3 May 2011

நேர்முகத்தில் காணும் கொடிய முகங்கள்!!!


நேர்முகத் தேற்வு எப்போதும் சங்கோஜத்தோடும் ஒரு வித ஐயத்தோடும் என்னால் நோக்கப்படுவதாகவே இருந்து வருகின்றது. ஒவ்வொரு நேர்முகம் நிகழும் போதும் அடுத்த முறை இந்நிகழ்ச்சிக்கு இனி வரப் போவதில்லை என்ற உறுதியுடனே வெளியேறி வருகின்றேன். அணியும் உடையில் இருந்து, செயல் எல்லாம் அளக்கப்படும் மேடை.! இந்திய மரபு அனுசரித்து 6 மீ சேலையை சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் என்னையும் அழைத்துள்ள என்னவருடைய அன்றய பயணம் ½ டண் மூட்டையை சுமந்தது சென்றது போல் இருந்திருக்கும். பானல் என்ற பெயரில் 5 -6 பேர் வரிசையாக இருந்து கேள்வி எழுப்புவதை நினைத்தாலே குளிரூட்ட அறையில் இருந்தால் கூட நான் வியர்த்து நடுங்கி தவிப்பது உண்டு. என் நண்பர்கள் உங்களுக்கு என்ன எளிதாக ஜெயித்து விடுவீர்கள் என்று வாழ்த்துவார்கள். என்னை மதிப்பிட போகின்றார்கள் என்று அறியும் போதே வரும் வார்த்தை தொண்டையில் இருந்து வாய் பக்கம் வர தயங்குகின்றது. நெருங்கிய நட்பு வட்டத்தில் நான் கலகலப்பான நபராக இருந்தால் கூட ஒரு புது கூட்டத்தில் பூனை போல் அவதானித்து கொண்டு பம்மியிருக்கவே எனக்கு எப்போதும் பிடித்தாக இருந்துள்ளது.


சில நேர்முகத் தேற்வுகள் வழமைக்கும் மீறி சுவராசியமாக மாறுவதும் உண்டு. நேர்முக தேற்வுக்கு  சென்ற இடத்தில் முதல் முதலாக ஆங்கிலத்தில் பாடம் எடுத்த அனுபவவும் உண்டு. சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வு போல் நெல்லையில் இல்லை. இங்கு ஒரு வித இறுக்கம் இரு பக்கவும் நிகழும். ஒரு முறை நேற்முகம் கண்டவர் என் பெயரின் அர்த்தம் கேட்டார். அது ஒரு எதிர்பாராத கேள்வியாக இருந்தால் கூட பெயரை பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால் மகிழ்ச்சியாக விவரித்தேன்.




நாகர்கோயிலில் ஒரு நேர்முகம் சென்ற போது உட்கார ஒரு நாற்காலி கூட தரவில்லை. கணவருடன் தான் பேசுவோம் என்று கூறினர். என் சாற்றிதழ் நோக்காது என்னவரிடம் உள்ள பணத்துக்கு தான் மதிப்பு என்பது பின்பு புரிந்தத போது அந்த வேலை மேல் எனக்கு இருந்த மதிப்பு அற்று போனது!!.


இன்றும் அது போல் தான் ஒரு நேர்முகத்துக்கு வந்து சேர்ந்தேன். பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். வர வேண்டிய சிறப்பு தேற்வாளர்களுக்கு என காத்திருந்தனர்.  அலுவலகத்தில் விசாரித்த போது நான் இன்னும் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்ததால் நாற்காலி தேடி என் கால்கள் போயன. பெண்கள் அவர்களுக்கு ஒன்றும் அவர்கள் கை பைக்கும் என இடம் பிடித்து இருந்ததால் ஒரு ஓரமாக ஒரு இளைஞர் பக்கம் 5 நாற்காலி தள்ளி இடம் பிடித்தேன். பெண்கள் பக்கம் இடம் கிடைக்காததில் மகிழ்ச்சியும் தான் அவர்கள் படபடப்பு என்னையும் பற்றி கொள்ள கூடாது என்று கருதலாக இருப்பது உண்டு. ஆனால் ஓரந்தில் குந்தியிருந்த நபர் நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் தன் இருப்பை பற்றி தன் நண்பர்களுடன் அலைபேசியூடாகவும் குறும் செய்தி வழியாகவும்  உரையாடி கொண்டிருந்தார் என்பது பின்பு தான் புலன்பட்டது.

கொஞ்சம் நேரத்தில் அவர் நண்பன் வியர்வை நெடியுடன் வந்து, நெல்லையில் அப்படி பார்க்க ஒன்று மில்லை ஆலயம் அல்லது அறிவியல் மையம் சென்று வரலாம் என்று நெல்லையின் இல்லாமையை பற்றி சாடி கொண்டிருந்தார். அந்த கொடிய நெடியோ, திருநெல்வேலி வெயிலோ அல்லது நேர்முகம் எண்ணிய கலக்கமோ நான் தலைவலியால் சுழன்று கொண்டிருந்தேன் அப்போது! “இதோ பதில் வந்து விட்டது” என்ற குறும் செய்தி ஒலி என் தலைவலியை இன்னும் கூட்டியது. அவர் காதலி இப்போது இணைப்பில் வந்து விட்டார் போலும். கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள். அவரும் விலாவரியாக நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். பல போது கொஞ்சியும் பின்பு மிஞ்சியும் பேசுவது அவர் காதலியிடம் தான் என்று உறுதி செய்தேன். இந்த கலவரத்திற்க்கு அந்த பெண்கள் பக்கமே இருந்திருக்கலாம் என்று எட்டி பார்த்த போது அங்கு காலி இருக்கைகள் ஒன்றும் தென்படவில்லை. கொஞ்சம் நேரத்தில் தோழன் வந்தவுடன் இடத்தை காலி செய்து என் தலை வலி மட்டுபடுத்த உதவினார் அந்த இளைஞன்.




என் துறை சார்ந்த இன்னொரு பெண்ணும் வந்திருந்தார். எனக்கு அவரிடம் கதைக்க கனக்க ஆசை தான்! ஆனால் எனக்கு ஒரு நேற்முகம் வைத்து. உள்ள தைரியத்திலும் மண் அள்ளி போட்டு விட கூடாது என்பதால் சிரிப்புடன் என் இருக்கையில் பற்றி கொண்டு இருந்து விட்டேன். நேற்முகத்துக்கான சிறப்பு அழைப்பு மணி ஒலித்து விட்டது. என்னை அழைத்து அலுவலகத்துக்குள் போருக்கு தயாராகும் போர்ப் படை வீரர் போல் உட்கார வைத்திருந்தனர்.  திடீர் என்று ஓடி வந்து அந்த பெண் "மேடம் நீங்கள் ஜோசபின் தானே, உங்களுக்கு வகுப்பு எடுத்தலில் முன் அனுபவம் உண்டா?" என்று பதட்டத்துடன் வினவினார் என் எதிராளி பெண். அது இல்லை என்பது தான் என்னுடைய பதட்டமே. நான் வெளியில் காட்டி கொள்ளாது ஆமாம் சிறிய காலம் என்று மொழிந்து நீங்கள் எந்த கல்லூரியில் பணி புரிகின்றீர்கள் என்றேன். அவர் கூறிய கல்லூரியில் எங்கள் துறையை சேர்ந்த ஒரு தம்பதி இருப்பது எனக்கு தெரியும். இருப்பினும் வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என எண்ணி மிதமான சிரிப்புடன் அமைதியாக நின்று கொண்டேன். அவர் என்னை விட்ட பாடில்லை உங்களை எங்கள் கல்லூரியில் வேலை பார்ப்பவருக்கு தெரியுமாமே உங்களுக்கு அவர்களை தெரியுமா எந்த வருடம் முடித்தீர்கள் என்று புலனாய்வுத் துறை போன்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார். எத்தனை பேர் வேலைக்கு தேவை என்பது தெரியாது அவருக்கு ஏற்கனவே வேலை உள்ளது, இருந்தும் அவரும் முகம் சிவந்து என்னையும் நீல நிறம் ஆக்குகின்றார். இதே போல் பலர் தங்கள் போட்டி, வெற்றி வெறியால் கொள்ளும் பதட்டம் அவர்களை மட்டும் அடையாது பக்கத்தில் இருப்பவர்களையும் பதட்டத்தில் தள்ளுவது உண்டு!



1998 ல் ஒரு தனியார் ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் 4 பெண்களில் ஒருவராக நானும் வலியை தாங்கி என் முதல் குழந்தையின் வரவுக்காக காத்திருக்கின்றேன். அதில் என் வலப்பக்கம் ஒரு பெண் இளம் பெண்; மிகவும் இக்கட்டான சூழலில் அனுமதிக்கப் பட்டிருந்தார் மாப்பிள்ளை உயர்பதவியிலுள்ள கறுப்பு தமிழன் அவருக்கு வெளுத்த பெண் வேண்டும் என்றது வாழ்க்கை லட்சியம் என்பதால்; 18 வயது நிரம்பாத சிவப்பு நிறம் கொண்ட அழகான சிறு மலையாளப் பெண்ணை மணம் முடித்து ஆஸ்பத்திரியில் அனுமத்திருந்தார். அவர் பக்கத்தில் திடகாத்திரமான மலையாள பெண்குட்டி, பக்கத்தில் வேறு யாரோ 2 பெண்கள் இரண்டாவது பிரசவத்திற்க்கு என . எங்கள் 3 பேருக்கும் முதல் பிரசவ அம்மாக்கள் என்பதால் தனி கவனிப்பு இருந்தது எங்களுக்கு. ஒவ்வொரு முறை செவிலியர் பரிசோதனை கழிந்து செல்லும் போது இப்பெண் ஒரு வித பதட்டம் பொறாமையுடன் உங்களுக்கு நோவு வந்து விட்டதா என்று விசாரித்து கொண்டே இருப்பார். நானோ 3 நாட்களுக்கு முன்பே அனுமதிக்கப் பட்டு ஊசி இட நரம்புகள் இல்லாத அளவுக்கு மருத்துவ சேவை வாங்கி கொண்டிருக்கின்றேன். சிறுத்தை படம் நாயகன் போல் 'வலியிலும் சிரிப்பு உதடுகளில் மறையாது இருக்க வேண்டும் ' என்ற எண்ணத்தில் முகம் வாடாது கருத்தாக இருக்கும் என்னிடம் இப்பெண்ணின் கேள்வி பதட்டத்தை கொடுக்க ஆரம்பித்தது. இப்படியாக தங்களை மட்டும் நோக்காது பக்கத்தில் இருப்பவர்களையும் இரத்த கொதிப்புக்கு அழைத்து செல்லும் இரத்ததின் இரத்ததமான இந்த உடன் பிறவா எங்கள் இனத்தை பற்றி என்ன சொல்ல ?

2 comments:

  1. very nice one my dear

    ReplyDelete
  2. பங்கிட்டால் பழு(சுமை) பாதி குறையும் என்று தான் பங்கிடுகிறார்களோ , சிலர் வேன்டுமென்றும் குளப்புவார்கள் ,சிலர் தாமும் குளம்பி மற்ரவ்ர்களையும் குளப்புவார்கள்..எல்லாவற்ரையும் தாண்டி விட்டீர்கள் நல்ல அனுபவம் ... இங்கு நோர்வேயில் தனித் தனி நேர்முகப் பரீட்சை , போட்டியாளரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் குறைவு

    ReplyDelete