இன்று பக்கத்து வீட்டு பூர்ணிமாவின் பூப் புனித விழா வுக்கு சென்றிருந்தோம். சிறு பெண் என்பதை விட குழந்தையாக இருந்தாள். அவளுக்கு அவளை விட கனமான மாலை அணிவித்து கை நிறைய வளையல்கள் 10 விரலுக்கும் 20 க்கு மேல் மோதிரங்கள், கழுத்து தெரியாத வண்ணம் தங்க கல்லு மாலைகள், ஒட்டியாணம் என அணிவித்து அதிலும் சிறப்பாக ஒரு சேலையை உடுத்தி அல்ல சுற்றி, முகத்தில் சந்தனம் பூசி அதன் நடுவில் ஒரு பெரிய குங்கும் பொட்டு இட்டு அமர வைத்திருந்தனர்.
உறவினர்கள், பெற்றோர் நண்பர்கள் என வரிசை கட்டி வீடியோவுக்கு தலைகாட்டி பணத்தை சாட்சியத்துடன் கொடுத்து செல்கின்றனர். சே, சே என அலுத்து கொண்டு எப்படா தப்பிபோம் என உதட்டை பிதற்றி கொண்டு எரிச்சலுடன் நின்று கொண்டிருந்தாள் பூர்ணிமா. அவள் தோழர்கள் வந்தவுடன் தலையை தட்டி விளையாடுகின்றாள், முகத்தில் அவளறியாது சிரிப்பு கொப்பளித்து கொண்டு வருகின்றது. குழந்தையின் அம்மா ஒட்டியாணம் அணிந்து குழந்தைக்கு விஷேசமா அல்லது அம்மாவுக்கா என தோன்றும் விதம் அழகாக தோரணையாக வீடியோவுக்கு நின்று கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நிகழ்சிக்கும் ஒரு அர்த்தம் கற்பிப்பது போல் இந்த நிகழ்சிக்கும் என சில கதைகள் சொல்லத்தான் செய்கின்றார்கள். ஒரு நண்பி சொல்லி கொண்டிருந்தார் இந்த நிகழ்ச்சி வச்சா தான் வரன் வருவார்களாம்! பெண் படிப்பது 6 ம் வகுப்பில்! சிரிப்பு தான் வந்தது எனக்கு. பழைய காலங்களில் பெரும்வாரியாக பெண் பெரியவள் ஆவது 9,10 வகுப்பு படிக்கும் போது தான் நடக்கும். பெண்களின் படிப்பை விட வரன் பார்க்கும் கடமை உணர்வுள்ள பெற்றோர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முறை மாமனுக்கு திருமணம் செய்து கொடுக்கும் காலம் அது.
இது மனித உடல் வளர்ச்சியின் ஒரு பாகம் என்பதாக இருக்கும் போது ஏன் பெண்களுக்கு மட்டும் கொண்டாடுகின்றனர். ஆண்கள் வயதிற்க்கு வரும் நிகழ்ச்சியை ஏன் கொண்டாடுவதில்லை என கேட்டு கொண்டேன். மாலா அக்கா மகன் மோகனுக்கும் 12 வயது இருக்கும். குரல் மாறி மூக்கு பக்கம் மீசை எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டது. . அதும் சந்தோஷமான நிகழ்வு தானே ஏன் கொண்டாடவில்லை என கேட்டு கொண்டேன். மனிதன் கருவில் உருவாகுவதில் இருந்தே அவனுடைய வளர்ச்சியும் பல கட்டமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது. பெரியவள் ஆகின்றாள் என்பதே அவள் இனப் பெருக்கத்திற்க்கு தயார் ஆகி விட்டார் என்பது மட்டுமே. இதற்க்கு என ஊராரை அழைத்து சொல்ல தான் வேண்டுமா? இப்படி கேள்விகள் நிறையவே வந்தது.
பூர்ணிமா அம்மா தான் மண்டபம் நிறைந்து நின்றார். என் கண் முழுக்க அவர் முடி அலங்காரத்தில் இருந்தது. இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் இன்னும் என்னை ரொம்ப கவர்ந்தது. பூர்ணிமா அப்பாவுடன் நாணத்தில் போட்டோவுக்கு முகம் காட்டுவதிலே மும்மரமாக இருந்தார். ஏனோ அவ அப்பா ரொம்பவும் வெட்கத்தில் நெளிவது பல பொழுதும் தெரிந்தது.
பூர்ணிமாவுக்கு கடந்த வாரமாக சத்தான ஆகாரம் கிடைத்ததோ தெரியவில்லை. உடல் சுகாதாரம் பற்றியுள்ள வழிமுறைகள் சொல்லி கொடுத்தார்களோ என்னமோ. நேற்று வரை தெருவில் சிறு பெண்ணாக விளையாடி கொண்டிருப்பவளுக்கு அவளுக்கே பொருந்தாத ஆடை அணிகலங்கள் அணிவித்து பதட்டமான, நெருக்கடியான சூழலில் நிற்கவைத்துள்ளது மட்டும் தெரிந்தது. சில வயதான கிழவி இப்போதை தங்கள் மனம் போன போக்கில் கருத்தை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர்.நல்ல காலம் நேரம் பார்த்ததில் அவள் அப்பாவுக்கு வியாபாரத்தில் ஏற்முகம் தானாம்!
இனி தமிழ் சினிமா பார்க்க பார்க்க ஒரு சடங்கு நிகழ்ச்சியை வைத்து பொல்லாத காதல் கத்திரிக்கா என கற்பனையில் பறக்க போகிறாள் என்று மட்டும் எனக்கு விளங்கியது. முன் வாசல் பக்கவாட்டில் உட்கார வைத்து வரிசையாக பலர் போய் தண்ணீரை குடம் குடமாக ஊற்றுவது தான் எனக்கு ரொம்ப நெருடலான நிகழ்ச்சியாக இருந்தது. தாய் மாமன் பொண்டாட்டி என்று பூர்ணிமா அத்தை மல்லிகா அடித்த காமடி என்ற கெட்ட பேச்சு கொஞ்சம் நெளிய வைப்பதாக தான் இருந்தது. இதில் யார் யாரோ வந்து நெத்தியில் சந்தனம் வைத்து கொண்டிருந்தனர். குடும்ப சண்டையால் நெருங்கிய உறவினர்களை அழைக்கவில்லையாம்!
இதிலும் அக்குழந்தையின் உறவினர்கள் , அம்மாவின் நட்பு வட்டாரம் என சம்பந்தம் இல்லாத யார் யாரோ ஒழுக்கம் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அடங்கி இரு, ஓடாதே, பேசாதே, பார்க்காதே என ஆயிரம் உபதேசங்கள்! இந்த மாதிரி உடை வாங்கி கொடுக்காதை, பாட்டு, நடன வகுப்புக்கு அனுப்ப வேண்டாம் என பல பல... பார்வையே போலிஸ் கள்ளனை பார்ப்பது போன்று தான் இருக்கும்.
மாமா, சித்தப்பா, அண்ணா என பாசமாக பழகியவர்கள் எல்லாம் தள்ளி நிற்பது போல் தோன்றிய காலம் தான் நினைவிற்க்கு வந்தது. "நீந்த தெரியாதவளை கடலில் தள்ளி விடுவது போல் தான் இருந்தது" நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க.
எப்படியோ ஒரே நாள் நிகழ்ச்சி ஊடாக சடை பின்னுவதில் இருந்து உடை அணிவதில் வர பாவாடை சட்டையில் இருந்து தாவணி என சின்ன பெண் பூர்ணிமாவை உடன் காப்பி போல் "உடன் பெண்ணாக" உருவாக்கி விட்டார்கள்.
ஒரு பெண் படிப்பில் முதலாவது வருவது, நல்ல வேலை கிடைப்பது இதற்க்கு என ஒரு பாராட்டு விழா வைப்பது போல் இன்றுவரை கேள்விபட்டதில்லை. வயசுக்கு வந்து விட்டாள் என்பது அப்படி கொட்டடித்து சொல்ல என்ன அசாதாரணமான நிகழ்வா என சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் பழைய காலம் கூட்டு குடும்பத்தில், சொந்த ஊரில் சொந்த பந்தங்களோடு வாழும் சூழல். ஒவ்வொரு காரணம் சொல்லி எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ந்து உண்டு குடிக்க ஒரு நிகழ்ச்சி தேவைபட்டிருக்கலாம். இன்று தனி குடும்பம், இன்று அதுவும் மாறி 'அணு' குடும்பமாக மாறியுள்ளது. பல குடும்பம் சொந்த ஊரை விட்டு வெளி ஊர்களில் வாழும் சூழலில் இவ்வகையான நிகழ்ச்சியின் நோக்கம்,தாக்கம் என்னவாக இருக்கும்? நாங்கள் வளர்ந்த கேரளாவில் இது போன்ற நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. வயசுக்கு வருவது பெற்றோருக்கு மட்டும் தான் தெரியும். இலைமறை காயாகத்தான் அறிவிப்பார்கள். ஆர்வகோளாறு உள்ளவர்கள் கூட நம் ஊரில் நடப்பது போல் பொண்ணு வயசுக்கு வந்திட்டாளா என கேட்க மாட்டார்கள். நாடுகளுக்கே ரகசியம், ராணுவ ரகசியம் என இருக்கும் போது பெண்ணிற்கு தான் கூடாதா?ஒரு குழந்தை சத்தான சாப்பாடு, பாரம்பரியம் என சீக்கிரமே உடலளவில் வளர்ந்து விட்டாலும் மனதளவில் அவள் குழந்தைய் பருவத்தில் தான் இருப்பாள். பல அம்மாக்களும் இதை அணுக வேண்டிய முறையில் அணுகுவது கிடையாது, அறிவியல் நோக்குடன் இதை காண்பது இல்லை. சில ரசாயன மாற்றங்களால் உடலில் மட்டுமல்ல சிந்தையிலும் எண்ணங்களிலும் சில மாற்றம் நிகழ்வதையும் அதை எவ்வாறு கையாளுவது என சொல்லி கொடுப்பது இல்லை. திருமணத்திற்க்கு வரனை அழைக்க முன்னோட்டம் என்று கூறினால் கூட 12 வயதில் இருந்து மேலும் 10-15 வருடங்கள் காக்க வைப்பது போல் ஆகாதா?இன்னும் வேறுவிதமாக நினைத்தால் கல்யாண சந்தையில் பெண்ணை கொண்டு நிறுத்தும் முதல் நிகழ்ச்சி தானோ இது என தோன்றியது.
மாதாவிடாய் பற்றிய அருமையான பதிவு!