26 Jan 2011

மலையாளத் திரைப்படம் - நீலத் தாமரை



இன்று “நீலத் தாமரை”  என்ற மலையாளப்படம் காணும் வாய்ப்பு கிட்டியது. லால் ஜோசின் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் திரைக்கதையில் 1976-80 காலகட்டத்திய தளத்தில் கதை அழகாக சென்றது. கேரளத்தவரின்  பழைமையான வீடு, அவர்கள் கோயில்(அம்பலம்), கோயில் குளம் , காயல் என பார்க்க பரவசம் ஊட்டும் இடமாக தேர்வு செய்து படம் பிடித்திருந்தனர். மைனா படம் நாயகி இரண்டு காட்சிகளில்  வந்து போனார்.
படம் தளம், கதை விருவிருப்பாக மட்டுமல்ல அமைதியாக செல்கின்றது. கதாபாத்திர தேற்வு, கதாபத்திரங்களின் உடை நடையிலுள்ள நளினம், சுத்தம் மலையாள கலாச்சாரத்தின் எடுத்துகாட்டாக உள்ளது.   சமீப காலமாக மலையாளப் படங்களும் நம் தமிழ் மற்றும் ஹிந்தி படத்தை பார்த்து அதன் தனி தன்மை இழந்து இருந்தது.  இப்படம் அதற்க்கு மாறாக 90 களில் பார்த்த மலையாளப் படத்தை நினைவு கூற செய்தது
படம் இப்படியாக தொடங்குகின்றது. அந்த வீட்டு வயோதிக தாயாரை பார்க்க அவருடைய இறந்த மகனுடைய மனைவி, அவருடைய பழைய வீட்டு பணிப்பெண்ணும் (மகனுடைய காதலி) வருகின்றனர். மகனுடைய பழைய மனைவியும் வேலைக்காரியும் ஒருவருக்கொருவர் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.  வேலைக்காரியின் பழைய நினைவுகளோடு கதை செல்ல துவங்குகின்றது.
ஒரு  பழைமை வாய்ந்த பணக்கார வீட்டிற்க்கு ஒரு வண்ணார் குலத்தை சேர்ந்த பெண் வேலைக்கு வருகின்றாள். பொறுப்பாக ஒவ்வொரு வேலையும் செய்கின்றாள். அவ்வீட்டு மகன் வக்கீல் படிப்பு முடிந்து வீட்டிற்க்கு வருகிறான்.  பெண்ணை பார்த்த உடனே அவளை ஆள் கொண்டு விட  வேண்டும் என துடிக்கின்றான். அவளுக்கும் அவன் மேல் ஒரு அதீத காதல் தான். அவளுக்கு அவனிடம் சரணகதி ஆகி விடுவதா வேண்டாமா என இரு மனத்தில் உள்ளார். கோயில் குளத்தில் அதிசயமான ஒரு நீலக்கலர் தாமரை உள்ளது .அது  உண்மையான பக்தியுடன் பக்தர்கள்  பிரார்த்தனை பண்ணினால் பூக்கின்றது.  அவளை தினம் அழைக்கும் வீட்டு யஜமானியின் மகனின் ஆசைக்கு போகவா வேண்டாமா என அறிய பிரார்த்தனை செய்கின்றாள். நீலத் தாமரையும் பூக்கின்றது.(?) அவனுடம் போய் உறவு வைத்து கொள்கின்றாள் பணிபெண்ணும்!. கதாநாயகனோ பெண்ணை வெறும் மாம்ச-பிண்டமாக பார்ப்பவனாக இருக்கின்றான். அவன் படிக்கும் பொழுதே பழகிய பணக்கார மற்றும் அவன் சமுதாய பெண்ணை மணந்த பிறகும் வேலைகாரியிடம்  வலுகட்டாயமாக உறவை பேணுகின்றான். அவன் மனைவி இவர்கள் உறவை கண்டு பிடித்து விடுகின்றாள்.  அம்மா தான் வெறும் டம்மி அம்மாவாக உள்ளார்! மகன், துணி துவைப்பது, காலில் அடிபட்டவுடன் எண்ணை தேய்த்து விடுவது, மகனுக்கு விருப்பமான உணவு பரிமாறுவது என சிறு வயது பணியாள் பெண்ணை எல்லை இல்லாது அனுமதிக்கின்றார். எல்லாம் சோம்பல் செய்யும் வேலைதானோ!
பின்பு வேலைக்காரி அவள் முறை மாப்பிளையை மணந்து, தன்  பெண்ணையும் டாக்டருக்கு படிப்பித்து வாழ்க்கையில் ஒரு நல் நிலையில் வந்து விடுகிறார். இங்கோ கதாநாயகன்  சிறுவயதிலே இறந்து போய் விடுகின்றான் அவன் மனைவி அவனுடைய மகளை தன் மாமியாரிடம் கொடுத்து விட்டு வேறு ஒருவரை மணம் முடித்து இரு குழந்தைகளுடன் வாழ்கின்றார்.

பல இடங்களில் படத்தின் கதையில் ஓட்டையுள்ளதை காணமுடிந்தது. காமிரா கையாளுபவர் எவ்வளவு தான் தன் ஒளிப்பதிப்பால் கதையிலுள்ள குறையை  களைய நினைத்தாலும் அங்கங்கு கதையிலுள்ள பொய் முடிச்சு தெரியத்தான் செய்கின்றது. வேலைக்காரிகள் ஏமாறுவதும் யஜமானர்களின் பணக்காரத்தனம் எல்லாம் அதே போல் காட்டியிருந்தாலும் கடைசி காட்சியில் அநியாயத்திற்க்கு வீட்டு யஜமான பாட்டியை நல்லவராக காட்டுவதும் வேலைக்காரி இன்று டாக்டர் மற்றும் ஆசிரியர்  ஆகிய குழந்தைகளின் அம்மாவாக இருப்பினும் தன்னை ஏமாற்றிய கதாநாயகனிடம் கோபம் கொள்ளாதிருப்பதும் யஜமான அம்மாவிடம் கொள்ளும் பக்தியும் கொஞ்சம் ஓவராகவே தெரிகின்றது. மேலும்  கோயில் குளத்தில் பூக்கும் பூ காண்பவர்களின் காதில் பக்தி என்ற பெயரில் நல்ல பூ சுற்றவே பயன்படுகின்றது அதையே படத்தின் தலைப்பாகவும் தேர்ந்துள்ளனர்!!!. சாதி பேய் மலையாளிகளிடமும் இருப்பது ஓர் சில காட்சியில் காணலாம். வண்ணார்களை பயணம் செல்லும் போது விழிக்கல் ஆகாது மேலும் ஏழைகளை எப்படியும் கையாளலாம் என்ற மிதப்பும் நல்கின்றது இப்படம் வழியாக. அதே போல் தன் அம்மா இரண்டாம் திருமணம் முடித்தார் என்ற காரணத்தால் அம்மாவை மகள் வெறுப்பதும்  சகிக்க முடியாது தான் உள்ளது. மலையாள கலாச்சாரம் நம்மைவிட 20 வருடமாவது முந்தியுள்ளது என எண்ணம் கொள்ளும் போது இவ்வகையான படங்கள்  அப்படியல்ல என்று சொல்ல வருகின்றதோ? எப்படியோ படம் நம்மை இருக்கையை விட்டு எழாது பார்க்க தூண்டுகின்றது என்பதில் ஐயமில்லை.
  

5 comments:

  1. அதிக சினிமாத்தனம் இல்லாமல் இருந்தது உண்மையே . நான் நினைத்தேன் இப்பவும் அப்படித்தானே இருக்கும் என்று, ஆனால் உங்கள் விமர்சனம் சொல்கிறது இப்போ அங்கும் சினிமாத்தனம் புகுந்து விட்டது என்று.

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றிகள்

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம். ஆனால் இத்தகைய திரைப்படங்களை இங்கு இலங்கையில் பார்க்கக் கிடைக்காது.

    ReplyDelete
  4. hmmmmmmm i found interesting articles from ur blog ...carry on

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பர் ராஜன், ராம்ஜி யாஹூ அவர்களே மற்றும் டொக்டர் சாப், மேலும் பேர் தெரியாத இனிய நண்பர்!

    ReplyDelete