23 Jun 2011

நெல்லை வலைப்பதிவர் சங்கமம்


நெல்லையில் வெள்ளி கிழமை (17-06-11)அன்று நெல்லை பதிவர் சந்திப்பு நடை பெற்றது. பதிவர் சந்திப்பு என்பதை பற்றி சென்னை பதிவர்கள்,  இலங்கை தமிழர்கள், வெளிநாட்டு  தமிழர்கள்  மத்தியில்  என பதிவுகள் வழியாக அறிந்திருந்தாலும் அது போல் ஒரு கூட்டம் நெல்லையில் நடைபெறுகின்றது அதில் பங்குபெறுகின்றேன் என்பது புதுமையான மகிழ்ச்சியான  அனுபவமாகவே இருந்தது.  இதுவே நெல்லையில் நடக்கும் முதல் கூட்டம் என்றும் அறிந்திருந்தேன்.  உண்மை சொன்னால்  பெரிதும் எதிர்பார்த்து இருந்த நாள் தான் இது!  நாம் எழுத்து வடிவில் காணும் மனிதர்களை நேரில்  காண, கதைக்க அவர்கள் நேரடி கருத்துக்கள் பெற  முடிந்தது என்பது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவமாகவே இருந்தது.  இதற்க்கு ஒழுங்கு செய்த திரு உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களையும் திருமதி கவுசல்யா மற்றும் அவர்கள் நண்பர்களும்  பாராட்டுதலுக்கு உரியவர்களே. இத்தருணத்தில் என் பதிவு வழியாக அவர்களுக்கு நன்றி கூறவும் கடமைப்படுள்ளேன்.

என்னுடைய வாசிப்பு தளம் ஈழ தமிழர்களின் எழுத்துக்களாக இருந்ததால் இவர்கள் எழுத்து எனக்கு பெரிதும் பரிசயம் இல்லாவிடிலும் சில குறிப்பிட்ட பதிவர்கள் சிறப்பாக சி.பி செந்தில் குமார், பனித்துளி சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல் ஐயா, தம்பி மதுரை மணிகண்டன் போன்றவர்களின் எழுத்து வழியாக சென்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.

10 மணிக்கு கூட்டம் என்று தெரிந்தும் 10.30 க்கு தான் வேண்டுமென்றே தாமதமாக சென்றேன்.  ஏன் என்றால் பல கூட்டங்களில் போய் கொசு விரட்டி கொண்டு இருந்த அனுபவம் எனக்கிருந்தது.  மேலும் முகம் தெரியாத நபர்கள் தெரியாத இடம் தேடி செல்கின்றேன் என்ற அச்சமும் உண்டு தான்!

என்னவர்,  ஜானகிராம் ஹோட்டலின் வாசலில் விட்டு விட்டு ஒரு சிறு நமட்டு சிரிப்புடன் 6 வது மாடியில் கூட்டம்  லிப்டில் தனியாக சென்று விடுவேயா என்று வினவினார்.   எனக்கும் ஒரு தயக்கம் தான் இருப்பினும் விட்டு கொடுத்து நம் பயத்தை காட்டி விடக்கூடாது என்று எண்ணி   நான் போய் விடுகின்றேன் முடிந்ததும் தொலைபேசியில் தெரிவிக்கின்றேன் என்று கூறி விட்டு வீர நடையாக  சென்று விட்டேன்.  பொது இடங்களிலுள்ள   லிப்டு, பல்பொருள் அங்காடியிலுள்ள எஸ்கலேட்டர் இவை எல்லாம் பயம் தரக்கூடியவை தான் எனக்கு!  சாரை சாரையாக நெடுகையும் குறுகையுமாக வாகனங்கள் போகும் ரோடு கூட பயம் தான் ஆனால் ரோடு தாண்ட இப்போது வல்லுனர் ஆகி விட்டேன்.   அதிலும் கண்ணில் கருப்பு கண்ணாடி அணிந்து ரோடில் குறுகே தாண்டுவது இன்னும் பாதுகாப்பு . ரோடில்  வருபர்கள்(ஆட்டோ தவிற்த்து) ஐயோ பாவம் என்று வழி விட்டு செல்ல வாய்ப்புகள் உண்டு!!

அப்படி தான் அந்த லிப்டுக்குள்ளும் காலெடுத்து வைத்தேன்.  தமிழ் படத்தில் போன்று ஒரே ஒரு நபர் மட்டுமே கையில் பிளாஸ்க்குடன் என்னை கேள்வி குறியால் கொஞ்சம் முறைத்து பார்த்து  கொண்டு 3 வது மாடிக்குள்ள பொத்தானை அமுத்தினார். அவர் இறங்க போகும் போது என்னை நோக்கினார்; நான் 6 வது மாடி என்றேன் அவரும் பாவம் ஏதோ பேக்கு போல என்று தோன்றியதோ என்னவோ 6 வது பட்டனை அமர்த்தி விட்டு அதுவாகவே கதகு திறந்து விடும் என்று கூறி வெளியில் சென்றார். மனுசா ஒரு உதவி செய்தீர்கள் என இப்படி கதைக்கலாமா; கதைகை உடைத்து கொண்டு போக மாட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டு சிறு புன்முறுவலுடன் அப்பிராணியாக நின்று கொண்டேன்.   லிப்டு நின்று விட்டது வெளியில் வந்த போது அது ஒரு மொட்டை மாடி அழகாக சாப்பாடு மேஜைகள் இடப்பட்டிருந்தது குழந்தைகள் விளையாட்டு பொருட்கள்  கண்ணை கவரும் செடிகள் அதன் ஒரு கோடியில்  ஒரு கண்ணாடி கதவு கொண்ட பெரிய அறை.

கதகை தள்ளி திறந்து உள்ளெ சென்றேன் என்னை கேள்வி குறியாக நோக்கினர் நான் தான் “சிஐடி போலிஸ் ஜோஸபின்” என்று சொல்லும் கம்பீரமாக ‘நான் வலைப்பதிவர் ஜோஸபின்’ என்றேன். உங்களை தான் தேடி கொண்டிருந்தோம் என்று பலமான வரவேற்ப்பு கிடைத்தது.  ஒரு கரம் என்னை அன்பாக அழைத்து சென்று  ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டேன்.

 நல்ல சூழல் எங்கும் சிரித்த் முகங்கள்! பொதுவாக நெல்லையில் விசேஷ கூட்டங்களுக்கு சென்றால் சிரிப்பு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.    வீடு தேடி வந்து பத்திரிக்கை தந்து அழைப்பவர்கள் கூட அவர்கள் கூறிய மண்டம் முன்  நாம் சென்றடையும் போது அன்று தான் அறிமுகம் ஆவது போல் விரிந்த கண்களுடன் கேள்வியே புருவமாக கொண்டு இருகிய முகத்துடன் காட்சி தருவார்கள். இங்கு எல்லாம் மாறுபட்டு இருந்தது .  எல்லோரும் சிரிப்பாலும் பேச்சாலும் தாம் பல வருடங்களக அறிமுகமானவர்கள் போல் அன்பாக தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தனர். 

என் கண்கள் முகநூலில் புகைப்படம் கண்டு, ஏற்கெனவே மின் அஞ்சல் வலைப்பதிவு வழியாக  அறிமுகமுள்ள ரத்தின வேல் ஐயாவை தேடியது அதே நேரம் அவர்களும் என்னை அடையாளம் கண்டு விட்டார்.  அவர் மனைவி உமா அம்மையாருடன் வந்திருந்தார் மிகவும் அன்பாக என்னிடம் கதைத்தார்.   ஒரு முறை என் புகைப்படுத்தில் கருத்து வெளியிட்ட போது “ எனக்கு 3 ஆண் குழந்தைகள் உண்டு உன்னை என் மூத்த மகளாக நினைக்கின்றேன் அம்மா “ என்றிருந்தார் அவர் கண்களிலும் அந்த பாசம் கரை புரண்டோடியது.  அவர் மனைவி அவரை ஒரு குழந்தையை போல் கவனித்து கொண்டு அமைதியாக எல்லாம் அவதானித்து கொண்டு அவர் தோழியாக அருகில் இருந்திருந்தார். ஐயா அவர்கள், அவருடைய ஊர் வீசேஷமான இனிப்பு பண்டம்   பால் கோவா எனக்கென கொண்டு வந்து தந்தபோது இன்ப அதிற்ச்சியாகவும் இருந்தது.

அன்றே முதல் முதலாக கண்டுள்ள கவிதை எழுத்தாளர் கல்பனாவின் நட்பு பல வருடம் கண்டு பழகிய இனிமையான தோழியோடு ஒத்திருந்ததும் ஆச்சரியத்தை கொடுத்தது.  அவர் தமிழக வலைப்பதிவுகளுடன் மிகவும் அறிமுக ஆகியவர் என்பதால் அவர் அங்கு வீற்றிருக்கும் பல பதிவர்களை அறிமுகப்படுத்தி தந்து கொண்டு இருந்தார்.  சௌதியில் இருந்து வந்து பங்கு பெற்ற ஜாகிர் ஹுசைன், நாகர்கோவில் இருந்து வந்த வெறும் பையன் ஜெயந்து, நண்பர் தங்க சிவம் மற்றும் சேலத்தில் இருந்து வந்திருந்த ரசிகன், தூத்துகுடி SVS, நாகர்கோயிலில் இருந்து வந்த நண்பர் மனோ, கோவில்பட்டியில் இருந்து விஜயம் செய்த நண்பர் பாபு போன்றோர் மிகவும் அன்பாக- நட்பாக பழகியது மிகவும் ஆனந்தமாக இருந்தது.  தமிழக வலையுலகத்தின்  ஹீரோக்களாக வலம் வரும் சி.பி செந்தில் குமார், பனித் துளி சங்கர், அமைதியே உன் பெயர் தான் தண்ரோரா என்று சொல்லும் வலைப்பதிவர் தண்டோரா, இளம் வலைப்பதிவர்கள் தமிழ்வாசி பிரகாஷ், கழுகு வலைப்பதிவின் கோமாளி செல்வா, வம்பை விலைக்கு வாங்காத மதுரை மணிகண்டன் இவர்கள் எல்லோருடனும் பதிவர்கள் என்று ஒரே குடையின் கீழ் அணி திரண்டதில் பெருமையாகவும் இருந்தது. அதிலும் எழுத்தாளர் சி. பி செந்தில் சிரித்து கொண்டே  தன் நகைச்சுவை கொண்ட பேச்சாற்றலால் எல்லோரின் கவனைத்தையும் தன்பால் கவர்ந்து கொண்டே இருந்தார்.  பனித் துளி அவர்கள் தான்பேசுவதை விட அடுத்தவர்கள் பேசுவதையே அவதானித்து கொண்டிருப்பதில் ஆர்வம் இருப்பதாக தெரிந்தது.                                                                                            இனி என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம்.

11 comments:

  1. ஆகா.... என்னே உங்கள் துணிச்சல்....
    லிப்ட்ல தனியா வந்தாங்களாம்...

    ReplyDelete
  2. லேட்டா...வந்தாலும் லேட்டஸ்ட்டா எழுதறிங்க.....

    ReplyDelete
  3. "கதைக்கிறேன்" என்பது தமிழ்நாட்டில் பாவனையில் உள்ளதா? இந்த ஒரு சொல்லுக்காகவே தமிழ்நாட்டு நண்பர்களால் நக்கல் அடிக்கப்பட்டிருக்கிறேன். "பேசுகிறேன்" என்று சொல்வதுதானே? என்பார்கள்.

    ReplyDelete
  4. பல பதிவர்களின் புனைப்பெயர்கள் நல்ல நகைச்சுவை.

    அவர்களில் சிலரைப் படித்திருக்கிறேன். சிலர் குட்டுப்பட்டிருக்கிறார்கள். எ.கா. தண்டோரா. அவரின் சிறுகதையொன்றை வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறேன்.

    ஜோசப்பினை ஒரிரு சமயங்களில் படித்திருக்கிறேன். குறிப்பாக கேரளத்தைப் பற்றிய‌ பதிவுகள்.
    ஒரு ஆங்கிலப் பதிவையும் படித்திருந்திருக்கிறேன். அஃது ஒரு நாய்க்குட்டிப்பற்றியது. அப்பதிவை நான் ஒரு ஸ்பெசிமன் ஆக எடுத்து ஆங்கில ஆசிரியர்களிடம் உரையாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். என் வாதம் அங்கே: மொழி எதற்காக? உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிறிது வெற்றிபெற்றாலும் அம்மொழி ஆங்கே சிறக்கிறது என்பதே. சிலர் குறிப்பாக இந்தியர்கள் என் வாதத்தை ஏற்கவில்லை. ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அச்செபிசிமன் பின்னால் எவரேனும் அவர்கள் நூலகளின் வைப்பார்கள். அனுமதியில்லாமல் செய்ததற்கு மன்னிக்கவும்.

    ஜோசபின், சந்தி மற்றும் விகுதிப்பிழைகளை நீக்கி எழுதவும்.

    குட், வெரி குட்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    அன்று உங்களது பேச்சு மிகவும் நன்றாக இருந்தது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. என் பதிவுக்கு வருகை புரிந்து பின்னூட்ட மிட்ட பிரகாஷ்,simmakkal,ரத்னவேல் ஐயா உங்களுக்கு என் நன்றி வணக்கங்கள். பதிவு நட்பு அருமையானது அழகானது!

    ReplyDelete
  7. அப்பதிவை நான் ஒரு ஸ்பெசிமன் ஆக எடுத்து ஆங்கில ஆசிரியர்களிடம் உரையாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். /////நண்பா வாசித்து விட்டு எனக்கு ஆனந்தம் மட்டுமல்ல ஆச்சரியமும்.கட்டணம் வேறு வசூலிக்க வேண்டி உள்ளது!!! ஆங்கில பதிவு எங்கள் படிப்பு வேளையில் வீட்டு பாடமாக செய்தது. தமிழும் என் பேச்சு மொழி மட்டும் தான். தமிழில் ஒன்றாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளேன். இருப்பினும் என் உணர்வுகளை பகிர தாய் மொழி தான் உதவுகின்றது. மலையாளம் வளர்த்த அம்மாவும் ஆங்கிலம் ஆசைப் பட்ட அம்மாவுமாக ஆகியது. உங்களின் முகநூல் இணைப்பு அல்லது இணைய முகவரி வேண்டுகின்றேன்.சந்தி மற்றும் விகுதிப்பிழைகளை நீக்கி எழுதவும்.//// நிச்சயமாக முயல்வேன்

    ReplyDelete
  8. "கதைக்கிறேன்" என்பது தமிழ்நாட்டில் பாவனையில் உள்ளதா? ///நண்பா உங்களுக்கு என் வணக்கங்கள்! ஈழ பதிவுகளை இளம் நிலை ஆராய்ச்சிக்கு என பயன்படுத்தியிருந்தேன். 520 க்கு மேல் வலைப்பதிவுகள் படித்து உள்வாங்க வேண்டி வந்தது. கதைக்கிறேன் என்ற வார்த்த ஒரு அன்னியொன்னியம் சுவாரசியம் கொண்ட வார்த்தையாக இருந்தது எனக்கு. மேலும் பேசுவதை விட கதைக்க இன்னும் மகிழ்ச்சி. உணர்வாலும் ஈழ மக்கள் உணர்வுகள் என்னையும் ஆட்கொண்டது. என் சொந்த ஊர் கேட்டால் கூட 4 ஊர் பெயரை தேட வேண்டி வருகின்றது என் தேசம் நாகர்கோயில் பிறப்பு வளர்ப்பு கேரளா வண்டிபெரியார், புகுந்தது தூத்துகுடி(நாசரேத்), இருப்பதோ திருநெல்வேலி இனி போவதோ தெரியவில்லை? இருப்பினும் "கதைக்கிறேன்" என்ற வார்த்தை என் வலைப்பதிவுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கின்றது என்று நம்புகின்றேன்!!ஒரு பதிவில் ஒரு 'கதைக்கிறேன்' என்ற சொல்லாவது இல்லாது பதிவதில்லை.

    ReplyDelete
  9. அன்று நீங்கள் பேசியபோது உங்களது அம்மா வீட்டில் திருமணத்திற்கு முன்பு நீங்கள் பயன்படுத்திய உங்களது அறையை உங்களது சகோதரர் தற்போது பயன்படுத்துவது உங்களுக்கு மனதுக்கு கஷ்டமாக இருப்பாதாக சொல்லும் போது உங்களது பேச்சு மனதைத் தொடுவதாக இருந்தது.

    ReplyDelete
  10. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.. நானும் இப்படி எல்லாம் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன் என்னால் முடியவில்லை ஏன்..?

    ReplyDelete