தங்கள் வாழ்க்கையும் பரிதாபத்திற்க்கு உள்ளாக்கி அடுத்தவர்கள் கருணைக்கு உள்ளாகும் மனைவிகளையும் நினைத்து எடுத்த படமாக இருக்கலாம்.

கமல்ஹாசன் என்ற கதாபாத்திரத்தை படம் நடுப்பகுதி வரை அவமானப்படுத்தி விட்டு கடைசி 3 சீனில் ரொம்ப நல்லவராக காட்டுவார்கள்.  இது எதனால் என்று தான் புரியவில்லை. பொதுவாக மலையாளிகளின் பல படங்களில் தமிழர்கள் பெண் பித்தர்களும், மகளையே கற்பழிப்பவர்களும், பித்தலாட்டம், ரௌடி, அல்லது பிச்சைகாரர்களாகவே இருப்பார்கள். கமல்ஹாசன் என்ற உலக நாயகனை -தமிழ் நடிகனை திட்டமிட்டே பழித்தார்களா என்றும் தெரியவில்லை.  அவருடைய ஆங்கில உச்சரிப்பு, ஹோலிவுட் படங்களை பற்றி அவர் விவாதிப்பது, அவருடைய தற்போதைய ஒழுக்கமற்ற மனைவிபரதேசியாக  இருந்தவரை நடிப்பு சொல்லி கொடுத்து வாழ்கை கொடுத்தவர்களும் இவர்களே போன்ற ஒரு பிம்பம் ஜெனிப்பத்துள்ளனர். ஸ்ரீவித்யாவின் முடிவுக்கு முதல் காதல் கணவரான கமலை காட்டியுள்ளவர்கள் ஸ்ரீவித்யா 10 வருடம் வாழ்ந்த அவருக்கு தீராத சோதனைகள் கொடுத்த கெ.ஜி ஜோர்ஜை முற்றிலும் மறைத்து விட்டதின் பின்னணியும்  மர்மம் தான்!

மேலும் உண்மை கதைக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஸ்ரீவித்யாவுக்கு சமர்ப்பிக்கப் பட்ட இப்படத்தில் சில சம்பவங்கள் மட்டும் ஏன் சேர்க்க வேண்டும் என்றும் கேள்வி எழாதில்லைஸ்ரீவித்யா மறுமணம் செய்ததைக் கூட இயக்குனர் மறைக்கும் காரணம் தான் என்ன? ஸ்ரீவித்யாவை  துக்க கதாபாத்திரமாகவும் எல்லாம் விதி செய்த சதி என்பது போல் கொண்டு வந்துள்ளது சினிமா என்ற ஊடகத்தின் நம்பகத்தன்மையை கேலி செய்கின்றது. ஸ்ரீவித்யா தன் வாழ்க்கை கதையை தொடர்கதையாக எழுதியபோது எல்லா விடயங்களும் உண்மையாகவும் துணிவாகவும் எழுதியிருந்தார். ஆனால் மாபெரும் கலையுணர்வு கொண்டு தன் விருப்பங்களுக்காகவும் வாழ முன் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சமகால ஆண் ஆதிக்க மனோபாவத்தில் அவரை உருவகப்படுத்தியிருப்பது ஏற்று கொள்ள இயலவில்லை.  ஒரு சம்பவம் தான் நினைவில் வருகின்றது.  சிலர் பெண்ணை கட்டி கொடுக்கும் முன் ஆண் வீடு காணல் செல்லும் நிகழ்ச்சியுண்டு.  புஞ்சை எவ்வளவு நஞ்சை எவ்வளவு என்றால் கையை நீட்டி அந்த கண் எட்டும் தூரம் வரை நம்முடையது தான் என்பார்களாம்  ஆனால் மணப்பெண் வந்த பின்பு தான் தெரியும் காட்டி கொடுத்தது எல்லாம் அடுத்தவன் தோட்டம் என்று. கேட்டால்  எங்க சொக்காரனுடையது தான் என்று சொல்வார்கள்அதே போல் கமல்-ஸ்ரீவித்யா ஒரு விற்பனை யுக்தியாக வைத்து சமீப காலத்தில் வாழ்ந்து மறந்த ஒரு பெண் கலைஞரின் வாழ்க்கையை பொய்யால் மெனைந்து படம் எடுத்து திரையிடும் நோக்கம் தான் என்ன?

ஸ்ரீவித்யா ஒரு பிரபல நடிகையாக இருந்தும் தன் கவனைக்குறைவால், நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாது அந்நோயின் கொடிய பிடியில் சிக்கி மாண்டவரே.  கான்சர் நோய் வீட்டுக்கு வீடு  என்று ஆகி விட்ட சூழலில் கேன்சரை மிகவும் கொடியதாக காட்டி காண்பவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி வெற்றி காணும் யுக்தி இப்படத்தில் பிரயோகிக்கபட்டுள்ளதையும் நோக்க உள்ளது. ஸ்ரீவித்யா தான் இறக்கும் 2 நாட்களுக்கு முன்பும் தான் உயிர் பிழைப்பேன், தன் வீடு செல்வேன் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்துள்ளார்.   ஒரு காலத்தின் ஒரு நிகழ்வின், ஒரு சம்பவத்தின் உண்மையை பிரதிபலிக்க வேண்டிய சினிமா என்ற ஊடகம், கற்பனை கதையால் அவருடைய உண்மை வாழ்க்கை கதையை மாற்றி படம் பிடிக்க உரிமை உண்டா?
                                                                                                                                                                                     ஷரத் என்ற இசைஅமைப்பளரின்  இசையும் ரfபீக் அகமதுவின் பாட்டின் வரிகளும் அழகானவைபடம் முடியும் போது ஸ்ரீவித்யா ஒரு சோக கானமாக நம்மை விட்டு அகலாது நம்முடன் பயணிக்கின்றார்!!!!

12 Aug 2011

சமச்சீர் கல்வி நிஜமா நிழலா?


சமச்சீர், சமச்சீர் என கேட்டு கேட்டு இப்போ எப்போ முடிவுக்கு வரும் என்றாகி விட்டது. ஆனால் அந்த ஆசையிலும் மண் விழுவது போல் தான் நேற்று, இன்றைய  நாளேடுகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளியில் படிக்கும் மகனிடம் “தம்பி  கதை புத்தகமாவது எடுத்து படியுங்க நேரத்தை  விரயப் படுத்தாதீர்கள்” என்று  சொல்லும் நிலைக்கு  பெற்றோர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

சமச்சீர் கல்வி திட்டம்,  இதன் நோக்கம் எல்லாம் நல்லதாக இருந்தாலும் ‘கழுதை பொதியில்  வாய் வைத்தது போல்’ தேவைக்கு அதிகமான அரசியல் புகுந்து நாசம் செய்து விட்டது இந்த நல் திட்டத்தை!.  தமிழகத்தில் அரசு பாடதிட்டம், மத்திய அரசு பாடதிட்டம், ஆங்கிலோ இந்தியன்,  மெட்ரிகுலேசன் என்று 4 பிரிவுகளாக இருந்ததை ஒரே திட்டத்திற்க்குள் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆவலர்கள் சிந்தனையாளர்கள் கல்வியாளர்களால் ஆரம்பிக்கப் பட்ட திட்டம்; சமூக சிந்தனையற்ற அரசியல் வாதிகளால் இவ்விதம் வந்து நிற்க்கின்றது.  2006 ல் மக்களின் வேண்டுதலுக்கு இணங்க பாரதிதாசன் முன்னால் பல்கலைகழக துணைவேந்தராக இருந்த குமரன் தலைமையில் குழு அமைத்து அவர்கள் சமர்ப்பித்த கொடுத்த 109 பரிந்துரையில் வெறும் 4 பரிந்துரைகளை மற்றுமே ஏற்று கொண்டு சமச்சீர் கல்வி என பெயரிட்டு ஆரம்பத்த்திலே பெரிய கப்பலுக்கு ஒரு சிறு ஓட்டை இட்டு கடலுக்குள் பயணத்திற்க்கு அனுப்பியது தான் இந்த சமச்சீர் கல்வி திட்டம்!   திட்டம் 2006 ல் ஆரம்பித்தாலும் 2009 ல் சமச்சீர் கல்வி சட்டம் அமலுக்கு வந்து,   2010 ல் நடைமுறைபடுத்த பட்டுள்ளது,  அதுவும் இரண்டே இரண்டு வகுப்புகளுக்கு மட்டும் 6 ம் 9 ம் வகுப்புகள்.  இந்த வருடவும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ் பாடம் தவிர்த்து மற்று பாடப் புத்த்கங்கள் எந்த  பாட திட்டத்திலும் தேர்வு   செய்ய அனுமதி கொடுத்திருப்பது நகைப்புக்குரியதாக தான் இருக்கின்றது.http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3098

சமச்சீர் என்ற பெயருக்கு பதிலாக தமிழக பொது கல்வி என பெயரிட்டிருக்கலாம்.  சம தர்மபுரம், சமத்துவபுரம், சம பந்தி போன்றே கல்வியிலும் அரசியல் புகுத்தியிருக்க வேண்டுமா என்று கேட்க தோன்றாதில்லை.   நம் குழந்தைகள் சாற்றிதழிலும் இதே பெயர் தான் வரும் அடுத்த மாநிலங்களில் சொல்லவே தயங்கும் வார்த்தையாக இருக்கும் இது.   மேலும் ஒரு குழுவை நியமித்து கருத்து கேட்டு விட்டு அதில் 109 பரிந்துரைகளில் வெறும் 4 மட்டும் எடுத்தால் என்ன சிறப்பான பலன் கிடைக்க  போகின்றது இத்திட்டத்தால்.  பிரதான பரிந்துரைகளான பொதுபள்ளி முறை, தாய் மொழி கல்வி ஏற்று கொள்ளப்படவில்லை. இதற்க்கு காரணமாக சொல்லப்படுவது பெற்றோர் ஏற்று கொள்ளவில்லை என்பதாகும் . பெற்றோர் என்பவர்கள் யார் அரசு பள்ளி பெற்றோர்களா தனியார் பள்ளி பெற்றோரா? அதை பற்றி ஒரு ஆக்கபூர்வமான விவாதம் அல்லது ஓட்டெடுப்பு நடந்ததாகவும் தெரியவில்லை!  பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், ஜப்பான், ஜெர்மனி, சீனா   போன்ற நாடுகளில் தாய் மொழியில் பாடம் கற்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் ஆங்கில மோகம்.  அப்படியே தேவை என இருப்பினும் கேரளா மாநிலங்களில் போன்று ஆங்கில வழி, தமிழ் வழி என ஒரே பாடதிட்டத்தில் கொடுக்கலாம் தானே.  தற்போது கூட எங்கள் ஊரில் அரசு பள்ளிகளால் தமிழ், ஆங்கிலம், மலையாளம் வழி கற்பிக்கும் போது தமிழகத்தில் மட்டும் இது ஏன் சாதியப் படுவதில்லை.

பள்ளி திறக்க வேண்டியது ஜுன் 5 ஆனால் திறந்ததோ  15 தியதி தான்; புத்தகமோ இன்னும் 100 நாட்களாகியும் கொடுக்கப்படவில்லை.   இந்நாட்டு அரசியல் வாதிக்கு  வரும் தலைமுறை பற்றி  என்ன அக்கறை.  இதில் வேறு, வெற்றி எனக்கு- தோல்வி உனக்கு என்ற போட்டி வேறு.  இவர்கள் குழந்தைகள் சமச்சீர் கல்வி பள்ளியில் படிக்க போவதில்லை என்பதே உண்மை.  இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து விதியும் வந்து விட்டது  புத்தகம் கொடுக்க சொல்லி ஆனால் மோசமான பகல் கொள்ளையர்களான தனியார் பள்ளிகள் தங்கள் நிலைபாட்டை சொல்லிவிட்டனர், இரண்டு வகை புத்த்கங்களும் பாவிப்பார்களாம் பள்ளியின் பெயரை மெட்ரிக்குலேசம் என்று தான் இருக்குமாம், பள்ளி கட்டணம் மழலை பள்ளிக்கு 5ஆயிரம், 8 வகுப்பு வரை மாணவனுக்கு 15 ஆயிரம், 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு 20 ஆயிரவும், 12 வகுப்பு வரை மாணவனுக்கு 25 ஆயிரவும் வேண்டுமாம்.   இதுவெல்லாம் எப்போதோ வாங்கி விட்டனர் பெற்றோரிடம் இருந்து பள்ளி நிற்வாகத்தினர்.  8 வகுப்பு படிக்கும் மாணவனுக்கு சேர்க்கும் போது 15 ஆயிரம் 2வது பருவத்திற்க்கு 5,500 ரூபாய் 3 வது பருவத்திற்க்கு 4 ஆயிரம்.
மேலும்  ஒவ்வொரு பள்ளியிலும் மத்திய கல்விக் கழக பாடதிட்டம்  பள்ளி ஆரம்பிக்க அனுமதி வேண்டுமாம். கொள்ளைகாரனை திருத்த வழியில்லை போல் தான் தெரிகின்றது.  அரசு குழு அமைப்பது, புத்தகங்கள் போட்டிக்கு  அச்சிட்டு பணத்தை விரயம் பண்ணுவதற்க்கு பதில் ஊருக்கு ஊர் அரசு பள்ளி நிறுவ வேண்டியது அவசியமே. தற்போது 12 ஆயிரம் தனியார் பள்ளி உண்டு என கணக்கிலிடப் பட்டுள்ளது.  இவை யாவும் அரசு உடமையாக்க வேண்டும். அது மட்டுமே தீர்வாக முடியும்.  தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் மட்டுமல்ல பயண வசதி, கேண்டீன் வசதி, மேலும் குடி தண்ணீருக்கு கூட பணம் வசூலித்து விடுகின்றனர்.

அரசியல் அமைப்பு சாசனத்தின் 21 ம் பிரிவில் வலியுறுத்தும் படி கற்கும் உரிமை அடிப்படை உரிமை என்றும் அனைத்து 14 வயது வரையிலுமுள்ள குழந்தைகளுக்கு  தரமான இலவசமான கல்வி வழங்க வேண்டும் என்பதே.  அரசும் தனியார் நிர்வாகவும்  சேர்ந்து கூட்டு வைத்து கொண்டு உரிமையை மறுதலிப்பது வழி அரசியல் சாகனத்திற்க்கே சவால் விடுகிறது போல் அல்லவா உள்ளது.


இன்னொரு விமர்சனம் பாடபுத்தகங்கள் தரமில்லை என்பதாகும்.  சமச்சீர் கல்வி  புத்தகங்கள் 150 கல்வியாளர்களால் 200 கோடி செலவில் 9  கோடி பாடநூல்கள் 197 தலைப்புகளில் அச்சிட்டுள்ளனர். பாடபுத்தகங்களுக்கு என உழைத்தவர்களையும் கேலிக்கு உள் ஆக்குகின்றனர் என்பது தானே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் நோக்கமுள்ள பாட பகுதியை நீக்கி விட்டு பாடபுத்தகங்களை கொடுத்திருக்கலாம்.  தனியார் பள்ளிகளில் தரும் புத்தகவும் தரம் பார்த்தா கொடுக்கின்றனர்?  புத்தகம் பதிப்பாளர்களின் கமிஷன் கண்டு வாங்குகின்றனர் என்பதும் அறிந்த உண்மையே. ஒரு வேளை புத்தக்கங்கள் தரமுள்ளதாகினும் கற்பிக்கும் ஆசிரியர்களின் தரவும் நோக்க வேண்டியுள்ளது.  கடந்த வருடம் என் மகன் படித்த நெல்லையில் பெயர் பெற்ற பள்ளியில்  ஒரே வருடத்தில்  4 வகுப்பு ஆசிரியைகள் மாறிமாறி வந்தனர்.  கல்வியில் பட்டபடிப்பு தேற்வாகாத ஆசிரியைகளை கூட நியமித்திருந்தனர்.   தனியார் பள்ளியில் ஆசிரியைகளுக்கு 2-4 ஆயிரத்துக்குள் ஊதியம் கொடுப்பதும் மட்டுமல்லாது அவர்களை கேள்வி கேட்க இயலாத அடிமைகளாக வேலை வாங்குவதால் அவர்கள் கொள்ளும் மன அழுத்தம் குழந்தைகள் கல்வியிலும் பாதிக்கின்றது என்பதை மறக்கல் ஆகாது.

பொதுகல்வி திட்டத்தில் என்ன தான் குறைகள் இருந்தாலும் தற்போதைய தமிழக கல்வி சூழலில் ஒரு மாற்றம் நிச்சயமாக தேவையே.   மேலும் கேரளாவில் போல் அரசு சேனல் நிகழ்ச்சியாக ஒவ்வொரு பள்ளியின் செயலாக்கத்தையும் சமூகம் கேள்வி கேட்க தளம் கொடுக்க வேண்டும்.  ‘நான்’ அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவன் என்ற வேறுபாடு குழந்தைகள் மனதில் மறைய வேண்டும்.   தனியார் பள்ளி மாணவனை ஒரு அடிமையை போன்று உருவாக்குகின்றனர் போராட்ட குணம் இல்லாது வெத்து பந்தாவில் வாழும் சூழலும்  நிலவுகின்றது.  வாசிப்பு  திறன்,  நாட்டு நலனில் அக்கறை அற்றவர்களாகவே கிணற்று தவளை போல் தான் உருவாகின்றனர்.  அவர்கள் போட்டியிடும் விளையாட்டுகளில் கூட அரசு பள்ளி தனியார் பள்ளி மாணவர்கள் ஒன்றாக பங்கு பெறாது இருப்பது இன்னும் கண்டனத்திற்க்கு உரியதே. 

அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும்.
அரசு பள்ளியிலும் ஒரு வகுப்பில் 100 -150 மாணவன் என்ற நிலை மாறி 20-30 மாணவன் என்ற நிலையில் வசதிகள் பெருக்க வேண்டும்
கல்வித் துறையை அரசியல் நோக்கமில்லாத குழு கண்காணித்து வழிநடத்தும் சூழல் உருவாக வேண்டும்

இன்று அரசு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று எல்லா தனியார் பள்ளிகளையும் அரசு உடமையாக்கி ஒரே சமூகமாக சமதர்ம சமூகமாக உருவாக்குவது தான் . மெட்ரிக்குலேசன் வந்த பின்பு மனிதமான்பு, பண்பு அன்பு எல்லாம், சிறார்கள் மத்தியில் குறைந்துள்ளது என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஆசிரியர்கள்- மாணவர்களை ஆகட்டும் மாணவர்கள் தங்களுக்குள்ளும் பெயர் சொல்லி பண்பாக பழகுவதை விடுத்து ஏய்  பாய்(Ai boy!) என்று அழைக்கும் கலாச்சாரமே வளந்து வருகின்றது என்பது துயர் தரும் நிஜம் ஆகும்!!!

10 Aug 2011

சாயா வேணோ ....சாயா....



இந்த வாரம் ஒரே படபடப்பா போச்சுது.  ஒரு டீ போட்டு குடிச்சா எல்லா மண்டைக்கனவும் போயிடும். அதான் டீ போட போறேன் உங்களுக்கும் ஒரு கப் டீ?


டீயில் ஒரே பொருட்கள் தான் சேர்த்தாலும் கூட அதன் சுவை, மணம், திடம் எல்லாம் டீ தயாரிக்கும் ஆளுக்கு ஆள் போல, சேர்க்கும் பொருளின் அளவுக்கு அளவு மாறுபடும்.  என் சித்தி வீட்டில் டீ என்பது ஹார்லிக்ஸ் மாதிரி தான் இருக்கும்.  சில வீடுகளில் குடிக்க தருவது டீயா? காப்பியா? என்று புரிவதில்லை!   ஹிந்திக்கார நண்பிகள் இருந்தார்கள்;  ஸ்வெட்டர் பின்னி படிக்க தோழியுடன் செல்வது உண்டு. அவர்கள் வீட்டில் வேலைக்காரர்கள் இருப்பதால் எங்களை கண்டவுடனே மாடசாமி 2 கப் டீ கொண்டு வாங்கோஎன்று கட்டளை இட்டு விடுவார்கள்.  நாங்களும் வேண்டாம், இப்போது தான் சாப்பிட்டு வந்தோம் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. இல்லைங்கோ ஒரு டீ குடிங்கோ என்று அன்பாக சொல்லி தரும் டீயை குடிக்காது எப்படி இருப்பது? ஆனால் டீயுடன் சேர்ந்து அடிக்கும் ஒரு நெடி தான் இன்று நினைத்தாலும் பயமாக உள்ளது.  நானும் என் தோழியும் நல்ல ஆற வைத்து ’டக்’கென்று ஒரே மடக்கில்  குடித்து விட்டு கண்களால் பார்த்து ஆறுதல் பட்டு கொள்வோம்.  கழுவாத கப்பில் இருந்து வந்த நெடியா, அல்லது டீஇனி கேட்கப்பிடாது என்று அவர்கள் வேலைக்காரர் ஏதும் சேர்ப்பாரா என்றும் தெரியாது.

சில வீடுகளில் ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் , சீனி, தேயிலை எல்லாம் மொத்தமாக போட்டு கொதிக்க வைத்து அதை அப்படியே வடிகட்டி தேயிலை டீ என்று தந்து விடுவார்கள்.   கொஞ்சம் முந்தி கொண்டு, காப்பி தாங்கோ என்று வாங்கி குடித்தால் தப்பிக்கலாம்.

மாமியார் வீட்டில் தான் சுவையான டீ அருந்தினேன்.  என்னவர் வீட்டில் பசுமாடுகள் இருந்ததால் பால் எப்போதும் சுண்ட சுண்ட அடுப்பில் காணும்.  அந்த பாலில் டீ போட்டு தரும் டீ எனக்கு மட்டும் ஹராமாக இருந்த்து. மாமியார், என்னவர், மாமனார் கொளுந்தனார்  என அவர்கள் எல்லோருக்கும்  4 டம்ளருகளில் வரும் போது, எனக்கு மட்டும் அடுப்பாங்கரையில் உள்ளது கலந்து குடித்து கொள் என்று கூறி விடுவார்கள்.  யாரும் காணாது என்னவரிடம் டீ வாங்கி குடித்து விடுவதே என் வழக்கமாக இருந்ததுபின்பு எங்கள் வீட்டில் நான், இடும் டீயை என்னவர் குடித்து விட்டு “நாய் கூட குடிக்காதுஎன்ற போது தான் உருப்படியான ’டீ’ இட கற்று கொள்ள ஆவல் வந்தது!

எங்கள் ஊர் வண்டிபெரியார் ஏரியா (கேரளா) தேயிலை பயிறிட்டு தயாரிக்கும் இடம் ஆகும். ஒவ்வொரு எஸ்டேட் தேயிலைக்கும் அதன்  தயாரிப்பு முறை சார்ந்து அதன் ருசியில் மாற்றம் காணும்.

தேயிலை 4500 வருடங்களுக்கு முன்பே   சீனாவில் பயன்படுத்தியாதாக  சொல்லப்படுகின்றனர்.  சீனர்கள் கியா(kia) என்றது சா(cha) என்று மாறியது. பின்பு வெள்ளகாரர்கள் சொல்வது தான் வேதவாக்கு என வந்த போது  ‘சா’  டீ யாக மாறியது

2.5 மிலியன் டன் தேயிலை உற்பத்தி செய்யும்  இந்தியாவில் 3 மிலியன் டாலர் அன்னிய செலாவணி  ஈட்டி தருவதாக தேயிலை உள்ளது. அருணாசல் பிரதேஷ், பர்மா போன்ற இடங்களில் 12 நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தியதாக சொல்கின்றனர். இந்த தேயிலை செடி  40 உலக நாடுகளிலும் பயிர் செய்கின்றனர்இந்தியாவில் டார்லிஜிங், ஆசாம், கேரளா தமிழகத்தில் நீலகிரி போன்ற மாவட்டங்களில் தேயிலை பயிர் செய்யப்படுகின்றது

ஷென் நங் என்ற ஒரு வைத்தியர் மருந்து தயாரித்து கொண்டிருக்கும் போது தவறுதலாக தேயிலை இலை வென்னீரில் விழுந்ததாகவும் அவர் அதன் மகிமையை கண்டு தேயிலை பயன்படுத்த ஆரம்பித்தாகவும் சொல்லப்படுவது உண்டு.  இன்னும் ஒரு கதையும்  உண்டு;  இந்தியாவில் இருந்து தியானத்திற்கு  சீனா சென்ற போதிதர்மா  என்ற துறைவி தான் தூங்காது தியானத்தில் இருக்க  தன் சக்தியால் உருவாக்கியதே தேயிலை செடிகள் என்றும் ஒரு  சுவாரசியமான கதை உலாவுகிறது

எது எப்படியோ வெள்ளைகாரர்கள் இந்தியாவில் ஆட்சி செய்தபோது  பஞ்சபாண்டவர்கள் தங்கள் மனைவி பாஞ்சாலியுடன் மறைந்திருந்து வாழ்ந்து வந்தகொடூர மேற்கு தொடர்ச்சி மலையில் தேயிலை பயிரிட்டு பல லட்சம் மக்களுக்கு, சிறப்பாக தமிழகத்தில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் வந்த  மலையக தமிழ் தமிழர்களுக்கு வாழ்வாதாரமாகவும் வாழ்வு அளித்ததும் இத்தேயிலை தோட்டங்களே.  ஒரு காலத்தில் தமிழர்களின் உழைப்பின் வழியாக தமிழர்களின் கோட்டையாக இருந்த தேயிலை தோட்டங்கள் வெளிமாநில முதலாளிகள் கைகளில் இருந்து மலையாளி முதலாளிகள் கைவசம் மாறும் தோறும் தமிழன்  இடம் நகர்ந்து தமிழகம் நோக்கி நகர உந்த படுகின்றான்.

தேயிலை தோட்டங்கள் பார்க்க பச்சை பட்டு சேலை உடுத்திய அழகான மங்கையாக எல்லோருக்கும் காட்சி அளித்தாலும் அதில் தங்கள் உழைப்பை சிந்தும் மக்கள் வாழ்க்கை  அவர்கள் பண்பாட்டு தளங்கள் என பல வித்தியாசமான வியற்பூட்டும் பரிணாம கதைகள் கொண்டது!  எப்படி ஜாதியும் மதவும் சமூகத்தை பிரித்து வைத்ததோ, அதே போல் தேயிலை தோட்ட மனிதர்களை அரசியலும் அதிகாரமும் ஆணவவும் ஆண்டு கொண்டிருக்கிறது.


சரி சரி கதைத்தது  போதும். தேத் தண்ணீர் போட ஆரம்பிப்போம்
·     
   1.அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைய்யுங்கள்.

·    2.  ஒரு சிறு பாத்திரத்தில் ஒரு நபருக்கு ஒரு சிறு கரண்டி தேயிலையை எடுத்து கொள்ளுங்கள்.

·  3. நன்றாக கொதித்த  நீரை டீத்தூள் போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் நேரடியாக ஊற்றி 5-6 நிமிடம்  மூடி வைத்து விடுங்கள்.
     
     6.ஒஒரு போதும் டீ தூளை  இட்ட பின்பு தண்ணீரை கொதிக்க விட கூடாது டீயின் உண்மையான ருசி மாறி கசப்பு கலந்து விடும்.

·     4. இனி கொதித்த பாலை சீனி கலந்து ஒரு கோப்பையில் எடுத்து அதில் இந்த டீ கலவையையும் வடி கட்டி ஊற்றி கலர் வைத்தே கடுப்பம் போதுமா என்று தெரிந்து கொள்ளலாம்
5. 5. இனி நல்ல 5- 6 ஆத்துhttp://www.youtube.com/watch?v=LXlrtrjAo7U&feature=related
·        
டீ ரெடி வாங்கோ குடிப்போம்.

(குறிப்பு:  இலை தேயிலை என்பவையை கொதிக்க வைத்தால் அதன் உண்மை சுவை மறைந்து விடும்.  இவ்வகையான தேயிலை தூள்களை டிக்காஷன் போன்று எடுத்து பயண்படுத்த மட்டுமே வேண்டும். )

 இந்த கட்டன் சாயாவுடன் எலுமிச்சம்இஞ்சிபுதினா இலை போன்றவையில் ஏதாவது ஒன்று சேர்த்து குடித்தால் இன்னும் பல வகை சுவையில் குடிக்கலாம். தற்போது பல வித ருசிகளில் தேயிலை பொடியாகவே தயாரிக்கப்பட்டு வருகின்றதுடீ குடிப்பதால் பித்தம் தாக்க கூடும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அற்புத நோய் வராது தடுக்க கட்டன் சாயா நல்லது என்றும் சொல்கின்றனர். தேயிலையை காற்று புகிராத டின்னுகளில் போட்டு வைத்து பாதுகாக்க வேண்டும் மற்று பொருட்களுடன் வைத்தால் அதன் மணத்தையும் சுவாகரித்து  இதன் சுவை  மணம் மாறி போக வாய்ப்பு உண்டு.


ஏழைகள் வீட்டில் பால் எப்போதும் இருப்பதில்லை, மேலும் சில பணக்காரர்களுக்கு கொழுப்பு, சர்க்கரை வியாதி தாக்கி விடுவதால்  பாலை தவிற்கும் நோக்குடன் கட்டன் சாயா குடிக்க உந்தப்படுவது உண்டு. தேயிலை தோட்ட தொழிலாளிகள் வீட்டு தேத்தண்ணீர் வித்தியாசமான  கருப்பட்டி சேர்த்த ருசியான டீயாக இருக்கும்.  சிறிய பீங்கான் பாத்திரத்தில் ஸ்டைலுக்கு குடிப்பவர்கள் அல்ல அவர்கள். காலை 6.30 மணிக்கே வேலைக்கு செல்ல வேண்டி வருவதால் பெரிய சட்டியில் கொதிக்க வைத்து கருப்பட்டியும் சேர்த்து செம்பு போன்ற பாத்திரங்களில் எடுத்து செல்வர்கள்.  மேலும் பல்லு கூசும் குளிரில் தேத்தண்ணீர் அவர்களுக்கு உணவு, குளிர் நிவாரணி எல்லாமாகின்றது.

மேலும் black tea என்று அழைக்கப்படும் இந்தகட்டன்சாயாதான் மருத்துவர்கள் பரிந்துரைப்பது.  

அற்புத நோய்க்கு சிறந்த நிவாரணி என்று சொல்லி வந்தாலும் தற்போதைய காலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்து இதை எல்லாம் கேள்விக் குறியாக்குகின்றது.



கழிவு டிக்காஷனை குப்பையில் போடாது, ரோஜா செடிக்கு இட்டால், செடி அழகான பூக்களை நமக்கு தரும்